Monday, June 24, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 9 !


"பெண்ணை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும் 
Touching a Woman without Her Consent is a Punishable Crime”

இப்படியொரு Disclaimer-ஐ முதன் முறையாக 'தாதா 87' என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேர்த்திருக்கிறார்கள். முதலில் இந்த Disclaimer-ஐ சேர்க்க நினைத்ததற்கே படக்குழுவிற்கு நாம் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவிக்க வேண்டும். இப்படி ஒரு Disclaimer போடுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடப் போவதில்லை தான். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் மனித மனங்களில் ஒரு சிறு அழுத்தத்தை இது உருவாக்கவே செய்யும். பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவது சமூக நலனை பெருமளவு பாதிக்கிறது. இன்னொரு விதமான பார்வை இருப்பதையும் தவிர்க்க முடியாது. ஏற்கனவே நிகழ்ந்து வந்த பாலியல் குற்றங்கள் இப்போது தான் அதிக அளவில் வெளியே தெரிய ஆரம்பிப்பதால் தான் பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகரித்து இருப்பது போல் தோன்றவும் வாய்ப்பிருக்கிறது.

பெண்ணை அனுமதியின்றி தொடுவதும், தொட நினைப்பதும் தவறு என்றே சமூகம் இன்னமும் உணரவில்லை. அனுமதியுடன் தொடுவதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. காமத்திற்காக, காதல் என்ற பெயரில் கல்யாணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து பெண்களை பயன்படுத்திவிட்டு பின்பு தூக்கியெறிவது இன்றும் குறைந்தபாடில்லை. பதின்பருவத்து பெண்களே இந்த வகையில் அதிகம் ஏமாறுபவர்களாக இருக்கிறார்கள். 16 வயதைக் கடந்தவர்கள் விருப்பத்துடன் பாலுறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சட்டம் சொல்கிறது. அந்த விருப்பம் என்பது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என்ற பக்குவத்தை பதின்பருவத்தினரிடம் நாம் உருவாக்கவில்லை. கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவு கொள்வது சட்டப்படி குற்றம்.கல்யாணம் பற்றிய சிந்தனையில்லாமல் விருப்பத்துடன் நிகழ்ந்தாலும் கூட பாதுகாப்பு நடைமுறைகள் இன்றும் சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை. நிகழும் பாலுறவு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அல்ல எனும் போது பாதுகாப்பு சாதனங்களை (குறிப்பாக ஆணுறை) கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் அவசியமாகிறது.

நம்பி ஏமாறுவது என்பது மிகப்பெரிய சிக்கலாக இன்று மாறியிருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றங்களின் பின்னணி இது தான். இந்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டவர்கள் தான். இதே போன்ற குற்றங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடக்கின்றன. குற்றங்களின் எண்ணிக்கையில் தான் வித்தியாசம். ஆனால் குற்றம் ஒன்று தான். பாலுறவை வீடியோவாக படம் பிடிப்பது என்பதும் அதை வைத்து பிளாக்மெயில் செய்வது என்பதும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. பெரும்பாலும் பெண்களின் விருப்பம் இல்லாமலோ அல்லது அவர்களுக்கு தெரியாமலோ தான் வீடியோ எடுக்கப்படுகிறது.பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுக்கப்பட்டது தெரிய வரும் போது பெண்களுக்கு அது பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது.தெரிந்தே கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோவால் பெண்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் இன்னமும் அதிகம். ஒரு சில பெண்கள் தெரிந்தே விருப்பப்பட்டே வீடியோ எடுக்க அனுமதிக்கிறார்கள். எந்த உள்நோக்கமும் இல்லாத யாரும் பாலுறவை வீடியோ எடுக்க மாட்டார்கள் என்பதை பெண்கள் உணர வேண்டும். காமிரா லென்ஸ் குறித்த கவனம் எப்போதும் நமக்கு இருக்க வேண்டும்.

பாலியல் வீடியோ குறித்த புரிதல் பதின்பருவத்தினருக்கும் இல்லை, சமூகத்திற்கும் இல்லை. நாட்டில் இவ்வளவு அத்துமீறல்கள் நடந்த பிறகும் கூட பள்ளி, கல்லூரிகளில் 'பாலியல் கல்வி' கொண்டு வர யாரும் தொடர்ந்து குரல் கொடுக்கவில்லை. எது சரி , எது தவறு என்று எதையுமே வேறுபடுத்திக் காட்டாமல் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அது எப்படிச் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆண்களுக்கு பாலியல் விசயங்களில் தவறானதைப் போதிக்க சினிமாவும், சமூகமும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. வீடியோ தெரிந்து எடுத்ததோ, தெரியாமல் எடுக்கப்பட்டதோ அதை வைத்து பிளாக்மெயில் செய்யும் போது மீண்டும் பலியாகாமல் அதை எதிர் கொள்ளும் பக்குவத்தை பெண்களுக்கு உருவாக்க வேண்டும். அதற்கு முதலில் பெண்ணுடல் குறித்த புனிதத்தன்மை ஒழிய வேண்டும். பெண்ணுடலில் மட்டுமல்ல இந்த பூமியிலேயே புனிதம் என்று எதுவும் இல்லை, அதே போல தீட்டு என்றும் எதுவுமில்லை. இந்த இரண்டுமே பார்ப்பனியத்தின் கூறுகள்.

வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண் இன்னொரு ஆணை சந்திப்பதற்கு யார் காரணம் ? மீண்டும் நாம் குடும்ப அமைப்பையே விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. காதலை மட்டுமல்ல நட்பைக்கூட பல குடும்பங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.குடும்பங்களில் காதல் மீதான வெறுப்புணர்வு குறையாதவரை பெண்களின் மீதான அத்துமீறல்கள் தொடரவே செய்யும். யாருடன் பழகுகிறோம், பழகுபவர்களில் யாரைச் சந்திக்க எங்கு போகிறோம் என்பதை வீட்டிற்கு தெரிவித்துவிட்டு போகும் சூழல் உருவாவது தான் இம்மாதிரியான சிக்கல்களைக் குறைக்க உதவும். ஆண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் கூட ஆண்களின் எந்தவிதமான நடவடிக்கையையும் பெரும்பாலான குடும்பங்கள் கண்டுகொள்வதில்லை. ஆண்கள் குறித்தும் குடும்பங்களில் வெளிப்படைத்தன்மையும், கண்காணிப்பும் உருவாக வேண்டும்.

பிழைத்திருப்பதற்கு இந்த வேலையே இவ்வளவு நேரம் செய்து தான் ஆக வேண்டும் என்றிருக்கும் உழைப்புச் சுரண்டலைப் போலவே பாலியல் சுரண்டலும் பெண்கள் மீது சில இடங்களில் திணிக்கப்படுகிறது. ஆண்களும் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும் பெண்களுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. அதிகளவு பாலியல் சுரண்டல் குடும்பங்களிலும், பணியிடங்களிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். குடும்பங்களில் சொத்துக்காகவும் மற்ற சில காரணங்களுக்காகவும் பெண்கள் மீது பாலியல் சுரண்டல் திணிக்கப்படுகிறது. அந்த காலத்தில் 'கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும்' என்றிருந்த பழக்கத்திற்கு பெண்கள் உடன்பட்டதற்கு குடும்பங்களில் நிகழ்ந்த பாலியல் சுரண்டலும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பணியிடங்களிலும் ( வேலையைக் காப்பாற்றிக் கொள்ள, பதவி உயர்வு பெற) பெண்கள் மீது பாலியல் சுரண்டல் திணிக்கப்படுகிறது. அரசின் அதிகார அமைப்புகளாலும் பெண்கள் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். எல்லாப் பெண்களும் இதற்கு பலியாவதில்லை என்றாலும் பாலியல் சுரண்டல் என்பது இருக்கவே செய்கிறது.

பாலியல் வன்கொடுமை என்பது பெண் மீது நிகழ்த்தப்படும் பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. கூட்டுப்பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த மனிதத்தன்மையற்றவர்களிடமிருந்து குழந்தைகளைக் கூட காக்க முடியவில்லை என்பது தான் பெரும் துயரம். பெரும்பாலும் மதுபோதையில் இருப்பவர்கள் தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களாக இருக்கிறார்கள்.இந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு மதுவும் ஒரு காரணமாகி விடுகிறது. மது குடிப்பது என்பது தனிமனித சுதந்திரம் என்றாலும் கூட அந்தக் குடியால் மற்ற மனிதர்களுக்கோ, சமூகத்திற்கோ எந்தப் பாதிப்பும் உருவாகாமல் இருப்பது முக்கியம். ஆனால் தமிழகத்தில் நிலைமை அப்படி இல்லை. தமிழக அரசின் மக்கள் விரோதக் கொள்கையால் மதுவிற்கு அடிமையான குடி நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்படியான குடி நோயாளிகளால் அவர்களது குடும்பமும் ,சமூகமும் பெரிய அளவில் கொடுமைகளை அனுபவிக்கிறது. குடி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாவது மிகவும் ஆபத்தானது.

பள்ளி மாணவர்கள் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதற்கு நவீன தொழிற்நுட்பங்களான தொடுதிரை தொலைபேசியும், இணைய வசதியும் காரணமாக இருக்கின்றன. இதை அவர்களே நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான பாலுறவு வீடியோக்களை இணைய வசதி இருந்தால் பார்க்க முடியும். பாலியல் வன்கொடுமை நிகழ்வதற்கு பாலுறவு வீடியோக்களும் ஒரு முக்கிய காரணமென்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் திருமணம் ஒன்று தான் பாலுறவிற்கு ஒரே வழி என்ற சூழலில் சமூக, பொருளாதார காரணங்களால் திருமணம் தள்ளிப் போகும் போது பாலுறவு வீடியோக்களும், சுய இன்பமும் தான் வடிகால்களாக இருக்கின்றன. இன்னொரு மனிதரைப் பாதிக்காத வரை எதுவும் தவறில்லை என்பது பாலுறவு வீடியோக்களுக்கும் பொருந்தும்.

விதவிதமான பிளாக்மெயில்கள் மூலம் நிகழும் பாலியல் வன்கொடுமைகள், சுரண்டல்கள், குடும்பங்களில், பணியிடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள், குழந்தைகள், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூர பாலியல் வன்கொடுமைகள், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், போரின் பெயரால் நிகழ்த்தப்படும் கூட்டுப்பாலியல் வன்கொடுமைகள் என சமூகத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளை பட்டியலிட்டுக்கொண்டே போக முடியும். இவ்வளவு வன்கொடுமைகளாலும் பாதிக்கப்படுபவர்களாக பெண்களே இருக்கிறார்கள். ஆனால் பொதுசமூகம் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகிறது. இது தான் ஆணாதிக்கத்தின் வெற்றி.

பாலுணர்வு என்பது பொதுவானது என்றாலும் கூட பெரும்பாலும் இது ஆணின் உடைமையாகவே பார்க்கப்படுகிறது. ஆண்களைப் போல தங்களின் பாலியல் இச்சைகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் பெண்களுக்கில்லை. பெண்கள் தங்களின் பாலியல் விருப்பங்களை வெளிப்படுத்துவதும் தரக்குறைவான செயலாகவே பார்க்கப்படுகிறது. பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபடுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆண்களின் அனைத்துவிதமான தப்புகளையும் மூடி மறைக்கும் வேலையை குடும்பம் என்ற அமைப்பு தொடர்ந்து கச்சிதமாக செய்து வருகிறது. தப்பு யார் செய்தாலும், ஆண் செய்தாலும் தப்பு தான் என்ற மனநிலை குடும்பங்களில் உருவாக வேண்டும். ஆணாதிக்க சமூகம் தான். ஆண்களிடம் மட்டுமல்லாமல் பெண்களிடமும் 'ஆண் எது செய்தாலும் சரி' என்ற ஆணாதிக்க மனநிலை மேலோங்கி இருக்கிறது தான். ஆனாலும் இதை அப்படியே தொடர அனுமதிக்கக்கூடாது. முதலில் பெண்கள், ஆணாதிக்க மனநிலைக்கு துணை போவதை கைவிட வேண்டும். இது குறித்தான தொடர்ச்சியான உரையாடல்கள் மூலமே கொஞ்சமேனும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

ஆண்களை எதிரிகளாக பார்ப்பதைத் தவிர்த்து ஆணாதிக்க மனநிலையை எதிரியாக பார்க்கும் பார்வையே முக்கியமானது. ஆண்கள் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட இந்த ஆணாதிக்க மனநிலை தான் காரணமாக இருக்கிறது. இந்த ஆணாதிக்க மனநிலையை தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவதன் மூலமே குற்றங்களைக் குறைக்க முடியும். பெண் மீதான ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம், இன ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம் என ஆதிக்க மனநிலையே இப்பூமியில் நிகழும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. ஆதிக்கமும், ஆணாதிக்கமும் ஒழியுமானால் இந்தப் பூமியே அமைதிப் பூங்காவாக மாறிவிடும். 
பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :








Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms