Friday, November 20, 2020

ஆதிக்க உணர்வு அழிந்து போகட்டும்!

நாளுக்குநாள் நமது மனங்கள் மரத்துப் போய்க்கொண்டே இருக்கின்றன. பொதுவாக வன்முறை, கொலை, பாலியல் வன்கொடுமைகள் பற்றி தெரிய வரும்போது கண்டும் காணாமல் கடந்து விடுகிறோம். அதே நேரத்தில் கொடூர வன்முறை, கொடூர கொலை, கொடூர பாலியல் வன்கொடுமை என்றால்தான் கொஞ்சமாவது கவனிக்கிறோம். அந்தளவிற்கு நமது மனங்கள் சிதைவடைந்துள்ளன. 


லாக்கப் கொலைகளை சாதாரணமாக கடந்து போனோம். சாத்தான்குளம் லாக்கப் கொலைகள் கொடூரமாக நிகழ்த்தப்படத்தால்தான் அதிக கவனம் பெற்றன. தீவிர மதவாதியான யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேச முதல்வரான பிறகு உத்திரபிரதேச மாநில மக்கள் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். இன்றைய இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உத்திரபிரதேசத்தில்தான் அதிகம். சாதிய ,மதவாத கொடுமைகளும் அங்குதான் அதிகம். மற்ற சாதிய வன்கொடுமைகளோ, பாலியல் வன்கொடுமைகளோ செய்திகளாக கடந்துபோன நிலையில் மனிஷா வால்மீகி மனிதத்தன்மையற்ற முறையில், கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது கண்டு கொதித்து போகிறோம். மன அமைதியின்றி தவிக்கிறோம்.அடுத்து இந்த நிலைமைதானே மற்ற இந்திய பெண்களுக்கும் என்று பதைபதைக்கிறோம்.

அரசோ, ஊடகங்களோ, மக்களோ அந்த நேரத்து உணர்ச்சிவசப்பட்ட நிலையைக் கடந்து இதே மாதிரியான குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் பற்றி விவாதிப்பதேயில்லை. அந்த குறிப்பிட்ட குற்றத்திற்கு கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்ற குரல் மட்டுமே சத்தமாக கேட்கிறது. கடுமையான குற்றத்திற்கு மிக கடுமையான தண்டனை என்பது அவசியம்தான். அதே நேரத்தில் அந்த குற்றம் செய்யத்தூண்டும் ஆதிக்க மனநிலை கேள்விக்கு உட்படுத்தப்படுவதேயில்லை. பல்வேறு விதமான அதிகாரங்களும், ஆதிக்க உணர்வுமே பெரும்பான்மையான குற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றன.

அதிகார போதையும், ஆதிக்க உணர்வும் இல்லாத மனிதரால் இன்னொரு மனிதருக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது.

அதிகாரமும், ஆதிக்க உணர்வும் அழிந்து போகட்டும். இதை அழிப்பதில் பெரும் பங்கு காவல்துறைக்கே உள்ளது. காவல்துறையே அதிகாரத்தை தேவையில்லாத போதும் மக்கள் மீது செலுத்தும் அமைப்புதான் என்றாலும் மற்றவர்களின் அதிகார மனநிலைக்கும், ஆதிக்க மனநிலைக்கும் துணை நிற்பது இந்த அமைப்புதான். அரசியல் ரீதியான அழுத்தங்கள் இல்லையென்றாலும் கூட மற்ற அதிகாரங்களுக்கும், பணத்திற்கும் அடிபணியும் அமைப்பாகவே காவல்துறை இருக்கிறது. சாதி ரீதியான, மத ரீதியான, ஆதிக்க உணர்வு எல்லா இடங்களிலும் இருப்பது போல காவல்துறையிலும் இருக்கிறது. ஆணாதிக்க உணர்வும் காவல்துறையில் மேலோங்கியே உள்ளது. மற்ற பணியிடங்களைப் போலவே காவல்துறையிலும் பெண்கள் பல்வேறு விதமான இன்னல்களைச் சந்திக்கிறார்கள்.

சமூகத்தின் ஒரு அலகுதான் காவல்துறை, சமூகத்தைப் போலவேதான் காவல்துறை இருக்கும் என்றாலும் சமூகத்தில் நிகழும், மீறல்களுக்கு, குற்றங்களுக்கு முதலில் மக்களாகிய நாம் காவல்துறையைத்தானே அணுகுகிறோம். முதலில் அணுகும் ஒரு அமைப்பே அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் துணை போவதுடன் அதே அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் மக்கள் மீது செலுத்துவதை எப்படி ஏற்க முடியும். அதிகாரத்தாலும், ஆதிக்கத்தாலும் நிகழும் குற்றங்கள் குறைய வேண்டுமெனில் காவல்துறைதான் பெரும் பங்காற்ற வேண்டியிருக்கிறது. வெறும் தண்டனைகள் மற்றும் குற்றங்களைக் குறைத்துவிடாது. என்று காவல்துறை குற்றத்தை குற்றமாக மட்டுமே பார்க்கிறதோ அன்றிலிருந்துதான் மாற்றங்கள் நிகழும். குற்றம் யார் செய்தது? என்பதைப் பொறுத்தே காவல்துறை செயல்படும் எனில் எந்த மாற்றமும் நிகழாது.

சாதி ரீதியான வன்கொடுமைகள், மத ரீதியான வன்கொடுமைகள் , பெண்கள் மீதான வன்கொடுமைகள் இத்தனையையும் செய்து கொண்டே இருக்கும் நிலத்திலேயே ராமர் கோவிலையும் கட்டுகிறார்கள். இத்தனை கொடுமைகளும் ராமர் கோவில் கட்டுவதால் மறைந்துவிடும் என்றால் அந்நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு விடிவு காலமே கிடையாது. கஷ்மீர் போல உத்திரபிரதேசமும் இந்தியாவின் இருண்ட பூமியாகிவிட்டது. உத்திரபிரதேச மாநிலத்தை பாஜகவின் கையிலிருந்து பிடுங்குவதன் மூலமே இந்தியாவை பாஜகவிடமிருந்து பிடுங்குவது தோடங்கும். அதுவரை நம்மை கொந்தளிப்பான மனநிலையிலேயேதான் வைத்திருப்பார்கள். அவநம்பிக்கையுடன் வாழ்வது கொடிதிலும் கொடிது. அதைத்தான் பாஜக அரசு இந்திய மக்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறது. 

மேலும் படிக்க :


ஆதிக்கமும் அதிகாரமும் !

அதிகாரமும், ஆதிக்கமும் தான் அனைத்துவிதமான வன்முறைகளுக்கும், தீங்குகளுக்கும் காரணங்களாக இருக்கின்றன. அரசு அதிகாரம், சாதி அதிகாரம், பண அதிகாரம், கட்சி அதிகாரம் என பலவிதமான அதிகாரங்கள் மக்களைப் பாதிப்புகளுக்கு உள்ளாக்குகின்றன. மனிதர்கள் அதிகாரம் கையில் இருக்கும் போது ஒரு மாதிரியும், அதிகாரம் கையில் இல்லாத போது வேறு மாதிரியும் நடந்து கொள்கிறார்கள். சிறிய அளவிலான மிரட்டலிலிருந்து பெரிய அளவிலான வன்கொடுமைகள் வரை நடப்பதற்கு இந்த அதிகார மனநிலைதான் காரணமாக இருக்கிறது. வெகுஜன மக்கள் அதிகாரங்களுக்கு அடங்கிப் போகவே பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அதிகாரங்கள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதேயில்லை. ஆனால் அவை கண்டிப்பாக கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். 


ஆண் ஆதிக்கம், இன ஆதிக்கம் , மொழி ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம் போன்ற பலவிதமான ஆதிக்கங்கள் மனிதர்களுக்கு தொடர்ந்து ஆதிக்க உணர்வை அளித்து வருகின்றன. ஆதிக்க மனநிலை மட்டும் இல்லையென்றால் இந்த பூமி ஒரே நாளில் அமைதிப் பூங்காவாக மாறிவிடும். ஒவ்வொரு நாடும் கோடிக்கணக்கான பணத்தை தினமும் மிச்சப்படுத்த முடியும். மனிதர்களாகிய நாம் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறோம். ஆதிக்க மனநிலையால் ஒரு குற்றம் நிகழ்த்தப்படும் போது அந்த குற்றத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் மிகவும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். குற்றவாளிகள் நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயம் அந்த குற்றத்தை நிகழ்த்தத் தூண்டிய மனநிலையை நாம் கேள்விக்கு உட்படுத்துவதேயில்லை. அந்த ஆதிக்க மனநிலையை நாம் தொடர்ச்சியாக கேள்விக்கு உட்படுத்துவதன் மூலமே அதே குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். 

அதிகார மனநிலையையும், ஆதிக்க மனநிலையையும் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்தெறிவதன் மூலமே ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்க முடியும்.

அதிகார மனநிலையையும், ஆதிக்க மனநிலையையும் அழிந்து போகட்டும் !

மேலும் படிக்க:
 

Tuesday, February 25, 2020

டெல்லி எரிகிறது !


எதற்காக அஞ்சினோமோ அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 2014 பாஜக ஆட்சியில் அமித்ஷா ஆட்சிக்கு வெளியில் இருந்தார். மக்களுக்கு தொடர்ச்சியான பாதிப்புகள் இருந்தாலும் வன்முறையோ, மனிதத்தன்மையற்ற செயல்களோ தூண்டிவிடபடவில்லை. அங்கங்கே இஸ்லாமியர்களுக்கு எதிரான சிறுசிறு வன்முறைகள் மட்டுமே நடைபெற்றன. யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேச முதல்வராக பதவியேற்ற பிறகு மாநில அரசே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது, ஈடுபடுகிறது. ஆதித்யநாத் எனும் மதவாதி பதவியில் இருக்கும் வரை இது தொடரவே செய்யும். ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகள் தப்பித்தன.


இந்த 2019 பாஜக ஆட்சியில் அமித்ஷா எனும் மனிதத்தன்மையற்ற உயிரினம் நேரடியாக ஆட்சிக்குள் வந்தது. உள்துறை அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டது. நன்றாக கவனித்து பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். நரேந்திர மோடியால் பொய்களை உண்மையென்று நம்பி சத்தமாக பேச மட்டுமே தெரியும். செயல்கள் அனைத்துமே அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான். மோடி, குஜராத் முதல்வராக இருந்த போதும் இது தான் நிலைமை. இப்போது இந்திய பிரதமராக இருக்கும் போதும் இதுதான் நிலைமை.

இந்த 2019 பாஜக அரசு பதவியேற்றதிலிருந்தே அமித்ஷா தனது மதவாத செயல்களைத் தொடங்கிவிட்டார். அஸ்ஸாமில் NRC அமல், கஷ்மீர் மாநிலத்திற்கான 370 சிறப்பு அந்தஸ்து ரத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA ) இயற்றியது என்று தொடர்கிறது.டெல்லி போலிஸ் தனது கட்டுப்பாட்டில் இருப்பதால் CAAவிற்கு எதிரான போராட்டங்களை கலைக்க போலிஸ்காரர்களுடன், RSS அமைப்பைச் சேர்ந்தவர்களும் வெளிப்படையாகவே பங்கெடுத்து வருகிறார்கள். இந்த மனிதத்தன்மையற்ற செயல்களை ஊடகங்கள் மூடி மறைக்கப் பார்க்கின்றன. இந்திய அளவில் வெகு சில ஊடகங்களே கொஞ்சமாவது பாசிச பாஜகவின் மதவாத முகங்களை படம்பிடித்து காட்டுகின்றன. மற்றவை அனைத்தும் அப்பட்டமாக ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்றன.

CAAவிற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் அமைதியான முறையிலேயே நடைபெற்றன, நடைபெறுகின்றன. பாஜக ஆளும் உத்திரபிரதேசத்திலும், கர்நாடகத்திலும், போலிஸ் அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில் மட்டுமே வன்முறைகள் ஏவப்பட்டு உயிர்பலிகள் நடந்துள்ளன. இதை வைத்து பார்க்கும் போது கலவர பயத்தை உண்டாக்கி CAAவிற்கு எதிரான போராட்டங்களை முடிவிற்கு கொண்டு வரவே பாஜக விரும்புவது வெளிப்படையாகத் தெரிகிறது.

இஸ்லாமிய மதவெறுப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்கிறது, பாஜக. இந்த நேரம் சிவசேனா மட்டும் பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் மகாராஷ்டிர மாநிலமும், இன்னொரு டெல்லியாக மாறியிருக்கும். சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் மகாராஷ்டிர மக்கள் தப்பித்தார்கள். பிரிவினைவாதத்தை விரும்புபவர்களுக்கு மட்டுமே இந்த பாஜக அரசு களிப்புடையதாக இருக்கும்.

சொல்லி வைத்தது போல அனைத்து சங்கிகளும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள். மனிதத்தன்மை சிறிதும் இல்லாமலேயே பாஜகவிற்கு முட்டுக் கொடுக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் அதிமுகவின் தயவால் தமிழகத்தில் சங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நல்லதற்கல்ல.

அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்கும் வரை மக்களுக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகள் தொடரவே செய்யும். ஒட்டு மொத்த விமர்சனங்களும் அமித்ஷா மீதே வைக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிரான எதுவும், யாரும் வென்றதாக வரலாறு இல்லை. CAAவிற்கு எதிரான போராட்டத்திலும் மக்களே வெல்வார்கள். மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டது மோடி தலைமையிலான பாஜக அரசு. இந்த அரசால் மக்களுக்கு என்று எந்தவித நன்மையும் கிடைக்காது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms