Pages

Monday, November 21, 2011

திண்ணைப் பேச்சு வீரரிடம் !

திண்ணை ,இதை நாம்  மறந்து ரொம்ப நாளாகிவிட்டது .இந்தப்பாடல் திண்ணையைப் பற்றிச் சொல்லவில்லை . வெட்டிக்கதைகள் பேசி நம் நேரத்தை வீணடிக்கும் ,வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்களாக இருக்கும் வீணர்கள் பற்றி இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றது .

திண்ணை ,இன்று இல்லை . ஆனால் , அதிக எண்ணிக்கையில் ,பல்வேறு விதமான இடங்களில் திண்ணைப் பேச்சு வீரர்கள் இன்றும் இருக்கிறார்கள் . இன்றைய சூழ்நிலையில்  தொ(ல்)லைக்காட்சியில் தான் திண்ணைப் பேச்சு வீரர்கள் அதிகம் தோன்றுகிறார்கள் . ராசிபலன் சொல்பவர்,அதிர்ஷ்டகல் விற்பவர், யந்திரம் விற்பவர் ,ரியல் எஸ்டேட் விளம்பரங்களில்  பேசுபவர்கள் (சின்னத்திரை நடிகர்கள், நாடகத்தில் நடிகிறார்களோ இல்லையோ தவறாமல் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் நடிக்கிறார்கள் ), டெலி பிராண்ட் விளம்பரங்களில் பேசுபவர்கள் ,ஏழு நாட்களில் வெள்ளையாகி விடலாம் என்று விளம்பரம் போடுபவர்கள் என்று தொ(ல்)லைக்காட்சியில் தோன்றும்  திண்ணைப் பேச்சு வீரர்களின் எண்ணிக்கை அதிகம் .

மேடையில்  அரசியல்வாதிகள் பேசும் போலியான பேச்சு , ஆன்மீகவாதிகள்  பேசும் பேச்சு ,தற்போதைய பிரதமர் பேசும் பேச்சு இவையெல்லாம் எதற்கும் உதவாத திண்ணைப் பேச்சில் அடக்கம் .இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பட்டுக்கோட்டையார்  அன்றே பாட்டு எழுதியிருக்கிறார் .

அந்தப்பாடல் : 


பாடல் வரிகள் : 


தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்தைச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்


இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் _ இந்தத் (திண்ணை…)

பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் _ இந்தத் (திண்ணை…)

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும் _ இந்தத் (திண்ணை…)

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா;
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் _ இந்தத் (திண்ணை…)

 எவ்வளவு அருமையான வரிகள் !"பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்", "புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் "," கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்  சபைக்கு உதவாத வெறும் பேச்சு ".

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

நாமெல்லாம் யார் ?

............................................................................

2 comments:

  1. வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  2. அன்பு நண்பரே, இந்த பாடல் வரிகள் இன்றைய மத்திய அரசுக்கும் அதன் பிரதமருக்கும் மிக சிறப்பாக பொருந்தும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்னவோ?

    ReplyDelete