Pages

Saturday, February 9, 2019

தற்கொலைகளும், மதுப்பழக்கமும் !

தற்கொலைகள், குடிப்பழக்கம் இந்த இரண்டு விசயங்கள் தான் 2018 முழுவதுமே தொந்தரவு செய்து கொண்டே இருந்தன. இவற்றை பற்றிய செய்திகளை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. இதற்கு முன்பும் தற்கொலைகளும், குடிப்பழக்கமும் இருந்தது தான் என்றாலும் 2018ல் இவை மிகவும் அதிகரித்து உள்ளன. மிகவும் சாதாரண காரணங்களுக்காகக் கூட தற்கொலைகள் நிகழ்வது நல்ல அறிகுறி அல்ல. அம்மா இறந்த துக்கத்தால் மகனும் மருமகளும் தற்கொலை, அம்மா- அப்பா சண்டை போடுவதை நிறுத்தாததால் மகள் தற்கொலை, உறவுகள் வெளியூரில் வேலை செய்வதால் தந்தை இறந்த பிறகு தனியாக வாழ நேர்ந்ததால் பதினொன்றாம் வகுப்பு மாணவன் தற்கொலை என தற்கொலைகள் மிகவும் விரைவான வேகத்தில் அதிகரித்து வருகின்றன.

எந்த காரணத்திற்காகவும் தற்கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்கொலை எண்ணம் என்பது எப்போதும் எல்லோருக்குள்ளும் இருந்து வரும் ஒன்று தான். அந்த எண்ணம் தலைதூக்கும் போது அதை ஏதோ ஒரு விதத்தில் மட்டுப்படுத்த வேண்டும். நவீன வாழ்க்கை தனிமனிதர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. எவ்வளவு சாதித்தாலும், புகழடைந்தாலும் கூட தற்கொலை எண்ணம் என்பது ஓடி விடாது. சக மனிதர்களுக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளிப்பது நம் கடமை. நவீன இணைய சாதனங்களும், தொழிற்நுட்பமும் நம்மையெல்லாம் இணைத்து விட்டதாக நம்மை நம்ப வைத்தாலும் உண்மையில் ஒவ்வொருவரையும் பந்தயக் குதிரை போல ஓடவே தயார் செய்கிறது. இன்று நாம் எதற்கு முக்கியத்தும் கொடுக்கிறோம் என்பதிலிருந்தே இந்த சாதனங்களின் ஆக்கிரமிப்பை உணரலாம். நாம் ஒவ்வொருவரும் திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறோம். இதிலிருந்து நாம் வெளியே வந்தே ஆக வேண்டும். தற்கொலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டே ஆக வேண்டும்.

' மயக்கமா கலக்கமா ... மனதிலே குழப்பமா ?' என்ற கண்ணதாசனின் பாடல் நிறைய உயிர்களைக் காப்பாற்றி வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்திருப்பதாகச் சொல்கிறார்கள். மனம் சோர்வடையும் போது மனதிற்கு பிடித்த ஏதோ ஒன்றை பாடல் கேட்பது, வாசிப்பது ,எழுதுவது, விளையாடுவது ,வெளியில் செல்வது என ஏதாவது ஒன்றைச் செய்து அந்தச் சூழலைக் கடக்க வேண்டும். சக மனிதர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதும் அதிகரிக்கும் தற்கொலைகளுக்கு ஒரு காரணம். மனதை எப்போதும் சமநிலையில் வைத்திருப்பது மிகவும் சவாலான காரியம். அதனாலேயே தினசரி வாழ்வு தரும் அழுத்தத்திலிருந்து வெளியேற ஏதேனும் ஒரு கலைச் செயல்பாட்டை மேற்கொள்வது அவசியமாகிறது. சாதாரண செய்தியாக கடந்து போகாமல் அரசு, தற்கொலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தற்கொலைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் தனிமனிதர்களும் இணைந்து செயல்படுவதன் மூலமே தற்கொலைகளை குறைக்க முடியும்.

குடிப்பழக்கம் என்பது தமிழகத்தில் நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகிறது. எப்போதாவது குடித்தவர்கள் கூட தினமும் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். தினமும் குடித்துக் கொண்டிருந்தவர்கள் குடிநோயாளிகளாக மாறிவிட்டனர். புதிதாக குடிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அச்சமளிக்கும் வகையில் கூடியுள்ளது. ஆனால் இதை பற்றிய எந்த கவனமும் இல்லாமல் நமது வாழ்க்கை சக்கரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு மனிதரை பாதிக்காத எதுவும் தவறில்லை. அது குடிப்பழக்கத்திற்கும் பொருந்தும். அப்படியான அளவான குடிப்பழக்கம் என்பது மிகவும் குறைந்துவிட்டது. இந்த வாழ்வு தரும் நெருக்கடிகள் அதிகம் என்றாலும் கூட குடியை நியாயப்படுத்த முடியாது.

மது என்பது கொண்டாட்டதிற்கான பானம். மனித சமூகத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே மது கூடவே தான் வருகிறது. இப்போதும் கொண்டாட்ட மனநிலையில் அளவான மதுவைச் சுவைப்பது தவறில்லை தான். ஆனால் தமிழகத்தில் விற்கப்படுவது மதுவே அல்ல என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக இருக்கிறது. மது கூட இங்கு தரமானதாக இல்லை. வெறும் எரி சாராயம் தான் இருப்பதாக சொல்கிறார்கள். அதை தொடர்ந்து குடித்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் உருவாகவே செய்யும். இந்த பாதிப்புகள் தனிமனித பாதிப்புகளுடன் நின்று விடுவதில்லை. முதலில் குடும்பம் பெரிய அளவிலான பாதிப்புகளைச் சந்திக்கிறது, பிறகு சமூகம். சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள் மது தரும் போதையின் துணையுடன் தான் நடக்கின்றன. இப்படி ' மது பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு தருவதாகவே ' இருக்கிறது.

ஆண்கள் சந்தித்தால் டீ குடிக்க போவது என்பது குறைந்து மது குடிக்கப் போவது அதிகரித்து இருக்கிறது. நெடுஞ்சாலை ஓரங்களில் மூடப்பட்ட அனைத்து மதுபானக்கடைகளும் திறக்கப்பட்டது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. பல ஊர்களில் மதிய நேரங்களில் உணவு கிடைப்பது கூட தட்டுப்பாடாக இருக்கிறது. ஆனால் மதுவிற்கு தட்டுப்பாடே எப்போதும் இருப்பதில்லை. மது இல்லாமல் ஆண்கள் சந்தித்துக் இளைபாறிச் செல்லும் வேறு கலை அல்லது விளையாட்டு சார்ந்த வெளிகள் உருவாக்கப்பட வேண்டும். உண்மையில் ஆண்கள் சந்தித்துக் கொள்ள இன்று வெளிகளே இல்லை. அந்த இடத்தைத் தான் மதுவும் , மதுபானக்கடைகளும் பிடித்துள்ளன. அதிகரித்து வரும் அதீத மதுப்பழக்கம் மிகவும் ஆபத்தான ஒன்று.

வருகின்ற 2019ம் ஆண்டாவது தற்கொலைகள் குறைந்த மதுப்பழக்கம் குறைந்த ஆண்டாக இருக்க வேண்டும்!

No comments:

Post a Comment