Pages

Saturday, April 11, 2015

சூரியன் எரியும் கதை !

சூரியனும் சந்திரனும் ஒரு விருந்திற்கு சென்றார்கள்.அங்கே வடை ,பாயாசத்துடன் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. உணவை விரைவாக வயிறு நிறைய சாப்பிட்ட சூரியன் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு வந்த சூரியனைப் பார்த்து அம்மா கேட்டார்,

 " வாடா, பெரியவனே விருந்தெல்லாம் முடிந்ததா ?"

 "முடிந்தது அம்மா ! ,இது போன்ற உணவை இதற்கு முன்பு உண்டதில்லை "

"எங்கடா மகனே எனக்கு உணவு ?"

சூரியன் மேலும் கீழும் விழித்தான்.
அப்போது சந்திரனும் வீடு வந்து சேர்ந்தான்.
சந்திரனிடமும் அதே கேள்விகளை அம்மா கேட்டார் .

"வாடா, சின்னவனே விருந்தெல்லாம் முடிந்ததா?"

"ஆமாம், அம்மா !"

"எங்கடா மகனே ,எனக்கு உணவு?"

"இலையை விரியுங்கள், அம்மா!"

"எதுக்குடா ?"

"முதலில் இலையை விரியுங்கள் ,பிறகு சொல்கிறேன் " என்றான் சந்திரன்.

வீட்டின் முன்புறத்தில் இருந்த வாழை மரத்தில் ஒரு இலையை அறுத்து வந்து விரித்தாள் ,அம்மா.

தனக்கு படைத்த உணவில் பாதியை எடுத்து வைத்துக் கொண்டு மீதியை உண்ட சந்திரன்.அந்த பாதி உணவை இலையில் வைத்தான்.பசியுடன் அந்த உணவை உண்ட அம்மாவின் வயிறு குளிர்ந்தது.அம்மா , மகன்களைப் பார்த்து

"சூரியனே,பசியால் என் வயிறு எரிந்தது போல நீயும் எரிந்து போ !"

"சந்திரனே , என் வயிறு குளிர்ந்தது போல நீயும் குளிர்ந்து போ !" என்று கூறினார் .

அதனால் தான் சூரியன் எப்போதும் எரிந்துகொண்டு வெப்பத்தையும்  ,சந்திரன் எப்போதும் குளிர்ச்சியையும் தருகிறார்களாம் .

சமீபத்தில் ஒரு டீக்கடையில் ,டீ மாஸ்டர் தனது வாடிக்கையாளரிடம் சொன்ன கதை இது .இந்தக் கதை நாடோடி கதைகள் பிரிவைச் சேர்ந்ததாகவே இருக்கும் என நினைக்கிறேன் . இந்த மாதிரியான அர்த்தமுள்ள வேடிக்கையான கதைகள் நம் வாழ்வை சுவாரசியப்படுத்துகின்றன .

கடந்த ஆண்டிற்கு முன்பு வரை வெப்பத்தை மட்டுமே அதிகமாக உணர்ந்தோம் . ஆனால் , கடந்த ஆண்டிலிருந்து வெப்பத்துடன் சேர்த்து எரிச்சலையும் தாங்க வேண்டியுள்ளது . கடந்த ஆண்டு , அக்னி நட்சத்திரத்திற்கு பிறகும் வெயில் கொளுத்தியது . இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயில் கொளுத்துகிறது எரிச்சலுடன் .  அளவிற்கு அதிகமான வெப்பம் உமிழும் பொருட்களையும், விதவிதமான வாயுக்களை வெளியேற்றும் பொருட்களையும் பயன்படுத்துவது தான் எரிச்சல் அதிகமாவதற்கு காரணமாக இருக்ககூடும் .ஆனாலும் , சூரியன் இல்லாத வாழ்வை பூமியில் கற்பனை கூட செய்ய முடியாது . உலக சக்திகளின் ஆதாரம் சூரியன் தான் .

மேலும் படிக்க :

சூரியன் - உலக சக்திகளின் மையம்

அக்னியையும் தாண்டி ...!

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?
...................................................................................................................................................................


No comments:

Post a Comment