Pages

Saturday, July 27, 2024

சாதி ஒழிப்பிற்கான சாத்தியமான வழிகள் - ஆ.சிவசுப்பிரமணியன் !


கேள்வி - சாதி ஒழிப்பிற்கான சாத்தியமான வழிகள் என எவற்றைச் சொல்வீர்கள் ? 

பண்பாட்டு ஆய்வாளர், ஆ.சிவசுப்பிரமணியன்  : " அடிப்படையில் இதற்கான முன்னெடுப்புகள் அரசிடமிருந்துதான் தொடங்க வேண்டும். ஏனென்றால், சமூகப் பாதுகாப்பு என்ற ஒன்று இன்றைக்குச் சமூகத்தில் கேள்விக்குரியதாக இருக்கிறது. அது, சாதிய அடிப்படையில்தான் நிகழ்கிறது. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், எல்லோருமாகச் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் அல்லது அரசு பார்த்து உதவி செய்ய வேண்டும். இவை இரண்டும் இல்லாத நிலையில், நீங்கள் உங்கள் சமூகத்து ஆள்களிடம்தான் அல்லது அமைப்பிடம்தான் போய் நிற்க வேண்டும். எல்லோருக்கும் பாதுகாப்புத் தர வேண்டிய அரசாங்கம், ஓட்டு அரசியலில் சாதியம் சார்ந்ததாக இன்றைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. காவல்நிலையத்தில் உயர்சாதி அதிகாரி ஒருவரிடம் , ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் , புகார் அளித்து சரியான அணுகுமுறையைப் பெற முடியுமா ? அதே நேரத்தில், அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஓர் அமைப்போடு அங்கு சென்றால், சரியான விதத்தில் அணுகப்படுவார். இதுதான் யதார்த்தம். இங்கே அரசு அமைப்பே சாதியமாக உள்ளது. அடுத்ததாகக் கல்வி நிறுவனங்கள். அவை, நியாயமான முறையில் இன்னும் ஜனநாயகப்படுத்தப்படவில்லை. அனைத்து சமூகத்தவருக்கும் அவரவர் திறமைக்கு உரிய வகையில் மேலே படிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.குறிப்பாக, உயர்கல்வியில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆகவே, அவர்கள் குறிப்பிடும்படியான வேலைவாய்ப்பும் பெற வழியின்றி போய்விடுகிறது". 

கேள்வி - அப்படியானால், அம்பேத்கர் முன்மொழியும் அகமணமுறை ஒழிப்பில் உங்களுக்கு...

பண்பாட்டு ஆய்வாளர், ஆ.சிவசுப்பிரமணியன் : " நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அதற்கு ஆதாரமே இவைதான்.அகமண முறை ஒழிப்பிற்கான சூழல் எப்படி உருவாகும் ? முறையான கல்வி பெற்று , வேலைவாய்ப்பு பெற்று, ஒன்றாகப் பணியாற்றுகிற சூழலில் தானே காதல் மலர மூடியும். இணைந்து பயில்வது, இணைந்து பணியாற்றுவது , இணைந்து உண்பது எனச் சூழல் உருவானால், தானாக சாதிமறுப்பு திருமணங்கள் நடக்கும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும்". 

ஜூலை 2018, விகடன் தடம் மாதயிதழில் வெளிவந்த பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் நேர்காணலிலிருந்து...

அதிகமாக சாதி புழங்கும் இடமாக , சாதியவாதிகளுக்கு பக்கபலமாக இருப்பவை காவல் நிலையங்கள் தான். சாதி சார்ந்து ஒவ்வொரு குற்றத்திலும் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்ட பிறகே குற்றமே பதிவு செய்யப்படுகிறது. அப்படியே பதிவு செய்தாலும் முதலில் மேம்போக்காகவே பதிவு செய்யப்படுகிறது. அதற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட பிறகே சரியான பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதியப்படுகிறது. காவல் துறையிலேயே சாதிய ஒடுக்குமுறைகள் நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. சாதிய பாகுபாடுகளை வளர்ப்பதில் காவல் நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காவல் நிலையங்கள் மக்களை சமத்துவத்துடன் நடத்த ஆரம்பித்தாலே போதும் நிறைய நல்ல மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்.

மேலும் படிக்க :



No comments:

Post a Comment