Friday, November 20, 2020

ஆதிக்க உணர்வு அழிந்து போகட்டும்!

நாளுக்குநாள் நமது மனங்கள் மரத்துப் போய்க்கொண்டே இருக்கின்றன. பொதுவாக வன்முறை, கொலை, பாலியல் வன்கொடுமைகள் பற்றி தெரிய வரும்போது கண்டும் காணாமல் கடந்து விடுகிறோம். அதே நேரத்தில் கொடூர வன்முறை, கொடூர கொலை, கொடூர பாலியல் வன்கொடுமை என்றால்தான் கொஞ்சமாவது கவனிக்கிறோம். அந்தளவிற்கு நமது மனங்கள் சிதைவடைந்துள்ளன. 


லாக்கப் கொலைகளை சாதாரணமாக கடந்து போனோம். சாத்தான்குளம் லாக்கப் கொலைகள் கொடூரமாக நிகழ்த்தப்படத்தால்தான் அதிக கவனம் பெற்றன. தீவிர மதவாதியான யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேச முதல்வரான பிறகு உத்திரபிரதேச மாநில மக்கள் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். இன்றைய இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உத்திரபிரதேசத்தில்தான் அதிகம். சாதிய ,மதவாத கொடுமைகளும் அங்குதான் அதிகம். மற்ற சாதிய வன்கொடுமைகளோ, பாலியல் வன்கொடுமைகளோ செய்திகளாக கடந்துபோன நிலையில் மனிஷா வால்மீகி மனிதத்தன்மையற்ற முறையில், கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது கண்டு கொதித்து போகிறோம். மன அமைதியின்றி தவிக்கிறோம்.அடுத்து இந்த நிலைமைதானே மற்ற இந்திய பெண்களுக்கும் என்று பதைபதைக்கிறோம்.

அரசோ, ஊடகங்களோ, மக்களோ அந்த நேரத்து உணர்ச்சிவசப்பட்ட நிலையைக் கடந்து இதே மாதிரியான குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் பற்றி விவாதிப்பதேயில்லை. அந்த குறிப்பிட்ட குற்றத்திற்கு கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்ற குரல் மட்டுமே சத்தமாக கேட்கிறது. கடுமையான குற்றத்திற்கு மிக கடுமையான தண்டனை என்பது அவசியம்தான். அதே நேரத்தில் அந்த குற்றம் செய்யத்தூண்டும் ஆதிக்க மனநிலை கேள்விக்கு உட்படுத்தப்படுவதேயில்லை. பல்வேறு விதமான அதிகாரங்களும், ஆதிக்க உணர்வுமே பெரும்பான்மையான குற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றன.

அதிகார போதையும், ஆதிக்க உணர்வும் இல்லாத மனிதரால் இன்னொரு மனிதருக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது.

அதிகாரமும், ஆதிக்க உணர்வும் அழிந்து போகட்டும். இதை அழிப்பதில் பெரும் பங்கு காவல்துறைக்கே உள்ளது. காவல்துறையே அதிகாரத்தை தேவையில்லாத போதும் மக்கள் மீது செலுத்தும் அமைப்புதான் என்றாலும் மற்றவர்களின் அதிகார மனநிலைக்கும், ஆதிக்க மனநிலைக்கும் துணை நிற்பது இந்த அமைப்புதான். அரசியல் ரீதியான அழுத்தங்கள் இல்லையென்றாலும் கூட மற்ற அதிகாரங்களுக்கும், பணத்திற்கும் அடிபணியும் அமைப்பாகவே காவல்துறை இருக்கிறது. சாதி ரீதியான, மத ரீதியான, ஆதிக்க உணர்வு எல்லா இடங்களிலும் இருப்பது போல காவல்துறையிலும் இருக்கிறது. ஆணாதிக்க உணர்வும் காவல்துறையில் மேலோங்கியே உள்ளது. மற்ற பணியிடங்களைப் போலவே காவல்துறையிலும் பெண்கள் பல்வேறு விதமான இன்னல்களைச் சந்திக்கிறார்கள்.

சமூகத்தின் ஒரு அலகுதான் காவல்துறை, சமூகத்தைப் போலவேதான் காவல்துறை இருக்கும் என்றாலும் சமூகத்தில் நிகழும், மீறல்களுக்கு, குற்றங்களுக்கு முதலில் மக்களாகிய நாம் காவல்துறையைத்தானே அணுகுகிறோம். முதலில் அணுகும் ஒரு அமைப்பே அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் துணை போவதுடன் அதே அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் மக்கள் மீது செலுத்துவதை எப்படி ஏற்க முடியும். அதிகாரத்தாலும், ஆதிக்கத்தாலும் நிகழும் குற்றங்கள் குறைய வேண்டுமெனில் காவல்துறைதான் பெரும் பங்காற்ற வேண்டியிருக்கிறது. வெறும் தண்டனைகள் மற்றும் குற்றங்களைக் குறைத்துவிடாது. என்று காவல்துறை குற்றத்தை குற்றமாக மட்டுமே பார்க்கிறதோ அன்றிலிருந்துதான் மாற்றங்கள் நிகழும். குற்றம் யார் செய்தது? என்பதைப் பொறுத்தே காவல்துறை செயல்படும் எனில் எந்த மாற்றமும் நிகழாது.

சாதி ரீதியான வன்கொடுமைகள், மத ரீதியான வன்கொடுமைகள் , பெண்கள் மீதான வன்கொடுமைகள் இத்தனையையும் செய்து கொண்டே இருக்கும் நிலத்திலேயே ராமர் கோவிலையும் கட்டுகிறார்கள். இத்தனை கொடுமைகளும் ராமர் கோவில் கட்டுவதால் மறைந்துவிடும் என்றால் அந்நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு விடிவு காலமே கிடையாது. கஷ்மீர் போல உத்திரபிரதேசமும் இந்தியாவின் இருண்ட பூமியாகிவிட்டது. உத்திரபிரதேச மாநிலத்தை பாஜகவின் கையிலிருந்து பிடுங்குவதன் மூலமே இந்தியாவை பாஜகவிடமிருந்து பிடுங்குவது தோடங்கும். அதுவரை நம்மை கொந்தளிப்பான மனநிலையிலேயேதான் வைத்திருப்பார்கள். அவநம்பிக்கையுடன் வாழ்வது கொடிதிலும் கொடிது. அதைத்தான் பாஜக அரசு இந்திய மக்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறது. 

மேலும் படிக்க :


2 comments:

SKY Touch Tamil said...

Nice information. thank you.

Movie News

Admin said...

Nice Tnq

Cinema Apex

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms