Saturday, August 31, 2024

Adrishya Jalakangal ❤️


 கலை என்ன செய்யும் ? 

இப்படியான திரைப்படத்தை எடுக்கும். நமக்கு மாற்றுப் பார்வைகளை வழங்கும். மனங்களை விசாலமாக்கும். அரசதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தும். கற்பனைக்கு சிறகுகள் கொடுத்து பறக்கவிடும். 

சிறுகதை, நாவலில் மட்டுமல்ல திரைப்படத்திலும் ஜாலங்கள் செய்ய முடியும் என இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன் உணர்த்தியிருக்கிறார். இவரின் மற்ற திரைப்படங்களையும் காண வேண்டும். 

டொவினோ தாமஸ் தனது உடல் மொழியில் பழைய சாயல் இல்லாமல் தனித்துத் தெரிய நிறைய உழைத்திருக்கிறார். எந்த இடத்திலும் இந்த உடல்மொழி மாறவேயில்லை. தன்னால் இப்படியான திரைப்படங்களிலும், இப்படியான கதாப்பாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். 

நிமிஷா சாஜயன் கதாப்பாத்திரம் கொஞ்சம் நாயகித்தன்மையுடன் இருந்தாலும் ரசிக்க முடிகிறது. எப்போதும் போல ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரையிலுமே நிமிஷாவிற்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு அவர் நியாயம் செய்திருக்கிறார். எந்தக் கதாப்பாத்திரம் கொடுத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார்.இதுவே இவரது தனித்தன்மை.

டொவினோ, நிமிஷா இருவரின் கதாப்பாத்திரங்களும் அடையாளமற்றவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களைக் காணும் போது நாமும் அடையாளமற்றவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

அழகியல் மட்டும் கலையாகாது. அழகியலுடன் அரசியலும் சேரும் போதுதான் கலை முழுமையடைகிறது. அந்த வகையில் இந்தத் திரைப்படம், முழுமையான கலைப்படைப்பாக மாறிவிடுகிறது. இதற்கு ஒளிப்பதிவும் இசையும் துணை நிற்கின்றன. பல இடங்களில் வசனங்கள் சிறப்பாக இருக்கின்றன. போர் எதிர்ப்பு, சுற்றுச்சூழல், இயற்கை, அதிகார அரசியல், எளிய மனிதர்களின் குரல்கள் , புத்தகங்கள் , இசை, சம கால பிரச்சனைகள் எனப் பலவற்றை பேசியிருக்கும் இத்திரைப்படம் டொவினோவின் நடிப்பையும் மீறி இயக்குநரின் திரைப்படமாகவே மிளிர்கிறது. 

இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉.

மசாலா திரைப்பட பிரியர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்காது. நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அதை கலையின் மூலம் எதிர்கொள்ளலாம் என கலை மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் , மலையாளத் திரைப்பட பிரியர்களுக்கும் இத்திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.


மேலும் படிக்க:

மனிதரில் இத்தனை நிறங்களா !

JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

எங்கெங்கு காணினும் குப்பைகள் !


நாகரீக மனிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வாழும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் குப்பைகள் குறித்து மக்கள் மட்டுமல்ல அரசுகளும் கண்டுகொள்வதில்லை. ஆனால் குப்பை மேலாண்மைக்கு தனியாக வரி மட்டும் சேர்த்து வாங்குகிறார்கள். 

நாளுக்குநாள் சேரும் குப்பைகளின் அளவு மிகவும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த குப்பைப் பெருக்கத்திற்கு பல்வேறு விதமான காரணிகள் இருக்கின்றன. ஆனால் அதிகமும் கண்ணில் படுவது பிளாஸ்டிக் பொருட்கள்தான். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களால் உண்டாகும் குப்பைகளுடன் பயன்பாட்டில்  இருந்து பயன்படாமல் மாறும் குப்பைகளும் சேர்ந்து கொள்கின்றன. 

குப்பைகள் என்றுமே இருக்கின்றன. ஆனால் முன்பு அவை எளிதில் மட்கும் குப்பைகளாக, விவசாய நிலங்களுக்கு உரமாக இருந்தன. இன்று எளிதில் மட்கும் குப்பைகளுடன் எளிதில் மட்காத குப்பைகளும் சேர்ந்து கொள்வதால் தானாக மட்குவதில் சிரமம் உண்டாகிறது, அத்துடன் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்த முடியாமலும் போகின்றன. 

சுகாதார பணியாளர்களின் அயராத உழைப்பால்தான் இந்த அளவிற்காவது பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் மட்டும் தொடர்ந்து இயங்காமல் போனால் நாம் குப்பைகளுடன் குப்பைகளாகத்தான் வாழ வேண்டியிருக்கும். இன்றும் எல்லா ஊர்களிலும் குப்பைகளை, தினமும் அள்ளப்படும் இடங்களில் கொட்டாமல் கண்ணில் படும் காலி இடங்களில் கொட்டும் மனநிலையே அதிகம் உள்ளது. இந்த விசயத்தில் மக்களாகிய நமக்கு பொறுப்புணர்வு தேவை. 

மட்கும் குப்பைகளையும், மட்காத குப்பைகளையும் பிரிப்பது என்பது சவாலான வேலையாக இருக்கிறது. அரசுகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அறிவிக்காமல் திடீரென பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை என அறிவிப்பதும் அப்புறம் அந்த அறிவிப்பை காற்றில் விடுவதும் தொடர்கதையாக இருக்கிறது. அந்த பிளாஸ்டிக் தடையும் எளிய மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்  பொருட்களுக்குத்தான். கார்பரேட் நிறுவனங்கள்தான் பிளாஸ்டிக் குப்பைகளை அதிகப்படுத்துகின்றன. ஆனால் இன்று வரை எந்த அரசும் கார்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவேயில்லை. 

மறுசுழற்சி என்பது ஏமாற்று வேலை. மறுசுழற்சி செய்யக்கூடியவை என்று வலம் வரும் பிளாஸ்டிக் பொருட்களில் 5%  கூட மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. எளிதில் மட்கும் பொருட்களை நோக்கி பயணிப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும்.    

இயற்கையில் கழிவு என்றும் குப்பை என்றும் எதுவும் இல்லை. நாமும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படித்தான் வாழ்ந்து வந்தோம். மட்கும் குப்பைகளை மண்ணுக்கு உரமாகவும், மட்காத குப்பைகளை பழைய இரும்புக்கடையில் எடையாகவும் போட்டோம். இப்போது எல்லாம் மாறிவிட்டது. எதற்கும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். 

எப்படிப் பார்த்தாலும் குப்பைகள் குறித்து அரசுகளும், மக்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டமிது. அனைத்து வகையான வணிக நிறுவனங்களும் குப்பைகளை குறைக்க முன்வர வேண்டும். இந்நிறுவனங்கள் சரியாக திட்டமிட்டால் நிறைய குப்பைகளை குறைக்க முடியும். வரும் காலங்களில் குப்பைகளை கையாள தனியாக அமைச்சரகம் உருவாக்க வேண்டிய சூழல் உண்டாகும் வாய்ப்பே அதிகம். 

மொத்தத்தில் ஆக்கப்பூர்வமான கழிவு மேலாண்மை உடனடி தேவையாக இருக்கிறது. இப்போதும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தால் இயற்கை, நாம் வீசும் குப்பைகளை நம் மீதே வீசும்  !

மேலும் படிக்க:

நாமெல்லாம் குற்றவாளிகளே !

அக்னியையும் தாண்டி ...!

நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் கதை !


" பாலியல் தொழிலை அங்கிகரியுங்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று தான் கேட்கிறோம் "

 - நளினி ஜமீலா

சக மனிதர்களிடமிருந்து மரியாதையை மட்டுமே நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம். "மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் " என்பதன்படியே இன்றும் வாழ்கிறோம். மரியாதை கொடுக்காத எந்த இடத்திற்கும் நாம் செல்வதில்லை. ஆனால் அதே சமயம் துப்புரவு பணியாளர்கள் , வீட்டு வேலை செய்பவர்கள் , பாலியல் தொழிலாளர்கள் , மாற்றுப்பாலினத்தவர்கள் , மூட்டை தூக்குபவர்கள் , கூலித் தொழிலாளர்கள் , சாலையோரத்தில் குடியிருப்பவர்கள் , பிச்சைக்காரர்கள் என்று நம்மிடையே வாழும் விளிம்புநிலை மனிதர்களுக்கு நாம் எந்த மரியாதையையும் கொடுப்பதில்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்கள் செய்யும் வேலையை நாம் செய்யப்போவதில்லை. ஆனால் அவர்களை மலினமான பார்வையாலும் , ஏச்சுக்களாலும் கடந்து போகிறோம். நாம் மதிக்காவிட்டாலும் நம்மைச் சார்ந்தே வாழும் துயரமான வாழ்க்கை அவர்களுடையது.ஆனால் நம்மை விட சிறந்த வாழ்க்கை. 

நளினி ஜமீலா, இந்த நூலில் சொல்லப்பட்டவரை எந்த இடத்திலும் தான் ஒரு பாலியல் தொழிலாளி என்ற குற்ற உணர்வை அடையவேயில்லை. அவரது சூழ்நிலைகள் தான் எல்லாவற்றுக்கும் காரணமாக அமைகின்றன என்பதை மட்டுமே கூறியுள்ளார். தன்னுடைய மகளை 'இவள் நளினி மகள் ' என அழைக்கப்பட்டதையே பெருமையாக கருதுகிறார். யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. 

எல்லாவிதமான மனிதர்களும் ஒரே மாதிரி தான் பிறக்கிறார்கள். அவரவர் பிறக்கின்ற இடத்தை வைத்து தான் பேதங்கள் கற்பிக்கப்படுகின்றன. சூழ்நிலைகளே நமது எல்லோருடைய வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்றன.

இவர்கள் இல்லாமல் பூமியில் வாழ்வே இல்லை. ஆனால் இவர்களுக்கு உண்டான மரியாதைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பெண்களும் , விவசாயிகளும் !

மதிப்போம் மதிப்படைவோம் !


மேலும் படிக்க:

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !

BEAUTY AND THE DOGS (2017)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms