Saturday, July 27, 2024

சாதி ஒழிப்பிற்கான சாத்தியமான வழிகள் - ஆ.சிவசுப்பிரமணியன் !


கேள்வி - சாதி ஒழிப்பிற்கான சாத்தியமான வழிகள் என எவற்றைச் சொல்வீர்கள் ? 

பண்பாட்டு ஆய்வாளர், ஆ.சிவசுப்பிரமணியன்  : " அடிப்படையில் இதற்கான முன்னெடுப்புகள் அரசிடமிருந்துதான் தொடங்க வேண்டும். ஏனென்றால், சமூகப் பாதுகாப்பு என்ற ஒன்று இன்றைக்குச் சமூகத்தில் கேள்விக்குரியதாக இருக்கிறது. அது, சாதிய அடிப்படையில்தான் நிகழ்கிறது. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், எல்லோருமாகச் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் அல்லது அரசு பார்த்து உதவி செய்ய வேண்டும். இவை இரண்டும் இல்லாத நிலையில், நீங்கள் உங்கள் சமூகத்து ஆள்களிடம்தான் அல்லது அமைப்பிடம்தான் போய் நிற்க வேண்டும். எல்லோருக்கும் பாதுகாப்புத் தர வேண்டிய அரசாங்கம், ஓட்டு அரசியலில் சாதியம் சார்ந்ததாக இன்றைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. காவல்நிலையத்தில் உயர்சாதி அதிகாரி ஒருவரிடம் , ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் , புகார் அளித்து சரியான அணுகுமுறையைப் பெற முடியுமா ? அதே நேரத்தில், அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஓர் அமைப்போடு அங்கு சென்றால், சரியான விதத்தில் அணுகப்படுவார். இதுதான் யதார்த்தம். இங்கே அரசு அமைப்பே சாதியமாக உள்ளது. அடுத்ததாகக் கல்வி நிறுவனங்கள். அவை, நியாயமான முறையில் இன்னும் ஜனநாயகப்படுத்தப்படவில்லை. அனைத்து சமூகத்தவருக்கும் அவரவர் திறமைக்கு உரிய வகையில் மேலே படிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.குறிப்பாக, உயர்கல்வியில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆகவே, அவர்கள் குறிப்பிடும்படியான வேலைவாய்ப்பும் பெற வழியின்றி போய்விடுகிறது". 

கேள்வி - அப்படியானால், அம்பேத்கர் முன்மொழியும் அகமணமுறை ஒழிப்பில் உங்களுக்கு...

பண்பாட்டு ஆய்வாளர், ஆ.சிவசுப்பிரமணியன் : " நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அதற்கு ஆதாரமே இவைதான்.அகமண முறை ஒழிப்பிற்கான சூழல் எப்படி உருவாகும் ? முறையான கல்வி பெற்று , வேலைவாய்ப்பு பெற்று, ஒன்றாகப் பணியாற்றுகிற சூழலில் தானே காதல் மலர மூடியும். இணைந்து பயில்வது, இணைந்து பணியாற்றுவது , இணைந்து உண்பது எனச் சூழல் உருவானால், தானாக சாதிமறுப்பு திருமணங்கள் நடக்கும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும்". 

ஜூலை 2018, விகடன் தடம் மாதயிதழில் வெளிவந்த பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் நேர்காணலிலிருந்து...

அதிகமாக சாதி புழங்கும் இடமாக , சாதியவாதிகளுக்கு பக்கபலமாக இருப்பவை காவல் நிலையங்கள் தான். சாதி சார்ந்து ஒவ்வொரு குற்றத்திலும் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்ட பிறகே குற்றமே பதிவு செய்யப்படுகிறது. அப்படியே பதிவு செய்தாலும் முதலில் மேம்போக்காகவே பதிவு செய்யப்படுகிறது. அதற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட பிறகே சரியான பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதியப்படுகிறது. காவல் துறையிலேயே சாதிய ஒடுக்குமுறைகள் நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. சாதிய பாகுபாடுகளை வளர்ப்பதில் காவல் நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காவல் நிலையங்கள் மக்களை சமத்துவத்துடன் நடத்த ஆரம்பித்தாலே போதும் நிறைய நல்ல மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்.

மேலும் படிக்க :



மனிதம் பரவட்டும் !


மனிதர்களின் மனங்களில் மனிதம் வளர்வதற்கு பதிலாக வன்மமே அதிகம் வளர்ந்து வருகிறது. ஏதேனும் ஒரு செய்தித்தாளை எடுத்து புரட்டிப் பாருங்கள், உண்மை புரியும்.மனிதர்கள் எப்படி இவ்வளவு வன்மம் நிறைந்தவர்களாக மாறிப் போனார்கள். அவர்களிடம் வன்மம் உருவானதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் அவை மிகமிகச் சிறியவையாகவே இருக்கின்றன, இருந்தும் அவை வன்மத்தை உருவாக்கி அழிவைத் தந்திருக்கின்றன. 

குற்றங்கள் எல்லா காலங்களிலும் இருப்பவை தான். ஆனால் தற்போது நடக்கும் மனிதர்களுக்கு இடையிலான  குற்றங்களில் வன்மமே பெரும் பங்கு வகிக்கிறது. எல்லாவிதமான குற்றங்களாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான். 

மனித மனங்கள் நாளுக்குநாள் சுருங்கிக் கொண்டேதான் போகின்றன. மனங்கள் விசாலமடையாமல் எல்லோருக்கும் நன்மை நடக்காது. " மனிதர்களின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு, மனிதர்களை வெறுக்காதே " -ஷேக்ஸ்பியர். இந்த வரிகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். 

இன்னொரு மனிதர் மீது வன்மம் கொள்வதற்கு முன்பாக இந்த வரிகளை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். 

வன்மம் வீழட்டும்

மனிதம் பரவட்டும் ❤️

மேலும் படிக்க :

ஆதிக்க உணர்வு அழிந்து போகட்டும்!

ஆதிக்கமும் அதிகாரமும் !


Beauty and the Dogs (2017)


தமிழில் வெளிவந்த 'அனல் மேலே பனித்துளி ' திரைப்படம் இந்த Beauty and the Dogs -ஐ மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. அனல் மேலே பனித்துளி-யே மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது. 'Beauty and the Dogs' இன்னும் பல மடங்கு பதைபதைப்பை உருவாக்குகிறது. 

போலீஸ் எல்லா ஊர்களிலும் 'போலீஸ்' தான். எல்லா நாடுகளிலும் அதிகாரத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் குற்றங்களை மூடி மறைக்கவே அரசுகள் விரும்புகின்றன. அதுவே குற்றத்தை நிகழ்த்தியது காவல்துறையாக இருக்கும் போது நீதிக்காக பல மடங்கு போராட வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டது பெண்ணாக இருக்கும் போது அப்பெண்ணையே நிலைகுலைய செய்துவிடுகிறது. காவல்துறை தனது குற்றத்தை மறைக்க எந்த எல்லை வரை செல்லும் என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர். அதே போல பெண்ணின் மனவலிமைக்கு முன் எந்த மிரட்டலும் ஒன்றும் செய்யாது என்பதையும் உணர வைக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருக்கும் Mariam Al Ferjani , ஆரம்பத்தில் குதூகலத்துடன் அப்பாவிற்கு தெரியாமல் கேளிக்கை விருந்தில் கலந்து கொள்வது, பாதிக்கப்பட்ட பிறகு அடுத்து என்ன செய்வது என்பதை அறியாமல் திகைத்து நிற்பது, ஆண் நண்பரின் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்குப் பிறகு காவல் துறையை நாடுவது, காவல்துறையின் பல்வேறு விதமான மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து நீதிக்காக போராடுவது என உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தத் திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திரைப்படத்தின் தொடக்க Party காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.

மேலும் படிக்க :

அனல் மேலே பனித்துளி !

JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms