Friday, November 11, 2022

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி ! !


எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. காதலிலும் அரசியல் இருக்கிறது. அந்த அரசியலை இந்த 'நட்சத்திரம் நகர்கிறது' பேசியிருக்கிது. கதைக்களமாக   நாடக மேடையைத் தேர்ந்தெடுத்ததால் இயக்குனர், ரஞ்சித்தால் மிகவும் சுதந்திரமாக எழுத முடிந்திருக்கிறது. ஏறக்குறைய எல்லாக் கதாப்பாத்திரங்களும் முற்போக்காகவும் அடுத்தவர்களையும், அவர்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது நல்ல விசயம். கிடைக்கும் சிறிய வாய்ப்பில் கூட அரசியல் பேசியிருக்கிறார். இது ரொம்பவும் முக்கியமானது. 


இங்கே முற்போக்காக காட்டிக் கொள்பவர்களின் திரைப்படங்களில் கூட பொதுப்புத்திக்கு தீனி போடும் காட்சிகளே அதிகம் இருக்கும். பெண் கதாப்பாத்திரத்தை மிகவும் பலவீனமானதாக சித்தரித்து இருப்பார்கள். எவ்வளவோ முற்போக்கான விசயங்களை சேர்க்க வாய்ப்பிருக்கும். ஆனால் சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ரஞ்சித் இத்திரைப்படத்தின் மூலம் 'ரெனே' எனும் பெண் கதாப்பாத்திரத்தை பேசுபொருளாக மாற்றியிருக்கிறார். நிறைய பேருக்கு 'அவள் அப்படித்தான்' திரைப்படத்தின் 'மஞ்சு' கதாப்பாத்திரம் நினைவிற்கு வந்திருக்கிறது. அதுவுமில்லாமல் கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் அரசியல்தான். உடை அரசியல், உணவு அரசியல், பாலின அரசியல், சாதி அரசியல் என்று போய்க்கொண்டே இருக்கிறது.


இத்திரைப்படம் நம்மை உரையாடலுக்கு அழைக்கிறது. வாங்க எல்லாத்தையும் பேசுவோம் ;எல்லாத்தையும் சரி செய்வோம் என்கிறது. நாலைந்து படங்களில் மிக அழுத்தமாக சொல்ல வேண்டிய விசயங்களை இந்த ஒரே படத்தில் சொல்ல முயற்சித்து இருப்பதால் அழுத்தமான காட்சிகள் குறைவாக இருக்கின்றன. ஆனால் அனைத்தும் பேசப்பட வேண்டியவை. ' வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியும்' என்பது இடதுசாரிகளின் பார்வையாக இருக்கிறது. இதை ரஞ்சித் மறுக்கிறார். 'வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியாது' என்கிறார். இதற்கு இடதுசாரிகள் விளக்கம் சொல்லலாம். ஆனால் இப்படி சொல்லவே (எதிர் கருத்தே) கூடாது என்பது பாசிசம். 


அர்ஜுன் கதாப்பாத்திரத்தின் ஊர் என்று சேலம் குறிப்பிடப்படுகிறது. அந்தக் கிராமத்து காட்சியில் அந்த ஊர் வட்டார மொழியைப் பேசாமல் சென்னைத்தமிழ் பேசப்படுவது நெருடலாக இருந்தது. அந்தக் காட்சிகள் வட்டார மொழியில் இருந்திருந்தால்  இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். 


 ரஞ்சித்தின் இந்தத் திரைப்படமாவது வன்முறை இல்லாமல் இருக்கிறதே என்று பார்த்தால் படத்தின் இறுதியில் வன்முறைக்காடசியைக் கொண்டு வந்து விட்டார். ஏன் ரஞ்சித்தால் வன்முறை இல்லாமல் சொல்ல வேண்டியதை சொல்லவே முடியாதா ? இறுதிக்காட்சி மட்டும் வன்முறை இல்லாமல் நம்முடன் உரையாடுவது போல அமைந்திருந்தால் இன்னும் நல்ல அனுபவமாக இருந்திருக்கும். ஆக்கப்பூர்வமான நிறைய விசயங்களை இத்திரைப்படம் பேசியிருக்கிறது. இத்திரைப்படமும் இதன் பேசுபொருளும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும். தற்பொழுது நெட்பிளிக்சில் ( Netflix) காணக்கிடைக்கிறது.


நட்சத்திரம் என்பதை சாதியாக உருவகப்படுத்தலாம். சாதி பழைய கெட்டித்தட்டிப்போன இடத்திலிருந்து நகர ஆரம்பித்து இருக்கிறது. இனியும் நகரும் !

மேலும் படிக்க :

JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

சர்தார் உத்தம் (SARDAR UDHAM)- உலகத்தரம் !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !


Saturday, September 17, 2022

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !



" ஆளும் வர்க்கம், மக்களின் மனோபாவங்களை மாற்றி, சிந்தனைகளை மழுங்கடித்து அவர்களை ஆளும் அனுமதியைப் பெற்று விடுகிறது. ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது"

- அண்டோனியோ கிராம்ஷி

உலகெங்கிலும் வாழும் பல்வேறு விதமான மனித இனக்குழுக்கள் பல்வேறு விதமான பண்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றன. உலகவணிகமயமாக்கல் உலகெங்கும் கால்பதிக்கத் தொடங்கிய பிறகு ஒவ்வொரு இனக்குழுவும் கடைபிடித்து வந்த, தனித்த அடையாளங்களை உடைய பண்பாடுகளில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் பெருமளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நமது சூழலுக்கு பொருந்தாத பலவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இப்படியான மாற்றங்களில் அதிகம் பயனடைவது பெருமுதலாளிகள்தான்.

நியாயப்படி பார்த்தால் உலகமயமாக்கல் மூலம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை. ஏழைக்கும் பணக்காரருக்கும் இருக்கும் இடைவெளி முன்பை விட மிகவும் அதிகரித்திருக்கிறது. 'இலாபம்' என்ற ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் அடிப்படை அறமற்ற நிறுவனங்களை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறோம். அவ்வளவு எளிதில் மீண்டும் உருவாக்க முடியாத இயற்கை வளங்களை போகிற போக்கில் அழித்து பணமாக்கி வருகிறார்கள். இயற்கைக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான், அது 'சமநிலை'யை நிலைநிறுத்துவது. தனது சமநிலையை ஏதோ ஒரு விதத்தில் இயற்கை தக்கவைத்துக் கொள்ளும். ஆனால் அந்த இயற்கையின் சமநிலைப்படுத்துதல் என்பது மனித இனத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கும். இதை எதையும் கவனத்தில் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

எந்த இனக்குழு கடைபிடிக்கும் பண்பாடாக இருந்தாலும் அங்கே கடவுள் வழிபாடு என்பது நிச்சயம் இருக்கும். நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் உருவான பிறகு மற்றைய வழிபாட்டு முறைகள் ஆட்டம் காண ஆரம்பித்தன. ஒவ்வொரு நிறுவன மதமும் சிறிய அளவிலான வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கும் இனக்குழுக்களை ஓட ஓட விரட்டுகின்றன. அவர்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றன. மதப் பிரிவினைவாதத்தை உருவாக்கி உலக மக்களைப் பிரிப்பதில் நிறுவன மதங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. ஒரு நாட்டில் வாழும் மக்களை பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்று பிரிப்பது என்பது பெரும்பாலும் மதத்தை மையப்படுத்தியே அமைக்கிறது. ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மதம், இன்னொரு நாட்டில் சிறுபான்மையாக இருக்கிறது. ஆனால் சொல்லி வைத்தார்போல் ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் மீது வெறுப்புகளைக் கக்கி அவர்களை நசுக்குகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதம் என்பது பெரும்பான்மை மதமாக இருக்கிறது.ஆனால் 'இந்து' என்ற சொல்லே ஆய்விற்கு உரியதாக இருக்கிறது.

' வங்காளத்தில் நீதித்துறையை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் சர்.வில்லியம் ஜோன்ஸ் ஈடுபட்டார்.உள்நாட்டு நீதிமுறைகளை அவர் தொகுத்துத் திரட்டி அதற்கு இந்துச் சட்டம் ( Hindu Law) எனப் பெயரிட்டார். கிறித்தவரல்லாத, இசுலாமியரல்லாத பெருந்திரளான மக்களைக் குறிக்க ஐரோப்பியர் வழங்கிய ' இந்து' என்னும் சொல் முதன்முதலாக அதிகார அங்கீகாரம் பெற்றது '

1800களின் தொடக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அதன் பிறகு இந்தச் சொல்லைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட ஸ்மார்த்த பார்ப்பனர்கள், இன்று ' இந்தியா இந்துக்களுக்கேச் சொந்தம் ' என்று கூவுகின்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். உண்மையில் இந்து மதம் என்பது பல்வேறு விதமான சமயங்களையும், பண்பாடுகளையும் அழித்து அவற்றையெல்லாம் உள்வாங்கி, தனதாக்கிய மதம் என்றுதான் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இன்றும் இந்து மதம் என்ற போர்வையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக ஸ்மார்த்த பார்ப்பனர்களே இருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தை ஆரம்ப காலம் முதலே எதிர்த்த நிலமாக தமிழ் நிலம் இருந்திருக்கிறது.

'1921இல் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று, அறநிலையப் பாதுகாப்பிற்கான சட்டமுன்வரைவு 1924இல் வெளிவந்தது. இந்தச் சட்டமுன்வரைவில் இருந்த 'இந்து' என்ற சொல்லைத் தமிழ்நாட்டுச் சைவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். 1924ஆம் ஆண்டு டிசம்பர் 'செந்தமிழ்ச் செல்வி' இதழில் பின்னிணைப்பாக இந்தச் சட்ட முன்வரைவு விமர்சனம் செய்யப்படுள்ளது. 'இந்து' என்ற சொல் எந்தவொரு சமயத்தையும் குறிப்பதாகாது. இந்து என்று சொல்லப்படும் பிரிவில் சைவம், வைணவம், லிங்காதயம், ஸ்மார்த்தம் என்று பல பிரிவுகள் உள்ளன. எனவே இந்த முன்வரைவு ஒவ்வொரு சமயத்தைப் பற்றியும் தனித்தனியாகக் கணக்கிட வேண்டும். இந்து என்ற சொல் ஸ்மார்த்தர்களுடையது என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்'.

எதிர்ப்புகளுக்கு இடையிலும் ' இந்து அறநிலையம் ' என்ற சொல்லே சட்டச் சொல்லாகியிருக்கிறது. அதுவே இன்றுவரை தொடர்கிறது.

நீண்ட வரலாறுடைய தமிழ்ப் பண்பாட்டிலும் கடவுள் வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏற்கனவே இங்கே இருந்த வழிபாட்டு முறைகளை, வழிபட்ட தெய்வங்களை இந்து மதம் தனக்குள் சேர்ந்துக் கொண்டாலும் கூட நாட்டார் தெய்வ வழிபாட்டிற்கும், நிறுவன தெய்வ வழிபாட்டிற்கும் இடையே மிகப் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் தொ.ப. விளக்குகிறார். 'பண்பாடு குறித்த ஆய்வுத்துறையில் தமிழ்நாடு இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது' என்றுதான் இந்த கட்டுரை நூலையே தொ.ப. தொடங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் அதிகளவில் பண்பாட்டாய்வுகள் செய்யப்பட வேண்டிய கட்டாயமும் தற்போது உருவாகியிருக்கிறது.

மற்ற தொன்மையான பண்பாடுகளைப் போல தமிழ்ப் பண்பாட்டிலும், முதன்மையான வழிபாடான 'தாய்த் தெய்வ வழிபாடு' எவ்வாறு இருந்தது; இருக்கிறது என்பதை ஒரு நீண்ட கட்டுரை மூலம் விளக்குகிறார். தெய்வ வழிபாட்டின் போது நாம் கவனிக்க மறந்த விசயங்களை ஆய்வுகள் மூலம் விளக்குகிறார். வியப்பூட்டும் நிறைய விசயங்கள் 'தாய்த் தெய்வம்' என்ற கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன.

' பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் 99 விழுக்காடு வடக்கு நோக்கியே அமைந்துள்ளன என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே ( அதாவது இன்றைய கேரளத்தை உள்ளிட்டு) தமிழகம் இருந்துள்ளது. எனவே பகைப்படை வடதிசையிலிருந்து மட்டுமே வரமுடியும். தெய்வம் வடக்குத் திசை நோக்கித் தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பதே தொல் வரலாற்று உண்மையாகும்'.

இப்படி நிறைய தகவல்கள் இக்கட்டுரையின் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன. பெருந்தெய்வ கோயில்களில் ஆண் தெய்வத்திற்கு அருகிலிருக்கும் பெண் தெய்வங்கள் கைகளில் மலர்களை ஏந்தியிருக்கும் என்றும், ஆனால் தாய்த் தெய்வங்களோ பெரும்பாலும் சிங்கத்தின் மீது அமர்ந்து கைகளில் ஆயுதங்களுடன் போருக்கு ஆயத்தமான நிலையில் இருக்கும் என்றும், இவை இரத்தப்பலி பெறுகின்ற தெய்வங்கள் என்றும் தொ.ப.குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்திலிருந்தும் , கல்வெட்டுகள் மூலமாகவும் , சடங்குகள் மூலமாகவும் தமிழகத்தில் இருக்கும் தாய்த் தெய்வ வழிபாடு பற்றி தெளிவாக விளக்குகிறார்.

' தாங்கள் வணங்குகின்ற பகவதியம்மன் ஒரு சமணத் தெய்வமென்பதும் முனீஸ்வரர் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தங்கரர் சமண மதத்தவர் என்பதும் வழிபடுகின்ற "இந்து" மக்களுக்குத் தெரியவே தெரியாது' என்கிறார், தொ.ப.

' உலக வரலாறு நெடுகிலும் ஒரு பிரிவின் வழிபாட்டுத்தலத்தை மற்றவர் இடிப்பதும் அழிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. அரசியல் என்பது மத அடிப்படைவாத அரசியலாக மாறிக்கொண்டிருக்கும் காலமிது. அடுத்தவர் வழிபாட்டிடத்தை இடிப்பதும் அழிப்பதும் அரசர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்கின்ற வேலை என்பதே அன்றும் இன்றும் வரலாறு ஆகும். சனநாயக உணர்வுள்ள எளிய மக்கள் அதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.'

வள்ளலார் பற்றிய கட்டுரையில் எப்படியான சூழலில் வள்ளலார் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார் என்பதை சான்றுகளுடன் விளக்குகிறார். சமய வழிபாட்டு முறைகளில் இருந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்ததுடன் , அங்கே கடைபிடிக்கப்பட்டு வந்த சாதிய பாகுபாடுகளையும் கடுமையாக எதிர்த்திருக்கிறார். 'அடியவருக்கு உணவளித்தல் என்ற கோயில் நடைமுறையினையும் சாதி, மதம் கடந்து ஏழை, எளியவர்களுக்கு உணவளித்தல் என்ற நடைமுறையாக மாற்றிக் காட்டினார்,வள்ளலார் ' என்கிறார், தொ.ப.

'ஆழ்வார் பாடல்களும் கண்ணன் பாட்டும்' கட்டுரையில் இராம, கிருஷ்ண அவதாரங்களில் தமிழ்நாட்டு வைணவம் கிருஷ்ண அவதாரத்தையே பெரிதும் கொண்டாடியது. கிருஷ்ணன் என்னும் கண்ணனுக்கு மகிழிணையாக வடநாட்டு இலக்கிய மரபுகள் ராதையைக் கொண்டாடியது போலத் தமிழிலக்கியங்கள் நப்பினையைக் கொண்டாடின, என்று தொ.ப. கூறுகிறார்.

கம்பராமாயணம் இங்கு செல்வாக்கு பெற்றிருந்தாலும் கூட ராமன் செல்வாக்கு பெறவில்லை. கம்பரின் கவித்திறமையை வெளிப்படுத்துவதாகவே கம்பராமாயணம் இங்கே பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இங்கே கண்ணனுக்கு பதில் ராமன் செல்வாக்கு அடைந்திருந்தால் தற்போது ஆளும் பாஜக அரசிற்கு அது வசதியாகப் போயிருக்கும்.

' கண்ணனைக் குழந்தையாகவும் நாயகனாகவும் தெய்வமாகவும் மட்டுமே ஆழ்வார்கள் பார்க்க பாரதியோ, தாயாகவும் தோழனாகவும் சற்குருவாகவும் ஆண்டானாகவும் அடிமையாகவும் நாயகியாகவும் பார்க்கிறான்.'

' பாரதி முழுமையான விடுதலையினை யாசித்த ஒரு கவிஞர். ' வேண்டுமடி எப்போதும் விடுதலை' என்று மீண்டும் அடிமைத்தளையில் சிக்க மறுக்கின்ற கவிஞர். பாரதியின் விடுதலை உணர்வு அரசியல் தளத்தில் மட்டுமல்லாது கலைத் தளத்திலும் பரவிநிற்கின்றது. அதிகாரம் சார்ந்த எல்லா வகையான ஒழுங்கு முறைகளையும் மீற விரும்புவது கவிஞரின் மனமாகும்.'

வைணவக் குடும்பத்தில் பிறக்காத பாரதியார், வைணவ கடவுளாகப் பார்க்கப்படும் கண்ணனை முன் வைத்து எழுதிய 'கண்ணன் பாட்டு ' என்ற கலைப் படைப்பைக் கண்டு தொ.ப.வியக்கிறார்.

பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும், பெரியாழ்வாரும் ( ஆண்டாளின் தந்தை ) பார்ப்பனரல்லாத மக்கள் திரளின் வாழ்வினையும், உணர்வுகளையும் உள்வாங்கி பாடியுள்ளார்கள் என்பதை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் 'பண்பாட்டுக் கலப்பு ' எனும் கட்டுரையின் வாயிலாக விளக்குகிறார்.

' நாட்டார் தெய்வங்கள் எவையும் 'முன்னே வந்து' வரம் தரும் தெய்வங்கள் அல்ல; 'பின்னே நின்று' பாதுகாப்புத் தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும், அறுவடைக் காலத்திலும், கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும், ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. '

'நாட்டார் தெய்வங்களில் 90%க்கு மேல் பெண் தெய்வங்கள் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். நாட்டார் தெய்வக் கோயில்களில் மட்டுமே தெய்வத்தைத் தன்மேல் நிறுத்திச் சாமியாடவும் குறி (அருள்வாக்கு) சொல்லவும் அடியவர்களுக்குத் திருநீறு வழங்கி அருள் பாலிக்கவும் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. இது மேல் சாதி மரபில் பெருந்தெய்வக் கோயில்களில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. '

நாட்டார் தெய்வங்களை வழிபடும் எல்லா மனிதர்களையும் தெய்வ நம்பிக்கையிலிருந்து விடுதலை செய்ய முடியாது. ஆனால் அவர்கள் மதம் என்ற அதிகார அமைப்பிற்குள் சிக்குவதை தடுக்க நாம் நாட்டார் தெய்வங்களை ஆதரிக்க வேண்டும் என்கிறார் தொ.ப.

பக்தி இலக்கியங்கள் சார்ந்த ஆய்வுகள் மிகவும் குறைவாக இருப்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். இத்தகைய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை கா.சிவத்தம்பியின் ஆய்வுகள் மூலமாக விளக்குகிறார்.

'வேதத்தை மட்டுமே கடவுளாகக் கொண்ட ஸ்மார்த்தர்கள், ஆகமங்களையும் கோயில் வழிபாட்டையும் முன்னிறுத்தும் சைவ வைணவர்கள், இந்த இரண்டு நெறிகளுக்குள்ளும் அடங்காத தொல்பழஞ் சமயக் கூறுகளையுடைய பெருவாரியான மக்கள் திரள் இவர்கள் அனைவரையும் 'இந்துக்கள்' என்ற கட்டுக்குள் அடக்க முயலுவதையே நாம் சமய ஆதிக்க உணர்வு என்கிறோம். இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 'இந்து' என்ற மேலைச் சொல்லாடலுக்கு நேரிடையான வரைவிலக்கணம் எதனையும் தரவில்லை என்பது இந்துத்துவவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்தச் சொல் பல்வேறு சமயங்களையும் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும் '

'இந்து' என்ற சொல்லுக்கான அரசியல் சட்ட வரைவிலக்கணம் உருவாக்கபட வேண்டும் என்பதே தொ.ப.வின் விருப்பமாகும்.

'தெய்வம் என்பதோர்...' என்ற தலைப்பு 'தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி' என்னும் திருவாசக அடியிலிருந்து பெறப்பட்டதாக தொ.ப. என மக்களால் அன்பாக அழைக்கப்படும் தொ.பரமசிவன் குறிப்பிடுகிறார். 'காலச்சுவடு' பதிப்பகம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது. உண்மையிலேயே தெய்வ வழிபாடு குறித்தான தட்டையான பார்வையை இப்புத்தகம் மாற்றியிருக்கிறது

இக்கட்டுரை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி' எனும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. 

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,
9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

மேலும் படிக்க :


Tuesday, September 13, 2022

Wild Wild Country - ஓஷோ !

 


Wild Wild Country ❤

- Documentary About OSHO !

மிகவும் சிறப்பான ஆவணப்படம்.ஆறு பகுதிகளாக எடுக்கப்பட்டிருக்கின்றன. சார்பு நிலைகள் இல்லாமல் உருவாக்கப்படுள்ளது. ஒஷோவோடு தொடர்பில் இருந்தவர்களின் குரல்களின் வாயிலாகவும், 1981 முதல் 1985வரை அமெரிக்காவில் ஒரு குட்டி நகரத்தையே எப்படி உருவாக்கினார்கள் என்பதும் காட்சிகளாக விரிகின்றன. 40 ,50 பேர்கள் மட்டுமே இருக்கும் ஆன்டலோப் எனும் சிறு நகரத்திற்கு பக்கத்தில் 'ரஜ்னீஷ்புரம் ' என்ற ஒன்றை உருவாக்குகிறார்கள். இந்த ஆவணப்படத்தின் மூலம் ஓஷோவை விட அதிகம் கவர்ந்தவர் , ஓஷோவின் உதவியாளர், மா ஆனந்த் ஷீலா. 


மொரார்ஜி தேசாய் அரசு , பூனாவில் இருந்த ஓஷோவின் ஆசிரமத்திற்கு அளித்து வந்த வரிச்சலுகையை ரத்து செய்கிறது. ஏற்கனவே பூனா ஆசிரமத்தை விட பெரியதாக இந்தியாவில் வேறு இடம் கிடைக்குமா என்று அவர்கள் தேடிக்கொண்டிருந்த சூழலில் வரிச்சலுகையும் ரத்து செய்யப்பட அமெரிக்காவிற்கு பயணமாகிறார்கள். ஓஷோவிற்கு பெற்றோர் வைத்த பெயர், சந்திர மோகன் ஜெயின். அதை 'ரஜ்னீஷ்' என்று மாற்றிக்கொள்கிறார். 'பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் ' என்றே அமெரிக்காவில் அழைக்கப்படுகிறார். 


மா ஆனந்த் ஷீலாவின் பெரும் உழைப்பால் 'ரஜ்னீஷ்புரம்' உருவாகிறது. ரஜ்னீஷ் மீது எல்லையற்ற அன்பும்,நம்பிக்கையும் வைத்திருந்தார், வைத்திருக்கிறார். சில அதிகார பிரச்சனைகளால் ஷீலா அமெரிக்காவை விட்டு வெளியேறினாலும் இன்று வயோதிகத்தை அடைந்திருந்தாலும் ரஜ்னீஷ் மீதான அன்பும், நம்பிக்கையும் குறையவேயில்லை. அவரது நினைவுகளில் இன்றும் ரஜ்னீஷே நிறைந்திருக்கிறார். 


இப்போதும் மிரட்சியாகவே இருக்கிறது. அமெரிக்கா மாதிரியான ஒரு நாட்டில் போய் எவ்வளவு வேலை பார்த்திருக்கானுக. சொந்தமாக விமானநிலையம், ஆயுதம் ஏந்திய போலீஸ், ஆயவுக்கூடம் என்று ஐந்து ஆண்டுகள் மிரட்டியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொழிற்நுட்பத்தில் சிறந்தவர்கள் ரஜ்னீஷை பின்தொடர்பவர்களாக இருந்திருக்கிறார்கள். பணத்திற்கும் குறைவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த சாமியார்களை கையிலயே பிடிக்க முடியாது போல. அதிலும் நவீன சாமியார்கள் படித்தவர்களையும் எளிதில் உள்ளே இழுத்துவிடுகிறார்கள். 


காலம், காலமாக இருந்து வருவதை தங்களுக்கு தகுந்தவாறு உடைத்துவிட்டு கவர்ச்சிகரமான பத்து, இருபது வார்த்தைகளை சிதறவிட்டால் போதும் கூட்டம் தானாக சேர்ந்துவிடும் போல. ஆசிரமங்கள் எல்லாம் பிரம்மச்சரியத்தை கடைபிடித்து வந்த சூழலில் எங்கள் ஆசிரமத்தில் பிரம்மச்சரியம் இல்லை. விரும்புபவர்கள், விரும்புபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் ஏன் கூட்டம் சேராது ? ஓஷோவிய் ஆசிரமத்தில் சேர்ந்தது உலகம் முழுவதிலும் இருந்து. 


'ஆசையே துன்பத்திற்கு காரணம் ' என்றார் புத்தர். இதற்கு மாற்றாக ' அத்தனைக்கும் ஆசைப்படு ' என்று சொல்லியே ஜக்கி என்னும் விஷக்கிருமி காட்டை அழித்ததோடு, இன்று கோவை பகுதியின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஜக்கியின் ரோல் மாடல் ஓஷோதான். சொல்லி வைத்ததுபோல இருவரும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு பக்தி, ' Enlightenment ' என்பதெல்லாம் பணத்திற்கு பின்புதான். 


ஷீலா ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பிறகு ரஜ்னீஷூம் , ரஜ்னீஷ்புரத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். அப்புறம் அங்கிருக்கிருந்த மற்றவர்களும் வெளியேறிவிடுகிறார்கள். ஆன்டலோப் மக்கள், அன்றும் சரி, இன்றும் சரி இந்த ரஜ்னீஷ் கூட்டத்தை காமெடியாகவே அணுகியிருக்கிறார்கள். அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு 21 நாடுகள் ரஜ்னீஷை உள்ளே விட அனுமதிக்கவில்லை. கடைசியில் மீண்டும் பூனா ஆசிரமத்திற்கே வருகிறார். இறப்பதற்கு ஒரு வருடம் (1989) முன்புதான் 'ஜென் ' தாக்கத்தால் தனது பெயரை 'ஓஷோ' என்று மாற்றிக் கொள்கிறார். இப்போது அதுவே நிலைத்துவிட்டது. ஓஷோவை அமெரிக்கா விரட்டி அடித்தது போல , ஜக்கியை நாம் கோவையை விட்டு விரட்டியடிக்க வேண்டும். 


இன்றும் ஓஷோவை பின்தொடர்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தைப் பார்த்த பிறகும் ஓஷோவை நம்புகிறார்கள். ஆனால்

எல்லா சாமியார்களும் போலிகள்தான். Osho also a Fake. 


Very admiring personality, Ma Anand Sheela ❤


நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். பெரிய அளவிலான ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன ! 


மேலும் படிக்க :

Ennio : The Maestro (The Glance of Music ) (2021) , Documentary Movie


சர்தார் உத்தம் (Sardar Udham)- உலகத்தரம் !


Thursday, July 7, 2022 Jana Gana Mana - பாசிச எதிர்ப்பு சினிமா !

Thursday, July 7, 2022

Ennio : The Maestro (The Glance of Music ) (2021) , Documentary Movie ❤️


இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவரான என்னியோ மாரிக்கோனி (  Ennio Morricone ) பற்றிய ஆவணப்படமிது. இசை ரசிகர்கள் மற்றும் உலக சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆவணப்படமிது. சிறுவயதில் மருத்துவராக விரும்பியவரை காலம் ' மேஸ்ட்ரோ ' -வாக்கி அழகு பார்த்திருக்கிறது. டிரம்பட் கலைஞரான என்னியோவின் தந்தை, என்னியோவின் மருத்துவ கனவை கலைத்து டிரம்பட் கற்று கொள்ள அனுப்புகிறார். ஆரம்பத்தில் டிரம்பட் மட்டும் வாசிக்கப் பழகுகிறார். பிறகு இசைப்பாடல் எழுத பயிற்சி பெறுகிறார். அதன் பின்பு நடந்ததெல்லாம் வரலாறு. 


Cinema Paradiso, Django Unchained போன்ற திரைப்படங்களைப் பார்த்த போது அத்திரைப்படங்களின் இசையமைப்பாளர் யாரென்று தெரிந்து கொள்ளவில்லை. 'Once upon a time in America 'திரைப்படம் பார்த்தபோது தான் அத்திரைப்படத்தின் பின்னணி இசையைக் கேட்டு மிரண்டு போனேன். " யாருயா இந்த இசையமைப்பாளர் இப்படி மிரட்டியிருக்கிறார் " என்று தேடிப் பார்த்தபோதுதான் இசை , 'என்னியோ   மாரிக்கோனி' என்றிருந்தது. என்னியோவின் இசை மேதைமை குறித்து முன்பே நிறைய பேர் கூறியிருந்ததை வாசித்து இருந்தாலும் நேரடியான அனுபவம் 'Once upon a time in America' மூலமே கிடைத்தது. இப்போது இந்த ' Ennio : The Maestro ' ஆவணப்படத்தைப் பார்க்கும் போதுதான் ' Once upon a time in America' திரைப்படத்தை இயக்கிய  செர்ஜியோ லியோனிற்கும் ( Sergio Leone  )என்னியோவிற்கும் உள்ள உறவு தெரிய வருகிறது. 


செர்ஜியோவையும் என்னியோவையும் பிரிக்க முடியாது. பெரும்பாலான செர்ஜியோவின் திரைப்படங்களுக்கு இசை என்னியோதான். ஆனால் ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் என்னியோவை அதிக வேலை வாங்கியிருக்கிறார், செர்ஜியோ. இத்தனைக்கும் இருவரும் பள்ளி கால தோழர்கள். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இசைக்குறிப்புகளை எப்படி எழுதினார் என்பதை என்னியோ விவரிப்பதை பார்க்க அவ்வளவு ஆவலாக இருந்தது. அவருக்கும் உரிய காலத்தில் அங்கிகாரம் கிடைக்கவில்லை. பல முறை பரிந்துரைக்கப்பட்டும் தாமதமாகத்தான் ஆஸ்கர் விருதே வழங்கப்பட்டிருக்கிறது. 


என்னியோவின் இசையமைப்பில் இளையாராஜாவையும் காண முடிகிறது, ஏ.ஆர்.ரஹ்மானையும் காண முடிகிறது. அந்த அளவிற்கு பரிசோதனை முயற்சிகளை என்னியோ தனது திரைப்படங்களில் செய்திருக்கிறார். He is a real MASTER. எப்படி இளையராஜா இசையமைத்த அனைத்து திரைப்படங்களையும் நம்மால் பார்க்க முடியாதோ அதே போல என்னியோ இசையமைத்த அத்தனை திரைப்படங்களையும் காண்பது கடினம். இளையராஜா 90களில் இயங்கியது போலவே அவரும் 70களில் வெறித்தனமாக உழைத்திருக்கிறார். 1969 ல் மட்டும் என்னியோவின் இசையமைப்பில் 21 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 


என்னியோவின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் அவரது மனைவியான 'மரியா'. 2007 ல் வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கர் விருதை பெற்ற  போதும், 2016ல் ' The hateful Eight' திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்ற போதும் அதை தன் மனைவிற்கே அர்ப்பணித்தார். Their love story was very interesting. இணையத்தில் தேடி படித்துக்  கொள்ளலாம். இசைக்குறிப்புகள் எழுதி மரியாவிடம் யோசனை கேட்பாராம். மரியா சரி ( Ok ) என்று சொன்ன இசைக்குறிப்புகளை மட்டும் இயக்குனர்களிடம் காண்பிப்பாராம். மரியா இந்த ஆவணப்படத்திலும் பேசவில்லை , இணையத்திலும் அவரைப் பற்றிய அதிக தகவல்கள் இல்லை ஆனால் , என்னியோவின் மனமெங்கும் மரியாவே நிறைந்திருந்திருக்கிறார். 


இந்த ஆவணப்படத்தை பார்த்த நேரம் முழுவதும் வேறு ஒரு உலகத்தில் உலவியது போல இருந்தது. ரொம்ப நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்களே யார் இயக்குநர் என்று தேடிய போதுதான் 'Cinema Paradiso ' திரைப்படத்தை இயக்கிய Giuseppe Tornatore -தான் இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் என தெரிய வந்தது. நல்ல அனுபவம்.  ' The Dreamers '  திரைப்படத்தை இயக்கிய Bernardo Bertolucci -யின் வேறு திரைப்படங்களை காணலாம் என தேடிய போதுதான், இந்த ஆவணப்படம் கண்ணில்பட்டது. Ennio என்ற பேரைப் பார்த்ததும் உடனே பார்க்க ஆரம்பிச்சாச்சு. 


தமிழ்நாட்டிலும் ஒரு மேஸ்ட்ரோ இருக்கிறார். அவரைப்பற்றி ஆவணப்படம் எடுக்கத்தான் ஆளில்லை. ' ஆவணப்படுத்துதல்' என்ற விசயத்தில் தமிழ் சமூகம் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. 2600 ஆண்டுகளுக்கும் மேலான ஆதாரப்பூர்வமான வரலாறு இருந்தாலும் இன்று வரை வெற்று பெருமிதங்களிலேயே உலன்று கொண்டிருக்கிறோம். சங்க இலக்கியங்களில் பாதி கிடைக்கவேயில்லை. பல வரலாற்றுச் சின்னங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. எதையும் முறையாக ஆவணப்படுத்தும் வழக்கம் நம்மிடம் இல்லை.


மற்ற கலைச்செல்வங்களுக்குத்தான் இந்த நிலை என்றால் சினிமாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் சினிமா நுழைந்த காலத்திலேயே தமிழகத்திலும் நுழைந்தது. ஆனால் ஆரம்ப கால தமிழ் சினிமா குறித்த ஆவணங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. மகேந்திரன் ,பாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்கள் கூட முழுமையாக நம்மிடம் இல்லை. அதுவுமில்லாமல் ஆவணப்படங்கள் மிகவும் குறைவாகவே எடுக்கப்படுகின்றன. அதுவும் பிரச்சார நெடியுடனேயே இருக்கின்றன. மகத்தான கலைஞர்களும், திரைக்கலைஞர்களும் நம்மிடம் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆவணப்படங்கள் தான் எடுக்கப்படுவதில்லை. இனி மேலாவது இந்நிலை மாற வேண்டும்.


நாம் இளையராஜாவிலிருந்து கூட ஆவணப்படம் எடுப்பதை  ஆரம்பிக்கலாம். ' Ennio ' ஆவணப்படம் போலவே இளையாராஜாவை அவரது பாடல்கள் உருவாக்கம் பற்றி பேசவிட்டு, அவருடன் பணியாற்றியவர்களின் கருத்துகளை பதிவு செய்து ஒரு நல்ல ஆவணப்படத்தை உருவாக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் இதை செய்வது யார் என்று தான் தெரியவில்லை.


' Music is the universal language '  என்று சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை. இத்தாலியில் பிறந்து வளர்ந்த என்னியோவின் இசை நம்மை வசீகரிக்கிறது. பிடித்த புத்தக வரிகளைக் கூட நாம் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருப்பதில்லை. ஆனால் பிடித்த இசையை, பாடலை நாள் முழுவதும் சலிப்பே இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அந்த அளவிற்கு இசை நமது மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. என்னியோவைக் கொண்டாடுவோம்,இளையராஜாவக் கொண்டாடுவோம் ,  இசையைக் கொண்டாடுவோம். இசை வாழ்க !

மேலும் படிக்க :

சர்தார் உத்தம் - உலகத்தரம் !


Jana Gana Mana - பாசிச எதிர்ப்பு சினிமா !

 


தற்போதைய ஒன்றிய பாஜக அரசு, இந்திய மக்களுக்கு எதிராக ஏவி விட்டிருக்கும் விதவிதமான அடக்குமுறைகளை இத்திரைப்படம் தோலுரித்துக் காட்டுகிறது.  ஊடகங்கள் எந்த அளவிற்கு நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். விதவிதமான சந்தைப்படுத்துதல் மூலமாக எப்படி நமது பொருளாதாரம் கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்படுகிறதோ அப்படி நமது உணர்வுகளை  ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் சேர்ந்து சூறையாடுவதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 


'வேற்றுமையில் ஒற்றுமை ' தான் இந்தியாவின் பலம். அந்த ஒற்றுமையை சீர்குலைத்து தனது அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை காவு வாங்குகிறது தற்போதைய ஒன்றிய பாஜக அரசு. ஏற்கனவே உலகவணிகமயமாக்கலால் நமது வாழ்க்கை முறையின் மீதும் நமது பண்பாட்டின் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. 


உலகமயமாக்கலால் உலகெங்கும் வாழும் பல்வேறு விதமான தனித்த இனக்குழுக்களின் தனித்த அடையாளங்கள் அழிந்து வருகின்றன. இந்தச் சூழலில் இந்தியாவை தற்போது ஆளும் ஒன்றிய பாஜக அரசு இந்தியா முழுவதும் வாழும் பல்வேறு விதமான இனக்குழுக்களின், மற்ற அரசியல் கட்சிகளின் , மற்ற மொழிகளின் அடையாளங்களை அழித்து தனது சாதிய பிரிவினையை முன்னிலைப்படுத்தும்  RSS சித்தாந்தங்களை மக்கள் மீது திணிக்கிறது. ஏற்கனவே சாதிய திமிரில் ஊறித்திளைப்பவர்களுக்கு  இது வசதியாகப் போய்விட்டது. இன்று வரை சாதியப் பிரிவினையால் அதிகளவில் பலன்களை பெற்று வருபவர்கள் பார்ப்பனர்களே. சாதியை முன் வைத்து நிகழும் மரணங்கள் அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது. இது போதாதென்று பாஜக கட்சி, மக்களிடத்தில் மத ரீதியான பிரிவினையையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. 


அதிகாரத்தை தக்க வைக்க அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் போவார்கள். ஏற்கனவே கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்து, மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிறகும் கூட   இந்திய ஊடகங்கள் நாட்டில் நல்லாட்சி நடப்பது போன்ற பிம்பத்தையே தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. தற்போதைய இந்தியப் பிரதமர் மோடியோ இதுவரை ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட நடத்தவில்லை. அந்தளவிற்கு பயந்து கிடக்கும் ஒரு மனிதரைத் தான் சங்கிகள் வீரர் என்று கொண்டாடுகிறார்கள். கூடவே ஊடகங்களும் துதிபாடுகின்றன. தங்களின் வாட்ஸ்அப் குழுவில் போட்டோசாப் செய்து பரப்பப்படும் அத்தனை பொய்களையும் உண்மை என்று நம்பி வாழ்ந்து வருகிறார்கள். 


ஊடகங்கள் மூலம் தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஊடகங்கள் மூலம் தான் தாங்கள் செய்து அத்தனை அயோக்கியத்தனங்களையும் மறைக்கிறார்கள். 2024 தேர்தலுக்கும் ஊடகங்களையே பயன்படுத்துவார்கள். இதை எதிர்த்து வெல்வதில்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. இப்படியான சூழலில்தான் ' Jana Gana Mana' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஊடகங்கள் எப்படி மக்களை முட்டாளாக்குகின்றன என்பதை அப்பட்டமாக விளக்குகிறார்கள். கேரள மக்களின் அரசியலறிவு பற்றி நாம் அறிந்ததே. இப்படியான அரசியல் சினிமா அங்கு மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. இந்த விசயத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கி இருக்கிறது. நாயகத்துதிபாடல் ஒழியாதவரை தமிழ் சினிமா உருப்படாது. மிகவும் தைரியமான ஒரு முன்னெடுப்பு இந்த சினிமா. மக்களின் நலன்களுக்காக சிந்திப்பவர்களுக்கும் , மக்களின் நலனிற்காக களத்தில் இறங்கி செயல்படுபவர்களுக்கும் மிகுந்த நம்பிக்கையை இந்த சினிமா உருவாக்கி இருக்கிறது. 


 நீதிமன்றங்களை முன் வைத்து எடுக்கப்படும்  திரைப்படங்களே மக்களின் அரசியலை, மக்களுக்கான அரசியலை விரிவாக பேசுகின்றன. இத்திரைப்படமும் அப்படியே. மக்களின்  பக்கம் நின்று மக்களின் பிரச்சனைகளை பேசுவதுதான் நல்ல படைப்பாக இருக்க முடியும். அந்த வகையில் 'Jana Gana Mana' ஒரு மக்களின் படைப்பு. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். Netflix OTT ல் காணலாம் !

மேலும் படிக்க :

ஜெய்பீம் - அறத்தின் குரல் !

சர்தார் உத்தம் - உலகத்தரம் !

Wednesday, December 22, 2021

Sex Education - Netflix Series !


இந்தியப் பொதுவெளியில் ' செக்ஸ் ' என்ற வார்த்தையே ஒருவித ஒவ்வாமையுடனும், அருவருப்புடனும்தான் பார்க்கப்படுகிறது. மாறாக தனிவெளியில் கிளுகிளுப்பு நிறைந்ததாக அணுகப்படுகிறது. செக்ஸ் என்பது இயல்பான ஒன்று என்பதை இந்திய சமூகம் ஏற்பதில்லை. மதங்களின் மூலமாக மிகவும் பிற்போக்கான, இயற்கைக்கு எதிரான விசயங்கள் மக்களிடம் பரப்பப்பட்டிருக்கின்றன. 

இங்கே எந்த வயதிலும் செக்ஸ் பற்றி பேசுவது தவறாகவே பார்க்கப்படுகிறது. செக்ஸ் எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும் பதின்பருவம் மிகவும் முக்கியமானது. உடல் குறித்தான நிறைய சந்தேகங்களும் ,குழப்பங்களும் எழும் பருவம். இந்தியச் சூழலில் பதின்பருவத்தினரின் பாலியல் குறித்தான சந்தேகங்களும், குழப்பங்களும் தீர்க்கப்படுவதேயில்லை. இதனால் வளர்ந்த பிறகும் , மணமான பிறகும் கூட பாலியல் சிக்கல்கள் தொடர்கின்றன. பாலியலையும் வயதையும் சேர்த்து குழப்பிக் கொள்வது இங்கே தொடர்ந்து நிகழ்கிறது. ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறனவர்கள் என்பது போல அவர்களின் பாலியல் விருப்பமும் வெவ்வேறானவை.

அனைத்து வயதினருக்குமான ஆண் மற்றும் பெண் குறித்தான பாலியல் சிக்கல்களே இன்னும் இங்கே பேசப்படவில்லை. இந்தச் சூழலில்தான் ஆண்,பெண் மட்டுமல்ல LGBTQ+ பிரிவினரையும் அவர்களின் பாலியல் சிக்கல்களையும் சேர்த்தே இந்த 'SEX EDUCATION ' தொடர் பேசுகிறது. Netflix-ல் வெளியாகி மூன்று சீசன்களைக் கடந்திருக்கிறது இந்தத் தொடர். ஓட்டிஸ் மற்றும் மேவ் ஆகியோருக்கு இடையிலான காதல் கதைதான் பிரதானமானது என்றாலும் கூட அனைத்து வயதினருக்குமான பாலியல் சிக்கல்களை உள்ளடக்கிய நிறைய கிளைக்கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன. 

வயதுவந்த அனைவரும் வாய்ப்பிருந்தால் பாருங்கள். நமது சூழலில் இவ்வாறான தொடர் எடுப்பதற்கான தேவை இருக்கிறது. பாலியல் என்பதை அறிவியல்படி அணுகும் மனநிலை என்பது இங்கே குறைவாகவே இருக்கிறது அல்லது சுத்தமாக இல்லை. பெண்ணுடலை காமத்திற்கான வடிகாலாக சித்தரிப்பதுதான் இங்கே தொடர்ந்து நிகழ்கிறது. இந்த மாதிரியான சித்தரிப்புகளால் இந்தியப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மிக அதிகம். பெண்களை காட்சிப்படுத்துவதில் இந்திய இயக்குநர்களுக்கு இன்னுமும் பொறுப்புணர்ச்சி வரவில்லை. 

எப்படி பார்த்தாலும் பாலியல் சிக்கல்களைத் தீர்ப்பதில் நாம் கடக்க வேண்டிய தூரம் என்பது மிகவும் அதிகம் என்றாலும் முதல் அடியை இப்போதாவது எடுத்து வைக்க வேண்டும்!

மேலும் படிக்க :

சர்தார் உத்தம் - உலகத்தரம்!



Tuesday, November 23, 2021

சர்தார் உத்தம் (Sardar Udham)- உலகத்தரம் !

 


உலகத்தரம் வாய்ந்த உருவாக்கம். இந்திய அளவில் ஒரு பீரியட் திரைப்படம் (Period Movie ) இவ்வளவு கச்சிதமாக, பிசிறில்லாமல் படமாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் கலை இயக்குநரே கண்முன் தெரிந்தார். அந்த அளவிற்கு கடந்த காலத்தை அப்படியே காட்ட உழைத்திருக்கிறார்கள். மன்ஷி மேத்தா ( Mansi Mehta ) என்ற இந்திய கலை இயக்குநரும், டிமிட்ரி மாலிஷ் ( Dmitriy Malich ) என்ற சர்வதேச கலை இயக்குநரும் சேர்ந்து இத்திரைப்படத்திற்கு கலைவடிவம் கொடுத்திருக்கிறார்கள். இருவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள். 

திரைப்படம் பார்த்த பிறகு இயக்குநர் யார் என்று தேடிய போது சூஜித் சிர்கார் ( Shoojit Sircar ) என்ற இந்திய இயக்குநர் என தெரிய வந்த போது ஆச்சரியமாக இருந்தது. இந்த திரைப்படத்தை 1990 லே படமாக்க நினைத்திருக்கிறார், சூஜித். அடுத்த தலைமுறைக்கு உத்தம் சிங்கின் வரலாற்றை முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இருபது ஆண்டுகள் அவரைப் பற்றி ஆய்வு (இடையில் வேறு படங்கள் இயக்கினாலும் ) செய்து , திரைப்படமாக இப்போது வெளியிட்டு இருக்கிறார். அவரின் இருபது வருட உழைப்பு வீண் போகவில்லை. தவறு நேர்ந்துவிடாதவாறு மிகக் கவனமாக ஒவ்வொரு காட்சியும் படமாக்கி இருக்கிறார், இயக்குநர் . சூஜித் இயக்கும் முதல் பீரியட் திரைப்படம் என்பதால் நிறைய வெளிநாட்டு திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் பார்த்து அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். 

முதலில் இர்பான் கான் நடிப்பதாக இருந்திருக்கிறது. உடல்நல பிரச்சனை காரணமாக அவர் விலக வேண்டி வந்ததால் விக்கி கௌஷல் உத்தம் சிங்காக மாறியிருக்கிறார். நான் லினியர் ( Non linear ) பாணி கதை சொல்லும் முறை திரைப்படத்திற்கு கூடுதல் சுவாரசியத்தைத் தருகிறது. தமிழில் தற்போது வெளிவந்து கவனம் பெற்றிருக்கும் ' ஜெய்பீம் ' திரைப்படமும் Non linear பாணியில் அமைந்ததுதான். நமக்கெல்லாம் பகத்சிங் பற்றி தெரிந்த அளவிற்கு அவரது நண்பரான உத்தம் சிங் பற்றி தெரிந்திருக்கவில்லை. இத்திரைப்படம் உத்தம் சிங்கை நமக்கு தெரிய வைத்திருக்கிறது. அந்த அளவில் இயக்குநரின் எண்ணம் நிறைவேறியிருக்கிறது. 

கலை என்ன செய்யும்? கலை என்ன வேண்டுமானாலும் செய்யும்.இத்திரைப்படத்தின் மூலமாக ஒரு போராளியை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது.1000 பேர்களுக்கும் மேல் கொன்று குவிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919 ஏப்ரல் 13) என்பது வரலாற்றுத் துயரம். இந்நிகழ்வை இரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்வே உத்தம் சிங் எனும் போராளி உருவாகக் காரணம். இந்நிகழ்வு நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகே அதாவது 2019ல்தான் பிரிட்டன் அரசு இந்த நிகழ்விற்கு மன்னிப்பு கோரியிருக்கிறது. 

பழிக்குப்பழி என்பது எதற்குமே தீர்வாகாது என்றாலும் கூட இப்படியான கொடூரமான நிகழ்வை நடத்தி காட்டியவருக்கு அரசு எந்தவித தண்டனையும் அளிக்காத போது மக்களின் சார்பாக, உத்தம் சிங் மூலமாக அளிக்கப்பட்ட தண்டனைதான் ஜெனரல் ஓ டயரின் மரணம். திரைப்பட விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். உலகத்தரத்தில் ஒரு இந்திய சினிமா !

மேலும் படிக்க:

ஜெய்பீம் - அறத்தின் குரல் !


ஜெய்பீம் -அறத்தின் குரல் !



ஜெய்பீம் அறம் என்ற நெருப்பை பற்ற வைத்திருக்கிறது. அந்த நெருப்பு, பற்றி எரிவதும் புகைந்து போவதும் நம் கைகளில் தான் இருக்கிறது. சமீப காலங்களில் மற்ற மொழி திரைப்படங்களையே அதிகம் கொண்டாடி இருக்கிறோம். தமிழ் திரைப்படங்கள் இன்றும் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. மிகவும் பிற்போக்கான விசயங்களையே தொடர்ந்து முன்னிலைப்படுத்துகின்றன. நாயகத்துதிபாடல் இன்னமும் ஒழிந்தபாடில்லை. யதார்த்தமின்மையும், லாஜிக் மீறல்களும் அதிகம் உள்ளதாகவே தமிழ்திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இப்படியான சூழலில்தான் ஜெய்பீம் ஒரு முழுமையான படைப்பாக வெளியாகியிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் 'ஜெய்பீம் ' திரைப்படத்தை கொண்டாடுவது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உண்மை, நீதி ,நியாயம், நேர்மை போன்றவற்றின் மீதான நம்பிக்கையை 90களுக்கு பிறகு உலகவணியமயமாக்கலால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். ' சுயநலம் ' என்ற ஒன்றை மட்டுமே உலகவணியமயமாக்கல் நமக்குப் போதிக்கிறது. இன்று, இவற்றையெல்லாம் முன்நிறுத்தி பேசுபவர்களை பைத்தியக்காரர்கள் என்றே மக்கள் நினைக்கவைக்கப்படுகிறார்கள். இதனாலேயே கம்யூனிஸ்ட்கள் என்றால் கார்பரேட்கள் அஞ்சுகிறார்கள். பொதுமக்கள் மத்தியிலும் கம்யூனிசம் மற்றும் கம்யூனிஸ்ட்கள் பற்றிய ஒவ்வாமை இருக்கிறது. நேரடியாக பயனடைந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகள் சென்று சேராதவாறு மறைக்கப்படுகின்றன. இதனாலேயே நாம் ஜெய்பீம் திரைப்படத்தை வெகுவாக கொண்டாடவேண்டியுள்ளது.

" நீங்க பேசறதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிபட்டு வரும். நடைமுறைக்கு சரிப்பட்டு வராது " என்றே அறத்தின் பக்கம் நின்று பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். எல்லா இடங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்க வேண்டும் என்றே வலதுசாரி மனம் விரும்புகிறது. அதனாலேயே இப்போது இருப்பது அப்படியே தொடர வேண்டும் என்று விரும்புகிறது. இதனாலேயே சமத்துவம் பேசுபவர்களைக் கண்டால் இவர்களுக்கு பிடிப்பதில்லை. இப்படி பெரும்பான்மை மக்களால் ஒதுக்கப்படுவர்களுக்கு இத்திரைப்படம் பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

அழுவாச்சி திரைப்படமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் நேர்த்தியான திரைக்கதையால் ஒரு சுவாரசியமான அதே நேரம் மிக அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கிறது. நிறைய மக்களின் ஏன் ஆளும் கட்சியின் மனசாட்சியையும் சேர்த்தே இத்திரைப்படம் உலுக்கியிருக்கிறது. கொஞ்சமேனும் மனதில் ஈரமுள்ள எவராலும் உடனே கடந்த போக முடியாத படைப்பு இது.

மக்களின் ரசனைக்கு மதிப்பு கொடுத்து ஒவ்வொரு காட்சியும் மிக கவனமாக உருவாக்கியிருக்கிறார்கள். பொதுவாக பெரும்பாலான தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள், மக்களின் உணர்வுகளுக்கோ, ரசனைகளுக்கோ எப்போதும் மதிப்பளிப்பதில்லை. " நாம எதைப் படம் பிடித்து போட்டாலும் பார்ப்பாங்க.." என்றே நினைக்கிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு உரிய மரியாதை கொடுத்து இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. சூர்யாவிற்கென்று , கதாநாயகிக்கென்று ஒருசில காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இது இயக்குநரின் திரைப்படமாகவே இருக்கிறது.

பெரும்பாலான யூடியூப் சேனல்கள் மிக அதிகளவில் இத்திரைப்படத்தை பற்றி பேசுவதின் மூலம் இத்திரைப்படம் சொல்ல வரும் அரசியலை திசைமாற்றப் பார்க்கின்றன. தோழர் ரபீக் ராஜா சொல்வது போல இத்திரைப்படம் ராசகண்ணு வழக்கு மூலம் சொல்ல வருவது 'அதிகார எதிர்ப்பு '. ஆனால் பேசு பொருளாக சூர்யா மட்டுமே இருக்கிறார். இப்படியான ஒரு படைப்பை உருவாக்க உதவியதற்கு சூர்யாவை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஆனால் பேசு பொருளாக அதிகார எதிர்ப்பே இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமலேயே போகிறது. எல்லா வழக்குகளுக்கும் சந்துருவும் , பெருமாள்சாமியும் கிடைத்துவிட மாட்டார்கள். சமத்துவத்திற்கு எதிரானது 'அதிகாரம் '. மக்கள் மீது செலுத்தப்படும் அனைத்துவிதமான அதிகாரங்களும் முடிவிற்கு வர வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களால் மட்டுமே இந்தபூமி சுழலவில்லை. உழைக்கும் மக்களாலேயே இந்த பூமி சுழலுகிறது.

இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் விவரிக்கப்படும் விதம் அவ்வளவு அழகு. ஏகப்பட்ட குறியுடுகள் திரைப்படம் முழுக்க இருக்கின்றன. அசலான மனிதர்கள், அசலான பேச்சு வழக்கு, அசலான வாழ்க்கை என அப்படியை பதிவாகியிருக்கிறது. மற்ற திரைப்படங்களைப் போல பின்னணி இசை எந்த இடத்திலும் உறுத்தவில்லை. அதே போல பாடல்களும் திரைப்படத்திலிருந்து விலகிச் செல்லவில்லை. தேர்ந்த அரசியலறிவும் ,சினிமா பற்றிய சரியான புரிதலும் உள்ள ஒருவராலேயே இப்படியான ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் இயக்குநர் ஞானவேல்❤ கொண்டாடப்பட வேண்டியவர். அறத்தின் பக்கம் நின்று அறத்தின் குரலை மிக வலுவாக கொண்டு சேர்த்திருக்கிறார். நிச்சயம் நல்ல மாற்றங்கள் நிகழும் என நம்புவோம்.

"ஜெய்பீம் என்றால் ஒளி...
ஜெய்பீம் என்றால் அன்பு...
ஜெய்பீம் என்றால் இருளிலிருந்து
வெளிச்சத்தை நோக்கிய பயணம்...
ஜெய்பீம் என்றால் பலகோடி
மக்களின் கண்ணீர்த்துளி...
"
என்ற மராத்திய கவிதையை திரைப்படத்தின் இறுதியில் காட்டுவதன் மூலம் எதற்காக இத்திரைப்படத்திற்கு ' ஜெய்பீம் ' என பெயரிடப்பட்டது என்பதை சொல்லாமல் சொல்கிறார், இயக்குநர். மிகப்பொருத்தமான தலைப்பு. இந்தத் திரைப்படத்திற்கும் இந்தக் கவிதைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

ஜெய்பீம் பற்ற வைத்திருக்கும் இந்த அறம் என்ற நெருப்பை அணையாமல் காப்பது நம் கடமையாகும் !

மேலும் படிக்க :

Thursday, March 4, 2021

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

 


தமிழ்த் திரையுலக வரலாற்றை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. அப்படிப்பட்ட கலைவாணரின் வரலாற்றை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் கால இயந்திரத்தில் பயணம் செய்து நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார், அறந்தை நாராயணன். போகிற போக்கில் துதிபாடும் மனநிலையில் எழுதாமல் ஆய்வுப்பூர்வமாக தமிழக அரசியல்,கலை வரலாற்றுடன் சேர்த்தே கலைவாணரையும் எழுதி இருக்கிறார். தரவுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


'நகைச்சுவை அரசு' , 'தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் ', 'கலைவாணர் ' என பல பட்டங்கள் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நூலாசிரியர் ஏன் 'நாகரீகக் கோமாளி ' எனும் பட்டத்தை நூலின் தலைப்பாக தேர்ந்தெடுத்தார் ? என்ற கேள்விக்கான பதில் நூலாசிரியரின் ' என்னுரை' யில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கலைவாணர் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பட்டப்பெயர் ' நாகரீகக் கோமாளி ' என்பதாகும். அதனால் அதையே இப்புத்தகத்தின் தலைப்பாக வைத்ததாக அறந்தை நாராயணன் கூறியிருக்கிறார். 

குடும்பச் சூழல் காரணமாக சிறு வயதிலேயே நாடகத் துறைக்கு வந்து தங்களின் திறமைகளை மெருகேற்றி சினிமாவிலும் வெற்றி பெற்ற வரலாறு உலகெங்கிலுமே பலருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட வரலாறு தான் கலைவாணருடையதும். நாடக நடிகர்களும், நாடக கம்பெனிகளும் தொடர்ந்து செல்வாக்காக எந்தக்காலத்திலும் இருந்ததில்லை என்பதையே தமிழக நாடக வரலாறு வெளிப்படுத்துகிறது.சினிமாவின் வரவு நாடக நடிகர்களுக்கு புது வாழ்வை அளித்ததையும் காண முடிகிறது. ஆனால் மக்கள், நாடகங்களையும் கொண்டாடியிருக்கிறார்கள், சினிமாவையும் கொண்டாடியிருக்கிறார்கள். 

சினிமாவின் ஆரம்ப காலங்களில் மற்றவர்கள் உருவாக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர், பின்னாட்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அவரது காட்சிகளை அவரே உருவாக்கி நடிக்க ஆரம்பித்தார். உடுமலை நாராயணகவி போன்றவர்களுடன் சேர்ந்து இவர் பாட வேண்டிய பாடல்களையும் உருவாக்கினார். கலைவாணர்-மதுரம் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாகவே திரைவாழ்வின் கடைசி வரை இருந்திருக்கிறது. நிஜ வாழ்விலும் மதுரம் , கலைவாணரின் வாழ்வில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். லட்சுமிகாந்தன் கொலைவழக்கு காலங்களில் கலைவாணரை வெளியே கொண்டு வர படாதபாடு பட்டிருக்கிறார். பெரும் வள்ளலாக இருந்த போதிலும் கலைவாணர் சிறையில் இருந்த காலங்களில் வழக்குச் செலவிற்காக அலைந்து திரிந்தும் மதுரத்திற்கு போதிய பண உதவி கிடைக்கவில்லை. இது குறித்து வருத்தம் உண்டானாலும் கடைசி வரை தனது வள்ளல் குணத்தை கலைவாணர் மாற்றிக் கொள்ளவேயில்லை.

மற்ற துறைகளைப் போல நாடகத் துறையிலும் தீண்டாமை இருந்திருக்கிறது. பிராமண நடிகர்களுக்கு தனிச்சாப்பாடும், மற்றவர்களுக்கு தனிச்சாப்பாடும் என்றிருந்த முறையை 1934ல் தனது மதிநுட்பத்தால் மாற்றிக் காட்டியிருக்கிறார், கலைவாணர். மற்ற இடங்களில் எப்படியோ அவர் இருக்கும் இடங்களில் பாரபட்சம் இல்லாமல் இருப்பதேயே விரும்பியிருக்கிறார். கலைவாணர் நடத்திய நிகழ்வுகளில் பெரிய தலைவர்கள் பங்கெடுத்தாலும் சாப்பாடு என்பது ஒரே மாதிரியாகத்தான் போடப்பட்டுள்ளது. 

சமூக சீர்திருத்தக் கருத்துகளை ஆரம்ப கட்டங்களிலேயே தனது நடிப்பில் சேர்க்க ஆரம்பித்து விட்டார், கலைவாணர். இயக்குநர் யாராக இருந்தாலும் இவரது காட்சிகளை இவரே உருவாக்கிக் கொண்டதால் ஒரு தொடர்ச்சியை இவரது படங்களில் காண முடிகிறது. திரைப்படம், பக்திப்படமாக இருந்தாலும் அந்த பக்திக்குள் இருக்கும் மூடத்தனங்களை பகடி செய்வதாக கலைவாணரின் பாத்திர அமைப்பு இருக்கும். தமிழக நகைச்சுவை நடிகர்களுக்கு ஆரம்ப காலம் முதலே ஒரு மதிப்பும், மரியாதையும் உண்டாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே முதல் காரணம். அதே போல தமிழ் திரைப்பட வரலாற்றில் நகைச்சுவை, வெறும் நகைச்சுவையாக கடந்து போய்விடாமல் சமூகசீர்திருத்த கருத்துகள் இன்று வரை நகைச்சுவை காட்சிகளில் இடம்பெறுவதற்கும் கலைவாணரே முன்னோடி. 

கலைவாணர் தனது வாழ்நாளில் பலரை நல்வழிபடுத்தியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும் இருமுறை அறிவுரை கூறியிருப்பது நமக்குத் தெரிய வருகிறது. அதில் ஒன்று, 1938ஆம் ஆண்டு படபிடிப்பிற்காக கல்கத்தா சென்றிருந்த போது ஒரு வாய்க்காலைத் தாண்டும் போது எம்.ஜி.ஆரின் செருப்பு ஒன்றின் வார் அறுந்துவிடுகிறது. அறுந்த செருப்பையும், மற்றொரு செருப்பையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுகிறார். மறுநாள், கலைவாணரிடம் வந்து " வாங்க, செருப்பு வாங்க போகலாம் " என்று எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார். " நாளைக்கு போகலாம் " என்று பதிலளிக்கிறார், கலைவாணர். மறுநாள் வந்த எம்.ஜி.ஆர்., " கடைக்கு போலாம்", என்று கலைவாணரைக் கூப்பிடுகிறார். 

" போகலாமா ? பணம் எடுத்துண்டையா ? இரு ! சட்டையை மாட்டிக்கிட்டு வர்றேன் !" என்று கூறிய , கிருஷ்ணன் உள்ளே போய், "ராமச்சந்திரா! " என்று குரல் கொடுக்கிறார்.

ராமச்சந்திரன் உள்ளே போகிறார்.

"அந்த நாற்காலியில் உட்கார்!" என்று கூறிய கிருஷ்ணன், கீழே கிடந்த ஒரு பொட்டலத்தைக் காட்டி , " இந்தச் செருப்பு உன் காலுக்குச் சரியா இருக்கா, பாரு!" என்கிறார் 

பொட்டலத்தைப் பிரித்ததும் எம்.ஜி.ராமச்சந்திரன் திகைத்தார். முதல் நாள் அவர் விசிறி எறிந்த அதே செருப்புக்கள் புதுப்பிக்கப்பட்டு , மெருகிடப்பட்டிருந்தன. ஏதோ பேச முயன்றார் எம்.ஜி.ராமச்சந்திரன். முந்திக் கொண்டார் கிருஷ்ணன்:

" உன்னுடைய பழைய செருப்புத்தான். நீ வீசி எறிந்துவிட்டுப் போனதை பின்னால் வந்து கொண்டிருந்த நான் பார்த்தேன். அப்பவே பத்திரமா எடுத்து வந்துவிட்டேன். ஆணி அடித்து, தைத்து சரி பண்ணிட்டேன் இப்போ இதுக்கு என்ன குறை ? இன்னும் ஆறுமாசம் வரும். உன்னையும் உன் அண்ணனையும் பிரிந்து அறியாத உங்கம்மா , நீங்க கல்கத்தா வருவதற்கு ஒத்துக் கொண்டது ஏன் ? நீங்க சினிமாவிலே நடிச்சு முன்னேறுவீங்க. நல்லா சம்பாதிப்பீங்க, பணம் அனுப்புவீங்கனு எதிர்பார்த்துத் தானே ? செருப்புதாதானே ? பழசென்ன, புதிசென்ன ? முடிஞ்சவரை எதையும் முழுசா பயன்படுத்திப் பழகணும் " என்றார். 

இது ஏற்கனவே பலருக்கும் தெரிந்த செய்தி தான் என்றாலும் மீண்டும் குறிப்பிடக் காரணம், " பழசென்ன , புதிசென்ன? முடிஞ்சவரை எதையும் முழுசா பயன்படுத்திப் பழகணும் " என்ற கலைவாணரின் வார்த்தைகள் தான். உலகமயமாக்கல் விரிவடைய , விரிவடைய 'எதையும் முழுதாகப் பயன்படுத்த வேண்டும்' என்ற மனநிலை நம்மிடையே மறைந்து வருகிறது. தேவையில்லாமல், தேவையில்லாத பொருட்களை வாங்கி குவித்துக்கொண்டே இருக்கிறோம். இந்த மனநிலை மாற வேண்டும். முடிந்தவரை எதையும் முழுதாக பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். 

கலைவாணரின் அசோகா பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வருமானவரி செலுத்த அவரின் உதவியாளர், திருவேங்கடம் கணக்குகளை எடுத்துக் கொண்டு கோவையில் உள்ள வருமானவரி அலுவலகத்திற்குச் சென்றார். ஹனுமந்தராவ் என்பவர் அதிகாரியாக இருந்தார். கணக்கைப் பார்த்தார் ஹனுமந்தராவ். 

" தர்மம், தர்மம் என்று தான் கணக்கில் பெரும்பகுதி காணப்படுகிறது !இதெல்லாம் உண்மையா? உண்மையாக இருந்தாலும் வரி விலக்கு எப்படிக் கொடுக்க முடியும் ? " என்று கேட்கிறார், ஹனுமந்தராவ். 

உதவியாளர், திருவேங்கடம், " நீங்கள் வேணும்னா , ஆபீஸர் என்பதை மறந்து சென்டிரல் ஸ்டுடியோவுக்கு ஒரு சாதாரண மனிதர் போலப் போங்க ! என் மகளுக்குக் கல்யாணம், வரதட்சிணையின் காரணமாக நிற்கிறது என்று என்.எஸ்.கிருஷ்ணனிடம் சொல்லிப் பாருங்க! அவர் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு வந்து இந்தக் கணக்குகளைச் சரி பாருங்க !" என்றார்.

திருவேங்கடம் ஒரு பேச்சுக்குத்தான் அப்படிச் சொன்னார். ஆனால், ஹனுமந்தராவ், உடனேயே சென்ட்ரல் ஸ்டுடியோவிற்கு சென்று என்.எஸ்.கிருஷ்ணனிடம் ,

" ஒரு பெண்ணைப் பெத்தவன் நான். ஆயிரம் ரூபாய் இல்லாததால் பெண்ணின் கல்யாணம் தடைபடும் போலிருக்கிறது " என்றார், ஹனுமந்தராவ்.

" ஆயிரம் ரூபாய்க்காக நல்ல காரியம் நிற்க வேண்டாம்.தயவு செய்து கொஞ்ச நேரம் இருங்கள். என்னுடைய ஆள் இன்கம்டாக்ஸ் ஆபிசுக்குப் போயிருக்கிறார். வந்தவுடன் நீங்கள் கேட்ட தொகையுடன், உங்களை எனது காரிலேயே அனுப்பி வைக்கிறேன்" என்றார் கிருஷ்ணன். 

அசந்து போனார், இன்கம்டாக்ஸ் ஆபீசர் ஹனுமந்தராவ். " உனக்கு கர்ணன் என்ற பெயரை வைத்திருக்கணும் .தவறாக, உன் அப்பா உனக்கு கிருஷ்ணன்னு பேர் வச்சிட்டார் ! அப்பா கிருஷ்ணா! நான் தான் இன்கம்டாக்ஸ் ஆபீசர்! உன்னுடைய ஆள் என்னிடம் வந்து உனது தர்ம குணத்தைக் கூறினார். நம்பாமல் நானே வந்தேன். இனி, நான் இருக்கும் வரை உனது தர்மச் செலவுத் தொகைக்கு வரி விலக்குத் தருகிறேன். ஆனால், நீ கொடுக்கும் தொகைக்கு வவுச்சர் மட்டும் வாங்கி வைத்துக் கொள் ! " என்று கூறிவிட்டு, ஹனுமந்தராவ் புறப்பட்டார்.

கலைவாணரின் வள்ளல் குணத்திற்கு இந்தச் சம்பவம் உதாரணமாகச் சொல்லப்படுகிறது.யாரென்றே தெரியாதவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தன் வாழ்நாள் முழுவதும் வாரி வாரி வழங்கியிருக்கிறார்.பல்வேறு அமைப்புகளுக்கு, தனிநபர்களுக்கு நிதியுதவி நாடகங்களை தொடர்ந்து நடத்திக் கொடுத்திருக்கிறார். வள்ளல்களாக நிறைய பேர் வாழ்ந்து மறைந்திருக்கலாம். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் போல நிபந்தனையற்ற வள்ளலாக இருந்திருப்பார்களா ? என்பது சந்தேகமே. 

"நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம்." என்று எம்.ஜி.ஆர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். பார்ப்பன எதிர்ப்பை தனது திரைப்படங்களில் வலுவாகவே பதிவு செய்திருந்தாலும் எந்தக் கட்சியையும் சாராதவராகவே கடைசி வரை வாழ்ந்திருக்கிறார். முதன் முதலாக நடிகர்களுக்கென சங்கம் தொடங்கியவர். நடிகர்கள், கூத்தாடிகள் என அழைக்கப்பட்டதை மாற்றி கலைஞர்கள் என அழைக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார்.
இயக்குநர்கள் கையில் இருந்த தமிழ் சினிமா, கதாநாயகர்கள் கைக்கு மாறுவதை கண்டு வறுத்தம் அடைந்திருக்கிறார். 

1948 ஜனவரி 21ம் தேதி கம்யூனிச தலைவர் ப.ஜீவானந்தத்திற்கும், பத்மாவதிக்கும் காதல் திருமணம் எளிய முறையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ,சொந்தக்காரர்களுக்கும்,நண்பர்களுக்கும் தெரிவிக்காமல் எளிதாக நடைபெற்ற செய்தி இரண்டு நாளுக்கு பிறகே கலைவாணருக்கு தெரிய வந்தது. " நாடறிந்த தலைவருக்கு , அதுவும் என் நாஞ்சில் நாட்டுத் தலைவருக்கு ரகசியக் கல்யாணமா ? இதை நான் அனுமதிக்க மாட்டேன் !" என்று சொன்ன கலைவாணர் " ஜீவா - பத்மா திருமணப் பாராட்டு விழா ! ஜனவரி 30-ம் நாள் மாலை " என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். திடீரென, ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால் , கலைவாணர் விரும்பிய ஜீவா -பத்மா திருமண வரவேற்பு விழா நடைபெறவில்லை.

மதுவிலக்கு குறித்தான கருத்துகளைப் பரப்ப 'நல்லதம்பி ' திரைப்படத்தின் பெரும்பகுதியை ஒதுக்கினார், கலைவாணர். அவர், காந்தி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது கதறி அழுதிருக்கிறார். காந்திக்காக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக அவரது மனதில் இருந்தது. அதற்கு செயல் வடிவம் கொடுக்க தனது சொந்த ஊரான நாகர்கோயிலில் உள்ள நகரப் பூங்காவில் யாரிடமும் பணம் பெறாமல் அன்றைய மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்க்கும் மேலாக செலவு செய்து 60 அடி உயர காந்தி நினைவுத் தூணை எழுப்பியிருக்கிறார். இன்றும் அந்த தூண் இருக்கிறதா என்று தெரியவில்லை? 

என்.எஸ்.கிருஷ்ணனை 'தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் ' என்று குறிப்பிடதற்கு அவரது பதில்,
" சார்லி சாப்ளினை ஆயிரம் பங்கு போட்டு வர்ற ஒரு பங்குக்கு கூட நான் சமானம் இல்லே. என்னைவிடச் சிறந்த நடிகருங்க வட நாட்டிலே , மலையாளத்திலே, தெலுங்கு தேசத்திலே எத்தனையோ பேர் இருக்காங்க ! ஆனா, அவங்க யாரும் இந்த என்.எஸ்.கிருஷ்ணன் புகழப்படுவது போலப் புகழப்படுவதில்லை.அதற்குக் காரணம் அவர்களிடம் தமிழர்களைப் போல அவ்வளவு அதிகமான தாய்மொழிப் பற்று இல்லாமல் போனதுதான். தமிழர்களிடம் தமிழ் மொழி மேலே ரொம்பப் பற்று ! அதனாலே, இந்த என்.எஸ்.கிருஷ்ணனிடமும் பற்று ! அவ்வளவுதான் !".


" சேலத்திற்குச் சென்றிருந்த கலைவாணர் ஒரு தியேட்டரில் , 'மந்திரி குமாரி' படத்தைப் பார்த்தார்; வசனச் சிறப்பு கண்டு பிரமித்தார்; மறுநாள் , காலையில், சேலத்தில் தங்கியிருந்த, அப்படத்தின் கதை - வசன ஆசிரியர் மு.கருணாநிதியைச் சந்தித்தார்; வாழ்த்தினார்; பாராடாடினார். "நான் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள 'மணமகள்' படத்திற்கு நீங்கள் தான் திரைக்கதை- வசனம் எழுத வேண்டும் " - என்று கலைவாணர் வலியுறுத்தினார். 
எழுத்து ஊதியமாக ரூபாய் 10 ஆயிரம் பேசி முடிக்கப்பட்டது. கலைவாணரின் கட்டாயத்தால் , மு.கருணாநிதியின் குடும்பம் சென்னையில் குடியேறியது. "
கலைஞர் மு.கருணாநிதி சென்னையில் குடியேறியதற்கு கலைவாணரும் ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறார்.

"1956 நவம்பர் முதல் நாள் . கேரளத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியிலிருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு , செங்கோட்டை உள்ளிட்ட இரண்டாயிரம் சதுரமைல் பரப்பளவுள்ள தமிழ் மண் தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்களில் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை. ஒதுக்கப்பட்டவர்களில் ஒருவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 

1945ம் ஆண்டு தொடங்கிய திருவிதாங்கூர் தமிழரியக்கத்திற்கு ஏராளமாகப் பண உதவிகளைத் தாராளமாகச் செய்தவர் கலைவாணர், அவர் மாத்திரம் இல்லாதிருந்தால் , இயக்கம் தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் மாண்டு மடிந்து போயிருக்கும். அத்தகைய "கலைவாணருக்கு அழைப்பில்லையா ?" என்று நாகர்கோயில் திலகர் வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் கொதித்தனர். அதே நவம்பர் முதல் தேதி மாலையிலேயே பெரிய வீதியில் இணைப்பு விழாவைத் தங்கள் சொந்த முயற்சியில் திலகர் வாலிபர் சங்கத்தினர் நடத்தினர். " 

சமூக சீர்திருத்தம் என்பதையே முழுமூச்சாக கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி இருக்கிறார்,கலைவாணர். பெரியாரின் தாக்கத்தால், பார்ப்பன எதிர்ப்பு, சாதி மறுப்பு திருமணம் ,விதவை மறுமணம், ஆண் பெண் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், கல்வியின் முக்கியத்துவம் என்று இன்று நாம் முற்போக்கு என்று சொல்லும் அனைத்தையும் அவரது படங்களில் அப்போதே வெளிப்படுத்தியுள்ளார். 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கலைக்காகவும், கலைஞர்களுக்காகவும் மட்டுமல்லாமல் மக்களுக்காகவும், மண்ணிற்காகவும் வாழ்ந்து மறைந்த மக்களின் கலைஞர்!

இந்தப் புத்தக உருவாக்கத்திற்கான அறந்தை நாராயணன் அவர்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது !

தலைப்பு - 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்', 
ஆசிரியர் - அறந்தை நாராயணன், வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் .

அச்சு எழுத்துரு, மற்ற புத்தகங்களில் உள்ளதை விட சிறியதாக இருந்ததால் வாசிக்க சிரமமாக இருந்தது. பதிப்பகத்தார் அடுத்த பதிப்பின் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இக்கட்டுரை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி' எனும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. 

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms