Monday, April 15, 2019

மோடியின் மக்கள் விரோத பாஜக அரசை தூக்கியெறியுங்கள்!


" பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கும் மோடியை எதிர்ப்பதற்கும் நீங்கள் ஒரு திராவிட, கம்யூனிச, தமிழ்தேசிய, சித்தாந்தவாதியாகவோ, இஸ்லாமிய, கிருத்துவராகவோ,சனாதன தர்மத்தால் ஒடுக்கப்பட்ட தலித்தாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை, மனிதநேயமிக்க ஒரு நல்ல மனிதராக இருப்பதே போதுமானது. " 'மூடர்கூடம்' திரைப்படத்தின் இயக்குநர், நவீன்.

நவீன் சொன்னது போல பாஜக அரசை எதிர்க்க நீங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டியதில்லை, சாதாரண மனிதனாக இருந்தாலே போதும். அந்த அளவிற்கு சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்கிய அரசு தான் தற்போதைய மோடி அரசு. இந்தியர்கள் கட்டிய வரிப்பணம் தவிர்த்து அனைத்து இந்தியர்களிடமிருந்தும் குறைந்தபட்சம் ஒரு ரூபாயையாவது முறையற்ற வகையில் திருடியிருக்கிறது இந்த அரசு.
இந்திய அரசியல் அமைப்பின் அடைப்படையே சமத்துவமும், சுதந்திரமும் தான். இந்த இரண்டையுமே கேள்விக்கு உட்படுத்திய அரசு தான், தற்போதைய மோடி அரசு.

உங்களின் ஓட்டு மோடிக்கா ? இல்லையா ?இந்த தேர்தல், இந்த ஒரே கேள்வியைத் தான் மையப்படுத்தி அமைந்துள்ளது. மக்களை ஓயாது நிம்மதியிழக்கச் செய்து இன்பம் கண்டது தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அரசு. மோடி அரசை வீழ்த்துவதற்கு நம் கையில் உள்ள ஒரே ஆயுதம், காங்கிரஸ். காங்கிரஸின் துணையுடன் மூலமே பாஜகவையும், மோடியையும் செல்லாக்காசு ஆக்க முடியும். அதனாலேயே காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டியுள்ளது.

அதுவுமில்லாமல் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் எவ்வளவோ முதிர்ச்சியடைந்துள்ளன. போன 2014 தேர்தலில் குடிசைகளுக்கு சென்று கூழ் மட்டுமே குடித்துக் கொண்டு பப்புவாக இருந்தவர், இன்று மக்களின் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். உண்மையிலேயே ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றன.பார்ப்போம், அதிகாரம் கையில் வந்தவுடன் என்ன செய்கிறார் என்று.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் ஒரு மாபெரும் வெற்றித் திட்டம். கோடிக்கணக்கான மக்கள் இத்திட்டத்தின் பலன்களை அனுபவிக்கிறார்கள். நிறைய குடும்பங்களுக்கு இதுவே வருமானம். கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு திட்டமாகவே இதை பார்க்க முடிகிறது. இத்திட்டத்தின் முழு பலன்களையும் பெற முதலில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைத் தவிர மற்றவர்களுக்கு செலுத்தப்படும் ஓட்டு மோடியின் பாஜகவிற்கு ஆதரவான ஓட்டாகவே கருதப்படும்.

யாருக்கு ஓட்டு போட்டு என்ன பலன் ? தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே மிச்சம். நாம உழைச்சா தான் நமக்கு வாழ்க்கை ஓடும் என்று இருப்பவர்களுக்கு, மற்ற தேர்தல்கள் போல இந்த தேர்தல் இல்லை. நாம உழைக்கனும், நம்ம வாழ்க்கை ஓடனும் என்று நினைப்பதற்கு கூட மோடியின் மக்கள் விரோத பாஜக அரசு தூக்கியெறியப்பட வேண்டும். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையையும் தற்போதைய பாசிச பாஜக அரசு பாதித்திருக்கிறது. மோ(ச)டி அரசிற்கு எதிராக வாக்களியுங்கள்.

11 ரூபாய் பாலிசி, 330 ரூபாய் என்று சொல்லிக்கொண்டு வருடா வருடம் நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இந்த இரண்டு பாலிசி திட்டங்களால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத காரணத்தால் தினமும் மக்களின் பணம் வங்கிகளால் திருடப்படுகிறது. இந்த வகையில் ஆயிரக்கணக்கான கோடிகள் வங்கிகளுக்கு கிடைத்துள்ளன. அவ்வளவும் ஏழை எளிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி சேர்த்த பணம். இந்த பாவம் உங்களை சும்மா விடாது.

மக்கள் தங்கள் விருப்பப்படி ரீசார்ஜ் செய்து மொபைல் போன்களை பயன்படுத்தி வந்தனர். ஏர்செல் போன்ற சிறிய நிறுவனங்கள் ஒழித்துக்கட்டப்பட்டன. இன்று மொத்தம் பிஎஸ்என்எல் உடன் சேர்த்து நான்கு நிறுவனங்கள் மட்டுமே தொலைத்தொடர்பு சேவையை வழங்குகின்றன. எந்த ஒன்றும் முழுமையாக கார்பரேட்கள் கைக்குச் சென்றால் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம் தான், மொபைல் சேவை அட்டூழியங்கள். நீங்கள் பேசினாலும் பேசாவிட்டாலும் மாதம் குறைந்தபட்சம் 35 ரீசார்ஜ் செய்ய வேண்டும். அந்த கெடு முடியும் போது உங்களின் கணக்கில் பணம் இருந்தாலும் உங்களால் பேச முடியாது. எவ்வளவு பெரிய வன்முறை இது.

மாதம் 100, 150 ரூபாயில் கேபிள் டிவி இணைப்பை பயன்படுத்தி வந்தனர். அதற்கும் வேட்டு வைத்தது, மோடி அரசு. நிம்மதியாக டிவி பாரக்கும் உரிமை கூட பறிக்கப்பட்டுள்ளது. இதுவும் கார்பரேட்கள் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. அன்று 100, 150 ல் பார்த்த சேனல்கள் அனைத்தையும் இன்று 300 கொடுத்தாலும் பார்க்க முடியாது.இப்படி இந்த மக்கள் விரோத மோடி அரசு மக்களுக்குச் செய்திருக்கும் கொடுமைகளின் பட்டியல் மிகவும் நீளம். இன்று வரை இந்தியாவை ஆட்சி செய்த அரசுகளில் முழுமையான மக்கள் விரோத அரசு, மோடியின் பாஜக அரசு மட்டுமே. பிரிவினைவாத அரசியல் ஒழிய பாஜக ஒழிய வேண்டும்.

தேர்தலின் போது மட்டும் மக்களைச் சந்திக்காமல் எப்போதும் மக்களுடனே இருக்கும் கம்யூனிச தோழர்களை வெற்றியடையச் செய்யுங்கள். மக்களின் குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யுங்கள். தமிழகத்தில் களமிறங்கி இருக்கும் நான்கு தோழர்களையும் வெற்றி பெறச் செய்வது நம் கடமையாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி :-

திருப்பூர் - கே.சுப்பராயன் - கதிர் அரிவாள்

நாகபட்டினம் -எம்.செல்வராசு - கதிர்
அரிவாள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி :-

மதுரை - சு. வெங்கடேசன் - அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்

கோவை - பி.ஆர்.நடராசன் - அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்

நாகப்பட்டினம், மதுரை,திருப்பூர் மற்றும் கோவை மக்களே , எல்லாம் உங்கள் விரலில் !

ஒரு நாடே பாஜகவின்  மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக நிற்கும் போது கூட ஆளும் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்களை என்ன செய்வது ? பெரும்பாலான ஊடகங்கள் மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்படுகின்றன. யார் ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஜால்ரா போடுவது என்பது மட்டுமே தற்போதைய ஊடக தர்மம் என்றாகிவிட்டது.

எந்த ஊடகங்களும் மக்களை சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை. தாங்கள் நினைப்பதை மக்களின் மனங்களில் பதிய வைக்கவே மெனக்கெடுகின்றன. மனசாட்சிக்கும் ஊடகங்களுக்கும் தொடர்பில்லை.

அரசியல் யாருக்கானது ? எவ்வளவு போதாமைகள், குறைபாடுகள் இருந்தாலும் அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கானது. ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகள் பெறும் ஓட்டு சதவீத்திலிருந்தே இதை தெரிந்து கொள்ளலாம். மிகச் சிலரே இன்று வரை ஒரே சின்னத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால் வெற்றியைத் தீர்மானிப்பது எப்போதும் சூழலுக்கு ஏற்றவாறு தங்களுக்கு பிடித்தவர்களுக்கு, தங்களின் நியாயப்படி ஓட்டுப் போடும் பெரும்பான்மை மக்களே.

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். யாரை எங்கே வைப்பது என்று அவர்களுக்குத் தெரியும். மக்களை நம்புவோம்,  தலை நிமிர்வோம் !

மோடியின் மக்கள் விரோத பாஜக அரசை தூக்கியெறியுங்கள் !

காங்கிரஸ் - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள் !

மோடியின் வீழ்ச்சியே இந்தியாவின் எழுச்சி!

மக்களின் பணத்தை செல்லாக்காசாக மாற்றிய மோடியை செல்லாக்காசாக்கி வீட்டுக்கு அனுப்புவோம்!

மேலும் படிக்க :

இடதுசாரியும் வலதுசாரியும்!

Monday, April 8, 2019

இடதுசாரியும் வலதுசாரியும் !


அரசியல் நிலைப்பாட்டில் இரண்டே பிரிவுகள் தான். ஒன்று இடதுசாரி அரசியல், மற்றொன்று வலதுசாரி அரசியல். இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் அவற்றை இந்த இரண்டே பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். சமத்துவத்தை வலியுறுத்துவது இடதுசாரி அரசியல், சமத்துவத்திற்கு எதிரானது வலதுசாரி அரசியல்.

மக்கள் நலனை முன்வைத்து அரசியல் செய்வது இடதுசாரி அரசியல். இனம், மதம், மொழி,சாதி போன்ற பிரிவினைவாதத்தை முன்வைத்து அரசியல் செய்வது வலதுசாரி அரசியல். வலதுசாரி அரசியலில் அதிகாரம் ஒரே இடத்தில் குவியும். இடதுசாரி அரசியலில் அதிகாரம் பரவலாக்கப்படும். இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிச இயக்கங்களை மட்டுமே குறிக்காது. எல்லோரையும் சமமாக நடத்தும் எல்லா அரசியல் இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்கள் தான். ஆனால் இந்த இடதுசாரி இயக்கங்கள் கம்யூனிச இயக்கங்களைப் போல தீவிரமாக இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதில்லை. இது தான் கம்யூனிச இயக்கங்களுக்கும் மற்ற இடதுசாரி இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடு.

இன்றைய அரசியல் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கார்பரேட்கள் கைகளில் தான் இருக்கிறது. கார்பரேட்கள் தாங்கள் நினைத்ததை நினைத்தவுடன் செய்வதற்கு வலதுசாரிகள் ஆட்சியில் இருக்க வேண்டும். உலகெங்கிலுமே இது தான் நிலைமை. முன்பை விட தற்போது வலதுசாரி இயக்கங்கள் புத்துணர்வு பெற்றிருப்பதற்கு கார்பரேட்களே முக்கிய காரணம். இயற்கையும், மனிதமும் காக்கப்பட வேண்டுமானால் வலதுசாரி இயக்கங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

வாக்களிக்கப் போவதற்கு முன்பு சிந்தியுங்கள். நீங்கள் வாக்களிக்கப் போவது இடதுசாரிக்கா ? வலதுசாரிக்கா ?

பாஜக ஒரு வலதுசாரி இயக்கம், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அனைத்து கட்சிகளையுமே வலதுசாரிகள் என்று தான் அழைக்க வேண்டியுள்ளது. வலதுசாரிகளால் என்றுமே மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. அனைத்து இடங்களிலும் வலதுசாரிகள் தோற்றுப்போவது தான் அவர்கள் மக்களுக்கு செய்யும் ஒரே நன்மை. பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் !

திமுக-வும் வேண்டாம், அதிமுக- வும் வேண்டாம், காங்கிரஸ்-ம் வேண்டாம், பாஜக-வும் வேண்டாம் என்றால் இவற்றுக்கு மாற்றாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது கம்யூனிச இயக்கங்களை தான். ஆனால் யதார்தத்தில் கம்யூனிச இயக்கங்களுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட மக்களிடத்தில் இல்லை. நீங்கள் இந்த கட்சிகளை எதற்காகவெல்லாம் புறக்கணிக்கிறீர்களோ அதற்காகவெல்லாம் ஆதரிக்க வேண்டியது கம்யூனிச இயக்கங்களைத் தான். ஆனால் ஆதரிக்க மாட்டீர்கள்.

வலதுசாரி இயக்கங்கள் மாற்றாக இருக்க முடியாது . ஆம், நாம் தமிழர் கட்சியும் , மக்கள் நீதி மய்யமும் வலதுசாரி இயக்கங்கள் தான். இன்றுவரை தனது ஜாதி மீதான பற்றை துறக்க முடியாத கமலஹாசன் சொல்வது போல ஒருவரால் ஒரே நேரத்தில்  இடதுசாரியாகவும், வலதுசாரியாகவும் இருக்கவே முடியாது. தனது ஜாதி பற்றை மறைக்க முற்போக்கு வேடம் போடுவது போல தான் ஒரு வலதுசாரி என்பதை மறைக்க இடதுசாரி வேடம் போடுகிறார்.

பாஜக மதத்தை வைத்து பிரிவினைவாதம் செய்கிறது. நாம் தமிழர் கட்சி இனத்தை வைத்து பிரிவினைவாதம் செய்கிறது. பிரிவினைவாதத்தை உரக்கப் பேசுவதால் உள்ளம் மட்டுமே களிப்புறும். பிரிவினைவாதத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் எக்காலத்திலும் ஏற்பட்டதில்லை.

ஏன் மனிதத்தை எல்லோரும் பேச மறுக்கிறோம் ? எல்லா மனிதர்களும் சமமானவர்கள். இந்த பூமி அனைவருக்கும் சொந்தம். ஒவ்வொருவருக்கும் இப்பூமியில் வாழ்வதற்கு சம உரிமை இருக்கிறது. இந்த பூமியில் நாம் வாழும் வாழ்க்கை ஒரு கூட்டியக்கம். நாம் இந்த பூமியில் ஒரு நிமிட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க கண்ணிற்கு தெரியாத எத்தனையோ மனிதர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. ஆனால் நொடியில் இதை மறந்து விடுகிறோம். இனம், மதம், சாதி பார்த்து உணவு உண்ண வேண்டுமெனில் நம்மால் ஒரு வாய் உணவைக்கூட உண்ண முடியாது. அப்புறம் என்ன கூந்தலுக்கு இவ்வளவு பிரிவினைவாதங்கள்.

மனிதம் வெல்லட்டும் !

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms