Showing posts with label போப்பு. Show all posts
Showing posts with label போப்பு. Show all posts

Saturday, April 4, 2026

என் உடல் என் மூலதனம் - போப்பு !

'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்ற திருமூலரின் வழி வந்தவர்கள்தான் நாம். நாம் எல்லோருமே நமது உடல் குறித்த கவனம் இல்லாமல் வாழவே உலகவணிகமயமாக்கல் நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் , நமக்கே தெரியாமல் இயற்கையோடு இயைந்த வாழ்விலிருந்து விலகிக்கொண்டே இருக்கிறோம். உதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பல நவீன கருவிகளை நாம் பயன்படுத்துகிறோம். அந்தக் கருவிகளை பயன்படுத்துவதால் நேரமும் மிச்சம், பணமும் மிச்சம் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் யதார்த்தத்தில் நேரமும் மிச்சமாகவில்லை, பணமும் மிச்சமாகவில்லை. 


வாழ்க்கை குறித்து நாம் வகுத்து வைத்திருக்கும் விசயங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம். இப்படியான சூழலில் நமது உடல் குறித்தான அக்கறை நமக்கு கண்டிப்பாக தேவை என வலியுறுத்துகிறது, போப்பு எழுதிய இப்புத்தகம். நாம் நமது உடலை மதிப்பதில்லை , நமது உடல் சொல்வதைக் கேட்பதில்லை என்று பேச ஆரம்பித்து எவ்வாறு உடலுடன் நெருங்குவது என்பதையும் இப்புத்தகம் விளக்குகிறது.


குளித்தல் என்பது உடலில் சேர்ந்துள்ள வெளி அழுக்குகளை நீக்குவதற்கான செயல்பாடு மட்டுமல்ல, உடலில் தோன்றியுள்ள அதிகப்படியான வெப்பத்தை நீக்குவதும்தான் என்கிறார், போப்பு. ஆரோக்கியமான விதவிதமான குளியல் முறைகள் பற்றி இப்புத்தகத்திலும் விளக்குகிறார். அனைவரும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம் எனவும், அந்த நடை பயிற்சியை உங்கள் உடலுடன் பேசுவதற்கான செயல்பாடாக மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் போப்பு கூறுகிறார்.


உடலில் கழிவுகள் தேங்குவதால்தான் பல நோய்கள் தோன்றுகின்றன, என்கிறார்‌, போப்பு. இரவுத் தூக்கம் என்பது கழிவுநீக்கச் செயல்பாடு. தினமும் இரவில் நமது உடல் உறுப்புகள் மராமத்து வேலைகளில் ஈடுபடுகின்றன. நமது உடலில் ஏற்படும் சின்னச்சின்ன குறைபாடுகளே நமது உடலே இரவுத் தூக்கத்தின் மூலம் சரி செய்து விடுகிறது, என்று விளக்குகிறார். இரவுத் தூக்கம் தடைபடும்போது கழிவுநீக்கச் செயல்பாடும் தடைபடுகிறது.


நவீன வாழ்க்கை என்று சொல்லிக்கொள்ளும் தற்போதைய வாழ்க்கை முறையில் நமது தூங்கும் நேரம் மிகுந்த பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. மின்சாரம் வராத காலகட்டம் வரை 'முன் தூங்கி முன் எழுவது'-தான் நமது வாழ்க்கை முறையாக இருந்தது. இன்று வரை நமது உடலும் அதற்கே பழக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் இப்போது ' பின் தூங்கி பின் எழுகிறோம்'. அதானால் உருவாகும் சிக்கல்களையும் எதிர்கொள்கிறோம். இப்போதும் முன் எழுபவர்கள் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். பின் எழும் நாம் சோம்பேறிகளாகிவிட்டோம். 


இரவு 9 மணி முதல் காலை 5 வரை உறக்கத்திற்கான நேரம் என்றாலும் நாம் இரவு 10 மணிக்காவது தூங்க ஆரம்பித்து காலை 6 மணிக்குள் எழுவது அவசியமாகிறது. எப்படி இருந்தாலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது கட்டாயம். அந்த நேரத்திலும் நாம் விழித்திருப்பதன் மூலம் நமது உடலில் கழிவுகள் நீங்குவதற்கு பதிலாக, சேர்ந்து நோயாக மாறுகிறது, என்கிறார்,போப்பு. நமது ஆரோக்கியத்திற்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.


'பசித்துப் புசி', ' அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' இந்த இரண்டு விசயங்களையும் நாம் கடைபிடிப்பதேயில்லை. இன்றைய இயந்திர வாழ்வில் பொறுமையாக சாப்பிடுவதற்கான நேரத்தைக்கூட நாம் உருவாக்கிக்கொள்ளவில்லை. வேறு வேலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாம் உண்ணும் உணவிற்கும், உண்ணும் நேரத்திற்கும் கொடுப்பதில்லை. பசித்த பிறகே உணவு உண்ணும் வழக்கம் முன்பு பரவலாக இருந்தது. இப்போது இப்பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. மிகச்சிலரே பசித்த பிறகு உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். 


எல்லோருக்குமான உணவை உறுதி செய்ய முடியாத சூழலே நிலவுகிறது. அது ஒரு பெரும் அரசியல், ஏகாதிபத்திய அரசியல். எது எளிதில் செரிமானமாகும் உணவு, எது எளிதில் செரிமானமாகாத உணவு என்றெல்லாம் நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. நமது பணிகளுக்கு மத்தியில் கிடைக்கும் உணவை சாப்பிட பழகிவிட்டோம். அதே போல பசித்தாலோ பசிக்காவிட்டாலோ குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிடும் பழக்கத்தையும் உருவாக்கிக் கொண்டோம். அவ்வளவு எளிதில் இதிலிருந்து விடுபடமாட்டோம் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக பசித்தவுடன் சாப்பிட பழக வேண்டும்.


எந்த உணவு சாப்பிடுவது ? இதுவும் பெரிய அரசியல். சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கின்றன. எந்த மாறுதலுக்கும் உட்படாத நேரடியாக சாப்பிடக்கூடிய இயற்கை உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார், போப்பு. பழங்களை எந்த அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு எடுக்கலாம், என்கிறார்.‌ உணவின் ஊடாக சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு நேர உணவாக, குறிப்பாக இரவு நேர உணவாக பழங்களை உண்ணலாம் என்று பரிந்துரைக்கிறார். மொத்தத்தில் இயற்கையோடு இணைந்த உணவே நம் உடலுக்கு ஏற்றது. ஆனால் இப்போது நாம் உண்பதோ இயற்கையிலிருந்து விலகிய பதப்படுத்தப்பட்ட உணவுகளைத்தான். நாம் குடிக்கும் தண்ணீர் கூட மாறுதல் அடைந்த பிறகே பயன்படுத்துகிறோம். மாற்று வழிகள் நமக்கு தெரிய வருவதில்லை.


உணவு சார்ந்த விசயங்களில் மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் சவாலான காரியமாகவே இருக்கிறது. ஆரோக்கமற்றது என்று தெரிந்தும் உண்கிறோம். ஆரோக்கியமுள்ளது என்று அறிந்தும் உண்ண மறுக்கிறோம். நாம் வாழும் பகுதிகளில் விளைந்த உணவுப்பொருட்களை ஏற்றுக்கொள்ளும் அளவிலேயே நமது உடல் இருக்கிறது. ஆனால் நாம் இவற்றை ஒதுக்கிவிட்டு 'சத்தானது' என வணிக நிறுவனங்கள் விளம்பரப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அந்த உணவு சத்தானதாக இருந்தாலும் ஏதோ ஒரு நாட்டில் விளைந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை ஏற்றுக்கொள்ளும் அளவில் நமது உடல் இல்லை. 


நாம் வெப்ப மண்டலப்பகுதியில் வாழ்கிறோம் என்பதை மறந்துவிட்டு வேகவைத்த , நீர்த்த உணவுகளை தவிர்த்துவிட்டு எண்ணையில் பொறித்த உணவுகளை அதிகம் உண்டு செரிமானமாகாமல் தவித்துக்கொண்டு இருக்கிறோம். 


" இயற்கை சார்ந்து வாழ்வோம்.

  வாழ்வில் நிறைவு காண்போம்.

  வாழ்வை முழுமை செய்வோம்."


என்று இந்த ' என் உடல் என் மூலதனம் ' புத்தகத்தை நிறைவு செய்கிறார்,போப்பு . 


'காயமே இது மெய்யடா' , 'உணவுக்கு முதல் வணக்கம் ', ' என் உடல் என் மூலதனம் ' என போப்பு அவர்கள் எழுதிய உடல்நலம் சார்ந்த மூன்று புத்தகங்களை வாசித்த பிறகும் அவர் கூறியதில் மிகவும் சிலவற்றை மட்டுமே கடைபிடிக்க முடிந்திருக்கிறது. இரவு 10 மணியிலிருந்து 10.30க்குள்ளாக தூங்கப்பழகியாச்சு. ஆனால் காலையில் 6 மணிக்குதான் எழ முடிகிறது. 5 மணியிலிருந்து 5.30க்குள்ளாக எழுந்திருக்கப் பழக வேண்டும். அவர் சொன்ன குளியல் முறைகளில் சில பயன்பாட்டில் உள்ளன. உணவு சார்ந்த விசயங்களில் சிறிய மாற்றத்தைக்கூட உருவாக்க முடியவில்லை. ஆனால் முயற்சி தொடர்கிறது. எது எப்படியோ நாம் நல்லதொரு வாழ்வை வாழ நமது உடலையும், மனதையும் முறையாக பேண வேண்டும்.

மேலும் படிக்க :

உணவுக்கு முதல் வணக்கம் - போப்பு !

காயமே இது மேய்யடா - போப்பு !

Tuesday, March 31, 2026

காயமே இது மேய்யடா - போப்பு !


சரியான நேரத்தில் வாசிக்க கிடைத்த சரியான புத்தகம். தற்போதைய நமது வாழ்க்கை முறை, உடல்நலம் குறித்தான நிறைய சந்தேகங்களையும், குழப்பங்களையும் உருவாக்குகிறது. நமது உடல் குறித்தான பிரக்ஞையே நம்மிடம் இல்லை. உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் நாம் பேணி காக்க தவறிவிடுகிறோம். இப்படியான சூழலில், தோழர் போப்புவின் இந்தப் புத்தகம் நமது உடல் குறித்தான ஒரு குறுக்குவெட்டு பார்வையை முன்வைக்கிறது. 


தி இந்து தமிழ் நாளிதழின் ' நலம் வாழ' இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அந்த கட்டுரைகளின் மூலமே போப்பு அவர்கள் அறிமுகம். அதன் பிறகு முகநூலில் தேடிப்பிடித்து நண்பராக சேர்ந்தாச்சு. உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை என்று மனித உடலைச் சொல்லுவார்கள். அது முற்றிலும் உண்மை. அமேசான் காடுகளில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத உயிரினங்கள் இருப்பது போல நமது உடலிலும் இன்னமும் விடுவிக்கப்படாத புதிர்கள் இருக்கின்றன. உலகவணிகமயமாக்கலுக்கு பிறகான நமது வாழ்க்கை முறையால் நமது உடல் பெரிய அளவில் இன்னல்களைச் சந்தித்து வருகிறது. உடல் வெளிப்படுத்தும் சமிக்கைகளை கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டியது அவசியம் என இப்புத்தகம் வலியுறுத்துகிறது.


நமது உடல் குறித்தான நிறைய புரிதல்களை இந்நூலை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். போப்பு அவர்கள் சொல்லியிருக்கும் அனைத்தையும் எல்லோராலும் இன்றைய வாழ்வில் செயல்படுத்த இயலாத சூழலே நிழவுகிறது. அவர் கூறியிருப்பதில் கால்வாசியை நாம் நடைமுறைப்படுத்தினால் கூட அது இந்த நூலின் வெற்றிதான். அவர் முக்கியமாக குறிப்பிடுவது இரவில் கண்டிப்பாக 10 மணிக்குள் தூங்க வேண்டும் என்பதுதான். இது எல்லோருக்கும் சாத்தியமா என்று தெரியவில்லை. சாத்தியமுள்ளவர்கள் இதை நடைமுறைபடுத்துவதன் மூலம் நற்பலன்களைப் பெற முடியும். அதே போல காலையில் 6 மணிக்குள் எழுவதும். 


நமது உடலைப் பொறுத்தவரை இதுவரை பழக்கப்படாத எதுவும் அந்நியப் பொருள்தான். நாம் பயன்படுத்தும் பற்பசை, சோப்பு , சாம்பு மற்றும் பிற பொருட்கள் எவ்வளவு உயர்வானதென்று நாம் கருதினாலும் அவை நமது உடலின் இயல்பிற்கு எதிராக செயல்படுவதை விளக்குகிறார். அதே போல அதிக வாசனையுள்ள உணவோ அல்லது அதிக வாசனையுள்ள அழகுசாதனப் பொருட்களோ நமது உடலுக்கு அதிக தீங்குகளை விளைவிப்பதையும் குறிப்பிடுகிறார். 


மொத்தத்தில் நாம் தற்போது வாழும் வாழ்க்கை முறை நமது சூழலுக்கும் நமது உடலுக்கும் பொருந்தாத வாழ்க்கை முறைதான். இயற்கையின் ஒரு பகுதியான மனித இனம் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைக்கு திரும்புவதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். நடைமுறையில் இது எந்த அளவிற்குச் சாத்தியம் என தெரியவில்லை. ஆனால் ஓரளவிற்கு சிக்கலில்லாத வாழ்க்கையை மனித இனம் இப்பூமியில் வாழ இதை விட்டால் வேறு வழியும் இல்லை. 


இவ்வளவு தகவல்களையும் " நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை " என்ற பாணியில் முன்வைக்காமல் உடலின் இயக்கத்தை விளக்குவதன் மூலம் முன் வைப்பதால் இந்நூல் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. எப்படி " கேளுங்கள் மனம் சொல்வதை ..." என்று சொல்கிறமோ அதே போல உடல் சொல்வதையும் நாம் கேட்க வேண்டியது அவசியமாகிறது. நமது உடலுக்கு நேரும் பெரிய பாதிப்புகள் கூட அவை சிறிய பாதிப்புகளாக இருந்த போது உடல் வெளிப்படுத்திய சமிக்கைகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் காரணம் என்கிறார், ஆசிரியர். 


ஒரு படைப்பின் வெற்றி என்பது அந்தப் படைப்பை வெளிப்படுத்திய படைப்பாளியின் மற்ற படைப்புகள் நோக்கி நகர வைப்பதுதான். அந்த வகையில் இந்தப் படைப்பு வெற்றி பெற்றிருக்கிறது. தோழர் போப்புவின் மற்ற நூல்களையும் வாசிக்க வேண்டும்.


நதி போல தனது வாழ்க்கையை வாழும் போப்பு அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்! 

( பிப்ரவரி 11 2022 )

மேலும் படிக்க:

உணவுக்கு முதல் வணக்கம் - போப்பு !

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

Sunday, March 29, 2026

உணவுக்கு முதல் வணக்கம் - போப்பு !

திரைகடலோடியும் திரவியம் தேடுகிறோமோ இல்லையோ ? தெரியாது. ஆனால் உணவை தேடி உண்ணும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. அப்படித் தேடி உண்ணும் உணவு இயற்கையோடு இணைந்ததாக உடலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதை தோழர் போப்பு இந்தப் புத்தகத்தின் மூலம் சொல்கிறார். 


நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று தெரிந்தே நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் உணவு பொருட்களுக்கு மாற்றான உணவு பொருட்களைப் பற்றி விளக்குகிறார். பாலுக்கு மாற்றாக தேங்காய்பால் , ராகிபால், பருத்திபால் போன்றவற்றை முன் வைக்கிறார். தேங்காய்பாலின் முக்கியத்துவத்தை பல இடங்களில் குறிப்பிடுகிறார். அதே போல சர்க்கரை நோயும் நிலையான நோயல்ல என்பதையும் பல இடங்களில் குறிப்பிடுகிறார் ( ஏன் அப்படி சொல்கிறார் என்பதற்கான விளக்கம் இப்புத்தகத்தில் இல்லை ). 


நமக்கு அருகில், அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பழங்களை உண்பதன் அவசியத்தை விளக்குகிறார். பழங்களை இணை உணவாக உண்பதை விட முழு உணவாக, அதிலும் இரவு நேர உணவாக உண்பது நல்ல பலனளிக்கும் என்கிறார். உடைத்த பருப்புகளை விட பயறு வகைகள் உடலுக்கு நல்லது என்கிறார். உப்பு, காரம், புளி இப்போது நாம் பயன்படுத்தும் அளவை விட குறைவாக பயன்படுத்துவது நல்லது என்றும் குறிப்பிடுகிறார். 


இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என ரொம்ப யோசிக்காமல் சாத்தியமுள்ள சிலவற்றையாவது மாற்ற முயற்சி செய்வோமே. மாற்றம் ஒன்றுதானே மாறாதது. அவர் குறிப்பிடுவதில் பெரும்பாலானவை நமது கண்ணில் படுபவை என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். அதிலும் முக்கியமாக இயற்கைக்கு நெருக்கமானது. மாற்றம் உருவாக நமது மனதில்தான் இடம் கொடுக்க வேண்டும். சவர்மா நம்ம ஊர்ல எந்தக் கடையில் கிடைக்கிறது என தேடி உண்ண ஆரம்பித்து விட்டோம். மிகச்சிறிய ஊர்களில் கூட இப்போது சவர்மா கிடைக்க ஆரம்பித்துவிட்டது. என்னென்னமோ கலந்து செய்யப்டுகிற சவர்மாவை ருசி பார்ப்பதுடன் இயற்கைக்கு நெருக்கமான உணவுப் பொருட்களை ருசி பார்க்கவும் நாம் முன்வர வேண்டும். 


எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒரு உணவை உண்ணத்தான் போகிறோம். அந்த உணவு இயற்கைக்கு நெருக்கமாக இருப்பதில் எந்தக் குறையும் இல்லை. நம்மில் பெரும்பாலானோர் தினமும் காலையில் டீயோ , காபியோ குடிக்கத்தான் போகிறோம். ஒரு நாள் காலையில் தேங்காய்பால் குடித்துதான் பார்ப்போமே. நல்ல மாற்றம் தெரிந்தால் வாரத்தில் ஒரு நாளோ ,இரண்டு நாளோ குடிக்க வேண்டியதுதான். பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதான். இது போலவே மற்ற உணவு பொருட்களும். பருப்புக்கு மாற்றாக பயறுகள், உண்ணும் பழங்களின் அளவை அதிகரிப்பது என்று முயற்சித்து பார்க்க வேண்டியதுதான்.




இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது போப்பு என்ற மனிதரையும் கூடவே சேர்த்து வாசிக்கிறோம் என்ற உணர்வு உருவாவதை தடுக்க முடியாது. போப்பு அவர்கள் ஒசூரில் ஒரு நல்ல உணவகம் நடத்தினார் என்பது இசை விமர்சகரான ஷாஜியின் நேர்காணல் மூலமே தெரிய வந்தது. அவர் ஒரு சிங்கப்பூர்வாசியாகவும் இருந்திருக்கிறார் என்பதை இப்பத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. போப்பு அவர்களின் பதிவுகளிலிருந்து இயற்கை தொடர்ந்து அவதானித்து வருபவர்களால் இப்படித்தான் எழுத முடியும் என்பதை உணரலாம்.


தமிழ்நாட்டில் இருக்கும் உணவகங்களில் எந்த ஊரில் எந்த உணவகம் சிறந்தது என்ற பட்டியல் போப்புவிடம் இருக்கிறது. அதை அவரிடமிருந்து நாம் பெற வேண்டும். 


மேலும் படிக்க :

காதில் விழுந்த கதைகள் - கி.ராஜநாராயணன் !

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms