Showing posts with label கி. ராஜநாராயணன். Show all posts
Showing posts with label கி. ராஜநாராயணன். Show all posts

Tuesday, December 23, 2025

காதில் விழுந்த கதைகள் - கி.ராஜநாராயணன் !

 


இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் தொடுதிரை வாழ்விலிருந்து விலகி புத்தகங்களை வாசிக்க நேரம் ஒதுக்குவது சவாலானதாகவே இருக்கிறது. புத்தகங்களை வாசிக்க ஆசை இருந்தாலும் தினசரி வாழ்வு தரும் அழுத்தங்கள் நம்மை அனுமதிப்பதில்லை. இதையெல்லாம் கடந்துதான் வாசிக்க வேண்டியுள்ளது. இன்றைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வாசிப்பைத் தொடருபவர்கள் திறமையானவர்கள். 


கடந்த ஜுலை மாதத்தில் வேடசந்தூர் கிளை நூலகத்தில் நியூ செஞ்சுரி பதிப்பகம் சார்பாக புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கலந்து கொள்ளும் போதே " ஏற்கனவே வாங்கிய புத்தகங்களே வாசிக்காமல் கெடக்குது. இதுல இவரு புதுசா வேற புத்தகம் வாங்கக் கிளம்பி வந்துட்டாரு " என்று உள்மனது எச்சரித்தது. அதனால் உடனே வாசிக்கக் கூடிய எளிய புத்தகங்களை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தே தேடல் தொடங்கியது. தேடலில் சிக்கியவை ' காதில் விழுந்த கதைகள்' மற்றும் ' சிறுவர் நாடோடிக் கதைகள் '. இந்த இரண்டு புத்தகங்களும் வாசித்து முடிக்கப்பட்டுவிட்டன. இந்த இரண்டு புத்தகங்களும் கொடுத்த நம்பிக்கையில்தான் அக்டோபர் மாதத்தில் நடந்த திண்டுக்கல் புத்தகக் கண்காட்சியில் கூடுதலாக புத்தகங்கள் வாங்கப்பட்டன. 


'Don't judge a book by its cover ' என்பதற்கு உதாரணம் இந்த ' காதில் விழுந்த கதைகள் ' புத்தகம். இந்தப் புத்தகம் இந்தளவிற்கு வசீகரிக்கும் என எதிர்பார்க்கவில்லை. கதைகள் என்றாலே வசீகரமானதுதான். அதிலும் நமது மண் சார்ந்த கதைகள் இன்னமும் வசீகரமானவை. அந்த அட்டகாசமான மொழிநடை கூடுதல் குதூகலம். பொதுவாகவே நாம் எல்லோருமே கதைகள் கேட்க எப்போதும் தயாராகவே இருக்கிறோம். கதைகளை பார்க்க விரும்புகிறோம்; கேட்க விரும்புகிறோம்; வாசிக்க விரும்புகிறோம்; பேச விரும்புகிறோம். கதைகள், காற்றைப் போல எங்கும் நிறைந்திருக்கின்றன. 


பாரததேவி மற்றும் கழினியூரான் இவர்கள் சேகரித்த கதைகளுடன் தான் சேகரித்த கதைகளையும் சேர்த்து இந்நூலை தொகுத்து நமக்குக் கொடுத்திருக்கிறார், கி.ராஜநாராயணன். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், வாசிக்க சுவாரசியமாக இருப்பதுடன் எந்த கட்டுக்குள்ளும் அடக்க முடியாததாக இருக்கின்றன. தினம் ஒரு கதையாக வாசித்து முடிச்சாச்சு. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கதைகள் வாசிக்க நேரமிருந்தாலும் நாளுக்கு ஒரு கதை என்றே நாட்கள் கடந்தன. ஒவ்வொரு நாளும் அடுத்த கதை எப்படி இருக்கும் என்ற ஆவலுடன்தான் புத்தகம் கையிலெடுக்கப்பட்டது. அந்த அளவிற்கு ஒரு கதையே வாசிப்பிற்கான நிறைவைக் கொடுத்தது. இதற்கு முன்பு அப்படி வாசித்தது தேவதச்சன் கவிதைகளைத்தான். ஒரு நாளிற்கான நிறைவை அவரது ஒரு கவிதையே நிறைவு செய்தது.


தமிழ் நிலத்தில் இன்னமும் தீவிரமாக கொண்டாடப்பட வேண்டியவை கி.ராஜநாராயணனின் படைப்புகள். அவர் சேகரித்து கொடுத்த நாட்டார் கதைகளுக்காகவே நாம் அவரைக் காலமெல்லாம் கொண்டாட வேண்டும். நாட்டார் பாலியல் கதைகள் அடங்கிய தொகுப்பான ' வயது வந்தவர்களுக்கு மட்டும் ' ஒரு முக்கியமான தொகுப்பு. இப்போது வாங்கிய ' சிறுவர் நாடோடிக் கதைகள் ' தொகுப்பும் சிறப்பாகவே இருந்தது. மற்ற மொழிபெயர்ப்பு சிறார் கதைகளை விட இந்தத் தொகுப்பில் இருந்த சிறார் கதைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தன. அது தான் தாய்மொழியின் சிறப்பு.


எது எப்படியோ தொடுதிரை வாழ்விலிருந்து கொஞ்சமேனும் விலகி வாசிப்பை நோக்கி திருப்பியிருக்கிறார், கி.ரா. இதைத் தொடர வேண்டும். அதுதான் இப்போதைய தேவையாக இருக்கிறது. பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல் வேறு நீண்டுகொண்டே போகிறது. அதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.


மொத்தத்தில் Worth to read 👍


மேலும் படிக்க :

எது கலாசாரம் - கி.ரா...! 

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!


Wednesday, December 5, 2012

எது கலாசாரம் - கி.ரா...!

 கி.ராஜநாரயணன் ,வட்டார மொழி இலக்கியத்தின் முன்னோடி , தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் . ஊரூராக தேடியலைந்து நாட்டார் கதைககளை ஆவணப்படுத்தியவர் . நாட்டார் வழக்கில் இயல்பாகவே  இழையோடியிருந்த பாலியலையும் ,பாலியல் கதைகளையும் பதிவு செய்தவர் . தலைசிறந்த கதைசொல்லியான அவரது நேர்காணல் 14-11-12 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது . ஒரு சில வார்த்தைகளின் மூலம் மட்டுமே பெரிய கோட்டையையே தகர்க்கும் சக்தி உண்மையான படைப்பாளிகளுக்கு மட்டுமே வாய்க்கிறது . எந்தவித விழுமியங்களிலும் சிக்காமல் வாழ்க்கையை எளிமையாக அணுகுகிறார் ,கி .ரா . அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . கலாசாரம் குறித்து அவர் சொன்னதை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .


சமஸ் :-

" கட்டுக்கோப்பான கலாசாரத்திற்குப் பேர் போன இடைசெவல் மாதிரி ஒரு இந்தியக் கிராமம் ; உலகிலேயே முற்போக்கானதாகச் சொல்லப்படும் பிரெஞ்சு  கலாசாரச்  சூழல் நிலவும் பாண்டிச்சேரி மாதிரி ஒரு நகரம் .. இரண்டிலும் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் . எந்தக் கலாசாரம் உண்மையில் உன்னதமானதாக உங்களுக்குத் தெரிகிறது ?"

 கி.ரா :-

" பிரெஞ்சு கலாசாரம் தான் உன்னதமாத் தெரியுது . இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோசமா வாழனும் . அதுதான் நோக்கம் .சந்தோசமா எப்படி வாழறது ? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும் . எந்தக் கட்டுப்பாடும் இல்லாம , அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா,சந்தோசமா வாழனும் . அதுக்கு எந்தக் கலாசாரம் எடம் கொடுக்குது ? இந்தியக் கலாசாரம் எடம் கொடுக்கல .அட , விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே ? ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாசாரம் இருந்துச்சு . விருப்பம்போல வாழலாம் ; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம் .இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம் . புள்ளைங்களுக்கும்  தெரியும் . அம்மாதான் நம்மளோட அம்மா ,நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது . ஊருக்கும் தெரியும் . யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை .சந்தோஷமா இருந்தாங்க .ஆனா ,அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது . நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான் .கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடுச்சு அலையுறோம் ."

சமஸ் :-

"அப்படி என்றால் , ஒரு கலாசாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம் தான் அளவுகோலா ? "


கி.ரா :-

" ஆமா ,கலாசாரம்னு பேசுனா , மொதல்ல அங்கே இருந்து தானே தொடங்கணும் ? ஒழுக்கம் ,ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ ,அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும் . ஒவ்வொருத்தனும் மனுசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான் .வெளியே பேசுறது பதிவிரதத்தனம் .சென்னையிலேயே,ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா ? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு , குழாயை  உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா ? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு ? அட , பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது ? என்னடா , இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது .இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது , இல்லையா ?மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன் ."

சமஸ் :-

" இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா? "

கி.ரா.:-

" கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும் . எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும் . பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் . மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விசயமாக்கிட்டோம் . பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு , அந்த ஞாபகமாகவே அலையுது . நான் கேட்குறேன் ... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா , அது சிக்கலா, இல்லையா ? அது அவனோட சிக்கல் மட்டும்தானா .. சமுதாயத்தோட சிக்கலுமா ? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே ,அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன ? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி , கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க . ரெண்டு பசியுமே மோசமானது . ஆனா, இங்கே எல்லோருமே மேல் வயித்துப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம் . கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம் .  "


சமஸ் :-

" இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா ? "

கி.ரா :-

"     முதல் காதல் ... ஹா ... ஹா ... பசிக்குது . அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு .உடனே கிடைச்சுட்டா ,அதை ஒரு விசயமா நெனைப்போமா ? அப்படித்தான் இந்தக் காதலும் . கிடைச்சுட்டா , அந்த நேரச் சாப்பாடு . கிடைக்காட்டி , அதுக்குப் பேர் காதல் . கிடைக்கவே கிடைக்காட்டி , அது  அமரக் காதல் , காவியக் காதல் . ஒரு விஷயம் சொல்லலாம் . காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை .வந்துக்கிட்டே இருக்குறது . "


இந்த 90 வயதுக்காரரிடம் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது ...!

நன்றி - ஆனந்த விகடன் .


மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை !

உண்மையான கொண்டாட்டம் !

வாழ்க்கை ஒரு போராட்டம் !
.................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms