Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Sunday, January 31, 2016

செருப்பு தைக்கும் கலை !

செருப்பு , நம் வாழ்வில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது.
பெரும்பாலானோர் தற்போது பிஞ்ச செருப்பை தைத்து அணிவதில்லை ;செருப்பு நல்ல நிலையில் இருந்தாலும் கூட. நுகர்வு கலாச்சாரம் செருப்பையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு முன்பு பயன்படுத்திய செருப்புகள் பயன்பாட்டுக் காலத்தில் பிய்யவேயில்லை. கடைசியாக பள்ளிக்காலத்தில் தான் பிஞ்ச செருப்பை தைத்து அணிந்ததாக ஞாபகம்.

இன்றைய சூழலில் செருப்புகள் உயர்வான தரத்துடன் தயாரிக்கப்படுகின்றனவோ என்னவோ ? எளிதில் பிய்வதில்லை. ஆனால் ஆயுள் குறைவு. தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் செருப்பு அவ்வளவு தரமில்லை போலும். நல்ல நிலையிலேயே பிய்ந்துவிட்டது. சற்று தயக்கத்துடனே தான் செருப்பைத் தைக்கப் போனேன். ஏனென்றால் பிய்ந்த இடம் அப்படி இதை எப்படி தைக்கப் போகிறார் என்ற யோசனையுடனே செருப்பு தைப்பவரை கவனிக்க ஆரம்பித்தேன். தைத்து முடித்தவுடன் என்னாலேயே நம்ப முடியவில்லை. செருப்பு பிய்ந்த இடமே வெளியில் தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக ,கலை நுணுக்கத்துடன் தைக்கப்பட்டிருந்தது. செருப்பு தைக்கும் கலையை நேரடியாக பார்த்து வியந்த தருணமது. இந்த செருப்பின் ஆயுட்காலம் முழுவதும் அந்தக் கலைஞரின் நினைவு இருக்கும்.

நல்ல நிலையில் இருக்கும் செருப்பு பிய்ந்துவிட்டால் தூக்கி எறியாதீர்கள். அதை நேர்த்தியுடன் தைத்து
தெருவெங்கும் கலைஞர்கள் காத்திருக்கிறார்கள் !

மேலும் படிக்க :

மரணத்திற்கும் விலை உண்டு !

புகழேந்தி - மக்களின் மருத்துவர் !
...................................................................................................................................................................

Tuesday, September 30, 2014

காகித மலர்கள் !

தமிழ்  இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையான ஆதவனால் எழுதப்பட்டது தான் இந்த 'காகித மலர்கள் ' ( 1977 ) நாவல் . மனிதர்களின் மனப்போக்குகளை ,வேசங்களை இவ்வளவு நெருக்கமாக எழுத்தில் பதிவு பண்ண முடியுமா ? என்ற ஆச்சரியம் நாவல்  முழுமைக்கும் உள்ளது . ஆனால், இது சாத்தியம் என்றே நிரூபித்திருக்கிறார் ,ஆதவன் .ஆம் ,இவருக்கு மட்டுமே சாத்தியம் . 70 களில் டெல்லியில் வாழ்ந்த சில தமிழ்க் குடும்பங்கள்  எப்படி இருந்தன என்ற பிம்பத்தை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது .

 நாகரிக வாழ்வு என்ற பெயரில் தனது சுயத்தை இழந்து விதவிதமான வேசங்கள் அணிவதன் மூலம் தன்னை திருப்திபடுத்த முயலும் கதாப்பாத்திரங்களை 'காகித மலர்கள் ' முன்வைக்கிறது . மனிதர்களின் சுயம் , தனித்துவம் , அணியும் பிம்பங்கள் பற்றி அதிகம் பேசும் இந்நாவல் இயற்கை குறித்தும் ,செயற்கை உரங்கள் மற்றும் வீரிய விதைகளின் தீமைகள் குறித்தும் , மத்திய அரசில் அதிகாரத்தை கைபற்றத் துப்பில்லாத தமிழக அரசியல் கட்சிகள் குறித்தும் பேசுகிறது . இந்நாவலில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் விதவிதமான வேசங்கள் அணிந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனச்சாட்சி அவர்களைக் கேள்வி கேட்கிறது ; தாங்கள் அணியும் வேசங்களை உணருகிறார்கள் .ஆனால் ,மீண்டும்  வேசங்களையே அணிகிறார்கள் .

இந்த நாவலிலிருந்து சில பகுதிகள் :-

" தன்னைத் தன் பார்வையில் நிரூபித்துக்கொள்வதுதான் அவனுக்கு முக்கியம் .தன்னைப் பற்றித் தன் திருப்திக்காகத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் .ஆழத்தில் வெகு ஆழத்தில் , அவன் யார் ? அவன் யாசிப்பது எது?

இதை அவன் கண்டுபிடிக்க வேண்டும் . தேடியவாறிருக்க வேண்டும் .மற்றவர்கள் அவனைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களுக்குப் பலியாகமல் அவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் "

...........

"ஆம்; திரையுலகத்துக்கு வெளியிலும்கூட சிறிய அளவிலோ பெரிய அளவிலோ ஒவ்வொருவருக்கும் நடிப்புத்திறமை தேவைப்படுகிறது "

.................

" இயற்கை , பெண்ணைப்போல , மனிதனை இயங்க வைக்கும் சக்தி ; மனித குலத்துக்குத் தொடர்ச்சியை அளிப்பது ; அதை மிகையாக இலட்சியப்படுத்தி பூஜை செய்யாமல் அன்னியோன்னியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அதைப் பயன்படுத்த வேண்டும் - அதே சமயத்தில் அதைச் சூறையாடிவிடக்கூடாது "

......................

" முதலில் , நம்மை நாமே தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம் . அதற்கு வேண்டிய அவகாசத்தைக்கூட நாம் பெறாமலிருப்பதே நம் துரதிஷ்டம் . இதுதான் வெற்றி , இதுதான் முன்னேற்றம் , என்று ஏதோ சிலவற்றை நாம் நிச்சயமாக நம்பிக்கொண்டு , அவற்றையே அடிப்படையாகக் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விட்டோம் . இந்த நம்பிக்கைகள் தவறாக இருக்கலாம் ; இவற்றைச் சார்ந்து உருவான அமைப்புகள் யாவும் தவறாக இருக்கலாம் . எது நமக்கு உண்மையிலேயே முக்கியமானது ? எது நமக்கு உண்மையிலே இன்பம் தருவது ? சாதிக்கக்கூடியதாக இருப்பதாலேயே எல்லாவற்றையும் சாதிக்க வேண்டியதில்லை. வெல்லக்கூடிய யாவற்றையும் வெல்ல வேண்டியதில்லை . செலவழிக்கக்கூடிய எல்லாவற்றையும் செலவழிக்க வேண்டியதில்லை. மனிதன் மென்மேலும் தன் ஆற்றல்களை உணர்ந்து வருகிறான் . ஆனால் அவற்றை எப்படி , எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்பதை மட்டும் உணரவில்லை. எல்லாவற்றையுமே பயன்படுத்த முயலவேண்டியதில்லை என்பதையும் உணரவில்லை..."

........................

" ரெனி டு போ என்ற ஃபிரெஞ்ச் அறிஞர் சொல்லியிருக்கிறார் , மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைக் குடிவைக்கும்போது நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகூட மனிதர்களை நகரங்களில் குடிவைக்கும்போது எடுத்துக் கொள்வதில்லையென்று. வெவ்வேறு மிருகங்களின் இயல்பான வசிக்குமிடத்துக்கேற்றவாறு இங்கு தனித்தனிப் பாணிகளில் ஒவ்வொரு மிருகத்திற்கும் இடம் அமைத்திருக்கிறார்கள் . ஆனால் நம் நகரங்களில் வெவ்வேறு பூர்வீகங்கள் , மதக் கலாச்சாரச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மனிதர்கள் ஒரேவிதமான வீடுகளில் வளர்கிறார்கள் , ஒரே விதமான பள்ளிகளில் ஒரே விதமான கல்வியைக் கற்கிறார்கள் , ஒரே விதமான வேலைகளில் திணிக்கப்படுகிறார்கள் , ஒரே விதமான பிம்பங்களை அணிகிறார்கள் , யாசிக்கிறார்கள். "

............................

" உலகெங்கிலும் குண்டர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் . மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் . சில குழுக்கள் , இவர்களுடைய சுயநலமான நோக்கங்கள் , மனித சமூகத்தின் முன்னேற்றம் ,மேம்பாடு என்று எதையெதையோ இவர்கள் கொச்சையாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கியுள்ள  கொள்கைகள்,அமைப்புகள் , இவற்றின் பொருட்டுத் தவறான முறையில் சூறையாடப்பட்டுவரும் , சேததமடைந்து வரும் , இயற்கை வளங்கள் , மனித இயல்புகள்..."

..................................

" தனி மனிதன் நிர்வாக அமைப்பில் தன்னையும் பங்குதாரனாக உணராமல் அதனின்றும் தனிமைப் படுத்தப்பட்டவனாக உணருவதால், தன் பிரச்சனைகளின் தீர்வுக்காகத் தானே நேரடியாகச் செயல்படும் தெம்போ, ஊக்கமோ அவனுக்கில்லை... மறு பக்கத்தில் பெரும்பாலானவர்கள் பெரும் அமைப்புகளில் ஒரு ஆணியாகவோ பல்சக்கரமாகவோ இயங்கிக் கொண்டு , தன் செயல்களின் இறுதி விளைவுகளை நிர்ணயிக்கும் திறனற்றவராய் இருப்பதும் , தம்மிடமிருந்து தாமே அந்நியப்பட்ட , ஆரோக்கியமான சுய உந்துதல்களால் மழுங்கி மரத்துப்போன ஒரு மக்கள் சமூகம் உருவாகவே வழிசெய்கிறது..."

..................................................

" வீர்ய விதைகளுக்கு அதிக அளவில் தண்ணீரும் , செயற்கை உரமும் , பூச்சிக் கொல்லிகளும் தேவைப்படுகின்றன . இம்மூன்றில் ஒன்று குறைந்தாலும் விளைச்சல் பழைய பாணி விதைகள் மூலம்  கிடைப்பதை விடவும் குறைந்துவிடுகிறது ...."

இந்நாவலில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் போலியான வேசங்களையே அணிவதால் அவர்கள் தான் வாசமில்லா " காகித மலர்கள் " என்று அர்த்தப்படுத்துகிறார், ஆதவன் .

நன்றி - ஆதவன் , உயிர்மை பதிப்பகம் .

மேலும் படிக்க :-

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

...................................................................

Thursday, August 2, 2012

விகடன் வலையோசையில்...!

ஆனந்த விகடன் எனக்கு அறிமுகம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன .இதுவரை வாங்கிப் படித்த அனைத்து ஆனந்த விகடன் பிரதிகளையும் சேமித்து வைத்துள்ளேன் . தற்போது தமிழில் வெளிவரும் வார இதழ்களில் ஆனந்த விகடனே சிறந்தது .இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை . 16-05-2012 தேதியிட்ட ஆனந்த விகடன் வரவேற்பறையில் ! எனது வலைப்பூ இடம்பெற்றது . அதைப்பற்றி எனது வலைப்பூவில் குறிப்பிடும் போது " கடந்த இரண்டு மாதங்களாக விகடன் படிப்பதில்லை " என்று குறிப்பிட்டிருந்தேன் . அதற்கு கடும் எதிர்ப்பு , உங்கள் வலைப்பூவே விகடன் மூலம் தான் எங்களுக்குத் தெரிந்தது ஆனால் நீங்கள் ஏன் விகடன் படிக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பினார்கள்  இப்போதும் விகடன் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கவில்லை .

ஒட்டு மொத்த ஊடகங்கள் மீதான கோபம் தான் விகடன் படிக்காததற்கும்  காரணம் . பொதுவாக எந்தப் புத்தகம் படித்தாலும் முன்பக்க அட்டை முதல் பின்பக்க அட்டை வரை படித்துத் தான் பழக்கம் . சமீப கால ஆனந்த விகடனை அவ்வாறு படிக்க முடியவில்லை . சினிமாக்காரர்களின் சொந்த வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் ? நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தால் சினிமாக்காரர்கள் வாழ்க்கையை விட சுவாரசியமாகவே இருக்கும் . அப்படி இருக்கும் போது நமக்கெதுக்கு சினிமாக்காரர்களின் சொந்த வாழ்க்கை .  அடுத்து அதிகமாக இடம்பெறுவது ,அரசியல்வாதிகளின் சுயபுராணம் .   

விகடன் மட்டுமல்ல பெரும்பான்மையான ஊடகங்கள் சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும்  மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது . இந்தக் கோபம் தான் விகடன் படிக்காததற்கு காரணம் . மற்றபடி நம் சமூகத்திலிருந்து சினிமாவையும் ,அரசியலையும் பிரிக்க முடியாது . அரசியல் குறித்தும் , நல்ல சினிமா குறித்தும் ஆக்கப்பூர்வமான ,அவசியமான விவாதங்கள் அவசியம் .விகடன் படிக்கவில்லை என்றாலும் " இன்று ஒன்று நன்று " தொடர்ந்து கேட்டுவருகிறேன் .தற்போதைய விகடனில் " வட்டியும் முதலும் " ," நானே கேள்வி நானே பதில் " ," சிறுகதைகள் ","ஓவியங்கள் " , " கார்டூன் " ,"தலையங்கம் " ," வலைபாயுதே (சினிமா மற்றும் அரசியல் தவிர்த்த பதிவுகள் ) " போன்ற பகுதிகள் ரசிக்கும்படி உள்ளன . ஆனாலும் மிதமிஞ்சிய அரசியல் , சினிமா செய்திகளால் விகடன் தொடர்ந்து படிக்க முடியவில்லை . என்று தோன்றுகிறதோ அன்று தொடர்ந்து படிக்க ஆரம்பித்து விடுவேன் .

25-07-12 தேதியிட்ட ஆனந்த விகடன், என் விகடன் மதுரை பதிப்பில் எனது வலைப்பூ இடம் பெற்றுள்ளது.






நன்றி :- விகடன் .


மேலும் படிக்க :

ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் !


விகடன் வரவேற்பறையில் !


.....................................................................................................................................................................


Saturday, June 2, 2012

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

தில் எதுவும் சொல்ல வேண்டாம்
பதிலுக்கு என்னைப் பார்க்கவும்
வேண்டாம்
உன்னைத் தீண்டும் போது
பதிலுக்குப் பதில்
என்னைத் தொட்டுவிடத் தேவையில்லை
பார்வையில் பட்டோ
படாமலோ
அருகிருந்தால் போதும்
என்னை நனைக்கும்
நீரின் ஈரம்
எதற்கும் பதிலாக இல்லை
                                         - தேவதச்சன்

நீங்கள் கவிதை வாசிக்கும் பழக்கம் உள்ளவரா ? இல்லையென்றாலும் பரவாயில்லை , ஒரு முறை தேவதச்சனின் கவிதைகளைப் படித்துப் பாருங்கள் . உங்கள் தினசரி வாழ்க்கையை சுவை மிக்கதாக மாற்றும் வல்லமை அவரது கவிதைகளுக்கு உண்டு .ஒரு நாள் முழுவதும் வாசிப்பதின் மூலம் கிடைக்கும் அனுபவத்தை அவரது ஒரே ஒரு கவிதை கொடுத்துவிடும் .

இதுவரை கவிதைகளின் பக்கம் திரும்பியதில்லை .அவ்வப்போது வாசிப்பின் இடையில் தட்டுப்படும் கவிதைகளை மட்டுமே படிப்பது வழக்கம் .அப்படி வாசித்த கவிதைகளின் வழியே அறிமுகமானவர் தான் " தேவதச்சன் ( Devathachchan )" . ஏனோ இவரது கவிதைகளை மட்டும் மிகவும் பிடித்துப் போனது .அவரது கவிதை தொகுப்புகளை வாங்கி நாளுக்கு ஒரு கவிதை என சுவைத்து வாசிக்கிறேன் . ஆம் , ஒரு நாளுக்கு ஒரு கவிதை போதும் ,அந்தக் கவிதையின் இனிமை அந்த முழு நாளுக்கும் போதுமானது .

எஸ் .ராமகிருஷ்ணன் மொழியில் ( வாழ்க்கையை கரும்பைச் சுவைப்பது போல் சுவைத்து வாழ வேண்டும் ) சொல்வதென்றால் தேவதச்சன் கவிதைகளை கரும்பைப் போல சுவைத்து வாசிக்க வேண்டும் .

வாழ்வின் எளிய கணங்களை அழகாக ,இனிமையாக ,சுவையாக தனது எளிய கவிதைகளின் வழியே வெளிப்படுத்துகிறார் . " ஜென் கவிதைகள் போல் அர்த்தம்  பொதிந்ததாய் தேவதச்சனின் கவிதைகள் இருக்கின்றன " என்று எஸ் .ரா ., குறிப்பிடுகிறார் . தினசரி வாழ்வில் நம் கண்ணில் படும் , நாம் பயன்படுத்தும் , நாம் கற்பனை செய்யும் பொருள்களின் வாயிலாக தான் சொல்ல விரும்புவதை சொல்லும் பேரற்புதத்தை தேவதச்சனால் மட்டுமே செய்ய முடியும் .

தேவதச்சனின் கவிதைகள் எல்லைகள் அற்றதாய் இருக்கின்றன . எந்த வரையறைக்குள்ளும் அவரது கவிதைகள் அடங்குவதில்லை . பிரபஞ்சத்தைப் போலவே அவரது கவிதைகளின் பரப்பை நம்மால் கண்டறிய முடியாது . பூமியில் இருக்கும் அனைத்து பொருட்களும் அவரது கவிதைகளின் பகுதிப் பொருட்களாக இருக்கின்றன .உயிருள்ளவை - உயிரற்றவை ,முக்கியமானவை - முக்கியமற்றவை என்ற பேதமெல்லாம் இல்லை . உதாரணமாக மைனா ,சூரியன்,நீல பலூன்,இலை,மரம்,பாலிதீன் பை ,கடிகாரம் ,காக்கி நிற டப்பா , முரட்டு லாரி , மீன்,கடற்கன்னிகள், லோயா தீவு ,மலை ,ஜெல்லி மீன் , சைக்கிள் பூட்டு ,பிரபஞ்சத்தின் வெளிபிரகாரம் ,சர்க்கஸ் கோமாளிகள் ,புகையிலைப் பொட்டலம் , ஓணான் ,இரும்புக் கிராதி ,நீல நிற இலந்தைப் பழங்கள் , சிறுவண்டுகள் , ஆழத் திமிங்கலம் ,வாலைப் பெண் ,நகப்பூச்சு , கண்ணாடி டம்ளர் , இளம்பெண் துறவி , தேநீர்த் தோழி ,மலர்கள் ,ரகசியக்கல் , அலைபேசி ,டினோசர் ,நகவெட்டி ,புத்தக குவியல்கள் , நிலைவாசல் ,பழச்சாறு , அமரர் ஊர்தி  இவையெல்லாம் " ஹேம்ஸ் என்னும் காற்று " என்னும் தொகுப்பில் இடம் பெற்ற சில வார்த்தைகள்  . 

தேவதச்சனின் கவிதைகளில் சில சாதாரணமாய் வாசிக்கும் போது ஒன்றும் புரியாதது போல் தெரியும் . முதல் வரிக்கும் ,அடுத்த வரிக்கும் தொடர்பு இல்லாதது போல் தெரியும் . ஒரு அழகான செடி இருக்கிறது .செடி என்றாலே அழகு தான் ;அழகான செடி வேறு உள்ளதா என்ன ? (வண்ணதாசன் மொழி ) அதன் இலை ஒரு வித அழகு ,கிளை ஒரு வித அழகு ,மொட்டு ஒரு வித அழகு .
எவ்வளவு அழகான செடி என்றாலும் தேன் என்பது மலரில் மட்டுமே இருக்கும் .ஆனால் தேனை செடியின் எல்லா பகுதிகளிலும் எதிர்பார்ப்பது நம் சமூகத்தின் மிகப்பெரிய முட்டாள்தனம் . நமக்கு எல்லா விசயத்திலும் ஒரு தொடக்கம் ஒரு நிறைவுடன் கூடிய முடிவு தேவைப்படுகிறது . தேவதச்சன் கவிதைகளில் இதை எதிர்பார்க்க முடியாது . நிறைய நல்ல திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு இந்த மனநிலை தான் காரணம் .

கிளிங் என்று
கீழே விழுந்து
உடைகிறது கண்ணாடி டம்ளர்
                     அழகிய இளம்பெண் துறவியைப் போல
                     இருந்த அது
                     அல்லும் சில்லுமாய்
                     உடைந்தாலும்
ஒவ்வொரு துண்டாய்
                     சுத்தம் பண்ணுகையில்
                     விரல் கீறி
                     குருதி கொப்புளிக்கும் என்றாலும்
நீர்மையின் அந்தரங்க ரகசியத்தை
                     போட்டு உடைத்து விட்டது என்றாலும்
இனிமையாகவே இருக்கிறது
ளிங் ஒலி.
ஏனோ நினைவிற்கு வருகிறாள்
என் தேநீர்த்தோழி
                                         - தேவதச்சன்  

எஸ் .ஆறுமுகம் எனும் இயற்பெயர் கொண்ட தேவதச்சன் எழுபதுகளில் ( 1970 ) இருந்து எழுதுகிறார் . மிகக் குறைவாகவே எழுதியுள்ளார் .ஆனாலும்  அனைத்தும் அழுத்தமான பதிவுகள் . விளம்பர வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார் . அழுத்தமான ,ஆழமான மொழிநடை அவருடையிது . தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் . 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அவருக்குக் கிடைத்தது . 


அவரது நூல்கள் :

கடைசி டினோசார்  :


யாருமற்ற நிழல் :


ஹேம்ஸ் என்னும் காற்று :


இரண்டு சூரியன் :


அனைத்து நூல்களையும்  உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது .

அவரது ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன . மொத்தக் கவிதைகளிலும் ஒரு கவிதை கூட மற்றொரு கவிதை போல இல்லை .

லைகள் மலர்கள்
ஒருசில மணிநேரங்களில் வித்தியாசமாகி விடுகின்றன
நீயும் நானும்
சில வருடங்களில்
அதற்குள்
ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாமல்
போய்விடுகிறோம்
அடையாளம் தெரியாமல் போகும்
அடையாளத்தில்
ஒருவருக்கொருவர்
முகமன் கூறிக்கொள்கிறோம்
நமது புன்னகைகளும் கைகுலுக்கல்களும்
குருடர்கள் இல்லைபோலும் , எப்படியோ
அவற்றிற்கு
எப்போதும்
அடையாளம் தெரிந்தேவிடுகிறது
                                          - தேவதச்சன்

தமிழ் கூறும் நல்லுலகின் ( சுஜாதா மொழி ) ஈடு இணையற்ற கவிஞனாக ,   கலைஞனாக , அழுத்தமான படைப்பாளியாகவே தேவதச்சன் தெரிகிறார் .

உரிய மீனுக்காக ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கைப் போல , தேவதச்சனின் புதிய கவிதைகளுக்காக காத்திருக்கிறேன் !



நன்றி - தேவதச்சன் ,உயிர்மை .

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !  

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !  
...................................................................................................................................................................  

Friday, May 18, 2012

விகடன் வரவேற்பறையில் !

கடந்த 4 வருடங்களாக ஆனந்த விகடனை தொடர்ந்து படித்து வருகிறேன் . நிறைய விசயங்களை ஆக்கப்பூர்வமாக பதிவு செய்கிறது . விகடன் மூலம் நான் பெற்றவை அதிகம் . ஏன் ப்ளாக் (வலைப்பூ ) எழுதுவது கூட விகடனிடம் இருந்து பெற்றது தான் . 2009 ஆண்டே வலைப்பூ எழுத தொடங்கி பிறகு  நிறுத்திவிட்டேன் . மீண்டும் வலைப்பூ எழுத காரணம் விகடன் . விகடனின் எனர்ஜி பக்கங்களில் வலைப்பூ பற்றிய தெளிவான கட்டுரை படித்த பிறகு தான் மீண்டும் வலைப்பூ எழுத ஆரம்பித்தேன் . Blog aggregator பற்றி விகடன் கட்டுரை மூலம் தான் தெரியும் .ஓவ்வொரு முறையும் விகடன் வரவேற்பறை பார்க்கும் போது நமது வலைப்பூ  இதில் இடம் பெறாதா என்று ஏங்கியதுண்டு .இப்பொழுது விகடன் (16-05-12) வரவேற்பறையில் எனது வலைப்பூ வந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது . "  மரம் வெட்டுங்கள் " கட்டுரை  என் சொந்த கட்டுரை அல்ல . விகடனின்  பாராட்டு  அந்தக்  கட்டுரையை எழுதியவருக்குப் போய் சேரட்டும் .




இதில் சிறு வருத்தம் என்னவென்றால் கடந்த இரண்டு மாதங்களாக நான் விகடன் வாங்குவதில்லை .அதனால் எனது blog விகடனில் வந்தது 14-05-12 அன்று தான் தெரியும் .தற்போது " வட்டியும் முதலும் " பகுதி மட்டுமே பயனுள்ளதாக உள்ளது . எப்படியும் " வட்டியும் முதலும் "  தனிப் புத்தகமாக வந்துவிடும் அப்போது படித்துக் கொள்ளலாம் என்று இப்போது விகடன் வாங்குவதில்லை . அட்டைப்படத்தில் சினிமா நடிகர் நடிகைளைப் பார்க்கும் போது எனக்கு அவ்வளவு கோபம் வருகிறது . சினிமா , அரசியல் தவிர்த்து வாழ்க்கையே இல்லையா . முன்பை விட இப்பொழுது அதிக சினிமா ,அரசியல் செய்திகளை விகடன் வெளியிடுகிறது . அரசியல் , சினிமா பற்றி எழுதுவதில் தவறில்லை . சினிமாக்காரர்கள் பற்றியும் , அரசியல்வாதிகள் பற்றியும் அதிக செய்திகள் வருவது தான் நெருடலாக உள்ளது . சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் பேட்டிகள் இடம் பெறாத வார இதழ்கள் இல்லவே இல்லை . இன்பாக்ஸ் , வலைபாயுதே என்று எங்கு பார்த்தாலும் அரசியல் ,சினிமா தலைகள் தான் தெரிகின்றன .  தயவு செய்து சினிமா மற்றும் அரசியல் சார்ந்தவர்களை மட்டும் அட்டைப்படத்தில் போடாதீர்கள் . சமூகத்தில் வாழும்  அனைவருக்கும் வாய்ப்பு  கொடுங்கள் . அரசியல் அல்லது  சினிமாவுக்கு வந்தால் மட்டுமே புகழ் பெறலாம் என்ற மாயத் தோற்றத்தை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்குகின்றன .

நன்றி - விகடன் .

மேலும் படிக்க :

 ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் ! 
..................................................................................................................................................................



Saturday, April 21, 2012

எண்ணைக்காக எள்ளு காயுது ;எலிப்புழுக்கை எதுக்கு காயுது ?

எந்த மொழியாக இருந்தாலும் பழமொழிகள் எப்போதும் மொழிக்கு ஆதாரமாக இருக்கின்றன . தங்களின் எளிய வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை கேலி செய்யும் வகையில் நிறைய பழமொழிகள் புழக்கத்தில் உள்ளன .

ங்குனி பருக்கிறதுமில்லை , சித்திரை சிறுக்கிறதுமில்லை.

சும்மா கிடக்கிற கோடாலிய தூக்கி காலில் போடுவானே , கால் வலிக்குதுன்னு ஏன் கத்திக்கிட்டு கிடப்பானே.

ரிக்கு பண்ணாட்டு கொடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்.

ரவெட்டி வீட்டுல படலைக் கட்டிச் சாத்தனானாம்.

சும்மா இருக்கிற கோழிக்கு சோத்தைப் போடுவானேன் ;அது கொண்டைய ஆட்டிக்கிட்டு கொத்த வருவானேன்.

ன்றிகளின் முன் முத்துக்களைப் போடாதீர்.

ருண்டோடும் கல் பாசி பாடியது.

ண்ணைக்காக எள்ளு காயுது ;எலிப்புழுக்கை எதுக்கு காயுது ?

சிலிக்கு மாவிடிச்சா குருது கம்புக்குத்தான் சேதாரம்.

டந்து போனது கரணம் போட்டாலும் வராது.

நினைத்தவுடன் நெய்க்காரன் குதிரை ஏற முடியுமா.

நாம நாயை ஏவினால் , நாய் வாலை ஏவுமாம்.

தெரிந்ததை விட்டவனும் கெட்டான் , தெரியாததைத் தொட்டவனும் கெட்டான்.

ழைக்கிற மாடு ஊருக்குப் போனா , அங்கேயும் உழவு ஓட்டுவார்களாம் .

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.

சொப்பனத்தில் கண்ட அரிசி ,சோற்றுக்கு உதவாது.

பூசணிக்காய் போறது தெரியாதாம் , கடுகு போறதைப் பற்றிக் கவலைப்படுவானாம்.

ழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது .

ரு பிள்ளையைப் பெற்றவளுக்கு உறியிலே சோறு , நாலு பிள்ளையைப் பெற்றவளுக்கு நடுத்தெருவுலதான் சோறு.

லமரத்தை பிடித்த பேய் அத்திமரத்தையும் பிடித்ததாம் .

குந்தித் தின்னா குன்றும் மாளும் .

ட்லியைத்   தட்டில் போட்டுவிட்டு இடியைத் தலையில் போடுவது போல் .

தேனை எடுத்தவன் புறங்கையை நக்காம இருப்பனா ?    

ரும்பு  அடிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலை ?

முயலை எழுப்பி விட்டுவிட்டு நாய் படுத்துக்குமாம் .

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது .

கும்பி கூழுக்கு அழும்போது கொண்டை பூவுக்கு அழுதுச்சாம் .

றக்குறது உழக்குப் பாலு ,எட்டி உதைக்கிறது பல்லுப்போக .

மேலும் படிக்க :

வாழ்க்கை 

காணொளி 
.............................................................................................. 

Sunday, January 1, 2012

கவிஞர்களே இவ்வருஷம் - எழுத்தாளர் சுஜாதா !

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

கவிஞர்களே !  இவ்வருஷம்  குறைத்துக்  கொள்வோம்
                   கவிதைகளில்  தேன்தடவல்  நிறுத்திக்  கொள்வோம்
செவிகளுக்கு  இனிமைதரும்  செய்யுள்  வேண்டாம் 
                   சினிமாவுக்(கு)   எழுதிவரும்  பொய்கள்  வேண்டாம் 
உவமைகளைத்  துப்புரவாய்  நீக்கிப்  பார்ப்போம்
                   உலகத்தைத்  திருத்துவதைப்  போக்கிப்  பார்ப்போம்
சிவபெருமான்,  சீனிவாசர்  முருகன்  மீது
                   சீர்தளைகள் தவறாத கவிகள் போதும் ...

அரசியலில்  மாறுதலைச்  சாட  வேண்டாம்
                  ஆளுநர்கள்,  முதல்வர்களைப்  பாட  வேண்டாம்
பரிசுதரும்  தலைவர்களைத்  தேட  வேண்டாம்
                   பட்டிமன்றம்  கவிராத்திரி  கூட  வேண்டாம்
வரிச்சுமைகள்,  பெண்ணுரிமை,  தமிழின்  இனிமை
                  வாரொன்று  மென்முலைகள்,  வளையல் சப்தம்
முரசறைந்த   பழந்தமிழர்  காதல்,  வீரம்
                   முதுகுடுமிப் பெருவழுதி எதுவும் வேண்டாம் ...

இத்தனையும்  துறந்துவிட்டால்  மிச்சம்  என்ன
                   எழுதுவதற்கு  என்றென்னைக்  கேட்பீர்  ஆயின்
நித்தநித்தம்  உயிர்வாழும்  யத்த  னத்தில்
                  நேர்மைக்கும்  கவிதைக்கும்  நேரம்  இன்றி
செத்தொழியக்  காத்திருக்கும்  மனுசர்  நெஞ்சின்
                  சிந்தனையைக்  கவிதைகளாய்ச்  செய்து  பார்ப்போம்
முத்தனைய *   சிலவரிகள்  கிடைக்கா  விட்டால்
                  மூன்றுலட்சம்  ' ராமஜெயம் '  எழுதிப்  பார்ப்போம் ..!

* ஒரே ஒரு உவமைக்கு மன்னிக்கவும் .
                                                                                                 - சுஜாதா
                                                                                                    14 - 4 -1991
                                                                                                   ஆனந்த விகடன் 

 நண்பர்களே இந்த செய்யுள் அல்லது கவிதை எழுதப்பட்ட வருடத்தைக் கவனிக்கவும் . 1991 !?

நன்றி - ஆனந்த விகடன் .

மேலும் படிக்க :

2011 ம் வருடமும் சாமானியனும் ! 
.....................................................................................................................................................................

Monday, November 28, 2011

ஆய கலைகள் 64 !

ஆய கலைகள் 64 பற்றி நமது ராஜாக்கள் கதைகளிலும் ,பள்ளிப்பாடத்திலும் கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை . தற்செயலாக  இணையத்தில் கிடைத்தது . அவை ,
 
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)


நன்றி : Tamil .

மேலும் படிக்க : 
 
நாமெல்லாம் யார் ?  


சிவில் சர்வீசஸ் தேர்வில் கேள்விகள் தமிழிலும் இருக்க வேண்டும் ! 
 .............................................................................................................................
 

Monday, July 4, 2011

ஜூலை 2011 - 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது பொய் !

இந்த ஜூலை ( 2011 ) மாதத்தில் 5 வெள்ளி , 5 சனி , 5 ஞாயிறு கிழமைகள் வருகின்றன .இது , 823  ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும் என்பது சுத்தப் பொய் . ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு  பிறகும் இவ்வாறு வருகிறது . இதே மாதிரியான ஜூலை 2005 ஆம் ஆண்டு வந்தது , அடுத்து  ஜூலை 2016 ஆம் ஆண்டு இதே போன்ற ஜூலை வரவுள்ளது . பொதுவாக எந்த மாதத்தில் 31 நாட்கள் வருகின்றனவோ அந்த மாதத்தில் அடுத்தடுத்த 3 நாட்கள் 5 முறை  வரும் . இதில் எந்த அதிசயமும் இல்லை .

ஜூலை 2005 :



ஜூலை 2016 :


நாட்காட்டி 2011 :


உதாரணமாக 2011 நாட்காட்டியைப் பாருங்கள் . எந்த மாதத்தில் எல்லாம் 31 நாட்கள் இருக்கின்றதோ அந்த மாதத்தில் அடுத்தடுத்த 3 நாட்கள் 5 முறை வருவதைக் காணமுடியும் .

மேலும் படிக்க :

முகப்பு 

................................................

Monday, June 13, 2011

சிவில் சர்வீசஸ் தேர்வில் கேள்விகள் தமிழிலும் இருக்க வேண்டும் !

ஜூன் 12 ஆம் தேதியன்று நாடு முழுவதும் UPSC நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது . இதில் கேள்விகள் ஆங்கிலத்திலும் , ஹிந்தியிலும் இருந்தன . ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்கு இந்தத் தேர்வு கொஞ்சம் எளிதாக இருந்து இருக்கும் . காலையில் நடந்த பொதுஅறிவு தேர்வை விட மதியம் நடந்த ஆங்கிலத் திறனறிவு தேர்வில் மொழியால் பாதிப்பு அதிகம் . 

ஒரே தீர்வு தான். ஆங்கிலம் , ஹிந்தி இவற்றுடன் பிராந்திய மொழியிலும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் . ஹிந்திக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் நிறுத்தப்பட வேண்டும். ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை ஆளும் அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும். 


மேலும் படிக்க :

...................................

Saturday, April 23, 2011

உலக புத்தக தினம் !


' There are worse crimes than burning books. One of them is not reading them.' - Joseph Brodsky.
 
ஏப்ரல் 23 , உலக புத்தக தினம் . வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் நினைவுநாளையே உலக புத்தக தினமாக கொண்டாடுகிறோம் . புத்தகங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது . புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு பள்ளிகளில் தொடங்கினாலும் , பள்ளிகளிலேயே முடிவதில்லை , நம் ஆயுள் வரை தொடர்கிறது . எந்த காலகட்டத்திலும்  நம்மைக்  கைவிடாத ஒரே நண்பன், " புத்தகம் " மட்டுமே .புத்தகங்கள் நமக்கு அளிக்கும் அற்புதங்கள் ஏராளம் . ஒவ்வொரு புத்தகமும் நாம் அறியாத  பல கதவுகளைத் திறக்கிறது . 

மனிதனது கண்டுபிடிப்புகளில் புத்தகம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது . எத்தனையோ சாதனையாளர்கள் உருவானதற்கும் , இன்று உருவாகிக் கொண்டிருப்பதற்கும் புத்தகங்களே காரணம் . புத்தகங்கள் இல்லாத வாழ்க்கை கிணற்றுத் தவளை போலத்தான் இருக்கும் . புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் வாழ்க்கையின் பாதி சுகத்தை இழந்து விடுகிறார்கள் . ஒரு நல்ல புத்தகம் நமக்கு அளிக்கும் களிப்பும் , ஆறுதலும் மிக அதிகம் . வாழ்க்கையே முடிந்துபோனதாக நினைத்து , மனதுடைந்து இருக்கும் சூழலில் "உலகம் ரொம்ப பெரியது , உன் வாழ்க்கையும் தான் " என்று ஒரு புத்தகம் நம்மைத் தேற்றி ஆறுதல் தருகிறது . 

ஒரு புத்தகத்தை நாம் படிக்கும் போது நமது கற்பனைவளம் அதிகரிக்கிறது . நமது சிந்திக்கும் ஆற்றல் அதிகமாகிறது . ஒரு புத்தகத்தை ஒவ்வொரு முறையும்  படிக்கும் போதும் நமக்கு புதிய அனுபவம் கிடைக்கிறது . புத்தகம் அட்சயப்பாத்திரம் போலவே நமக்கு படிக்க படிக்க இன்பத்தைக் கொடுக்கிறது .   
 புத்தகங்களும் , இசையும் இல்லாமல் என்னால் வாழவே முடியாது . என் வாழ்க்கையின் மிகக் கடினமான சூழல்களை புத்தகங்களின்  துணை கொண்டும் , இசையின் துணை கொண்டும் தான் கடந்து வந்திருக்கிறேன் . நமது அத்துனை துன்பங்களையும் , துயரங்களையும் ஒரு புத்தகத்தின் நான்கு வரிகளோ அல்லது ஒரு நல்ல இசையோ மாற்றி விடுகிறது . நம்மை புதுப்பித்துக்கொள்ள புத்தகங்களும் , இசையும் கண்டிப்பாக தேவை . புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் , கண் இருந்தும் குருடர்கள் . இசை கேட்கும் பழக்கம் இல்லாதவர்கள் , காது இருந்தும் செவிடர்கள் .

வாழ்க்கையைக் கொண்டாட புத்தகங்களும் , இசையும் தேவை . புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூறும் காரணம் " படிக்கக் கூடாதுன்னு இல்ல ,படிக்க நேரம் இல்லை " . பணத்தைச் சேர்க்க ஒதுக்கும் நேரத்தைக் கொஞ்சம் புத்தகத்துக்கும் ஒதுக்குங்கள் . பணத்தால் நிலையான மகிழ்ச்சியையும் , நிலையான அமைதியையும் தரமுடியாது . ஆனால் , புத்தகம் தரும்  . இதுவரை இல்லையென்றாலும் இன்றிலிருந்தாவது புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள் . இப்பொழுதே  கிணற்றை ( வீட்டை  ) விட்டு வெளியே வாருங்கள் .அருகில் இருக்கும்  புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகமேனும்  வாங்குங்கள் . வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பியுங்கள் . 

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள் புத்தகங்களுடன் !

மேலும் படிக்க :




...............................................................................


Thursday, April 21, 2011

அமேசான் - அனைவருக்கும் 5 GB மெமரி இலவசம் !

இணையத்  தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் மேகக்  கணினியகம் ( Cloud Computing ) . முன்பெல்லாம்  நாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று மட்டுமே பணத்தை எடுக்க முடியும் . ஆனால் , தற்பொழுது எல்லோரும் ATM யைப் பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்கிறோம் . அதுபோல , மேகக்  கணினியகதைப் பயன்படுத்தி நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை எங்கு இருந்து வேண்டுமானாலும் நமக்குத  தேவையானபோது   பெற்றுக்கொள்ளலாம் . நமது சொந்த CPU போலவே செயல்படும் . நமக்கு தேவையான மென்பொருள்களை இயக்கவும் , தகவல்களைச் சேமிக்கவும் முடியும் .
 
தற்பொழுது இருக்கும் முறைகளால் தகவல்களைச் சேமிக்க மட்டுமே முடியும் . நமக்கு தேவைப்படும் ஒவ்வொரு முறையும் பதிவிறக்கம் ( Download ) செய்து தான் பயன்படுத்த முடியும் . இதனால் , நேரமும் விரயமாகிறது , அதிக மெமரியும் தேவைப்படுகிறது . ஆனால் , மேகக் கணினியகதைப் பயன்படுத்தி தகவல்களைப் பொதுவான இடத்தில் சேமிக்கலாம் , மென்பொருள்களைப் பயன்படுத்தி நேரடியாக இயக்கலாம் , பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை . இன்னும் பல பயன்கள் மேகக் கணினியகம் மூலம் கிடைக்கும் . அதனால் தான் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் மேகக் கணினியகத் துறையில் இறங்கியுள்ளன .

அமேசான் டாட் காம்  பற்றி நிறையப் பேருக்குத் தெரியும் என்று நினைகிறேன் . இது , அமெரிக்காவின் மிகப்பெரிய இணைய சில்லறை வணிக அங்காடி ( America's largest online retailer shop ) ஆகும் . இந்த நிறுவனமும் மேகக் கணினியகத் துறையில் இறங்கியுள்ளது . முதல் கட்டமாக இரண்டு மேகக் கணினியகச் சேவைகளை ( Cloud Drive மற்றும்  Cloud Player )வெயிட்டுள்ளது . 

Cloud Drive மூலம் எந்த ஒரு  இணைய பயன்பாட்டாளரும் 5 GB வரை தகவல்களைச் சேமித்துக்கொள்ள முடியும் . பதிவு செய்ய இந்த உரலியைச் சொடுக்குங்கள் . https://www.amazon.com/clouddrive/learnmore   இது முற்றிலும் இலவசம் . 5 GB க்கு மேல் தேவைப்பட்டால் பணம் கட்டிப் பெற்றுக் கொள்ளலாம் . இதில் Documents , Music,Video ,Photos என்று எதை வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம் . ஆனால் , தற்பொழுது மியூசிக் பைல்களை மட்டுமே நேரடியாக பயன்படுத்த முடியும் . அதற்காகத்தான் Cloud Player என்ற சேவையை வழங்குகிறது (  . இந்தச் சேவையைப் பயன்படுத்தி நாம் எங்கிருந்து வேண்டுமானாலும்  பாடல்களைக் கேட்டு மகிழலாம் . இதற்கு இணையவசதியுடன்  கூடிய கணினி அல்லது அலைபேசி ( cell phone ) இருந்தால் போதும் . 

இதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் தற்பொழுது இந்த வசதியை அமெரிக்காவில் இருப்பவர் மட்டுமே பயன்படுத்த முடியும் . நம்மால் தற்பொழுது Cloud Drive யைப் பயன்படுத்தி  5 GB வரை தகவல்களைச் சேமிக்க மட்டுமே முடியும் .Cloud Pl ayer யைப் பயன்படுத்திப் பாடல்கள் கேட்க முடியாது . கூடிய விரைவில் மற்றவருக்கும்  Cloud Player யைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம் . 

Documents ,Video ,Photos போன்றவற்றை நேரடியாக இயக்க வகை செய்யும் சேவைகளை அடுத்து வழங்க இருக்கிறது அமேசான் .

மேலும் பார்க்க :

நன்றி - ஆனந்த விகடன் .
..................................................

Friday, November 19, 2010

ரயில் வண்டிப் பயணம்



ரயில் வண்டிப் பயணம் எப்பொழுதுமே சுவாரசியங்கள் நிரம்பியது. பயணத்தின்போது வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் வாழும் மனிதர்களைச் (பொருள் உள்ளவர் முதல் பொருளற்றவர் வரை) சந்திக்க முடியும். பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை எல்லாவகையான வயதுக்காரர்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். சில நேரங்களில், பயணத்தின் போது கூட குழந்தை பிறக்கிறது. ஒட்டு மொத்த மனித வாழ்க்கை பயணத்தின், ஒரு மாதிரி வடிவமாகவே ரயில் வண்டிப் பயணம் இருக்கிறது.

              சமீபத்தில் திண்டுக்கலிலிருந்து சென்னைக்கு வைகை அதிவேக விரைவு ரயிலில் பயணம் செய்தேன். அற்புதமான பயணம். இயற்கையின் பல்வேறு பரிமாணங்களை ரசித்து மகிழ்ந்தேன். நல்ல குளிர்ந்த காற்று, வயல்வெளிகளின் பச்சை வாசம்.வானெங்கும் மேக கூட்டங்கள். மலைகளிலிருந்து சிறிய வகை மேகங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது, நானும் பார்த்துக்கொண்டேதான் இருந்தேன் .

                 ஒவ்வொருமுறையும் திண்டுக்கலுக்கும் திருச்சிக்கும் இடையில் பயணிக்கும் போது நான் கவனிக்கும் ஒ ரு விஷயம் மயில்கள். அன்று மேகமூட்டமாக இருந்ததால் மயில் தோகை விரிப்பதை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் தொடர்ந்து வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன். முதலில் ஒரு சில ஆண் மயில்கள் தென்பட்டன. ஆனால், அவை தோகை விரிக்கவில்லை. பார்த்துக்கொண்டே வரும் போது, ஒரு ஆண் மயில் தோகை விரித்த காட்சியைக் கண்டேன். காரணம் என்னவென்று பார்த்தால், பக்கத்தில் ஒரு பெண் மயில் இருந்தது. முதன் முறையாக இயகையான சூழ்நிலையில் ஒரு ஆண் மயில் தோகை விரிப்பதை அன்றுதான் கண்டேன்.

              வயல்வெளிகளில் தேங்கி இருந்த மழை நீரில் தெரிந்த தென்னை மரங்களின் நிழலும்,வானத்து மேகங்களின் நிழலும் அவ்வளவு அழகு. காடுகளில் பறந்து கொண்டிருந்த பல்வேறு வகையான பறவைகள் அந்த ரம்மியமான சூழலுக்கு மேலும் அழகு சேர்த்தன. சின்ன சின்ன பட்டாம்பூச்சிகள் , மைனாக்கள் , காடைகள் , வெண்சங்கு போன்ற நிறமுடைய கொக்குகள் தங்களின் வசந்த கால வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தன. ஒரு சில கழுகுகளையும் காணமுடிந்தது. வெகு நீண்ட காலத்துக்கு பிறகு கழுகுகளைக் கண்டேன். கழுகு என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது, தாய்க் கோழியும் அதன் குஞ்சுகளும் தான். கழுகு கோழிக் குஞ்சுகளை தூக்க வரும் போது, சாதுவான பறவையான கோழிக்கும் வீரம் வந்து கழுகைத் துரத்தும். பக்கத்துக்கு வீட்டுக்காரர்களிடம் சண்டை வருவதால், இன்று
கிராமங்களில் கோழி வளர்க்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதனால் கழுகையும் பார்க்க முடியவில்லை.

             பயணத்தின் போது நேர்த்தியான கரும்பு தோட்டங்கள் தென்பட்டன. தைப்பொங்கலின் போது நாம் கடிக்கும் கருப்பு கரும்பை தோட்டத்துடன் பார்ப்பது இதுதான் முதல் முறை. இந்த தோட்டங்கள், இப்போதே தைப்பொங்கலை நினைவு படுத்திவிட்டன. திருச்சி வந்தவுடன், தினத்தந்தி படிக்க ஆரம்பித்தேன்.தற்போது நடக்கும் மத்திய அரசு, ஒட்டுமொத்த இந்தியாவை விலை பேசி அமெரிக்க முதலாளிக்கு வித்துவிடும் போலிருக்கிறது . இவ்வளவு மனித சக்தியை வைத்துக்கொண்டு அமெரிக்காவிடம் அடி பணிவது நன்றாகவா இருக்கிறது.

               அடுத்து நாஞ்சில் நாடனின் " தீதும் நன்றும் " வாசிக்க ஆரம்பித்தேன். அதில் இடம் பெற்ற விளம்பரம் பற்றிய கட்டுரை,பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை அடிக்கும் யுக்தியை நமக்கு சொன்னது. இன்று , இந்தியா , வாங்கும் சக்தி அதிகம் கொண்ட மிகப்பெரிய சந்தையாக மாறிவிட்டது. நாம் உணவுக்காக செலவிடும் தொகையைவிட மற்ற ஆடம்பர விசயங்களுக்குத்தான் அதிகம் செலவளிக்கிறோம். செலவளிக்கிறோம் என்பதைவிட செலவளிக்க தூண்டப்படுகிறோம் . இன்று தொலைக்காட்சி நம்மை விளம்பரங்களின் அடிமையாக மாற்றி விட்டது. நமக்கு தேவை இருக்கோ, இல்லையோ எல்லாப்பொருட்களையும் வாங்கும்படி தூண்டப்படுகிறோம். இன்றைய சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரி , தொ(ல்)லைக்காட்சி தான். சுயசிந்தனை என்பதே இல்லாமல் போய்விட்டது . முடிந்தவரை தொ(ல்)லைக்காட்சி பார்ப்பதை தவிருங்கள் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

                செம்பரப்பாக்கம் ஏரியை பார்க்கும் போது, இளையராஜா பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. "சிறுவானி தண்ணி குடிச்சு நான் பவானியில்..." இந்தப் பாடலில் ஒரு வரி வரும்" யாரா இருந்தாலும் செம்பரப்பாக்கம் தண்ணி குடிச்சு சென்னையில் வளர வேண்டும் ". அதனால்தானோ என்னவோ எல்லோரும் சென்னையை தேடி வருகின்றனர்.தாம்பரத்தை நெருங்கும்போது பறவையாய் இருந்த நான் கரப்பான்பூச்சியாய் மாற ஆரம்பித்தேன். கிராமத்து வாழ்கையில் பறவையாய் சுற்றிதிரிந்தேன்.சென்னையில இடிபாடுகளுக்கிடையில் கரப்பான்பூச்சியாய் வாழப்போகிறேன். இவ்வாறாக எனது ஒரு ரயில் வண்டிப் பயணம் நிறைவு பெற்றது. அடுத்த ரயில் வண்டிப் பயணத்துக்காக காத்துக்
கொண்டு இருக்கின்றேன்....!

எல்லோருக்கும் பயணங்கள் தொடரட்டும் .....!

வாழ்க்கை இனிக்கட்டும் .....!

மேலும் படிக்க :


.......................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms