Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Saturday, January 17, 2026

பொங்கல் - ஒரே அர்த்தமுள்ள பண்டிகை !


" இந்திய நாட்டு விவசாயம் என்பது வெறும் மண் மட்டும் சார்ந்ததல்ல. மண் , மனிதர், மாடு இந்த மூன்றும் சேர்ந்தது தான் நம் நாட்டு விவசாயம் " 

- ஜே.சி.குமரப்பா 

இந்திய நாட்டு விவசாயத்திலிருந்து மாட்டைப் பிரிக்கவே முடியாது. இன்றைய விவசாயத்தில் பாரம்பரிய மாடுகள் அழிந்து கலப்பின மாடுகள் ஆக்கிரமித்திருந்தாலும் கூட மாடுகளை விவசாயத்திலிருந்து நீக்க முடியாது. பாரம்பரிய மாடுகள் நாளெல்லாம் உழைத்தன. "மாடாய் உழைத்தும் என்னத்தை கண்டோம் " என்ற அங்காலாய்ப்பும் இருந்தது. இன்றைய கலப்பின மாடுகளுக்கு எந்தவித உழைப்பும் இல்லை. இன்று "மாடாய் உழைக்கிறேன்" என்று சொன்னால் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது என்ற பொருளாகிவிடும். டிராக்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது ஜே.சி.குமரப்பாவால் சொல்லப்பட்டது தான் மேலே உள்ள வாசகம். இதனுடன் இன்னொன்றும் சொன்னார். அது, " டிராக்டர் சாணி போடுமா ?" என்பது தான். இதை சாதாரண கேள்வியாக கடந்து போய்விட முடியாது. பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்று சொல்லப்பட்டவை ஏற்கனவே இருந்த உற்பத்திமுறை பாரம்பரியத்தை அழித்து மனிதர்களுக்கு தீங்குகளை மட்டுமே கொடுத்திருக்கிறது. மண்ணை அழித்தது பசுமைப்புரட்சி, மாடுகளை அழித்தது வெண்மைப்புரட்சி. எத்தனையோ விதமான கருவிகள் அறிமுகம் ஆன பிறகும் விவசாயமும், விவசாயப் பரப்பும் அதிகரிக்கவில்லை; மக்களின் ஆரோக்கியமும் மேம்பட வில்லை. இந்த புரட்சிகள் அனைத்தும் மக்களின் ஆரோக்கியத்தை அழிக்க வந்த எமன்கள். 


இப்போதும் விவசாயத்தை மீட்டெடுக்க ஒரே வழி தான் இருக்கிறது. அதுவும் ஜே.சி.குமரப்பா சொன்னது தான். உணவுப் பயிர்களுக்கு முன்னுரிமை தரும் தன்னிறைவு வேளாண்மைக்கு முன்னுரிமை தருவது தான் அது. இதில் நெல்லையும்,கரும்பையும் சேர்க்க முடியாது. இவை இரண்டும் ஆலைப்பயிர்கள். அதுவும் இல்லாமல் இவற்றை உற்பத்தி செய்வதற்கு தண்ணீரும் அதிகம் தேவை. அப்படியே உற்பத்தி செய்தாலும் அரசின் உதவியுடன் ஆலை முதலாளிகள் நிர்ணயிப்பது தான் விலை. இது ஒரு அடிமை விவசாயம் என்றே சொல்லலாம். நெல்லையும், கரும்பையும் விட நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தைத் தரும் எத்தனையோ பயிர்கள் இருக்கின்றன.அவற்றை உற்பத்தி செய்வதற்கு தண்ணீரும் அதிகம் தேவைப்படாது. பொதுவாகவே விவசாயம் என்பது பணப்பயிர்களை உற்பத்தி செய்வதுதான் என்ற நிலை உருவாகிவிட்டது. பணப்பயிர்களை உற்பத்தி செய்யும் போது உரிய விலை கிடைக்காத போது பெரிய இழப்பு ஏற்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் தனது விரிவான ஆய்வுகள் மூலம் சரியான தீர்வுகளை அப்போதே சொல்லிவிட்டு போயிருக்கிறார், ஜே.சி.குமரப்பா. உண்மையிலேயே ஜே.சி.குமரப்பா ஒரு தீர்க்கதரிசி தான்.


விவசாயத்திலிருந்து கிடைக்கும் அனைத்தும் மனிதர்களும், மாடுகளும் எடுத்தது போக மீதி மண்ணுக்கே கொடுக்கப்படுகிறது.நாம் கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் மட்டும் தான் உண்மையிலேயே ஒரே அர்த்தமுள்ள பண்டிகை.பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் பொங்கல் ஒரு அறுவடைத் திருவிழா. பெரும்பாலும் பொங்கல் மண்ணிலேயே வைக்கப்படுகிறது. பூமியில் இருக்கும் சக்திகளில் சூரிய சக்தியே முதன்மையானது. பூமியில் புதியது என்ற ஒன்று உண்டென்றால் அது தினமும் பூமியின் மீது விழும் சூரிய கதிர்கள் மட்டுமே. மற்றவை அனைத்தும் பூமியில் ஏற்கனவே இருப்பவை தான். ஏற்கனவே பூமியில் இருப்பதிலிருந்து ஏதோ ஒன்றை உருவாக்கி நம் மன திருப்திக்காக புதியது என அழைத்துக் கொள்கிறோம். அப்படிப்பட்ட பேராற்றல் உள்ள சூரியனுக்கு நன்றி சொல்கிறோம். இன்றும் விவசாயத்தைக் காப்பாற்றி வருவது மாடுகள் போன்ற கால்நடை வளர்ப்பு வருமானம் தான். அப்படிப்பட்ட மாடுகள் ,ஆடுகளுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்துகிறோம். 


பொங்கலில் சாதி , மதங்களுக்கு துளியும் இடமில்லை. அதுமட்டுமில்லாமல் பொங்கல் ஒரு சூழியல் பண்டிகை. வடக்கிலிருந்து திணிக்கப்பட்ட திபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற மற்ற பண்டிகைகள் போல சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் பொங்கல் பண்டிகையால் உருவாவதில்லை. தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு எல்லாவித சிறப்புகளும், நியாயமான காரணங்களும் பொங்கல் பண்டிகைக்கு இருக்கிறது. ஒரு வேளை தற்போதைய அரசு பொங்கல் பண்டிகையை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவிக்குமானால் முன்பை விட பெரும்பாலானோர் தற்போது ஆதரிப்பார்கள். தமிழ் சமூகத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுத்தாலே போதும் எல்லாம் சரியாகி விடும். 

தமிழர் என்றொரு இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு !

பொங்கல் தமிழர்களின் அடையாளம் !

தமிழ்நாடு வாழ்க !

மேலும் படிக்க :

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

தக்காளியும் விவசாயியும் பின்னே கார்ப்பரேட்களும் !

Saturday, July 15, 2023

தக்காளியும் விவசாயியும் பின்னே கார்ப்பரேட்களும் !


தக்காளியும் வெங்காயமும் வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ தான் உற்பத்தி குறையும் போது கிலோ 100 ரூபாயைத் தாண்டுகிறது. உற்பத்தி அதிகமாகும் போது தானாகவே குறைந்துவிடுகிறது.சில சமயங்களில் விலை கிடைக்காமல் கிழே கொட்டும் நிலையும் ஏற்படுகிறது. அப்போதெல்லாம் அவர்களுக்காக யாரும் கவலைப்படுவதில்லை. இப்போதைய விலையேற்றமும் 1000-ல் ஒரு விவசாயிக்கு பலன் கொடுக்கலாம்.


இந்திய நாட்டில் விவசாயியாக வாழ்வது பெரும் சவால். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பால் வருமானம் என்ற ஒன்று இருப்பதால்தான் விவசாயிகள் நிலத்தையே உழுகின்றனர். இல்லையென்றால் பாதி நிலங்கள் தரிசாக மாறியிருக்கும். தற்போது மாட்டுத் தீவனங்களின் விலையேற்றத்தால் பால் வருமானமும் குறைய ஆரம்பித்துவிட்டது. இலவச மின்சாரம் மற்றும் மானியங்கள் கொடுக்கப்பட்டாலும் விவசாயிகளின் வாழ்வு இன்னமும் மேம்படவில்லை. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தீர்வாக சொன்னாலும் இது எல்லோருக்கும் சாத்தியமானதாக இல்லை.


இன்றைய தொடு திரை வாழ்விலும் " உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது " என்பது மட்டும் மாறவேயில்லை. எல்லா உழைப்பிற்கும் விலை இருக்கிறது. விவசாயிகளின் உழைப்பிற்கும் விலை இருக்கிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் விவசாயிகளின் உழைப்பிற்கு விலையே கிடைப்பதில்லை. ஏதோ இந்த விலையேற்றம் தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு கொஞ்சம் நம்பிக்கையை அளிக்கலாம் அவ்வளவு தான்.


தற்போதைய காலநிலை மாற்றத்தால் முதல் பாதிப்பைச் சந்திப்பவர்கள் விவசாயிகள்தான். விளைச்சலின் போது பெய்ய வேண்டிய மழை பெய்வதில்லை. அறுவடையின் போது பெய்யும் மழை அனைத்தையும் அழித்துவிட்டு போய்விடுகிறது. சமீப ஆண்டுகளில் அனைத்து விதமான விவசாய பயிர்களுக்கும் மிக அதிக அளவிலான ரசாயன உரங்களும் , பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு புறம் இது ஒட்டு மொத்த சமூகத்தின் உடல்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கிறது. மறுபுறம் இதற்கான செலவுகளும் விவசாயிகளைப் பாதிக்கின்றன. இயற்கை விவசாயம் குறித்தான புரிதல்களும் பயன்பாடுகளும் அதிகரிக்க வேண்டும். 


விவசாயிகளும் பணப்பயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் உணவுப்பயர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தாங்களே விளைவித்துக்கொண்டு மீதியை விற்க வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். சந்தையில் தேவை குறைவதால் மக்களுக்கும் பலன் கிடைக்கும். இதைப் படிப்படியாகவாவது தொடங்க வேண்டும்.   


'100 நாள் வேலையால் விவசாயம் பாதிக்கிறது' என்பது ஏற்புடையதல்ல. 100நாள் வேலை வந்த பிறகுதான் விவசாய கூலிகளின் தினசரி கூலி உயர்ந்திருக்கிறது. " அப்போதெல்லாம் சோத்த மட்டும் போட்டோம் நாளெல்லாம் பாடுபட்டாங்க. இப்ப சம்பளம் எல்லாம் கேட்கிறாங்க " என்ற‌ நிலபிரபுத்துவ மனநிலை தான் 100 நாள் வேலையை குறை கூறுவதற்கு காரணம்.  


'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்' என்ற 100 நாள் வேலைத்திட்டம் நிச்சயமாக முந்தைய காங்கிரஸ் அரசின் சாதனைதான். இன்றும் கடைக்கோடி மக்களையும் நேரடியாக சென்று சேரும் ஒரே மத்திய அரசின் திட்டம் இது மட்டும்தான். எல்லோராலும் கைவிடப்பட்டவர்களை , முதியவர்களை இந்த திட்டம் தான் சோறு போட்டு காப்பாற்றுகிறது. மற்றவர்களுக்கு இது உபரி வருமானம். இந்த பணம் முழுவதும் உள்ளூர் சந்தையிலேயே செலவிடப்படுவதால் உள்ளூர் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் திட்டமாகவும் இதனைப் பார்க்கலாம். இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.


100நாள் வேலையால் விவசாயிகள் பாதிக்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும். வெகு சில இடங்களில் 100நாள் வேலைத்திட்டம் விவசாயிகளுடன் இணைந்து செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகள் உள்ளாட்சி அமைப்பில் தங்களுக்கு தேவையான ஆட்களை பதிவு செய்தால் 100 நாள் வேலை செய்பவர்கள் அங்கே அனுப்பப்படுவார்கள். இது தமிழ்நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தால் '100நாள் வேலையால் விவசாயம் பாதிக்கிறது ' என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.


விவசாய விளைபொருட்களின் ( காய்களிகள், பழங்கள், அரிசி, பருப்பு, எண்ணெய்... ) உற்பத்தி குறையும் போது விலை கூடும். உற்பத்தி அதிகமாகும் போது விலை தானாகவே குறைந்துவிடும். ஆனால் ஊடகங்களில் எப்போதும் இவைதான் பெரிதுபடுத்தப்படுகின்றன. இதே சூழலில் ஏறினால் இறங்காத பொருட்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள்தான். இவை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. இரண்டு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய விவசாய பொருட்களின் விலைகளுக்கும், தற்போதைய விவசாய விளைபொருட்களின் விலைகளுக்கும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பெரிய வித்தியாசம் இருக்காது. அதே போல இரண்டு ஆண்டுகளில் ஏற்றம் மட்டுமே கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவன தயாரிப்புகளைக் கவனியுங்கள். எதற்காக நாம் அதிகம் செலவு செய்கிறோம் என்பது தெளிவாகும்.


சோப்புகள், பற்பசை, டீத்தூள், நேப்கீன்கள், மருந்து, மாத்திரைகள், பெட்ரோல், டீசல், எரிவாயு, கார், பைக், கட்டுமான பொருட்கள் என்று பலவும் அதிக விலையேற்றத்தை சந்தித்து இருக்கின்றன. இவற்றை எல்லாம் சத்தமே இல்லாமல் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். காரணம் இவை தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்படுதன் மூலமாக நமது மூளையில் ஏற்றப்பட்டுள்ளன. அதனால் இந்தப் பொருட்களின் விளையேற்றத்தை நாம் கண்டுகொள்வதில்லை. நமது வாழவின் ஒவ்வொரு நிமிடமும் கார்ப்பரேட் நிறுவனங்களால் பணமாக மாற்றப்படுகிறது. 


விவசாயமும், விவசாய விலை பொருட்களின் விற்பனையும் எளிய மக்களின் கைகளில் இருக்கும் வரை மட்டுமே உற்பத்தி சார்ந்த ஏற்ற இறக்கங்கள் பொருட்கள் விலையில் எதிரொலிக்கும். என்று இவை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகளுக்குப் போகிறதோ அன்றிலிருந்து எதற்கும் ஏற்றம் மட்டுமே இருக்கும். இறக்கம் என்பதே இருக்காது. உற்பத்தியே அதிகரித்தாலும் விற்பனை விலை குறையாது. இந்த நிலை உருவாகாமல் தடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் தள்ளிப் போடலாம். எல்லாம் நம் கைகளில் தான்.


மேலும் படிக்க :

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

Tuesday, August 21, 2012

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

நாடோடிகளாக அலைந்து திரிந்த மனித இனம் ஒரே இடத்தில் தங்கி நாகரிக வாழ்க்கை வாழ வழிவகுத்த முதன்மைத் தொழில் தான் "விவசாயம் " . விவசாயத்தின் இன்றைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது .விவசாயம் இவ்வளவு மோசமான நிலையை அடைந்த பிறகும் எந்தவிதமான ஆதரவும் இல்லாமல் நிர்கதியாய் நிற்கிறான் விவசாயி . தொழில்துறைக்கும் ,சேவைத்துறைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் விவசாயத்திற்கு கொடுக்கப்படவில்லை .விளைவு ,விவசாய நிலம் சுருங்கி விட்டது ; விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது ;விலைவாசி உயர்ந்துவிட்டது .
அரசு , தொழில்துறை வளர்ச்சிக்கும் , சேவைத்துறை வளர்ச்சிக்கும் கொடுக்கும் சலுகைகளால் நேரடியாக வருமானத்தைப் பெறுகிறது . ஆனால் ,விவசாயத்திற்கு  கொடுக்கும் சலுகைகளால் அரசிற்கு நேரடியாக வருமானம் கிடைப்பதில்லை . அதனால் விவசாயம் ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது .வளர்ச்சியின் பெயரால் விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன .விவசாயம் செய்யத் தெரிந்த மனிதர்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது . விவசாயம் செய்ய ஏறக்குறைய 60 கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் (உழுதல் ,விதைத்தல் ,நீர் பாய்ச்சுதல் ,களை பறித்தல் ,அறுவடை செய்தல்......) தெரிந்திருக்க வேண்டும் . பரம்பரை பரம்பரையாக சொல்லிக்கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் இன்று பாதி தான் மிச்சம் இருக்கிறது . அதையும் கற்றுக்கொள்ள இன்று ஆட்கள் இல்லை .

விதை இழப்பு அடுத்த காரணம் . தலைமுறை தலைமுறையாக தங்கள் உயிரை விட மேலானதாக பாதுகாத்து வைக்கப்பட்ட பல்வேறு விதமான விதை வகைகளை இழந்துவிட்டோம் . நெல்லில் மட்டும் நூற்றுக்கணக்கான நெல் ரகங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது . இன்று அவற்றில் பத்து ரகங்கள் இருந்தாலே ஆச்சரியம் தான் . நெல்லில் மட்டும் இவ்வளவு இழப்பு மற்ற தானியங்கள் புழக்கத்தில் இல்லாத அளவிற்கு மறைந்து விட்டன . இன்று விவசாயம் செய்ய வேண்டுமானால் விதையை அங்காடியில் தான் வாங்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது . பசுமைப் புரட்சியின் விளைவு இது .

பாரம்பரிய தானிய வகைகள் அழிந்து போக பசுமைப்புரட்சி தான் முக்கிய காரணம் . மரபு விதைகளை அழித்தது, மகசூல் அதிகரிக்கச் செய்தல் என்ற பெயரில் மீண்டும் முளைக்காத கலப்பின விதைகளை அறிமுகப்படுத்தி மண்ணின் வளத்தைக் கெடுத்தது , விதவிதமான பூச்சி மருந்துகள் மூலம் மண்ணை நஞ்சாக்கியது ,பயிர்களுக்கும் ,மனிதர்களுக்கும் விதவிதமான நோய்களை உருவாக்கியது ,சுயசார்பு  வேளாண்மையை அழித்தது , விவசாயத்தை வணிகம் சார்ந்ததாக மாற்றியது  இவைதான் பசுமைப் புரட்சியின் சாதனை என்பது .  அன்றைய சூழலைச் சமாளிக்க உதவிய பசுமைப்புரட்சி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது .

தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்தவர்களின் இன்றைய தலைமுறை விவசாயம் செய்யவில்லை ;வேறு வேலைகளைத் தேடிக்கொண்டு நகர்புறங்களுக்குச் சென்று விட்டனர் . விவசாயம் செய்வது என்பது சமூகத்தில் மிகவும் மதிப்புக் குறைந்த தொழிலாக மாறிவிட்டது .தங்கள் குழந்தை  எதிர்காலத்தில் ஒரு விவசாயியாக வர வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை . ஏன் ஒரு விவசாயியே தன் குழந்தை விவசாயம் செய்வதை விரும்பவில்லை .காரணம் , விவசாயத்தைப் பாதித்துள்ள பல்வேறு விதமான காரணிகள் .

விவசாயம் தொடர்ந்து செய்வதால் ஏற்படும் வருவாய் இழப்பு .தொடர்ந்து விவசாயம் செய்ய தடையாக இருக்கிறது . கடந்த வாரம் ஒரு விவசாயி சொன்னார், " கடந்த வருடம் மட்டும் 3 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது . விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை .ஆட்கள் கிடைத்தாலும் 150 ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் வேலையாவதில்லை ,அதனால் இந்த வருடம் எதுவும் பெருசா பண்ணல .இருக்கும் இடங்களில் தென்னை மற்றும் நெல்லி மரங்களை நட்டுவிட்டேன் .விவசாயத்தை விட மனசில்லை ஆனாலும் என்ன செய்ய ,மகன்கள் வெளியூரில் தங்கிவிட்டனர்,பாடுபட ஆள் இல்லை  " .இன்றைய நிலை இது தான் .

காலநிலை மாற்றங்களால் சரியான நேரத்தில் மழை பெய்வதில்லை . உதாரணமாக  ஆடி மாதத்தில் மழை பெய்யும் ,எதாவது விதைக்கலாம் என்று காத்து இருந்த வானம் பார்த்த பூமிக்காரர்கள் ,மழை பெய்யாததால் ஏமாந்து போயினர் . மிதமிஞ்சிய வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது .பயிர் அறுவடை நேரத்தில் பெய்யும் மழை விவசாயியை கடனாளியாக்குகிறது . கிணற்றில் நீர் அதிகம் உள்ள நிலங்களில் விவசாயம் பார்க்க ஆட்கள் இல்லை . மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் விளைவாக விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை .

விவசாயத்தில் மட்டுமல்லாமல் ,எந்த வேலையிலும் உடலுழைப்பு சார்ந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை . எல்லோரும் வியர்வை சிந்தாமல் சொகுசாக வாழ விரும்புகிறோம் . அதானால் தான் இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வட இந்தியர்கள் ,உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் மிகவும் குறைவான சம்பளத்திற்கு அமர்த்தப்படுகின்றனர் .நாம் அதிக உடலுழைப்பு இல்லாமல் அதிகமாக உண்டு மருத்துவமனைகளின் தயவில் உயிர் வாழ்கிறோம் .

நகரமயமாக்கலின் விளைவாக விளைநிலங்கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றன . அதிக பணத்தின் மூலம் விவசாய நிலங்கள் விலைபேசப்பட்டு வாங்கப்படுகின்றன . அவை பிளாட் போட்டு கூவி கூவி விற்கப்படுகின்றன .விவசாய நிலமாக இருந்ததில் தான்  இன்று புதிதாக கல்வி நிலையங்கள் , தொழிற்சாலைகள் ,வீடுகள் கட்டப்படுகின்றன . எந்தவிதமான புதிய கட்டுமானமும் சுற்றுச்சூழலை பெருமளவில் பாதிக்கிறது . மணல் ஆற்றை நாசப்படுத்தி எடுக்கப்படுகிறது . கற்கள்,ஜல்லிகள் பாறையை அல்லது மலையை உடைத்து எடுக்கப்படுகின்றன .செங்கல் உருவாக்க செம்மண் விவசாய நிலத்திலிருந்து எடுக்கப்படுகிறது ;செங்கலைச் சூடு பண்ண நிறைய மரங்கள் வெட்டி எரிக்கப்படுகின்றன .

கட்டுமானத்திற்கு தேவையான தண்ணீர் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவத்தின் மூலமாக பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது .
தமிழகத்தின் எந்தப்பகுதியிலும் எப்போது வேண்டுமானாலும் இனி நிலநடுக்கம் வரலாம் ;தயாராக இருங்கள்.எந்தப்புதிய கட்டுமானமும் சுற்றுச்சூழலை நேரடியாகவும் ,விவசாயத்தை மறைமுகமாகவும் பாதிக்கிறது .அதனால் ,புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட நினைக்காத அனைவரும் பூவுலகின் நண்பர்கள் தான் . நம்ம சம்பாதிக்கிற பணத்தை வச்சு நிலத்தை பார்க்கத்தான் முடியும் ,வாங்க முடியாதுனு நினைக்கிறீங்களா ,சரி விடுங்க அதுவும் நல்லதுக்குத்தான் . நாமெல்லாம் பூவுலகின் நண்பர்கள் .

விவசாயம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் ,விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை . விவசாயப் பொருட்களுக்கு நிலையான விலை கிடைத்திருந்தால் விவசாயம் இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்து இருக்காது . விவசாயிக்கு பொருளை விற்பதற்கு பெரிய சந்தை கிடைப்பதில்லை . கூடவோ குறைச்சலோ உள்ளூர் சந்தையில் மட்டுமே பொருளை விற்க முடிகிறது .எப்படிப் பார்த்தாலும் விவசாயிக்கு குறைந்த அளவே லாபம் கிடைக்கிறது ,தரகர்களும் ,பெரிய வியாபாரிகளுமே அதிக லாபம் அடைகின்றனர் .

" உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது " என்ற பழமொழி இன்றைக்கும் மிகச் சரியாக பொருந்தும் . விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போனால் விவசாயி கடனாளி ஆகிறான் . மீள முடியாத கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது .1997 பிறகு மட்டும் 2,20,000 கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் .நாமெல்லாம் மறைமுக குற்றவாளிகள் .தூக்குத் தண்டனையை தடை செய்ய எத்தனையோ பேர் போராடுகிறார்கள் . விவசாயிகளுக்காக போராடக் கூடிய  ஆட்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் .  விவசாய கடன் தள்ளுபடி என்பதெல்லாம் கண்துடைப்பு . விவசாய மானியங்கள் விவசாயிக்குக் கிடைப்பதற்குப் பதிலாக ரசாயன உர நிறுவனங்களுக்கும் , பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும் கிடைக்கிறது . எந்த விதமான மானியங்களும் கிடைக்காத காரணத்தால் தான் இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன .

விலையேற்றம் ,சமீப காலமாக எல்லோரும் உணரும் விசயம் . விவசாயம் அதிகளவில் பாதிக்கப்பட்டதால் தான் விவசாயப் பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துவிட்டது . விவசாய நிலங்கள் அழிந்து வருவதை தினமும் பார்த்து வருகிறோம் .கடந்த ஆண்டு நெல் உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருந்தும் தற்போது அரிசி விலை எதனால் பெரிய அளவில் உயர்ந்தது . கிரானைட் குவாரிகளில் சோதனை நடத்தியது போல தனியாருக்குச் சொந்தமான அரிசி சேமிப்புக் கிடங்குகளில் சோதனை நடத்தினால் என்ன ? அரசிற்கு வருவாயும் ,ஊடகங்களின் பசிக்குத் தீனியும் கிடைக்கும் .பதுக்கல் திடீர் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது . அரசால் பதுக்கல் கண்காணிக்கப்பட வேண்டும் . அனைத்து விவசாயப் பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடிய சூழ்நிலை வந்தால் விலையேற்றம் இன்னும் அதிகமாகும் .நிலைமை நீடித்தால் உணவிற்கான உள்நாட்டுப்போர் உண்டானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை .

விவசாயத்திற்கு எதாவது செய்ய நினைத்தால் ,முதலில் விளைபொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் . எந்தப் பகுதியில் எந்தப்பொருள் அதிகம் விளைகிறதோ அங்கு அந்தப் பொருளைச் சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்குகள் கட்ட வேண்டும் .தன்னிறைவு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .விவசாயி ,தன்னால் விளைவிக்கக்கூடிய விவசாயப் பொருட்களை தானே உற்பத்தி செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் . அப்படி ஒரு சூழல் உருவானால் சந்தையில் பொருட்களின் தேவை கணிசமான அளவு குறையும் ;விலைவாசியும் கட்டுக்குள் இருக்கும் .

 மண்ணின் வளத்தை அதிகப்படுத்த தொடர்ந்து ஒரே பயிரை விளைவிக்காமல் பயிர் சுழற்சி முறையை ஊக்கப்படுத்த வேண்டும் . அரிசி ,கோதுமை மற்றும் கரும்பை மட்டும் கொள்முதல் செய்யாமல் அனைத்து தானிய வகைகளையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் .ரேசன் கடைகளில் நெல் ,கோதுமை ,சர்க்கரை மட்டும் விநியோகிக்காமல் மற்ற தானிய வகைகளையும் விநியோகம் செய்யலாம் . 

இயற்கை விவசாயத்திற்கு மானியம் வழங்க வேண்டும் . இயற்கை விவசாயத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . உணவே மருந்தாக இருந்த நிலை ,மருந்தே உணவாக மாறியதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளும் , ரசாயன உரங்கலுமே முக்கிய காரணம் .மிகக்கொடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று தெரிந்த பிறகும் " என்டோசல்பான் " பூச்சிக்கொல்லி மருந்தை தடை செய்ய மத்திய அரசு யோசிக்கிறது .நம் உடலுக்கு உகந்த நம் பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும் . துரித உணவுகள் உண்டாக்கும் தீமைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் மேற்கத்திய நாடுகளில் இருந்தே வெளிவருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

சமூகத்தில் விவசாயத்திற்கு மரியாதை கிடைக்க வேண்டும் . " என் மகன்  ஒரு விவசாயி ஆக வர விரும்புகிறேன் " என்று பெற்றோர் நினைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் .விவசாயம் செய்ய நிலம் ? வீட்டு மொட்டை மாடிகளிலும் ,வீட்டிற்கு அடியிலும் விவசாயம் நடைபெறலாம் .உணவு ,தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருளாகக் கூட மாறலாம் .மாத்திரைகளை விழுங்குவதன் மூலம் உடலிற்கு தேவைப்படும் சக்தியைப் பெறக்கூடிய நிலை உண்டாகலாம் .இந்நிலை வராமல் தடுக்க இருக்கும் விவசாய நிலங்களையாவது காப்பாற்ற வேண்டும் .

 நிலையான லாபம் தரும் தொழிலாக விவசாயத்தை மாற்ற வேண்டும் .இந்தியா ஒரே மாதிரியான நிலப்பரப்பும் ,காலநிலையும் கொண்ட தேசமல்ல .ஒரே மாதிரியான நிலைப்பாடுகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பொருந்தாது . ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் அவசியம் . நில மற்றும் நீர் பரப்புகள் வணிக நோக்கத்துடன் படிப்படியாக அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் .சுற்றியுள்ள சூழ்நிலைகள் உகந்ததாக இருந்தால் மட்டுமே நம்மால் விவசாயம் செய்ய முடியும் .

ஊடகங்கள் விவசாயத்தை தொடர்ந்து புறக்கணிக்கின்றன . 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயத்தை நம்பியுள்ள சூழலில் இதுவரை எத்தனை திரைப்படங்கள் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன . தொலைக்காட்சி நிறுவனங்களும் விவசாயத்தைக் கண்டுகொள்வதில்லை .ஏன் ஒரு விவசாயியின் உண்மை நிலையை ஒரு நெடுந்தொடராக எடுத்திருக்கலாமே  .ஏன் எடுக்கவில்லை ?

சமூகத்தின் பிரதிபளிப்பு தான் திரைப்படம் என்றால் 100 க்கு 70 திரைப்படங்கள் விவசாயம் சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியும் . விவசாயம் இவ்வளவு பாதிப்புக்குள்ளான பிறகும் விவசாயியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு திரைப்படம் கூட எடுக்கப்படவில்லையே .அப்புறம் நீங்கள் என்ன பெரிய படைப்பாளிகள் ? எந்தவொரு சமூக நிகழ்வையும் சுவாரசியமாக அதே நேரம் உண்மையாகவும் ,அழுத்தமாகவும் பதிவு செய்பவர்கள் மட்டுமே உண்மையான படைப்பாளிகளாக இருக்க முடியும் .அவ்வப்போது சில சிறுகதைகளும் ,நாவல்களும் மட்டுமே விவசாயியின் உணர்வுகளை பதிவு செய்கின்றன . 

இன்று எல்லாம் வணிகம் தான் .விவசாயமும் வணிகம் சார்ந்ததாக மாறி எவ்வளவோ நாட்களாகி விட்டது . விவசாயிகளும் பணப்பயிர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை உருவாக்கி விட்டோம் . விவசாயத்தை வணிகத்தின் பிடியிலிருந்து மீட்டு உணவுப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை  உருவாக்க வேண்டும் .

விவசாயத்தை நோக்கி ஒரு நாள் எல்லோரும் உறுதியாக திரும்பி வருவார்கள் .இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது . எல்லாம் ஒரு வட்டம் தான் . 

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு ...!

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

ஐந்திணை சுற்றுச்சூழல் விழா 2012 !

..................................................................................................................................................


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms