Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, January 3, 2026

மண்டோவும் கட்டக்கும் !

 


நந்திதாதாஸ் இயக்கியிருக்கும் திரைப்படம், மண்டோ. சதக் ஹசன் மண்டோ என்ற பெயர் மட்டுமே தெரிந்திருந்த நிலையில் அவரின் வாழ்வு பற்றிய புரிதலை இத்திரைப்படம் உருவாக்கியிருக்கிறது. மண்டோவின் கலை சார்ந்த உணர்வுகளை நமக்கு கடத்த முயன்று, அதில் வெற்றியும் பெற்று விடுகிறார், இயக்குநர். பம்பாய் என்ற நகரத்திற்கும் மண்டோவிற்கும் உள்ள பிணைப்பு அழுத்தமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பம்பாய் நகரம் பிடித்திருந்த போதிலும் மதவாதத்தால் வெளியேற வேண்டிய நிலை. லாகூரில் வசித்தாலும் பம்பாயின் நினைவுகளே அவரை ஆக்கிரமிக்கின்றன. 


" என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது " என்கிறார், சதத் ஹசன் மண்ட்டோ. இதன் மூலம் படைப்புகள் சார்ந்த தெளிவான பார்வை அவருக்கு இருந்ததை அறிய முடிகிறது. 


இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே இவரைப் போன்ற மனிதர் ஒருவர் அறிமுகம் ஆனாரே அவர் யாராக இருக்கும் என்ற குழப்பம் இருந்தது. திரைப்படம் முடிந்த பிறகு தான் அந்த ஆளுமை நினைவிற்கு வந்தார். அவர், ரித்விக் கட்டக். படச்சுருள் வெளியிட்ட ரித்விக் கட்டக் பற்றிய சிறப்பிதழில் கட்டக் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. கட்டக் பற்றி எழுத்து மொழியில் வாசித்ததை , திரைமொழியில் பார்த்தது போலவே இருந்தது மண்டோ திரைப்படம். இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமைகள்.


இருவருமே மதவாதம் உருவாக்கிய பிரிவினைகளால் பெரிதும் பாதிப்புக்குள்ளானவர்கள்.இருவரின் படைப்புகளிலும் பிரிவினையின் தாக்கங்கள் அதிகமாகவே இருக்கும். இருவருமே மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதற்காக சிகிச்சையும் எடுத்துக் கொண்டவர்கள். இருவராலுமே குடும்பத்தை சரிவர கவனிக்க முடியவில்லை. இருவருக்கும் அவர்களது நண்பர்களே அவர்களின் படைப்பாளுமையை அடையாளம் கண்டு ஆதரித்தார்கள். படைப்பு மனமே இருவரையும் ஆட்டுவித்திருக்கிறது. இருவருமே படைப்பிற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள். மண்டோ எழுத்தாளர், கட்டக் திரைப்பட இயக்குநர் அவ்வளவு தான் வித்தியாசம். இருவருமே நல்ல படைப்பாளிகள். இருவருமே உன்னத கலைஞர்கள்.

( 2019 )


மேலும் படிக்க :


Thursday, January 1, 2026

சாய்ராட் - கலையின் அரசியல் !


மக்களையும் மக்களுக்கான அரசியலையும் காட்சிகளின் வழியே மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் , இயக்குநர் , நாகராஜ் மஞ்சுளே. ஒவ்வொரு காட்சியிலும் சமூகத்தின் முகம் அப்பட்டமாக காட்டப்படுகிறது. முதல் பாதியில் காட்டப்படும் காதல் காட்சிகள் அவ்வளவு அழகியலுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் ஸ்லோமோஷன் காட்சிகள் தனித்து நிற்கின்றன. காதல் காட்சிகளை எவ்வளவு முறை திரைகளில் பார்த்தாலும் நமக்கு திகட்டுவதேயில்லை. இத்திரைப்படத்தின் காதல் காட்சிகளும் அப்படி தான். பார்த்துக் கொண்டே இருக்கலாம். கதாநாயகி ரிங்கு , இந்தத் திரைப்படத்தில் பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார். அவரது உடல்மொழியும் அற்புதம். பாடல்களும் ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காதலுக்கு எதிரான சாதிய வெறி அழுத்தமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் ;வீட்டை விட்டு துரத்துங்கள். பரவாயில்லை. ஆனால் சாதி மாறி காதலித்ததால் எவ்வளவு காலம் ஆனாலும் அவர்களை கொன்றால் தான் வெறி அடங்கும் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதுபோன்ற திரைப்படங்கள் சாதியத்திற்கு எதிராக எதிர்மறையில் இருந்தே குரல் கொடுக்கிறது. அப்படியில்லாமல் சாதிய படிநிலைகளைத் தாண்டி காதல் செய்பவர்களை இரு குடும்பமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நேர்மறையில் காட்சிப்படுத்தப்படும் படங்களுக்கும் தேவையிருக்கிறது.

காதல் என்பது இயல்பான ஒன்று , அந்தக் காதலுக்கு சாதி தடையில்லை என்பதை பொருத்தமான காட்சிகளின் மூலம் வெளிப்படுத்தலாம். ஒருவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு பெண்ணுக்கு பெற்றோர் பார்த்து சொந்த சாதிக்குள் மணமுடித்து வைக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுவது போலவும் , மற்றொரு பெண் காதலித்து சாதி மாறி திருமணம் செய்து கொண்டு நன்றாக இருப்பது போலவும் காட்சிப்படுத்தினால் ஒரு நேர்மறையான மனமாற்றம் நிகழுமே.

சாதிவெறியை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்கள் இப்போதும் எடுக்கப்படும் சூழலில் சாதிவெறிக்கு எதிரான படங்களின் தேவையும் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் இந்த சாய்ராட் முக்கியத்துவம் பெறுகிறது. சகமனிதனை மனிதனாக மதிக்க கற்றுத் தருவது தான் கலையின் தேவை. கலைஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.
கலை  மக்களுக்கானது. அழகியல் மட்டும் கலை அல்ல . அழகியலுடன் அரசியலும் பேசும் கலை தான் முழுமையானது. சாய்ராட் ஒரு முழுமையான கலைப்படைப்பு.
காதல் என்பது சலிக்காத ஒன்று.  இதுவரை எத்தனையோ விதமான காதலைத் திரையில் பார்த்திருப்போம். மீண்டும் திரையில் காதலைப் பார்க்கும் போதும் நாம் சலிப்படைவதேயில்லை. அதிலும் இத்திரைப்படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதம். கதாநாயகி ரிங்குவின் முகபாவங்களும் , வசனங்கள் உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகு. ரிங்குவின் நடிப்பு இத்திரைப்படத்திற்கு பெரிய பலம்.
ஒவ்வொரு காட்சியிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அப்பட்டமாக படம்பிடிக்கப்பட்டுள்ளன.காதல் வீட்டில் தெரிந்த பிறகு கடைசிவரை ஒருவிதமான பதைபதைப்பு இருந்து கொண்டே இருக்கிறது. படத்தின் இறுதிக்காட்சியில் அந்தக் குழந்தையை பக்கத்து வீட்டுக்கார பெண் அழைத்துச் செல்லும் போதே படத்தின் முடிவு தெரிந்து விடுகிறது. வீட்டின் வாசலில் போடப்பட்ட முழுமைடையாத கோலத்தைப் போல அவர்களின் வாழ்வும் முழுமை பெறவில்லை.
நமது இந்திய தேசத்தில்  படிப்பறிவு சதவீதம் அதிகரித்து கொண்டிருக்கும் விதத்தில் சாதியப்பாகுபாடுகள் குறையவில்லை. பல்வேறுவிதமான அதிகாரங்கள் மக்களைக் கட்டுப்படுத்தும் தேசத்தில் போராட்டங்களின் மூலமும் , கலையின் மூலமுமே  நமது எதிப்பை வெளிப்படுத்த முடியும். நாகராஜ் மஞ்சுளே , சாதியத்தின் மீதான கோபத்தை , எதிப்பை வலுவாக திரைமொழியில் பதிவு செய்திருக்கிறார்.
சாதியம் ஒழியட்டும். சகமனிதனை மனிதனாக மதிப்பதை நோக்கி நம் சமூகம் நகர்வதற்கான ஒரு படியை இத்திரைப்படம் எடுத்து வைத்திருக்கிறது.
மேலும் படிக்க :

AMAR SINGH CHAMKILA ❤️❤️❤️

Thursday, October 30, 2025

மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பிதழ்!


நாயகத் துதிபாடல் தான் தமிழ் சமூகத்தை தொடர்ந்து சீரழித்து வருகிறது. " ஊருக்கு ஒரு லீடர் , ஆளுக்கொரு கொள்கை , அவனவனுக்கு ஒரு டசன் பட்டினி பட்டாளம் " என்ற 'இரத்தக்கண்ணீர் ' -ல் இடம்பெற்ற எம்.ஆர்.ராதாவின் வசனம் இன்றும் பொருந்துகிறது. சினிமா மட்டுமல்ல அரசியல், ஆன்மீகத்திலும் இதே நிலை தான். ஒரு குறிப்பிட்ட மனிதரை தலைவராக ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்காக அந்தத் தலைவர் எது சொன்னாலும் சரி என்று முட்டுக் கொடுப்பது தான் ஆபத்தானது. மனிதர்கள் தங்களின் செயல்கள் மூலமே அடையாளம் காணப்பட வேண்டும். படைப்புகளின் மூலமே படைப்பாளியை கண்டடைய வேண்டும். இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது செயல்களையும் , படைப்புகளையும் தானே ஒழிய மனிதர்களையும், படைப்பாளிகளையும் அல்ல. ஒரு நல்ல செயலை செய்ததற்காக அந்த மனிதர் செய்யும் எல்லா செயல்களையும் ஏற்றுக்கொள்வதும் , ஒரு நல்ல படைப்பைக் கொடுத்ததற்காக அந்த படைப்பாளியின் அனைத்து படைப்புகளையும் கொண்டாடுவதும் முட்டாள்தனம். 


'பாலிடிக்ஷ் தெரியாத பயலுகளெல்லாம் பாலிடிக்ஷ் பத்தி பேசறானுக ' என்ற எம்.ஆர்.ராதா தான் மீண்டும் நினைவிற்கு வருகிறார். வாரத்திற்கு ஒரு அரசியல் தலைவர் தமிழகத்தில் உதயமாகிறார். அதிலும் இந்த ரஜினி , கமல் பேசுவதெல்லாம் மகா மட்டமாக இருக்கிறது. பெரியாரின் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக சொல்லும் திமுக , திக வையும் விமர்சிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அங்கேயும் நாயகத் துதிபாடல் தான் இருக்கிறது. அரசியல் மக்களுக்கானது. மக்களுக்கான அரசியல் மாநிலத்திலும் இல்லை , மத்தியிலும் இல்லை. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் மக்களுக்கான அரசியலை தொடர்ந்து பேசி வருவது இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே. தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமானதற்கு எம்.ஜி.ஆர். தான் காரணம் என்கிறார்கள். எந்த வகையில் பாதிப்பை உருவாக்கினார் என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆரின் அதிமுக-வோடு கூட்டணி அமைத்தது தான் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமானதற்கு காரணமாக இருக்கலாம். தற்போதும் தமிழகத்தில் மக்களின் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் இயக்கங்களாக இடதுசாரி இயக்கங்கள் தான் உள்ளன. மக்களோடு மக்களாகத் தான் இருக்கிறார்கள் , மக்களுக்காகத்தான் இயக்கங்கள் நடத்துகிறார்கள், மக்களுக்காகத்தான் போராடுகிறார்கள் , ஆனால் அரசியல் நிலைப்பாடு என்ற ஒன்றை எடுக்கும்போது மட்டும் மக்களின் மனநிலைக்கு எதிராக எடுக்கிறார்கள். அது தான் மக்களை ஒட்டவிடாமல் செய்கிறது. 


காலத்துக்கேற்ற மாற்றங்கள் இடதுசாரி இயக்கங்களில் நிகழ வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவின் இடதுசாரி இயக்கங்கள் தங்களின் வேற்றுமைகளை களைந்து ஒன்றிணைய முன் வர வேண்டும். உலகமயமாக்கலும் , வலதுசாரி இயக்கங்களும் வலுவடைந்து வரும் சூழலில் இடதுசாரி இயக்கங்களும் தங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழகத்தில் ஒரு இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் இருப்பது இடதுசாரி கொள்கைகளை ஆதரிக்கும் மக்களுக்கு அவமானமாக இருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான தற்கால உதாரணம் , கேரளம். அவ்வளவு ஏன் தமிழகத்தில் கடந்த முறை இடதுசாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தற்போது வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பிர்களாக இருக்கும் தொகுதி மக்களைக் கேட்டாலே வித்தியாசம் தெரிந்துவிடும். 


இந்த சூழலில் இருந்து தான் வெளிவந்திருக்கும் 'மேற்குத் தொடர்ச்சி மலை' திரைப்படத்தின் முக்கியத்துவத்தை பேச வேண்டியிருக்கிறது. முதலில் இத்திரைப்படத்திற்கு சிறப்பிதழ் கொண்டு வந்த படச்சுருளுக்கு நன்றி. இத்திரைப்படத்தை பார்த்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் சலனம் உருவாகியிருக்கும். எளிய மக்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பு மாறாமல் பதிவு செய்வது அவ்வளவு எளிதானதல்ல. தனது திட்டமிடப்பட்ட உழைப்பால் இதை சாத்தியமாக்கி இருக்கிறார் , லெனின் பாரதி. இந்த இதழில் இடம்பெற்ற அனைத்து கட்டுரைகளும் இந்தத் திரைப்படம் அவர்களுக்கு உருவாக்கிய மனப்பதிவுகளாக அமைந்திருந்தன. இந்த இதழில் இடம்பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தில் நேரடியாக பங்குபெற்ற ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் நேர்காணலும் , இயக்குனர் லெனின் பாரதியின் விரிவான நேர்காணலும் முக்கியமானதாகிறது.


வசனம் எழுதிய ராசி தங்கதுரை மற்றும் படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் அவர்களின் மனநிலையையும் பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் இத்திரைப்படத்தின் வசனம் மிகவும் முக்கியமான ஒன்று. படத்தொகுப்பு எனும் போது லெனின் பாரதி சொன்னது போல 99 நிமிடங்கள், இரண்டு மணி நேரம் மற்றும் 3 மணி 20 நிமிடங்கள் என மூன்று அளவுகளில் படத்தின் தன்மை மாறாமல் சுருக்க வேண்டிய சவால்கள் குறித்தும் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். எந்த இதழும் அதற்கான பக்கங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இதை குறையாகவும் பார்க்க வேண்டியதில்லை. 


லெனின் பாரதி இத்திரைப்படத்தை உருவாக்கிய விதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இங்கே நிறைய கதைகள் அறைக்குள்ளேயே எழுதப்பட்டு , அரங்குகளிலேயே தான் படமாக்கப்படுகின்றன. அப்படியே கதைக்களத்தில் எடுத்தாலும் அம்மக்களின் உணர்வுகள் பிரதிபலிக்கப்படுவதில்லை. இதற்கு முன்பும், சமீப காலங்களில் கூட மலையையும் , மலையை ஒட்டிய நிலப்பரப்பையும் கதைக்களமாக வைத்து பல படங்கள் வெளிவந்திருந்தாலும் அவை இயல்பாகவும் இல்லை, அம்மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் இல்லை. 


லெனின் பாரதி , இத்திரைப்பட உருவாக்கத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொன்றையும் திட்டமிட்டே செயல்பட்டதால் அவருக்கு இது சாத்தியமாகியுள்ளது. இத்திரைப்படத்தின் வசனங்களே இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றாலும் இந்த திரைப்படத்தின் பல சொல்லாடல்கள் எங்கள் பகுதியிலும் உண்டு. ஒளிப்பதிவு நமது கவனத்தை மாற்றாமல் பார்த்து கொள்கிறது. மற்ற படங்களில் பின்னணி இசை மட்டுமே செய்யும் வேலையை இப்படத்தில் ஒளிப்பதிவும் இசையுடன் சேர்ந்து செய்திருக்கிறது.இதுவரை பார்த்த தமிழ் திரைப்படங்களில் 'சிவப்பு மல்லி' திரைப்படத்திற்குப் பிறகு கம்யூனிச கொடிகளை திரையில் பார்த்த திரைப்படமாக இதுவே இருக்கிறது. இடதுசாரி சிந்தனையுடன் படமெடுக்கவே இங்கே ஆட்கள் குறைவு. தங்கள் நிலப்பரப்பை தாண்டி வாழ்பவர்களின் நிலையை இன்னமும் தமிழ் சினிமா வெளிப்படுத்தவில்லை. விவசாயிகளின் வாழ்க்கையையும் , மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் அவர்களின் நிலையிலிருந்து அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இன்னமும் திரைப்படங்கள் வெளிவரவில்லை. ஆனால் தமிழக மக்கட்தொகையில் விவசாயிகளும் , மீனவர்களுமே அதிகம். இப்படி ' மேற்குத் தொடர்ச்சி மலை ' திரைப்படத்தை அது முன் வைக்கும் அரசியலைத் தாண்டி பேசுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. 


'மேற்குத் தொடர்ச்சி மலை ' திரைப்படம் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. படத்தின் பின் பகுதியில் ஏன் கழிவிறக்கத்தை உருவாக்க வேண்டும். ஈரானிய திரைப்படங்கள் எளிய மக்களின் வாழ்க்கையைத் தான் அதிகமும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் அங்கே எளிய மனிதர்களுக்கே உரித்தான பாசாங்கற்ற அன்பு தான் முன்னிலைப்படுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அன்பிற்கு குறைவில்லை தான். ஆனால் கழிவிறக்க மனநிலை உருவாகாமல் தடுத்திருந்திருக்கலாம். இந்த வாழ்வு தரும் எவ்வளவு பெரிய இழப்புகளையும் அநாயசமாக கடந்து செல்வதுடன் , அந்த வாழ்க்கையை கொண்டாடுபவர்கள் தான் எளிய மனிதர்கள். அப்படியான மனநிலை தான் அவர்களின் நீடித்த மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. அந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் உலகமயமாக்கல் பாதிக்கவே செய்திருக்கிறது ,அதை மறுப்பதற்கில்லை. நிலத்தை அடைவதை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்று காண்பித்து இருக்கலாம். 


இந்த பூமியின் ஒவ்வொரு நிமிடமும் உழைக்கும் மக்களின் உழைப்பால் தான் நகருகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் உழைக்கும் மக்களின் நிலை இன்னமும் மேம்படவில்லை. தொழிற்சங்கங்கள் வலுவிழந்தது தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அரசு வேலை செய்பவர்களுக்கு இருப்பது போன்ற வலிமையான தொழிற்சங்கங்கள் மற்ற உழைக்கும் மக்களுக்கு இல்லை. அமைப்பு சார்ந்த தொழிற்சங்களாலேயே இன்றைய முதலாளிகளையும் , அரசையும் எதிர்கொள்ள முடியவில்லை. சமீபத்திய யமாகா போராட்டம் ஒரு உதாரணம். தங்களின் உழைப்பை கூலியாக பெறும் ஒவ்வொருவரையும் அமைப்பிற்குள் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. அவர்களின் பணி பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். தற்போது அரசு வேலையில் மட்டுமே பணிப்பாதுகாப்பு இருக்கிறது.அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் ஏறக்குறைய 20,000 என இருக்கிறது. மற்றவர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியமாக 10,000 என்ற அளவிற்கு கூட இன்னமும் உயரவில்லை. சம வேலைக்கு சம ஊதியம் என்பது இன்னமும் சாத்தியமாகவில்லை. விலைவாசி என்பது எல்லோருக்கும் ஒன்று தானே. உழைக்கும் மக்கள் விசயத்தில் கேரளமே முன்னோடி மாநிலமாக இருக்கிறது. 


வணிக நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் இன்னும் பல இடங்களில் பணியாற்றுபவர்கள் வேலை இல்லாத போதும் கூட உட்கார்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. திரைப்படங்களும் , சின்னத்திரையில் ஒளிபரப்படும் தொடர்களிலும் ஆண்டான் அடிமை மனநிலையையே பிரதிபலிக்கிறார்கள். வர்க்க பேதங்களை கேள்வி கேட்பதற்கு பதலாக அவை இயல்பானதாக சித்தரிக்கப்படுகின்றன. சாலையில் செல்லும் போது, சரக்கு வாகனங்களில், ஏற்றப்பட்ட சரக்குகளின் மீதமர்ந்து பயணிப்பவர்களையும், கூலி வேலைக்காக சேர் ஆட்டோவிலோ, சரக்கு வாகனத்திலோ நெருக்கிப்பிடித்து செல்லும் உழைக்கும் மக்களையும் காணும் போது மனம் குற்றவுணர்வடைகிறது. இப்படி இந்த திரைப்படம் உருவாக்கிய சலனங்கள் அதிகம். லெனின் பாரதி , இத்திரைப்படத்தை திரையரங்கோடு விட்டுவிடாமல் வேறு தளங்களுக்கும், பள்ளி , கல்லூரிகளுக்கும் கொண்டு செல்ல இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அடுத்து வெளிவர இருக்கும் 3மணி 20 நிமிடங்கள் வடிவத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். 


மேற்குத் தொடர்ச்சி மலை படக்குழுவிற்கு வாழ்த்துகள் !

30-10-2018 

மேலும் படிக்க :

ஜமா - கலையின் கலை ! 

அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !

 


Wednesday, July 30, 2025

மதிலுகள் ❤️

 


எந்த இலக்கிய படைப்பாக இருந்தாலும் அதைத் திரைப்படமாக எடுப்பது சவாலான விசயம். மம்முட்டியும் ,அடூர் கோபாலகிருஷ்ணனும் இணைந்து இந்தச் சவாலில் வென்றிருக்கிறார்கள், 1990ல். உண்மையிலேயே இந்தத் திரைப்படத்தைக் காண்பது அலாதியான அனுபவம். 'மதிலுகள்' என்ற இந்த வைக்கம் முகமது பஷீரின் குறுநாவலை நீங்கள் வாசித்து இருந்தாலும், வாசிக்கவில்லை என்றாலும் கூட இந்தத் திரைப்படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். 


படமாக்கப்பட்ட விதம் அற்புதம். இப்படி ஒரு சிறை இருந்தால் நாமும் சென்று அங்கு தங்கி விடலாம் என தோன்றும் அளவிற்கு காட்சிகளை படம்பிடித்து இருக்கிறார் இயக்குநர், அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்கள். பஷீரின் எழுத்துகள் பாசாங்கில்லாதவை. சக மனிதர்கள் மீதான அன்புதான் அவரது பேசுபொருள். அப்படிப்பட்ட எழுத்தை திரையில் கொண்டுவருவதற்கு நிறைய உழைக்க வேண்டியிருந்திருக்கும், உழைத்திருக்கிறார்கள். 


மம்முட்டி ஒரு தேர்ந்த நடிகர். எந்த மாதிரியான கதாப்பாத்திரத்திலும் தன்னை பொருத்திக் கொள்ளும் திறமையுடையவர். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களிலும் கூட நாம் இதைக் காண முடியும். பஷீர் எனும் ஆளுமையை திரையில் கொண்டு வர நிறைய மெனகெட்டிருக்கிறார். பஷீராக மட்டுமே திரையில் தெரிய உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. மம்முட்டி இப்போது இந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் கூட திரும்பவும் இப்படியான சூழலில் மீண்டும் நடிக்கவே விரும்புவார். இத்திரைப்படம் படமாக்கப்பட்ட இடம் அவ்வளவு அழகானது.


பஷீர்- நாராயணி பகுதி எல்லாம் கவிதை. நாராயணி குரல் ' எந்தோ.. ' என தொடங்குவது இப்போதுவரை காதில் கேட்கிறது. 2023ல் வெளிவந்த ' மகாராணி ' திரைப்படத்தில் கூட இப்படியான ஒரு பகுதி இருக்கும். ராணி கதாப்பாத்திரத்தின் குரலை மட்டுமே திரைப்படத்தின் இறுதிகாட்சி வரை நம்மால் கேட்க முடியும். இறுதியில் மட்டுமே ராணியின் முகம் தெரியும். ஆனால் நாராயணியின் முகம் இன்று வரை நமக்கு தெரியவே தெரியாது. அந்த ராணி கதாபாத்திரமும் உரையாடலை ' எந்தோ டா..' என்றே தொடங்கும். இந்தக் கதாப்பாத்திரத்திற்கு ' மதிலுகள்- நாராயணி ' ஒரு முன்மாதிரிமாக இருந்திருக்கக்கூடும். சக மனிதர் மீதான நேசத்திற்கு, அன்பிற்கு, காதலுக்கு மதில் கூட தடையாக இல்லை. 


எல்லோரையும் நல்லவர்களாக, எல்லாவற்றிலும் நல்லதை மட்டுமே காணக் கூடியவர்களாக, எதையும் எதிர்கொள்பவர்களாக இருக்கும் வைக்கம் முகமது பஷீர், பிரபஞ்சன் போன்றவர்களின் மனங்கள் நமக்கெல்லாம் வாய்க்க வேண்டும். 


ஒரு மென்மையான திரையனுபவத்திற்கு 'மதிலுகள்' திரைப்படத்தைக் காணலாம். YouTube -ல் காணக்கிடைக்கிறது.

மேலும் படிக்க :

மனிதர்கள் - குற்றமுடைய நெஞ்சு குறுகுறுக்கும் !

மனோரதங்கள் (MANORATHANGAL ) ❤️

Wednesday, July 23, 2025

மனிதர்கள் - குற்றமுடைய நெஞ்சு குறுகுறுக்கும் !


"மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என்ற ஜி.நாகராஜனின் கூற்று எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. அப்படியான மனிதர்களின் சல்லித்தனத்தை இத்திரைப்படம் பேசுகிறது. மதுபோதையால் நிகழும் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஆளும் அரசுகள், குற்றங்கள் எதுவுமே நடக்காதது போலவே நடந்து கொள்கின்றன. மது விற்பதோ , மது குடிப்பதோ குற்றமில்லை. ஆனால் அது இன்னொரு தனி மனிதரை பாதிக்கும் போது குற்றமாகிறது. மது விற்பனையை தீவிரமாக கண்காணிப்பது போலவே அதனால் குற்றங்கள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதும் அரசின் கடமைதான். அப்படியான ஒரு அரசு இன்னும் தமிழ்நாட்டில் அமையவில்லை.


என்னதான் மனிதர்கள் குடும்பமாக, சமூகமாக இயங்கினாலும் சுயநலம் தான் மனிதர்களின் அடையாளம். எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் பிரச்சனை என்று வரும் போது பெரும்பாலும் சுயநலமாகவே சிந்திப்பார்கள்.

அப்படியான நண்பர்கள் மது போதையால் நடந்து கொள்ளும் விதமும் அதனால் உருவாகும் சிக்கல்களும், அவர்களின் சுயநலமான மனநிலையும், சல்லித்தனமும்தான் இந்த ' மனிதர்கள் ' திரைப்படம். 

  

தெரிந்தோ தெரியாமலோ குற்றம் நிகழ்த்தப்பட்ட பிறகு அதிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ளவே மனிதர்கள் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு முன்பு அவர்களது வாழ்வு எப்படி இருந்ததோ அதே வாழ்வை குற்றம் நிகழ்ந்த பிறகும் அடைய விரும்புகிறார்கள். நண்பர்களுக்குள் நிகழும் குற்றமும் அதன் பிறகான அவர்களின் மனநிலையும் திரையில் காட்சிகளாக விரிகின்றன.


Crowd Funding மூலம் இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முதலில் துணிச்சல் வேண்டும். நல்ல முயற்சி. நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தங்களது பணியைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. இரவு நேர கிராமச் சாலைகளையும் விதவிதமான கோணங்களால் அழகாக காண்பித்து இருக்கிறார் , ஒளிப்பதிவாளர். கார் சக்கரங்களை படம் பிடித்த விதமும் அழகு.  இரவில் படம் பிடித்திருந்தாலும் மற்ற காட்சிகளை விட  தொடக்க காட்சியும் இறுதி காட்சியும் ரொம்பவே இருட்டாக இருந்தன. இதைக் கொஞ்சம் கவனத்தில் கொண்டிருக்கலாம். ஒரு வேளை , தொடக்கத்திலும் இறுதியிலும் மனிதர்களின் இன்னும் இருட்டான பக்கங்களைச் சொல்வதால் கூடுதல் இருட்டாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ.


பேச்சு வழக்கும் கதை நிகழும் களமான திண்டுக்கல் பகுதியைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. அதே போல இது தானாக நிகழ்ந்த குற்றமா அல்லது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட குற்றமா? என்ற சந்தேகத்தையும் கடைசி வரை கொண்டு சென்றிருக்கிறார், இயக்குநர், ராம் இந்திரா.


'குற்றத்தை மறைத்தல்' என்ற வகைமையில் இதற்கு முன்பும் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை நகைச்சுவையை முன்வைத்த திரைப்படங்களாகவே இருக்கின்றன. இதே பின்னணியில் ஒரு சீரியஸ் திரைப்படமாக, மனிதர்களின் அக உணர்வுகளை, மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு திரைப்படமாக நாம் ' மனிதர்கள்  ' திரைப்படத்தை அணுகலாம். இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


Aha மற்றும் SunNext OTT தளத்தில் காணக்கிடைக்கிறது.

மேலும் படிக்க:

ஜமா - கலையின் கலை !

AMAR SINGH CHAMKILA !

Tuesday, July 1, 2025

மனோரதங்கள் (Manorathangal ) ❤️


மனதிற்கு நெருக்கமான ஆர்ப்பாட்டமில்லாத தொடர். எழுத்தை திரையில் கொண்டு வருவதென்பது  எப்போதுமே சவாலானது. முதலில் இப்படி ஒரு முயற்சி எடுத்ததே பெரிய விசயம். M.T. வாசுதேவன் அவர்களின் மகளான அஸ்வதி M.T.வாசுதேவனின் 9 கதைகளை தேர்ந்த்தெடுத்து அதில் ஒரு கதையை இயக்கியும் இந்த ஒரு நல்ல தொடரை கொடுத்திருக்கிறார். முதலில் 20 கதைகள் படமாக்குவதாக இருந்து பிறகு 10 ஆக குறைந்து அப்புறம் 9பதில் முடிந்திருக்கிறது. 


M.T.வாசுதேவன் அவர்களின் எழுத்துகளை இதுவரை வாசித்ததில்லை. அவரின் கதைகள் இந்த ' மனோரதங்கள்' மூலமே அறிமுகம். இந்தத் தொடரில் இடம்பெற்ற அவரின் கதைகளை வாசிக்காததால் தானோ என்னவோ இந்தத் தொடரில் எந்தக் குறைகளும் தெரியவில்லை. இதே கதைகளை முன்பே வாசித்தவர்களுக்கு போதாமைகளும், ஏமாற்றங்களும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இம்மாதிரியான முயற்சிகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.


ஏறக்குறைய மலையாள திரையுலகே நடித்தது போல அத்தனை முக்கிய நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். தலைப்பிற்கு ஏற்றார் போல மனித மனங்களே ஒவ்வொரு கதையையும் நகர்த்திச் செல்கின்றன. வெவ்வேறு இசையமைப்பாளர்கள் பங்கெடுத்திருந்தாலும் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இசையை வெகுவாக ரசிக்க முடிந்தது. இந்தத் தொடர் மனதிற்கு நெருக்கமாக அமைந்ததற்கு பின்னணி இசையும் ஒரு காரணம். ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. சிறிய பகுதியோ பெரிய பகுதியோ கதை நடக்கும் கால கட்டத்தை அப்படியே திரையில் கொண்டுவர நிறைய உழைத்திருப்பது நன்றாகவே தெரிந்தது. கலை குழுவினருக்கு வாழ்த்துகள். 


மொத்தத்தில் அமைதியாக ஒரு தொடரை காண விரும்புபவர்கள் இத்தொடரைக் காணலாம். தமிழில் இருந்தாலும் மலையாளத்தில் நீங்கள் பார்த்தால்தான் இன்னும் நெருக்கமாக உணர முடியும்.


இயற்கைக்கு அடுத்து கலை மட்டுமே நமக்கு எல்லாமுமாக இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் நம் மனதை அமைதிப்படுத்துவது ஏதோ ஒரு வடிவத்தில் உள்ள கலை தான். அது எழுத்தாக இருக்கலாம் , இசையாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம், சினிமாவாக இருக்கலாம் 'மனோரதங்கள்' - ஆகவும் இருக்கலாம்.


அஸ்வதி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


Z5 - OTT தளத்தில் காணக் கிடைக்கிறது !


மேலும் படிக்க :

ONE HUNDRED YEARS OF SOLITUDE - FANTASTIC EXPERIENCE ❤️

EXTRAORDINARY ATTORNEY WOO - FEEL GOOD SERIES !

Saturday, January 18, 2025

One Hundred Years of Solitude - Fantastic experience ❤️


தற்போதைய தொடுதிரை வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்து நம்மை விடுவித்து சில மணி நேரங்களாவது நம்மதியாக தூங்க வைப்பது மட்டும் கலையல்ல. நம்மைத் தூங்க விடாமல் செய்வதும் கலை தான். அப்படியாக இந்தத் தொடரின் முதல் தொகுதியின் 8 பகுதிகளும் பார்த்து முடிக்கும் வரை நிம்மதியாக தூங்க முடியவில்லை. விழித்திருக்கும் நேரம், தூங்கும் நேரம் என அனைத்திலும் இந்த 'One Hundred Years of Solitude' தான் நிரம்பியிருந்தது. உண்மையிலேயே இது புது அனுபவம்.


லத்தின் அமெரிக்க எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய நாவலான இந்த 'One Hundred Years of Solitude' பற்றி முன்பே நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை வாசிக்கவில்லை. மாய யதார்த்தம் (Magical Realism) என்பதற்கு உதாரணமாக இந்த நாவலே முதன்மையாக முன்நிறுத்தப்படுகிறது. கிளாசிக் தன்மையுள்ள இந்த நாவலை மிகக் கவனமாக படமாக்கி இருக்கிறார்கள். நாவலை வாசித்தவர்கள் இன்னும் நெருக்கமாக உணர்வார்களாக இருக்கும். நாவல் வாசிப்பது போலவே கதாப்பாத்திரங்கள் அறிமுகம், அந்த கதாப்பாத்திரங்களின் பெயர்களை மீண்டும் மீண்டும் உச்சரித்து பதிய வைப்பது என நாவலை வாசித்த உணர்வையே இந்தத் தொடர் கொடுத்தது.


வெறும் அழகியல் மட்டுமே கலையாகாது. அழகியலுடன் அரசியலும் சேரும் போது தான் கலை முழுமையடைகிறது. அப்படியாக இந்த ' One Hundred Years of Solitude ' ஒரு முழுமையான கலைப்படைப்பு. அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்த மக்களிடையே 'அரசு' என்ற அதிகாரத்தை மட்டுமே முன்வைக்கும் அமைப்பு உள் நுழைந்தவுடன் உருவாகும் சிக்கல்களை மிகத் தெளிவாக முன் வைத்திருக்கிறார், மார்க்கேஸ். இடதுசாரியாக இருந்தாலும் அதிகாரம் கைக்கு வந்தவுடன் எப்படி மாறிப் போகிறார்கள் என்பதையும் காட்டத் தவறவில்லை. 


இசையும், ஒளிப்பதிவும் அற்புதம். நாமும் அந்தச் சூழலில் வாழ்வது போலவே தோன்றுகிறது. அடுத்த தொகுதி (Season-2) எப்போது வரும் என்ற ஆவல் அதிகரித்திருக்கிறது. அடுத்ததாக இந்த நாவலை வாங்கி வாசிக்க வேண்டும். வாசிக்கவில்லை என்றால் கூட இந்த நாவல் நம் வீட்டில் இருக்க வேண்டும் என்ற மனநிலை உருவாக்கியிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் நாமும் மக்கோன்டோ(Macondo)-வின் குடிமகனாகவும் உணர வைக்கிறது இந்த  One Hundred Years of Solitude. இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


2006 ஆம் ஆண்டு, மார்க்கேஸ் பிறந்த ஊரான Aracataca- வை Macondo என‌ பெயர் மாற்ற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. போதிய நபர்கள் ஆதரவாக வாக்களிக்காததால் பெயர் மாற்றம் சாத்தியமாகவில்லை. அதனாலென்ன இந்த நாவலை வாசித்தவர்கள், இந்தத் தொடரை பார்த்தவர்கள் மனங்களில் மக்கோன்டோ (Macondo) என்ற பெயர் எப்போதும் நிறைந்திருக்கும். 


One Hundred Years of Solitude is a  Eternal art ❤️

மேலும் படிக்க:

EXTRAORDINARY ATTORNEY WOO - FEEL GOOD SERIES !  

Saturday, October 5, 2024

ஜமா - கலையின் கலை !


ஒரு படத்தை இரண்டு முறை பார்ப்பதெல்லாம் எப்போதும் நடக்காது. ஆனால் இந்த 'ஜமா' இரண்டு முறை பார்க்க வைத்துவிட்டது. அந்த அளவிற்கு இதில் பங்கு பெற்றவர்களின் உழைப்பு இருக்கிறது.ஒவ்வொரு பகுதியும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது. 


இரண்டாம் முறை பார்ப்பதற்கு இளையராஜா இசை தான் முக்கிய காரணம் என்றாலும் முதல் முறை பார்த்த போது தவறவிட்ட சில விசயங்கள் தென்பட்டன. முதலாவது திரைக்கதை பாணி. முதல் பகுதி, இந்த சினிமா எதைப் பற்றி பேசப் போகிறது என்பதற்கான அறிமுகம். இரண்டாம் பகுதி, கூத்துக் கலையில் பெண் வேடமிடும் கல்யாணம் பற்றியும் அவருக்கு பெண் தேடும் படலத்தையும் பேசியது. மூன்றாம் பகுதி ஜகாவிற்கும் கல்யாணத்திற்கும் இடையிலான காதல் பற்றியது. நான்காம் பகுதி கல்யாணத்தின் இலக்கு பற்றியது. ஐந்தாம் பகுதி, முன்கதைச் சுருக்கம். இந்த இடத்தில் தான் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார்கள். ஏற்கனவே கதையில் சொன்ன பகுதிகள் மீண்டும் வருவதால் சுவாரசியத்தன்மை குறைந்து விடுகிறது. முன்கதைச் சுருக்கத்தை காட்சி மொழியில் வேறுபடுத்திக் காண்பிக்க மெனக்கெட்டவர்கள், இதிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். அடுத்து ஆறாம் பகுதி , இலக்கை அடைதல். இப்படி இந்தத் திரைப்படத்தை பிரித்துப் பார்க்க முடிந்தது.


அடுத்ததாக கண்ணில் பட்டது, படம் முழுக்கவே குறிப்பிட்ட காட்சியில் திரைக்கு வெளியே இருந்து பேசுபவர்களின் குரல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது காட்சியை இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது. கூத்துக் கலை குறித்தான நிறைய தகவல்களைச் சேகரித்து, கூத்துக் கலையில் பங்கெடுத்தவர்களின் துணையுடன் இப்படைப்பு உருவாகியுள்ளதால் பார்வையாளர்களை எளிதில் உள்ளிழுத்து விடுகிறது. 


சக கலைஞர்களுக்கு இடையில் இருக்கும் ஆதரவு, சகோதரத்துவம், போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, ஏமாற்று உள்ளிட்ட உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கலையின் முன் சமநிலைக்கு வருவதும் காட்டப்படுகிறது. உண்மையில் இலக்கியம் , இசை, ஓவியங்கள், திரைப்படங்கள், நாடகக்கலை, நாட்டார் கலை உள்ளிட்ட கலை வடிவங்கள் மனிதர்களின் கீழ்மையான எண்ணங்களிலிருந்தும்,   நிஜ வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்தும் விடபட உதவுகின்றன. 


பொதுவாகவே இறுதிச்சடங்குகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சமீப காலங்களில் அரிதாகவே சடங்குகளில் பெண்கள் பங்கெடுக்கின்றனர். இதற்கு பின் பெரும் போராட்டம் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகி இறுதிச்சடங்கில் இயல்பாக பங்கேற்பது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமானது. தொடர்ந்து இப்படி காட்சிப்படுத்தும் போது ஆண் வாரிசு என்ற பிம்பம் உடையும்.


இயக்குநராக முதல் திரைப்படம் என்பதே பெரும் சவால் என்ற சூழலில் , கூடவே நடிப்பையும் தேர்ந்தெடுத்ததுடன் மிகவும் சவாலான கதாப்பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அந்தக் கதாபாத்திரத்திரத்திற்கும் திருவண்ணாமலையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தெருக்கூத்து கலைக்கும் நியாயம் செய்திருக்கிறார், பாரி இளவழகன். சேத்தன், கல்யாணத்தின் அம்மா, அம்மு அபிராமி, அம்மு அபிராமியின் அம்மா மற்றும் கூத்துக் கலைஞர்களாக வருபவர்கள் என அனைவரும் தங்களின் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். திருவண்ணாமலை வட்டார வழக்கு சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. தமிழ் மொழியை எந்த வட்டார வழக்கிலும் கேட்பது இனிமையே.  


இளையராஜாவின் இசை படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நம்மைக் கூட்டிச் செல்கிறது. படத்தின் கதையைச் சொல்வதும் இசை தான். ஒரு கதை சொல்லி போல ஏற்ற இறக்கங்களுடன் திரைக்குள் நம்மை கொண்டு செல்கிறது. இளையராஜாவின் இசைக்காக மீண்டும் பார்த்தது வீண் போகவில்லை. படத்தில் வரும் ஒரே ஒரு பாடலையும் இளையராஜாவே எழுதியிருக்கிறார். அதுவும் கேட்க நன்றாக இருக்கிறது. மீண்டும் கேட்கவும் தூண்டுகிறது. முன்கதை சுருக்கத்தைத் தவிர்த்துவிட்டு இன்னொரு முறை கூட இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். தவறில்லை. 


பெரும்பாலும் இசை தான் ஒரு திரைப்படத்தை மறுமுறை பார்க்கத் தூண்டுகிறது. சமீபத்தில் அப்படி இசைக்காக இரண்டு முறை பார்த்த மற்றொரு திரைப்படம் ' Amar Singh Chamkila ', ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக. 


மொத்தத்தில் 'ஜமா' பாரி இளவழகன் மற்றும் குழுவினரின் உழைப்பால் நல்ல படைப்பாக வந்திருக்கிறது. இப்படி ஒரு படைப்பைக் கொடுத்ததற்கு அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி ! 

மேலும் படிக்க:

AMAR SINGH CHAMKILA !

ஹர்காரா - மண்ணின் கதை !



Monday, September 2, 2024

கட்றா தாலிய -கலகலப்பான குறும்படம் ❤️


மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருகிறது. பொருத்தமான நடிகர்கள் தேர்வு, பட்டைய கிளப்பும் டைமிங்கான வசனங்கள், அழகான காட்சியமைப்புகள், கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் இசை மற்றும் ஒளிப்பதிவு என எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது. 


ஒரு பக்கம் ரகளையான அங்கமுத்து - வன்ராஜ்  கூட்டணி. இன்னொரு பக்கம் கலக்கலான சீமத்தண்ணி - கிருத்திகா கூட்டணி.  நீங்கள் ஒதுக்கப் போகும் 30 நிமிடங்கள் வீணாகாது.


இயக்குநர் சேவியர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


YouTube தளத்தில் காணலாம் !





மேலும் படிக்க :


5 ரூபா -குறும்படம் !

Maharaj - வடக்கிலிருந்து ஒரு வெளிச்சம் 👍


தமிழ்நாட்டில் இப்படியான பகுத்தறிவு கருத்துகளை முன்வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் எடுக்கமாட்டார்கள். கடந்த ஓராண்டாக பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் வடக்கிலிருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இந்தச் சூழலில் இப்படியானதொரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. 


19ம் நூற்றாண்டில் பம்பாய் நகரத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த 'மகராஜ்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த கருத்துகளை யார் சொன்னாலும் நாம் வரவேற்க வேண்டும். குஜராத்தில் பிறந்த கர்சன்தாஸ் எனும் பிராமணர், பகுத்தறிவு கருத்துகளை அங்கே அந்த காலகட்டத்தில் முன் வைத்திருக்கிறார். அதனால் இன்னல்களையும் சந்தித்திருக்கிறார். எல்லோரையும் சமமாக நடத்தும் எவரும் ( பிராமணராக இருந்தாலும் ) பார்ப்பனர் அல்ல. பிறப்பால், தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என நினைக்கும் ஒவ்வொருவரும் ( பிராமணராக இல்லாவிட்டாலும் )பார்ப்பனர் தான். பிறப்பால் அனைவரும் சமமே.


பக்தியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் இன்றும் குறைந்தபாடில்லை. அப்படி பக்தியை துணையாக வைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி குளிர்காய்ந்த மகராஜ் எனும் ஒரு மடத்தைச் சேர்ந்த சாமியாரின் அயோக்கியத்தனத்தை தோலுரித்து காட்டும் திரைப்படம் தான் இது. கடவுளுக்கும் பக்தருக்கும் இடையில் சாமியாரோ ,வேறு யாருமோ தேவையில்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே வழிபட வேண்டும். கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றும் கூட்டத்துடன் எப்போதும் சேரக்கூடாது. 


தற்போதைய காலம் என்பது ஜக்கி, நித்தியானந்தா, ரவிசங்கர், பாபா ராம்தேவ், பால் தினகரன் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் காலமாக இருக்கிறது. இவர்கள் எவரையும் நம்பக்கூடாது. இவர்கள் இல்லாமல் இந்தியா முழுவதும் விதவிதமான ஆதீனங்கள், அமைப்புகள் இருக்கின்றன. இவர்களும் ஏமாற்றுக்காரர்கள் தான். எந்த மதமாக இருந்தாலும் எந்தக் கடவுளாக இருந்தாலும் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் யாரும் தேவையில்லை. கடவுளே தேவையில்லை என்பது தனியாக விவாதிக்க வேண்டியது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே நம்புங்கள்.


ஒரே நேர்கோட்டில் கதையை சொல்லி முடித்திருக்கிறார்கள். " ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது" - என்ற கிராம்சியின் கூற்றுக்கிணங்க இந்திய மக்களின் பண்பாட்டுத் தளத்திலும் இறங்கி போராடினால் மட்டுமே இந்த பாசிச, மக்கள் விரோத,மதவாத பாஜக அரசை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிய முடியும். இந்து என்பது வேறு இந்துத்துவம் என்பது வேறு என்பதை இந்திய மக்கள் உணரும் போது பாஜக அதிகாரத்தில் இருக்காது.


விதவிதமான வடிவங்களில் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் அதிகளவில் பிற்போக்குத் தனங்கள் பரப்பப்படும் பாலிவுட் சினிமாவிலிருந்து இப்படியானதொரு திரைப்படம் வந்திருப்பது ஆச்சரியம் தான். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். பிற்போக்குத் தனங்கள் ஒழிந்து போகட்டும். எல்லா மதங்களிலும் சாமியார்களின் ஆதிக்கம் அழியட்டும். சமத்துவம் பரவட்டும்.


மேலும் படிக்க  :


FANDRY - மனதிற்கு நெருக்கமான படைப்பு !


DAREDEVIL MUSTHAFA - FANTASTIC MAKING !

குரங்கு பெடல் ❤️


ஏறக்குறைய அனைத்து குழந்தைகளின் கைகளிலும் மொபைல் போன்கள் வந்துவிட்டாலும் சைக்கிள் மீதான பிரியம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. முன்பைப் போல இடவசதி இல்லாவிட்டாலும் கூட அடம் பிடித்தாவது சைக்கிள் வாங்கி விடுகிறார்கள், குழந்தைகள். இப்படியான சூழலில் எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் 'குரங்கு பெடல் '.


குழந்தைகளையும் சைக்கிளையும் பிரிக்க முடியாது. சைக்கிளுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பிணைப்பை 80 களின் காலப் பின்னணியில் அழகியலுடன் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம். குரங்கு பெடல் என்பதையும், வாடகை சைக்கிள் என்ற நடைமுறையும் இப்போதைய தலைமுறைக்குத் தெரியாது. இத்திரைப்படத்தைக் காணும் போது அவர்களும் தெரிந்து கொள்வார்கள். 


இத்திரைப்படத்தில் சைக்கிளுடன் அப்பாவிற்கு நேர்ந்த அனுபவமும், மகனிற்கு கிடைத்த அனுபவமும் வெவ்வேறானவை. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் காண வேண்டிய திரைப்படம். அப்படி குழந்தைகளுடன் சேர்ந்து காணும் போது சைக்கிளுடனான தங்களது கடந்த கால நினைவுகளை அசை போட முடியும். 


கதைக்குத் தேவையே இல்லாத , குழந்தைகளும் பார்ப்பார்கள் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வு கூட இல்லாமல் அதீத வன்முறைக் காட்சிகள் இன்றைய திரைப்படங்களில் திணிக்கப்படும் சூழலில், அமைதியான சூழலை அழகாக படம்பிடித்து அனைவரும் ரசித்து பார்க்கும்படி செய்திருக்கிறது இந்த 'குரங்கு பெடல்'.


சைக்கிள் மீதான காதல் நமக்குத் தீர்வதேயில்லை. நாம் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தாலும் இப்போதும் சைக்கள் வாங்க வேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். எங்கு இருந்தாலும், என்ன பணி செய்தாலும் தினமும் சைக்கிள் ஓட்டுவதை தவற விடாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் இயற்கைக்கும் நல்லது. 


இந்தத் திரைப்படத்தைக் காணும் போது இன்னும் நிறைய விசயங்களைச் சேர்த்திருக்கலாமோ என்று கூட தோன்றும். சிறுகதையை திரையனுபவமாக மாற்றியிருப்பதால் அதற்குள்ளாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். இலக்கிய படைப்புகள் திரைப்படங்களாவதும், இரண்டு மூன்று பேர் சேர்ந்து திரைக்கதை எழுதுவதும் மிகவும் ஆரோக்கியமான விசயம். 


இன்றைய திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாக காட்டப்படுவதில்லை அல்லது குழந்தைகளே இல்லை. இந்தச் சூழலில் குழந்தைகளுக்காக, குழந்தைகளுக்கான திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். கமலக்கண்ணன் இயக்கிய 'மதுபானக்கடை' திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் இப்போதாதவது பார்த்து விடுங்கள்.உங்களுக்கு நல்லதொரு திரையனுபவம் கிடைப்பது உறுதி. இவரது 'வட்டம்' திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அடுத்து அதையும் காண வேண்டும். 


நல்ல சிறுகதை, நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை, நல்ல இயக்கம் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


மேலும் படிக்க  :


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


சேத்துமான் ❤️

Amar Singh CHAMKILA ❤️❤️❤️


இரட்டை அர்த்தப் பாடல்களை எழுதி, இசையமைத்து,பாடி அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர், பஞ்சாப் பாடகர், அமர்சிங் சம்கிலா. அதற்காகவே தனது 27வது வயதில்(1988) அடையாளம் தெரியாத நபர்களால் மனைவியுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அற்புதமான திரைப்படம் தான், 'அமர்சிங் சம்கிலா'.  


புனிதம் என்று எதுவும் பூமியில் இல்லை. மதக்கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கும் அடிப்படைவாதிகள்தான் புனிதம், புனிதம் என்று தொடர்ந்து கூவிக் கொண்டேயிருக்கிறார்கள். மாற்றம் என்பதே நிலையானது. இதை அடிப்படைவாதிகள் ஏற்பதில்லை. அடிப்படைவாதிகளை வளர்த்து பாதுகாக்கும் வேலையை அனைத்து மதங்களும் தொடர்ந்து செய்து வருகின்றன. அதிலும் ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகள் எப்போதும் ஆபத்தானவர்களே. இதனால் தான் கார்ல் மார்க்ஸ் " மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான முதல் தேவை, மதங்களை அழிப்பது " என்று சொல்லியிருக்கிறார். மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் தேவையில்லை.


சம்கிலா, தான் பிறந்து வளர்ந்த சூழலலாலேயே இப்படியான பாடல்களை எழுதவும், பாடவும் செய்கிறார். இந்தப் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களையே பாடியே புகழ் பெறுகிறார். நன்றாக பாடும் திறமையுள்ளவர் என்பதாலேயே தனது முதல் திருமணத்தை மறைத்து 

அமர்ஜ்யோத் எனும் பாடகியை திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலத்தில் இங்கே என்.எஸ்.கிருஷ்ணனும் தனது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு டி.ஏ. மதுரத்தை திருமணம் செய்து கொண்டது நினைவிற்கு வருகிறது.


எல்லா நாட்டு கலை வடிவங்களிலும் பாலியல் சார்ந்த குறியீடுகளும், குறிப்பாக பாடல்களில் இரட்டை அர்த்தங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லோருமே இம்மாதிரியான பாடல்களை ரசிக்கிறார்கள்; கதைகளை தேடித்தேடி வாசிக்கிறார்கள். கலை மக்களுக்கானது . இதில் புனிதம் என்றோ தீட்டு என்றோ எதுவுமில்லை. 


தமிழ் திரையிசைப் பாடல்களில் இரட்டை அர்த்தங்கள் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அர்த்தம் புரிந்தோ புரியாமலோ கொண்டாடப்பட்டவை. ரசிக்கும் வகையிலான பாடல்களின் எண்ணிக்கையே அதிகம். அந்த அளவிற்கு தமிழ் மொழி இனிமையானது. வெகு சில பாடல்கள் மட்டுமே கொச்சையான மொழியில் எழுதப்பட்டு பாடப்பட்டிருக்கின்றன. கதைகளிலும் கி.ராஜநாரயாணன் தேடித்தேடி சேகரித்த நாட்டார் பாலியல் கதைகள் எல்லாம் பொக்கிஷம். வயதிற்கு வந்த எவரும் இரட்டை அர்த்தப் பாடல்களைக் கேட்கலாம், கதைகளை வாசிக்கலாம், ரசிக்கலாம், வாழலாம். 


மக்கள் தொடர்ந்து விரும்பியதாலேயே எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களை பாடுகிறார், சம்கிலா. எதிர்ப்புகள் அதிகரிக்கும் வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் கடந்தவராகவும், இனி என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற நிலையை எப்படி வந்தடைகிறார் என்பதை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு கலைஞனாக மாறிய தருணமது. அதனாலேயே இன்று வரை சம்கிலா பஞ்சாபில் கொண்டாடப்படுகிறார். தொடர்ந்து அவரைப் பற்றிய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சம்கிலா மக்களின் கலைஞன்.


சம்கிலாவாக திலிஜித் தோஸாஞ்ச் அற்புதமாக பொருந்தியிருக்கிறார். இயல்பிலேயே அவர் ஒரு பாடகர் என்பதால் இன்னும் நெருக்கமாக உணர முடிகிறது. சம்கிலாவின் இணையர்,அமர்ஜ்யோத்தாக பரினீதி சோப்ரா நடித்திருக்கிறார். இந்தக் கதாப்பாத்திரத்தில் நாம் பரினீதி சோப்ராவைக் காண முடியாது, அமர்ஜ்யோத்தை மட்டுமே காண முடியும். அந்த அளவிற்கு அந்தக் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். 


ஒரு திரைப்படத்தைப் பார்த்து முடித்தவுடனயே அத்திரைப்படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுவது அபூர்வம். இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும் போது அப்படி தோன்றியது. உடனேயே மீண்டும் ஒரு முறை பார்த்தேன். இப்படி பார்க்கும் முதல் திரைப்படமிது. மற்ற சில படங்கள் பார்க்கும் போது இப்படி தோன்றினாலும் உடனே பார்க்க வாய்ப்பு அமையவில்லை. இந்தத் திரைப்படத்திற்கு அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அப்படி பார்க்க ஒரே காரணம், இசை - ஏ.ஆர்.ரஹ்மான் என்பது தான். 


தமிழ் ரசிகர்கள் இது ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றே உணர முடியாத அளவிற்கு மாயம் செய்திருக்கிறார். கொஞ்சம் கூட மேற்கத்திய சாயல் இல்லை. தமிழில் பொன்னியின் செல்வன், மாமன்னன் எல்லாம் மேற்கத்திய பாணி இசையால் இயல்பு மாறிய திரைப்படங்கள். தமிழில் அசலான நம் மண் வாசனை வீசும் ஒரே ஒரு திரைப்படம் கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இல்லை. இயக்குநர்கள் காரணமா என்றும் தெரியவில்லை. ரஹ்மான் இசைக்காக மட்டுமே கூட நாம் இத்திரைப்படத்தைக் காணலாம்.


சம்கிலா திரைப்படத்தில் பாடகர் சம்கிலாவின் பாடல்களை மறு உருவாக்கம் செய்ததாலோ என்னவோ மொழி புரியாவிட்டாலும் பாடல்களை ரசிக்க முடிகிறது. தனியாகவும் 3 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி இருக்கிறார். அதிலும் கடைசி பாட்டெல்லாம் (மைனே விதா கரோ... ) அற்புதம். 


அமர்சிங் சம்கிலா இவ்வாறு நடத்தப்பட்டதற்கும், கொல்லப்படத்தற்கும் அவர் ஒரு தலித் என்பதும் ஒரு காரணம். இன்று வரை அவரை யார் கொன்றது என்பது தெரியவில்லை.பல முறை மிரட்டிய ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகளா ? சக பாடக போட்டியார்களா ? அவரின் மனைவி, அமர்ஜ்யோத் உயர் சாதி என்பதால் நடத்தப்பட்ட ஆணவப்படுகொலையா? எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்று வரை பஞ்சாபில் சம்கிலாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மொழி புரியாவிட்டாலும் அசலான சம்கிலாவும் , அமர்ஜ்யோத்தும் சேர்ந்து பாடிய பாடல்களை கேட்டுப் பாருங்கள். நல்ல அனுபவம். தனித்துவமான குரல்கள். 'Music is the Universal Language ' என்று சொல்வது முற்றிலும் உண்மை.


இயக்குநர் இம்தியாஸ் அலி அவர்களின் அற்புதமான உருவாக்கம். இவரது திரைப்படத்தைப் பார்ப்பது இதுவே முதல் முறை. இவரின் மற்ற திரைப்படங்களையும் காண வேண்டும். கதையின் ஊடாக அடிப்படைவாதம் குறித்தான விமர்சன பார்வையும் முன்வைக்கப்படுகிறது. தமிழ் திரைப்படங்களில் இது அரிது. திரைக்கதையும், கதை சொல்லும் முறையும் அருமை. அங்கங்கே சின்ன சின்ன கார்ட்டூன் காட்சிகள், இரண்டு திரை காட்சிகள் , அசலான சம்கிலா குறித்தான பதிவுகள் என சுவாரசியம் கூட்டி இருக்கிறார். Excellent tribute to phenomenal artist through Art ❤️ 


இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


மேலும் படிக்க :


ஹர்காரா - மண்ணின் கதை !


DAREDEVIL MUSTHAFA - FANTASTIC MAKING !


Swathi Mutthina male haniye ❤️


கன்னட தேசத்திலிருந்து மற்றுமொரு கவிதை இத்திரைப்படம். கன்னடத் திரைப்படங்களின் தரம் கூடிக்கொண்டே போகிறது. கதை, வசனம், ஒளிப்பதிவு , இசை என அனைத்தும் நமக்கு நல்லதோரு அனுபவத்தைக் கொடுக்கிறது. 


திரைப்படத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருப்பவர் கதாநாயகி Siri Ravikumar தான். மிகையில்லாத நடிப்பு. அடுத்து கதாநாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் ராஜ்.பி‌.செட்டி கவனத்தை ஈர்க்கிறார். அனைத்து கதாப்பாத்திரங்களும் காரணத்துடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரு காட்சியில் வந்தாலும் அழுத்தமான ஒரு விசயத்தைச் சொல்லிச் செல்கிறார்கள். 


ஆர்ப்பாட்டமில்லாத திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.


Feel Good Movie


இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


Veyilmarangal ( Trees under the Sun ) !


விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளை, அவர்கள் சந்திக்கும் அரசியலை அழகியலுடன் முன்வைக்கும் திரைப்படம். கதையின் ஊடாக இயற்கையை அவ்வளவு நெருக்கமாக காட்சிப்படுத்தி இருக்கிறார், இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன். இயற்கையை அவதானிக்கும் எவருக்கும் பிஜுகுமார் அவர்களின் திரைப்படங்கள் நிச்சயம் பிடிக்கும். 


எளிய மக்கள் அரசாங்காத்தாலும் துரத்தப்படுகின்றனர். ஆதார் கார்டு இல்லையென்பதால் நிவாரணமும் கிடைக்காது என்கின்றனர். ( இன்றைய சென்னை வெள்ளத்திலும் இது தான் நிலைமை. ரேசன் கார்டு இல்லையென்றால் நிவாரணம் கிடைக்காதாம் ).சொற்ப கூலி கொடுக்கும் நிலப்பிரபுவால் துரத்தப்படுகின்றனர். அப்போது இந்திரன்ஸ் பேசும் வசனம் " நீங்கள் எங்களைத் துரத்துவதால் ஒன்றும் செத்துப் போகமாட்டோம். எங்களின் உடலில் ஆரோக்கியம் உள்ளவரை இந்தப் பூமியில் வாழ்வோம்❤️ ".


இந்த பூமியில் மனித இனம் தொடர்ந்து இயங்க அதிக உடலுழைப்பைக் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்கள்தான். இந்திய அளவில் அவர்கள் சாதியின் பெயராலும் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். 


மனித இனம் இந்தப் பூமிக்குச் செய்து வரும் அயோக்கியத்தனங்களால் உருவாகி இருக்கும் காலநிலைமாற்ற விளைவுகளால் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்படுபவர்களாக விளிம்புநிலை மக்களே உள்ளனர். இதையும் இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.


ஆர்ப்பாட்டமில்லாத , அமைதியான மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு 👍


மேலும் படிக்க :

ADRISHYA JALAKANGAL !

 JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

கூழாங்கல் ❤️


நடையின் ஊடாக வெக்கையான நிலப்பரப்பையும் , அங்கு வாழும் அசலான மனிதர்களையும் , அவர்களின் வாழ்வியலையும் முன்வைக்கும் ஒரு மண் மணக்கும் படைப்பு. திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை உணர்ந்து நிறைய விசயங்களை அழகிய திரைமொழியுடன் குறிப்பால் உணர்த்துவது சிறப்பு. தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து தவறவிடும் விசயமிது. 


எந்தப் படைப்பாக இருந்தாலும் பார்வையாளர்களும் அதில் பங்கெடுத்து ஒரு உரையாடலை அந்தப் படைப்புடன் நிகழ்த்த வேண்டும்.  இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்கள் தாங்களே யூகித்துக் கொள்ளும் வகையில் பல காட்சிகள் அமைந்திருக்கின்றன. காட்சி ஊடகமான திரைப்படத்தில் எல்லாவற்றையும் நீட்டித்து விளாவாரியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்,  குறிப்பாக வன்முறையை நீட்டித்து காட்டுவதே தங்களின் கடமை என இருக்கும் இயக்குநர்கள் இதை உணர வேண்டும்.


ஒளிப்பதிவும், பின்னணி இசையும் திரைப்படத்தை மேலும் நெருக்கமாக உணர வைக்கின்றன. அவை  எந்த இடத்திலும் திரைப்படத்தை இடையூறு செய்யவில்லை. சண்டையின் போது பேசப்படும் கெட்ட வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுவும் திரைப்படத்திற்கு கூடுதல் யதார்த்த தன்மையைக் கொடுத்திருக்கிறது. 


குழந்தைதன்மையுடன்  குழந்தையை திரையில் பார்ப்பது அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. 

கருப்பு வெள்ளை காலத்திற்கு பிறகு தமிழ்த் திரைப்படங்கள் குழந்தைகளை குழந்தைகளாக காட்டாமல் பெரியவர்கள் போலவே காட்டி வருகின்றன. நிறைய படங்களில் குழந்தைகளைக் காட்டுவதேயில்லை , அப்படியே காட்டினாலும் நகைச்சுவை காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப்படியான சூழலில் இந்த 'கூழாங்கல்' திரைப்படத்தில் முக்கியப் கதாப்பாத்திரமாக ஒரு சிறுவனை குழந்தைத்தன்மை சிதையாமல் காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது.


மொத்தத்தில் நம்மையும் அந்த வெக்கையான நிலப்பரப்பில் நடக்க வைத்த இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉.


1.15 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய சிறிய திரைப்படம் தான் . வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக பாருங்கள். 


மேலும் படிக்க:


ஹர்காரா - மண்ணின் கதை !


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !






ஹர்காரா - மண்ணின் கதை !


நாட்டார் தெய்வங்கள் குறித்தான குறிப்புடன் தொடங்கும் போதே திரைப்படம் நம்மை ஈர்க்கத் துவங்கி விடுகிறது. நாட்டார் தெய்வங்கள் எப்படி மக்களின் வாழ்வியலிலிருந்து தோன்றியிருக்கின்றன என்பதை இத்திரைப்படம் முன்வைக்கிறது. பெரும்பாலும் நாம் நமது முன்னோர்களையும் இயற்கையின் ஏதோ ஒரு வடிவத்தையுமே குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவையே நாட்டார் தெய்வங்கள்.


" நாட்டார் தெய்வங்கள் எவையும் 'முன்னே வந்து' வரம் தரும் தெய்வங்கள் அல்ல; 'பின்னே நின்று' பாதுகாப்புத் தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும், அறுவடைக் காலத்திலும், கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும், ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. " என்று கூறுகிறார் ,தொ.பரமசிவன் . நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் காவல் தெய்வங்களாக இருப்பதை நாம் உணர முடியும். ஒரு மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக 'மாதேஸ்வரன்' மாறிய கதை தான் 'ஹர்காரா'.


 நமது நாட்டார் தெய்வங்கள் கற்பனைக் கதைகளான இதிகாசங்களிலிருந்து தோன்றவில்லை. நிறுவனமயப்படுத்தப்பட்ட நடைமுறையோ, வழிபாடோ , பேதங்களோ, படையலோ நாட்டார் தெய்வங்களுக்கு இல்லை. அவை மக்களின் வாழ்வுடன் கலந்தவை. பெரிய பெரிய கோயில்களில் பல கால பூசைகளுடன் பெருந்தெய்வங்கள் இருந்தாலும் அவை எதுவும் நாட்டார் தெய்வங்களுக்கு ஈடாகாது. அவை மக்களின் வாழ்விலிருந்து விலகி நிற்பவை. 


காளி வெங்கட் மலையேறும் காட்சியின் போது வரும் இடைவேளை வரை சரியாக செல்லும் திரைக்கதையில் பின்பு விறுவிறுப்பு குறைந்து விடுகிறது. இறுதிகட்ட காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கூட்டியிருந்தால் இன்னும் நெருக்கமான படைப்பாக இத்திரைப்படம் அமைந்திருக்கும். மற்றபடி நல்லதொரு அனுபவம். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉 ❤️.


தமிழில் வன்முறை வெறியாட்டத் திரைப்படங்கள் தொடந்து வெளிவரும் சூழலில் ' ஹர்காரா ' போன்ற மக்களின் வாழ்வியலைப் பேசும் அர்த்தமுள்ள திரைப்படங்களும் வெளிவருவது நம்பிக்கையளிக்கிறது. இவ்வாறு மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும். 


ஆகவே மக்களே ! வன்முறை வெறியாட்டத் திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவதில் கொஞ்சத்தையாவது நம் வாழ்வைச் சொல்லும் 'ஹர்காரா' போன்ற திரைப்படங்களுக்குக் கொடுக்க வேண்டும். 


மேலும் படிக்க:


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !


ஜெய்பீம் -அறத்தின் குரல் ! 


Sunday, September 1, 2024

Limelight (1952) !


சாப்ளின் என்ற மாமேதையின் இதுவரை பார்த்திராத திரைபடங்களுள் இதுவும் ஒன்று. நேற்று தான் பார்க்க வாய்ப்பு அமைந்தது. இவரது மற்ற திரைப்படங்களைப் போல இத்திரைப்படத்திலும் மனிதமே மேலோங்கி இருக்கிறது. சாப்ளினின் நடிப்பை மட்டுமல்ல அவரது திரைப்பட உருவாக்கத்தையும் யாராலும் பிரதியெடுக்க முடியாது. 


இவரது திரைப்படங்களை போட்டுக் காட்டி படத்தின் இயக்குநரும் இவர் தான், இசையமைப்பாளரும் இவர் தான், தயாரிப்பாளரும் இவர் தான் என்று சொன்னால் பல பேர் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு திரையில் தன்னை மட்டுப்படுத்தியே சித்தரித்து இருப்பார். இதுவும் ஒருவித யுக்தி தான் என்றாலும் திரையில் அப்படி தங்களைச் சித்தரிக்க விரும்ப மாட்டார்கள். திரையில் நடிகர் சாப்ளினை மட்டுமே நம்மால் காண முடியும், இயக்குநர் சாப்ளினோ, தயாரிப்பாளர் சாப்ளினோ தென்படமாட்டார். 


இயக்குநர் சாப்ளின் ஒரு Perfectionist. ஒவ்வொரு காட்சியும் கண்ணாடி போல அவ்வளவு திருத்தமாக இருக்கும். சாப்ளினால் சிரிக்க வைக்க மட்டுமல்ல அழ வைக்கவும் முடியும். தனது திரைப்படங்களில் பல இடங்களில் தற்கொலைக்கு எதிரான காட்சிகளைச் சேர்த்திருப்பார். தற்கொலையில் ஈடுபட முயற்சிப்பவர்களை தேற்றி இந்த வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்பவராக நடித்திருக்கிறார். 'சிட்டி லைட்ஸ் ' திரைப்படத்தில் தற்கொலைக்கு முயற்சிப்பவரிடம் ' Tomorrow also birds will sing ( நாளையும் பறவைகள் பாடும் ) ' என்று சொல்வார். எதை இழந்த பின்பும் வாழ்க்கை மிச்சம் இருக்கிறது ,எவ்வளவு பெரிய இழப்பையும் கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கையே உயிர்களைக் காப்பாற்றும். அதே போல Limelight - லிலும் ஒரு கதாப்பாத்திரத்தை தற்கொலையிலிருந்து காப்பாற்றி, நம்பிக்கையளித்து வாழ்க்கையை வாழ வைக்கிறார். தத்துவார்த்த ரீதியான பல வசனங்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வளவு புகழை அடைந்தாலும் Limelight தொடர்ந்து யார் மீதும் விழாது என்பதே Limelight. 


எக்காலத்திற்குமான கலைஞன் ❤️ !


மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !


K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

மார்க் ஆண்டனி 🔥


திரைப்படம் ஆரம்பம் முதல் முடிவு வரை படுவேகமாக போவதால் நிறை குறை பற்றி யோசிக்கக் கூட நமக்கு நேரமில்லை. இடைவேளைக்கு கொஞ்ச நேரம் முன்பு" என்னங்க இன்னும் இடைவேளை விடலை. படம் பெரிய படமா?" என்று இணையர் கேட்டார். "படம் பெரியது அல்ல.‌ அந்த அளவிற்கு வேகமாக காட்சிகள் நகர்வதால் நமக்கு அப்படி தெரிகிறது " என்று பதிலளிக்க வேண்டியிருந்தது. இடைவேளையின் போது எங்களுக்கு முன்வரிசையில் இருந்த இளைஞர் தன் நண்பரிடம் " என்ன மாப்ள இப்பவே முழுப் படம் பார்த்த மாதிரி இருக்குது " என்றார். "எல்லோரும் நம்மைப் போலவேதான் உணர்ந்திருப்பார்கள் போல" என்று நினைத்துக் கொண்டே பாப்கார்ன் வாங்க நடக்க ஆரம்பித்தோம்.


ஒரு சிக்கலான கதையை சிக்கலில்லாமல் சொல்லி இருக்கிறார்கள். தமிழில் எப்படி இது சாத்தியம் என்று தேடும் போது தான் தெரிந்தது, திரைக்கதையை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் சேர்த்து அர்ஜுன் மற்றும் சவரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து எழுதியிருக்கின்றனர் என்று. எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும், தேர்ந்த நடிகர்கள் நடித்திருந்தாலும் திரைக்கதை சிறப்பாக அமையாவிட்டால் நல்ல அனுபவம் கிடைக்காது. உலகத் திரைப்படங்களிலும் இந்திய அளவில் கேரளத் திரைப்படங்களிலும் திரைக்கதையை இரண்டு மூன்று பேர் சேர்ந்து எழுதும் போக்கு இருக்கிறது.‌இப்போது தமிழிலும் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்த் திரையுலகின் இயக்குநர்களே நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் திரைக்கதையை இரண்டு மூன்று பேர்களோடு சேர்ந்து எழுதுங்கள். அப்போதுதான் நாங்கள் தப்பிக்க முடியும். 


திரைப்படம் முழுக்கவே டைமிங் வசனங்கள் அனல் பறக்கின்றன. நிறைய விசயங்களையும், நிறைய திரைப்படங்களையும் Troll செய்திருக்கிறார்கள். அதனால் திரைப்படம் முழுக்கவே கலகலப்பு நிறைந்திருக்கிறது. அடுத்ததாக நம்மை படத்துடன் ஒன்ற வைப்பது பின்னணி இசை. யாருடா இது ? இவ்வளவு சிறப்பா பின்னணி இசையமைத்திருப்பது என்று தேடிப் பாரத்தால் ஜி.வி.பிரகாஷ்குமார். நடிப்பதை விட இவர் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாம் வெற்று இரைச்சலிலிருந்து தப்பிக்க முடியும். பின்னணி இசை படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறது. தேர்ந்தெடுத்த பழைய மூன்று பாடல்களும் ( பஞ்சு மிட்டாய் சேலை கட்டி..., அடியே மனம் நில்லுனா நிக்காதடி..., வருது வருது விலகு விலகு ஒரு வேங்கை வெளியே வருது...) நன்றாக பொருந்துகின்றன. மூன்று பாடல்களிலும் பெண் குரல், எஸ்.ஜானகி❤️. கடந்த ஒரு வாரமாக இந்த மூன்று பாடல்களும் தமிழகமெங்கும் தேடியெடுத்து கேட்கப்படுகின்றன. கடைசியாக தமிழில் சிறந்த பின்னணி இசையாக நினைவில் இருப்பது 'அசுரன்' . அந்தத் திரைப்படத்திற்கும் இசை ஜி.வி.பி.தான்.


ஜெயிலர் திரைப்படம் போல இந்தத் திரைப்படத்திலும் வன்முறை இருக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் உறுத்தவில்லை. ஜெயிலர் திரைப்படமெல்லாம் குழந்தைகளுடன் பார்க்கத் தகுதியே இல்லாதது. குரூர மனம் படைத்தவர்களால்தான் இவ்வாறு வன்முறையை(ஜெயிலர்) திரையில் காண்பிக்க முடியும். மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி என மூன்று படங்களை தொடர்ந்து திரையரங்கில் பார்த்தோம். இதில் ஜெயிலர் தான் குப்பை(வன்முறை அதிகம், திரைக்கதை சொதப்பல்,லாஜிக் மீறல்கள் அதிகம்). வன்முறையை நியாப்படுத்துவதை தமிழ் சினிமா கைவிட வேண்டும். வன்முறையைத் திரையில் காண்பிக்கும் போது பொறுப்புணர்வு வேண்டும். 


'ஆண்டனி'யாக இருந்தாலும் அவரின் உடலிலும் கருப்பணசாமி இறங்கும் அதாம்லே தமிழ்நாடு. நாட்டார் தெய்வங்கள் பேதங்களுக்கு அப்பாற்பட்டவை. பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவே இருக்கின்றன. 80's ,90's kids களை மட்டுமல்ல 2k kids களையும் திராவிட பேரழகியான சில்க் ஸ்மிதா ஈர்த்திருக்கிறார் என்பதை திரையரங்கில் காண முடிந்தது.


ஆண்டனி விஷாலின் தோற்றம் துல்கர் சல்மானையே நினைவுபடுத்தியது. ஒரு காட்சியில் கூட விஷாலாக தோன்றவில்லை. அப்புறம் எஸ்.ஜே.சூரியா ரசிகர்களின் Pulse அறிந்து அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் லாஜிக்,கருத்து, கத்திரிக்காய் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இது ஒரு Fantasy திரைப்படம் அவ்வளவு தான். இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉

மேலும் படிக்க :

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !


தெற்கத்திக் கள்ளன் !


1988-ல் வெளிவந்த திரைப்படமாக இருந்தாலும் பிற்போக்கு கருத்துகளுடன் முற்போக்கு கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. விஜயகாந்திற்கு வெள்ளந்தியான கிராமத்து நாயகன் பாத்திரம். நவநாகரீக, திருமணத்தை வெறுக்கும் , ஆடம்பரத்தை விரும்பும் நகரத்து பணக்காரப்பெண் கதாப்பாத்திரம், ராதிகாவிற்கு. இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.இந்த இருவருக்காவும் மட்டுமே இத்திரைப்படத்தைக் காணலாம். விஜயகாந்த் தனது மிகையில்லாத நடிப்பால் அதிகமும் கவருகிறார்.


கள்ளன் என்ற பெயர்க்காரணம் விளக்கப்படும் இடம் சுவாரசியம். அதே போல கள்ளன் என கையெழுத்து போடும் இடமும். அங்கங்கே வரும் டைமிங் நகைச்சுவை வசனங்கள் அருமை. தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் வேட்டி சட்டையுடன் நடித்தவர் , விஜயகாந்தாகத்தான் இருக்கும். மலேசியா வாசுதேவன் வில்லனாக நடித்திருக்கிறார். மைனர், பண்ணையார் போன்ற வேடங்களில்தான் மலேசியா வாசுதேவன் அதிகமும் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் பாடிய' தில்லா டாங்கு டாங்கு...' என்ற பாடலும் இடம்பெற்றிருக்கிறது. 


நிறைய நடிகர்கள் இருந்தும் அவர்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பது குறையாக இருக்கிறது. 


YouTube - ல் காணக் கிடைக்கிறது.  


மேலும் படிக்க  :

மனிதரில் இத்தனை நிறங்களா !

அவள் அப்படித்தான்! 

உதிரிப்பூக்கள் !


Daredevil Musthafa - Fantastic Making !


மக்களிடையே மதவாதிகளால் தொடர்ந்து சிறுபான்மையின வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கும் கன்னட மண்ணிலிருந்து ஒரு அற்புதமான திரைப்படம். இஸ்லாமியர்கள் குறித்தான பொதுப்பார்வைக்கு முஸ்தபா எனும் கதாபாத்திரத்தின் மூலமாக பதிலளித்து இருக்கிறார்கள். ரொம்பவெல்லாம் அவர்கள் மெனக்கெடவில்லை.தங்களின் மேதைமையை மறந்து மிக எளிய மக்களின் மனநிலையை திரையில் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால் அது தான் கடினமும் கூட.‌ 


சின்ன சின்ன விசயங்கள் கூட அழகாக கவனப்படுத்தப்பட்டுள்ளன. பார்ப்பன மனநிலையும் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஏன் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள். என்பதற்கான மிகப் பொருத்தான விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் ஒருவரை ஒருவர் தொட்டு விளையாட வேண்டிய அவசியம் இல்லை. எப்படியான மனநிலை பாருங்கள். 


ஒவ்வொரு விசயத்தையும் வெற்றுக்கூச்சல்கள் இல்லாமல் இயல்பாக சொல்லியிருப்பதுதான் இத்திரைப்படத்தின் பலம். இடையிடையே வரும் அனிமேஷன் காட்சிகள் அழகு. படத்தின் நிளத்தை குறைக்க உதவுகின்றன. இசையும் திரைப்படத்திற்கு இடையூறு இல்லாமல் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.


Poornachandra Tejaswi என்கிற கன்னட எழுத்தாளிரின் சிறுகதையையே திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள். சிறுகதையின் தலைப்பான ' Daredevil Musthafa' என்பதையே திரைப்படத்திற்கும் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். Poornachandra Tejaswi -ன் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்து இருக்கிறார்கள். 


Shashank Soghal இயக்கியிருக்கும் முதல் திரைப்படமிது. தனது பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். எந்தத் திரைப்படமானாலும் திரைக்கதை முக்கியம். இயக்குநருடன் சேர்ந்து நான்கு பேர் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். அதனாலேயே மனதிற்கு நெருக்கமான படைப்பாக மாறியிருக்கிறது. ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற இவர்களது எண்ணம் நிறைவேறியிருக்கிறது. கூட்டுழைப்பின் வெற்றி. 


தேர்ந்த படைப்பைக் கொடுத்ததற்கு படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தத் திரைப்படத்திற்கு தற்போதைய காங்கிரஸ் அரசு முழுமையான வரிவிலக்கு அளித்திருக்கிறது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படைப்பு இருக்கிறது. கன்னட மொழியில் ஆங்கிய சப்டைட்டிலுடன் காணலாம். நிறைய பேர் நல்ல திரைப்படமாக இருந்தாலும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டால்தான் பார்க்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும். எந்த மொழியில் இருந்தாலும் பார்த்துப் பழகும் மனநிலைக்கு நாம் வர வேண்டும். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம். FeelGoodMovie ❤️


Aeysha, Sulaikha Manzil  இப்போது Daredevil Musthafa என தொடர்ந்து மூன்று வாரங்களாக இஸ்லாமிய வாழ்வை முன்வைக்கும் திரைப்படங்களையே பார்த்தாச்சு. 

மேலும் படிக்க :

FANDRY - மனதிற்கு நெருக்கமான படைப்பு !

ADRISHYA JALAKANGAL !

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms