Thursday, October 30, 2025

மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பிதழ்!


நாயகத் துதிபாடல் தான் தமிழ் சமூகத்தை தொடர்ந்து சீரழித்து வருகிறது. " ஊருக்கு ஒரு லீடர் , ஆளுக்கொரு கொள்கை , அவனவனுக்கு ஒரு டசன் பட்டினி பட்டாளம் " என்ற 'இரத்தக்கண்ணீர் ' -ல் இடம்பெற்ற எம்.ஆர்.ராதாவின் வசனம் இன்றும் பொருந்துகிறது. சினிமா மட்டுமல்ல அரசியல், ஆன்மீகத்திலும் இதே நிலை தான். ஒரு குறிப்பிட்ட மனிதரை தலைவராக ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்காக அந்தத் தலைவர் எது சொன்னாலும் சரி என்று முட்டுக் கொடுப்பது தான் ஆபத்தானது. மனிதர்கள் தங்களின் செயல்கள் மூலமே அடையாளம் காணப்பட வேண்டும். படைப்புகளின் மூலமே படைப்பாளியை கண்டடைய வேண்டும். இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது செயல்களையும் , படைப்புகளையும் தானே ஒழிய மனிதர்களையும், படைப்பாளிகளையும் அல்ல. ஒரு நல்ல செயலை செய்ததற்காக அந்த மனிதர் செய்யும் எல்லா செயல்களையும் ஏற்றுக்கொள்வதும் , ஒரு நல்ல படைப்பைக் கொடுத்ததற்காக அந்த படைப்பாளியின் அனைத்து படைப்புகளையும் கொண்டாடுவதும் முட்டாள்தனம். 


'பாலிடிக்ஷ் தெரியாத பயலுகளெல்லாம் பாலிடிக்ஷ் பத்தி பேசறானுக ' என்ற எம்.ஆர்.ராதா தான் மீண்டும் நினைவிற்கு வருகிறார். வாரத்திற்கு ஒரு அரசியல் தலைவர் தமிழகத்தில் உதயமாகிறார். அதிலும் இந்த ரஜினி , கமல் பேசுவதெல்லாம் மகா மட்டமாக இருக்கிறது. பெரியாரின் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக சொல்லும் திமுக , திக வையும் விமர்சிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அங்கேயும் நாயகத் துதிபாடல் தான் இருக்கிறது. அரசியல் மக்களுக்கானது. மக்களுக்கான அரசியல் மாநிலத்திலும் இல்லை , மத்தியிலும் இல்லை. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் மக்களுக்கான அரசியலை தொடர்ந்து பேசி வருவது இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே. தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமானதற்கு எம்.ஜி.ஆர். தான் காரணம் என்கிறார்கள். எந்த வகையில் பாதிப்பை உருவாக்கினார் என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆரின் அதிமுக-வோடு கூட்டணி அமைத்தது தான் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமானதற்கு காரணமாக இருக்கலாம். தற்போதும் தமிழகத்தில் மக்களின் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் இயக்கங்களாக இடதுசாரி இயக்கங்கள் தான் உள்ளன. மக்களோடு மக்களாகத் தான் இருக்கிறார்கள் , மக்களுக்காகத்தான் இயக்கங்கள் நடத்துகிறார்கள், மக்களுக்காகத்தான் போராடுகிறார்கள் , ஆனால் அரசியல் நிலைப்பாடு என்ற ஒன்றை எடுக்கும்போது மட்டும் மக்களின் மனநிலைக்கு எதிராக எடுக்கிறார்கள். அது தான் மக்களை ஒட்டவிடாமல் செய்கிறது. 


காலத்துக்கேற்ற மாற்றங்கள் இடதுசாரி இயக்கங்களில் நிகழ வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவின் இடதுசாரி இயக்கங்கள் தங்களின் வேற்றுமைகளை களைந்து ஒன்றிணைய முன் வர வேண்டும். உலகமயமாக்கலும் , வலதுசாரி இயக்கங்களும் வலுவடைந்து வரும் சூழலில் இடதுசாரி இயக்கங்களும் தங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழகத்தில் ஒரு இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் இருப்பது இடதுசாரி கொள்கைகளை ஆதரிக்கும் மக்களுக்கு அவமானமாக இருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான தற்கால உதாரணம் , கேரளம். அவ்வளவு ஏன் தமிழகத்தில் கடந்த முறை இடதுசாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தற்போது வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பிர்களாக இருக்கும் தொகுதி மக்களைக் கேட்டாலே வித்தியாசம் தெரிந்துவிடும். 


இந்த சூழலில் இருந்து தான் வெளிவந்திருக்கும் 'மேற்குத் தொடர்ச்சி மலை' திரைப்படத்தின் முக்கியத்துவத்தை பேச வேண்டியிருக்கிறது. முதலில் இத்திரைப்படத்திற்கு சிறப்பிதழ் கொண்டு வந்த படச்சுருளுக்கு நன்றி. இத்திரைப்படத்தை பார்த்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் சலனம் உருவாகியிருக்கும். எளிய மக்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பு மாறாமல் பதிவு செய்வது அவ்வளவு எளிதானதல்ல. தனது திட்டமிடப்பட்ட உழைப்பால் இதை சாத்தியமாக்கி இருக்கிறார் , லெனின் பாரதி. இந்த இதழில் இடம்பெற்ற அனைத்து கட்டுரைகளும் இந்தத் திரைப்படம் அவர்களுக்கு உருவாக்கிய மனப்பதிவுகளாக அமைந்திருந்தன. இந்த இதழில் இடம்பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தில் நேரடியாக பங்குபெற்ற ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் நேர்காணலும் , இயக்குனர் லெனின் பாரதியின் விரிவான நேர்காணலும் முக்கியமானதாகிறது.


வசனம் எழுதிய ராசி தங்கதுரை மற்றும் படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் அவர்களின் மனநிலையையும் பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் இத்திரைப்படத்தின் வசனம் மிகவும் முக்கியமான ஒன்று. படத்தொகுப்பு எனும் போது லெனின் பாரதி சொன்னது போல 99 நிமிடங்கள், இரண்டு மணி நேரம் மற்றும் 3 மணி 20 நிமிடங்கள் என மூன்று அளவுகளில் படத்தின் தன்மை மாறாமல் சுருக்க வேண்டிய சவால்கள் குறித்தும் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். எந்த இதழும் அதற்கான பக்கங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இதை குறையாகவும் பார்க்க வேண்டியதில்லை. 


லெனின் பாரதி இத்திரைப்படத்தை உருவாக்கிய விதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இங்கே நிறைய கதைகள் அறைக்குள்ளேயே எழுதப்பட்டு , அரங்குகளிலேயே தான் படமாக்கப்படுகின்றன. அப்படியே கதைக்களத்தில் எடுத்தாலும் அம்மக்களின் உணர்வுகள் பிரதிபலிக்கப்படுவதில்லை. இதற்கு முன்பும், சமீப காலங்களில் கூட மலையையும் , மலையை ஒட்டிய நிலப்பரப்பையும் கதைக்களமாக வைத்து பல படங்கள் வெளிவந்திருந்தாலும் அவை இயல்பாகவும் இல்லை, அம்மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் இல்லை. 


லெனின் பாரதி , இத்திரைப்பட உருவாக்கத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொன்றையும் திட்டமிட்டே செயல்பட்டதால் அவருக்கு இது சாத்தியமாகியுள்ளது. இத்திரைப்படத்தின் வசனங்களே இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றாலும் இந்த திரைப்படத்தின் பல சொல்லாடல்கள் எங்கள் பகுதியிலும் உண்டு. ஒளிப்பதிவு நமது கவனத்தை மாற்றாமல் பார்த்து கொள்கிறது. மற்ற படங்களில் பின்னணி இசை மட்டுமே செய்யும் வேலையை இப்படத்தில் ஒளிப்பதிவும் இசையுடன் சேர்ந்து செய்திருக்கிறது.இதுவரை பார்த்த தமிழ் திரைப்படங்களில் 'சிவப்பு மல்லி' திரைப்படத்திற்குப் பிறகு கம்யூனிச கொடிகளை திரையில் பார்த்த திரைப்படமாக இதுவே இருக்கிறது. இடதுசாரி சிந்தனையுடன் படமெடுக்கவே இங்கே ஆட்கள் குறைவு. தங்கள் நிலப்பரப்பை தாண்டி வாழ்பவர்களின் நிலையை இன்னமும் தமிழ் சினிமா வெளிப்படுத்தவில்லை. விவசாயிகளின் வாழ்க்கையையும் , மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் அவர்களின் நிலையிலிருந்து அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இன்னமும் திரைப்படங்கள் வெளிவரவில்லை. ஆனால் தமிழக மக்கட்தொகையில் விவசாயிகளும் , மீனவர்களுமே அதிகம். இப்படி ' மேற்குத் தொடர்ச்சி மலை ' திரைப்படத்தை அது முன் வைக்கும் அரசியலைத் தாண்டி பேசுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. 


'மேற்குத் தொடர்ச்சி மலை ' திரைப்படம் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. படத்தின் பின் பகுதியில் ஏன் கழிவிறக்கத்தை உருவாக்க வேண்டும். ஈரானிய திரைப்படங்கள் எளிய மக்களின் வாழ்க்கையைத் தான் அதிகமும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் அங்கே எளிய மனிதர்களுக்கே உரித்தான பாசாங்கற்ற அன்பு தான் முன்னிலைப்படுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அன்பிற்கு குறைவில்லை தான். ஆனால் கழிவிறக்க மனநிலை உருவாகாமல் தடுத்திருந்திருக்கலாம். இந்த வாழ்வு தரும் எவ்வளவு பெரிய இழப்புகளையும் அநாயசமாக கடந்து செல்வதுடன் , அந்த வாழ்க்கையை கொண்டாடுபவர்கள் தான் எளிய மனிதர்கள். அப்படியான மனநிலை தான் அவர்களின் நீடித்த மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. அந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் உலகமயமாக்கல் பாதிக்கவே செய்திருக்கிறது ,அதை மறுப்பதற்கில்லை. நிலத்தை அடைவதை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்று காண்பித்து இருக்கலாம். 


இந்த பூமியின் ஒவ்வொரு நிமிடமும் உழைக்கும் மக்களின் உழைப்பால் தான் நகருகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் உழைக்கும் மக்களின் நிலை இன்னமும் மேம்படவில்லை. தொழிற்சங்கங்கள் வலுவிழந்தது தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அரசு வேலை செய்பவர்களுக்கு இருப்பது போன்ற வலிமையான தொழிற்சங்கங்கள் மற்ற உழைக்கும் மக்களுக்கு இல்லை. அமைப்பு சார்ந்த தொழிற்சங்களாலேயே இன்றைய முதலாளிகளையும் , அரசையும் எதிர்கொள்ள முடியவில்லை. சமீபத்திய யமாகா போராட்டம் ஒரு உதாரணம். தங்களின் உழைப்பை கூலியாக பெறும் ஒவ்வொருவரையும் அமைப்பிற்குள் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. அவர்களின் பணி பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். தற்போது அரசு வேலையில் மட்டுமே பணிப்பாதுகாப்பு இருக்கிறது.அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் ஏறக்குறைய 20,000 என இருக்கிறது. மற்றவர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியமாக 10,000 என்ற அளவிற்கு கூட இன்னமும் உயரவில்லை. சம வேலைக்கு சம ஊதியம் என்பது இன்னமும் சாத்தியமாகவில்லை. விலைவாசி என்பது எல்லோருக்கும் ஒன்று தானே. உழைக்கும் மக்கள் விசயத்தில் கேரளமே முன்னோடி மாநிலமாக இருக்கிறது. 


வணிக நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் இன்னும் பல இடங்களில் பணியாற்றுபவர்கள் வேலை இல்லாத போதும் கூட உட்கார்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. திரைப்படங்களும் , சின்னத்திரையில் ஒளிபரப்படும் தொடர்களிலும் ஆண்டான் அடிமை மனநிலையையே பிரதிபலிக்கிறார்கள். வர்க்க பேதங்களை கேள்வி கேட்பதற்கு பதலாக அவை இயல்பானதாக சித்தரிக்கப்படுகின்றன. சாலையில் செல்லும் போது, சரக்கு வாகனங்களில், ஏற்றப்பட்ட சரக்குகளின் மீதமர்ந்து பயணிப்பவர்களையும், கூலி வேலைக்காக சேர் ஆட்டோவிலோ, சரக்கு வாகனத்திலோ நெருக்கிப்பிடித்து செல்லும் உழைக்கும் மக்களையும் காணும் போது மனம் குற்றவுணர்வடைகிறது. இப்படி இந்த திரைப்படம் உருவாக்கிய சலனங்கள் அதிகம். லெனின் பாரதி , இத்திரைப்படத்தை திரையரங்கோடு விட்டுவிடாமல் வேறு தளங்களுக்கும், பள்ளி , கல்லூரிகளுக்கும் கொண்டு செல்ல இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அடுத்து வெளிவர இருக்கும் 3மணி 20 நிமிடங்கள் வடிவத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். 


மேற்குத் தொடர்ச்சி மலை படக்குழுவிற்கு வாழ்த்துகள் !

30-10-2018 

மேலும் படிக்க :

ஜமா - கலையின் கலை ! 

அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !

 


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms