27-09-2025 அன்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஓவியர் ரவி பேலட் மற்றும் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகர் அவர்களின் ஒருங்கிணைப்பில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சூழலில் சலில் சௌதுரி என்ற பெயருடன் எப்போதும் நமக்கு நினைவிற்கு வருபவர் இசை விமர்சகர், ஷாஜி . ஷாஜிக்கு சலில் சௌதுரி போல நாம் எல்லோருமே ஏதோ ஒரு இசைக்கலைஞரை மற்ற கலைஞர்களை விட தீவிரமாக கொண்டாடுபவர்களாகவே இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் பிடித்தமானவராக இருப்பார். அந்த வகையில் நான் தீவிரமாக கொண்டாடும் இசைக்கலைஞர், மலேசியா வாசுதேவன் ❤️.
ஷாஜி அவர்களுடனான நட்பின் தொடக்கமே மலேசியா வாசுதேவன் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக சென்னையில் நடைபெற்ற அவரது இரண்டாவது நூலான ' இசையின் தனிமை ' நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வுதான் ( 18-09-2010). அப்போதிருந்து இந்த நட்பு தொடர்கிறது. இதற்கும் மலேசியா வாசுதேவன் நிகழ்விற்கு பிறகு சலில் சௌதுரி நிகழ்வில் தான் நேரில் சந்தித்துக் கொள்கிறோம். 15 ஆண்டுகள் இடைவெளி. நிகழ்விற்கு வந்திருப்பதை தெரிவிக்காமல் அரங்கத்தின் நடுவில் அமர்ந்திருந்தாலும் அடையாளம் கண்டுகொண்டு மேடையிலேயே நினைவுகூர்ந்தார்.
நண்பர் புஹாரி ராஜா அவர்களையும் முதன் முதலாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. யாரும் அடையாளப்படுத்தாத, யாரும் கண்டுகொள்ள விரும்பாத விளிம்பு நிலை மனிதர்களை தொடர்ந்து தனது ' Buhari Junction YouTube channel ' மூலமாக பதிவு செய்து வருகிறார். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நாமெல்லாம் நினைக்க மட்டுமே செய்கிறோம். புஹாரி ராஜா போன்றவர்கள் தான் அதை செயல்படுத்துகின்றனர். முன்பே அறிமுகமில்லாத நபராக இருந்தாலும் நான் பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் " நீங்க மளிகை கடையில் உட்கார்ந்து இருக்கீங்க, நான் கறிக் கடையில் உட்கார்ந்து இருக்கேன் அவ்வளவு தான் வித்தியாசம்" என்று கூறியது அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தியது. மளிகைக் கடையில் இருந்தாலும் தனிப்பட்ட எழுத்து, வாசிப்பு, இசை, சினிமாவுடன் முடிந்துவிடுகிறது. உங்களைப் போல சமூகத்துடன் நேரடி தொடர்பில் இல்லை தோழர். உங்களது பணி மிகப்பெரியது. நீங்கள் நினைத்தபடி எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் புஹாரி ராஜா அவர்களே ❤️
பிராபாகர் ஐயா அவர்களின் கலகலப்பான அறிமுக உரையுடன் விழா தொடங்கியது. ஐயா குறிப்பிட்டது போல 'இசை விமர்சகர் ஷாஜி ' என்ற அவதாரத்தை நாங்கள் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். " உங்களுக்காக என்ன வேணா செய்யுங்க எல்லாவற்றையும் ஆதரிக்கிறோம். ஆனால் அப்பப்போ எங்களுக்காக இசை குறித்தும் ஏதாவது எழுதுங்க" என்று ஷாஜி அவர்களை அவரின் இசை எழுத்தின் ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
உண்மையிலேயே எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் கலந்து கொண்ட நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது. ஷாஜி அவர்களை தூக்கத்தில் எழுப்பி சலில் சௌதுரி குறித்து பேச சொன்னால் கூட மட மடவென பேச ஆரம்பித்து விடுவார் என நினைக்கிறேன். ஷாஜி பேசிய ஒவ்வொரு முறையும் உற்சாக மிகுதியிலேயே பேசினார். சலில் சௌதுரியின் இசை நுணுக்கங்கள் குறித்தும் அவரது வாழ்வு குறித்தும் இன்னும் நெருக்கமாக ஷாஜியின் பேச்சின் ஊடாக தெரிந்து கொள்ள முடிந்தது.
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற உஷா ராஜ் அவர்களும் மற்றும் சனில் ஜோசப் அவர்களும் சிறப்பாக பாடி சலில் சௌதுரியின் இசைக்கு பெருமை சேர்த்தனர். விழாக் குழுவில் இருந்த ரவி பேலட் அண்ணன், ஷாஜியின் நெருங்கிய நண்பராக இருந்தும் ஒன்றை மறந்து விட்டார். நிகழ்விற்கான அழைப்பிதழில் இசை விமர்சகர், எழுத்தாளர் & நடிகர் என்று மட்டும் போட்டுவிட்டு, ஷாஜி அவர்கள் பாடுவது போன்ற ஒரு ஒளிப்படத்தையும் போட்டுவிட்டு அவரின் புதிய அவதாரமான பாடகர் என்பதை சேர்க்க மறந்துவிட்டார். ஆம் இசை விமர்சகர் ஷாஜி அவர்களுக்கு பாடவும் தெரியும். சலில் சௌதுரிக்காக எந்த அவதாரத்தையும் எடுக்க ஷாஜி தயாராகவே இருக்கிறார். சலில் சௌதுரி குறித்தான அவரது ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும்.
கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கமும் சிறப்பாக இருந்தது. நல்ல ஒலித்தரத்தில் நல்ல இசையைக் கேட்க முடிந்தது. உஷா ராஜ் அவர்கள், இசை மீது தீரா ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தான் பாடவில்லை என்றாலும் மற்றவர்கள் பாடும் பாடலையும் கூடவே சேர்ந்து வாயசைத்துக் கொண்டிருந்தார். சனில் ஜோசப் அவர்களின் குரலும் கேட்பதற்கு நன்றாக இருந்தது. தங்களது பணிகளுக்கு இடையிலும் ஷாஜிக்காகவும், சலில் சௌதுரிக்காகவும் மதுரை நிகழ்வில் கலந்து கொண்ட இந்த இருவருக்கும் பார்வையாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இசைக்கு எல்லைகள் கிடையாது என்பது இந்த AI காலத்திலும் தொடர்ந்து நிரூபனமாகி வருகிறது. இந்த நிகழ்வில் இதுவரை கேட்காத நிறைய சலில் சௌதுரி அவர்களின் பாடல்களைக் கேட்க முடிந்தது. ' ஓணப் பூவே.. பூவே.. ' என்ற மலையாள பாடல் பாடி முடிக்கப்பட்ட பிறகு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் மீண்டும் அந்தப் பாடலை ' ஒணப் பூவே .. பூவே.. ' என பாடிக் கொண்டிருந்தான். அதைக் கேட்க மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கால குழந்தைகள் காதை ஒரு 'வலி' பண்ணும் அனிருத் பாடல்கள் மட்டுமே கேட்பார்கள் என்ற பிம்பம் உடைந்தது. தவறு நம்மிடமும் இருப்பது போலவே தோன்றுகிறது. நமக்கு பிடித்த இசையை நாம் தொடர்ந்து கேட்கும் போது ஏதோ ஒரு தருணத்தில் அந்த இசையை குழந்தைகளும் கேட்க ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்.
ஷாஜி அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னது போல சலில் சௌதுரியின் ஒரே டியூனாக இருந்தாலும், வெவ்வேறு இடங்களில் மீண்டும் பயன்படுத்தினாலும் அந்த பாடலும் வெற்றிப் பாடலாக அமைவது தான் சலில்தாவின் திறமைக்கு எடுத்துக்காட்டு. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருமே சலில் சௌதுரி குறித்து கூடுதலாக எதையாவது தெரிந்து கொண்டுதான் அரங்கத்தை விட்டு வெளியேறி இருப்பார்கள். குறைந்தபட்சம் இப்படி ஒரு இசையமைப்பாளர் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார் என்றாவது அறிந்திருப்பார்கள்.
நிகழ்வு முடிந்த பிறகு தீவிரமான அரசியல் பேசும் ஓவியங்களை தொடர்ந்து வரையும் ரவி பேலட் அண்ணன் அவர்களையும் முதன் முதலாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. எங்களுக்காக அவர் ஓவியங்கள் வரைந்திருந்தாலும் நேரில் சந்தித்ததில்லை. மிகவும் அக்கறையுடன் விசாரித்தார். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பே நிறைந்திருந்தது. மகிழ்வான தருணம்.
ஷாஜி அவர்களை இவ்வளவு உற்சாக மிகுதியில் இதற்கு முன்பு பார்த்ததில்லை. " தம்பி, நீயே இப்ப தான் இரண்டாவது தடவை நேரில் பார்க்கிறதா சொன்ன. இதுல பல தடவ நேரில் பார்த்த மாதிரி பேசுற" என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. அவரிடம் பல முறை பேசியதிலிருந்து குறிப்பிடுகிறேன். நமது மனதிற்கு பிடித்தமானவர்களைப் பற்றி பேசும் போது தான் நம்மால் சலிப்பே இல்லாமல் மணிக்கணக்காக பேச முடியும். அப்படித்தான் சலில்தா பற்றி ஷாஜி பேசுகிறார் என நினைக்கிறேன்.
சலில் சௌதுரியின் இசையைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ' சொல்லில் அடங்காத இசை' என்ற ஷாஜி அவர்களின் முதல் புத்தகத் தலைப்பைத் தான் குறிப்பிட வேண்டியிருக்கும். அதனால் தான் சலில்தாவால் மொழிகள் கடந்தும் வெற்றிப்பாடல்களை கொடுக்க முடிந்திருக்கிறது.
" இன்னிசை மட்டும் இல்லையென்றால்... " நம் வாழ்வு இன்னும் சிக்கலாகவே இருக்கும். இசையுடன், கலையுடன் கூடவே இயற்கையுடன் இந்த வாழ்வை வாழ்ந்து முடிப்போமாக !
அந்த சனிக்கிழமை மாலையை சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் நன்றி 🙏
#SalilChowdhury
#salilchowdhury100
மேலும் படிக்க :
மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !
CHAT WITH CHEN - அலெக்ஸ் - நேர்காணல் ❤️
0 comments:
Post a Comment