Thursday, October 31, 2019

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!



ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு  நாளிதழிலோ, வார இதழிலோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஒரு துணுக்கு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அந்த துணுக்கின் கீழே " அறந்தை நாராயணன் எழுதிய 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ' எனும் நூலிலிருந்து " என்று போட்டிருந்தது. அன்றிலிருந்து தொடங்கிய தேடல் இப்போது தான் முடிவிற்கு வந்திருக்கிறது. அந்த அளவிற்கு அந்த துணுக்குச் செய்தியில் ஒரு வசீகரம் இருந்தது. எப்படியாவது இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற தேடல் தொடங்கியது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் எனது முதல் வழிகாட்டி. என்னையறியாமலேயே எனக்குள் பொதுவுடமை கருத்துக்களை அவரது பாடல்கள் மூலம் விதைத்தவர்.

இந்த புத்தகத்திற்கான தேடலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய எவ்வளவோ புத்தகங்கள் கண்ணில்பட்டன, அவற்றில் பலவும் வாங்கப்பட்டன.ஆனால் எதுவும் ஈர்க்கவில்லை. இதனால் அறந்தை நாராயணன் எழுதிய புத்தகத்திற்கான தேடல் முடிவடையவேயில்லை. எந்த புத்தக கடைக்குச் சென்றாலும் , எந்த புத்தகத் திருவிழாவிற்குச் சென்றாலும் கண்கள் முதலில் இந்தப் புத்தகத்தைத் தான் முதலில் தேடும். இந்தப் புத்தகம் ஒரு சாகித்ய அகாதமி வெளியீடு என்பதால் புத்தகத்திருவிழாவில் ஆர்வத்துடன் நுழையும் இடமாக சாகித்ய அகாதமி அரங்கே இதுவரை இருந்திருக்கிறது. இந்நிலை இனி மாறக்கூடும்.

சமீபத்தில் தோழர் யமுனா ராஜேந்திரன் எழுதிய பதிவொன்றில் அறந்தை நாராயணனின் அறச்சீற்றம் பற்றி குறிப்பிட்டு இருந்தார். எதற்கும் மீண்டும் ஒரு முறை அறந்தை நாராயணன் பற்றி தேடிப்பார்ப்போம் என்று இணையத்தில் தேடிய போது CommonFolks இணையதளத்தில் அறந்தை நாராயணனின் மூன்று நூல்கள் விற்பனைக்கு இருந்தன. அதில் இத்தனை ஆண்டுகளாக தேடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய புத்தகமும் இருந்தது. மற்ற இரண்டு நூல்களுக்கு அட்டைப்படங்கள் இருந்தன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நூலிற்கு அட்டைப்படம் கூட இல்லை. எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று உடனடியாக மூன்று புத்தகங்களையும் ( மற்ற இரண்டு நூல்கள் , நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன், மேடையில் பேசலாம் வாருங்கள் ) வாங்குவதற்கு பணம் செலுத்தினேன். இரண்டு நூல்கள் மட்டுமே உள்ளன அவற்றை உங்களுக்கு அனுப்புகிறோம் என்று குறுஞ்செய்தி வந்தது. இம்முறையும் கிடைக்காது போல என நினைத்திருக்கும் போது மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. 'மேடையில் பேசலாம் வாருங்கள்' புத்தகம் மட்டும் இல்லை என்று. மனம் பெருமகிழ்ச்சி அடைந்தது.

மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு மதிய வேளையில் புத்தகங்கள் அடங்கிய பொட்டலம் கைக்கு வந்து சேர்ந்தது. மிகுந்து ஆர்வத்துடன் பிரித்து இந்தப் புத்தகத்தின் அட்டையை மட்டும் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். 15 ஆண்டுகளுக்கும் மேலான தேடல் அல்லவா ? பிறகு ஒரே மூச்சில் இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்த மூன்றாவது புத்தகம் இது என நினைக்கிறேன். முந்தைய இரு நூல்கள் , ' எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்', ' நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ' . அறந்தை நாராயணனின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இப்படியொரு புத்தகத்தை வாசிப்பதற்கு இன்னும் பத்தாண்டுகள் கூட காத்திருக்கலாம் என்ற மனநிலையே உருவானது. அந்த அளவிற்கு அறந்தை நாராயணனின் எழுத்து நடை அமைந்திருந்தது. இவரின் அனைத்து புத்தகங்களையும் வாசிக்க ஆவல் பெருகுகிறது. ஒரு வாசகரை இப்படி உணரச்செய்வது சாதாரண விசயம் அல்ல. ஆனால் அறந்தை நாராயணன் இப்படி உணர வைக்கிறார். இந்தப் புத்தகம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரலாற்றை மட்டும் சொல்லவில்லை, கூடவே இடதுசாரி இயக்கங்களின் வரலாற்றையும் கூறிச் செல்கிறது. துல்லியமான தரவுகளுடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரலாறும், இடதுசாரி இயக்கங்களின் வரலாறும் நம் கண் முன்னே விரிகிறது.

இடதுசாரி இயக்கத் தலைவர்கள் பற்றிய நிறைய குறிப்புகள் இந்நூலில் உள்ளன. தஞ்சாவூர் பகுதியில் இடதுசாரி இயக்கங்கள் செழித்து வளர்ந்ததற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் உள்ள தொடர்பு விளக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடல் உருவாவதற்கு காரணமான பின்னணி அழகாக விவரிக்கப்படுகிறது. தேவையான இடங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை மிகவும் நெருக்கமாக உணரச் செய்கிறது, இப்புத்தகம். பெரும் உழைப்பைக் கொடுத்தே இந்நூலை எழுதியிருக்கிறார், அறந்தை நாராயணன். மக்கள் கவிஞருக்கு உரிய மரியாதையை இந்நூல் செய்திருக்கிறது.

மண்ணில் வாழ்ந்தது 29 ஆண்டுகள் தானென்றாலும், எழுதிய பாடல்கள் குறைவென்றாலும் காலத்தால் அவ்வளவு எளிதாக அழிக்க முடியாத பாடல்களை எழுதிச் சென்றிருக்கிறார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருக்கு பிறகு தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்களில் இடதுசாரி சிந்தனையுடையவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. திராவிட மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் திராவிட திரையிசைப் பாடலாசிரியரே இன்னும் உருவாகவில்லை. அப்புறம் எங்கே இடதுசாரி பாடலாசிரியர் பற்றி சிந்திப்பது. மக்கள் கவிஞரை நேசிப்பவர்கள் , இடதுசாரி சிந்தனையுடையவர்கள் தவறவிடவே கூடாத புத்தகமிது. வாய்ப்புள்ளவர்கள் வாசியுங்கள். 96 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை ₹50.

இந்தப் புத்தகம் இவ்வளவு நாளாக கிடைக்காமல் போனதற்கு அச்சில் இல்லாதது தான் காரணம். முதற்பதிப்பு 1998 ஆம் வந்துள்ளது. அதன் பிறகு இரண்டாம் பதிப்பு கடந்த ஆண்டு (2018) தான் வெளிவந்திருக்கிறது. அதனால் தான் இப்போது கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க :

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்



Tuesday, October 29, 2019

நாமெல்லாம் கொலைகாரர்களே !

படம் - ரவி பேலட்

வளர்ந்தவர்களை மலக்குழியில் தள்ளி கொல்கிறோம். வளராதவர்களை ஆழ்துளை கிணற்றில் தள்ளி கொல்கிறோம். எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் கடந்து போகவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். மலக்குழி மரணங்கள் இன்று வரை விவாதப் பொருளாக ஆனதேயில்லை. ஆழ்துளை கிணறு மரணங்கள் விவாதப் பொருளாக மாறுவதற்கு இரண்டு வயது பிஞ்சுவின் மரணம் தேவையாய் இருக்கிறது. இரண்டுக்குமே முறையான இயந்திரங்களோ, பாதுகாப்பு வசதிகளோ இல்லை.

முதலில் இந்தியாவில் குழந்தைகள், குழந்தைகளாக நடத்தப்படுவதேயில்லை. குடும்பம், சமூகம், அரசு என மூன்றுமே குழந்தைகளின் மனநிலைகளையும், அவர்களைக் காத்து சரியாக வழி நடத்துவது எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்ந்ததேயில்லை. இன்றைய குழந்தைகள் தானே நாளைய எதிர்காலம் என்ற உணர்வு இந்திய நாட்டில் யாருக்கும் இல்லை. இந்தியாவில் கலை, இலக்கியம் கூட குழந்தைகளை கைவிட்டு விட்டன. அரிதாகவே கலையும், இலக்கியமும் குழந்தைகளை பதிவு செய்கிறது.

பேரிடர் மேலண்மை என்பது தமிழகத்தில் சுத்தமாக இல்லை. பேரிடர் மேலாண்மை குறித்த படிப்பும் குறிப்பிடும்படியாக எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை. பேரிடர் மேலண்மையில் முக்கியமாக தேவைப்படுவது சூழியல் அறிவு. இதுவரை நடந்த பேரிடர்களின் போது இவர்கள் செயல்பட்ட விதத்தைப் பார்க்கும் போது சூழியல் அறிவு என்பது யாருக்கும் இல்லை என தெளிவாகத் தெரிகிறது. கடலில் எண்ணெய் கொட்டினால் வாளியில் அள்ளுவது, திடீர் வெள்ளம் வந்தால் எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் முழிப்பது, நில அமைப்பு எப்படி இருக்கிறது என்ற புரிதல் இல்லாமல் இருப்பது, ஒக்கி புயலின் போதும், கஜா புயலின் போதும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது என சொல்லிக்கொண்டே போக முடியும். ஒக்கிப் புயலின் போது மீனவர்களை சாகவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தானே நாம்.  சூழியல் அறிவா ? அப்படியென்றால் என்ன ? என்று கேட்கும் நிலையே அரசிடம் இருக்கிறது. ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் அட்டையை விரித்தவர்கள் தானே அவர்கள்.

கல்பாக்கம், கூடங்குளம் என ஒன்றுக்கு இரண்டு அணுமின் நிலையங்கள் இருக்கின்றன. சிறு விபத்து ஏற்பட்டாலும் பேச கூட நேரம் இருக்காது. செத்து மடிந்து விடுவோம். நினைக்கவே அச்சமாக இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் எண்ணை எடுக்கும் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டால் ? பேரிடர்களை சமாளிக்கும் தகுதியே இல்லாமல் கார்பரேட்காரர்களுக்காக நாசகார திட்டங்களை தமிழகத்தில் எதற்காக அனுமதிக்கிறீர்கள் ? இரண்டு அரசுகளும் சேர்ந்து தான் அவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையிலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை அமைத்தன. இப்போது நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கத் துடிக்கிறார்கள், கொலைகாரர்கள்.

அறிவியல் , வளர்ச்சி என்பதெல்லாம் யாருக்கானது ? எல்லாமே மக்களுக்கானது. இதை பெரும்பாலான அரசுகள் உணரவேயில்லை. அரசு என்பது மக்களால், மக்களின் வரிப்பணத்தில் தான் நடக்கிறது என்பதே அரசு எப்போதும் நினைவில் வைப்பதேயில்லை.அரசுக்குத் துணையாக மக்களும் இதை மறந்துவிடுகிறார்கள். மக்களை கொத்து கொத்தாக கொல்வதற்கு, இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஓராயிரம் கருவிகள் இருக்கின்றன. கழிவுகளின் அடைப்பை சரிசெய்யவோ, ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறு உயிரைக் காப்பாற்றவோ நம்மிடம் முறையான கருவிகள் இல்லை. நிலவிற்கு ராக்கெட் அனுப்பியதற்கு பெருமிதம் அடைந்தவர்களே உங்கள் முகத்தில் நீங்களே காறி உமிழ்ந்து கொள்ளுங்கள்.

பெரிய அளவிலான உளவியல் பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது இந்நிகழ்வு. இரண்டு, மூன்று வயது குழந்தைகளை பார்க்கும் போது இவர்களைப் போற்றவன் தானே சுஜித்தும் என்ற எண்ணம் தான் முதலில் வருகிறது. யாராலும் இயல்பாக தங்களின் அன்றாட வேலைகளை கவனிக்க முடியவில்லை. '5 அடி, 10 அடி ' என எங்காவது வாசிக்க நேர்ந்தால் கூட சுஜித் தான் முதலில் நினைவிற்கு வருகிறான். என்ன செய்தும் , நம்மை நோக்கி கையசைந்த அந்த பிஞ்சை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வை ஒருபோதும் நம்மால் நீக்கிவிட முடியாது. நம்மை நம்பிய அந்த உயிரை குழிக்குள் வைத்தே கொன்று விட்டோம். நாமெல்லாம் கொலைகாரர்களே.

கடைசி நாளில் என்ன அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமோ அதை பிசக்காமல் செய்து முடித்திருக்கிறார்கள்.குழந்தையின் கைகளில் அசைவில்லை, குழந்தை மீது ஒரு அடி வரை மண் விழுந்துவிட்டது, உள்ளிருந்து துர்நாற்றம் வீசுகிறது, குழந்தை இறந்துவிட்டது என்று படிப்படியாக சொல்லி குழந்தையை அழுகிய நிலையில் மீட்டோம் என்று சொல்லி முடிவிற்கு கொண்டு வந்து விட்டார்கள். மீட்டது உண்மையிலேயே சுஜித் உடல் தானா ? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. போஸ்ட்மார்ட்டம் அறிக்கை என்று எதை காண்பிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முழுமையான விளக்கம் தேவை. அரசு இயந்திரத்திற்கு மனசாட்சி , குற்றவுணர்ச்சி என்றெல்லாம் எதுவும் இல்லை என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் மீது கைவைக்கும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்று பல முறை நமக்கு படிப்பினைகளை இயற்கை கொடுத்திருக்கிறது. ஆனாலும் நமது செயல்பாடுகளில் துளியும் மாற்றமில்லை. தனிப்பட்ட முறையிலும்,அரசு மற்றும் கார்பரேட் நிறுவனங்களாலும் இயற்கை வளங்கள் பெருமளவு பாதிப்புகளைச் சந்திக்கின்றன. இதற்கெல்லாம் சேர்த்து இயற்கை பதிலடி தரும் போது நம்மால் எதிர்கொள்ள முடிவதில்லை. இயற்கைக்கு கருணையே கிடையாதா ? ஆம், இயற்கைக்கு கருணை என்பது எப்போதும் இல்லை. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும் தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டே தான் இருக்கும். ஏற்கனவே இருப்பது அழிவது பற்றியோ, புதிதாக உருவாவது பற்றியோ எப்போதும் கவலைப்படாது. சமநிலை, சமநிலை அது மட்டுமே இலக்கு.

மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்கள் இயற்கையின் சமநிலையை பாதிப்பது இல்லை. இயற்கையுடன் இணைந்த வாழ்வையே அமைத்துக் கொள்கின்றன. மனித இனம் தான் இயற்கையின் சமநிலையை ஒவ்வொரு நிமிடமும் சிதைக்கிறது. அதற்கான பலனை அனுபவித்தாலும் திருந்தவேயில்லை. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை மட்டுமே நம்மை மீட்கும்.

Friday, October 4, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 10 !



இந்தியாவில் பாலியல் சார்ந்த சிக்கல்கள் அதிகமாக இருப்பதற்கு 'பாலியல் வறட்சி' தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. 'பாலியல் வறட்சி' மட்டுமே காரணமல்ல, 'பாலியல் வறட்சி'யும் ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. நாளுக்கு நாள் இந்திய சமூகம் அறிவியலை புறந்தள்ளுவது தான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு சில விசயங்களில் தொழிற்நுட்பங்களை மிக வேகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். மற்ற பல விசயங்களை அறிவியல் கண் கொண்டு பார்ப்பதும் இல்லை. எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துவதும் இல்லை. இந்த மனநிலையால் அதிகம் பயனடைவது மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டும் மத அடிப்படைவாதிகள் தான். மிகச் சாதாரண விசயங்களை கூட அறிவியல்படி பார்ப்பதில்லை. இதனாலேயே மற்ற நாடுகளைப் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம் இங்கே நிகழ்வது இல்லை. பாலியல் சார்ந்த விசயங்களையும் அறிவியல்படி பார்க்காதது தான் இந்திய சமூகம் தங்களுக்குள்ளே உருவாக்கிக்கொள்ளும் அதிகப்படியான பாலியல் சிக்கல்களுக்கும், பாலியல் வறட்சிக்கும் காரணம்.

பாலியல் குற்றங்கள் என்பது எல்லா நாடுகளிலும் நிகழ்கின்றன. ஆனால் அதிகப்படியான பாலியல் சிக்கல்கள் பெண்களை அடிமைகளாக நடத்தும் பின்தங்கிய நாடுகளிலேயே அதிகம் இருக்கின்றன. உதாரணமாக பெண்களின் உடை என்பது வளர்ந்த நாடுகளில் ஒரு பாலியல் சிக்கலாக இல்லை. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களின் உடை தான் எல்லா பாலியல் குற்றங்களுக்கும் காரணம் என எண்ணும் மனப்போக்கு உள்ளது. இதே போல பிடித்தமான துணையை தேர்ந்தெடுப்பதிலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகப்படியான சிக்கல்கள் இருக்கின்றன. எவ்வளவு படித்தாலும் கூட பெரும்பாலான பெண்களின் மற்றும் ஆண்களின் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், சுதந்திரமும் அவர்களிடம் இல்லை. இருவருக்கும் விருப்பமிருந்தால் அதிக வயது ஆண், குறைந்த வயது பெண்ணையோ, அதிக வயது பெண், குறைந்த வயது ஆணையோ திருமணம் செய்து கொள்வதில் எந்தவிதமான மனத் தடையோ, சமூகத் தடையோ வளர்ந்த நாடுகளில் இல்லை. ஆனால் இன்றும் தமிழகத்தில் பெரியார், குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்ததை பெரிய குற்றமாக பார்க்கிறார்கள். வயது வித்தியாசம் அதிகம் உள்ள ஜோடிகளை சமூகம் இயல்பாக பார்ப்பதில்லை. இதை ஒரு குறையாக பார்க்கும் மனநிலையே அதிகம் இருக்கிறது. பிடித்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் எந்தக் குறையும் இல்லை என்பதை உணரப் போகிறோமோ ? தெரியவில்லை.

' ஒடுக்கப்படுவது எந்த இனமாக இருந்தாலும், அந்த இனத்தின் குரலாக இருப்பதே சிறப்பு ' என்பதன் அடிப்படையில் பாலியல் சிக்கல்கள் என்று வரும் போது பெண்களின் பார்வையிலிருந்து அணுகுவது தான் சரியாக இருக்கும். ஆனால் யதார்தத்தில்
'பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது, ஆண்களுக்கு எல்லாம் தெரியும், பெண் என்றால் முட்டாள், ஆண் புத்திசாலி ' என்ற மனநிலை தான் மேலோங்கி இருக்கிறது. கிராமம், நகரம், படித்தவர், படிக்காதவர் என வேறுபாடில்லாமல் இந்த ஆணாதிக்க மனநிலை வேரூன்றி இருக்கிறது. இந்த மனநிலை ஆண்களிடமும், பெண்களிடமும் நிறைய மனக்குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. பெண்களை சகமனிதர்களாக நினைக்க ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை.

பெண்கள் தொடர்ந்து உடைமைகளாகவே பார்க்கப்படுவதற்கு , நடத்தப்படுவதற்கு பெரிய திரையான சினிமாவும், சின்னத்திரையான தொலைக்காட்சியும் தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மீண்டும் மீண்டும் போகப்பொருளாக, சிறியது முதல் பெரிய அளவிலான வன்முறைகளை ஏவும் உடலாக மட்டுமே பெண்கள், பெரிய திரையிலும், சின்னத்திரையிலும் சித்தரிக்கப்படுகிறார்கள். அதிலும் புதிய அறிமுகமாக 'கேம் ஷோ' என்ற பெயரில் பெண்களை உடலாகவே நிறுவும், அறுவெறுக்கத்தக்க ,கேவலமான வார்த்தைகளை பேசும் நிகழ்ச்சிகள் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் அதிகரித்து வருகின்றன. எந்தவித உறுத்தலும் இல்லாமல் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்புகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இதில் பங்குபெறும் பெண்களுக்கே தங்களை கேவலமாக சித்தரிக்கிறார்கள் என்று தெரியாமல் இருப்பது தான். அதிலும் தற்போதைய தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் அனைத்தும் பிற்போக்குத்தனங்களின் கூடாரம்.ஒரு மனிதராக, ஒரு குடும்பமாக, ஒரு சமூகமாக எதையெல்லாம் உதறிவிட்டு மேலெழுந்து வர வேண்டுமோ , அதையெல்லாம் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. மக்களை தொடர்ந்து அறியாமையில் வைத்திருக்கவே சின்னத்திரைகள் உதவுகின்றன.

சினிமாவில் பெண்கள், சித்தரிக்கப்படும் விதத்தில் இன்றும் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழவில்லை. தமிழ் சினிமா, திரையில் காட்டும் எந்தப்பெண்ணும் நிஜத்தில் அப்படி இருக்கமாட்டார். நிஜத்தில் இருக்கும் பெண்ணையும் சித்தரிப்பதில்லை, பெண் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியும் சித்தரிப்பதில்லை. ஆண்களின் கதாப்பாத்திரங்களுக்கு அழகு சேர்க்கவும், ஆண்களின் வீர தீரங்களை வெளிப்படுத்தவும், ஆண்களை சார்ந்து இருக்கும் வகையிலேயே பெண்களின் கதாப்பாத்திரங்கள் மரியாதைக் குறைவாகவே வடிவமைக்கப்படுகின்றன. பெண்களை சுயமரியாதையோடு சித்தரித்த திரைப்படங்கள் ( 'அவள் அப்படித்தான் ' போல ) மிகவும் குறைவு. அதிலும் சமீப காலங்களில் மனித சமத்துவத்திற்கு எதிரான மதம் சார்ந்த விசயங்கள் இரண்டு திரைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கப்படுகின்றன. இதே போல நிஜமான சிறுவர்களின் உலகம் திரையில் வெளிப்படுத்தப்படுவதேயில்லை. சமீப காலங்களில் இரண்டு திரைகளிலும் சிறுவர்களை, குழந்தைகளை காட்டுவதையே மிகவும் குறைத்துவிட்டார்கள். இவர்களெல்லாம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இல்லாத உலகத்தில் வாழ்வார்கள் போல.

எல்லாவிதமான ஊடகங்களும் மக்களுக்கு துணையாக இருப்பதற்கு பதிலாக , மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. பாலியல் சிக்கல்கள் குறித்து பெரிய அளவிலான விழிப்புணர்வை ஊடகங்களால் மக்களுக்கு ஏற்படுத்த முடியும். ஆனால் செய்யமாட்டார்கள். மக்களின் நலனிற்கு எதிராக செயல்படும் அரசுகளை மட்டுமல்லாமல் ஊடகங்களையும் சேர்த்தே எதிர்க்க வேண்டிய தேவை மக்களுக்கு உருவாகியிருக்கிறது. அரசுகள், ஊடகங்கள் இவற்றுக்கு பின் இருப்பது கார்பரேட்கள். கார்பரேட் துணையில்லாமல் அரசோ, ஊடகமோ செயல்பட முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். மக்களை தொடர்ச்சியான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பது தான் கார்பரேட் வணிகம். இதற்கு அரசுகளும், ஊடகங்களும் துணை போகின்றன.

பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளை, குற்றங்களை அரசாலும், ஊடகங்களாலும் தடுக்க இயலும். ஆனால் தடுப்பதற்கு பதிலாக மேலும் பிரச்சனைகளையே அரசும், ஊடகங்களும் உருவாக்குகின்றன. எந்தப் பிரச்சனையையும் அந்தப் பிரச்சனையாகவே சுருக்கி கடந்து போய்விடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட பிரச்சனை குறித்து தீர ஆராய்வதேயில்லை. அதே குற்றம் மீண்டும் நிகழாதவாறு தடுக்கும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது, ஊடகங்களுக்கும் இருக்கிறது.ஆனால் எளிதாக பொறுப்பைத் தட்டிக் கழித்து அடுத்த பிரச்சனையைத் தேடிப் போய்விடுகிறார்கள். மக்கள், தொடர்ந்து சுயசிந்தனை இல்லாதவர்களாக இருக்கவே அரசும், ஊடகங்களும் விரும்புகின்றன. அப்போது தான் கார்பரேட் அங்கே கால் பதிக்க முடியும். இன்றைய சூழலில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும் கார்பரேட்டின் பங்கு இருக்கிறது.
அதீத கார்பரேட் வணிகத்தில் அறம் என்ற வார்த்தைக்கு துளி கூட இடமில்லை. இனி வரும் காலம் என்பது கார்பரேட்களை எதிர்ப்பதில் தான் கழியப் போகிறது.

நாம் சந்திக்கும் அனைத்துவிதமான சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் இயற்கையிடம் மட்டுமே உள்ளன. கார்பரேட்களையும் இயற்கையின் துணை கொண்டு தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது. கார்பரேட்களுக்கு எதிரான வலிமையான ஆயுதம், இயற்கை. பாலியல் சார்ந்த சிக்கல்களுக்கும் இயற்கையே தான் தீர்வு. மற்ற விலங்கினங்களில் பாலியல் சார்ந்த சிக்கல்களும், பாலியல் சார்ந்த வன்முறைகளும் மிகவும் குறைவு அல்லது சுத்தமாக இல்லை என்றே கூறலாம். உலகிற்கே தான் ராஜா என நினைத்துக் கொண்டிருக்கும் மனித இனம் தான் பாலியல் சார்ந்த வன்முறைகளில் அதிகம் ஈடுபடுகிறது.

குழந்தைகளையும், சிறுவர்களையும் பாலியல் சார்ந்த அத்துமீறல்களில் இருந்து காப்பாற்றுவது தான் சமூகத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும். எந்தவித பாலியல் நோக்கமும் இல்லாமல் குழந்தைகளை குழந்தைகளாகவும், சிறுவர்களை சிறுவர்களாகவும் பார்க்கும் மனநிலை எல்லா மட்டத்திலும் உருவாவது அவசியமாகிறது. பெரும்பாலான குற்றங்களுக்கும் , பாலியல் குற்றங்களுக்கும் போதை தான் முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட மனிதரோ/ மனிதர்களோ போதையில் இல்லாமல் இருந்திருந்தால் அந்த குற்றம் அங்கே நிகழ்ந்திருக்காது. குற்றங்களை தடுக்க வேண்டுமானால் இந்த பார்வையும் முக்கியம்.

பிடித்த மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பது இன்றும் எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றாக இல்லை. புரிதல் இல்லாத உறவில் தொடர்வது கொடுமையானது. இந்த சூழலில் பிரிவதும் எளிதாக இல்லை, மறுதுணையை தேர்வு செய்வதும் எளிதாக இல்லை. அதிலும் பெண்கள் கல்யாணம் செய்வதற்காக மட்டுமே பிறந்தவர்கள் என்று இந்திய நாட்டின் பிரதமரே நினைக்கும் அளவிற்கு தான் இந்திய மனநிலை இருக்கிறது. இதில் மறுதுணை என்பது பெண்களுக்கு எளிதான ஒன்றாக இல்லை. முதல் திருமணத்தில் கிடைத்த கசப்பான விசயங்களால் பெண்கள் ,மறுமணம் குறித்து சிந்திப்பதும் குறைந்து வருகிறது. குழந்தைகள் இருந்தாலும் தனியாக வளர்த்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்.

கள்ளக்காதல் என சமூகம் வரையறுக்கும், சமூகத்தின் வரம்பு மீறிய காதல் என்பது காலங்காலமாக இருந்து வந்தாலும் அந்த காதலால் நிகழும் கொலைகள் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் கள்ளக்காதல் கொலைகள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. எந்த ஒன்றுக்கும் வன்முறை தீர்வு ஆகாது. இந்த கொலைகளால் அவர்களின் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோரில் ஒருவர் கொல்லப்படுவதும், மற்றொருவர் ஜெயிலில் இருப்பதும் எந்த அளவிற்கு அந்த குழந்தையின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதையும் சமூகம் உணர வேண்டும்.

தமிழகம் இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பதற்கு கல்வியில் அடைந்த முன்னேற்றமே முக்கிய காரணம். பகுத்தறிவு மண் என்று சொல்லிக்கொள்ளும் இதே தமிழகம் பாலியல் சார்ந்த விசயங்களை பகுத்தறிவுடன் ஆராய்வதில்லை. பாலியல் கல்வி தான் இன்றைய முதன்மையான தேவையாக இருக்கிறது. எங்கோ ஒரு மூளையில் யாரோ ஒருவர் பாலியல் சிக்கல்கள் பற்றி எழுதுவதாலோ, பேசுவதலோ ஒன்றும் நிகழ்ந்துவிடாது. முறையான பாலியல் கல்வியின் மூலமே சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும். பாலியல் சிக்கல்களை குறைப்பதற்கான முதல் ஆயுதம் பாலியல் கல்வி தான்.

சமூகத்தின் கருத்துப்படியே பார்த்தாலும் பாலியல் வறட்சியே இல்லாமல் செய்துவிட்டால் பாலியல் சிக்கல்கள் தீர்ந்துவிடும் தானே. இந்தியாவில் 'செக்ஸ் டாய்ஸ்' களுக்கு தடை இருப்பதாக சொல்கிறார்கள். இந்த தடையே நீக்கி விட்டாலே பாலியல் வறட்சி காணாமல் போய்விடும் தானே. இன்னொரு மனிதரை பாதிக்காத எதுவும் தவறில்லை . பல நாடுகள் 'செக்ஸ் டாய்ஸ்' குறித்தான விரிவான ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றன. எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செக்ஸ் டாய் இருக்கும் சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இருப்பது ஒரு வாழ்க்கை தானே வாழுங்கள். இதிலென்ன இருக்கு பேசுங்கள் !

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :










Monday, August 5, 2019

கஷ்மீர் மக்களை வாழ விடுங்கள் !


இந்தியா, ஒரு சிற்றரசுகளின் கூட்டமைப்பு என்பதை உணராத யாராலும் கஷ்மீர் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளவே முடியாது. கஷ்மீர் என்றால் தீவிரவாதம், தீவிரவாதிகள், வன்முறை, குண்டு வெடிப்பு, பாகிஸ்தான்,சீனா எல்லை பிரச்சனைகள் என்பதையே நம் தலையில் கட்டுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி இருக்கும் நிஜமான கஷ்மீரின் முகம் நம் கண்களுக்கு தெரிவதேயில்லை. நாம் தெரிந்து கொள்ளவும் விரும்புவது இல்லை.

கஷ்மீர் பெற்றிருக்கும் சிறப்பு அந்தஸ்தால் அந்த மாநிலத்திற்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அந்த சிறப்பு அந்தஸ்தை காரணம் காட்டி கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க மட்டுமே அந்த சிறப்பு அந்தஸ்து பயன்பட்டிருக்கிறது. உண்மையிலேயே அது சிறப்பு அந்தஸ்தாக இருந்திருக்குமானால் இந்திய அளவில் முதன்மையான மாநிலமாக கஷ்மீர் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கஷ்மீர் மற்ற இந்திய மாநிலங்களை விட 30 வருடங்கள் பின்தங்கியே இருக்கிறது. சாலை வசதி, கல்வி , மருத்துவம், விவசாயம், வேலைவாய்ப்பு என எல்லாமே மோசமான நிலையில் தான் இருக்கின்றன. படித்த பிறகு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை தீவிரவாத அமைப்புகள் குறி வைக்கின்றன. இது வரை வந்த அரசுகள் கஷ்மீர் மக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்திருந்தால் அவர்கள் முழுமையாக இந்தியாவை ஆதரித்து இருப்பார்கள்.

கஷ்மீர் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதில் இருக்கும் மிகப்பெரிய நன்மை கஷ்மீரின் சொக்க வைக்கும் இயற்கை வளங்கள் குன்றாமல் அப்படியே இருப்பது தான். அப்படிப்பட்ட அழகிய கஷ்மீரின் இயற்கை வளங்கள் இனி என்னாகும் என்பதே பெரிய கவலை. கார்பரேட்கள் கஷ்மீருக்குள் நூழைந்தால் நிச்சயம் இயற்கை வளங்கள் அழிவைச் சந்திக்கும்.

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற போதும் கஷ்மீர் மக்கள் இந்தியாவையோ, பாகிஸ்தானையோ ஆதரிக்கவில்லை. இப்போதும் பெரும்பாலான கஷ்மீர் மக்கள் இந்தியாவையோ, பாகிஸ்தானையோ ஆதரிக்கவில்லை. ராணுவத்திற்கோ, காவல்துறைக்கோ அதிகபட்ச அதிகாரம் கொடுத்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு கஷ்மீரும் ஒரு உதாரணம். ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆண்களைப் போலவே கஷ்மீரிலும் காணாமல் ஆக்கப்பட்ட ஆண்களின் பட்டியல் என்பது மிகவும் நீளம். பெண்கள் அடைந்து வரும் துன்பங்களும் அதிகம். எந்த அரசாங்கமும் ராணுவத்தின் குற்றங்களை நியாயமாக்கவே முயற்சிக்கும். அதற்கு இந்திய அரசாங்கமும் விதிவிலக்கல்ல.

கஷ்மீர், மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதால் கஷ்மீர் மக்களுக்கு எந்தவித நன்மையும் நடக்கப் போவதில்லை. மாநிலமாக இருந்த போதும் அவர்கள் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை. இந்தியாவுடன் சேர்ந்தால் இந்த உரிமைகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட சொற்ப உரிமைகளையும் இழக்கப் போகிறார்கள். பாசிச பார்ப்பன பாஜக அரசு எப்போதும் கார்பரேட்களுக்காகவே சிந்தித்து அவர்களுக்காகவே உழைக்கும் ஒரு அரசு. அந்த வகையில் இந்த மாற்றம் என்பது நிச்சயம் கார்பரேட்களுக்கு உதவும்.

தீவிரவாதம் என்பது நிச்சயம் கஷ்மீர் பகுதியில் இருக்கிறது தான் அதற்காக ஒட்டு மொத்த கஷ்மீர் மக்களையும் தீவிரவாதிகளை சித்தரிப்பதை பொது சமூகம் கைவிட வேண்டும். உலகிலுள்ள எல்லா மக்களையும் போலவே கஷ்மீர் மக்களும் வாழப் பிறந்தவர்கள் தான். அவர்களை வாழ அனுமதியுங்கள்.



Tuesday, July 16, 2019

யோகத்தால் உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து !


இப்படியான ஒரு இறுதிப்போட்டி இனி நடைபெற வாய்ப்பில்லை எனச் சொல்லும் அளவிற்கு மிகவும் சுவாரசியமான, பரபரப்பான போட்டியாக 2019 உலககோப்பையின் இறுதிப்போட்டி அமைந்தது. ஆனால் போட்டியின் முடிவு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை.

அரையிறுதிக்கான தகுதிச்சுற்றில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதியிலேயே வெளியேற்றப்பட்டுவிட்டன. தகுதிச்சுற்றில் முதலிடத்திலிருந்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றதால் நான்காம் இடம் பிடித்து தட்டுத்தடுமாறி தான் நியூஸிலாந்து அரையிறுதி வாய்ப்பைப் பெற்றது. இங்கிலாந்து அணிக்கோ கடைசி இரண்டு முதல் சுற்று போட்டிகளையும் வென்றால் மட்டுமே அரையிறுதியில் நுழைய முடியும் என்ற நிலைமை. அந்த கடைசி இரண்டு போட்டிகளும் இந்தியாவிற்கும், நியூஸிலாந்திற்கும் எதிரானதாக இருந்தது. இந்தியாவுடனான போட்டியில் இந்தியா வெல்ல வாய்ப்பிருந்த போதும் மெத்தனமாக விளையாடி தோற்றது. கடைசி போட்டியில் நியூஸிலாந்தை எளிதாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது, இங்கிலாந்து.

முதல் அரையிறுதியில் இந்தியாவும் , நியூசிலாந்தும் மோதின. சமியை ஆடும் 11 ல் சேர்க்காதது, தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கப்படாத தினேஷ் கார்த்திக்கை நெருக்கடியான சூழலில் நான்காவதாக இறக்கியது, தோனியை முன்பாகவே களமிறக்காதது போன்ற வியூக தவறுகளால் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இலங்கைக்கு எதிரான போட்டியைப் போல நியூஸிலாந்து நிர்ணயித்த சுலப இலக்கை எளிதாக எட்டி விடலாம் என்ற இந்திய அணியின் கணக்கு தவறாகிப் போனது. இரண்டாவது அரையிறுதியில் ஜந்து முறை கோப்பையை வென்ற, இத்தனையாண்டு காலமும் அரையிறுதியில் தோல்வியையே சந்திக்காத ஆஸ்திரேலிய அணியை எளிதாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, இங்கிலாந்து அணி.

இங்கிலாந்தின் இந்த தொடர் வெற்றிக்கு அந்த அணி மேற்கொண்ட ஒரு முக்கிய மாற்றமும் ஒரு காரணம். இரண்டாவது சுழற்பந்து வீச்சாளரான மோயின் அலியை நீக்கிவிட்டு மித வேகப்பந்து ஆல் ரவுண்டரான லியாம் பிளங்கட்டை அணியில் சேர்த்தது தான். இங்கிலாந்து பெற்ற தொடச்சியான வெற்றிகளில் பிளங்கட்டின் பங்களிப்பு அதிகம். நியூஸிலாந்து அணியும் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளரைச் சேர்க்காமல் மிதவேகப்பந்த ஆல்ரவுண்டரையே தொடர்ந்து தேர்வு செய்தது. இந்திய அணி ஒன்று மட்டுமே தொடர்ந்து இரண்டு முதன்மையான சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. சமி மிகவும் சிறப்பாக செயல்பட்டும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்திய அணியும் சாகல் மற்றும் குல்தீப்பை நீக்கி விட்டு ஜடேஜா, சமி, பும்ரா, புவனேஸ்வர் ,பாண்டியா என விளையாடி இருந்தால் நியூஸிலாந்து இவ்வளவு ரன்களை சேகரித்து இருக்காது. நியூஸிலாந்து 239 எடுத்த நிலையில் சாகல் பத்து ஓவர்களில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தார். இவருக்கு பதில் சமி இறக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இவ்வளவு ரன்களை கொடுத்து இருக்க மாட்டார், இரண்டு மூன்று விக்கெட்டுகளையும் எடுத்து இருப்பார். இனிமேலாவது சாகல் மற்றும் குல்தீப்பை கண்மூடித்தனமாக நம்புவதை இந்திய அணி கைவிட வேண்டும்.

இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 241 ரன்களை மிகவும் கடினப்பட்டே திரட்டியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போல இங்கிலாந்து அணி இந்த இலக்கை எளிதாக எட்டிவிடும் என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் முதல் அரையிறுதியில் இந்தியாவிற்கு அதிர்ச்சியளித்தது போலவே நியூஸிலாந்து அணி, இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. இங்கிலாந்து எளிதாக ரன்களை எடுக்க முடியவில்லை. மறுபக்கம் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. பென் ஸ்டோக்ஸூம், ஜோஸ் பட்லரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. பட்லர் ஆட்டமிழந்த பிறகு ஸ்டோக்ஸ் தனியாளாக போராடினார். இவர் தனியாளாக போராடுவது இந்த தொடரில் மூன்றாவது முறை. இலங்கைக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் இப்படித்தான் தனியாளாக போராடினார். இந்த வகையில் இவரை இங்கிலாந்து தோனி என குறிப்பிடலாம் போல.

ஜேம்ஸ் நிஷாம் வீசிய 49வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகியிருக்க வேண்டியது. ஸ்டோக்ஸ் தூக்கியடித்த பந்தை போல்ட் நன்றாக கேட்ச் செய்தார். ஆனால் எப்படியும் பவுண்டரி கயிறில் கால் வைக்காமல் சமாளித்து விடலாம் என்ற அதீத நம்பிக்கை தவறாகி போனது. பவுண்டரி கயிறில் கால் வைத்துவிட்டதால் சிக்ஸாக மாறியது. கேட்ச் பிடித்தவுடனேயே அருகிலிருந்த குப்திலிடம் தூக்கிப் போட்டிருந்தால் சிறப்பான கேட்சாக இருந்திருக்கும். நியூஸிலாந்து நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். பவுண்டரி கயிறில் கால் வைத்த பிறகே குப்திலிடம் தூக்கிப் போட்டதால் சிக்ஸாகிப் போனது. இந்த கணத்திலிருந்து நியூஸிலாந்தின் வெற்றியை தீர்மானிக்கும் பொறுப்பு இவர்கள் இருவரிடமே வந்து சேர்ந்தது.

இங்கிலாந்து வெற்றி பெற 15 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தின் இறுதி ஓவரை போல்ட் வீசினார். முதலிரண்டு பந்துகளில் ரன்கள் எடுக்கப்படவில்லை. மூன்றாவது பந்து சிக்ஸராக மாறியது. 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் மூன்றாவது பந்தை குப்திலிடம் அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடினார், ஸ்டோக்ஸ். குப்தில் பீல்டிங் செய்து கீப்பரை நோக்கி எறிந்த பந்து ரன்அவுட்டிலிருந்து தப்ப டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரியாக மாறியது. விதிப்படி அந்த பந்துக்கு 5 ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நடுவர்கள் தவறுதலாக 6 என கொடுத்துவிட்டனர். அதனால் 2 பந்துகளில் 3 ரன்கள் என்ற எளிதான இலக்காக மாறியது. 5வது பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் இரண்டாவது ரன்னிற்கு ஓடிய போது ரஷீத் ரன்அவுட் ஆனார். கடைசி 1 பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது, மார்க்வுட் ரன் அவுட் ஆனார், இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. போட்டி சமனில் முடிந்தது.

அந்த குப்திலின் ஓவர் துரோவிற்கு கொடுக்கப்பட்ட ரன்கள் போட்டி சமனில் முடிய காரணமாகிவிட்டது. எதிரணி பேட்ஸ்மேன் மீது பந்து படாத நிலையில் ஓவர் துரோவிற்கு ரன்கள் கொடுப்பது நியாயமானது. துரோவின் போது எதிரணி பேட்ஸ்மேன் மீது பட்ட நிலையில் ஒவர் தரோவாக மாறும் போது அதற்கு ரன்கள் கொடுப்பது நியாயமற்றது. இந்த விதியும் திருத்தப்பட வேண்டும்.

நியூஸிலாந்திற்கான சூப்பர் ஓவரை போல்ட் வீசமாட்டார் என நினைந்த சூழலில் மீண்டும் போல்ட்டே வீசினார். இங்கிலாந்து சார்பாக ஸ்டோக்ஸூம், பட்லரும் களமிறங்கினார்கள். மொத்தம் 15 ரன்கள் எடுத்தார்கள். அதுவும் சரியான களத்தடுப்பு அமைக்கப்பட்டிருந்தால் கடைசி பந்தில் அடிக்கப்பட்ட பவுண்டரி தடுக்கப்பட்டிருக்கும். 16 ரன்கள் இலக்காக நியூஸிலாந்து களமிறங்கியது. ஜேம்ஸ் நிஷாமும், மார்ட்டின் குப்திலும் களமிறங்கினார்கள். குப்திலின் திறமையை சந்தேகிக்க முடியாது என்றாலும் இந்த தொடரில் சரியாக ஆடாத நிலையில் அவரை தேர்வு செய்தது தவறானதாகும். இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீசினார். நிஷாம் மிகவும் நன்றாக விளையாடினார்.கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை. நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது. 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. முதல் 5 பந்துகளையுமே நிஷாமே சந்தித்து 14 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த பந்தை எதிர்கொண்ட குப்தில் பந்தை ஜேசன் ராயிடம் அடித்துவிட்டு முதல் ரன் எடுத்த பிறகு இரண்டாவது ரன்னுக்காக ஓடும் போது ஜேசன் ராய் பந்தை, கீப்பரான பட்லரிடம் எறிய குப்தில், பட்லரால் ரன் அவுட் செய்யப்பட்டார். 50 ஓவர் போட்டி சமனில் முடிந்தது போல, சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இப்படி இனி எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. இங்கிலாந்து இந்த நிலையை அடைய ஸ்டோக்ஸூம், பட்லருமே முக்கிய காரணம். போட்டியின் போது அடிக்கப்பட்ட பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளும் 50 ஓவர்களிலும், சூப்பர் ஓவரிலும் சமமான ரன்கள் எடுத்த பிறகும், வெற்றியை பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானித்தது விளையாட்டு உணர்விற்கு எதிரானது. ஏற்கனவே உள்ள விதி தான் என்றாலும் இனி கட்டாயம் இந்த விதி திருத்தப்பட வேண்டும். இது போன்ற சூழல் முன்பு அமையாததால் இந்த விதி குறித்தான விமர்சனங்கள் எழவில்லை. ஆனால் இப்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இனிமேலாவது இந்த விதியைத் திருத்த வேண்டும். உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்பதால் வெற்றியை இன்னொரு சூப்பர் ஓவரின் மூலம் தீர்மானித்து இருக்கலாம்.

இறுதிப்போட்டியில் இரு அணிகளும் வெல்லாத சூழலில் இப்போதைக்கு கோப்பை இங்கிலாந்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். இறுதிப்போட்டியில் எந்த அணியும் தோற்கவில்லை. எல்லோரும் எதிர்பார்த்தது போல இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதியிருந்தால் கூட ஆட்டம் இவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்குமா ? தெரியாது. உண்மையிலேயே முடிவைத் தவிர, மிகவும் சிறந்த இறுதிப்போட்டி இது தான்.

இங்கிலாந்து அணியை இங்கிலாந்து அணி மட்டுமே என மதிப்பிட்டுவிட முடியாது. தற்போதைய இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருக்கும் மோர்கன் கூட அயர்லாந்துகாரர் தான். அயர்லாந்து கிரிக்கெட் அணிக்காக 23 போட்டிகளில் விளையாடியவர் தான். இங்கிலாந்து கவுண்டி அணிக்காக விளையாடியதில் கவனம் பெற்று இங்கிலாந்து அணியில் நுழைந்து ,இங்கிலாந்து அணியின் கேப்டனாக மாறி அந்த அணிக்கு உலகக்கோப்பையையும் பெற்றுக்கொடுத்துவிட்டார். இதே போல பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்தில் பிறந்தவர், ஜோப்ரா ஆர்ச்சர் மேற்கு இந்திய தீவுகளில் பிறந்தவர், ஜேசன் ராய் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். இப்படியாக பல்வேறு காரணங்களுக்காக இங்கிலாந்தில் குடிபெயர்ந்தவர்களால் திறமை இருக்கும்பட்சத்தில் இங்கிலாந்து அணியில் இடம்பெற முடிகிறது.

திராவிட மண், பெரியார் மண் என்று சொல்லிக்கொண்டிருக்கும் தமிழகத்தில் இருந்து இன்று வரை பார்ப்பனர் அல்லாத ஒருவர் இந்திய அணிக்காக விளையாடவே இல்லை. பெரும் பாலும் இந்திய கிரிக்கெட் அணியில் பார்ப்பனர்களே அதிகம் இடம் பெறுகின்றனர். சாதி ஆதிக்கம் அதிகம் நிலவும் இடமாக இந்திய கிரிக்கெட் இருக்கிறது. இங்கே திறமையெல்லாம் இரண்டாம்பட்சம் தான். இந்த வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க கிரிக்கெட் பார்ப்பது என்பது உதவுகிறது. பேதங்களை மறந்து இந்தியர்களை ரசிகர்கள் என்ற அளவில் கிரிக்கெட் ஒன்றிணைக்கிறது. பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அணி விளையாண்டாலும் பார்க்கக்கூடியவர்களாகவே இருக்கின்றனர்.

ஓவர் துரோ விதியும், பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிக்கும் விதியும் திருத்தப்பட வேண்டும்.

கிரிக்கெட் வாழ்க !


மேலும் படிக்க :

Thursday, July 11, 2019

வெளியேறியது இந்திய கிரிக்கெட் அணி !


பெரும் நம்பிக்கையை உருவாக்கிய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்துவிட்டது. கோலியின் தவறான வியூகங்களே தோல்விக்கு காரணமாக இருந்துவிட்டது. தோனி அணித்தலைவராக இருந்த போது தோற்றாலும், வென்றாலும் பெரும்பாலும் ஆடும் 11 வீரர்களை மாற்றவே மாட்டார். இப்படி வீர்களை மாற்றாமலேயே விளையாடியது எல்லாப் போட்டிகளிலும் தோனிக்கு கைகொடுக்கவில்லை.இதனாலேயே தோனியின் அணித்தலைமை விமர்சிக்கப்பட்டது. கோலி பெரும்பாலும் ஆடும் 11 வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்தார். இந்த மனநிலை நிறைய போட்டிகளில் கைகொடுத்தாலும் பெரிய அளவிலான தொடர்களில் கோலிக்கு கைகொடுக்கவில்லை.

சாகல் , குல்தீப் மற்றும் ராகுலை அளவிற்கு அதிகமாக கோலி நம்புகிறார். இவர்களை விட திறமையானவர்கள் வெளியே நிறைய இருக்கிறார்கள். அணியிலுள்ள மற்ற வீரர்களின் திறமையான ஆட்டத்தால் இவர்களின் குறைகள் வெளியே தெரியவில்லை. வெளியே தெரிந்தாலும் கோலி இவர்களை நீக்க தயக்கம் காட்டுகிறார். இன்னும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட தகுதி இருந்தும் அஸ்வின் ஓரம் கட்டப்பட்டார். இந்த உலககோப்பை தொடங்கும் போதும் நாலாவது வீரராக தினேஷ் கார்த்திக்கை இறக்காமல் ராகுலையே நான்காவதாக இறக்கினார். தவான் காயம், ராகுல் தொடக்கவிரராக மாறினார். விஜய் சங்கர் நான்காவதாக இறக்கப்பட்டார். விஜய் சங்கர் காயம், தினேஷ் கார்த்திக்கை நான்காவதாக இறக்குவதற்கு பதிலாக ரிசப் பான்டை நான்காவதாக இறக்கி மீண்டும் தவறு செய்தார்.

ராகுலை விட ரகானே அந்த இடத்திற்கு பொறுத்தமான வீரராக இருந்திருப்பார். பான்ட் நான்காவது இடத்திற்கு பொருத்தமான ஆட்டக்காரர் இல்லை. மணிஷ் பாண்டே நான்காவது இடத்திற்கு பொருத்தமாக இருந்திருப்பார். ஆனால் அவருக்கு கேதர் ஜாதவ் அளவிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகளிலும் இரண்டு முதன்மையான  சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்குவது சரியான அணுகுமுறையல்ல.

சிறப்பாக விளையாடிய பிறகும் முகமது சமியை வெளியே உட்கார வைத்தது பெரும் தவறு. தொடர்ந்து சமி விளையாடி இருக்க வேண்டும். கண்டிப்பாக சாகல், குல்தீப்பை விட சமி சிறப்பாகவே விளையாடியிருப்பார். உலககோப்பை முழுவதுமே பந்துவீச்சில் ஓரளவு சமாளித்து விட்டார்கள். இந்தியா பெற்ற இரண்டு தோல்விகளும் சேசிங் குறைபாட்டால் நிகழ்ந்தது. இத்தனைக்கும் இரண்டுமே சேசிங் செய்திருக்க வேண்டியவை. தேவையில்லாத போதும் பேட்டிங் ஆர்டரை மாற்றியதாலேயே இரண்டு தோல்விகளும் கிடைத்திருக்கின்றன.

பாண்டியாவை முன்கூட்டியே இறக்க வேண்டிய தேவை இல்லாத போதும் மீண்டும், மீண்டும் முன்கூட்டியே இறக்கப்படுகிறார். நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியிலும் பாண்டியா இறங்கிய இடத்தில் (எப்போதும் தோனி இறங்கும் இடம் ) தோனி இறங்கியிருந்தால் நிச்சயம் இந்தியா வென்றிருக்கும். இனிமேலாவது பேட்டிங் ஆர்டரை தேவையில்லாத போதும் மாற்றும் மனநிலையை கோலி, கைவிட வேண்டும். கோலி தனது பேட்டிங் ஆர்டரை மட்டும் எப்போதும் மாற்றுவதேயில்லை. 48 வது ஓவரில் முதல் விக்கெட் விழுந்தாலும் கோலியே இறங்குகிறார். அப்போது பாண்டியாவை இறக்குவது பற்றி கோலி சிந்திப்பதில்லை. அணி தோற்றால் மட்டும் கேப்டனை விமர்சிக்கிறார்கள் என பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆர்டர் எப்போதும் போல் இருந்திருந்து தோற்று இருந்தால் கோலியை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இருந்திருக்காது.

ஜடேஜா முந்தைய தொடரில் தனது திறமையை நிரூபித்ததாலேயே உலக கோப்பை அணியில் இடம் பெற்றார். சாகலும், குல்தீப்பும் கோலியின் கண்களை மறைத்ததால் ஜடேஜா இடம்பெறவில்லை. இடம் பெற்ற இரண்டு ஆட்டங்களில் 41 ரன்களை களத்தடுப்பின் மூலம் தனது அணிக்காக சேமித்து இருக்கிறார். 9 போட்டிகளில் விளையாடியவர்கள் கூட இவ்வளவு ரன்களை சேமிக்கவில்லை. பந்துவீச்சிலும் நாற்பது ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக்கொடுத்து விக்கெட்களும் வீழ்த்தியிருக்கிறார். பேட்டிங்கில் கிடைத்த ஒரு வாய்ப்பும் நெருக்கடியாக (92-6 ) அமைந்தாலும் அணியை வெற்றிக்கு அருகில் (208-7  இலக்கு 240) கொண்டு வந்த பிறகே ஆட்டமிழந்தார். பாண்டியா போல ஜடேஜாவையும் மூன்று விதமான போட்டிகளிலும் களமிறக்க முடியும். இதே போல அஸ்வினுக்கும் உலக கோப்பை தொடருக்கு முன்பாக வாய்ப்பளித்திருக்க வேண்டும்.

எல்லா கால கட்டத்திலும் அணித்தேர்வில் கேப்டன்களின் தலையீடு இருக்கவே செய்யும். அதே போல யார் கேப்டனாக இருந்தாலும் குறிப்பிட்ட வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஆதரிக்கும் மனநிலையும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் ஒரு அணியாக கூட்டாக இணைந்து விளையாடுவதில் கோலியின் அணியே முன் நிற்கிறது. அணி வீரர்களை தேர்ந்தெடுப்பதிலும், பேட்டிங் ஆர்டரை மாற்றுவதிலும் கோலி கவனம் செலுத்த வேண்டும்.

தோனியின் தலைமைப்பண்பை விமர்சிக்க முடியும். ஆனால் அவரது விக்கெட் கீப்பிங் மற்றும் அவரது பேட்டிங்கை நாம் விமர்சிக்கவே முடியாது. இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு கேப்டனாக குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்ற பிறகும் சாதாரண வீரராக அணியில் தொடர்வது என்பது தோனியால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. தோனி களத்தில் இருக்கும் வரை வெற்றி நம்மிடம் இல்லை என்பது தான் இன்று வரை எதிரணிகளின் மனநிலை. இதை தனது கடைசி கட்டம் வரை தக்க வைத்திருப்பது தான் தோனியின் சாதனை. ஒரு கேப்டனாகவும் , ஒரு விக்கெட் கீப்பராகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் தோனியின் சாதனை மிகவும் பெரியது. சொந்த சாதனைகளுக்காக விளையாடிய எத்தனையோ பேர் இருக்கலாம், ஆனால், காலமெல்லாம் அணியின் வெற்றிக்காக மட்டுமே உழைத்தது தோனி மட்டுமே. தோனி ஒரு சகாப்தம்.

கோலி அடுத்த உலக கோப்பை வரை கேப்டனாக தொடர்வரா ? தெரியவில்லை. ஆனால் ஒரு வீரராக நிச்சயம் விளையாடுவார். காத்திருப்போம் 2023 வரை ! 

மேலும் படிக்க :

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

சினிமா - கிரிக்கெட் - இந்தியா !

கிரிக்கெட் !

Monday, June 24, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 9 !


"பெண்ணை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும் 
Touching a Woman without Her Consent is a Punishable Crime”

இப்படியொரு Disclaimer-ஐ முதன் முறையாக 'தாதா 87' என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேர்த்திருக்கிறார்கள். முதலில் இந்த Disclaimer-ஐ சேர்க்க நினைத்ததற்கே படக்குழுவிற்கு நாம் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவிக்க வேண்டும். இப்படி ஒரு Disclaimer போடுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடப் போவதில்லை தான். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் மனித மனங்களில் ஒரு சிறு அழுத்தத்தை இது உருவாக்கவே செய்யும். பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவது சமூக நலனை பெருமளவு பாதிக்கிறது. இன்னொரு விதமான பார்வை இருப்பதையும் தவிர்க்க முடியாது. ஏற்கனவே நிகழ்ந்து வந்த பாலியல் குற்றங்கள் இப்போது தான் அதிக அளவில் வெளியே தெரிய ஆரம்பிப்பதால் தான் பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகரித்து இருப்பது போல் தோன்றவும் வாய்ப்பிருக்கிறது.

பெண்ணை அனுமதியின்றி தொடுவதும், தொட நினைப்பதும் தவறு என்றே சமூகம் இன்னமும் உணரவில்லை. அனுமதியுடன் தொடுவதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. காமத்திற்காக, காதல் என்ற பெயரில் கல்யாணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து பெண்களை பயன்படுத்திவிட்டு பின்பு தூக்கியெறிவது இன்றும் குறைந்தபாடில்லை. பதின்பருவத்து பெண்களே இந்த வகையில் அதிகம் ஏமாறுபவர்களாக இருக்கிறார்கள். 16 வயதைக் கடந்தவர்கள் விருப்பத்துடன் பாலுறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சட்டம் சொல்கிறது. அந்த விருப்பம் என்பது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என்ற பக்குவத்தை பதின்பருவத்தினரிடம் நாம் உருவாக்கவில்லை. கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவு கொள்வது சட்டப்படி குற்றம்.கல்யாணம் பற்றிய சிந்தனையில்லாமல் விருப்பத்துடன் நிகழ்ந்தாலும் கூட பாதுகாப்பு நடைமுறைகள் இன்றும் சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை. நிகழும் பாலுறவு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அல்ல எனும் போது பாதுகாப்பு சாதனங்களை (குறிப்பாக ஆணுறை) கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் அவசியமாகிறது.

நம்பி ஏமாறுவது என்பது மிகப்பெரிய சிக்கலாக இன்று மாறியிருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றங்களின் பின்னணி இது தான். இந்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டவர்கள் தான். இதே போன்ற குற்றங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடக்கின்றன. குற்றங்களின் எண்ணிக்கையில் தான் வித்தியாசம். ஆனால் குற்றம் ஒன்று தான். பாலுறவை வீடியோவாக படம் பிடிப்பது என்பதும் அதை வைத்து பிளாக்மெயில் செய்வது என்பதும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. பெரும்பாலும் பெண்களின் விருப்பம் இல்லாமலோ அல்லது அவர்களுக்கு தெரியாமலோ தான் வீடியோ எடுக்கப்படுகிறது.பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுக்கப்பட்டது தெரிய வரும் போது பெண்களுக்கு அது பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது.தெரிந்தே கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோவால் பெண்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் இன்னமும் அதிகம். ஒரு சில பெண்கள் தெரிந்தே விருப்பப்பட்டே வீடியோ எடுக்க அனுமதிக்கிறார்கள். எந்த உள்நோக்கமும் இல்லாத யாரும் பாலுறவை வீடியோ எடுக்க மாட்டார்கள் என்பதை பெண்கள் உணர வேண்டும். காமிரா லென்ஸ் குறித்த கவனம் எப்போதும் நமக்கு இருக்க வேண்டும்.

பாலியல் வீடியோ குறித்த புரிதல் பதின்பருவத்தினருக்கும் இல்லை, சமூகத்திற்கும் இல்லை. நாட்டில் இவ்வளவு அத்துமீறல்கள் நடந்த பிறகும் கூட பள்ளி, கல்லூரிகளில் 'பாலியல் கல்வி' கொண்டு வர யாரும் தொடர்ந்து குரல் கொடுக்கவில்லை. எது சரி , எது தவறு என்று எதையுமே வேறுபடுத்திக் காட்டாமல் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அது எப்படிச் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆண்களுக்கு பாலியல் விசயங்களில் தவறானதைப் போதிக்க சினிமாவும், சமூகமும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. வீடியோ தெரிந்து எடுத்ததோ, தெரியாமல் எடுக்கப்பட்டதோ அதை வைத்து பிளாக்மெயில் செய்யும் போது மீண்டும் பலியாகாமல் அதை எதிர் கொள்ளும் பக்குவத்தை பெண்களுக்கு உருவாக்க வேண்டும். அதற்கு முதலில் பெண்ணுடல் குறித்த புனிதத்தன்மை ஒழிய வேண்டும். பெண்ணுடலில் மட்டுமல்ல இந்த பூமியிலேயே புனிதம் என்று எதுவும் இல்லை, அதே போல தீட்டு என்றும் எதுவுமில்லை. இந்த இரண்டுமே பார்ப்பனியத்தின் கூறுகள்.

வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண் இன்னொரு ஆணை சந்திப்பதற்கு யார் காரணம் ? மீண்டும் நாம் குடும்ப அமைப்பையே விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. காதலை மட்டுமல்ல நட்பைக்கூட பல குடும்பங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.குடும்பங்களில் காதல் மீதான வெறுப்புணர்வு குறையாதவரை பெண்களின் மீதான அத்துமீறல்கள் தொடரவே செய்யும். யாருடன் பழகுகிறோம், பழகுபவர்களில் யாரைச் சந்திக்க எங்கு போகிறோம் என்பதை வீட்டிற்கு தெரிவித்துவிட்டு போகும் சூழல் உருவாவது தான் இம்மாதிரியான சிக்கல்களைக் குறைக்க உதவும். ஆண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் கூட ஆண்களின் எந்தவிதமான நடவடிக்கையையும் பெரும்பாலான குடும்பங்கள் கண்டுகொள்வதில்லை. ஆண்கள் குறித்தும் குடும்பங்களில் வெளிப்படைத்தன்மையும், கண்காணிப்பும் உருவாக வேண்டும்.

பிழைத்திருப்பதற்கு இந்த வேலையே இவ்வளவு நேரம் செய்து தான் ஆக வேண்டும் என்றிருக்கும் உழைப்புச் சுரண்டலைப் போலவே பாலியல் சுரண்டலும் பெண்கள் மீது சில இடங்களில் திணிக்கப்படுகிறது. ஆண்களும் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும் பெண்களுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. அதிகளவு பாலியல் சுரண்டல் குடும்பங்களிலும், பணியிடங்களிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். குடும்பங்களில் சொத்துக்காகவும் மற்ற சில காரணங்களுக்காகவும் பெண்கள் மீது பாலியல் சுரண்டல் திணிக்கப்படுகிறது. அந்த காலத்தில் 'கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும்' என்றிருந்த பழக்கத்திற்கு பெண்கள் உடன்பட்டதற்கு குடும்பங்களில் நிகழ்ந்த பாலியல் சுரண்டலும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பணியிடங்களிலும் ( வேலையைக் காப்பாற்றிக் கொள்ள, பதவி உயர்வு பெற) பெண்கள் மீது பாலியல் சுரண்டல் திணிக்கப்படுகிறது. அரசின் அதிகார அமைப்புகளாலும் பெண்கள் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். எல்லாப் பெண்களும் இதற்கு பலியாவதில்லை என்றாலும் பாலியல் சுரண்டல் என்பது இருக்கவே செய்கிறது.

பாலியல் வன்கொடுமை என்பது பெண் மீது நிகழ்த்தப்படும் பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. கூட்டுப்பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த மனிதத்தன்மையற்றவர்களிடமிருந்து குழந்தைகளைக் கூட காக்க முடியவில்லை என்பது தான் பெரும் துயரம். பெரும்பாலும் மதுபோதையில் இருப்பவர்கள் தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களாக இருக்கிறார்கள்.இந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு மதுவும் ஒரு காரணமாகி விடுகிறது. மது குடிப்பது என்பது தனிமனித சுதந்திரம் என்றாலும் கூட அந்தக் குடியால் மற்ற மனிதர்களுக்கோ, சமூகத்திற்கோ எந்தப் பாதிப்பும் உருவாகாமல் இருப்பது முக்கியம். ஆனால் தமிழகத்தில் நிலைமை அப்படி இல்லை. தமிழக அரசின் மக்கள் விரோதக் கொள்கையால் மதுவிற்கு அடிமையான குடி நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்படியான குடி நோயாளிகளால் அவர்களது குடும்பமும் ,சமூகமும் பெரிய அளவில் கொடுமைகளை அனுபவிக்கிறது. குடி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாவது மிகவும் ஆபத்தானது.

பள்ளி மாணவர்கள் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதற்கு நவீன தொழிற்நுட்பங்களான தொடுதிரை தொலைபேசியும், இணைய வசதியும் காரணமாக இருக்கின்றன. இதை அவர்களே நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான பாலுறவு வீடியோக்களை இணைய வசதி இருந்தால் பார்க்க முடியும். பாலியல் வன்கொடுமை நிகழ்வதற்கு பாலுறவு வீடியோக்களும் ஒரு முக்கிய காரணமென்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் திருமணம் ஒன்று தான் பாலுறவிற்கு ஒரே வழி என்ற சூழலில் சமூக, பொருளாதார காரணங்களால் திருமணம் தள்ளிப் போகும் போது பாலுறவு வீடியோக்களும், சுய இன்பமும் தான் வடிகால்களாக இருக்கின்றன. இன்னொரு மனிதரைப் பாதிக்காத வரை எதுவும் தவறில்லை என்பது பாலுறவு வீடியோக்களுக்கும் பொருந்தும்.

விதவிதமான பிளாக்மெயில்கள் மூலம் நிகழும் பாலியல் வன்கொடுமைகள், சுரண்டல்கள், குடும்பங்களில், பணியிடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள், குழந்தைகள், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூர பாலியல் வன்கொடுமைகள், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், போரின் பெயரால் நிகழ்த்தப்படும் கூட்டுப்பாலியல் வன்கொடுமைகள் என சமூகத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளை பட்டியலிட்டுக்கொண்டே போக முடியும். இவ்வளவு வன்கொடுமைகளாலும் பாதிக்கப்படுபவர்களாக பெண்களே இருக்கிறார்கள். ஆனால் பொதுசமூகம் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகிறது. இது தான் ஆணாதிக்கத்தின் வெற்றி.

பாலுணர்வு என்பது பொதுவானது என்றாலும் கூட பெரும்பாலும் இது ஆணின் உடைமையாகவே பார்க்கப்படுகிறது. ஆண்களைப் போல தங்களின் பாலியல் இச்சைகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் பெண்களுக்கில்லை. பெண்கள் தங்களின் பாலியல் விருப்பங்களை வெளிப்படுத்துவதும் தரக்குறைவான செயலாகவே பார்க்கப்படுகிறது. பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபடுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆண்களின் அனைத்துவிதமான தப்புகளையும் மூடி மறைக்கும் வேலையை குடும்பம் என்ற அமைப்பு தொடர்ந்து கச்சிதமாக செய்து வருகிறது. தப்பு யார் செய்தாலும், ஆண் செய்தாலும் தப்பு தான் என்ற மனநிலை குடும்பங்களில் உருவாக வேண்டும். ஆணாதிக்க சமூகம் தான். ஆண்களிடம் மட்டுமல்லாமல் பெண்களிடமும் 'ஆண் எது செய்தாலும் சரி' என்ற ஆணாதிக்க மனநிலை மேலோங்கி இருக்கிறது தான். ஆனாலும் இதை அப்படியே தொடர அனுமதிக்கக்கூடாது. முதலில் பெண்கள், ஆணாதிக்க மனநிலைக்கு துணை போவதை கைவிட வேண்டும். இது குறித்தான தொடர்ச்சியான உரையாடல்கள் மூலமே கொஞ்சமேனும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

ஆண்களை எதிரிகளாக பார்ப்பதைத் தவிர்த்து ஆணாதிக்க மனநிலையை எதிரியாக பார்க்கும் பார்வையே முக்கியமானது. ஆண்கள் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட இந்த ஆணாதிக்க மனநிலை தான் காரணமாக இருக்கிறது. இந்த ஆணாதிக்க மனநிலையை தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவதன் மூலமே குற்றங்களைக் குறைக்க முடியும். பெண் மீதான ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம், இன ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம் என ஆதிக்க மனநிலையே இப்பூமியில் நிகழும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. ஆதிக்கமும், ஆணாதிக்கமும் ஒழியுமானால் இந்தப் பூமியே அமைதிப் பூங்காவாக மாறிவிடும். 
பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :








Wednesday, May 1, 2019

தொழிற்சங்கங்கள் எங்கே?


அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் (  https://clc.gov.in/clc/node/606 )கூட இன்னமும் தொழிலாளர்களுக்கு சென்றடையவில்லை. சமூகநீதி காக்கும் மண் என்று சொல்லிக்கொள்ளும் தமிழகத்தில் கூட இது தான் நிலைமை. 1990 வரை வலுவாக இயங்கி வந்த தொழிற்சங்கங்கள் அதன் பிறகு வலுவிழக்கத் தொடங்கி விட்டன. காரணம், 1990க்கு பிறகு தான் கார்பரேட் வணிகம் விரிவடைய ஆரம்பித்தது தான். கார்பரேட்களுக்காக தொழிலாளர் சட்டங்களும் திருத்தப்படுகின்றன, தொழிற்சங்கங்களும் அழிக்கப்படுகின்றன.

இன்றைய சூழலில் அரசு ஊழியர்களின் சங்கங்கள் மட்டுமே ஓரளவு வலுவுடன் இருக்கின்றன. அப்படி இருந்தும் கூட மத்திய,மாநில அரசுகளை தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற  நிர்பந்திக்க முடியவில்லை. இந்நிலையில் பெரும்பாலான தனியார் ஊழியர்களுக்கு தொழிற்சங்கங்கள் இல்லை. ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்களும் வலுவுடன் இல்லை. புதிதாக தொழிற்சங்கங்கள் உருவாகவும் முதலாளி வர்க்கம் அனுமதிப்பதில்லை. தொழிற்சங்கங்கள் இல்லாத சூழலில் தகுந்த காரணமில்லாமல் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களை மட்டுமே நம்ப வேண்டிய சூழலில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் நலனில் அக்கறையுள்ள மாநிலமாக கேரளமே இருக்கிறது. ஓரளவிற்கு அனைத்து தொழிலாளர்களையும் அமைப்பிற்குள் கொண்டு வர பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள். வீட்டு வேலை செய்பவர்களுக்கென்று தனியாக அமைப்பை நிறுவி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். கம்யூனிசம் என்ன செய்தது என்பவர்களுக்கு கேரளமே உதாரணம்.

உள்ளூர் தொழிலாளர்களை விட மிகவும் குறைந்தபட்ச கூலிக்கு வட இந்திய தொழிலாளர்கள் ,குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகளவு பணியில் அமர்த்தப்படுகிறார்கள். முதலில் அனைத்து விதமான தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களுக்குள் கொண்டுவர வேண்டும். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம், பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன்கள் காக்கப்பட வேண்டும்.

தேவை ! தேவை !
தொழிற்சங்கங்கள் தேவை !

#மேதினம்
#MayDay

மேலும் படிக்க:

தற்கொலைகளும் , மதுப்பழக்கமும் !

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 8 !

Monday, April 15, 2019

மோடியின் மக்கள் விரோத பாஜக அரசை தூக்கியெறியுங்கள்!


" பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கும் மோடியை எதிர்ப்பதற்கும் நீங்கள் ஒரு திராவிட, கம்யூனிச, தமிழ்தேசிய, சித்தாந்தவாதியாகவோ, இஸ்லாமிய, கிருத்துவராகவோ,சனாதன தர்மத்தால் ஒடுக்கப்பட்ட தலித்தாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை, மனிதநேயமிக்க ஒரு நல்ல மனிதராக இருப்பதே போதுமானது. " 'மூடர்கூடம்' திரைப்படத்தின் இயக்குநர், நவீன்.

நவீன் சொன்னது போல பாஜக அரசை எதிர்க்க நீங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டியதில்லை, சாதாரண மனிதனாக இருந்தாலே போதும். அந்த அளவிற்கு சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்கிய அரசு தான் தற்போதைய மோடி அரசு. இந்தியர்கள் கட்டிய வரிப்பணம் தவிர்த்து அனைத்து இந்தியர்களிடமிருந்தும் குறைந்தபட்சம் ஒரு ரூபாயையாவது முறையற்ற வகையில் திருடியிருக்கிறது இந்த அரசு.
இந்திய அரசியல் அமைப்பின் அடைப்படையே சமத்துவமும், சுதந்திரமும் தான். இந்த இரண்டையுமே கேள்விக்கு உட்படுத்திய அரசு தான், தற்போதைய மோடி அரசு.

உங்களின் ஓட்டு மோடிக்கா ? இல்லையா ?இந்த தேர்தல், இந்த ஒரே கேள்வியைத் தான் மையப்படுத்தி அமைந்துள்ளது. மக்களை ஓயாது நிம்மதியிழக்கச் செய்து இன்பம் கண்டது தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அரசு. மோடி அரசை வீழ்த்துவதற்கு நம் கையில் உள்ள ஒரே ஆயுதம், காங்கிரஸ். காங்கிரஸின் துணையுடன் மூலமே பாஜகவையும், மோடியையும் செல்லாக்காசு ஆக்க முடியும். அதனாலேயே காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டியுள்ளது.

அதுவுமில்லாமல் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் எவ்வளவோ முதிர்ச்சியடைந்துள்ளன. போன 2014 தேர்தலில் குடிசைகளுக்கு சென்று கூழ் மட்டுமே குடித்துக் கொண்டு பப்புவாக இருந்தவர், இன்று மக்களின் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். உண்மையிலேயே ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றன.பார்ப்போம், அதிகாரம் கையில் வந்தவுடன் என்ன செய்கிறார் என்று.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் ஒரு மாபெரும் வெற்றித் திட்டம். கோடிக்கணக்கான மக்கள் இத்திட்டத்தின் பலன்களை அனுபவிக்கிறார்கள். நிறைய குடும்பங்களுக்கு இதுவே வருமானம். கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு திட்டமாகவே இதை பார்க்க முடிகிறது. இத்திட்டத்தின் முழு பலன்களையும் பெற முதலில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைத் தவிர மற்றவர்களுக்கு செலுத்தப்படும் ஓட்டு மோடியின் பாஜகவிற்கு ஆதரவான ஓட்டாகவே கருதப்படும்.

யாருக்கு ஓட்டு போட்டு என்ன பலன் ? தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே மிச்சம். நாம உழைச்சா தான் நமக்கு வாழ்க்கை ஓடும் என்று இருப்பவர்களுக்கு, மற்ற தேர்தல்கள் போல இந்த தேர்தல் இல்லை. நாம உழைக்கனும், நம்ம வாழ்க்கை ஓடனும் என்று நினைப்பதற்கு கூட மோடியின் மக்கள் விரோத பாஜக அரசு தூக்கியெறியப்பட வேண்டும். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையையும் தற்போதைய பாசிச பாஜக அரசு பாதித்திருக்கிறது. மோ(ச)டி அரசிற்கு எதிராக வாக்களியுங்கள்.

11 ரூபாய் பாலிசி, 330 ரூபாய் என்று சொல்லிக்கொண்டு வருடா வருடம் நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இந்த இரண்டு பாலிசி திட்டங்களால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத காரணத்தால் தினமும் மக்களின் பணம் வங்கிகளால் திருடப்படுகிறது. இந்த வகையில் ஆயிரக்கணக்கான கோடிகள் வங்கிகளுக்கு கிடைத்துள்ளன. அவ்வளவும் ஏழை எளிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி சேர்த்த பணம். இந்த பாவம் உங்களை சும்மா விடாது.

மக்கள் தங்கள் விருப்பப்படி ரீசார்ஜ் செய்து மொபைல் போன்களை பயன்படுத்தி வந்தனர். ஏர்செல் போன்ற சிறிய நிறுவனங்கள் ஒழித்துக்கட்டப்பட்டன. இன்று மொத்தம் பிஎஸ்என்எல் உடன் சேர்த்து நான்கு நிறுவனங்கள் மட்டுமே தொலைத்தொடர்பு சேவையை வழங்குகின்றன. எந்த ஒன்றும் முழுமையாக கார்பரேட்கள் கைக்குச் சென்றால் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம் தான், மொபைல் சேவை அட்டூழியங்கள். நீங்கள் பேசினாலும் பேசாவிட்டாலும் மாதம் குறைந்தபட்சம் 35 ரீசார்ஜ் செய்ய வேண்டும். அந்த கெடு முடியும் போது உங்களின் கணக்கில் பணம் இருந்தாலும் உங்களால் பேச முடியாது. எவ்வளவு பெரிய வன்முறை இது.

மாதம் 100, 150 ரூபாயில் கேபிள் டிவி இணைப்பை பயன்படுத்தி வந்தனர். அதற்கும் வேட்டு வைத்தது, மோடி அரசு. நிம்மதியாக டிவி பாரக்கும் உரிமை கூட பறிக்கப்பட்டுள்ளது. இதுவும் கார்பரேட்கள் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. அன்று 100, 150 ல் பார்த்த சேனல்கள் அனைத்தையும் இன்று 300 கொடுத்தாலும் பார்க்க முடியாது.இப்படி இந்த மக்கள் விரோத மோடி அரசு மக்களுக்குச் செய்திருக்கும் கொடுமைகளின் பட்டியல் மிகவும் நீளம். இன்று வரை இந்தியாவை ஆட்சி செய்த அரசுகளில் முழுமையான மக்கள் விரோத அரசு, மோடியின் பாஜக அரசு மட்டுமே. பிரிவினைவாத அரசியல் ஒழிய பாஜக ஒழிய வேண்டும்.

தேர்தலின் போது மட்டும் மக்களைச் சந்திக்காமல் எப்போதும் மக்களுடனே இருக்கும் கம்யூனிச தோழர்களை வெற்றியடையச் செய்யுங்கள். மக்களின் குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யுங்கள். தமிழகத்தில் களமிறங்கி இருக்கும் நான்கு தோழர்களையும் வெற்றி பெறச் செய்வது நம் கடமையாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி :-

திருப்பூர் - கே.சுப்பராயன் - கதிர் அரிவாள்

நாகபட்டினம் -எம்.செல்வராசு - கதிர்
அரிவாள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி :-

மதுரை - சு. வெங்கடேசன் - அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்

கோவை - பி.ஆர்.நடராசன் - அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்

நாகப்பட்டினம், மதுரை,திருப்பூர் மற்றும் கோவை மக்களே , எல்லாம் உங்கள் விரலில் !

ஒரு நாடே பாஜகவின்  மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக நிற்கும் போது கூட ஆளும் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்களை என்ன செய்வது ? பெரும்பாலான ஊடகங்கள் மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்படுகின்றன. யார் ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஜால்ரா போடுவது என்பது மட்டுமே தற்போதைய ஊடக தர்மம் என்றாகிவிட்டது.

எந்த ஊடகங்களும் மக்களை சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை. தாங்கள் நினைப்பதை மக்களின் மனங்களில் பதிய வைக்கவே மெனக்கெடுகின்றன. மனசாட்சிக்கும் ஊடகங்களுக்கும் தொடர்பில்லை.

அரசியல் யாருக்கானது ? எவ்வளவு போதாமைகள், குறைபாடுகள் இருந்தாலும் அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கானது. ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகள் பெறும் ஓட்டு சதவீத்திலிருந்தே இதை தெரிந்து கொள்ளலாம். மிகச் சிலரே இன்று வரை ஒரே சின்னத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால் வெற்றியைத் தீர்மானிப்பது எப்போதும் சூழலுக்கு ஏற்றவாறு தங்களுக்கு பிடித்தவர்களுக்கு, தங்களின் நியாயப்படி ஓட்டுப் போடும் பெரும்பான்மை மக்களே.

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். யாரை எங்கே வைப்பது என்று அவர்களுக்குத் தெரியும். மக்களை நம்புவோம்,  தலை நிமிர்வோம் !

மோடியின் மக்கள் விரோத பாஜக அரசை தூக்கியெறியுங்கள் !

காங்கிரஸ் - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள் !

மோடியின் வீழ்ச்சியே இந்தியாவின் எழுச்சி!

மக்களின் பணத்தை செல்லாக்காசாக மாற்றிய மோடியை செல்லாக்காசாக்கி வீட்டுக்கு அனுப்புவோம்!

மேலும் படிக்க :

இடதுசாரியும் வலதுசாரியும்!

Monday, April 8, 2019

இடதுசாரியும் வலதுசாரியும் !


அரசியல் நிலைப்பாட்டில் இரண்டே பிரிவுகள் தான். ஒன்று இடதுசாரி அரசியல், மற்றொன்று வலதுசாரி அரசியல். இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் அவற்றை இந்த இரண்டே பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். சமத்துவத்தை வலியுறுத்துவது இடதுசாரி அரசியல், சமத்துவத்திற்கு எதிரானது வலதுசாரி அரசியல்.

மக்கள் நலனை முன்வைத்து அரசியல் செய்வது இடதுசாரி அரசியல். இனம், மதம், மொழி,சாதி போன்ற பிரிவினைவாதத்தை முன்வைத்து அரசியல் செய்வது வலதுசாரி அரசியல். வலதுசாரி அரசியலில் அதிகாரம் ஒரே இடத்தில் குவியும். இடதுசாரி அரசியலில் அதிகாரம் பரவலாக்கப்படும். இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிச இயக்கங்களை மட்டுமே குறிக்காது. எல்லோரையும் சமமாக நடத்தும் எல்லா அரசியல் இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்கள் தான். ஆனால் இந்த இடதுசாரி இயக்கங்கள் கம்யூனிச இயக்கங்களைப் போல தீவிரமாக இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதில்லை. இது தான் கம்யூனிச இயக்கங்களுக்கும் மற்ற இடதுசாரி இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடு.

இன்றைய அரசியல் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கார்பரேட்கள் கைகளில் தான் இருக்கிறது. கார்பரேட்கள் தாங்கள் நினைத்ததை நினைத்தவுடன் செய்வதற்கு வலதுசாரிகள் ஆட்சியில் இருக்க வேண்டும். உலகெங்கிலுமே இது தான் நிலைமை. முன்பை விட தற்போது வலதுசாரி இயக்கங்கள் புத்துணர்வு பெற்றிருப்பதற்கு கார்பரேட்களே முக்கிய காரணம். இயற்கையும், மனிதமும் காக்கப்பட வேண்டுமானால் வலதுசாரி இயக்கங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

வாக்களிக்கப் போவதற்கு முன்பு சிந்தியுங்கள். நீங்கள் வாக்களிக்கப் போவது இடதுசாரிக்கா ? வலதுசாரிக்கா ?

பாஜக ஒரு வலதுசாரி இயக்கம், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அனைத்து கட்சிகளையுமே வலதுசாரிகள் என்று தான் அழைக்க வேண்டியுள்ளது. வலதுசாரிகளால் என்றுமே மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. அனைத்து இடங்களிலும் வலதுசாரிகள் தோற்றுப்போவது தான் அவர்கள் மக்களுக்கு செய்யும் ஒரே நன்மை. பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் !

திமுக-வும் வேண்டாம், அதிமுக- வும் வேண்டாம், காங்கிரஸ்-ம் வேண்டாம், பாஜக-வும் வேண்டாம் என்றால் இவற்றுக்கு மாற்றாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது கம்யூனிச இயக்கங்களை தான். ஆனால் யதார்தத்தில் கம்யூனிச இயக்கங்களுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட மக்களிடத்தில் இல்லை. நீங்கள் இந்த கட்சிகளை எதற்காகவெல்லாம் புறக்கணிக்கிறீர்களோ அதற்காகவெல்லாம் ஆதரிக்க வேண்டியது கம்யூனிச இயக்கங்களைத் தான். ஆனால் ஆதரிக்க மாட்டீர்கள்.

வலதுசாரி இயக்கங்கள் மாற்றாக இருக்க முடியாது . ஆம், நாம் தமிழர் கட்சியும் , மக்கள் நீதி மய்யமும் வலதுசாரி இயக்கங்கள் தான். இன்றுவரை தனது ஜாதி மீதான பற்றை துறக்க முடியாத கமலஹாசன் சொல்வது போல ஒருவரால் ஒரே நேரத்தில்  இடதுசாரியாகவும், வலதுசாரியாகவும் இருக்கவே முடியாது. தனது ஜாதி பற்றை மறைக்க முற்போக்கு வேடம் போடுவது போல தான் ஒரு வலதுசாரி என்பதை மறைக்க இடதுசாரி வேடம் போடுகிறார்.

பாஜக மதத்தை வைத்து பிரிவினைவாதம் செய்கிறது. நாம் தமிழர் கட்சி இனத்தை வைத்து பிரிவினைவாதம் செய்கிறது. பிரிவினைவாதத்தை உரக்கப் பேசுவதால் உள்ளம் மட்டுமே களிப்புறும். பிரிவினைவாதத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் எக்காலத்திலும் ஏற்பட்டதில்லை.

ஏன் மனிதத்தை எல்லோரும் பேச மறுக்கிறோம் ? எல்லா மனிதர்களும் சமமானவர்கள். இந்த பூமி அனைவருக்கும் சொந்தம். ஒவ்வொருவருக்கும் இப்பூமியில் வாழ்வதற்கு சம உரிமை இருக்கிறது. இந்த பூமியில் நாம் வாழும் வாழ்க்கை ஒரு கூட்டியக்கம். நாம் இந்த பூமியில் ஒரு நிமிட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க கண்ணிற்கு தெரியாத எத்தனையோ மனிதர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. ஆனால் நொடியில் இதை மறந்து விடுகிறோம். இனம், மதம், சாதி பார்த்து உணவு உண்ண வேண்டுமெனில் நம்மால் ஒரு வாய் உணவைக்கூட உண்ண முடியாது. அப்புறம் என்ன கூந்தலுக்கு இவ்வளவு பிரிவினைவாதங்கள்.

மனிதம் வெல்லட்டும் !

Saturday, March 16, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் -8 !

பாலியல் ஒழுக்கம் என்பதை வரையறை செய்யவே முடியாது. அது இடத்துக்கு இடம் மாறுபடும் ஒன்றாகவே இருந்து வருகிறது. காலத்துக்கு ஏற்பவும் பாலியல் ஒழுக்கம் என்பதில் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் கூட போன தலைமுறைக்கு முன்பு வரை பல தார மணங்களை இதே சமூகம் அனுமதித்து இருக்கிறது. இப்போதும் ஒரு சில சமூகங்களில் பல தார மணத்திற்கு தடையில்லை. முன்பு, இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த மனிதரின் மரியாதை குறையவில்லை . அந்த காலகட்டத்தில் பெண்கள் இரண்டு ஆண்களோடு திருமண பந்தத்தில் வாழவில்லையா , இருவருக்கும் பிள்ளைகள் பெற வில்லையா ? என்றால் வாழ்ந்தார்கள், பிள்ளைகள் பெற்றார்கள். ஆனால் முதல் பந்தத்தை உதறிவிட்டு தான் அதை செய்ய முடிந்தது. அப்படி வாழ்ந்த பெண்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களோடு மண பந்தத்தை உருவாக்கி வாழும் உரிமை பெண்ணுக்கு அப்போது கிடைக்கவில்லை. இன்றும் கூட அது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் ஆணுக்கு கொடுக்கப்படும் உரிமைகள் பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. 

கடந்த தலைமுறையிலிருந்து இருதார அல்லது பலதார மணம் என்பது மிகவும் குறைந்துவிட்டது. பெண்கள் படிப்பறிவு பெற்றது தான் முதல் காரணம். இன்றைய சூழலில் ஆணால் அவ்வளவு எளிதாக முதல் மனைவியுடன் வாழ்ந்து கொண்டே இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடியாது. அப்படி செய்வதும் மரியாதைக் குறைவான விசயமாக பாரக்கப்படுகிறது. இன்று இருதார மணம் என்பது இயல்பான ஒன்றாக பாரக்கப்படுவதில்லை. ஆனால் முன்பு அது இயல்பாக பார்க்கப்பட்டது. இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கான முதல் தேவையாக பாலியல் விருப்பம் அல்லது காமமே இருந்திருக்கிறது. பெரும்பாலும் மனிதர்களால் ஒரே ஆணுடன் அல்லது ஒரே பெண்ணுடன் திருப்தி அடையவே முடியாது. நிர்பந்தங்களால் மட்டுமே ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ மனிதர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எப்படியான மனிதராக இருந்தாலும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தை மீறிய இன்னொரு மனிதர் மீதான ஈர்ப்பு நிச்சயம் உருவாகவே செய்யும். பெரும்பாலும் அந்த ஈர்ப்பை நிராகரிப்பது அல்லது வெளிப்படுத்தாமல் இருப்பது தான் தற்போதைய வாழ்க்கையை பாதிக்காமல் இருக்கும் என்பதால் கடந்து போய்விடுகிறார்கள். அந்த ஈர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

திருமணம் என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் பொதுவானது என்றாலும் காலம் காலமாக பெண் மீது நிகழ்த்தபடும் ஒரு ஒடுக்குமுறையாகவே இருந்து வருகிறது. இன்றும் கூட பெரிய அளவில் மாற்றம் உருவாகிவிடவில்லை. சிற்றரசர்கள் ஆட்சி செய்த போது நிலையற்ற அரசியல் தன்மை நிலவியதால் அடிக்கடி நிகழ்ந்த போர்களால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். 'பெண் கொள்ளை' என்ற ஒன்று இருந்ததாகச் சொல்கிறார்கள். இந்த கொள்ளையிலிருந்து பெண்களைக் காப்பாற்றவே பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க பழக்கப்படுத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனாலேயே அதிகளவில் குழந்தைத் திருமணங்களும் நிகழ ஆரம்பித்தன என்கிறார்கள். தமிழக சூழலில் வரதட்சணை தான் பெண் குழந்தை, சுமையாக கருதப்பட்டதற்கு முதல் காரணமாக இருந்திருக்கிறது. வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் பரிமாணமடைந்து வரதட்சணை இன்றும் அப்படியே தான் இருக்கிறது. வரதட்சணை வாங்குவது கௌரவ குறைச்சல் என்பது மாறி வரதட்சணை கொடுப்பது கௌரவம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. இப்போதும் நேரடியாக வரதட்சணை கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வட இந்தியாவின் சில மாநிலங்களில் பெண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்து பெண்ணை மணமுடிக்கும் வழக்கம் இன்னமும் இருக்கிறது. அப்படி மணமுடிக்கப்படும் பெண்கள் அதீத கொடுமைகளுக்கு உள்ளாவதும் தொடர்கிறது.ஒரு சில இடங்களில் மணமுடிக்கப்படும் பெண் அந்த குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் உடைமையாக்கப்படுவது இன்றும் நின்ற பாடில்லை. இன்னும் பல மோசமான பழக்கவழக்கங்களால் வட இந்திய பெண்கள் அதிகமும் பாதிக்கப்படுகிறார்கள். கல்வியறிவு ஒன்று தான் அவர்களை இக்கொடுமைகளிலிருந்து வெளியே கொண்டுவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நிலைமை அந்த அளவிற்கு மோசமில்லை என்றாலும் சுய சாதியில் திருமணம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தால் பெண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வது என்பது தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. வரதட்சணையால் நின்று போன திருமணங்கள் நிறைய இருக்கின்றன. வரதட்சணை கம்மியாக கேட்கிறார்கள் என்பதற்காகவும், வசதியாக இருக்கிறார்கள் என்பதற்காகவும் பெண்ணை விட வயதில் பெரிய வித்தியாசம் உள்ளவர்களுக்கு அல்லது தெரிந்தே பொருத்தமில்லாதவர்களுக்கு மணமுடிப்பது என்பது முன்பிருந்தே நடந்து வருகிறது. இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படியான திருமணங்கள் நடைபெறவே செய்கின்றன. ஏற்கனவே குடும்பம் என்ற அமைப்பு மோசமான முறையில் தான் மணப்பெண்ணையோ, மணமகனையோ தேர்ந்தெடுக்கிறது. அந்த தேர்வை மேலும் பலவீனப்படுத்துவதாக வரதட்சணை இருக்கிறது.

நினைத்து பார்க்கவே முடியாத விதத்தில் எல்லாம் திருமணங்கள் ஒரு சில சமூகங்களில் இன்றும் நடைபெறவே செய்கின்றன. மனைவி இறந்ததால் சொந்த பேத்தியையே திருமணம் செய்து கொண்டதாக ஒருவர் கூறியது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்வதும் சில சமூகங்களில் வழக்கத்தில் இருக்கிறது. இதன் பின்னணியில் சொத்து மட்டுமே பிரதான காரணமாக இருக்கலாம். சம்மதமில்லாமல் நடக்கும் இப்படியான திருமணங்களால் திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை மிகவும் பாதிப்படைகிறது. அதிக வயது ஆண் , வயதிற்கு வந்த குறைந்த வயது பெண்ணை சம்மதத்துடன் மணமுடிக்க அனுமதிக்கும் சமூகம், அதிக வயது பெண், வயதிற்கு வந்த குறைந்த வயது ஆணை மணமுடிக்க அனுமதிப்பதில்லை. அப்படியே அவர்கள் திருமணம் செய்தாலும் அவர்களைப் பார்வையாலேயே கொல்கிறது. ஆண் - பெண் பாலியல் ஈர்ப்பு யாருக்கு , எப்படி, எங்கே தோன்றும் என்று உறுதியாக கூற முடியாது. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் , யாருடனும் ஈர்ப்பு உருவாக வாய்ப்புகள் அதிகம்.

மனித வரலாற்றின் தொடக்க காலத்தில், இன்று இன்செஸ்ட் (incest) என்று சொல்லப்படும் உறவு முறைகள் இயல்பானவையாக இருந்திருக்கின்றன. தாய் - மகன், தந்தை -மகள், சகோதரர் - சகோதரி மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் இவர்களுக்கு இடையில் பாலுறவுடன் கூடிய உறவு உருவாவதே இன்செஸ்ட் உறவு முறை எனப்படுகிறது. நாகரிக சமூகம் உருவாகாத வரை இந்த உறவு முறை பெரிய அளவில் இருந்திருக்கிறது. இந்த உறவு முறைகளால் உருவாகும் குழந்தைகள் வீரியமில்லாததாக இருந்ததாலும் இந்த உறவு முறை கைவிடபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. பொருந்தாததை நீக்குவது என்பது தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்றுதான். அது தான் நாகரிகம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனால் உலகெங்குமே இந்த உறவு முறைகள் இன்று வரை தொடரத்தான் செய்கின்றன. இதிலுமே பரஸ்பர சம்மதத்துடன் நிகழும் உறவுகளால் எந்தச் சிக்கலும் இல்லை. சம்மதமில்லாமல் நடப்பவை பாலியல் துன்புறுத்தலாகவும், பாலியல் வன்கொடுமையாகவுமே பார்க்க வேண்டியிருக்கிறது . சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறவு முறைகளில் உருவாகும் பாலியல் சிக்கல்களே பேசப்படாத போது , ஏற்கொள்ளப்படாத இன்செஸ்ட் உறவு முறைகளில் உருவாகும் சிக்கல்கள் மட்டுமல்ல உறவு முறையே வெளியே சொல்லப்படாததாகவே இருக்கிறது.

காலங்காலமாக கற்பித்து வந்த புனித பிம்பங்களைக் கடந்தே இன்செஸ்ட் உறவு முறைகள் நிகழ்கின்றன. அதிலும் அம்மா என்ற உறவு இங்கே மிகவும் அதிகமாக புனிதப்பட்ட ஒன்று. இப்படியான நிலையிலும் அம்மா-மகன் உறவென்பது இங்கு நிகழ்ந்து தான் வருகிறது. இயற்கையின் நியதிபடி பாலுறவிற்கு வயது வந்த இருவர் தான் தேவை , அந்த இருவர் யாராகவும் இருக்கலாம் என்பது இன்செஸ்ட் உறவுகளில் நிஜமாகிறது. காமம் குறித்து நிறைய பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் பேசாத சூழல் தான் இந்திய அளவிலேயே இருக்கிறது. ஆனாலும் ஒரு சில பெற்றோர்கள் பேசத்தான் செய்கிறார்கள். இயல்பாக நிகழும் இந்த உறவை அனுமதிக்கவும் செய்கிறார்கள். இப்படியான சூழலில் பரஸ்பர விருப்பத்துடன் நிகழும் அம்மா - மகன் உறவென்பது அல்லது இன்செஸ்ட் உறவென்பது ஆரோக்கியமானதா ? இல்லையா ? என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஆனால் இன்செஸ்ட் உறவில் இருப்பவர்கள் இந்த உறவு சரியென்றே வாதிடுகிறார்கள். " எனது பார்வையில் என்றால், போதுமான அளவு பாதுகாப்பான செக்ஸ் வீட்டிலேயே கிடைக்கிறது. செக்ஸில் நிறைய விசயங்களை பரிசோதனை செய்யவும் வாய்ப்பு கிடைக்கிறது. பிற்காலத்தில் வேறு பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது திறம்பட செயல்பட முடியும். அம்மாவின் பார்வையில் என்றால், அவருக்கும் பாதுகாப்பான செக்ஸ் வீட்டிலேயே கிடைக்கிறது. கணவனிடமிருந்து போதிய செக்ஸ் கிடைக்கப் பெறாதவர்கள் வெளியே வேறு ஆண்களை தேடிப் போய் சிக்கலில் மாட்டுவதை விட வீட்டிலேயே கிடைப்பது எவ்வளவோ பாதுகாப்பு. அதுவும் இல்லாமல் குறைந்த வயது ஆண் அந்த பெண்ணை வயதில் இன்னும் குறைந்தவராகவே நடத்துவார். இதுவும் அப்பெண்ணுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது " அம்மா - மகன் உறவில் இருக்கும் ஒரு மகனின் வாதமிது. இப்படி சகோதரன் - சகோதரி , அப்பா - மகள் உறவில் இருப்பவர்கள் தங்களுக்கு இந்த உறவு பிடித்திருப்பதாகவும் , இதை தொடர விரும்புவதாகவும் கூறுகிறார்கள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களுடன் அல்லது பெண்களுடன் ஒரே நேரத்தில் கலவி கொள்ளும் விருப்பம் நிறைய மனங்களில் இருக்கவே செய்யும். அது இயல்பானதும் கூட. ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் இது சாத்தியமே இல்லை என்று தான் கூற முடியும். ஒரே ஆண் வெவ்வேறு காலகட்டங்களில் பல பெண்களுடன் கலவி கொள்வதும், ஒரே பெண் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல ஆண்களுடன் கலவி கொள்வதும் பலருக்கும் சாத்தியமான ஒன்றுதான். ஆனால் ஒரே நேரத்தில் என்பது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம். காமத்தில் இது தான் சரி, இது தவறு என்று பிரிக்க முடியாத அளவிற்கு மனிதர்களை காமம் ஆட்டிவைக்கிறது. ஒரேவிதமான எண்ணங்கள் உடையவர்கள் கூட்டாக சேர்ந்து வாழும் வாழ்க்கை முறை இனி தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. இந்த இடத்தில் பழைய கற்பிதங்கள் அனைத்தும் உடைபட்டுபோய்விடும். இப்படியான மனநிலையில் தான் நாம் ( LGBT ) எனப்படும் பால் சிறுபான்மையினர் பற்றி பேச வேண்டியிருக்கிறது. உலகின் பல நாடுகளில் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவே LGBT வகையினர் இருக்கின்றனர். இந்தியாவில் இப்போது தான் சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பெண்ணும் பெண்ணும் (L ), ஆணும் ஆணும் (G) விருப்பம் கொள்வதும், சேர்ந்து வாழ நினைப்பதும் இயல்பான இயற்கையான ஒன்று என்றுதான் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலருக்கு ஆணையும் பிடிக்கும் , பெண்ணையும் பிடிக்கும் (B) இருவருடனும் உறவைத் தொடர விரும்புவார்கள்.திருநங்கை , திருநம்பியை (T) விரும்புபவர்களும் அவர்களுடன் சேர்ந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சட்ட அங்கீகாரத்துடன், சமூக அங்கீகாரமும் கிடைத்தால் மட்டுமே பால் சிறுபான்மையினர்களால் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ முடியும். எப்போதும் போல இதற்கும் தடையாக இருப்பது குடும்பம் என்ற அமைப்பு தான். எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவு பிடிப்பதில்லை. ஒரே மாதிரியான உணவை உண்ண எல்லோருக்கும் உடலும் இடம் தராது, ஆனாலும் ஏதேனும் ஒரு உணவை உண்டு தான் ஆக வேண்டும், அதே தான் காமத்திலும். உணவும் காமமும் ஒன்றுதான்.

பசியுணர்வும், பாலுணர்வுமே நம்மை வழிநடத்துகின்றன. வாழ்கின்ற வாழ்க்கையே இவற்றை நிறைவு செய்யவே எனவும் கூறலாம். இவை இரண்டுமே இயற்கையான உணர்வுகள். இவற்றை தவிர்க்கவே முடியாது. இந்த உணர்வுகளின் மூலம் இயற்கையாக உருவான சிக்கல்கள் முன்பு தாமாகவே சரிசெய்யப்பட்டன. குடும்பம், அரசு போன்ற அதிகார அமைப்புகள் உருவான பின்பு இந்த இரண்டு உணர்வுகளும் மேலும் சிக்கலாகிவிட்டன. அதிலும் பாலுணர்வுதான் அதிக சிக்கல்களைச் சந்திக்கிறது. இந்த அமைப்புகள் சொல்வது தான் சட்டம், நீதி என்றாகிப் போனது. குடும்பம் என்ற அமைப்பு சிறிய அமைப்பு போல தோன்றினாலும் உண்மையில் அதிக அதிகாரமுள்ள அமைப்பு அது. அதிகாரம் கால் பதித்த எந்த இடத்திலும் இயற்கைக்கும் இடமில்லை, இயற்கையான உணர்வுகளுக்கும் இடமில்லை என்ற நிலை உருவாகி பல ஆண்டுகளாகிவிட்டன. பசியைப் போலவே பாலுணர்வும் மனிதருக்கு மனிதர் வேறுபடும். பட்டினி போடப்படும் மனிதர்கள் எதை தின்பார்கள் என்ற கணக்கெல்லாம் இல்லை என்று சொல்வார்கள். அதே தான் பாலியல் பட்டினிக்கும். திருமணம் தாண்டிய உறவுகள் உருவாக இந்த பட்டினியும் ஒரு காரணமாகிறது.

திருமணம் தாண்டிய உறவுகள் உருவாவதற்கு தற்போதைய திருமண முறையும் ஒரு காரணம். " காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணி வச்சா எல்லாம் சரியாக போய்விடும் " என நினைக்கும் குடும்ப அமைப்பு அந்த கல்யாணத்தை சரியான புரிதலுடன் செய்து வைப்பதில்லை. இந்திய சமூகத்தில் திருமணம் தாண்டிய உறவுகள் என்பவை தவிர்க்க முடியாதவையாகவே இருக்கின்றன. இந்த உறவுகள் பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்கினாலும் எல்லா இடங்களிலும் தொடரவே செய்கின்றன. திருமணம் தாண்டிய உறவுகள் உருவாவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. கணவன், மனைவி தங்களுக்குள் மனம்விட்டு பேசாதிருப்பதும் ஒரு காரணம். மற்ற விசயங்கள் குறித்து விவாதிக்கவும், சண்டை போடவும் தயாராக இருப்பவர்கள் தங்களுக்கான பாலுணர்வுத் தேவைகள் குறித்து பேச முன்வருவதில்லை. அப்படி பேசுவதற்கான சூழலையும் உருவாக்கிக் கொள்வதில்லை. அதிலும் பெண்கள் தானாக முன்வந்து பேசுவதற்கான சுதந்திரமும் இங்கில்லை.

மொத்தம் 245 பாலுறவு நிலைகள் (Sex Positions) இருப்பதாக காமசூத்ரா சொல்கிறது. ஆனால் யதார்த்தத்தில் எத்தனை நிலைகள் பின்பற்றப்படும் என்று தெரியவில்லை. குடும்ப வாழ்க்கையில் எத்தனை கணவன்- மனைவிகள் இந்த பாலுறவு நிலைகள் பற்றி பேசவும் அதில் சிலவற்றையாவது நிகழ்த்திப் பார்க்கவும் விரும்புவார்கள் என்று தெரியவில்லை. இப்படியான வாழ்க்கை அமையப் பெற்றவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் தான். ஆனால் பெரும்பாலும் மாறுபட்ட பாலுறவு ஆசைகள், விருப்பங்கள் திருமணம் தாண்டிய உறவின் மூலமே பூர்த்தியடைவதாக புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. இதை போய் எப்படி கணவரிடம் அல்லது மனைவியிடம் கேட்பது என்ற தயக்கம் நிறைய பேரிடம் இருக்கிறதாம். ஆனால் இதையே திருமணம் தாண்டிய உறவுகளிடம் கேட்பதிலும் , நிகழ்த்துவதிலும் தயக்கம் ஏற்படுவதில்லையாம்.

ஒரு ஆண் திருமணம் தாண்டிய உறவைத் தேர்ந்தெடுப்பதற்கு பாலுறவுத் தேவை மட்டுமே முக்கிய காரணமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு பெண் திருமணம் தாண்டிய உறவைத் தேர்ந்தெடுப்பதற்கு பாலுறவு தேவை மட்டும் முக்கிய காரணமாக இருப்பதில்லை. பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் புறக்கணிப்பிற்கான வடிகாலாகவே பெண்கள் இந்த உறவைப் பார்க்கிறார்கள். சில சமயங்களில் இந்த உறவைத் தொடர்வதற்காகவே பாலுறவிற்கும் சம்மதிக்கிறார்கள்.ஆண்களைப் போல பாலுறவிற்காக உறவைத் தேடும் பெண்களும் இருக்கிறார்கள்தான். ஆரம்ப காலத்திலிருந்தே ஆண்கள், பெண்கள் எங்கெல்லாம் சேர்ந்து வேலை செய்யும் அல்லது அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சூழல் இருந்திருக்கிறதோ அங்கெல்லாம் திருமணம் தாண்டிய உறவுகள் இருந்திருக்கின்றன. இன்றும் பல இடங்களில் இது குற்றமாக பார்க்கப்படுவதில்லை, எதுவரை என்றால் குடும்பத்தை பாதிக்காத வரை. கணவன், மனைவிக்கு தெரிந்தே அனுமதிக்கப்படும் உறவுகளும் இருக்கின்றன.'மண்ணு திங்கற உடம்பு தான இது . யாரு தின்னா என்ன ? 'என்ற மனநிலையும் பரவலாக முன்பு இருந்தது. ரம்மி திரைப்படத்தில் இடம்பெற்ற "கூடை மேல கூடை வச்சு.." பாடலில் வந்த வரியைப் போல " எங்கே வேணா போயிக்க, என்னை விட்டு மட்டும் போயிடாம இருந்தாலே அது போதுமே" என்ற மனநிலை காரணமாக இருக்குமா ? தெரியவில்லை. இன்னொரு மனிதரைப் பாதிக்காத எந்த உறவும் தவறில்லை என்று தான் சொல்ல வேண்டி வருகிறது.

திருமணம் தாண்டி உறவு என்பது இருவரின் சம்மதத்துடன் தான் நிகழ்கிறது. 20 வயதுகளிலேயே திருமணம் செய்து கொள்பவர்கள், காதல் திருமணமாக இருந்தாலும் 30களில் திருமணம் தாண்டிய உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வயதிற்குரிய வாழ்க்கையை அப்போது வாழ முடியாததை இப்போது சேர்த்து வாழ நினைக்கிறார்கள். பொதுவாகவே பெண்களுக்கு 30 வயதிற்கு பிறகுதான் பாலியல் உணர்வுகள் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். காரணம், அப்போது தான் குழந்தைகள் ஓரளவு வளர்ந்து இருப்பார்கள், வேலைப்பளுவும் சற்று குறைந்திருக்கும். தன்னைப் பற்றி சிந்திக்கவும் சற்று இளைப்பாறவும் அப்போது தான் நேரமும் கிடைக்கிறது. அடுத்ததாக நிர்பந்தங்களால் ,குடும்ப அழுத்தத்தால் பொருத்தமில்லாதவர்களை மணமுடிக்க நேர்பவர்கள் , தங்களுக்கு பொருத்தமானவர்களைச் சந்திக்கும் போது அவர்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறார்கள். பின்பு அதுவுவே உறவாக மாறிவிடுகிறது. தனது குடும்பம் தரும் அழுத்தங்களிலிருந்து மற்றவர்களுடன் பேச ஆரம்பிப்பவர்கள் அந்த பந்தம் தரும் இளைபாறலில் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். குழந்தைகள் பிறந்த பிறகு உருவாகும் இடைவெளி, உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள், குழந்தை இல்லாமை, கணவன் மனைவிக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாதது, பொருளாதார நெருக்கடி போன்ற பலவும் திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்பட காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மனம் விட்டு பேசிக்கொள்வதில் தான் எல்லாமும் இருக்கிறது. வெளியே புதிய உறவு உருவானாலும் கூட அதைப் பற்றியும் கணவனும் மனைவியும் பேசிக்கொள்ளும் சூழல் தான் ஆரோக்கியமானதாக இருக்கும். பெண்களை உடைமையாகவும், புனிதப்பொருளாகவும், குடும்பத்தின் மானத்தைக் காப்பவர்களாகவும் பார்க்கும் ஆணாதிக்க பார்வை மாறாதவரை பெண் மனது புரிந்துகொள்ளவேபடாது.

திருமணம் தாண்டிய உறவைத் தொடர்வதிலும், பழைய உறவை விட்டு வெளியேறவும் தடையாக இருப்பவர்கள் குழந்தைகள் தான். அதனால் திருமணம் தாண்டிய உறவுகளால் குழந்தைகள் தான் அதிகமும் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே தற்போதைய குழந்தை வளர்ப்பு முறை என்பது ஆரோக்கியமாக இல்லாத சூழலில் இந்த உறவுகளைத் தொடர்பவர்களால் அது மேலும் பாதிப்படைகிறது. திருமணம் தாண்டிய உறவைத் தொடரும் போது குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. திருமணம் தாண்டிய உறவுகளால் நிகழும் குற்றங்கள் நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகின்றன. 'கள்ளக்காதல் கொலைகள்' என செய்தியாக்கப்பட்டாலும் முதலில் நேரடியாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். குழந்தைகள் நேரடியாக பாதிப்படைவதுடன் ஒரு சில இடங்களில் உறவைத் தொடர தடையாக இருப்பதால் சொந்தப் பெற்றோராலோ அல்லது புதிய துணையாலோ குழந்தைகள் கொல்லப்படுவது இன்னும் அதிர்ச்சியான ஒன்றாக இருக்கிறது. " காதலுக்கு நான்கு கண்கள்... கள்வனுக்கு இரண்டு கண்கள்... காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை ..." என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் தான் நினைவிற்கு வருகிறது .கணவன் மனைவி என்றில்லை மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதன் மூலம் எத்தனையோ விதமான வன்மங்கள், கோபங்கள், வெறுப்புகள் சரியாகியிருக்கின்றன. நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகள் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் குற்றங்களாக மாறாமல் தடுக்கப்பட்டிருக்கின்றன. நடந்து முடிந்த குற்றங்களில் பலவும் சரியாக பேசப்பட்டிருந்தால் நிகழாமலே போயிருக்கும் வாய்ப்புகளும் அதிகம். குற்றத்தை நிகழ்த்தும் எண்ணம் வரும்போது குற்றம் புரிந்த பிறகான வாழ்க்கை எவ்வளவு கொடூரமாகவும், எவ்வளவு குற்றவுணர்ச்சியுடனும் இருக்கும் என்பதை உணர்ந்தால் நிச்சயம் யாரும் எந்தக் குற்றத்தையும் நிகழ்த்த முன்வரமாட்டார்கள்.

பாதுகாப்பான செக்ஸ் குறித்த புரிதல் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலுமே கூட நல்ல நிலையில் இல்லை. ஆனாலும் இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதில் போதிய தெளிவு இல்லாமையே தேவையற்ற கர்ப்பங்களுக்கு காரணமாகிவிடுகிறது. தேவையற்ற கர்ப்பங்களுக்கும், அதனால் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புகளுக்கும் ஆண்களின் பொறுப்பற்றதன்மை தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனமாக ஆணுறையே இருக்கிறது. ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கருத்தடை மாத்திரைகள் வெற்றிபெறவில்லை. இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட மாத்திரைகளில் பக்கவிளைவுகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது தான் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் ஆராய்ச்சி அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. இவை சந்தைக்கு வர இன்னும் காலம் தேவைப்படும். பெண்களுக்கான கருத்தடை சாதனமாக மாத்திரைகளே இருக்கின்றன. இவை பக்கவிளைவுகளை உருவாக்கும் என்றாலும் தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் ஒரே வழியாக இருக்கிறது. பரவலாக இம்மாத்திரைகள் கிடைப்பதும் இல்லை. விரைவில் இம்மாத்திரைகள் தடை செய்யப்பட உள்ளதாகவும் கூறுகிறார்கள். அப்படியே மாத்திரைகள் கிடைத்தாலும் சரியான நேரத்தில் உண்டால் மட்டுமே பலனளிக்கும். பெண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணுறைகள் வெற்றிபெறவில்லை.

தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் எளிய , வசதியான, பக்கவிளைவு இல்லாத, எங்கும் கிடைக்கக்கூடிய சாதனமாக ஆணுறையே இருக்கிறது. பொதுவாகவே ஆண்களுக்கு ஒரு நினைப்பு இருக்கிறது, ஆணுறை இல்லாமல் உறவில் ஈடுபடும்போது தான் சுகம் அதிகம் கிடைக்கும் என்பது தான் அது. இதில் மிகவும் குறைந்த அளவிலேயே உண்மை இருக்கிறது. மிகச்சிறிய அளவிலான சுக வேறுபாடு மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதற்கும், பயன்படுத்தாமல் இருப்பதற்கும் இடையில் உள்ளது. அந்த சின்ன சுகத்திற்காக பெண்களை கர்ப்பமாக்குவதையும், தேவையற்ற கருக்கலைப்பிற்கு கொண்டு செல்வதும் ஏற்க முடியாது ஒன்று. அப்படியே ஆணுறை பயன்படுத்த விருப்பமில்லை என்றாலும் கூட ஆண்கள் தங்களின் உச்சநிலையின் போது வெளியே எடுத்து விந்துவை வெளியேற்றுவது ஓரளவிற்கு வெற்றி தரும் என்றாலும் இதையும் ஆண்கள் செய்ய முன்வருவதில்லை. ஏற்கனவே பெண்கள் மீது ஏவப்படும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளில் ஒன்றாக இந்த தேவையற்ற கர்ப்பமும் சேர்ந்து விடுகிறது. பெண்களின் உடல் அளவிலும், மனதளவிலும் பல பாதிப்புகளை இந்த தேவையற்ற கர்ப்பம் உருவாக்கிவிடுகிறது. ஆண்களே , எந்தச் சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் தேவையற்ற கர்ப்பத்திற்கு காரணமாகி விடாதீர்கள். ஒரு ஆணும் , பெண்ணும் உடலுறவு கொள்வதற்கான வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம். அந்த உறவு சுகத்திற்காக மட்டுமென்றால் கண்டிப்பாக கருத்தடை சாதனம் பயன்படுத்த முன்வர வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்வதற்காக என்றால் கருத்தடை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை.

இன்று, குழந்தை பெற்றுக் கொள்வது என்பது தங்களது விருப்பம் என்பதை விட குடும்ப, சமூக அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. குடும்ப கௌரவமே வாரிசு உருவாவதில் தான் இருப்பதாக இன்றும் நம்பவைக்கப்படுகிறது. எல்லாதவிதமான குடும்பங்களும் இதனுள் அடங்கும். கல்யாணம் பண்ணி வைத்தே உடனேயே வாரிசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். எங்கெங்கோ பிறந்து வளர்ந்த கணவனும், மனைவியும் தங்களுக்குள் போதிய புரிதல் உருவாகும் முன்பே பெற்றோராகி விடுகின்றனர். குழந்தையின்மைக்கு கணவன், மனைவி இருவருமே காரணமாக இருக்க முடியும் என்றாலும் இன்றும் பெண் மீது தான் பழி விழுகிறது. ஆண் வாரிசு மீதான போதையும், கற்பிதங்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. ஆண் வாரிசுக்காக பெண்கள் மீண்டும் மீண்டும் கர்ப்பமடைவது இன்று வரை தொடரவே செய்கிறது. என்னென்ன குழந்தைகள் வேண்டும் என்பதைப் பற்றி துளியும் சிந்திக்காமல் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே கணவனும் மனைவியும் தீர்மானிக்கும் நிலை வர வேண்டும். பாலின சமத்துவம் என்பதை அடைய இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை. அதுவுமில்லாமல் உங்களின் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தாலும் உங்களால் உங்களின் வாழ்க்கையின் 14 வருடங்களை ஒதுக்க முடியும் என்றால் மட்டும் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்பு இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எல்லோருக்குமான காமம் குறித்து பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மணம் முடிக்காதவர்களின் காமம், மணம் முடித்தவர்களின் காமம், பல்வேறு சூழ்நிலைகளால் தனிமைக்கு தள்ளப்பட்டவர்களின் காமம், மாற்றுத் திறனாளிகளின் காமம், வயதானவர்களின் காமம் இப்படி பேசப்பட வேண்டிய காமம் நிறையவே இருக்கிறது.

பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .30
பத்து இதழ் சந்தா ரூபாய்.300
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :








Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms