Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Sunday, January 4, 2026

ஜே.சி.குமரப்பா பிறந்தநாள் (ஜனவரி 4) !


'இயற்கையோடு இயைந்த உற்பத்தி முறைதான் இயற்கை ஆதார வளங்களை சிதைக்காது’ என்று சொன்னவர் தான் ஜே.சி.குமரப்பா. தொழிற்புரட்சி என்ற பெயரில் இயற்கையை அழித்துவிட்டு தான் இப்போதெல்லாம் உற்பத்தியே தொடங்குகிறது. குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு அதிக உற்பத்தி என்பது செல்வம் ஒரே இடத்தில் குவியவே வழிவகுக்கும் என்று அப்போதே சொல்லியிருக்கிறார். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. 


காந்திய பொருளாதாரம் என்பது கீழிருந்து மேல்நோக்கிய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. தற்போதைய வளர்ச்சி என்று சொல்லப்படுவது இதற்கு அப்படியே எதிரானதாக இருக்கிறது. எல்லோரையும் உள்ளடக்கிய சூழலைப் பாதிக்காத மிகச்சிறந்த பொருளாதார மாதிரியை ஜே.சி.குமரப்பா உருவாக்கினார். ஆனால்  இந்த மாதிரியை இதுவரை பதவியில் இருந்த எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. முன் எப்போதையும் விட ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார மாதிரிக்கான தேவை தற்போது தான் அதிகமாக இருக்கிறது. இனிவரும் அரசுகளாவது ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார மாதிரியை செயல்படுத்த முன்வர வேண்டும். தேர்தல் அறிக்கையில் இந்த விசயம் இடம்பெறும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு நாம் நெருக்கடி கொடுக்க வேண்டும். 


ஜே.சி.குமரப்பா மாதிரி ஏன் தேவை என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் தற்போதைய பிளாஸ்டிக் தடையால் நிறைய குறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இயற்கையோடு இயைந்த தொழிலில் அவர்கள் முதலீடு செய்திருந்தால் இந்த பாதிப்பு உருவாகியிருக்காது. இது முதலீட்டாளர்களின் தவறு என்பதை விட அரசின் தவறு என்பது தான் பொருத்தமாக இருக்கும். சிறியதே அழகு என்பது தான் குமரப்பாவின் பொருளாதார மாதிரி.


விவசாயத்துறையிலும் குமரப்பாவின் சித்தாந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று விவசாயம் இந்த அளவிற்கு மோசமான நிலையை அடைந்திருக்காது. தன்னிறைவு வேளாண்மைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து குமரப்பா கூறி வந்தார். ஆனால் தொடர்ந்து அதிக தண்ணீர் தேவைப்படும் பணப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவைத் தான் தற்போது அனுபவித்து வருகிறோம். இப்போதும் விவசாயத்தை மீட்பதற்கு குமரப்பாவின் விவசாய சிந்தனைகளே தேவை. தன்னிறைவு வேளாண்மை மட்டுமே விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும். 


" அறம் சாராத பொருளாதார அமைப்பு மனசாட்சிக்கு விரோதமானது.  மனிதன் வெறும் பணம் திரட்டும் யந்திரமல்ல. அறமற்ற பொருளாதாரம் உயிரற்ற உடல்தான் " என்றார்,ஜே.சி.குமரப்பா. அறமற்ற பொருளாதாரம் தான் நம் காலத்தின் மிகப்பெரிய எதிரி.


" முன்னேற்றம் என்பது இயற்கையில் பொதிந்துள்ள அறிவையும், உண்மையையும் தேடி உணர்ந்து, மனிதருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இயற்கையை உபயோகிப்பது "  என்பதுதான் ஜே.சி.குமரப்பாவின் நிலைப்பாடு.


ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார, விவசாய சிந்தனைகளே இன்றைக்கு தேவை.


ஆம். ஜே.சி.குமரப்பா ஒரு மறக்கப்பட்ட தீர்க்கதரிசி !


மேலும் படிக்க :

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

எக்காலத்திற்குமான கலைஞன் !

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !


Sunday, September 1, 2024

Life in Colour with David Attenborough - Documentary ❤️


இயற்கையின் வண்ணங்கள் எவ்வளவு சுவாரசியம் மிக்கவை என்பதை இந்த ஆவணப்படம் விளக்குகிறது. பல்வேறு விதமான உயிரினங்களின் விதவிதமான வண்ணங்கள் வெறும் வண்ணங்கள் மட்டும் அல்ல. தனது பலத்தை வெளிப்படுத்த, இணையைக் கவர, இரையை ஏமாற்ற, தன்னை பாதுகாத்துக் கொள்ள, உணவிற்காக என்று ஒவ்வொன்றிற்கு பின்னும் ஒவ்வொரு கதை இருக்கிறது. அத்தகைய சுவாரசியமான கதைகளில் கொஞ்சம் இந்த ஆவணப்படத்தில் காட்சிகளுடன் பேசப்படுகிறது.

நீங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு உங்களது கண்களை விலக்கிக்கொள்ளவே முடியாது. மிகவும் தரமான கேமிராக்களின் உதவியுடன் இயற்கையின் அற்புதங்களை கண்முன் நிறுத்துகிறார்கள். ஆவணப்படம், தென்னிந்தியாவிலிருந்து மயிலுடன்தான் தொடங்குகிறது. இந்திய புலியின் உடலிலுள்ள வண்ணங்கள் குறித்து மிகவும் விரிவாகவே பேசுகிறார்கள். 

நாம் பார்ப்பது போலவே மற்ற உயிரினங்களும் வண்ணங்களைப் பார்ப்பதில்லை. ஒரு சில உயிரினங்கள் நம்மைவிட குறைவான பார்வைத்திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஒரு சில உயிரினங்கள் நம்மைவிட அதிக பார்வைத்திறன் கொண்டவையாக இருக்கின்றன. வன்முறைகளை மையப்படுத்திய வெப் சீரிஸ், திரைப்படங்களுக்கு இடையே இப்படியான ஒரு ஆவணப்படத்தைப் பார்ப்பது நமக்கு நிச்சயம் புத்துணர்வு அளிக்கும்.

மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

வலுத்தது நிலைக்கும் !

Saturday, August 31, 2024

எங்கெங்கு காணினும் குப்பைகள் !


நாகரீக மனிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வாழும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் குப்பைகள் குறித்து மக்கள் மட்டுமல்ல அரசுகளும் கண்டுகொள்வதில்லை. ஆனால் குப்பை மேலாண்மைக்கு தனியாக வரி மட்டும் சேர்த்து வாங்குகிறார்கள். 

நாளுக்குநாள் சேரும் குப்பைகளின் அளவு மிகவும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த குப்பைப் பெருக்கத்திற்கு பல்வேறு விதமான காரணிகள் இருக்கின்றன. ஆனால் அதிகமும் கண்ணில் படுவது பிளாஸ்டிக் பொருட்கள்தான். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களால் உண்டாகும் குப்பைகளுடன் பயன்பாட்டில்  இருந்து பயன்படாமல் மாறும் குப்பைகளும் சேர்ந்து கொள்கின்றன. 

குப்பைகள் என்றுமே இருக்கின்றன. ஆனால் முன்பு அவை எளிதில் மட்கும் குப்பைகளாக, விவசாய நிலங்களுக்கு உரமாக இருந்தன. இன்று எளிதில் மட்கும் குப்பைகளுடன் எளிதில் மட்காத குப்பைகளும் சேர்ந்து கொள்வதால் தானாக மட்குவதில் சிரமம் உண்டாகிறது, அத்துடன் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்த முடியாமலும் போகின்றன. 

சுகாதார பணியாளர்களின் அயராத உழைப்பால்தான் இந்த அளவிற்காவது பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் மட்டும் தொடர்ந்து இயங்காமல் போனால் நாம் குப்பைகளுடன் குப்பைகளாகத்தான் வாழ வேண்டியிருக்கும். இன்றும் எல்லா ஊர்களிலும் குப்பைகளை, தினமும் அள்ளப்படும் இடங்களில் கொட்டாமல் கண்ணில் படும் காலி இடங்களில் கொட்டும் மனநிலையே அதிகம் உள்ளது. இந்த விசயத்தில் மக்களாகிய நமக்கு பொறுப்புணர்வு தேவை. 

மட்கும் குப்பைகளையும், மட்காத குப்பைகளையும் பிரிப்பது என்பது சவாலான வேலையாக இருக்கிறது. அரசுகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அறிவிக்காமல் திடீரென பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை என அறிவிப்பதும் அப்புறம் அந்த அறிவிப்பை காற்றில் விடுவதும் தொடர்கதையாக இருக்கிறது. அந்த பிளாஸ்டிக் தடையும் எளிய மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்  பொருட்களுக்குத்தான். கார்பரேட் நிறுவனங்கள்தான் பிளாஸ்டிக் குப்பைகளை அதிகப்படுத்துகின்றன. ஆனால் இன்று வரை எந்த அரசும் கார்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவேயில்லை. 

மறுசுழற்சி என்பது ஏமாற்று வேலை. மறுசுழற்சி செய்யக்கூடியவை என்று வலம் வரும் பிளாஸ்டிக் பொருட்களில் 5%  கூட மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. எளிதில் மட்கும் பொருட்களை நோக்கி பயணிப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும்.    

இயற்கையில் கழிவு என்றும் குப்பை என்றும் எதுவும் இல்லை. நாமும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படித்தான் வாழ்ந்து வந்தோம். மட்கும் குப்பைகளை மண்ணுக்கு உரமாகவும், மட்காத குப்பைகளை பழைய இரும்புக்கடையில் எடையாகவும் போட்டோம். இப்போது எல்லாம் மாறிவிட்டது. எதற்கும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். 

எப்படிப் பார்த்தாலும் குப்பைகள் குறித்து அரசுகளும், மக்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டமிது. அனைத்து வகையான வணிக நிறுவனங்களும் குப்பைகளை குறைக்க முன்வர வேண்டும். இந்நிறுவனங்கள் சரியாக திட்டமிட்டால் நிறைய குப்பைகளை குறைக்க முடியும். வரும் காலங்களில் குப்பைகளை கையாள தனியாக அமைச்சரகம் உருவாக்க வேண்டிய சூழல் உண்டாகும் வாய்ப்பே அதிகம். 

மொத்தத்தில் ஆக்கப்பூர்வமான கழிவு மேலாண்மை உடனடி தேவையாக இருக்கிறது. இப்போதும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தால் இயற்கை, நாம் வீசும் குப்பைகளை நம் மீதே வீசும்  !

மேலும் படிக்க:

நாமெல்லாம் குற்றவாளிகளே !

அக்னியையும் தாண்டி ...!

Saturday, June 24, 2017

மண் பேசும் !



நாம் வாழும் பூமி மண்ணின் மூலமே சுவாசிக்கிறது. மனித இனத்தின் செயல்பாடுகளால் நாளுக்கு நாள் பூமி மூச்சு விடவே சிரமப்படுகிறது. மண்ணே தெரியாதவாறு கான்கிரீட்களை கொட்டுகிறோம் அல்லது செரிக்க முடியாத அளவிற்கு கழிவுகளைக் கொட்டுகிறோம்.மிச்சமிருக்கும் விவசாய நிலங்களில் மட்டுமே மண் வெளியே தெரிகிறது.

கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் மண்ணில் வாழ்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் நம் பூமியின் உயிர்ச்சூழலில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கின்றன. அவை ,மண்ணில் தாவரங்கள் , மரங்கள் வளர்வதற்கு துணை புரிவதோடு நாம் அனாயசமாக தூக்கியெறியும் பொருட்களை மட்கச் செய்து மண்ணிற்கு வளம் சேர்க்கின்றன. பூமியின் கதாநாயகர்கள், மட்குண்ணிகள் என அழைக்கப்படும் இந்த நுண்ணுயிரிகள் தான். நாம் தூக்கியெறிபவை மட்காமல் போனால் என்ன ஆவது ?

மண்ணிலிருந்து தொடங்கி மண்ணிலேயே முடிகிறது வாழ்க்கை. மண்ணிற்கு மரியாதை கொடுக்காத எந்த இனமும் நிலைத்திருக்காது. மழை பெய்தால் வருகிற மண்வாசனை கூட அசலாக இல்லை. தார் வாசனை தான் முதலில் வருகிறது. கிராமங்களையும் கான்கிரீட் சாலைகளைக் கொண்டு நிரப்பிவிட்டார்கள், பாவிகள். மழைநீர் மண்ணில் இறங்கவே வழியில்லாமல் செய்துவிட்டு நிலத்தடி நீர் கீழே போய்விட்டது, நிலத்தடி நீர் கீழே போய்விட்டது என்று புலம்பினால் மட்டும் வந்து விடுமா ?

இப்பவே ஆயிரம் அடி போர் போட்டாலும் தண்ணீர் கிடைக்கலைங்கிறீங்க, இப்படியே பண்ணுங்க அப்புறம் எத்தனை அடி போட்டாலும் தண்ணீர் கிடைக்காது . இன்னும் கொஞ்சம் ஆழமா தோண்டுனா நெருப்புக்குழம்பு வேணுமின்னா கிடைக்கலாம்.

முதலில் கிராமங்களில் போடப்பட்ட கான்கிரீட் சாலைகளை உடைத்தெறிய வேண்டும். மழை பெய்து முடித்த அடுத்தநாளில், மழைநீர் பாய்ந்தோடியதால் உருவான தண்ணீர் தாரையுடைய தெரு மண்ணில் கொட்டாங்குச்சியில் மண் நிரப்பி இட்லி சுட்டு விளையாண்ட காலம் இனி திரும்பப்போவதில்லை. இன்று குழந்தைகள் மண்ணில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை அல்லது அவர்கள் விளையாட மண்ணே இல்லை.

நாம் பேசத் தயாராக இருந்தால் மண் நம்முடன் பேசும் !

Saturday, April 11, 2015

சூரியன் எரியும் கதை !

சூரியனும் சந்திரனும் ஒரு விருந்திற்கு சென்றார்கள்.அங்கே வடை ,பாயாசத்துடன் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. உணவை விரைவாக வயிறு நிறைய சாப்பிட்ட சூரியன் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு வந்த சூரியனைப் பார்த்து அம்மா கேட்டார்,

 " வாடா, பெரியவனே விருந்தெல்லாம் முடிந்ததா ?"

 "முடிந்தது அம்மா ! ,இது போன்ற உணவை இதற்கு முன்பு உண்டதில்லை "

"எங்கடா மகனே எனக்கு உணவு ?"

சூரியன் மேலும் கீழும் விழித்தான்.
அப்போது சந்திரனும் வீடு வந்து சேர்ந்தான்.
சந்திரனிடமும் அதே கேள்விகளை அம்மா கேட்டார் .

"வாடா, சின்னவனே விருந்தெல்லாம் முடிந்ததா?"

"ஆமாம், அம்மா !"

"எங்கடா மகனே ,எனக்கு உணவு?"

"இலையை விரியுங்கள், அம்மா!"

"எதுக்குடா ?"

"முதலில் இலையை விரியுங்கள் ,பிறகு சொல்கிறேன் " என்றான் சந்திரன்.

வீட்டின் முன்புறத்தில் இருந்த வாழை மரத்தில் ஒரு இலையை அறுத்து வந்து விரித்தாள் ,அம்மா.

தனக்கு படைத்த உணவில் பாதியை எடுத்து வைத்துக் கொண்டு மீதியை உண்ட சந்திரன்.அந்த பாதி உணவை இலையில் வைத்தான்.பசியுடன் அந்த உணவை உண்ட அம்மாவின் வயிறு குளிர்ந்தது.அம்மா , மகன்களைப் பார்த்து

"சூரியனே,பசியால் என் வயிறு எரிந்தது போல நீயும் எரிந்து போ !"

"சந்திரனே , என் வயிறு குளிர்ந்தது போல நீயும் குளிர்ந்து போ !" என்று கூறினார் .

அதனால் தான் சூரியன் எப்போதும் எரிந்துகொண்டு வெப்பத்தையும்  ,சந்திரன் எப்போதும் குளிர்ச்சியையும் தருகிறார்களாம் .

சமீபத்தில் ஒரு டீக்கடையில் ,டீ மாஸ்டர் தனது வாடிக்கையாளரிடம் சொன்ன கதை இது .இந்தக் கதை நாடோடி கதைகள் பிரிவைச் சேர்ந்ததாகவே இருக்கும் என நினைக்கிறேன் . இந்த மாதிரியான அர்த்தமுள்ள வேடிக்கையான கதைகள் நம் வாழ்வை சுவாரசியப்படுத்துகின்றன .

கடந்த ஆண்டிற்கு முன்பு வரை வெப்பத்தை மட்டுமே அதிகமாக உணர்ந்தோம் . ஆனால் , கடந்த ஆண்டிலிருந்து வெப்பத்துடன் சேர்த்து எரிச்சலையும் தாங்க வேண்டியுள்ளது . கடந்த ஆண்டு , அக்னி நட்சத்திரத்திற்கு பிறகும் வெயில் கொளுத்தியது . இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயில் கொளுத்துகிறது எரிச்சலுடன் .  அளவிற்கு அதிகமான வெப்பம் உமிழும் பொருட்களையும், விதவிதமான வாயுக்களை வெளியேற்றும் பொருட்களையும் பயன்படுத்துவது தான் எரிச்சல் அதிகமாவதற்கு காரணமாக இருக்ககூடும் .ஆனாலும் , சூரியன் இல்லாத வாழ்வை பூமியில் கற்பனை கூட செய்ய முடியாது . உலக சக்திகளின் ஆதாரம் சூரியன் தான் .

மேலும் படிக்க :

சூரியன் - உலக சக்திகளின் மையம்

அக்னியையும் தாண்டி ...!

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?
...................................................................................................................................................................


Saturday, August 9, 2014

வலுத்தது நிலைக்கும் !

450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி என்று இன்று அழைக்கப்படுகிற கிரகம் 7927 மைல் விட்டமுள்ள மிதக்கும் பாறை .இந்தப்பாறையில் கடல்கள் உருவாக 100 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் முதல் உயிரினம் தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது . பூமியில் எவ்வாறு உயிரினம் தோன்றியது என்பது குறித்த ஆராய்ச்சி இன்று வரை தொடர்கிறது .சமீபத்தில் கூட சில ஆராய்ச்சியாளர்கள் ,செவ்வாய் கிரகத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு பாறை பூமியின் மீது மோதியதால் தான் உயிரினம் தோன்றியது என்று தெரிவித்துள்ளனர். இப்படித்தான் உயிரினம் தோன்றியது இதுவரை அழுத்தமாக யாராலும் சொல்ல முடியவில்லை .உண்மையான காரணம் இயற்கை மட்டுமே அறியும் .

பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் முதலில் தோன்றின .பரிணாம வளர்ச்சியின் காரணமாக அடுத்ததாக தாவரங்கள் தோன்றின.பரிணாம வளர்ச்சி என்பது உயிரினங்களின் மரபணுக்களில் தேவை, சூழல், தன்னெழுச்சியான  நிகழ்வுகள் சார்ந்து தொடர்ச்சியாக நிகழும் மாற்றங்கள் காரணமாக உயிரினங்களின் தகவமைப்புகளில் ஏற்படும் மாற்றம் என்று சுருக்கமாகச் சொல்லலாம் .இந்த மாற்றம் நிகழ கோடிக்கணக்கான வருடங்கள் தேவைப்படுகின்றன .உயிரினங்களின் உருவாக்கத்தில் தாவரங்களின் தோற்றம் முக்கியமான நிகழ்வு . பூமியின் ஆதார சக்தியான சூரியஒளியைப் பயன்படுத்தி காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு  மற்றும் நிலத்தில் உள்ள தண்ணீர் உதவியுடன் ஒளிச்சேர்க்கை நடைபெற்று தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே தாயாரித்துக்கொள்வதுடன் ஆக்ஸிஜன் வாயுவையும் தாவரங்கள் வெளியிடுகின்றன .

அடுத்ததாக நீர் வாழ்வன ,நில வாழ்வன , நீர் நில வாழ்வன , பறப்பன , ஊர்வன ,நடப்பன என்று தாவரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜனை உயிர்மூச்சாக கொண்டு உயிர்வாழும் உயிரினங்கள் தோன்றின . முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினங்களிருந்து பரிணாம வளர்ச்சியின் காரணமாக குட்டி போட்டு பால் கொடுக்கும் உயிரினங்களான பாலூட்டிகள் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகின.அந்தப் பாலூட்டி இனங்களில் ஒன்று தான் குரங்கிலிருந்து உருவான மனித இனம் . மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது . மனித இனத்தில் முதலில் தோன்றியது பெண் தான் . குரங்கிலிருந்து முழு பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக மாறியது 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான்.

அடர்ந்த ஆப்பிரிக்கக் காடுகளில் பல வகை குரங்குகள் வாழ்ந்து வந்தன . வெயிலும் வெப்பமும் மிகுந்த அந்தச் சூழலில் மற்ற குரங்கினங்களால் விரட்டப்பட்ட குரங்கினம் தான் பின்னாளில் மனிதனாக மாறியது . மற்ற விலங்குகளுக்கு இருப்பது போன்ற எந்தவித சிறப்புத் தகுதிகளும் இல்லாத அந்த குரங்கினத்தால் அந்தச்சூழலில் வாழமுடியவில்லை . சுற்றிலும் இருந்த  சிங்கம்,சிறுத்தை,பாம்பு ,கழுகு போன்றவற்றிடமிருந்து தப்பிப்பதே பெரும் போராட்டமாக இருந்தது . எண்ணிக்கையில் குறைவாக இருந்த அந்த மனிதனாக மாறப் போகிற குரங்கினம் அழிந்து போகும் ஆபத்துக்கு உள்ளாகி  "அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் (Endangered Species) " பட்டியலில் சேர்ந்தது .இன்று அதே குரங்கினம் பல உயிரினங்களை Endangered Species ஆக மாற்றிக் கொண்டிருப்பது தான் இயற்கையின் விளையாட்டு .

இயற்கைக்கு இரக்கம் என்பதே துளியும் கிடையாது . " திறமையிருந்தால் பிழைத்துக்கொள், இல்லையேல் அழிந்து போ " என்ற Survival of the Fittest  ( வலுத்தது நிலைக்கும் ) மட்டுமே இயற்கையின் ஒரே விதி . இந்த விதிக்கு உட்பட்டு மிகத் திறமையாக 4 லட்சம் ஆண்டுகளாக இயற்கையின் விளையாட்டில் பங்குபெற்றுள்ள இனம் தான் மனித இனம் . இந்த விளையாட்டில் மனிதன் என்று தோற்கிறானோ அன்றே அழிந்துவிடுவான் . ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து உயிர் பிழைப்பதற்காக வெளியேறிய குரங்கினம் மரக்கிளையில் தொங்கியபடி நடந்த பழக்கத்தில்  இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்தது . பெரிய குரங்கினங்களைச் சார்ந்து வாழ்ந்த பழக்கத்தில் விட்டுக்கொடுத்து அனுசரித்து கூட்டமாக வாழப் பழகிக் கொண்டன .விதவிதமான பழங்களைத் தேடித் தின்ற பழக்கத்தில் (ஓ..அந்தப் பழக்கத்துல தான் இன்றும் மனிதன் விதவிதமான உணவுகளைத் தேடித்தேடி தின்கிறானோ ?) மாறுபட்ட நிறம் ,மணம், சுவை உணரத் தெரியும் . தங்களை பூமியில் நிலைநிறுத்திக்கொள்ள இந்தத் திறமைகள் மட்டும் போதவில்லை . ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை உண்டானது .

எதிர்பாரதவிதமாக அந்த அதிசயமும் நிகழ்ந்தது .இந்தப் பூவுலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன .இவற்றின் ஒரே பிறவிப்பயன் இனவிருத்தி தான். மற்ற மிருகங்கள் வருடத்தில் சில வாரங்கள் மட்டும்,பருவகாலத்தில் இனம் சேர்ந்து தங்கள் இனத்தைப் பெருக்கும் .இதற்கு நேர் மாறாக காலம்,நேரம் ,பருவம்,உருவம் கருதாமல் வருடத்தின் முன்னூற்றி அறுபத்தைந்தே கால் நாட்களும் தாராளமாக உறவு கொண்டு தங்களது இனத்தை பன்மடங்காக பெருக்கி காட்டியது ( இன்றும் பெருக்கிக் கொண்டே தான் இருக்கிறோம் ) மனித இனம் .

இயற்கையில் ஒரு வட்டம் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது . மற்ற பெரிய குரங்குகளாலும் விலங்குகளாலும்  அடித்துவிரட்டப்பட்ட மனித இனம் இன்று அனைத்து விலங்குகளையும் அடித்து விரட்டுகிறது ,ஏன் சக மனிதனையும் விட்டு வைக்கவில்லை . உயிர் பிழைத்திருக்க தான் வாழ்ந்த சூழலைவிட்டு இடம் பெயர வேண்டிய கட்டாயத்தை எல்லா விலங்குகளுக்கும் ஏற்படுத்திய பெருமை பெற்றது ,மனித இனம் .மற்ற விலங்குகள் மனிதனுக்குச் செய்ததை இன்று மனிதன் மற்ற விலங்குகளுக்குச் செய்கிறான் .

மனிதனுக்கு முன்பு வாழ்ந்த எந்த உயிரினமும் பூமியை இந்த அளவிற்கு அக்குவேராக ஆணிவேராக அலசி ஆராயவில்லை . பிறந்தோமா ,உணவைத் தேடித் தின்றோமா ,இனவிருத்தி பண்ணினோமா ,செத்தோமா என்று இருந்தன . பூமியில் என்னென்ன எங்கெல்லாம் இருக்கிறது , என்னென்ன உயிரினங்கள் வாழ்கின்றன ,தனது இனம் எங்கெல்லாம் இருக்கிறது என்ற எந்தவித ஆராய்ச்சியிலும் இறங்கவில்லை .பூமியைத் தாண்டியும் யோசித்து ஆகாயத்தையும் அடைய நினைக்கவில்லை .காரணம், மனிதனைப் போல உயிர் பிழைத்திருப்பதற்கு மிக நீண்ட தொலைவு பயத்துடன் பயணிக்க வேண்டிய தேவை அவற்றிற்கில்லை .அவை இருந்த இடத்திலேயே எல்லாம் கிடைத்தன ,அதானால் பெரிதாக எதையும் யோசிக்கவில்லை .மனிதனின் நிலை அப்படி அல்ல ,ஒவ்வொரு விசயத்திற்கும் போராட வேண்டிய கட்டாயம் இருந்தது ,இன்றும் இருக்கிறது .

மனிதன் இன்றும் ஒரு நாடோடி தான் ,பணம் ,பொருளுக்காகவும் ,உயிர் பிழைத்திருப்பதற்காவும் , ஊர் ஊராக ,நாடு நாடாக சுற்றி அழைகிறான் .மற்ற உயிரினங்களுக்கும் ,வளங்களுக்கும் மனிதன் எதிரி என்ற நிலை போய் மனிதனுக்கு மனிதனே எதிரி என்ற நிலை உண்டாகிவிட்டது போல் தோன்றினாலும் , இயற்கையைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி , நல்லது கெட்டது , சரி தவறு , கதாநாயகன் வில்லன் என்ற எந்தப்பாகுபாடும் இல்லை . மனிதனைப் போல அறம் சார்ந்த வாழ்வை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே ஒவ்வொரு விசயத்திலும் அறத்தை மீறும் வழக்கமும் இயற்கையில் இல்லை . " வலுத்தது நிலைக்கும் " - இது ஒன்று மட்டும் தான் இயற்கையின் ஒரே அறம் . இயற்கை ,அன்று ஆப்பிரிக்கக் காடுகளில் மனிதனுக்காகவும் கவலைப்படவில்லை ,இன்று மனிதனால் பாதிக்கப்படும் மற்ற உயிரினங்களுக்காகவும் கவலைப்படவில்லை . இயற்கையின் முன் எல்லா உயிரினங்களும் சமம் தான் .

ஒரு சுழற்சி எங்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . பிரபஞ்சத்தில் இருக்கு இல்லை ,இல்லை இருக்கு தான் தொடர்ந்து நிகழ்கிறது . பால்வீதியில் பெரிய பாறைகளும் , நட்சத்திரங்களும் எதிலாவது மோதி வெடித்துச் சிதறித் தூள் தூளாக மாறுகின்றன . நாளடைவில் சிதறிய துகள்கள் மீண்டும் இணைந்து நட்சத்திரமாகவோ பாறையாகவோ மீண்டும் மாறுகின்றன . இது பால் வீதியில் தொடர்ந்து நிகழ்கிறது ,இது பிரபஞ்சத்திற்கும் பொருந்தும் .அறிவியலின்படி சூரியனிலிருந்து தோன்றியது தான் பூமி . பூமியின் ஆதார சக்தியும் சூரியன் தான் . சூரியஒளி பூமியில் விழாவிட்டால் பூமியின் இயக்கமே நின்றுவிடும் சூழல் உருவாகிவிடும் . பூமியில் ஒளிச்சேர்க்கை நடைபெறாவிட்டால் தாவரங்கள் அழிந்துவிடும் . தாவரங்கள் அழிந்துவிட்டால் ஆக்ஸிஜன் கிடைக்காது . ஆக்ஸிஜன் இல்லையென்றால் எல்லாம் காலி . சூரியனின் அழிவு தான் பூமியின் அழிவும் , சூரியன் இருக்கும் வரை பூமியும் இருக்கும் . சூரியனிலிருந்து உருவான பூமி ஒரு நாள் சூரியனை அடையும் . அதுவரை மனிதன் இருப்பானா எனபது சந்தேகமே !

பூமியில் வாழும் மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை . எந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும்  இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே  எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கமும் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .

மனிதனின் இந்த நம்பிக்கையின்மைக்கும் இயற்கையே காரணம் . பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்தன ,வாழ்கின்றன ,வாழும் (சூரியன் இருக்கும் வரை ).உயிரினங்கள் அழிவதும் ,புது உயிரினங்கள் தோன்றுவதும் பூமியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது .இது இயற்கையின் ஒரு அங்கம் .மனிதனின் செயல்பாடுகள் காரணமாக பூமியெங்கும் லட்சக்கணக்கான உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன .இயற்கை , நம்மை வைத்தே இவ்வளவு உயிரினங்களை அழிக்கிறதே, நம்மை அழிக்க என்னவெல்லாம் செய்யும் என்ற பயம் தான் ,இயற்கையின் மீதான நம்பிக்கையின்மைக்குக் காரணம் . அதானால் தான் தொடர்ந்து இயற்கைக்கு எதிராக செயல்பட்டு, இயற்கையின் செயல்கள் அனைத்தையும் செயற்கையாக செய்து பார்த்து இயற்கையை வெல்ல நினைகிறான் . மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்பதை உணர மற(று)க்கிறான் . பூமியில் மனித இனமும் அழிவது உறுதி . எப்போது என்பது தான் தெரியவில்லை .

பரிணாம வளர்ச்சி இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பது உண்மையென்றால் மனிதனிலிருந்து இன்னொரு உயிரினம் கண்டிப்பாக தோன்றியே தீரும் .குரங்கினத்தை குரங்கே ஒடுக்கியதால் மனிதன் தோன்றினான் .மனிதயினத்தை மனிதனே ஒடுக்குவதன் மூலம் யார் உருவாகப் போகிறார் என்று தெரியவில்லை . ஆறறிவுடன் ஒன்று சேர்ந்து ஏழறிவுள்ள உயிரினம் உருவாகலாம் .எல்லாம் காலத்தின் கையில் . வலுத்தது நிலைக்கும் !

இந்தக் கட்டுரை " குறி " சிற்றிதழில் வெளிவந்துள்ளது .

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941


இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :

சூரியன் - உலக சக்திகளின் மையம்

ரிமோட் கன்ரோல் வாழ்க்கை !  

....................................................................................................................................................................

Monday, August 6, 2012

ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - ஒரு பார்வை !


29 -07-2012 , ஞாயிற்றுக்கிழமை , பரபரப்பான நாட்களுக்கிடையே வந்த ஒரு வசந்த நாள் . ஆம் ,உண்மையில் வசந்த நாள் தான் நம் மண்ணுக்கும் மனதிற்கும் .நம்  மண்ணைப்பற்றி நமக்கு நினைவூட்டிய நாள் .மக்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  சென்னை நகரத்தில் ,லயோலா கல்லூரியில் நடந்தேறியது அவ்விழா . தமிழ் கூறும் நல்லுலகின் வசந்த விழா .அது , பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த " ஐந்திணை சுற்றுச்சூழல் விழா ". குறிஞ்சி ,முல்லை ,மருதம் ,நெய்தல் மற்றும் பாலை இந்தப் பேர்களைக் கேட்கும் போது எல்லோருக்கும் பள்ளிக்கூட நினைவுகளும் , தமிழ் மண்ணின் தனிச் சிறப்பும் பொங்கி வருவதைத் தடுக்க முடியாது .ஆனால் , அவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் ஐந்திணையின் இன்றைய நிலை என்ன ?

நோபெல் பரிசுக்கு இணையாக மதிக்கப்படும் " Right Livelihood Award (2008 )" வென்ற மண்ணுக்கும் மனிதர்களுக்குமான போராளியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார் . வினோ பாவே இயக்கத்தில் தான் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் மக்களுக்காக எப்படியெல்லாம் பாடுபட்டார்கள் என்பதையும் வினோ பாவேவின் தொலைநோக்கு பார்வை குறித்தும் ,மக்கள் மேம்பாடுக்கான பணிகள் பற்றியும் குறிப்பிட்டார் .இறால் பண்ணைகள் அமைத்து கடற்கரையை நாசமாக்க முயன்றவர்களிடமிருந்து  தமிழக கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க எப்படியெல்லாம் போராடினார் என்பதையும் விளக்கிக் கூறினார் .

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மிகவும் வருத்தப்பட்ட விசயம் நம் கல்வி நிலையங்களின் அமைவிடங்கள் பற்றியது ." தடுக்கி விழுந்த இடத்திலெல்லாம் இன்ஜினியரிங் கல்லூரிகள் ;பாவிகளா ,அந்த கல்லூரிகளை எந்தப்பொருளும் விளைய தகுதியற்ற இடங்களில் கட்டலாமே .நெல் அதிகம் விளைந்த தஞ்சாவூர் எங்கும் கல்வி நிலையங்கள் .முக்கியத்துவம் அறிவுக்கா ? உணவுக்கா ? நாமெல்லாம் மாதம் முழுதும் உழைத்தாலும் போதிய பணம் கிடைப்பதே அரிது . நம்மைச் சுற்றி கொள்ளைகாரங்களா இருக்காங்க , இந்தக் கொள்ளைக்காரங்க அளவுக்கதிகமான பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரிகள் கட்டி மறுபடியும் கொள்ளையடிக்கிறாங்க .இதப் போய் மக்கள்கிட்ட சொல்லுங்க ,விளைநிலங்களை  காப்பாத்துங்க "  என்று உருக்கமாக பேசினார் .

நம்மாழ்வார் பேசும்போதும் வினோ பாவே பற்றிக் குறிப்பிட்டார் . இளங்கோவடிகள் மற்றும் அவ்வையாரின் பாடல்களை மேற்கோள் காட்டி இன்றைய சூழலில் ஐந்திணையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பேசினார் .சூரிய ஒளி ஆற்றலை உள்ளே விட்டும் , வெப்ப ஆற்றலை வெளிவிடாத கார்பன் வளையங்கள் பற்றி குறிப்பிட்டார் .எவ்வாறு மரங்கள் கார்பன் வளையங்களைக் குறைக்கும் என்பதையும் சொன்னார் . மாலத்தீவில் கடலுக்கு அடியில் நடந்த உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பற்றிச் சொன்னது புதிதாக இருந்தது . ஹோமோ சேப்பியன் என்று சொல்லிக்கொள்ளும் நாம் "இயற்கைக்கு விரோதமானத சாப்பிட்டு இயற்கைக்கு விரோதமா சிந்திக்கிறோம் " என்று சொன்னார் .கல்விக்கூடங்களின் மோசமான செயல்பாட்டை சுட்டிக்காட்டினார் ." புத்தகங்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை, நம் கல்வி முறை நம்மைச் சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்றவாறு வாழ நம்மைப் பழக்கவில்லை " என்றார் .
  
காலை 9-30 முதல்  மாலை  5.00 வரை ஐந்திணைகள் பற்றிப் செயல்பாட்டாளர்கள்  பேசினார்கள் .ஐந்திணைகள் பற்றிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன . பாரம்பரிய விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது , நம் மரபு வழி விதைகளை இழந்து விட்டோம் ,உணவே மருந்து என்ற நிலை மாறிவிட்டது என்று கூறினார் அடுத்து பேசிய சுல்தான் இஸ்மாயில் . வினோ பாவே வேம்புக்கு கொடுத்த முக்கியத்துவம் குறித்துப் பேசினார் . தேசிய கொடியை சமையலறையில் ஓட்டச் சொன்னார் .எதற்கு என்றால் நாம் சாப்பிடும் உணவில் ஆரஞ்ச் ,வெள்ளை மற்றும் பச்சை நிற  உணவுகள் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் . நடுவில் உள்ள ஊதா நிறச் சக்கரம் தண்ணீரைக் குறிக்கிறது .இவ்வாறு நாம் இருந்தால் சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கையைப் போல 24 மணி நேரமும் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் .Ecology ,Economyயாக  மாறும் போது தான் பிரச்சனையே .Management , t யை எடுத்து விட்டால் Managemen , n யை எடுத்து விட்டால் Manageme என்று சுவாரசியமாகப் பேசினார் .     

குறிஞ்சி நிலப்பரப்பு குறித்து வேலூர் சி .சீனிவாசன் பேசினார் . வேலூரில் தாங்கள் செயல்படுத்தி வரும் VHRP - Vellore Hill Restoration Project பற்றிக் குறிப்பிட்டார் .மலைக் குன்றுகளில் சிறு சிறு குளங்கள் அமைப்பதும் , வறண்ட மலைக் குன்றுப் பகுதிகளைப் பசுமையாக்குவதும் இந்த செயல் திட்டத்தின் முக்கிய நோக்கம் .இதன் பயனாக மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றாமல் இருக்கிறது .பயனுள்ள முயற்சியாக தெரிந்தது .

குறிஞ்சி நிலப்பரப்பு குறித்து அடுத்து பேசிய வழக்குரைஞர் இரா .முருகவேல் பழங்குடிகளுக்கும் காட்டுக்கும் ,இயற்கைக்கும் உள்ள நெருக்கம் பற்றிக் குறிப்பிட்டார் . பழங்குடிகள் தாங்கள் குடியிருக்க வீடுகள் கட்ட மூங்கிலையும் ,நாணலையும் பயன்படுதுகின்றனர் . மூங்கில் மீண்டும் வளரும் ,நாணல் காய்ந்தால் காட்டுத் தீயை அதிகப்படுத்தும் . சமவெளியில் வாழும் மக்களே காடுகளின் அழிவிற்கு காரணம் .பழங்குடிகளால் மட்டுமே காடுகளை பாதுகாக்க முடியும் ,அவர்கள் பழங்குடிகளாக இருக்கும் வரை .

முல்லை நிலப்பரப்பு குறித்து பேசிய பேராசிரியர் .த .முருகவேல் , பிணந்திண்ணி கழுகுகளின் அழிவு எவ்வாறு உயிர்ச் சூழ்நிலையை பாதிக்கிறது என்றும் காடுகளின் பரப்பு குறைவதால் சிறுத்தை போன்ற விலங்குகளை காடுகளை விட நிலப்பரப்பில் அதிகம் காண முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

முல்லை பற்றி அடுத்து பேசிய பேராசிரியர் கு.வி .கிருஷ்ணமூர்த்தி திணைச்  சிதைவு பற்றிக் குறிப்பிட்டார் . ஒரு நிலப்பரப்பில் வாழும் உயிருள்ள மற்றும் உயிரட்ட கலவையே திணை எனப்படும் .அதாவது நிலத்தோடு இயைந்த பண்பாட்டுக் கூறுகளே திணையாகும் . இன்று எந்த நிலப்பரப்பும் திணையாக இல்லை .வெறும் நிலமாகச் சுருங்கிவிட்டது அல்லது வேறு திணையின் கூறுகளோடு கலந்து விட்டது . குறிஞ்சி ,முல்லை ,மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நான்கு திணைகளும் ஒருங்கே அமைந்த மாவட்டம் ,திருநெல்வேலி . வரகு ,குதிரைவாலி ,சாமை ஆகியன முல்லையின் உணவுப்பொருட்கள் . 10000 ஆண்டுகளுக்கு முன்பு 70 % இருந்த முல்லை நிலப்பரப்பு ,இன்று 15 % குறைந்து விட்டது .

ருதம் பற்றி வைகை குமாரசாமியும் ,அறச்சலூர் செல்வமும் பேசினார்கள் .இயற்கை விவசாயம் குறித்து பேசினார்கள் . இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பொருட்கள் விலை ஏன் அதிகமாக உள்ளது என்று விளக்கினார்கள் .உழுதல் ,மழையைக் கணித்தல் ,விதைகளைத் தேர்ந்தெடுத்தல் , நாடு நடுதல் ,சரியாக நீர் பாய்ச்சுதல் ,சரியான நேரத்தில் களை பறித்தல் ,சாகுபடி செய்தல்  என்று  60 கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் தெரிந்த ஒருவன் மட்டுமே விவசாயியாக இருக்க முடியும் . விதையிழப்பும் , நவீன இயந்திரங்களால் தொழில்நுட்ப இழப்புமே விவசாயம் , விவசாயிகளின் அழிவிற்கு காரணங்கள் .

பாலை நிலம் பற்றி சு .தியோடர் பாஸ்கரன் பேசினார் . காங்கிரஸ் அமைப்பைத் தோற்றுவித்தவரான  A .O .ஹியூம் , பறவைகளை அவதானிப்பதில் வல்லவராக இருந்திருக்கிறார் . அவர் Bustard என்று அழைக்கப்படும் கான மயிலைப் பார்த்திருக்கிறார் . இதுவே இந்தியாவின் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டியது .Bustard  என்ற வார்த்தை தவறாக உச்சரிக்கப்பட்டால் தவறாகப் போய்விடும் என்ற காரணத்தால் தேசிய பறவையாக இடம் பெறவில்லை . இது பாலை நிலத்தின் பறவையாகும் . முன்பு தமிழ்நாட்டில் அதிகளவில் இருந்த கான மயில்கள் தற்போது இல்லை . மத்திய பிரதேசத்திலும்  ,கர்நாடகாவிலும் உள்ள சரணாலயங்களில் மட்டுமே தற்போது கான மயில்கள் உள்ளன . காடை ,கள் கவுதாரி ,ஆள்காட்டிக் குருவி முதலிய பறவைகளும் ,குள்ள நரி ,குழி நரி ,காட்டுப்பூனை முதலிய விலங்குகளும் பாலை நிலத்தில் வாழ்ந்துள்ளன . பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் பிங்களர்கள் என்று அழைக்கப்பட்டனர் . துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு தான் அதிகமான காட்டுயிர்கள் கொல்லப்பட்டுள்ளன . இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு தான் அதிக காடுகளும் ,காட்டுயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன .அணைகள் கட்டுவதால் பாலை நிலம் அழிகிறது .

 கான மயில் :


நெய்தல் நிலம் பற்றிப்  பேசிய வறீதையா அழுத்தமான கருத்துகளை முன்வைத்தார் . வரலாற்றிலும் சரி தற்போதும் சரி நெய்தல் நில மக்களான பரதவர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை ." மீனை உணவாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள் , மீன் தான் எங்கள் வாழ்க்கை என்பதை நீங்கள் உணரவேயில்லை "  என்று சாடினார் . சேது சமுத்திரத் திட்டத்தின் காரணமாக பவளப்பாறைகள் சேதப்படுத்தப் பட்டதால் தான் சுனாமியின் காரணமாக நாகபட்டினமும் ,வேளாங்கண்ணியும் அதிகளவு பாதிக்கப்பட்டன ;பவளப் பாறைகளால் ராமேஸ்வரமும் ,கன்னியாகுமரியும் தப்பித்துக் கொண்டன .

நெய்தல் நிலம் பற்றி அடுத்து பேசிய அருள் எழிலன் , நெய்தல் நில மக்கள் குறித்த நீண்ட  வரலாற்றை  பதிவு செய்தார் . கிறித்துவம் நெய்தல் நில மக்களுடன் எப்படிக் கலந்தது ,தற்போது எப்படி உள்ளது என்று விளக்கினார் . புன்னைகாயல் என்னும் இடத்தில் தான் தமிழகத்தின் முதல் அச்சகமும் ,முதல் மருத்துவமனையும் மற்றும் முதல் கல்விக்கூடமும் இருந்ததாக குறிப்பிட்டார் . சென்னையில் கடலை நம்பி வாழ்ந்தவர்கள் கண்ணகி நகருக்கும் ,செம்மஞ்சேரிக்கும் துரத்தி அடிக்கப்பட்டது குறித்தும் வேதனையுடன் குறிப்பிட்டார் .ஜோ .டி .குரூஸ் நெய்தல் நில உரைகளுக்கு தலைமை தாங்கினார் .

மொத்தத்தில் வளர்ச்சி என்ற பெயரால் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறோம் . இப்படியே போனால் ஐந்திணை என்பதே இருக்காது .ஒரே திணையான காங்கிரட் திணை மட்டுமே இருக்கும் .

மாலை 5 மணிக்கு மேல் இருளர் பழங்குடி மக்களின் களை நிகழ்ச்சிகளும் ,கொல்லிமலை மலையாளி பழங்குடிகளின் சேர்வையாட்டமும் நடைபெற்றது . அடுத்ததாக சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டன .சிறு தானிய உணவுகளில் உள்ள சத்துகள் குறித்து சித்த மருத்துவர் கு .சிவராமன் தெளிவாக விளக்கிக் கூறினார் . நீண்ட நாட்களாக நான் பார்க்க விரும்பிய மருத்துவர் புகழேந்தியைச் சந்திக்க முடிந்தது .முடிவாக பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது .


அந்த உணவில் இடம்பெற்ற உணவு வகைகள்,
1.பானகம்
2.தேனும் தினை மாவும்
3.காணச்சாறு( கொள்ளு )
4.கம்பு வல்லாரை தோசை
5.நிலக்கடலைச் சட்னி
6.சாமை தயிர்சோறு
7.வழுதுணங்காய் ( கத்தரிக்காய் )  சாம்பார்
8.பருப்புக்கீரை மசியல்
9.குதிரைவாலி புளிச்சோறு
10.ராகி வாழைப்பூ வறுத்த சோறு
11.வரகு கூட்டாஞ்சோறு
12.தட்டைப்பயறு பிரட்டல்
13.தினை இனிப்புப் பொங்கல்
14.நவதானிய கொழுக்கட்டை
கிராமத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் சாமை ,வரகு ,தினை , குதிரைவாலி சாப்பிட்டதில்லை .இந்நிகழ்வின் மூலம் இவற்றையெல்லாம் உண்ணவும் ,உணரவும் முடிந்தது . எங்கள் வீட்டில் சிறு தானிய உணவுகளை சேர்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டோம் .

இனம் ,மொழி ,மதம் ,நாடு போன்ற பேதங்களில் சிக்க வேண்டாம் என்று தான் இருக்கிறேன் . ஆனால் , நம் முன்னோர்கள் பிரித்த இந்த ஐந்திணை என்னை பெருமைப்பட வைக்கிறது . உலகில் வேறு எங்கும் இது போல நிலத்தை பிரித்து வாழ்ந்தார்களா என்று தெரியவில்லை .

பூவுலகின் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ..!

 பூவுலகின் நண்பர்களின் இணையதளம் :-  www.poovulagu.net .

 ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - காணொளி -http://www.periyarthalam.com/2012/07/31/ainthinai-vizha-videos/

மேலும் படிக்க : -

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?

நாமெல்லாம் குற்றவாளிகளே !
.....................................................................................................................................................................

Sunday, June 17, 2012

அக்னியையும் தாண்டி ...!

தலைப்பைப் பார்த்ததும் இந்தியா நம் வரிப்பணத்தில் பாயவிட்ட அக்னி 5 பற்றியோ அல்லது வராத ,வரக்கூடாத போருக்காக அடுத்து பாயவிட தயாராகும் அக்னி 6 ,அக்னி 7 பற்றியோ எதுவும் சொல்லவரவில்லை . மற்ற அனைத்து ஆராச்சிகளையும் குறைத்துவிட்டு இயற்கைக்குப்  பாதிப்பு இல்லாமல் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் உடனே  செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . விசயத்துக்கு வருவோம் .அக்னி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது குறித்து தான் எல்லா ஊர்களிலும் உள்ள மக்கள் கவலைப்படுகின்றனர் .

அக்னி வெயில் முடிந்த பிறகும் வெப்பம் குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம் ? எளிய காரணங்கள் தான் தென்படுகின்றன . நாம் பள்ளியில் படித்திருக்கிறோம் " ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ; ஆனால் , ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக முடியும் " என்று . நாம பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்களின் பயன்பாட்டின் போதும்  பயன்பாட்டிற்கு பிறகு வெளிவரும் ஆற்றலாக இருப்பது " வெப்ப ஆற்றல் ".

                 மின் ஆற்றல் --> இயந்திர ஆற்றல் --> வெப்ப ஆற்றல்
                 மின் ஆற்றல் --> ஒளி ஆற்றல்  --> வெப்ப ஆற்றல்
                                   
 டிவி ,ரேடியோ ,செல்போன் ,தொலைபேசி ,கணினி ,கிரைண்டர் ,மிக்ஸி ,குளிர்சாதன பெட்டி ,காற்றாடி ,ஒளி விளக்குகள்  போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் மூலம் வெப்ப ஆற்றல் வெளிவருகிறது .

ருசக்கர ,நான்கு சக்கர மற்றும் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களும் வெப்ப ஆற்றலை வெளிவிடுகின்றன .

பூமியிலிருந்து  தண்ணீர் இழுக்க பயன்படும் மின்சார மோட்டார்கள் ,மின்தடைக்கு மாற்றாக பயன்படுத்தும் ஜெனரேட்டர்கள் ,UPS போன்றவையும் வெப்பத்தை வெளிவிடுகின்றன .

ல்வேறு வகையான தொழிற்சாலைகளில் ,பல்வேறு விதமான இயந்திரங்கள் இயக்கப்படுவதன் மூலம் பெருமளவில் வெப்பம் வெளியேற்றப்படுகிறது .  

ரிபொருள் எங்கெல்லாம் எரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வெப்பம் வெளியேறும் . அது பெட்ரோலிய பொருட்களாக இருந்தாலும் சரி , குளுக்கோஸாக இருந்தாலும் சரி வெளிவருவது வெப்பம் தான் . அது போல இயந்திரங்கள் (சிறியது முதல் பெரியது வரை ) எங்கெல்லாம் இயக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வெப்ப ஆற்றல்  வெளிவரும் .

வ்வளவு வெப்பமும் எங்கு போகும் ? பூமில் தான் இருக்கும் .  வாகனங்கள் அதிகம் ஓடும் இடங்களிலும் ,தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது .அதனால் தான் காலநிலையில் பெருமளவு மாற்றங்கள் நடைபெறுகிறது .

ரண்டு தீர்வுகள் தான் தெரிகின்றன . ஒன்று மிதமிஞ்சிய வெப்ப ஆற்றலை வேறு வகை ஆற்றலாக மாற்றுவது ;இரண்டு அதிக அளவில் மரங்கள் நடுவது . மூன்றாவதாக ஒரு தீர்வு உள்ளது .அது பூமியின் கையில் உள்ளது . வலுத்தது நிலைக்கும் ( Survival of Fittest ) என்ற கொள்கையின் படி பூமி ,வெப்ப ஆற்றலைக் கட்டுப்படுத்தி தானாகவே சம நிலைக்குக் கொண்டு வரலாம் .இயற்கையின் போக்கை யாராலும் நிர்ணயிக்க முடியாது .

மற்றபடி சூரியனையும் ,வெயிலையும் திட்டுவதில் எந்தப் பயனும் இல்லை . சூரிய வெப்பம் தேவையானது .சூரியன் இல்லாமல் பூமியில் யாருக்கும் வாழ்க்கை கிடையாது .ஏன் பூமியே கிடையாது . எல்லாவற்றுக்கும் மாற்றுவழி நாம் தான் தேட வேண்டும் . இல்லையேல் இயற்கையின் விளையாட்டை பொறுமையாக ரசிக்கவும் .

பொருத்துக்கொண்டிருக்கும் பூமி என்று பொங்கப் போகிறதோ ..!


மேலும் படிக்க :

 நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

வேடந்தாங்கலில் ஒரு நாள் !
..................................................................................................................................................................

Wednesday, February 22, 2012

மரங்களை வெட்டுங்கள்!!

காட்டு கருவேல மரம் ,சீமை கருவேல மரம் மற்றும் சீத்தை மரம் ( இவை அனைத்தும் ஒரே மரத்தின் வேறு பெயர்களா ? தெரியவில்லை ) நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்கள் . ஆனால் , தமிழ்நாட்டில் இந்த மரங்கள் தான் எங்கெங்கு காணினும் நீக்கமற நிறைந்திருக்கின்றன . இவை அழிக்கப்படுவதின் அவசியத்தை இந்தக் கட்டுரை விளக்குகிறது .இந்தக் கட்டுரையை நிறைய பேர் படித்திருக்கலாம் .இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி  படிக்காதவர்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .இது என் சொந்த கட்டுரை அல்ல . இரவல் கட்டுரை .

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன் :

 
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )


நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே' ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள் :

 
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம் :

 
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு :

 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

 
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம் :

 
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள் .இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
 

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்

இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல், வேரோடு புடுங்கி எறியுங்கள்..உங்கள் ஊர் பள்ளி ஆசிரியரை சந்தித்து இதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக்கச்  சொல்லுங்கள்.
 

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! 

நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! 

பின்குறிப்பு :
அறிவியல் படி பார்த்தால்  இந்த மரங்கள் தமிழ்நாட்டின் வெற்றியாளர்கள் தான் . எத்தனையோ வகையான மரங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்  இந்த வேளையில் இவை தங்களின் இருப்பை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன . வலுத்தது நிலைக்கும் !

மேலும் படிக்க :

 நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ? 

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 
..................................................................................................................................................................... 

Saturday, January 21, 2012

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?

நியூட்ரினோ என்பது மின்சுமை இல்லாத ஒளியை விட வேகமாக(?) பயணிக்கும் துகள் என்று சொல்லப்படுகிறது . இது , மின்காந்த அலைகள் மற்றும் வேறு எந்தத் துகள்களாலும் பாதிக்கப்படாமல் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடியது . நியூட்ரினோக்கள், இயற்கையான முறையில் சூரியனில் நடைபெறும் வேதியல் மாற்றங்களால் கிடைக்கின்றன . செயற்கையான முறையில் அணு உலைகள் மூலமாகவோ அல்லது காஸ்மிக் கதிர்கள் மூலமாக அணுவைத் தாக்குவதன் மூலமாகவோ நியூட்ரினோக்களை உருவாக்க முடியும் .ஆனால் , இது மிகவும் கடினம் மற்றும் ஆபத்து அதிகம் . அதனால் , சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களை பிடித்து ஆய்வு செய்யவே உலகெங்கும் நியூட்ரினோ ஆய்வுமையங்கள் அமைக்கப்படுகின்றன . இதுவும் எளிதல்ல .


நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சம் உருவான விதத்தையும் , சூரியனின் ரகசியங்களையும் அறியமுடியும் என்று அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள் . மேலும் இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் . இவர்களால் நம்பிக்கை மட்டுமே தெரிவிக்க முடியும் . ஆனால் , முடிவு எப்போதும் இயற்கையின் கையில் .

மூன்று விதமான நியூட்ரினோக்கள் :
                         Electron நியூட்ரினோ ( ne), Muon நியூட்ரினோ( nm) மற்றும்  Tau நியூட்ரினோ( nt)  என்று மொத்தம் மூன்று விதமான நியூட்ரினோக்கள் இருக்கின்றன .

Neutrino ne nm nt
Charged Partner electron (e) muon
(m)
tau
(t)

1930  ஆம் ஆண்டிலிருந்தே நியூட்ரினோ பற்றிய ஆய்வுகள் தொடங்கி விட்டன . ஆனால் இன்றுவரை பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை . நியூட்ரினோ துகள்களுக்கு எடை உண்டு என்று மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது .ஜப்பான்ல வச்சிருக்காக ,அமெரிக்கால வச்சிருக்காக அதனால நாமும் ஒன்ன உண்டு பண்ணலாம் என்று நெடு நாட்களாக இந்தியா முயற்சித்து வருகிறது . இதற்கு  முன்பு வடமாநிலத்தில் ஏதோ ஒரு இடத்தில் அமைய இருந்ததும் , நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் அமைய இருந்ததும் இயற்கை ஆர்வலர்களின் பலத்த எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது . அதனால்   கோலார் தங்க வயலில் நியூட்ரினோ  ஆய்வுமையம் செயல்பட்டு வந்தது . இதுவரை எவ்வளவு பணம் செலவளிக்கப்பட்டுள்ளது ? என்ன கண்டுபித்திருக்கிறார்கள்  ? என்று எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை .


இந்தநிலையில் தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது . இதற்கு தேவாரம் பகுதி மக்கள் கடந்த ஆண்டே எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால் , பெரிய போராட்டமாக முன்னெடுக்க முடியவில்லை . கண்டிப்பாக ஆய்வு மையம் அமையும் இடத்தில் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் . இந்தப்பாதிப்பு இன்னொரு " தானே " புயல் போல ஏதோ ஒரு வடிவத்தில் பூமியைப் பாதிக்கும் . இயற்கையின் அடி வலிமையாக மட்டுமே இருக்கும் .
இந்திய மூளைகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்றே வைத்துக்கொள்வோம் . இவர்களை ஜப்பான் அல்லது அமெரிக்காவிற்கு அனுப்பி அவர்களுடன் இணைந்து ஆய்வுகளை நடத்தச் சொல்லலாமே . அதை விடுத்து புதிதாக ஆய்வு மையம் அமைப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் அதிகளவு விரையமாகப்  போகிறது .மலையைக் குடைவதன் மூலமும் , சுரங்கம் அமைப்பதன் மூலமும் இயற்கை சூழலும் , சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படும் .


இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு ஏற்பட்டதன்  விளைவாக  மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.  


அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் தொடர்ந்து இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது ஒரு கூட்டம் . இன்று உலகில் கோடிக்கணக்கான ஆலைகள் மற்றும் ஆய்வு மையங்கள்  உள்ளன . ஆலையின் கழிவுகள் நுண்ணுயிரிகளை அதிகம் பாதிக்கின்றன . இயற்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாத கழிவுகளை வெளியிட எந்த அறிவியல் முறையாலும் முடியவில்லை . அதே வேளையில் இயற்கையில் கழிவு என்பதே இல்லை . இயற்கையின் கழிவு மற்றொரு உயிரினத்தின் வளர்ச்சிக்கு ஊட்டமாக மாறுகிறது .  

" இடுப்பு வேட்டிக்கு வக்கில்லையாம் ; இதுல இன்டர்நெட் கனெக்சன் கேட்குதாம் " என்று சுஜாதா வேடிக்கையாக சொன்னது போல, " சோத்துக்கே வழியில்லையாம் (இந்தியாவில்  வாழும் 40 % சதவீத மக்களுக்கு இன்னும் சரியான உணவு கிடைத்தபாடில்லை ) ; இதுல நியூட்ரினோ  ஆய்வுமையம் கேட்குதாம் " .

மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

...................................................................................................................................................................

Friday, November 25, 2011

நாமெல்லாம் குற்றவாளிகளே !

நாம் வாழும் இந்தப்  பூமி, கோடிக்கணக்கான உயிரினங்களுக்குச் சொந்தமானது . ஆனால் , விலங்கினங்களில் ஒன்றான மனிதன் ,தனக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதுகிறான் . இந்த ஒரு விலங்குக்கூட்டம்
( மனிதர்கள் ) வாழ்வதற்கு மற்ற அனைத்து  உயிரினங்களையும்  பாதிக்கிறது .பாதிப்பு எதுவும் வந்தாலும் ,தான் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதுகிறான் ,மற்ற உயிரினங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை .பூமியில்  வாழும் சகமனிதர்கள் பற்றியும் கவலையில்லை .இதுல , தான் மட்டுமே ஆறறிவு உள்ள மிருகம் என்ற பெருமை வேறு .

 மற்ற உயிரினங்களைச் சாராமல் எந்த உயிராலும் பூமியில் வாழ முடியாது .மனிதன் ,மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன் அல்ல .அவன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமே .மற்ற உயிரினங்கள் இருக்கும் வரை தான் மனிதனாலும் வாழ முடியும் . செடி ,கொடிகள் ,மரங்கள் சூரிய சக்தியிலிருந்து உணவு தயாரிக்கிறது . இந்தத் தாவரங்களைச் சார்ந்து சிறிய பூச்சிகள் முதல் விலங்கினங்கள் வரை வாழ்கின்றன . தாவரங்களோ ,விலங்குகளோ இறந்து விட்டால் ,இவற்றை மண்ணோடு மண்ணாக மட்கச் செய்யும் பணியில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் (மட்க்குண்ணிகள்)  ஈடு பட்டுள்ளன . மட்கிப் போனவை , தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன . இயற்கையில் கழிவு என்பதே இல்லை .

மனிதனுக்கு வியாதி வந்தால் ,மருத்துவரிடம் போகிறான் . மரம் ,செடி ,கொடிகள்,பூச்சிகள் ,விலங்குகள் ,நுண்ணுயிரிகள் , இவற்றுக்கு வியாதி வந்தால் யாரிடம் போகும் . உடலில் குறைபாடுள்ள மனிதர்களுக்காக நாம் கவலைப்படுகிறோம் . ஆனால் ,மற்ற உயிரினங்களில் உள்ள குறைப்பாடுகளைக்  கவனிக்க யார் இருக்கிறார்கள் .இயற்கை மட்டுமே இருக்கிறது .மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை .

எந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும்  இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே  எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .

மனிதன் எப்போதும் இயற்கைக்கு விரோதமாக செயல்படுவதில் ஆர்வம் கொண்டவனாகவே இருக்கிறான் . இத்தகைய போக்கினால் அவன் சந்திக்கும் துன்பங்கள் ஏராளாம் . ஆனாலும் அவனது குணம் மாறவே இல்லை .ஆறாம் அறிவு என்னும் தலைக்கனம் அவனை ஆட்டி வைக்கிறது . இயற்கையின் உதவியில்லாமல் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறான் .இது எப்போதும் சாத்தியமில்லை . மனிதனால் இயற்கையை மீறி எதையும் செய்ய முடியாது .வெற்றி பெறுவது போல காட்டிக்கொண்டு தினமும் இயற்கையிடம் தோற்றுக் கொண்டே தான் இருக்கிறான் .

பூச்சிக்கொல்லிகள் ,உரம் ,பிளாஸ்டிக் ,மின் கழிவுகள் ,தொழிற்ச்சாலைக்   கழிவுகள்... இவையெல்லாம் சேர்ந்து நிலம் ,நீர்,காற்று என்று அனைத்தையும் பாதிக்கின்றன . நிலம் ,நீர் ,காற்று என்று எது மாசுபட்டாலும் தனக்கு ஏற்ப்படக்கூடிய பாதிப்புகள் பற்றி மட்டுமே சிந்திக்கிறான் . மாசுப்பாடுகளால் பாதிக்கப்படும் நுண்ணுயிரிகள், பூச்சிகள் ,மரம் ,செடி ,கொடிகள்,பறவைகள் , விலங்குகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை .மனிதனும் ஒரு சாதாரண உயிரினம் தான் .இதை உணர்ந்தாலே நம்முடைய பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . இயற்கைக்கு  எதிராக செயல்படும் வரை ,இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம்  குற்றவாளிகளே !

மற்ற உயிரினங்கள் ,எதை வேண்டுமானாலும் இழப்பதற்கும் ,பெறுவதற்கும்
தயாராகவே இருக்கின்றன . இது இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை . மூன்று வேளையும் சாப்பிட வேண்டிய கட்டாயமும் இல்லை . பசிக்கும் போது மட்டுமே உணவு தேடும் . விலங்குகள் ,குறிப்பிட்ட வயது வரை மட்டுமே தங்கள் குட்டிகளுக்கு ஆதரவு தருகின்றன .அதற்குமேல் அவற்றுக்கு ஆதரவும் தருவதில்லை ,அவற்றிடம் எதையும்   எதிர்பார்ப்பதுமில்லை . எல்லாவற்றையும் இயற்கைக்கு கொடுத்து விட்டு ,தனக்குத் தேவையானதை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன .

மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள் ,மனிதனை விட உயர்ந்ததாகவே மதிக்கப்படுகின்றன . சில இடங்களில் பசுவின் சிறுநீர் புனிதமானதாக கருதப்படுகிறது .பசுவின் சாணம் எருவாகவும் ,எருவாட்டியாகவும் பயன்படுகிறது . மனிதக் கழிவு ???  பூமியில் இதுவரை எத்தனையோ உயிரினங்கள் தோன்றி , வாழ்ந்து அழிந்துவிட்டன .எதிர்காலத்தில் இதில் மனிதனும் இடம் பிடிக்கலாம் .

மனிதர்களே இல்லாத பூமி கம்பீரமாக சுழலக் கூடும் !



மேலும் படிக்க :

நீரின்றி அமையாது உலகு ! 

வேடந்தாங்கலில் ஒரு நாள் !  
............................................................ 

Monday, June 13, 2011

சென்னையில் மீண்டும் பறவைகளின் சங்கீதம் !

சென்னைக்கும் பறவைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா ? சென்னை , கிராமங்களின் கூட்டமாக இருந்த காலத்தில் கேட்ட பறவைகளின் சங்கீதம் இப்போது மீண்டும் கேட்க ஆரம்பித்துவிட்டது . தினமும் இயந்திர ஒலிகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுக்கு இந்த பறவைகளின் சங்கீதம் ஒரு ஆறுதல் . இயந்திர ஒலிகளை மட்டுமே விரும்பிக் கேட்கும் ஒரு சிலருக்கு இது எரிச்சலைக்கூட உருவாக்கலாம் . ஆனாலும் இது நம்  ஆரோக்கியத்தின் அடையாளம் .  

சென்னையில் மரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் குயில் இருக்கிறது . காலை , மதியம் ,மாலை , இரவு என்ற பேதமில்லாமல் எல்லா நேரமும் கூவிக் கொண்டே இருக்கிறது . எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை குயிலின் சங்கீதம் . ஒரு சில இடங்களில் தனியாகவும் மற்ற இடங்களில் இயந்திர ஒலிகளுடன் இணைந்து தான் கேட்கிறது , குயிலின் சங்கீதம் . பிரித்து உணர்வது நம் திறமை . 

முன்பு காகங்களும் , கொஞ்சம் புறாக்களும் மட்டுமே பறந்த  சென்னை நகரத்தில் மைனாக்களும் ,  சிட்டுக்குருவிகளும் ( ஒலிகளை எழுப்பிக் கொண்டும் ) , தட்டாம் பூச்சிகளும் , பட்டாம்பூச்சிகளும் (ஒலிகளை எழுப்பாமலும் )  பறக்க ஆரம்பித்துவிட்டன . ஆனால் , எண்ணிக்கை மிகக் குறைவு . கடந்த சுதந்திர தினத்தின் போது சென்னை கோட்டையில் பச்சைக்கிளிகளைப் பார்க்க முடிந்தது . அதன் பிறகு இன்று வரை பச்சைக்கிளிகளைப் பார்க்க முடியவில்லை . 

பெரியார் ரோடு பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்தில் உள்ள பூங்காவில் மதிய நேரங்களில் மைனாக்களைப் பார்க்க முடியும் . சமீபத்தில் ஒருநாள் காலை 6 மணிக்கு மெரினா கடற்கரைக்குச்  சென்றபோது கடற்கரைப்பகுதி முழுவதும்  நூற்றுக்கணக்கான புறாக்கள் மண்ணைக் கிளறி தங்கள் உணவைத் தேடித் தின்றதைக் காண முடிந்தது . கடற்கரையை ஒட்டியிருந்த ஒரு மரத்திற்கு அடியில் பத்துக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் இருந்தன . போக்குவரத்து நெரிசல் குறைவான தெருக்களில் ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகளைக் காண முடியும் . முன்பு , எங்குமே இவற்றைக் காண முடியாது .

சிறிய செடிகள் , எவ்வளவு நெருக்கடியான இடத்திலும் முளைத்து விடுகின்றன     .செடிகளில் இருக்கும் பூவில் தேனை எடுக்க பட்டாம்பூச்சிகள் எங்கிருந்தாவது வந்து விடுகின்றன . பறவைகளைக் கூண்டில் அடைத்து வளர்ப்பதற்குப் பதில் ஒரு பழ மரத்தை வளர்த்தாலே போதும் பறவைகள் மரத்தைத் தேடி வந்துவிடும் .காகங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை . அவை , நம் சகோதரனாய் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன . இயற்கையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதை தான் . எதவும் தனக்காக மட்டுமே வாழாமல் எல்லோருக்காகவும் வாழ்ந்து எல்லோருக்கும் பலனைக் கொடுத்து , எல்லோரிடமிருந்தும் பலனைப் பெறுகின்றன . 

தினமும் பயணம் செய்தே ஆகவேண்டிய சூழ்நிலை ,  நகர வாழ்க்கையின் ஓர் அங்கம் . முடிந்தவரை பயணத்திற்கு தனிநபர் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள் . பேருந்துக்காக நிற்கும் போதும் , பேருந்து மற்றும் ரயிலில் செல்லும் போதும் நம் அருகில் இருக்கும் கவலை தோய்ந்த முகங்களை மட்டும் பார்க்காமல் கொஞ்சம் வானத்தையும் பாருங்கள் . முதலில் மேகங்களை ரசியுங்கள் , பிறகு பறவைகள் பறப்பதை ரசியுங்கள் .  காலை மற்றும் மாலையில் சூரியனையும் , இரவில் நிலவையும் ரசிக்கலாமே !

வலுத்தது நிலைக்கும் - Survival of the fittest !

மேலும் படிக்க :

.......................

Sunday, June 5, 2011

வேடந்தாங்கலில் ஒரு நாள் !

" வேடந்தாங்கல் " - பாடப்புத்தகங்களிலும் , வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ நாளிதழ்களிலும்  இடம்பெறும் ஒரு பெயர் . ஒவ்வொரு முறையும் இந்தப்பெயரை பார்க்கும்போதும் , கேட்கும்போதும் ஒரு முறையாவது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் துளிர் விடும் . நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு இன்று தான் வாய்ப்பு அமைந்தது . 

வேடந்தாங்கல் - இந்தியாவின் மிகப்பழமையான நீர் சார்ந்த பறவைகள் சரணாலயம் . இது 300 ஆண்டுகள் பழமையானதாகும் . 250 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் கிராம மக்களால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது . பறவைகளை தங்கள் குழந்தைகள் போலே பாவித்து , அவைகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர் . இந்த கிராம மக்களின் இந்த உயர்ந்த பண்பால் தான் நமக்கு இந்த சரணாலயம் கிடைத்துள்ளது . 1962 முதல் இந்தச் சரணாலயம் வனத்துறையின்  
கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது .

வேடந்தாங்கல் சரணாலயம் 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது . சென்னையிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவிலும் , செங்கல்பட்டிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது . சென்னையிலிருந்து 2 மணி நேரத்தில் சென்று விடலாம் . நானும் எனது நண்பனும் சென்னையிலிருந்து சென்றோம் . பறவைகளின் உலகைக் காண மிகுந்த ஆவலுடன் செங்கல்பட்டு வரை மின்சார ரயிலிலும் , செங்கல்பட்டிலிருந்து பேருந்திலும் சென்றோம் . பேருந்தில் செல்லும்போதே சரணாலயம் எங்கு இருக்கிறது என்று அறிய முடிந்தது . காரணம் ,சரணாலயம் இருக்கும் இடத்தில் நிறைய பறவைகள் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன .

நவம்பர் முதல் ஜூன் வரை பறவைகளைப் பார்க்க முடியும் . டிசம்பர் மாதம் பறவைகளைக் காண மிகச்சிறந்த மாதம் . காலை 6 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே அதிக பறவைகளைக் காண முடியும் . அதற்குமேல் இரை தேடச் சென்றுவிடும் . மாலை 5 க்கு மேல்தான் மீண்டும் கூட்டுக்குத் திரும்பும் . அதிகாலை அல்லது மாலை பொழுதில் அங்கு இருக்கும் வரையில் நம் பயணத்திட்டம் அமைய வேண்டும் . நாங்கள் காலை 9 மணிக்குத்தான் அங்கு சென்றோம் .சொந்த கிராமத்துக்குச் சென்றது போல உணர்ந்தோம் . சுற்றுலாப்  பகுதி என்பதற்க்கான அடையாளம் சிறிது கூட இல்லை . இந்நிலை தொடரட்டும் . நபருக்கு 5 ரூபாய் நுழைவு கட்டணம் . 9 மணி ஆனபோதும் நீரில்  இருந்த  மரங்களில்  நிறைய பறவைகள் இருந்தன . பறவைகளை காண்பதற்கு உயர்ந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது . அதில் வனத்துறை சார்பில் பைனாகுலர் மூலம் பார்க்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது . பைனாகுலர் மூலம் பறவைகளைக் காண்பது ஒரு நல்ல அனுபவம்  .  

வனத்துறை சார்பில் சுற்றுலாப்பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது . உணவு மட்டும் நாம் கொண்டு சென்றுவிட வேண்டும் .  
மாலையில் கூட்டுக்குத் திரும்பும் பறவைகளைப் பார்த்த பிறகுதான் வீட்டுக்குச்  செல்ல வேண்டும் என்று முடிவு செய்து நாள் முழுவதும் அங்கேயே தங்கினோம் . எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தோம் . மதிய உணவு கொண்டு செல்லவில்லை . 50 ரூபாய்க்கு வாங்கிய  நுங்கு தான் மதிய உணவு . காலியாக இருந்த இடத்தில் கொஞ்ச நேரம்  படுத்துத் தூங்கினோம் . தினமும் இயந்திர ஒலிகளை மட்டுமே கேட்ட எங்கள் காதுகளுக்கு இன்று நல்ல விருந்து ,  இடைவிடாமல் நாள் முழுவதும் பறவைகளின் ஒலிகளை உண்டு மகிழ்ந்தன .  

குறைந்த உயரம் முதல் அதிக உயரம் வரை வானத்தில் பறவைகள் வட்டமாக  
பறந்து கொண்டிருந்தன . படுத்துக்கொண்டே காரணத்தை ஆராய்ந்தபோது இரை தேடச் சென்ற மற்ற பறவைகளுக்கு இருப்பிடத்தை உணர்த்தவே அவை இவ்வாறு ( கலங்கரை விளக்கம் போல சரணாலய விளக்கமோ ! ) பறப்பதாக உணர்ந்தோம் . கிளைடர் விமானம்,  இவை பறப்பதைப் பார்த்துதான் உருவாக்கி இருக்க வேண்டும் . அவ்வளவு அழகாக காற்றில் மிதக்கின்றன .பல்வேறு வகையான பறவைகள் இருந்தன .

Spot-Billed Grey Pelican :


Snake Bird with fish in Water  :




Snake Bird in Tree :



Spoon Bill :




Large Egret :








Night Heron:




 Painted Stork :










Glossy Ibis :




Open-billed Stork :



இணையத்தின் உதவியால் இந்த படங்கள் கிடைத்தன . இவை மட்டுமல்ல இன்னும் நிறைய பறவைகள் இருந்தன . பாம்பு பறவை ( Snake Bird ) அவ்வளவு அழகு . நீருக்குள் மூழ்கி மீனைப் பிடிக்கிறது . மீனைப் பிடித்தவுடன் கரைக்குச் சென்று மீனை உண்ணுகிறது . பறவைகள் தண்ணீரின்மேல் இறங்கும் முறை அவ்வளவு அழகு . பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது . பார்த்துக்கொண்டே தான் இருந்தோம் . 

வேடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரிடம் பேசினோம் . இந்தப் பறவைகள் மற்றும் அங்கு இருந்த குரங்குகள் , இவற்றை தங்கள் குடும்பத்தில் உறுப்பினர்களாகவே கருதுகிறார்கள் . இவற்றுக்கு யாரும் எந்த தீங்கும் செய்வதில்லை . அவர் சினிமா பார்த்து 20 வருடங்கள் ஆகின்றதாம் ( கொடுத்து வைத்தவர் !) . விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார் . தமிழ்நாடு முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது . இதற்குத் தீர்வு ?

மாலை 5 மணிக்கு மேல் இரை தேடச் சென்ற பறவைகள் கூட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தன . நான்கு திசைகளிலும் இருந்து ஏராளமான பறவைகள் பறந்து வந்து கொண்டே இருந்தன .6 மணி வரை பறவைகள் வருவதை பார்த்துவிட்டு 
வெளியே வந்தோம் . பேருந்துக்கு இன்னும் நேரம் இருந்ததால் பக்கத்தில் இருந்த வயல்வெளிக்குச் சென்றோம் . எங்கள் கண்களே எங்களால் நம்ப முடியவில்லை . தூக்கனாகுருவிகளைப் பார்த்தோம் . ஆமாம் , 15 வருடங்களுக்குப்பிறகு இப்போது  தான் நான் அவற்றைப் பார்த்தேன் . அவை ஒரு பனைமரத்தில் கூடுகள்  கட்டியிருந்தன . சில பறவைகள் கூடு கட்டிகொண்டிருந்தன . எங்களைப் பார்த்ததும் நிறைய பறவைகள் அருகில் இருந்த மின்சாரக்கம்பியில் போய் அமர்ந்தன . ஒரு சில பறவைகள் மட்டும் தொடர்ந்து கூடு கட்டிக் கொண்டிருந்தன . மின்சாரக்கம்பியில் அமர்ந்து இருந்த பறவைகள் தொடர்ந்து ஒலி எழுப்பின . அதைத் தொடர்ந்து மிஞ்சிய பறவைகளும் மின்சாரக் கம்பிக்குச் சென்றன . நாங்கள் அந்த மரத்தை விட்டு கொஞ்ச தூரம் வந்ததும் , சில பறவைகள் மட்டும் மரத்திற்குச் சென்றன . அவை  சைகை ஒலி எழுப்பியவுடன் அனைத்து பறவைகளும் மீண்டும் மரத்திற்கு வந்தன . என்ன ஒரு எச்சரிக்கை உணர்வு ! 
நன்றி - மோகன் 

இந்தப்படத்தை பெரிதாக்கிப் பாருங்கள் . தூக்கனாகுருவி கூடுகள் தெரியும் .

தூக்கனாகுருவி மட்டுமல்ல நம் ஊரில் அழிந்து வரும் பறவைகளான ரெட்டை வால் குருவி , தைலன் குருவி , மைனா , காடை ,மற்றும் செம்பூத்து போன்றவற்றைக் கண்டோம் .  பல வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டாம்பூச்சிகளையும் காண முடிந்தது . 6 . 15 குப் பிறகு மீண்டும் சரணாலயத்தின் உள்ளே சென்றோம் . நம்ப முடியாத எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான பறவைகள் எல்லாத்திசைகளிலும் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக பறந்து வந்து கொண்டே இருந்தன . ஜூன் மாதத்தில் இவ்வளவு பறவைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை . 

நன்றி - மோகன் 


இவ்வாறு பறவைகள் பறந்து வந்தது " Fly Away Home " என்ற ஆங்கிலத் திரைப்படத்தை நினைவு படுத்தியது . 


இப்படி ஒரு வாய்ப்பை இழக்க இருந்தோம் . 6 மணிக்கு வரவேண்டிய பேருந்து வராத காரணத்தால் எங்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது . இந்த முழு நாளையும் 6 மணிக்குப் பிறகான நிமிடங்கள் முழுங்கி விட்டன . எவ்வளவு பறவைகள் ! . சூரிய உதயத்தில் புதிய நாளைத்தொடங்கி சூரிய மறைவில் முடிக்கின்றன .  இந்த பறவைகளைப்  போல் தானே முன்பு நாமும் இருந்தோம் .பறவைகள் விதைப்பதும் இல்லை ;அறுப்பதும் இல்லை !

பிரிய மனமில்லாமல் சரணாலயத்தை விட்டு வெளியே வந்தோம் . அப்போது ஒரு குறுந்தகவல் வந்தது " இன்று உலக சுற்றுச்சூழல் தினம் ( World Environment Day )" என்று . இவ்வளவு பொருத்தமான நாளில் பறவைகளின் உலகைக் கண்டது மேலும் களிப்பை உண்டாக்கியது . அடுத்த பயணத்திற்கு காத்திருக்கிறேன் !

உலக சுற்றுச்சூழல் தினம் ! 

 ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகும் .  


வனங்கள் இல்லாமல் நமக்கு வாழ்க்கை இல்லை . இயற்கை இல்லாமல் நம்முடைய ஒரு நிமிட வாழ்க்கைகூட சாத்தியமில்லை .

இயற்கையைக் கொண்டாடுங்கள் !

ஏனெனில் , இயற்கையைக் கொண்டாடாமல் வாழ்க்கையைக் கொண்டாட முடியாது .

எல்லோரும் கொண்டாடுவோம் !

மேலும் படிக்க :

ரயில் வண்டிப் பயணம் !

பூமியைக் காப்போம் வாருங்கள் !

சூரியன் - உலக சக்திகளின் மையம் !

நீரின்றி அமையாது உலகு !

..................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms