Tuesday, March 31, 2026

காயமே இது மேய்யடா - போப்பு !


சரியான நேரத்தில் வாசிக்க கிடைத்த சரியான புத்தகம். தற்போதைய நமது வாழ்க்கை முறை, உடல்நலம் குறித்தான நிறைய சந்தேகங்களையும், குழப்பங்களையும் உருவாக்குகிறது. நமது உடல் குறித்தான பிரக்ஞையே நம்மிடம் இல்லை. உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் நாம் பேணி காக்க தவறிவிடுகிறோம். இப்படியான சூழலில், தோழர் போப்புவின் இந்தப் புத்தகம் நமது உடல் குறித்தான ஒரு குறுக்குவெட்டு பார்வையை முன்வைக்கிறது. 


தி இந்து தமிழ் நாளிதழின் ' நலம் வாழ' இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அந்த கட்டுரைகளின் மூலமே போப்பு அவர்கள் அறிமுகம். அதன் பிறகு முகநூலில் தேடிப்பிடித்து நண்பராக சேர்ந்தாச்சு. உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை என்று மனித உடலைச் சொல்லுவார்கள். அது முற்றிலும் உண்மை. அமேசான் காடுகளில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத உயிரினங்கள் இருப்பது போல நமது உடலிலும் இன்னமும் விடுவிக்கப்படாத புதிர்கள் இருக்கின்றன. உலகவணிகமயமாக்கலுக்கு பிறகான நமது வாழ்க்கை முறையால் நமது உடல் பெரிய அளவில் இன்னல்களைச் சந்தித்து வருகிறது. உடல் வெளிப்படுத்தும் சமிக்கைகளை கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டியது அவசியம் என இப்புத்தகம் வலியுறுத்துகிறது.


நமது உடல் குறித்தான நிறைய புரிதல்களை இந்நூலை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். போப்பு அவர்கள் சொல்லியிருக்கும் அனைத்தையும் எல்லோராலும் இன்றைய வாழ்வில் செயல்படுத்த இயலாத சூழலே நிழவுகிறது. அவர் கூறியிருப்பதில் கால்வாசியை நாம் நடைமுறைப்படுத்தினால் கூட அது இந்த நூலின் வெற்றிதான். அவர் முக்கியமாக குறிப்பிடுவது இரவில் கண்டிப்பாக 10 மணிக்குள் தூங்க வேண்டும் என்பதுதான். இது எல்லோருக்கும் சாத்தியமா என்று தெரியவில்லை. சாத்தியமுள்ளவர்கள் இதை நடைமுறைபடுத்துவதன் மூலம் நற்பலன்களைப் பெற முடியும். அதே போல காலையில் 6 மணிக்குள் எழுவதும். 


நமது உடலைப் பொறுத்தவரை இதுவரை பழக்கப்படாத எதுவும் அந்நியப் பொருள்தான். நாம் பயன்படுத்தும் பற்பசை, சோப்பு , சாம்பு மற்றும் பிற பொருட்கள் எவ்வளவு உயர்வானதென்று நாம் கருதினாலும் அவை நமது உடலின் இயல்பிற்கு எதிராக செயல்படுவதை விளக்குகிறார். அதே போல அதிக வாசனையுள்ள உணவோ அல்லது அதிக வாசனையுள்ள அழகுசாதனப் பொருட்களோ நமது உடலுக்கு அதிக தீங்குகளை விளைவிப்பதையும் குறிப்பிடுகிறார். 


மொத்தத்தில் நாம் தற்போது வாழும் வாழ்க்கை முறை நமது சூழலுக்கும் நமது உடலுக்கும் பொருந்தாத வாழ்க்கை முறைதான். இயற்கையின் ஒரு பகுதியான மனித இனம் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைக்கு திரும்புவதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். நடைமுறையில் இது எந்த அளவிற்குச் சாத்தியம் என தெரியவில்லை. ஆனால் ஓரளவிற்கு சிக்கலில்லாத வாழ்க்கையை மனித இனம் இப்பூமியில் வாழ இதை விட்டால் வேறு வழியும் இல்லை. 


இவ்வளவு தகவல்களையும் " நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை " என்ற பாணியில் முன்வைக்காமல் உடலின் இயக்கத்தை விளக்குவதன் மூலம் முன் வைப்பதால் இந்நூல் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. எப்படி " கேளுங்கள் மனம் சொல்வதை ..." என்று சொல்கிறமோ அதே போல உடல் சொல்வதையும் நாம் கேட்க வேண்டியது அவசியமாகிறது. நமது உடலுக்கு நேரும் பெரிய பாதிப்புகள் கூட அவை சிறிய பாதிப்புகளாக இருந்த போது உடல் வெளிப்படுத்திய சமிக்கைகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் காரணம் என்கிறார், ஆசிரியர். 


ஒரு படைப்பின் வெற்றி என்பது அந்தப் படைப்பை வெளிப்படுத்திய படைப்பாளியின் மற்ற படைப்புகள் நோக்கி நகர வைப்பதுதான். அந்த வகையில் இந்தப் படைப்பு வெற்றி பெற்றிருக்கிறது. தோழர் போப்புவின் மற்ற நூல்களையும் வாசிக்க வேண்டும்.


நதி போல தனது வாழ்க்கையை வாழும் போப்பு அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்! 

( பிப்ரவரி 11 2022 )

மேலும் படிக்க:

உணவுக்கு முதல் வணக்கம் - போப்பு !

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

Sunday, March 29, 2026

உணவுக்கு முதல் வணக்கம் - போப்பு !

திரைகடலோடியும் திரவியம் தேடுகிறோமோ இல்லையோ ? தெரியாது. ஆனால் உணவை தேடி உண்ணும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. அப்படித் தேடி உண்ணும் உணவு இயற்கையோடு இணைந்ததாக உடலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதை தோழர் போப்பு இந்தப் புத்தகத்தின் மூலம் சொல்கிறார். 


நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று தெரிந்தே நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் உணவு பொருட்களுக்கு மாற்றான உணவு பொருட்களைப் பற்றி விளக்குகிறார். பாலுக்கு மாற்றாக தேங்காய்பால் , ராகிபால், பருத்திபால் போன்றவற்றை முன் வைக்கிறார். தேங்காய்பாலின் முக்கியத்துவத்தை பல இடங்களில் குறிப்பிடுகிறார். அதே போல சர்க்கரை நோயும் நிலையான நோயல்ல என்பதையும் பல இடங்களில் குறிப்பிடுகிறார் ( ஏன் அப்படி சொல்கிறார் என்பதற்கான விளக்கம் இப்புத்தகத்தில் இல்லை ). 


நமக்கு அருகில், அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பழங்களை உண்பதன் அவசியத்தை விளக்குகிறார். பழங்களை இணை உணவாக உண்பதை விட முழு உணவாக, அதிலும் இரவு நேர உணவாக உண்பது நல்ல பலனளிக்கும் என்கிறார். உடைத்த பருப்புகளை விட பயறு வகைகள் உடலுக்கு நல்லது என்கிறார். உப்பு, காரம், புளி இப்போது நாம் பயன்படுத்தும் அளவை விட குறைவாக பயன்படுத்துவது நல்லது என்றும் குறிப்பிடுகிறார். 


இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என ரொம்ப யோசிக்காமல் சாத்தியமுள்ள சிலவற்றையாவது மாற்ற முயற்சி செய்வோமே. மாற்றம் ஒன்றுதானே மாறாதது. அவர் குறிப்பிடுவதில் பெரும்பாலானவை நமது கண்ணில் படுபவை என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். அதிலும் முக்கியமாக இயற்கைக்கு நெருக்கமானது. மாற்றம் உருவாக நமது மனதில்தான் இடம் கொடுக்க வேண்டும். சவர்மா நம்ம ஊர்ல எந்தக் கடையில் கிடைக்கிறது என தேடி உண்ண ஆரம்பித்து விட்டோம். மிகச்சிறிய ஊர்களில் கூட இப்போது சவர்மா கிடைக்க ஆரம்பித்துவிட்டது. என்னென்னமோ கலந்து செய்யப்டுகிற சவர்மாவை ருசி பார்ப்பதுடன் இயற்கைக்கு நெருக்கமான உணவுப் பொருட்களை ருசி பார்க்கவும் நாம் முன்வர வேண்டும். 


எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒரு உணவை உண்ணத்தான் போகிறோம். அந்த உணவு இயற்கைக்கு நெருக்கமாக இருப்பதில் எந்தக் குறையும் இல்லை. நம்மில் பெரும்பாலானோர் தினமும் காலையில் டீயோ , காபியோ குடிக்கத்தான் போகிறோம். ஒரு நாள் காலையில் தேங்காய்பால் குடித்துதான் பார்ப்போமே. நல்ல மாற்றம் தெரிந்தால் வாரத்தில் ஒரு நாளோ ,இரண்டு நாளோ குடிக்க வேண்டியதுதான். பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதான். இது போலவே மற்ற உணவு பொருட்களும். பருப்புக்கு மாற்றாக பயறுகள், உண்ணும் பழங்களின் அளவை அதிகரிப்பது என்று முயற்சித்து பார்க்க வேண்டியதுதான்.




இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது போப்பு என்ற மனிதரையும் கூடவே சேர்த்து வாசிக்கிறோம் என்ற உணர்வு உருவாவதை தடுக்க முடியாது. போப்பு அவர்கள் ஒசூரில் ஒரு நல்ல உணவகம் நடத்தினார் என்பது இசை விமர்சகரான ஷாஜியின் நேர்காணல் மூலமே தெரிய வந்தது. அவர் ஒரு சிங்கப்பூர்வாசியாகவும் இருந்திருக்கிறார் என்பதை இப்பத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. போப்பு அவர்களின் பதிவுகளிலிருந்து இயற்கை தொடர்ந்து அவதானித்து வருபவர்களால் இப்படித்தான் எழுத முடியும் என்பதை உணரலாம்.


தமிழ்நாட்டில் இருக்கும் உணவகங்களில் எந்த ஊரில் எந்த உணவகம் சிறந்தது என்ற பட்டியல் போப்புவிடம் இருக்கிறது. அதை அவரிடமிருந்து நாம் பெற வேண்டும். 


மேலும் படிக்க :

காதில் விழுந்த கதைகள் - கி.ராஜநாராயணன் !

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms