திரைகடலோடியும் திரவியம் தேடுகிறோமோ இல்லையோ ? தெரியாது. ஆனால் உணவை தேடி உண்ணும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. அப்படித் தேடி உண்ணும் உணவு இயற்கையோடு இணைந்ததாக உடலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதை தோழர் போப்பு இந்தப் புத்தகத்தின் மூலம் சொல்கிறார்.
நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று தெரிந்தே நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் உணவு பொருட்களுக்கு மாற்றான உணவு பொருட்களைப் பற்றி விளக்குகிறார். பாலுக்கு மாற்றாக தேங்காய்பால் , ராகிபால், பருத்திபால் போன்றவற்றை முன் வைக்கிறார். தேங்காய்பாலின் முக்கியத்துவத்தை பல இடங்களில் குறிப்பிடுகிறார். அதே போல சர்க்கரை நோயும் நிலையான நோயல்ல என்பதையும் பல இடங்களில் குறிப்பிடுகிறார் ( ஏன் அப்படி சொல்கிறார் என்பதற்கான விளக்கம் இப்புத்தகத்தில் இல்லை ).
நமக்கு அருகில், அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பழங்களை உண்பதன் அவசியத்தை விளக்குகிறார். பழங்களை இணை உணவாக உண்பதை விட முழு உணவாக, அதிலும் இரவு நேர உணவாக உண்பது நல்ல பலனளிக்கும் என்கிறார். உடைத்த பருப்புகளை விட பயறு வகைகள் உடலுக்கு நல்லது என்கிறார். உப்பு, காரம், புளி இப்போது நாம் பயன்படுத்தும் அளவை விட குறைவாக பயன்படுத்துவது நல்லது என்றும் குறிப்பிடுகிறார்.
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என ரொம்ப யோசிக்காமல் சாத்தியமுள்ள சிலவற்றையாவது மாற்ற முயற்சி செய்வோமே. மாற்றம் ஒன்றுதானே மாறாதது. அவர் குறிப்பிடுவதில் பெரும்பாலானவை நமது கண்ணில் படுபவை என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். அதிலும் முக்கியமாக இயற்கைக்கு நெருக்கமானது. மாற்றம் உருவாக நமது மனதில்தான் இடம் கொடுக்க வேண்டும். சவர்மா நம்ம ஊர்ல எந்தக் கடையில் கிடைக்கிறது என தேடி உண்ண ஆரம்பித்து விட்டோம். மிகச்சிறிய ஊர்களில் கூட இப்போது சவர்மா கிடைக்க ஆரம்பித்துவிட்டது. என்னென்னமோ கலந்து செய்யப்டுகிற சவர்மாவை ருசி பார்ப்பதுடன் இயற்கைக்கு நெருக்கமான உணவுப் பொருட்களை ருசி பார்க்கவும் நாம் முன்வர வேண்டும்.
எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒரு உணவை உண்ணத்தான் போகிறோம். அந்த உணவு இயற்கைக்கு நெருக்கமாக இருப்பதில் எந்தக் குறையும் இல்லை. நம்மில் பெரும்பாலானோர் தினமும் காலையில் டீயோ , காபியோ குடிக்கத்தான் போகிறோம். ஒரு நாள் காலையில் தேங்காய்பால் குடித்துதான் பார்ப்போமே. நல்ல மாற்றம் தெரிந்தால் வாரத்தில் ஒரு நாளோ ,இரண்டு நாளோ குடிக்க வேண்டியதுதான். பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதான். இது போலவே மற்ற உணவு பொருட்களும். பருப்புக்கு மாற்றாக பயறுகள், உண்ணும் பழங்களின் அளவை அதிகரிப்பது என்று முயற்சித்து பார்க்க வேண்டியதுதான்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது போப்பு என்ற மனிதரையும் கூடவே சேர்த்து வாசிக்கிறோம் என்ற உணர்வு உருவாவதை தடுக்க முடியாது. போப்பு அவர்கள் ஒசூரில் ஒரு நல்ல உணவகம் நடத்தினார் என்பது இசை விமர்சகரான ஷாஜியின் நேர்காணல் மூலமே தெரிய வந்தது. அவர் ஒரு சிங்கப்பூர்வாசியாகவும் இருந்திருக்கிறார் என்பதை இப்பத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. போப்பு அவர்களின் பதிவுகளிலிருந்து இயற்கை தொடர்ந்து அவதானித்து வருபவர்களால் இப்படித்தான் எழுத முடியும் என்பதை உணரலாம்.
தமிழ்நாட்டில் இருக்கும் உணவகங்களில் எந்த ஊரில் எந்த உணவகம் சிறந்தது என்ற பட்டியல் போப்புவிடம் இருக்கிறது. அதை அவரிடமிருந்து நாம் பெற வேண்டும்.
மேலும் படிக்க :


10:22:00 PM
மானிடன்



0 comments:
Post a Comment