Sunday, July 23, 2023

வடகிழக்கு மாநிலங்களை காப்போம் !

 


இன்று வரை இயற்கை வளங்கள் சிதைவடையாமல் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களை பிரிவினைவாத பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும். பாஜக, கால் பதித்திருக்கும் ஒவ்வொரு இடத்திலும் மக்களிடையே பிரிவினைவாதத்தையும் வெறுப்பையுமே வளர்த்திருக்கிறது. மணிப்பூர் வன்முறைக்கும் இதுவே காரணம். 


பாஜக இருக்கும் இடத்தில் முதலாளிகள் மட்டுமே வளர்ந்திருக்கிறார்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் எல்லா இடங்களிலும் குறைந்திருக்கிறது. ஒட்டு மொத்த இந்திய மக்களின் வளர்ச்சி குறித்து ஒருபோதும் பாஜக  சிந்தித்ததில்லை.  பார்ப்பனியம், தனது ஆதாயத்திற்காக எந்த எல்லைக்கும் போகும், எதையும் செய்யத் தயங்காது. பாஜகவின் நிலைப்பாடும் இதுதான். வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பிரிவினைவாதத்தை வளர்த்து சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைபற்றியிருக்கிறது. 


பாஜக எந்த இடத்தில் நுழைந்தாலும் அங்கிருக்கும் சிறுபான்மையினர்தான் அவர்களின் இலக்கு. அந்தச் சிறுபான்மையினர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராகவோ, குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவராகவோ , குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம். அங்கிருக்கும் பெரும்பான்மையினர் மத்தியில் அந்தச் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து அவதூறுகளையும், வெறுப்புகளையும் வளர்த்து வன்முறையைத் தூண்டி தனக்கு வேண்டியதை சாதித்து கொள்வதுதான் பாஜகவின் செயல்திட்டம். 2002ல் இனப்படுகொலை நடந்த பிறகு பாஜக குஜராத்திலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனெனில் பாஜக, பெரும்பான்மையினரை மட்டுமே ஆதரிக்கும். பெரும்பான்மையினரின் செயல்களை நியாயப்படுத்தும். பெரும்பான்மையினரில் இருக்கும் குற்றவாளிகளுக்கும் பதவிகள் கொடுத்து அழகு பார்க்கும். அடுத்து மணிப்பூர் என்ன ஆகுமோ ? தெரியவில்லை.


வடகிழக்கு மாநிலங்களில் இன்று வரை பழங்குடியின மக்களால் காப்பாற்றப்பட்டு வந்து இயற்கை வளங்களின் நிலை இனி என்ன ஆகுமோ என்பதே பெரும் கவலையாக இருக்கிறது. இதைப் பற்றி பாஜக 1% கூட சிந்திக்கப் போவதில்லை. அனைத்து இயற்கை வளங்களையும் அள்ளி கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் அடிமாட்டு விலைக்கு கொடுத்துவிட்டு வேடிக்கை மட்டுமே பார்க்கும். 


தாங்கள் இந்திய அளவில் சிறுபான்மையினமாக இருப்பதால் உருவான தாழ்வு மனப்பான்மையை மறைக்க இந்து ,இந்துத்துவா என்று சொல்லி பெரும்பான்மையினர் முதுகில் ஏறி சவாரி செய்கிறார்கள், பார்ப்பனர்கள். இதை  உணராதவரையில் இந்திய நாட்டிற்கு, இந்திய மக்களுக்கு விடிவுகாலமே இல்லை. நாம் சமநிலைப்படுத்தவில்லை என்றால் இயற்கை அனைத்தையும் சமநிலைப்படுத்தும். 


பார்ப்பனியம் - RSS - பாஜக ஆதிக்கம் செலுத்தும் வரை இந்தியா எல்லோருக்குமானதாக இருக்காது. இந்தியா என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா ? இந்தியா, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம். பிரிவினைவாத, மதவாத, இனவாத, சாதிவாத, கார்ப்பரேட்வாத , சமத்துவத்திற்கு எதிரான சக்திகளை வீழ்த்தி எல்லோருக்குமான இந்தியாவை கட்டமைப்போம்.


பார்ப்பனியம் வீழும் இடத்திலிருந்தே புதிய இந்தியா தோன்ற முடியும் ! 


மேலும் படிக்க:


டெல்லி எரிகிறது !


Saturday, July 15, 2023

தக்காளியும் விவசாயியும் பின்னே கார்ப்பரேட்களும் !


தக்காளியும் வெங்காயமும் வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ தான் உற்பத்தி குறையும் போது கிலோ 100 ரூபாயைத் தாண்டுகிறது. உற்பத்தி அதிகமாகும் போது தானாகவே குறைந்துவிடுகிறது.சில சமயங்களில் விலை கிடைக்காமல் கிழே கொட்டும் நிலையும் ஏற்படுகிறது. அப்போதெல்லாம் அவர்களுக்காக யாரும் கவலைப்படுவதில்லை. இப்போதைய விலையேற்றமும் 1000-ல் ஒரு விவசாயிக்கு பலன் கொடுக்கலாம்.


இந்திய நாட்டில் விவசாயியாக வாழ்வது பெரும் சவால். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பால் வருமானம் என்ற ஒன்று இருப்பதால்தான் விவசாயிகள் நிலத்தையே உழுகின்றனர். இல்லையென்றால் பாதி நிலங்கள் தரிசாக மாறியிருக்கும். தற்போது மாட்டுத் தீவனங்களின் விலையேற்றத்தால் பால் வருமானமும் குறைய ஆரம்பித்துவிட்டது. இலவச மின்சாரம் மற்றும் மானியங்கள் கொடுக்கப்பட்டாலும் விவசாயிகளின் வாழ்வு இன்னமும் மேம்படவில்லை. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தீர்வாக சொன்னாலும் இது எல்லோருக்கும் சாத்தியமானதாக இல்லை.


இன்றைய தொடு திரை வாழ்விலும் " உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது " என்பது மட்டும் மாறவேயில்லை. எல்லா உழைப்பிற்கும் விலை இருக்கிறது. விவசாயிகளின் உழைப்பிற்கும் விலை இருக்கிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் விவசாயிகளின் உழைப்பிற்கு விலையே கிடைப்பதில்லை. ஏதோ இந்த விலையேற்றம் தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு கொஞ்சம் நம்பிக்கையை அளிக்கலாம் அவ்வளவு தான்.


தற்போதைய காலநிலை மாற்றத்தால் முதல் பாதிப்பைச் சந்திப்பவர்கள் விவசாயிகள்தான். விளைச்சலின் போது பெய்ய வேண்டிய மழை பெய்வதில்லை. அறுவடையின் போது பெய்யும் மழை அனைத்தையும் அழித்துவிட்டு போய்விடுகிறது. சமீப ஆண்டுகளில் அனைத்து விதமான விவசாய பயிர்களுக்கும் மிக அதிக அளவிலான ரசாயன உரங்களும் , பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு புறம் இது ஒட்டு மொத்த சமூகத்தின் உடல்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கிறது. மறுபுறம் இதற்கான செலவுகளும் விவசாயிகளைப் பாதிக்கின்றன. இயற்கை விவசாயம் குறித்தான புரிதல்களும் பயன்பாடுகளும் அதிகரிக்க வேண்டும். 


விவசாயிகளும் பணப்பயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் உணவுப்பயர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தாங்களே விளைவித்துக்கொண்டு மீதியை விற்க வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். சந்தையில் தேவை குறைவதால் மக்களுக்கும் பலன் கிடைக்கும். இதைப் படிப்படியாகவாவது தொடங்க வேண்டும்.   


'100 நாள் வேலையால் விவசாயம் பாதிக்கிறது' என்பது ஏற்புடையதல்ல. 100நாள் வேலை வந்த பிறகுதான் விவசாய கூலிகளின் தினசரி கூலி உயர்ந்திருக்கிறது. " அப்போதெல்லாம் சோத்த மட்டும் போட்டோம் நாளெல்லாம் பாடுபட்டாங்க. இப்ப சம்பளம் எல்லாம் கேட்கிறாங்க " என்ற‌ நிலபிரபுத்துவ மனநிலை தான் 100 நாள் வேலையை குறை கூறுவதற்கு காரணம்.  


'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்' என்ற 100 நாள் வேலைத்திட்டம் நிச்சயமாக முந்தைய காங்கிரஸ் அரசின் சாதனைதான். இன்றும் கடைக்கோடி மக்களையும் நேரடியாக சென்று சேரும் ஒரே மத்திய அரசின் திட்டம் இது மட்டும்தான். எல்லோராலும் கைவிடப்பட்டவர்களை , முதியவர்களை இந்த திட்டம் தான் சோறு போட்டு காப்பாற்றுகிறது. மற்றவர்களுக்கு இது உபரி வருமானம். இந்த பணம் முழுவதும் உள்ளூர் சந்தையிலேயே செலவிடப்படுவதால் உள்ளூர் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் திட்டமாகவும் இதனைப் பார்க்கலாம். இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.


100நாள் வேலையால் விவசாயிகள் பாதிக்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும். வெகு சில இடங்களில் 100நாள் வேலைத்திட்டம் விவசாயிகளுடன் இணைந்து செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகள் உள்ளாட்சி அமைப்பில் தங்களுக்கு தேவையான ஆட்களை பதிவு செய்தால் 100 நாள் வேலை செய்பவர்கள் அங்கே அனுப்பப்படுவார்கள். இது தமிழ்நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தால் '100நாள் வேலையால் விவசாயம் பாதிக்கிறது ' என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.


விவசாய விளைபொருட்களின் ( காய்களிகள், பழங்கள், அரிசி, பருப்பு, எண்ணெய்... ) உற்பத்தி குறையும் போது விலை கூடும். உற்பத்தி அதிகமாகும் போது விலை தானாகவே குறைந்துவிடும். ஆனால் ஊடகங்களில் எப்போதும் இவைதான் பெரிதுபடுத்தப்படுகின்றன. இதே சூழலில் ஏறினால் இறங்காத பொருட்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள்தான். இவை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. இரண்டு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய விவசாய பொருட்களின் விலைகளுக்கும், தற்போதைய விவசாய விளைபொருட்களின் விலைகளுக்கும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பெரிய வித்தியாசம் இருக்காது. அதே போல இரண்டு ஆண்டுகளில் ஏற்றம் மட்டுமே கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவன தயாரிப்புகளைக் கவனியுங்கள். எதற்காக நாம் அதிகம் செலவு செய்கிறோம் என்பது தெளிவாகும்.


சோப்புகள், பற்பசை, டீத்தூள், நேப்கீன்கள், மருந்து, மாத்திரைகள், பெட்ரோல், டீசல், எரிவாயு, கார், பைக், கட்டுமான பொருட்கள் என்று பலவும் அதிக விலையேற்றத்தை சந்தித்து இருக்கின்றன. இவற்றை எல்லாம் சத்தமே இல்லாமல் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். காரணம் இவை தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்படுதன் மூலமாக நமது மூளையில் ஏற்றப்பட்டுள்ளன. அதனால் இந்தப் பொருட்களின் விளையேற்றத்தை நாம் கண்டுகொள்வதில்லை. நமது வாழவின் ஒவ்வொரு நிமிடமும் கார்ப்பரேட் நிறுவனங்களால் பணமாக மாற்றப்படுகிறது. 


விவசாயமும், விவசாய விலை பொருட்களின் விற்பனையும் எளிய மக்களின் கைகளில் இருக்கும் வரை மட்டுமே உற்பத்தி சார்ந்த ஏற்ற இறக்கங்கள் பொருட்கள் விலையில் எதிரொலிக்கும். என்று இவை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகளுக்குப் போகிறதோ அன்றிலிருந்து எதற்கும் ஏற்றம் மட்டுமே இருக்கும். இறக்கம் என்பதே இருக்காது. உற்பத்தியே அதிகரித்தாலும் விற்பனை விலை குறையாது. இந்த நிலை உருவாகாமல் தடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் தள்ளிப் போடலாம். எல்லாம் நம் கைகளில் தான்.


மேலும் படிக்க :

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

Saturday, April 1, 2023

மனிதரில் இத்தனை நிறங்களா !


1978 ஆம் ஆண்டு  தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத திரைப்படமான 'அவள் அப்படித்தான்' திரைப்படத்துடன்    தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த திரைப்படம் தான் ' மனிதரில் இத்தனை நிறங்களா !' . 'அவள் அப்படித்தான் ' திரைப்படமே கடந்த சில ஆண்டுகளாகத்தான்  கொண்டாடப்படுகிறது. இதுவரை 'அவள் அப்படித்தான் ' பார்க்காதவர்கள் பார்த்து விடுங்கள். 


கடந்த டிசம்பர் மாதத்தின் கடைசி  வாரத்தில் ஒரு காலை வேளையில்  கே டிவியில் 'மனிதரில் இத்தனை நிறங்களா! ' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இது வரை பார்க்காத திரைப்படமாக இருக்கிறதே என்று நானும் இணையரும் வேலைக்கு கிளம்பிக்கொண்டே பாரத்துக்கொண்டிருந்தோம். திரைப்படத்தின் இறுதிக்காட்சியையும் விடுபட்ட காட்சிகளையும் இரவு வீடு வந்த பிறகு யுடியூப்பில் தேடிப் பாரத்தாச்சு. ரசிக்கும்படியாகவே இருந்தது.


'அவள் அப்படித்தான்' போல இந்தத் திரைப்படமும்  பெண் கதாப்பாத்திரத்தைப் , பெண்ணுடலை மையப்படுத்திய திரைப்படம்தான். அதில் ஸ்ரீபிரியா, இதில் ஸ்ரீதேவி. கமலின் ரசிகனல்ல. கமலின் திரைப்படங்கள் பிடிக்காது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் கமலைப் பிடித்திருக்கிறது. அதிலும் இத்திரைப்படத்தில் அவர் பாடியிருக்கும்  ' மாமா மனசு இன்னைக்கு நல்லாலே...' என்ற பாடலும் அருமை. கேட்க நன்றாக இருக்கிறது. பல முறை கேட்டாச்சு.   கமலின்  குரலும் பிடித்துப் போனதே என ஆச்சரியமாகத்தான் இருந்தது. இத்திரைப்படம் போல கமலை அடக்கி வாசிக்க வைக்கும் திரைப்படங்கள் அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவரும் நாயகத்துதிபாடலுக்கு பலியாகிவிட்டார். அவர் திரைப்படங்களில் பேசிய அரசியலும் ஏற்புடையதல்ல.


இந்தத் திரைப்படத்தில் கமல், ஸ்ரீதேவியின் உடன்பிறவா அண்ணனாக நடித்திருக்கிறார். நமக்கெல்லாம் இது புதிது.  ஸ்ரீதேவிக்கு ஜோடி, தெலுங்கு நடிகர் முரளி மோகன். கமலின் ஜோடி, சத்யப்ரியா. இந்த இருவருக்கும் இடையிலான காட்சிகள் அவ்வளவு அந்நியோன்யமாக இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல்கள் இனிமை. ஸ்ரீதேவி எப்போதும் போல அவரது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். ஸ்ரீதேவியின் குரல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த குரலுக்காகவே   ஸ்ரீதேவி நடித்த மற்ற  திரைப்படங்களையும் பார்க்க வேண்டும் போலவே.


மனோரமா, அட்டகாசமான நடிப்பு. 'She Ruled the Screen' என்று சொல்லலாம். இவர் வரும் காட்சிகளில் நாம் இவரை மட்டுமே கவனிப்போம். அந்த அளவிற்கு தனது நடிப்பால் திரையை ஆக்கிரமித்து இருக்கிறார். கே.ஏ.தங்கவேலு, மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர். பேசுகின்ற பேச்சிலேயே நம்மை சிரிக்க வைப்பவர். தனித்துவமான கலைஞர். இவருடன் சுருளி ராஜன். சுருளிராஜனின் டைமிங் வசனங்கள் அட்டகாசம். கே.ஏ.தங்கவேலுவும், சுருளிராஜனும் வரும் காட்சிகள் அவ்வளவு ரகளை.


திரைப்படத்தின் இசை நன்றாக இருக்கிறதே என்று தேடி பார்த்தால், ஷியாம் அவர்களின் இசை. மலையாளத்தில் பெரு வெற்றி பெற்ற தமிழ் இசையமைப்பாளர். இந்த திரைப்படம் வேண்டுமானால் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்தப் பாடலை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். அந்தப்பாடல் 'மழை தருமோ என் மேகம்...'. இந்தப்பாடலை தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம்  "ஸ்ரீதேவி இருக்காங்க, ஆனால் இந்த நடிகரை பார்த்ததில்லையே" என்று தோன்றும்.  பாடலை ரசித்துவிட்டு  இதுவும் இளையராஜா பாட்டுதான் போல என்று கடந்து போயிருப்போம். ஆனால் இந்தப் பாடலைக் கொடுத்தவர், ஷியாம். குறிப்பிடத்தக்க மற்றொரு பாடல் எஸ்.ஜானகி பாடிய ' பொன்னே பூமியடி...' . கமல் பாடிய பாடலிலும் பின்னணி இசை அருமை. 


கிராம பஞ்சாயத்தை டேமேஜ் செய்யும் ஒரு காட்சியும் இருக்கிறது. நியாய குரலை முதலில் யார் எழுப்புவது என்பதுதான் இங்கு பிரச்சனை. முதல் குரல் ஒலித்தால் அதற்கு ஆதரவாக பல பக்கங்களிலிருந்து குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். விதவை மறுமணத்தை ஆதரிக்கும் காட்சி இடம்பெறுகிறது. அறிஞர் அண்ணா, திரைக்கதை எழுதி வெளியான 'காதல் ஜோதி' என்ற திரைப்படத்திலும் விதவை மறுமணம் குறித்த காட்சியுண்டு. ' உன் மேல கொண்ட ஆச...' என்ற பிரபல பாடலும் உண்டு.திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியான இந்நிகழ்வு 80களுக்குப் பிறகு மாறிவிடுகிறது. 


குறிப்பாக எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்தான் நிறைய பிற்போக்குத்தனங்கள் மீண்டும் திரையை நிறைக்க ஆரம்பித்தன என நினைக்கிறேன். இது தானாக நடந்ததா ? அல்லது திமுகவை எதிர்ப்பது என்பது திராவிட பெரியாரிய கருத்துகளை எதிர்ப்பதாக மாறிப்போனதா? என்று தெரியவில்லை. பண்ணையார்கள் வில்லன்களாக சித்தரித்த காலம் போய் கதாநாயகர்களே பண்ணையாய்களாக மாறியதும் ஆண்டான்- அடிமை மனநிலையை மீண்டும் நிலைநிறுத்தியதும் இந்த காலகட்டம் தான். 


திராவிட இயக்கத்தின் பாதிப்பு தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. முன்பு மிகவும் அழுத்தமான பாடல்கள் மூலமாக சமத்துவ கருத்துகள் பரப்பப்பட்டன. பின்பு ஒரு சில காட்சிகள் , ஒரு சில வசனங்கள் என சுருங்கிப்போய்விட்டது. முழுநீள திராவிட சினிமா என்பது மிகவும் குறைவு. சமீப ஆண்டுகளில் பல்வேறு கோணங்களிலிருந்து சமத்துவத்தை முன்வைக்கும் திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது நல்ல விசயம்.


'மனிதரில் இத்தனை நிறங்களா!' திரைப்படம் முழுவதும் கூர்மையான வசனங்கள் நிரம்பியிருக்கின்றன. இத்திரைப்படம் தமிழ் சினிமா மீதான பார்வையை மாற்றியிருக்கிறது. திரைப்படத்தின் படத்தொகுப்பில் ஏதும் பிரச்சனையா ? என்று தெரியவில்லை.‌ ஒரு சில காட்சிகள் தொடர்ச்சியாக இல்லை. 


கோவி.இளங்கோவன் அவர்கள் எழுதிய ' அக்னி ரோஜா ' என்ற நாவலைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆர்.சி.சக்தி இயக்கிய இத்திரைப்படத்தை யுடியூபில் காணலாம்.


மேலும் படிக்க :

அவள் அப்படித்தான்! 

உதிரிப்பூக்கள் !

அனல் மேலே பனித்துளி - காத்திரமான படைப்பு ❤️

பெண்ணுடல் மீது இந்த சமூகம் ஏற்றி வைத்திருக்கும் அத்தனை அறைகலன்களையும் (ஃபர்னிச்சர்களையும்) உடைத்து எறிந்திருக்கிறது, இத்திரைப்படம். மிகவும் தைரியமான, முதிர்ச்சியான உருவாக்கம். ஒரு திரைப்படம் பார்த்த உணர்வே இல்லை. அந்தச் சூழலுக்குள் நாம் இருப்பது போன்ற மனநிலையை உருவானது. கதாப்பாத்திரங்கள் மிகவும் நம்பிக்கையளிக்கின்றன. தமிழ் சினிமாவின் முகம் மாற ஆரம்பித்துவிட்டது. இப்படியான சினிமாக்கள்தான் இன்றைய தேவை. 


ஒட்டு மொத்த மனித இனத்திற்குமே எதிரி, 'ஆதிக்கம்'. அந்த ஆதிக்கத்துடன் அதிகாரமும் இணையும்போது அது மேலும் பலம்பெற்று விடுகிறது. நமது சமூக சூழலில் எளிய மக்கள் அதிலும் பெண்கள்  அதிகாரத்துடன் கூடிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவது மிகவும் சவாலான விசயம். ஆனால் பெண்கள் துணிந்துவிட்டால் எல்லாம் தூள் தூளாகிவிடும். 


ஒவ்வொரு காட்சியும் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  எந்த இடத்திலும் பொதுப்புத்திக்கு மதிப்பு கொடுக்காமல் அறத்தின் பக்கம் நிற்கிறது, திரைப்படம். பெண் மீதும், பெண்ணுடல் மீதும், பெண் அணியும் ஆடைமீதும் ஏற்றி வைத்திருக்கும் தேவையற்ற சுமைகளை இறக்க வேண்டும் என இத்திரைப்படம் பேசுகிறது.


 நமது குடும்ப அமைப்பு மிகவும் பிற்போக்கானதாகவே இருக்கிறது. குடும்ப அமைப்பில் முற்போக்கான மாற்றங்கள் நிகழ்வதற்கு பதிலாக மேலும் பின்னோக்கியே மக்களைத் தள்ளி வருகின்றன, காட்சி ஊடகங்கள். அதிலும் தொலைக்காட்சித் தொடர்கள் மிகவும் கொடூரம். மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பெண்களை பொருளாகவே அணுகுகின்றன. சமத்துவம் சுத்தமாக இல்லாத இடம், சின்னத்திரை. பெரிய திரை நாயகத்துதிபாடலில் சிக்கித்தவிக்கிறது. சமத்துவம் என்பது பெரிய திரையிலும் இல்லை. மிகவும் அரிதாகவே 'அனல் மேலே பனித்துளி ' போன்ற மாற்றத்தை வலியுறுத்தும் திரைப்படங்கள் வெளியாகின்றன. 


ஆன்ட்ரியா மிகவும் கச்சிதமான தேர்வு. ஓட்டு மொத்த திரைப்படத்தையும் தாங்கி நிற்கிறார். அவர்,  உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு. கதாநாயகன் கதாப்பாத்திரம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் அந்த வீட்டு ஓனர் கதாப்பாத்திரம்,அல்டிமேட்.  'சுளுந்தீ ' நாவல் எழுத்தாளர், அண்ணன் முத்தநாகு   ஆன்ட்ரியாவின் அப்பாவாக வருகிறார். கதை நடக்கும் இடங்கள் மற்றும் அந்தத் திருமண சடங்குகள் போன்றவற்றில் இயக்குநருக்கு உதவியிருப்பார் என நினைக்கிறேன். பாடலாசிரியர் உமாதேவியின் 'நான் இங்கே' பாடல் பொருத்தமான காட்சிகளுடன் திரையில் விரிகிறது.


சோனி லிவ் தளத்தில் காணக்கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். 


Very Bold Attempt 👍

Matured Making 💪

Salute to the Director And Team 👏


மேலும் படிக்க :

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !


Friday, November 11, 2022

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி ! !


எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. காதலிலும் அரசியல் இருக்கிறது. அந்த அரசியலை இந்த 'நட்சத்திரம் நகர்கிறது' பேசியிருக்கிது. கதைக்களமாக   நாடக மேடையைத் தேர்ந்தெடுத்ததால் இயக்குனர், ரஞ்சித்தால் மிகவும் சுதந்திரமாக எழுத முடிந்திருக்கிறது. ஏறக்குறைய எல்லாக் கதாப்பாத்திரங்களும் முற்போக்காகவும் அடுத்தவர்களையும், அவர்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது நல்ல விசயம். கிடைக்கும் சிறிய வாய்ப்பில் கூட அரசியல் பேசியிருக்கிறார். இது ரொம்பவும் முக்கியமானது. 


இங்கே முற்போக்காக காட்டிக் கொள்பவர்களின் திரைப்படங்களில் கூட பொதுப்புத்திக்கு தீனி போடும் காட்சிகளே அதிகம் இருக்கும். பெண் கதாப்பாத்திரத்தை மிகவும் பலவீனமானதாக சித்தரித்து இருப்பார்கள். எவ்வளவோ முற்போக்கான விசயங்களை சேர்க்க வாய்ப்பிருக்கும். ஆனால் சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ரஞ்சித் இத்திரைப்படத்தின் மூலம் 'ரெனே' எனும் பெண் கதாப்பாத்திரத்தை பேசுபொருளாக மாற்றியிருக்கிறார். நிறைய பேருக்கு 'அவள் அப்படித்தான்' திரைப்படத்தின் 'மஞ்சு' கதாப்பாத்திரம் நினைவிற்கு வந்திருக்கிறது. அதுவுமில்லாமல் கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் அரசியல்தான். உடை அரசியல், உணவு அரசியல், பாலின அரசியல், சாதி அரசியல் என்று போய்க்கொண்டே இருக்கிறது.


இத்திரைப்படம் நம்மை உரையாடலுக்கு அழைக்கிறது. வாங்க எல்லாத்தையும் பேசுவோம் ;எல்லாத்தையும் சரி செய்வோம் என்கிறது. நாலைந்து படங்களில் மிக அழுத்தமாக சொல்ல வேண்டிய விசயங்களை இந்த ஒரே படத்தில் சொல்ல முயற்சித்து இருப்பதால் அழுத்தமான காட்சிகள் குறைவாக இருக்கின்றன. ஆனால் அனைத்தும் பேசப்பட வேண்டியவை. ' வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியும்' என்பது இடதுசாரிகளின் பார்வையாக இருக்கிறது. இதை ரஞ்சித் மறுக்கிறார். 'வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியாது' என்கிறார். இதற்கு இடதுசாரிகள் விளக்கம் சொல்லலாம். ஆனால் இப்படி சொல்லவே (எதிர் கருத்தே) கூடாது என்பது பாசிசம். 


அர்ஜுன் கதாப்பாத்திரத்தின் ஊர் என்று சேலம் குறிப்பிடப்படுகிறது. அந்தக் கிராமத்து காட்சியில் அந்த ஊர் வட்டார மொழியைப் பேசாமல் சென்னைத்தமிழ் பேசப்படுவது நெருடலாக இருந்தது. அந்தக் காட்சிகள் வட்டார மொழியில் இருந்திருந்தால்  இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். 


 ரஞ்சித்தின் இந்தத் திரைப்படமாவது வன்முறை இல்லாமல் இருக்கிறதே என்று பார்த்தால் படத்தின் இறுதியில் வன்முறைக்காடசியைக் கொண்டு வந்து விட்டார். ஏன் ரஞ்சித்தால் வன்முறை இல்லாமல் சொல்ல வேண்டியதை சொல்லவே முடியாதா ? இறுதிக்காட்சி மட்டும் வன்முறை இல்லாமல் நம்முடன் உரையாடுவது போல அமைந்திருந்தால் இன்னும் நல்ல அனுபவமாக இருந்திருக்கும். ஆக்கப்பூர்வமான நிறைய விசயங்களை இத்திரைப்படம் பேசியிருக்கிறது. இத்திரைப்படமும் இதன் பேசுபொருளும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும். தற்பொழுது நெட்பிளிக்சில் ( Netflix) காணக்கிடைக்கிறது.


நட்சத்திரம் என்பதை சாதியாக உருவகப்படுத்தலாம். சாதி பழைய கெட்டித்தட்டிப்போன இடத்திலிருந்து நகர ஆரம்பித்து இருக்கிறது. இனியும் நகரும் !

மேலும் படிக்க :

JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

சர்தார் உத்தம் (SARDAR UDHAM)- உலகத்தரம் !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !


Saturday, September 17, 2022

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !



" ஆளும் வர்க்கம், மக்களின் மனோபாவங்களை மாற்றி, சிந்தனைகளை மழுங்கடித்து அவர்களை ஆளும் அனுமதியைப் பெற்று விடுகிறது. ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது"

- அண்டோனியோ கிராம்ஷி

உலகெங்கிலும் வாழும் பல்வேறு விதமான மனித இனக்குழுக்கள் பல்வேறு விதமான பண்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றன. உலகவணிகமயமாக்கல் உலகெங்கும் கால்பதிக்கத் தொடங்கிய பிறகு ஒவ்வொரு இனக்குழுவும் கடைபிடித்து வந்த, தனித்த அடையாளங்களை உடைய பண்பாடுகளில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் பெருமளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நமது சூழலுக்கு பொருந்தாத பலவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இப்படியான மாற்றங்களில் அதிகம் பயனடைவது பெருமுதலாளிகள்தான்.

நியாயப்படி பார்த்தால் உலகமயமாக்கல் மூலம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை. ஏழைக்கும் பணக்காரருக்கும் இருக்கும் இடைவெளி முன்பை விட மிகவும் அதிகரித்திருக்கிறது. 'இலாபம்' என்ற ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் அடிப்படை அறமற்ற நிறுவனங்களை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறோம். அவ்வளவு எளிதில் மீண்டும் உருவாக்க முடியாத இயற்கை வளங்களை போகிற போக்கில் அழித்து பணமாக்கி வருகிறார்கள். இயற்கைக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான், அது 'சமநிலை'யை நிலைநிறுத்துவது. தனது சமநிலையை ஏதோ ஒரு விதத்தில் இயற்கை தக்கவைத்துக் கொள்ளும். ஆனால் அந்த இயற்கையின் சமநிலைப்படுத்துதல் என்பது மனித இனத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கும். இதை எதையும் கவனத்தில் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

எந்த இனக்குழு கடைபிடிக்கும் பண்பாடாக இருந்தாலும் அங்கே கடவுள் வழிபாடு என்பது நிச்சயம் இருக்கும். நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் உருவான பிறகு மற்றைய வழிபாட்டு முறைகள் ஆட்டம் காண ஆரம்பித்தன. ஒவ்வொரு நிறுவன மதமும் சிறிய அளவிலான வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கும் இனக்குழுக்களை ஓட ஓட விரட்டுகின்றன. அவர்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றன. மதப் பிரிவினைவாதத்தை உருவாக்கி உலக மக்களைப் பிரிப்பதில் நிறுவன மதங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. ஒரு நாட்டில் வாழும் மக்களை பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்று பிரிப்பது என்பது பெரும்பாலும் மதத்தை மையப்படுத்தியே அமைக்கிறது. ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மதம், இன்னொரு நாட்டில் சிறுபான்மையாக இருக்கிறது. ஆனால் சொல்லி வைத்தார்போல் ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் மீது வெறுப்புகளைக் கக்கி அவர்களை நசுக்குகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதம் என்பது பெரும்பான்மை மதமாக இருக்கிறது.ஆனால் 'இந்து' என்ற சொல்லே ஆய்விற்கு உரியதாக இருக்கிறது.

' வங்காளத்தில் நீதித்துறையை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் சர்.வில்லியம் ஜோன்ஸ் ஈடுபட்டார்.உள்நாட்டு நீதிமுறைகளை அவர் தொகுத்துத் திரட்டி அதற்கு இந்துச் சட்டம் ( Hindu Law) எனப் பெயரிட்டார். கிறித்தவரல்லாத, இசுலாமியரல்லாத பெருந்திரளான மக்களைக் குறிக்க ஐரோப்பியர் வழங்கிய ' இந்து' என்னும் சொல் முதன்முதலாக அதிகார அங்கீகாரம் பெற்றது '

1800களின் தொடக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அதன் பிறகு இந்தச் சொல்லைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட ஸ்மார்த்த பார்ப்பனர்கள், இன்று ' இந்தியா இந்துக்களுக்கேச் சொந்தம் ' என்று கூவுகின்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். உண்மையில் இந்து மதம் என்பது பல்வேறு விதமான சமயங்களையும், பண்பாடுகளையும் அழித்து அவற்றையெல்லாம் உள்வாங்கி, தனதாக்கிய மதம் என்றுதான் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இன்றும் இந்து மதம் என்ற போர்வையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக ஸ்மார்த்த பார்ப்பனர்களே இருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தை ஆரம்ப காலம் முதலே எதிர்த்த நிலமாக தமிழ் நிலம் இருந்திருக்கிறது.

'1921இல் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று, அறநிலையப் பாதுகாப்பிற்கான சட்டமுன்வரைவு 1924இல் வெளிவந்தது. இந்தச் சட்டமுன்வரைவில் இருந்த 'இந்து' என்ற சொல்லைத் தமிழ்நாட்டுச் சைவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். 1924ஆம் ஆண்டு டிசம்பர் 'செந்தமிழ்ச் செல்வி' இதழில் பின்னிணைப்பாக இந்தச் சட்ட முன்வரைவு விமர்சனம் செய்யப்படுள்ளது. 'இந்து' என்ற சொல் எந்தவொரு சமயத்தையும் குறிப்பதாகாது. இந்து என்று சொல்லப்படும் பிரிவில் சைவம், வைணவம், லிங்காதயம், ஸ்மார்த்தம் என்று பல பிரிவுகள் உள்ளன. எனவே இந்த முன்வரைவு ஒவ்வொரு சமயத்தைப் பற்றியும் தனித்தனியாகக் கணக்கிட வேண்டும். இந்து என்ற சொல் ஸ்மார்த்தர்களுடையது என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்'.

எதிர்ப்புகளுக்கு இடையிலும் ' இந்து அறநிலையம் ' என்ற சொல்லே சட்டச் சொல்லாகியிருக்கிறது. அதுவே இன்றுவரை தொடர்கிறது.

நீண்ட வரலாறுடைய தமிழ்ப் பண்பாட்டிலும் கடவுள் வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏற்கனவே இங்கே இருந்த வழிபாட்டு முறைகளை, வழிபட்ட தெய்வங்களை இந்து மதம் தனக்குள் சேர்ந்துக் கொண்டாலும் கூட நாட்டார் தெய்வ வழிபாட்டிற்கும், நிறுவன தெய்வ வழிபாட்டிற்கும் இடையே மிகப் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் தொ.ப. விளக்குகிறார். 'பண்பாடு குறித்த ஆய்வுத்துறையில் தமிழ்நாடு இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது' என்றுதான் இந்த கட்டுரை நூலையே தொ.ப. தொடங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் அதிகளவில் பண்பாட்டாய்வுகள் செய்யப்பட வேண்டிய கட்டாயமும் தற்போது உருவாகியிருக்கிறது.

மற்ற தொன்மையான பண்பாடுகளைப் போல தமிழ்ப் பண்பாட்டிலும், முதன்மையான வழிபாடான 'தாய்த் தெய்வ வழிபாடு' எவ்வாறு இருந்தது; இருக்கிறது என்பதை ஒரு நீண்ட கட்டுரை மூலம் விளக்குகிறார். தெய்வ வழிபாட்டின் போது நாம் கவனிக்க மறந்த விசயங்களை ஆய்வுகள் மூலம் விளக்குகிறார். வியப்பூட்டும் நிறைய விசயங்கள் 'தாய்த் தெய்வம்' என்ற கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன.

' பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் 99 விழுக்காடு வடக்கு நோக்கியே அமைந்துள்ளன என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே ( அதாவது இன்றைய கேரளத்தை உள்ளிட்டு) தமிழகம் இருந்துள்ளது. எனவே பகைப்படை வடதிசையிலிருந்து மட்டுமே வரமுடியும். தெய்வம் வடக்குத் திசை நோக்கித் தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பதே தொல் வரலாற்று உண்மையாகும்'.

இப்படி நிறைய தகவல்கள் இக்கட்டுரையின் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன. பெருந்தெய்வ கோயில்களில் ஆண் தெய்வத்திற்கு அருகிலிருக்கும் பெண் தெய்வங்கள் கைகளில் மலர்களை ஏந்தியிருக்கும் என்றும், ஆனால் தாய்த் தெய்வங்களோ பெரும்பாலும் சிங்கத்தின் மீது அமர்ந்து கைகளில் ஆயுதங்களுடன் போருக்கு ஆயத்தமான நிலையில் இருக்கும் என்றும், இவை இரத்தப்பலி பெறுகின்ற தெய்வங்கள் என்றும் தொ.ப.குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்திலிருந்தும் , கல்வெட்டுகள் மூலமாகவும் , சடங்குகள் மூலமாகவும் தமிழகத்தில் இருக்கும் தாய்த் தெய்வ வழிபாடு பற்றி தெளிவாக விளக்குகிறார்.

' தாங்கள் வணங்குகின்ற பகவதியம்மன் ஒரு சமணத் தெய்வமென்பதும் முனீஸ்வரர் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தங்கரர் சமண மதத்தவர் என்பதும் வழிபடுகின்ற "இந்து" மக்களுக்குத் தெரியவே தெரியாது' என்கிறார், தொ.ப.

' உலக வரலாறு நெடுகிலும் ஒரு பிரிவின் வழிபாட்டுத்தலத்தை மற்றவர் இடிப்பதும் அழிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. அரசியல் என்பது மத அடிப்படைவாத அரசியலாக மாறிக்கொண்டிருக்கும் காலமிது. அடுத்தவர் வழிபாட்டிடத்தை இடிப்பதும் அழிப்பதும் அரசர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்கின்ற வேலை என்பதே அன்றும் இன்றும் வரலாறு ஆகும். சனநாயக உணர்வுள்ள எளிய மக்கள் அதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.'

வள்ளலார் பற்றிய கட்டுரையில் எப்படியான சூழலில் வள்ளலார் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார் என்பதை சான்றுகளுடன் விளக்குகிறார். சமய வழிபாட்டு முறைகளில் இருந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்ததுடன் , அங்கே கடைபிடிக்கப்பட்டு வந்த சாதிய பாகுபாடுகளையும் கடுமையாக எதிர்த்திருக்கிறார். 'அடியவருக்கு உணவளித்தல் என்ற கோயில் நடைமுறையினையும் சாதி, மதம் கடந்து ஏழை, எளியவர்களுக்கு உணவளித்தல் என்ற நடைமுறையாக மாற்றிக் காட்டினார்,வள்ளலார் ' என்கிறார், தொ.ப.

'ஆழ்வார் பாடல்களும் கண்ணன் பாட்டும்' கட்டுரையில் இராம, கிருஷ்ண அவதாரங்களில் தமிழ்நாட்டு வைணவம் கிருஷ்ண அவதாரத்தையே பெரிதும் கொண்டாடியது. கிருஷ்ணன் என்னும் கண்ணனுக்கு மகிழிணையாக வடநாட்டு இலக்கிய மரபுகள் ராதையைக் கொண்டாடியது போலத் தமிழிலக்கியங்கள் நப்பினையைக் கொண்டாடின, என்று தொ.ப. கூறுகிறார்.

கம்பராமாயணம் இங்கு செல்வாக்கு பெற்றிருந்தாலும் கூட ராமன் செல்வாக்கு பெறவில்லை. கம்பரின் கவித்திறமையை வெளிப்படுத்துவதாகவே கம்பராமாயணம் இங்கே பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இங்கே கண்ணனுக்கு பதில் ராமன் செல்வாக்கு அடைந்திருந்தால் தற்போது ஆளும் பாஜக அரசிற்கு அது வசதியாகப் போயிருக்கும்.

' கண்ணனைக் குழந்தையாகவும் நாயகனாகவும் தெய்வமாகவும் மட்டுமே ஆழ்வார்கள் பார்க்க பாரதியோ, தாயாகவும் தோழனாகவும் சற்குருவாகவும் ஆண்டானாகவும் அடிமையாகவும் நாயகியாகவும் பார்க்கிறான்.'

' பாரதி முழுமையான விடுதலையினை யாசித்த ஒரு கவிஞர். ' வேண்டுமடி எப்போதும் விடுதலை' என்று மீண்டும் அடிமைத்தளையில் சிக்க மறுக்கின்ற கவிஞர். பாரதியின் விடுதலை உணர்வு அரசியல் தளத்தில் மட்டுமல்லாது கலைத் தளத்திலும் பரவிநிற்கின்றது. அதிகாரம் சார்ந்த எல்லா வகையான ஒழுங்கு முறைகளையும் மீற விரும்புவது கவிஞரின் மனமாகும்.'

வைணவக் குடும்பத்தில் பிறக்காத பாரதியார், வைணவ கடவுளாகப் பார்க்கப்படும் கண்ணனை முன் வைத்து எழுதிய 'கண்ணன் பாட்டு ' என்ற கலைப் படைப்பைக் கண்டு தொ.ப.வியக்கிறார்.

பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும், பெரியாழ்வாரும் ( ஆண்டாளின் தந்தை ) பார்ப்பனரல்லாத மக்கள் திரளின் வாழ்வினையும், உணர்வுகளையும் உள்வாங்கி பாடியுள்ளார்கள் என்பதை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் 'பண்பாட்டுக் கலப்பு ' எனும் கட்டுரையின் வாயிலாக விளக்குகிறார்.

' நாட்டார் தெய்வங்கள் எவையும் 'முன்னே வந்து' வரம் தரும் தெய்வங்கள் அல்ல; 'பின்னே நின்று' பாதுகாப்புத் தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும், அறுவடைக் காலத்திலும், கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும், ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. '

'நாட்டார் தெய்வங்களில் 90%க்கு மேல் பெண் தெய்வங்கள் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். நாட்டார் தெய்வக் கோயில்களில் மட்டுமே தெய்வத்தைத் தன்மேல் நிறுத்திச் சாமியாடவும் குறி (அருள்வாக்கு) சொல்லவும் அடியவர்களுக்குத் திருநீறு வழங்கி அருள் பாலிக்கவும் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. இது மேல் சாதி மரபில் பெருந்தெய்வக் கோயில்களில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. '

நாட்டார் தெய்வங்களை வழிபடும் எல்லா மனிதர்களையும் தெய்வ நம்பிக்கையிலிருந்து விடுதலை செய்ய முடியாது. ஆனால் அவர்கள் மதம் என்ற அதிகார அமைப்பிற்குள் சிக்குவதை தடுக்க நாம் நாட்டார் தெய்வங்களை ஆதரிக்க வேண்டும் என்கிறார் தொ.ப.

பக்தி இலக்கியங்கள் சார்ந்த ஆய்வுகள் மிகவும் குறைவாக இருப்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். இத்தகைய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை கா.சிவத்தம்பியின் ஆய்வுகள் மூலமாக விளக்குகிறார்.

'வேதத்தை மட்டுமே கடவுளாகக் கொண்ட ஸ்மார்த்தர்கள், ஆகமங்களையும் கோயில் வழிபாட்டையும் முன்னிறுத்தும் சைவ வைணவர்கள், இந்த இரண்டு நெறிகளுக்குள்ளும் அடங்காத தொல்பழஞ் சமயக் கூறுகளையுடைய பெருவாரியான மக்கள் திரள் இவர்கள் அனைவரையும் 'இந்துக்கள்' என்ற கட்டுக்குள் அடக்க முயலுவதையே நாம் சமய ஆதிக்க உணர்வு என்கிறோம். இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 'இந்து' என்ற மேலைச் சொல்லாடலுக்கு நேரிடையான வரைவிலக்கணம் எதனையும் தரவில்லை என்பது இந்துத்துவவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்தச் சொல் பல்வேறு சமயங்களையும் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும் '

'இந்து' என்ற சொல்லுக்கான அரசியல் சட்ட வரைவிலக்கணம் உருவாக்கபட வேண்டும் என்பதே தொ.ப.வின் விருப்பமாகும்.

'தெய்வம் என்பதோர்...' என்ற தலைப்பு 'தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி' என்னும் திருவாசக அடியிலிருந்து பெறப்பட்டதாக தொ.ப. என மக்களால் அன்பாக அழைக்கப்படும் தொ.பரமசிவன் குறிப்பிடுகிறார். 'காலச்சுவடு' பதிப்பகம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது. உண்மையிலேயே தெய்வ வழிபாடு குறித்தான தட்டையான பார்வையை இப்புத்தகம் மாற்றியிருக்கிறது

இக்கட்டுரை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி' எனும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. 

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,
9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

மேலும் படிக்க :


Tuesday, September 13, 2022

Wild Wild Country - ஓஷோ !

 


Wild Wild Country ❤

- Documentary About OSHO !

மிகவும் சிறப்பான ஆவணப்படம்.ஆறு பகுதிகளாக எடுக்கப்பட்டிருக்கின்றன. சார்பு நிலைகள் இல்லாமல் உருவாக்கப்படுள்ளது. ஒஷோவோடு தொடர்பில் இருந்தவர்களின் குரல்களின் வாயிலாகவும், 1981 முதல் 1985வரை அமெரிக்காவில் ஒரு குட்டி நகரத்தையே எப்படி உருவாக்கினார்கள் என்பதும் காட்சிகளாக விரிகின்றன. 40 ,50 பேர்கள் மட்டுமே இருக்கும் ஆன்டலோப் எனும் சிறு நகரத்திற்கு பக்கத்தில் 'ரஜ்னீஷ்புரம் ' என்ற ஒன்றை உருவாக்குகிறார்கள். இந்த ஆவணப்படத்தின் மூலம் ஓஷோவை விட அதிகம் கவர்ந்தவர் , ஓஷோவின் உதவியாளர், மா ஆனந்த் ஷீலா. 


மொரார்ஜி தேசாய் அரசு , பூனாவில் இருந்த ஓஷோவின் ஆசிரமத்திற்கு அளித்து வந்த வரிச்சலுகையை ரத்து செய்கிறது. ஏற்கனவே பூனா ஆசிரமத்தை விட பெரியதாக இந்தியாவில் வேறு இடம் கிடைக்குமா என்று அவர்கள் தேடிக்கொண்டிருந்த சூழலில் வரிச்சலுகையும் ரத்து செய்யப்பட அமெரிக்காவிற்கு பயணமாகிறார்கள். ஓஷோவிற்கு பெற்றோர் வைத்த பெயர், சந்திர மோகன் ஜெயின். அதை 'ரஜ்னீஷ்' என்று மாற்றிக்கொள்கிறார். 'பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் ' என்றே அமெரிக்காவில் அழைக்கப்படுகிறார். 


மா ஆனந்த் ஷீலாவின் பெரும் உழைப்பால் 'ரஜ்னீஷ்புரம்' உருவாகிறது. ரஜ்னீஷ் மீது எல்லையற்ற அன்பும்,நம்பிக்கையும் வைத்திருந்தார், வைத்திருக்கிறார். சில அதிகார பிரச்சனைகளால் ஷீலா அமெரிக்காவை விட்டு வெளியேறினாலும் இன்று வயோதிகத்தை அடைந்திருந்தாலும் ரஜ்னீஷ் மீதான அன்பும், நம்பிக்கையும் குறையவேயில்லை. அவரது நினைவுகளில் இன்றும் ரஜ்னீஷே நிறைந்திருக்கிறார். 


இப்போதும் மிரட்சியாகவே இருக்கிறது. அமெரிக்கா மாதிரியான ஒரு நாட்டில் போய் எவ்வளவு வேலை பார்த்திருக்கானுக. சொந்தமாக விமானநிலையம், ஆயுதம் ஏந்திய போலீஸ், ஆயவுக்கூடம் என்று ஐந்து ஆண்டுகள் மிரட்டியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொழிற்நுட்பத்தில் சிறந்தவர்கள் ரஜ்னீஷை பின்தொடர்பவர்களாக இருந்திருக்கிறார்கள். பணத்திற்கும் குறைவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த சாமியார்களை கையிலயே பிடிக்க முடியாது போல. அதிலும் நவீன சாமியார்கள் படித்தவர்களையும் எளிதில் உள்ளே இழுத்துவிடுகிறார்கள். 


காலம், காலமாக இருந்து வருவதை தங்களுக்கு தகுந்தவாறு உடைத்துவிட்டு கவர்ச்சிகரமான பத்து, இருபது வார்த்தைகளை சிதறவிட்டால் போதும் கூட்டம் தானாக சேர்ந்துவிடும் போல. ஆசிரமங்கள் எல்லாம் பிரம்மச்சரியத்தை கடைபிடித்து வந்த சூழலில் எங்கள் ஆசிரமத்தில் பிரம்மச்சரியம் இல்லை. விரும்புபவர்கள், விரும்புபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் ஏன் கூட்டம் சேராது ? ஓஷோவிய் ஆசிரமத்தில் சேர்ந்தது உலகம் முழுவதிலும் இருந்து. 


'ஆசையே துன்பத்திற்கு காரணம் ' என்றார் புத்தர். இதற்கு மாற்றாக ' அத்தனைக்கும் ஆசைப்படு ' என்று சொல்லியே ஜக்கி என்னும் விஷக்கிருமி காட்டை அழித்ததோடு, இன்று கோவை பகுதியின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஜக்கியின் ரோல் மாடல் ஓஷோதான். சொல்லி வைத்ததுபோல இருவரும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு பக்தி, ' Enlightenment ' என்பதெல்லாம் பணத்திற்கு பின்புதான். 


ஷீலா ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பிறகு ரஜ்னீஷூம் , ரஜ்னீஷ்புரத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். அப்புறம் அங்கிருக்கிருந்த மற்றவர்களும் வெளியேறிவிடுகிறார்கள். ஆன்டலோப் மக்கள், அன்றும் சரி, இன்றும் சரி இந்த ரஜ்னீஷ் கூட்டத்தை காமெடியாகவே அணுகியிருக்கிறார்கள். அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு 21 நாடுகள் ரஜ்னீஷை உள்ளே விட அனுமதிக்கவில்லை. கடைசியில் மீண்டும் பூனா ஆசிரமத்திற்கே வருகிறார். இறப்பதற்கு ஒரு வருடம் (1989) முன்புதான் 'ஜென் ' தாக்கத்தால் தனது பெயரை 'ஓஷோ' என்று மாற்றிக் கொள்கிறார். இப்போது அதுவே நிலைத்துவிட்டது. ஓஷோவை அமெரிக்கா விரட்டி அடித்தது போல , ஜக்கியை நாம் கோவையை விட்டு விரட்டியடிக்க வேண்டும். 


இன்றும் ஓஷோவை பின்தொடர்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தைப் பார்த்த பிறகும் ஓஷோவை நம்புகிறார்கள். ஆனால்

எல்லா சாமியார்களும் போலிகள்தான். Osho also a Fake. 


Very admiring personality, Ma Anand Sheela ❤


நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். பெரிய அளவிலான ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன ! 


மேலும் படிக்க :

Ennio : The Maestro (The Glance of Music ) (2021) , Documentary Movie


சர்தார் உத்தம் (Sardar Udham)- உலகத்தரம் !


Thursday, July 7, 2022 Jana Gana Mana - பாசிச எதிர்ப்பு சினிமா !

Thursday, July 7, 2022

Ennio : The Maestro (The Glance of Music ) (2021) , Documentary Movie ❤️


இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவரான என்னியோ மாரிக்கோனி (  Ennio Morricone ) பற்றிய ஆவணப்படமிது. இசை ரசிகர்கள் மற்றும் உலக சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆவணப்படமிது. சிறுவயதில் மருத்துவராக விரும்பியவரை காலம் ' மேஸ்ட்ரோ ' -வாக்கி அழகு பார்த்திருக்கிறது. டிரம்பட் கலைஞரான என்னியோவின் தந்தை, என்னியோவின் மருத்துவ கனவை கலைத்து டிரம்பட் கற்று கொள்ள அனுப்புகிறார். ஆரம்பத்தில் டிரம்பட் மட்டும் வாசிக்கப் பழகுகிறார். பிறகு இசைப்பாடல் எழுத பயிற்சி பெறுகிறார். அதன் பின்பு நடந்ததெல்லாம் வரலாறு. 


Cinema Paradiso, Django Unchained போன்ற திரைப்படங்களைப் பார்த்த போது அத்திரைப்படங்களின் இசையமைப்பாளர் யாரென்று தெரிந்து கொள்ளவில்லை. 'Once upon a time in America 'திரைப்படம் பார்த்தபோது தான் அத்திரைப்படத்தின் பின்னணி இசையைக் கேட்டு மிரண்டு போனேன். " யாருயா இந்த இசையமைப்பாளர் இப்படி மிரட்டியிருக்கிறார் " என்று தேடிப் பார்த்தபோதுதான் இசை , 'என்னியோ   மாரிக்கோனி' என்றிருந்தது. என்னியோவின் இசை மேதைமை குறித்து முன்பே நிறைய பேர் கூறியிருந்ததை வாசித்து இருந்தாலும் நேரடியான அனுபவம் 'Once upon a time in America' மூலமே கிடைத்தது. இப்போது இந்த ' Ennio : The Maestro ' ஆவணப்படத்தைப் பார்க்கும் போதுதான் ' Once upon a time in America' திரைப்படத்தை இயக்கிய  செர்ஜியோ லியோனிற்கும் ( Sergio Leone  )என்னியோவிற்கும் உள்ள உறவு தெரிய வருகிறது. 


செர்ஜியோவையும் என்னியோவையும் பிரிக்க முடியாது. பெரும்பாலான செர்ஜியோவின் திரைப்படங்களுக்கு இசை என்னியோதான். ஆனால் ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் என்னியோவை அதிக வேலை வாங்கியிருக்கிறார், செர்ஜியோ. இத்தனைக்கும் இருவரும் பள்ளி கால தோழர்கள். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இசைக்குறிப்புகளை எப்படி எழுதினார் என்பதை என்னியோ விவரிப்பதை பார்க்க அவ்வளவு ஆவலாக இருந்தது. அவருக்கும் உரிய காலத்தில் அங்கிகாரம் கிடைக்கவில்லை. பல முறை பரிந்துரைக்கப்பட்டும் தாமதமாகத்தான் ஆஸ்கர் விருதே வழங்கப்பட்டிருக்கிறது. 


என்னியோவின் இசையமைப்பில் இளையாராஜாவையும் காண முடிகிறது, ஏ.ஆர்.ரஹ்மானையும் காண முடிகிறது. அந்த அளவிற்கு பரிசோதனை முயற்சிகளை என்னியோ தனது திரைப்படங்களில் செய்திருக்கிறார். He is a real MASTER. எப்படி இளையராஜா இசையமைத்த அனைத்து திரைப்படங்களையும் நம்மால் பார்க்க முடியாதோ அதே போல என்னியோ இசையமைத்த அத்தனை திரைப்படங்களையும் காண்பது கடினம். இளையராஜா 90களில் இயங்கியது போலவே அவரும் 70களில் வெறித்தனமாக உழைத்திருக்கிறார். 1969 ல் மட்டும் என்னியோவின் இசையமைப்பில் 21 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 


என்னியோவின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் அவரது மனைவியான 'மரியா'. 2007 ல் வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கர் விருதை பெற்ற  போதும், 2016ல் ' The hateful Eight' திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்ற போதும் அதை தன் மனைவிற்கே அர்ப்பணித்தார். Their love story was very interesting. இணையத்தில் தேடி படித்துக்  கொள்ளலாம். இசைக்குறிப்புகள் எழுதி மரியாவிடம் யோசனை கேட்பாராம். மரியா சரி ( Ok ) என்று சொன்ன இசைக்குறிப்புகளை மட்டும் இயக்குனர்களிடம் காண்பிப்பாராம். மரியா இந்த ஆவணப்படத்திலும் பேசவில்லை , இணையத்திலும் அவரைப் பற்றிய அதிக தகவல்கள் இல்லை ஆனால் , என்னியோவின் மனமெங்கும் மரியாவே நிறைந்திருந்திருக்கிறார். 


இந்த ஆவணப்படத்தை பார்த்த நேரம் முழுவதும் வேறு ஒரு உலகத்தில் உலவியது போல இருந்தது. ரொம்ப நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்களே யார் இயக்குநர் என்று தேடிய போதுதான் 'Cinema Paradiso ' திரைப்படத்தை இயக்கிய Giuseppe Tornatore -தான் இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் என தெரிய வந்தது. நல்ல அனுபவம்.  ' The Dreamers '  திரைப்படத்தை இயக்கிய Bernardo Bertolucci -யின் வேறு திரைப்படங்களை காணலாம் என தேடிய போதுதான், இந்த ஆவணப்படம் கண்ணில்பட்டது. Ennio என்ற பேரைப் பார்த்ததும் உடனே பார்க்க ஆரம்பிச்சாச்சு. 


தமிழ்நாட்டிலும் ஒரு மேஸ்ட்ரோ இருக்கிறார். அவரைப்பற்றி ஆவணப்படம் எடுக்கத்தான் ஆளில்லை. ' ஆவணப்படுத்துதல்' என்ற விசயத்தில் தமிழ் சமூகம் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. 2600 ஆண்டுகளுக்கும் மேலான ஆதாரப்பூர்வமான வரலாறு இருந்தாலும் இன்று வரை வெற்று பெருமிதங்களிலேயே உலன்று கொண்டிருக்கிறோம். சங்க இலக்கியங்களில் பாதி கிடைக்கவேயில்லை. பல வரலாற்றுச் சின்னங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. எதையும் முறையாக ஆவணப்படுத்தும் வழக்கம் நம்மிடம் இல்லை.


மற்ற கலைச்செல்வங்களுக்குத்தான் இந்த நிலை என்றால் சினிமாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் சினிமா நுழைந்த காலத்திலேயே தமிழகத்திலும் நுழைந்தது. ஆனால் ஆரம்ப கால தமிழ் சினிமா குறித்த ஆவணங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. மகேந்திரன் ,பாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்கள் கூட முழுமையாக நம்மிடம் இல்லை. அதுவுமில்லாமல் ஆவணப்படங்கள் மிகவும் குறைவாகவே எடுக்கப்படுகின்றன. அதுவும் பிரச்சார நெடியுடனேயே இருக்கின்றன. மகத்தான கலைஞர்களும், திரைக்கலைஞர்களும் நம்மிடம் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆவணப்படங்கள் தான் எடுக்கப்படுவதில்லை. இனி மேலாவது இந்நிலை மாற வேண்டும்.


நாம் இளையராஜாவிலிருந்து கூட ஆவணப்படம் எடுப்பதை  ஆரம்பிக்கலாம். ' Ennio ' ஆவணப்படம் போலவே இளையாராஜாவை அவரது பாடல்கள் உருவாக்கம் பற்றி பேசவிட்டு, அவருடன் பணியாற்றியவர்களின் கருத்துகளை பதிவு செய்து ஒரு நல்ல ஆவணப்படத்தை உருவாக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் இதை செய்வது யார் என்று தான் தெரியவில்லை.


' Music is the universal language '  என்று சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை. இத்தாலியில் பிறந்து வளர்ந்த என்னியோவின் இசை நம்மை வசீகரிக்கிறது. பிடித்த புத்தக வரிகளைக் கூட நாம் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருப்பதில்லை. ஆனால் பிடித்த இசையை, பாடலை நாள் முழுவதும் சலிப்பே இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அந்த அளவிற்கு இசை நமது மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. என்னியோவைக் கொண்டாடுவோம்,இளையராஜாவக் கொண்டாடுவோம் ,  இசையைக் கொண்டாடுவோம். இசை வாழ்க !

மேலும் படிக்க :

சர்தார் உத்தம் - உலகத்தரம் !


Jana Gana Mana - பாசிச எதிர்ப்பு சினிமா !

 


தற்போதைய ஒன்றிய பாஜக அரசு, இந்திய மக்களுக்கு எதிராக ஏவி விட்டிருக்கும் விதவிதமான அடக்குமுறைகளை இத்திரைப்படம் தோலுரித்துக் காட்டுகிறது.  ஊடகங்கள் எந்த அளவிற்கு நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். விதவிதமான சந்தைப்படுத்துதல் மூலமாக எப்படி நமது பொருளாதாரம் கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்படுகிறதோ அப்படி நமது உணர்வுகளை  ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் சேர்ந்து சூறையாடுவதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 


'வேற்றுமையில் ஒற்றுமை ' தான் இந்தியாவின் பலம். அந்த ஒற்றுமையை சீர்குலைத்து தனது அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை காவு வாங்குகிறது தற்போதைய ஒன்றிய பாஜக அரசு. ஏற்கனவே உலகவணிகமயமாக்கலால் நமது வாழ்க்கை முறையின் மீதும் நமது பண்பாட்டின் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. 


உலகமயமாக்கலால் உலகெங்கும் வாழும் பல்வேறு விதமான தனித்த இனக்குழுக்களின் தனித்த அடையாளங்கள் அழிந்து வருகின்றன. இந்தச் சூழலில் இந்தியாவை தற்போது ஆளும் ஒன்றிய பாஜக அரசு இந்தியா முழுவதும் வாழும் பல்வேறு விதமான இனக்குழுக்களின், மற்ற அரசியல் கட்சிகளின் , மற்ற மொழிகளின் அடையாளங்களை அழித்து தனது சாதிய பிரிவினையை முன்னிலைப்படுத்தும்  RSS சித்தாந்தங்களை மக்கள் மீது திணிக்கிறது. ஏற்கனவே சாதிய திமிரில் ஊறித்திளைப்பவர்களுக்கு  இது வசதியாகப் போய்விட்டது. இன்று வரை சாதியப் பிரிவினையால் அதிகளவில் பலன்களை பெற்று வருபவர்கள் பார்ப்பனர்களே. சாதியை முன் வைத்து நிகழும் மரணங்கள் அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது. இது போதாதென்று பாஜக கட்சி, மக்களிடத்தில் மத ரீதியான பிரிவினையையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. 


அதிகாரத்தை தக்க வைக்க அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் போவார்கள். ஏற்கனவே கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்து, மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிறகும் கூட   இந்திய ஊடகங்கள் நாட்டில் நல்லாட்சி நடப்பது போன்ற பிம்பத்தையே தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. தற்போதைய இந்தியப் பிரதமர் மோடியோ இதுவரை ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட நடத்தவில்லை. அந்தளவிற்கு பயந்து கிடக்கும் ஒரு மனிதரைத் தான் சங்கிகள் வீரர் என்று கொண்டாடுகிறார்கள். கூடவே ஊடகங்களும் துதிபாடுகின்றன. தங்களின் வாட்ஸ்அப் குழுவில் போட்டோசாப் செய்து பரப்பப்படும் அத்தனை பொய்களையும் உண்மை என்று நம்பி வாழ்ந்து வருகிறார்கள். 


ஊடகங்கள் மூலம் தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஊடகங்கள் மூலம் தான் தாங்கள் செய்து அத்தனை அயோக்கியத்தனங்களையும் மறைக்கிறார்கள். 2024 தேர்தலுக்கும் ஊடகங்களையே பயன்படுத்துவார்கள். இதை எதிர்த்து வெல்வதில்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. இப்படியான சூழலில்தான் ' Jana Gana Mana' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஊடகங்கள் எப்படி மக்களை முட்டாளாக்குகின்றன என்பதை அப்பட்டமாக விளக்குகிறார்கள். கேரள மக்களின் அரசியலறிவு பற்றி நாம் அறிந்ததே. இப்படியான அரசியல் சினிமா அங்கு மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. இந்த விசயத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கி இருக்கிறது. நாயகத்துதிபாடல் ஒழியாதவரை தமிழ் சினிமா உருப்படாது. மிகவும் தைரியமான ஒரு முன்னெடுப்பு இந்த சினிமா. மக்களின் நலன்களுக்காக சிந்திப்பவர்களுக்கும் , மக்களின் நலனிற்காக களத்தில் இறங்கி செயல்படுபவர்களுக்கும் மிகுந்த நம்பிக்கையை இந்த சினிமா உருவாக்கி இருக்கிறது. 


 நீதிமன்றங்களை முன் வைத்து எடுக்கப்படும்  திரைப்படங்களே மக்களின் அரசியலை, மக்களுக்கான அரசியலை விரிவாக பேசுகின்றன. இத்திரைப்படமும் அப்படியே. மக்களின்  பக்கம் நின்று மக்களின் பிரச்சனைகளை பேசுவதுதான் நல்ல படைப்பாக இருக்க முடியும். அந்த வகையில் 'Jana Gana Mana' ஒரு மக்களின் படைப்பு. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். Netflix OTT ல் காணலாம் !

மேலும் படிக்க :

ஜெய்பீம் - அறத்தின் குரல் !

சர்தார் உத்தம் - உலகத்தரம் !

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms