Friday, December 31, 2010

பரிமளா திரையரங்கம்

திரைப்படங்கள் நம்முடைய மிகப்பெரிய பொழுதுபோக்கு. ஒவ்வொரு
புதுப்படத்தையும் ஒரு திருவிழாவாக கொண்டாடியவர்கள் தான் நாம்.
திரையரங்கம் ஒவ்வொரு முறையும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்படும். இன்று விளம்பரத்தட்டிகள் மட்டுமே இடத்தை அடைக்கின்றன. காலமாற்றத்தால் சிறு நகரங்களில் இருக்கும் திரையரங்கங்கள் பழைய பொலிவை இழந்து விட்டன ,பெரும்பாலான திரையரங்கங்கள் காணாமல் போய்விட்டன.இந்த சூழலிலும் சிறு நகரத்தில் ஒரு திரையரங்கம் தப்பி வாழ்ந்து வருகிறது . அது "ஸ்ரீ தங்கராஜா திரையரங்கம்", வேடசந்தூர் , திண்டுக்கல் மாவட்டம். கடந்த இரண்டு மாதமாக அதன் பெயர், "பரிமளா திரையரங்கம்" , காரணம் சினிமா படப்பிடிப்பு .

               
              இந்தத் திரையரங்கம் 1965 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான திரையரங்கமாகும் . முன்பு இந்த திரையரங்கத்தின் பெயர் நடராஜா திரையரங்கம் . பின்பு, ஸ்ரீ தங்கராஜா திரையரங்கம் என்று ஆனது . 1980 களில் சில சினிமா படங்களை (நீங்கள் கேட்டவை ,துடிக்கும் கரங்கள் ...(உண்மையா என்று தெரியவில்லை ))தயாரித்தும் உள்ளனர். எங்கள் பகுதியின் ஒரே ஒரு பொழுதுபோக்காக இந்த திரையரங்கம் இருந்தது . மாலை நேர காட்சியும், இரவு நேரக்காட்சியும் எப்பொழுதும் நிறைந்தே காணப்படும். உழைக்கும் வர்க்கத்தின் ஒரே கொண்டாட்டமாக திரைப்படங்கள் விளங்கின. திரையரங்கத்துக்கும் ரசிகனுக்கும் இடையே ஒரு சொல்லப்படாத உறவு இருந்துகொண்டே இருந்தது.

              
               நான் பள்ளிக்கூடம் போன காலங்களில் 4 மணிக்கு பிறகு இந்த திரையரங்கத்தில் நடக்கும் காட்சிகளைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். என் நண்பனின் அப்பா அங்கு வேலை செய்ததால். என்ன படம் என்றும் தெரியாது , யார் நடிகர் என்றும் தெரியாது , ஆனால் அப்படி பார்க்கும்போது ஒரு உற்சாகம் கிடைக்கும். எனக்கு விவரம் தெரிந்து நான் பார்த்த முதல் திரைப்படம் "சின்ன தாயி ". அதன் பிறகு ஏராளமான படங்களை இந்த திரையரங்கத்தில் பார்த்தேன். இதில் Anagonda , Deep Blue Sea , Tomb Raider போன்ற ஆங்கிலப் படங்களும் அடங்கும். Jurassic Park படத்தை எங்கள் ஊரிலிருந்த இன்னொரு திரையரங்கத்தில் (சாந்தி ) பார்த்தேன். அந்த திரையரங்கம் கல்யாண மண்டபமாக மாறி தற்பொழுது வீடுகளாக மாறி விட்டது. தங்கராஜா திரையரங்கம் இன்றும் இயங்கி வருகிறது.


             தங்கராஜா திரையரங்கம் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது
ஒரு குள்ளமான மீசைக்கார மனிதர். எனக்கு தெரிந்து இருபது ஆண்டுகளாக இந்த திரையரங்கத்துடனே வாழ்ந்து வருகிறார். இன்றைய சூழலிலும் அவர் இந்த திரையரங்கத்திலேயே இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது . இவரைப்போன்ற மனிதர்கள் தான் வாழ்க்கையை சுவாரசியம் ஆனதாக மாற்றுகின்றனர் ."தினசரி 4 காட்சிகள் ","தினசரி 4 காட்சிகள் ", " இன்று இப்படம் கடைசி " , "நாளை முதல் ".. போன்றவை புகழ்பெற்ற திரையரங்க வாசகங்கள். தொ(ல்)லைக்காட்சியின் பரவல் இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட ஆரம்பித்தது . மக்கள் திரையரங்கங்களை மறக்க ஆரம்பித்தனர் . DVD மற்றும் Internet இன் பரவல் திரையரங்கத்தை ஒட்டு மொத்தமாக மறக்க வைத்து விட்டது. "சமுதாயத்தின் சீர்கேடுகளுக்கு தொ(ல்)லைக்காட்சி முக்கிய காரணம் " என்று சொன்னது ஒரு நீதிபதி.


             வலுத்தது நிலைக்கும் (Survival of Fittest ) என்பது போல இயங்கி வந்த தங்கராஜா திரையரங்கத்தில் கடந்த மாதம் ஒரு மாறுதல். திரையரங்கத்தின் பெயர். "பரிமளா திரையரங்கம்"என்று மாறி இருந்தது.தோரணங்களும் பல்வேறு விதமான திரைப்படங்களின்
விளம்பர தட்டிகளும் திரையரங்கத்தை அலங்கரித்தன. முதலில் பார்த்தவுடன் யாரோ ஒருவர் இந்த திரையரங்கத்தை வாங்கிவிட்டார் என்று தான் நினைத்தேன் . பிறகு தான் தெரிந்தது , "பரிமளா திரையரங்கம்" என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு என்று. கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்கத்திற்கு மீண்டும் ஒரு பொலிவு வந்து விட்டது. தினமும் ஏராளமானோர் வந்து பார்த்து சென்றனர். எங்கள் பகுதி திண்டுக்கல் மாவட்டத்தின் வறண்ட பகுதியாகும் . அப்படிப்பட்ட எங்கள் பகுதிக்கு படப்பிடிப்பை கொண்டு வந்த பெருமை எங்கள் திரையரங்கத்தையும் அதை விடா முயற்சியுடன் அதை இயக்கி வந்த உரிமையாளரையும் சேரும். நடிகர் ஆரியா வந்த போதும் , விவேக் வந்த போதும் ஒட்டு மொத்த ஊரே அங்கு தான் இருந்தது.


               இந்தச் சூழலிலும் படப்பிடிப்பை ஒரு நிமிடம் கூட பார்க்காத சுவாரசியமான மனிதர்களும் வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது படிப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்காலிகமாக கட்டப்பட்ட சுற்று சுவர் நீக்கப்பட்டது . இதைப்பார்த்த போது என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு இனம் புரியாத வலி வந்தது. அந்த வலி தான் இதை எழுத வைத்தது . எங்கள் திரையரங்கம் மீண்டும் பொலிவை இழந்து விட்டது. மீண்டும் "ஸ்ரீ தங்கராஜா " என்று மாறிவிட்டது. இனி தனது பணியைத் தொடங்கிவிடும்..


               திரையரங்கங்கள் வாழ்வதும் , காணாமல் போவதும் நம் கையில் தான் உள்ளது. திருட்டு DVD இல் படம் பார்ப்பதும் ,இணையத்தில் டவுன்லோட் செய்து படம் பார்ப்பதும் ஒரு வகையில் திருட்டு தான். திருட்டு DVD இல் ,இன்டர்நெட்டில்  படம் பார்க்கும் அனைவரும் திருடர்கள். இவர்கள், நம் ஊர் ஊழல்அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது.
புதுப்படங்களைத் திரையரங்கத்தில் மட்டும் பாருங்கள்.
தரமில்லாத திருட்டு DVD வாங்கும் 30ரூபாய்க்கு தரமான பழைய
திரைப்படங்கள் மூன்று அடங்கிய DVD வாங்கலாம் (Eg . Moser Baer), படக்காட்சிகளும் துல்லியமாக இருக்கும் . தெளிவில்லாத திருட்டு DVDயை
யாரும்மறுபடியும் பயன்படுத்துவதில்லை. அது பூமிக்கு பாரமாக குப்பையாக
மாறுகிறது. இதைத் தவிர்த்து  தரமான DVD வாங்கிப் பார்த்து பாதுகாக்கலாம். ஒருவர் திருந்துவதால் எல்லாம் மாறிவிடவா போகிறது என்று
 நினைக்காதீர்கள். உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள். மீண்டும்
திருட்டு தொழில் செய்து திருட்டுப்பழிசுமக்காதீர்கள்.
திரையரங்கங்களை வாழ விடுங்கள்...

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் கொண்டாடுவோம்...!

வாழ்க்கை கொண்டடுவதற்கே...!
...........................................

Friday, December 3, 2010

நந்தலாலா - உயிரோட்டமான பயணம்

 இந்த வருடம் (2010 ) , நிறைய நல்ல தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளோம் . அந்த வகையில்  நந்தலாலா திரைப்படமும் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது . இந்தப்படத்தின் கதைக்களம் இதற்குமுன் நாம் அறியாதது . கால மாற்றத்தாலும் , உலகமயமாக்கலினாலும் நாம் பெரிதும் இழந்த ஒரு விசயம் ,"அன்பு ". அன்பைக் கொடுக்கவும், பெறவும் மறந்து கொண்டே போகிறோம் . அன்பால் எதுவும் சாத்தியம்.  அன்பில்லாமல் போனால் எதுவும் சாத்தியம் இல்லை . அன்பின் பிறப்பிடம், தாய் . அந்தத்  தாயைத் தேடி, ஆதரவற்ற இரு ஜீவன்கள் செய்யும் பயணம் தான் கதை . அன்பின் முக்கியத்துவம் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது .

                   பயணத்தை மையமாக வைத்து தமிழில் அதிக திரைப்படங்கள் எடுக்கப்படவில்லை . இது முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படம் . பயணத்தின் போது பல்வேறு விதமான மனிதர்களின் வாழ்க்கையும் பதியப்படுகிறது . பக்கம் பக்கமான வசனங்கள் தேவைப்படும் இடங்கள் ,வசனமேயில்லாமல்  அழகாக நகர்கின்றன . கலைக்கு எந்த மொழியும் தேவையில்லை . இந்தக்காட்சிகளைப் பார்க்கும்போது வசனமே இல்லாமல் ஒரு திரைப்படம் எடுத்தால் என்ன ?  என்று தோன்றுகிறது . இயற்கையான சூழலில் , இயற்கையான ஒளியில் முழுப்படமும் எடுக்கப்பட்டுள்ளது . இயற்கையான சூழல் என்றால் எதார்த்தத்தை மீறாத சூழல் . படத்தில்  நடித்த அனைவரும் நடித்தது போல் தெரியவில்லை , வாழ்ந்தது போல்தான் தெரிகிறது . 

                 இசையும் , ஒளிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலம் . படத்திற்கு உயிர் கொடுத்து , படம் முழுவதும் நம்மை உயிர்ப்புடன் வைத்து , உயிரோட்டமான மனிதர்களின் வாழ்க்கையை உணர வைக்கிறது ,  இசை .   இளையராஜா , இளையராஜா தான் . படம் முழுமைக்கும் ஆதிக்கம் செலுத்துகிறது அவரது இசை . சின்ன சின்ன காட்சிகளைக் கூட மிக அழகாக படம்பிடித்துள்ளார் , ஒளிப்பதிவாளர் . வாழ்க்கையில் , சின்ன சின்ன விஷயங்கள் எப்பொழுதுமே அழகானவை .  இயற்கையான ஒளியை வைத்தே அதிகபட்ச காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன . இயற்கை , இல்லாமல் இயங்க முடியாது . அன்பு ,  இல்லாமல் வாழ முடியாது .  

                  இதற்கு முன் திரைப்படங்களில் ,சொல்லப்படாத நிறைய விஷயங்கள் இந்தப்படத்தில் சொல்லப்பட்டுள்ளன . படம் முடியும் முன் வரும் ஆலமரக்காட்சியில் ஒரு சின்ன படத்தொகுப்பு பிழை உள்ளது .  மொத்தத்தில் ஒரு உயிரோட்டமான கதையை , உயிரோட்டமான முறையில் நடித்து , உயிரோட்டமான முறையில் நமக்கு படம்பிடித்துக்  காட்டியுள்ளார் , திரு . மிஷ்கின் அவர்கள் . எங்களுக்கு சித்திரம் பேசுதடி , அஞ்சாதே போன்ற படங்கள் வேண்டாம் . நந்தலாலா போன்ற வெவ்வேறு விதமான  கதையமைப்புள்ள ,  இன்னும் வித்தியாசமான நிறைய திரைப்படங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் ..

அனைவரும் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம் ..

இந்த படத்திற்கு நாம் கொடுக்கும் ஆதரவைப் பொருத்தே எதிர்காலத்தில் இது போன்ற நல்ல திரைப்படங்கள் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெறமுடியும் ..

ஒரு நல்ல அனுபவத்திற்கு வாழ்த்துகிறேன் ...


மேலும் படிக்க :

................................

Saturday, November 27, 2010

இசை - உயிரின் ஓசை


 "இசையாலே வசமாக இதயம் எது " என்பது போல இசைக்கு மயங்காதவர் என்று ஏறக்குறைய எவரும் இல்லை. மனிதனின் தனிமை மிகக்கொடியது . அந்த தனிமையை மறக்க வைப்பது இசை. இன்றைய இயந்திர உலகில் தனிமை என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது . படிப்பு காரணமாக , வேலை காரணமாக , வேறு ஊர்களில் ,வேறு நாடுகளில், தனியாக வாழ்ந்து தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். எல்லா இடத்திலும், நம் தோழனாய் , ஆசானாய் , கவலை நீக்கியாக , தனிமை நீக்கியாக , நம் உற்சாகத்தை குறைய விடாமல் பார்த்து கொள்வதில் இசைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.


           முதன் முதலில் மனிதன் கேட்ட இசை (இசை என்பதை விட சத்தம் எனலாம் ) எதுவாக இருக்கும் ? காற்று காரணமாக தாவரங்கள் எழுப்பும் சத்தம், பறவைகளின் கீச்சுக் குரல்கள் , பல்வேறு வகையான விலங்குகளின் உறுமல்கள் , மழை பெய்யும் போது உருவாகும் சத்தம் , அருவியின் ஓசை என்று ஏதாவது ஒன்றாக இருக்கலாம் . ஒரு வகையில் இசையும் இயற்கையின் வடிவம் தான் . பிறகு , கையில் கிடைக்கும் பொருள்களை வைத்து ஏதாவது ஒரு சத்தத்தை உருவாக்க முற்பட்டு இருப்பான். பரிணாம வளர்ச்சியின் காரணமாக , பின்பு ,இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் . எப்படி இருந்தாலும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தவே இசையை பயன்படுத்தி வந்திருக்கிறோம். இன்று கூட நம் வீடுகளில் கல்யாணம் , காதுகுத்து போன்ற நிகழ்வுகளின்போது , கோவில் விழாக்களின் போது , விளையாட்டுப் போட்டிகளின் போது என்று நம் உற்சாகத்தை , கொண்டாட்டத்தை வெளிப்படுத்தவே இசையை பெரிதும் பயன்படுத்துகிறோம்.


             அரசாட்சி காலத்தில் அரசர்கள் மட்டுமே அதிகம் இசை கேட்பவராகவும் , இசையை வளர்ப்பவராகவும் இருந்து உள்ளனர் .பின்பு , தெருக்கூத்துகளிலும் , நாடகங்களிலும் பயன்படுத்தி வந்த இசையை பாடல்கள் வடிவில் எல்லோருக்கும் சென்றடையும்படி செய்ததில் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தற்பொழுது பாடல் தான் இசையின் வடிவமாக உள்ளது . அந்தந்த நாட்டுக்கும் , கலாச்சாரத்திற்க்கும் ஏற்ற வகையில் பல்வேறு வகையான பாடல்கள் கேட்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரையில் திரைப்பாடல்கள் தான் அதிகம் கேட்கப்படுகின்றன.


          இசைக்கு மொழி தேவை இல்லை . உயிரோட்டமுள்ள இசை கண்டங்களை கடந்து பயணிக்கும் . ஆனால் , தாய்மொழியில் உருவான பாடல்களை கேட்கும்போது பாடல்வரிகளையும் சேர்த்தே கவனிக்கிறோம், நல்லவரிகள் இல்லாத பாடல்களை கேட்க மனம் இடம் தருவதில்லை அந்தப்பாடலில் நல்ல இசை இருந்தாலும் கூட. வேறு மொழிப்பாடல்களைக் கேட்கும்போது நாம் பாடல்வரிகளைக் கருத்தில் கொள்வதில்லை. அந்தப்பாடல் நமக்கு ஏற்ப்படுத்திய தாக்கம் மட்டுமே நம்மால் உணரப்படும் . நாடககலையில் இருந்து தமிழ்சினிமா தோன்றியதால் ஆரம்பகால தமிழ் பாடல்களில் நாடகத்தனம் சற்று அதிகமாகவே இருக்கும். பின்பு , நாடகத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. நான் பழைய பாடல்களை விரும்பியதற்கு ஒரே காரணம் "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நெருப்பு போன்ற பாடல்வரிகள் ".

           நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் , எனது சிறுவயதில் அதிகளவு MGR பாடல்களைக் கேட்டு வளர்ந்தேன். ரேடியோ , டேப் ரெக்கார்டர் போன்றவை மட்டுமே பயன்பாட்டில் இருந்தன . அதுவும் வசதியான வீடுகளில் மட்டுமே இருக்கும் . அப்பொழுதெல்லாம் கல்யாணம் , காதுகுத்து போன்ற குடும்ப நிகழ்வுகள் , கோவில் திருவிழாக்களில் மட்டுமே அதிகளவு பாடல்களைக் கேட்க முடிந்தது. அப்பொழுது கேட்ட பாடல்களின் நினைவுகள் இன்றும் உள்ளன. நாங்கள், பெரும்பாலும் MGR பாடல்களைக் கேட்கக்கூடிய வாய்ப்புதான் அதிகம். ஒரு சில பாடல்களின் வரிகள் மிகவும் நன்றாக இருக்கும் . அந்த பாடல் வரிகளை யார் எழுதியது என்று பார்த்தால் அது பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலாகத்தான் இருக்கும் . வயது கூட கூட பட்டுகோட்டையார் பாடல்களைத் தேடித் தேடி கேட்க ஆரம்பித்தேன் . இன்றும்  தேடல் தொடர்கிறது .


           அந்த தேடலில் எனக்குத் தென்பட்டவர்கள்தான் , கண்ணதாசன் ,வாலி, C .S .ஜெயராமன் ,A .M .ராஜா ,K.V.மகாதேவன்,திருச்சி லோகநாதன் , P .B .ஸ்ரீநிவாஸ் , T.R.மகாலிங்கம் , K.B.சுந்தராம்பாள் ,S.வரலட்சுமி ,T.M.சௌந்தரராஜன் , S .ஜானகி , சங்கர் -கணேஷ் , மலேசியா வாசுதேவன், சொர்ணலதா  போன்றவர்கள் . இவர்களது பாடல்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். முதலில் பாடல்கள் கேட்கும்போது அது அந்த படத்தின் நாயகன் பாடியதாகவே நினைத்துக்கொள்வேன் , பிறகு தான் தெரிந்தது , பாடுவது வேறு ஒருவர் , நாயகன் வாய் மட்டுமே அசைக்கிறார் என்று . இவ்வாறு இருந்த எனது தேடலில் கடந்த இரண்டு மாதமாக ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது இசை விமர்சகர் திரு. ஷாஜியின் அறிமுகம் . நான் பாடல்கள் கேட்க்கும் விதமே தற்பொழுது மாறிவிட்டது. அந்த பாதிப்பை நீங்களும் உணர இந்த blog இல் http://www.musicshaji.blogspot.com   இசை தொடர்பான கட்டுரைகளைப் படியுங்கள் . மலேசியா வாசுதேவன் பற்றிய கட்டுரை இப்பொழுதும்   என்னுள் அதிர்வுகளை ஏற்ப்படுத்திக்கொண்டே இருக்கின்றது  .


             வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சோதனைகள் ,கவலைகள் , கஷ்டங்கள் , துன்பங்கள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதிலிருந்து மீள உதவுவது இசையும் , புத்தகமும்தான் . நான் தனிமையில் இருக்கும் போதெல்லாம் எனது தனிமையை மறக்க வைப்பது இசைதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை உள்ளது .ஆனால் , ஏறக்குறைய எல்லா வயது மனிதர்களும் பாடல்கள் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர் . சென்னையில் பெரும்பாலனோர் காதுகளில் Head Phone தவறாமல் இருக்கிறது. செல்போன் நிறுவனங்களின் குறிப்பிட்ட வருவாய் பாடல்களை நம்பியே உள்ளது . எப்படி இருந்தாலும், உயிரோட்டமுள்ள பாடல்கள் மட்டுமே காலங்களைக் கடந்து வாழ்கின்றன . நல்ல இசை, நல்ல பாடும் திறமை ஒரு பாடலுக்கு உயிர் கொடுக்கின்றன சில நேரங்களில் பாடல் வரிகளும் முக்கியத்துவம் பெருகின்றன.


          இசை ஒரு கடல் , மூழ்க மூழ்கவே முத்துக்கள் கிடைக்கும் . நல்ல தேடல் நமக்குப் பல்வேறு விதமான அனுபவங்களைத் தருகின்றன. நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற எல்லா விதமான பாடல்களையும் கேட்ப்போம் .

வாழ்க்கையை அனுபவிப்போம்.. !

உயிரின் ஓசை பூமியெங்கும் கேட்கட்டும் ...!  
..........................................................

Friday, November 19, 2010

ரயில் வண்டிப் பயணம்



ரயில் வண்டிப் பயணம் எப்பொழுதுமே சுவாரசியங்கள் நிரம்பியது. பயணத்தின்போது வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் வாழும் மனிதர்களைச் (பொருள் உள்ளவர் முதல் பொருளற்றவர் வரை) சந்திக்க முடியும். பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை எல்லாவகையான வயதுக்காரர்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். சில நேரங்களில், பயணத்தின் போது கூட குழந்தை பிறக்கிறது. ஒட்டு மொத்த மனித வாழ்க்கை பயணத்தின், ஒரு மாதிரி வடிவமாகவே ரயில் வண்டிப் பயணம் இருக்கிறது.

              சமீபத்தில் திண்டுக்கலிலிருந்து சென்னைக்கு வைகை அதிவேக விரைவு ரயிலில் பயணம் செய்தேன். அற்புதமான பயணம். இயற்கையின் பல்வேறு பரிமாணங்களை ரசித்து மகிழ்ந்தேன். நல்ல குளிர்ந்த காற்று, வயல்வெளிகளின் பச்சை வாசம்.வானெங்கும் மேக கூட்டங்கள். மலைகளிலிருந்து சிறிய வகை மேகங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது, நானும் பார்த்துக்கொண்டேதான் இருந்தேன் .

                 ஒவ்வொருமுறையும் திண்டுக்கலுக்கும் திருச்சிக்கும் இடையில் பயணிக்கும் போது நான் கவனிக்கும் ஒ ரு விஷயம் மயில்கள். அன்று மேகமூட்டமாக இருந்ததால் மயில் தோகை விரிப்பதை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் தொடர்ந்து வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன். முதலில் ஒரு சில ஆண் மயில்கள் தென்பட்டன. ஆனால், அவை தோகை விரிக்கவில்லை. பார்த்துக்கொண்டே வரும் போது, ஒரு ஆண் மயில் தோகை விரித்த காட்சியைக் கண்டேன். காரணம் என்னவென்று பார்த்தால், பக்கத்தில் ஒரு பெண் மயில் இருந்தது. முதன் முறையாக இயகையான சூழ்நிலையில் ஒரு ஆண் மயில் தோகை விரிப்பதை அன்றுதான் கண்டேன்.

              வயல்வெளிகளில் தேங்கி இருந்த மழை நீரில் தெரிந்த தென்னை மரங்களின் நிழலும்,வானத்து மேகங்களின் நிழலும் அவ்வளவு அழகு. காடுகளில் பறந்து கொண்டிருந்த பல்வேறு வகையான பறவைகள் அந்த ரம்மியமான சூழலுக்கு மேலும் அழகு சேர்த்தன. சின்ன சின்ன பட்டாம்பூச்சிகள் , மைனாக்கள் , காடைகள் , வெண்சங்கு போன்ற நிறமுடைய கொக்குகள் தங்களின் வசந்த கால வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தன. ஒரு சில கழுகுகளையும் காணமுடிந்தது. வெகு நீண்ட காலத்துக்கு பிறகு கழுகுகளைக் கண்டேன். கழுகு என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது, தாய்க் கோழியும் அதன் குஞ்சுகளும் தான். கழுகு கோழிக் குஞ்சுகளை தூக்க வரும் போது, சாதுவான பறவையான கோழிக்கும் வீரம் வந்து கழுகைத் துரத்தும். பக்கத்துக்கு வீட்டுக்காரர்களிடம் சண்டை வருவதால், இன்று
கிராமங்களில் கோழி வளர்க்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதனால் கழுகையும் பார்க்க முடியவில்லை.

             பயணத்தின் போது நேர்த்தியான கரும்பு தோட்டங்கள் தென்பட்டன. தைப்பொங்கலின் போது நாம் கடிக்கும் கருப்பு கரும்பை தோட்டத்துடன் பார்ப்பது இதுதான் முதல் முறை. இந்த தோட்டங்கள், இப்போதே தைப்பொங்கலை நினைவு படுத்திவிட்டன. திருச்சி வந்தவுடன், தினத்தந்தி படிக்க ஆரம்பித்தேன்.தற்போது நடக்கும் மத்திய அரசு, ஒட்டுமொத்த இந்தியாவை விலை பேசி அமெரிக்க முதலாளிக்கு வித்துவிடும் போலிருக்கிறது . இவ்வளவு மனித சக்தியை வைத்துக்கொண்டு அமெரிக்காவிடம் அடி பணிவது நன்றாகவா இருக்கிறது.

               அடுத்து நாஞ்சில் நாடனின் " தீதும் நன்றும் " வாசிக்க ஆரம்பித்தேன். அதில் இடம் பெற்ற விளம்பரம் பற்றிய கட்டுரை,பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை அடிக்கும் யுக்தியை நமக்கு சொன்னது. இன்று , இந்தியா , வாங்கும் சக்தி அதிகம் கொண்ட மிகப்பெரிய சந்தையாக மாறிவிட்டது. நாம் உணவுக்காக செலவிடும் தொகையைவிட மற்ற ஆடம்பர விசயங்களுக்குத்தான் அதிகம் செலவளிக்கிறோம். செலவளிக்கிறோம் என்பதைவிட செலவளிக்க தூண்டப்படுகிறோம் . இன்று தொலைக்காட்சி நம்மை விளம்பரங்களின் அடிமையாக மாற்றி விட்டது. நமக்கு தேவை இருக்கோ, இல்லையோ எல்லாப்பொருட்களையும் வாங்கும்படி தூண்டப்படுகிறோம். இன்றைய சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரி , தொ(ல்)லைக்காட்சி தான். சுயசிந்தனை என்பதே இல்லாமல் போய்விட்டது . முடிந்தவரை தொ(ல்)லைக்காட்சி பார்ப்பதை தவிருங்கள் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

                செம்பரப்பாக்கம் ஏரியை பார்க்கும் போது, இளையராஜா பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. "சிறுவானி தண்ணி குடிச்சு நான் பவானியில்..." இந்தப் பாடலில் ஒரு வரி வரும்" யாரா இருந்தாலும் செம்பரப்பாக்கம் தண்ணி குடிச்சு சென்னையில் வளர வேண்டும் ". அதனால்தானோ என்னவோ எல்லோரும் சென்னையை தேடி வருகின்றனர்.தாம்பரத்தை நெருங்கும்போது பறவையாய் இருந்த நான் கரப்பான்பூச்சியாய் மாற ஆரம்பித்தேன். கிராமத்து வாழ்கையில் பறவையாய் சுற்றிதிரிந்தேன்.சென்னையில இடிபாடுகளுக்கிடையில் கரப்பான்பூச்சியாய் வாழப்போகிறேன். இவ்வாறாக எனது ஒரு ரயில் வண்டிப் பயணம் நிறைவு பெற்றது. அடுத்த ரயில் வண்டிப் பயணத்துக்காக காத்துக்
கொண்டு இருக்கின்றேன்....!

எல்லோருக்கும் பயணங்கள் தொடரட்டும் .....!

வாழ்க்கை இனிக்கட்டும் .....!

மேலும் படிக்க :


.......................................

Tuesday, October 19, 2010

நாமெல்லாம் யார் ?

நாமெல்லாம் யார் ? அகதிகள். ஆம் , நாமெல்லாம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி வாழ வழி தேடி நாடோடிகளாக திரிந்து , கால மாற்றத்தால் பல்வேறு இன, மொழி, மத , ஜாதி பேதங்களுடன் நம் வரலாற்றை மறந்து நமக்குள்ளே பகைமையுடன் வாழ்பவர்கள் தானே நாம். இன்று நம்மால் இந்து , முஸ்லீம் , கிறித்துவன், பவுத்தன்.... என்று பிரித்து உணரப்படும் எல்லோருக்கும் ஒரே மூதாதையன் , ஆப்பிரிக்கன்.

            ஒரு வேளை நம் எல்லோருக்கும் போதுமான உணவும் , உறைவிடமும் , பாதுகாப்பும் இருந்திருந்தால் நாம் ஆப்பிரிக்காவைத் தாண்டி இருக்க மாட்டோம் . மனித இனமும் பூமியெங்கும் பரவி இருக்காது. இனப்பெருக்கத்தின் காரணமாக மனித இனம் ஒரே இடத்தில் வாழ முடியாத சூழல் உண்டானது . உணவுக்காகவும் , இடத்துக்காகவும் , பாதுகாப்புக்காகவும் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்த காரணத்தால் இன்று பல்வேறு பேதங்களுடன் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.

              இன்று, நமக்குள்ளே (மனிதர்களுக்குள்ளே) எத்தனை போராட்டங்கள் ,
உரிமைக்கான போராட்டம் ,நாடுகளின்எல்லைகளுக்கான போராட்டம் , தண்ணீருக்கான போராட்டம் என்று ஏகப்பட்ட போராட்டங்கள். என்று ஓயுமோ இத்தகைய போராட்டங்கள்...!?

               இன்றும், பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து நாடோடிகளாக பெரிய நகரங்களில், வெளிநாடுகளில் திரிந்து கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் நாடோடிகள் தான். பேதங்களை மறப்போம் , மனிதனாக வாழ்வோம் . மத்தவர்களை வாழவிடுவோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே !!!
.......................................

Wednesday, August 11, 2010

உயிரை உயிராய் மதிப்போம்

                             
நாம் வாழும் பூமி மிகப்பெரிய அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கி அழகாகச் சுற்றி வருகின்றது. கோடிக்கணக்கான உயிரினங்கள் இந்த பூமி எங்கும் வாழ்ந்து வருகின்றன. இயற்கை எனும் சக்தி இந்த உலகத்தையே ஒன்றிணைகிறது. நீர்,  நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்கள் அனைத்து விதமான உயிரினங்களின் வாழ்க்கையிலும் பங்குபெறுகின்றன.

         நம் கண்ணால் பார்க்கமுடியாத உயிரினங்கள் கோடிக்கணக்கில் இந்த உலகத்தில் வாழ்கின்றன. இந்த உயிரினங்கள் மட்டும் இல்லாவிட்டால் இந்த பூமியே ஒரு குப்பைமேடாகதான் இருக்கும். அழுகிப்போன, இறந்துபோன உடல்கள் ஆகியவற்றை மட்கச் செய்வதிலிருந்து , பாலை தயிர் ஆக மாற்றுவது வரை இந்தக் கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள், இந்த பூமிக்கு ஆற்றும் பங்கு மிகப்பெரியது. இந்த உயிரினங்களால் ஒரு சில கெடுதல்களும் உண்டு. தாவரங்களிலும் , விலங்குகளிலும் பல்வேறுவிதமான நோய்களை பரப்புகின்றன. ஆனாலும் இவை செய்யும் நன்மைகள் அதிகம் .

         மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் , மின்சார கழிவு பொருட்களால்தான் உலகம் அதிகம் மாசுபட்டுள்ளது . இந்த கழிவுகளால் இயற்கை சமநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது . அதனால்தான் இன்று பருவ காலங்களும் , காலநிலைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சீர்கேடுகள் அனைத்திற்கும் மனிதன் மட்டுமே காரணம்.

           இந்த உலகமே அற்புதமான நிகழ்வுகளை உள்ளடக்கியது . ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினங்களைச் சார்ந்துதான் வாழமுடியும் . மனிதனாகிய நாம் சக மனிதனை மனிதனாக மதிப்பதுடன் , மற்ற உயிரினங்களையும் மதிக்க வேண்டும். இந்தப் பூமி எல்லோருக்கும் சொந்தம். பூமியைக் காப்பது நம் கடமை . பூமியின் எதிர்காலம் நம் கையில் தான் உள்ளது . ஆனால் , நம் எதிர்காலம் பூமியின் கையில் உள்ளது .

பூமி எல்லோருக்கும் சொந்தம் ..!

 உயிரை உயிராய் மதிப்போம்...!
.......................................

Tuesday, July 20, 2010

எது நிரந்தரம் ?

வாழ்க்கை எப்பொழுதும் அழகானது. அந்த அழகான வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை. நித்தமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு மாறுகின்ற உலகில் மாறாமல் இருப்பது எது?. "அன்பு" மட்டுமே உலகில் மாறாமல் இருகின்றது.அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை . அன்பு என்ற அந்த அற்புத மருந்து தான் இந்த உலகை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது . அந்த அன்பின் அளவு என்று குறைகிறதோ அன்று இந்த உலகம் அழிந்துவிடும் .

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை , தந்தை சொல்மிக்க மந்திரமில்லை ".ஆம் ,தாயை விடச் சிறந்த கோவில் இல்லை , ஏனெனில் அன்பின் பிறப்பிடம் தாய்தான் . உலகில் வாழும் எந்த ஜீவராசியாக இருந்தாலும் அன்னை இல்லாமல் உருவாக முடியாது . நாம் முதன் முதலில் தாயிடம் இருந்துதான் அன்பைப் பெறுகிறோம் . தாயின் அன்புக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவுமில்லை . நம் வாழ்க்கையில் ஆயிரம் உறவுகள் வரலாம் , போகலாம் . ஆனால் , என்றென்றும் நிலையான அன்பு தாயிடம் இருந்து மட்டுமே கிடைக்கும் . எந்த ஒரு சூழ்நிலையிலும் தன பிள்ளையை விட்டுக்கொடுக்காமல் வாழும் நடமாடும் தெய்வம்தான் " அன்னை " .


அன்பு ஓர் உணர்வு எனச் சொல்வது தவறு . அன்பு என்பது இறைவனின் முகம் .இறைவனை , அன்பின் மூலமே காண முடியும் . " அளவற்ற அருளாளனும் ,நிகரற்ற அன்புடையோருமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் " எனத் துவங்கும் குர் ஆன்-னும் , " அன்பே சிவம் சிவமே அன்பு " எனும் சிவவாக்கியமும் , " எளியவர்களுக்கு அன்பு செய்கிறவர்கள் எனக்கே அதைச் செய்கிறார்கள் " என்ற பைபிளின் வாசகமும் , இறைவனின் முகம் அன்பு என்பதற்கான ஆதாரங்கள் .


அன்புக்கு நோயைக் குணமாக்கும் சக்தி உண்டு . பல ஆராயச்சிகளுக்குப்பின் , " அன்புக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு " என ஆதாரப்பூர்வமாக அறிவிக்கிறது , உடல் மன மருத்துவத் துறை ( Mind Body Medicine Department ). அன்னையின் முத்தம் , தோழியின் கைக்ர்ப்பு , மற்றவர்களின் அன்பு நிறைந்த வார்த்தைகள் , இதையெல்லாம் விட ஒரு குழந்தையின் பாசக்குரல் நம்முள் நல்ல மாற்றங்களை ஏற்ப்படுத்துகிறது . அந்த மாற்றம் தான் அன்பின் மருத்துவ குணம் . அதனால்தான் எத்தனை சண்டைகள் இருந்தாலும் ஒரு குழந்தை இருக்கும் வீடு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது .


இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அன்பைக் கொடுப்பதற்கும் , அன்பைப் பெறுவதற்கும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருகின்றோம். அன்பைப் பணத்தால் வாங்க முடியாது . அது , தகுதியானவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது . அன்பு , கொடுக்கக் கொடுக்கக் கூடும் , அது என்றும் குறைவதில்லை . அன்பு குறையுமிடத்தில் தான் தவறுகள் பெரிதாகத் தெரிகின்றன . இன்று , மனிதன் இயற்கையின் மீது வைக்கும் அன்பு குறைந்து விட்டது . அதனால் தான் இன்று , சுனாமி , சூறாவளி ,புயல் எல்லாம் அதிகரித்து விட்டது .  அன்பு உள்ளவரை மட்டுமே இந்த பூமி இயங்கும் . பண, மத, அதிகார, இன பேதங்களை மறந்து அன்பு செய்வோம் வாருங்கள்.

சக மனிதனை மனிதனாய் மதிப்போம் !  உயர்வோம். !.

அன்பு ஒன்று மட்டுமே உலகை வாழவைக்கும் !
............................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms