Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Tuesday, December 23, 2025

காதில் விழுந்த கதைகள் - கி.ராஜநாராயணன் !

 


இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் தொடுதிரை வாழ்விலிருந்து விலகி புத்தகங்களை வாசிக்க நேரம் ஒதுக்குவது சவாலானதாகவே இருக்கிறது. புத்தகங்களை வாசிக்க ஆசை இருந்தாலும் தினசரி வாழ்வு தரும் அழுத்தங்கள் நம்மை அனுமதிப்பதில்லை. இதையெல்லாம் கடந்துதான் வாசிக்க வேண்டியுள்ளது. இன்றைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வாசிப்பைத் தொடருபவர்கள் திறமையானவர்கள். 


கடந்த ஜுலை மாதத்தில் வேடசந்தூர் கிளை நூலகத்தில் நியூ செஞ்சுரி பதிப்பகம் சார்பாக புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கலந்து கொள்ளும் போதே " ஏற்கனவே வாங்கிய புத்தகங்களே வாசிக்காமல் கெடக்குது. இதுல இவரு புதுசா வேற புத்தகம் வாங்கக் கிளம்பி வந்துட்டாரு " என்று உள்மனது எச்சரித்தது. அதனால் உடனே வாசிக்கக் கூடிய எளிய புத்தகங்களை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தே தேடல் தொடங்கியது. தேடலில் சிக்கியவை ' காதில் விழுந்த கதைகள்' மற்றும் ' சிறுவர் நாடோடிக் கதைகள் '. இந்த இரண்டு புத்தகங்களும் வாசித்து முடிக்கப்பட்டுவிட்டன. இந்த இரண்டு புத்தகங்களும் கொடுத்த நம்பிக்கையில்தான் அக்டோபர் மாதத்தில் நடந்த திண்டுக்கல் புத்தகக் கண்காட்சியில் கூடுதலாக புத்தகங்கள் வாங்கப்பட்டன. 


'Don't judge a book by its cover ' என்பதற்கு உதாரணம் இந்த ' காதில் விழுந்த கதைகள் ' புத்தகம். இந்தப் புத்தகம் இந்தளவிற்கு வசீகரிக்கும் என எதிர்பார்க்கவில்லை. கதைகள் என்றாலே வசீகரமானதுதான். அதிலும் நமது மண் சார்ந்த கதைகள் இன்னமும் வசீகரமானவை. அந்த அட்டகாசமான மொழிநடை கூடுதல் குதூகலம். பொதுவாகவே நாம் எல்லோருமே கதைகள் கேட்க எப்போதும் தயாராகவே இருக்கிறோம். கதைகளை பார்க்க விரும்புகிறோம்; கேட்க விரும்புகிறோம்; வாசிக்க விரும்புகிறோம்; பேச விரும்புகிறோம். கதைகள், காற்றைப் போல எங்கும் நிறைந்திருக்கின்றன. 


பாரததேவி மற்றும் கழினியூரான் இவர்கள் சேகரித்த கதைகளுடன் தான் சேகரித்த கதைகளையும் சேர்த்து இந்நூலை தொகுத்து நமக்குக் கொடுத்திருக்கிறார், கி.ராஜநாராயணன். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், வாசிக்க சுவாரசியமாக இருப்பதுடன் எந்த கட்டுக்குள்ளும் அடக்க முடியாததாக இருக்கின்றன. தினம் ஒரு கதையாக வாசித்து முடிச்சாச்சு. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கதைகள் வாசிக்க நேரமிருந்தாலும் நாளுக்கு ஒரு கதை என்றே நாட்கள் கடந்தன. ஒவ்வொரு நாளும் அடுத்த கதை எப்படி இருக்கும் என்ற ஆவலுடன்தான் புத்தகம் கையிலெடுக்கப்பட்டது. அந்த அளவிற்கு ஒரு கதையே வாசிப்பிற்கான நிறைவைக் கொடுத்தது. இதற்கு முன்பு அப்படி வாசித்தது தேவதச்சன் கவிதைகளைத்தான். ஒரு நாளிற்கான நிறைவை அவரது ஒரு கவிதையே நிறைவு செய்தது.


தமிழ் நிலத்தில் இன்னமும் தீவிரமாக கொண்டாடப்பட வேண்டியவை கி.ராஜநாராயணனின் படைப்புகள். அவர் சேகரித்து கொடுத்த நாட்டார் கதைகளுக்காகவே நாம் அவரைக் காலமெல்லாம் கொண்டாட வேண்டும். நாட்டார் பாலியல் கதைகள் அடங்கிய தொகுப்பான ' வயது வந்தவர்களுக்கு மட்டும் ' ஒரு முக்கியமான தொகுப்பு. இப்போது வாங்கிய ' சிறுவர் நாடோடிக் கதைகள் ' தொகுப்பும் சிறப்பாகவே இருந்தது. மற்ற மொழிபெயர்ப்பு சிறார் கதைகளை விட இந்தத் தொகுப்பில் இருந்த சிறார் கதைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தன. அது தான் தாய்மொழியின் சிறப்பு.


எது எப்படியோ தொடுதிரை வாழ்விலிருந்து கொஞ்சமேனும் விலகி வாசிப்பை நோக்கி திருப்பியிருக்கிறார், கி.ரா. இதைத் தொடர வேண்டும். அதுதான் இப்போதைய தேவையாக இருக்கிறது. பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல் வேறு நீண்டுகொண்டே போகிறது. அதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.


மொத்தத்தில் Worth to read 👍


மேலும் படிக்க :

எது கலாசாரம் - கி.ரா...! 

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!


Saturday, August 31, 2024

நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் கதை !


" பாலியல் தொழிலை அங்கிகரியுங்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று தான் கேட்கிறோம் "

 - நளினி ஜமீலா

சக மனிதர்களிடமிருந்து மரியாதையை மட்டுமே நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம். "மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் " என்பதன்படியே இன்றும் வாழ்கிறோம். மரியாதை கொடுக்காத எந்த இடத்திற்கும் நாம் செல்வதில்லை. ஆனால் அதே சமயம் துப்புரவு பணியாளர்கள் , வீட்டு வேலை செய்பவர்கள் , பாலியல் தொழிலாளர்கள் , மாற்றுப்பாலினத்தவர்கள் , மூட்டை தூக்குபவர்கள் , கூலித் தொழிலாளர்கள் , சாலையோரத்தில் குடியிருப்பவர்கள் , பிச்சைக்காரர்கள் என்று நம்மிடையே வாழும் விளிம்புநிலை மனிதர்களுக்கு நாம் எந்த மரியாதையையும் கொடுப்பதில்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்கள் செய்யும் வேலையை நாம் செய்யப்போவதில்லை. ஆனால் அவர்களை மலினமான பார்வையாலும் , ஏச்சுக்களாலும் கடந்து போகிறோம். நாம் மதிக்காவிட்டாலும் நம்மைச் சார்ந்தே வாழும் துயரமான வாழ்க்கை அவர்களுடையது.ஆனால் நம்மை விட சிறந்த வாழ்க்கை. 

நளினி ஜமீலா, இந்த நூலில் சொல்லப்பட்டவரை எந்த இடத்திலும் தான் ஒரு பாலியல் தொழிலாளி என்ற குற்ற உணர்வை அடையவேயில்லை. அவரது சூழ்நிலைகள் தான் எல்லாவற்றுக்கும் காரணமாக அமைகின்றன என்பதை மட்டுமே கூறியுள்ளார். தன்னுடைய மகளை 'இவள் நளினி மகள் ' என அழைக்கப்பட்டதையே பெருமையாக கருதுகிறார். யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. 

எல்லாவிதமான மனிதர்களும் ஒரே மாதிரி தான் பிறக்கிறார்கள். அவரவர் பிறக்கின்ற இடத்தை வைத்து தான் பேதங்கள் கற்பிக்கப்படுகின்றன. சூழ்நிலைகளே நமது எல்லோருடைய வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்றன.

இவர்கள் இல்லாமல் பூமியில் வாழ்வே இல்லை. ஆனால் இவர்களுக்கு உண்டான மரியாதைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பெண்களும் , விவசாயிகளும் !

மதிப்போம் மதிப்படைவோம் !


மேலும் படிக்க:

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !

BEAUTY AND THE DOGS (2017)

Saturday, September 17, 2022

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !



" ஆளும் வர்க்கம், மக்களின் மனோபாவங்களை மாற்றி, சிந்தனைகளை மழுங்கடித்து அவர்களை ஆளும் அனுமதியைப் பெற்று விடுகிறது. ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது"

- அண்டோனியோ கிராம்ஷி

உலகெங்கிலும் வாழும் பல்வேறு விதமான மனித இனக்குழுக்கள் பல்வேறு விதமான பண்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றன. உலகவணிகமயமாக்கல் உலகெங்கும் கால்பதிக்கத் தொடங்கிய பிறகு ஒவ்வொரு இனக்குழுவும் கடைபிடித்து வந்த, தனித்த அடையாளங்களை உடைய பண்பாடுகளில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் பெருமளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நமது சூழலுக்கு பொருந்தாத பலவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இப்படியான மாற்றங்களில் அதிகம் பயனடைவது பெருமுதலாளிகள்தான்.

நியாயப்படி பார்த்தால் உலகமயமாக்கல் மூலம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை. ஏழைக்கும் பணக்காரருக்கும் இருக்கும் இடைவெளி முன்பை விட மிகவும் அதிகரித்திருக்கிறது. 'இலாபம்' என்ற ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் அடிப்படை அறமற்ற நிறுவனங்களை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறோம். அவ்வளவு எளிதில் மீண்டும் உருவாக்க முடியாத இயற்கை வளங்களை போகிற போக்கில் அழித்து பணமாக்கி வருகிறார்கள். இயற்கைக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான், அது 'சமநிலை'யை நிலைநிறுத்துவது. தனது சமநிலையை ஏதோ ஒரு விதத்தில் இயற்கை தக்கவைத்துக் கொள்ளும். ஆனால் அந்த இயற்கையின் சமநிலைப்படுத்துதல் என்பது மனித இனத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கும். இதை எதையும் கவனத்தில் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

எந்த இனக்குழு கடைபிடிக்கும் பண்பாடாக இருந்தாலும் அங்கே கடவுள் வழிபாடு என்பது நிச்சயம் இருக்கும். நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் உருவான பிறகு மற்றைய வழிபாட்டு முறைகள் ஆட்டம் காண ஆரம்பித்தன. ஒவ்வொரு நிறுவன மதமும் சிறிய அளவிலான வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கும் இனக்குழுக்களை ஓட ஓட விரட்டுகின்றன. அவர்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றன. மதப் பிரிவினைவாதத்தை உருவாக்கி உலக மக்களைப் பிரிப்பதில் நிறுவன மதங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. ஒரு நாட்டில் வாழும் மக்களை பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்று பிரிப்பது என்பது பெரும்பாலும் மதத்தை மையப்படுத்தியே அமைக்கிறது. ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மதம், இன்னொரு நாட்டில் சிறுபான்மையாக இருக்கிறது. ஆனால் சொல்லி வைத்தார்போல் ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் மீது வெறுப்புகளைக் கக்கி அவர்களை நசுக்குகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதம் என்பது பெரும்பான்மை மதமாக இருக்கிறது.ஆனால் 'இந்து' என்ற சொல்லே ஆய்விற்கு உரியதாக இருக்கிறது.

' வங்காளத்தில் நீதித்துறையை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் சர்.வில்லியம் ஜோன்ஸ் ஈடுபட்டார்.உள்நாட்டு நீதிமுறைகளை அவர் தொகுத்துத் திரட்டி அதற்கு இந்துச் சட்டம் ( Hindu Law) எனப் பெயரிட்டார். கிறித்தவரல்லாத, இசுலாமியரல்லாத பெருந்திரளான மக்களைக் குறிக்க ஐரோப்பியர் வழங்கிய ' இந்து' என்னும் சொல் முதன்முதலாக அதிகார அங்கீகாரம் பெற்றது '

1800களின் தொடக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அதன் பிறகு இந்தச் சொல்லைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட ஸ்மார்த்த பார்ப்பனர்கள், இன்று ' இந்தியா இந்துக்களுக்கேச் சொந்தம் ' என்று கூவுகின்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். உண்மையில் இந்து மதம் என்பது பல்வேறு விதமான சமயங்களையும், பண்பாடுகளையும் அழித்து அவற்றையெல்லாம் உள்வாங்கி, தனதாக்கிய மதம் என்றுதான் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இன்றும் இந்து மதம் என்ற போர்வையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக ஸ்மார்த்த பார்ப்பனர்களே இருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தை ஆரம்ப காலம் முதலே எதிர்த்த நிலமாக தமிழ் நிலம் இருந்திருக்கிறது.

'1921இல் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று, அறநிலையப் பாதுகாப்பிற்கான சட்டமுன்வரைவு 1924இல் வெளிவந்தது. இந்தச் சட்டமுன்வரைவில் இருந்த 'இந்து' என்ற சொல்லைத் தமிழ்நாட்டுச் சைவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். 1924ஆம் ஆண்டு டிசம்பர் 'செந்தமிழ்ச் செல்வி' இதழில் பின்னிணைப்பாக இந்தச் சட்ட முன்வரைவு விமர்சனம் செய்யப்படுள்ளது. 'இந்து' என்ற சொல் எந்தவொரு சமயத்தையும் குறிப்பதாகாது. இந்து என்று சொல்லப்படும் பிரிவில் சைவம், வைணவம், லிங்காதயம், ஸ்மார்த்தம் என்று பல பிரிவுகள் உள்ளன. எனவே இந்த முன்வரைவு ஒவ்வொரு சமயத்தைப் பற்றியும் தனித்தனியாகக் கணக்கிட வேண்டும். இந்து என்ற சொல் ஸ்மார்த்தர்களுடையது என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்'.

எதிர்ப்புகளுக்கு இடையிலும் ' இந்து அறநிலையம் ' என்ற சொல்லே சட்டச் சொல்லாகியிருக்கிறது. அதுவே இன்றுவரை தொடர்கிறது.

நீண்ட வரலாறுடைய தமிழ்ப் பண்பாட்டிலும் கடவுள் வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏற்கனவே இங்கே இருந்த வழிபாட்டு முறைகளை, வழிபட்ட தெய்வங்களை இந்து மதம் தனக்குள் சேர்ந்துக் கொண்டாலும் கூட நாட்டார் தெய்வ வழிபாட்டிற்கும், நிறுவன தெய்வ வழிபாட்டிற்கும் இடையே மிகப் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் தொ.ப. விளக்குகிறார். 'பண்பாடு குறித்த ஆய்வுத்துறையில் தமிழ்நாடு இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது' என்றுதான் இந்த கட்டுரை நூலையே தொ.ப. தொடங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் அதிகளவில் பண்பாட்டாய்வுகள் செய்யப்பட வேண்டிய கட்டாயமும் தற்போது உருவாகியிருக்கிறது.

மற்ற தொன்மையான பண்பாடுகளைப் போல தமிழ்ப் பண்பாட்டிலும், முதன்மையான வழிபாடான 'தாய்த் தெய்வ வழிபாடு' எவ்வாறு இருந்தது; இருக்கிறது என்பதை ஒரு நீண்ட கட்டுரை மூலம் விளக்குகிறார். தெய்வ வழிபாட்டின் போது நாம் கவனிக்க மறந்த விசயங்களை ஆய்வுகள் மூலம் விளக்குகிறார். வியப்பூட்டும் நிறைய விசயங்கள் 'தாய்த் தெய்வம்' என்ற கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன.

' பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் 99 விழுக்காடு வடக்கு நோக்கியே அமைந்துள்ளன என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே ( அதாவது இன்றைய கேரளத்தை உள்ளிட்டு) தமிழகம் இருந்துள்ளது. எனவே பகைப்படை வடதிசையிலிருந்து மட்டுமே வரமுடியும். தெய்வம் வடக்குத் திசை நோக்கித் தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பதே தொல் வரலாற்று உண்மையாகும்'.

இப்படி நிறைய தகவல்கள் இக்கட்டுரையின் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன. பெருந்தெய்வ கோயில்களில் ஆண் தெய்வத்திற்கு அருகிலிருக்கும் பெண் தெய்வங்கள் கைகளில் மலர்களை ஏந்தியிருக்கும் என்றும், ஆனால் தாய்த் தெய்வங்களோ பெரும்பாலும் சிங்கத்தின் மீது அமர்ந்து கைகளில் ஆயுதங்களுடன் போருக்கு ஆயத்தமான நிலையில் இருக்கும் என்றும், இவை இரத்தப்பலி பெறுகின்ற தெய்வங்கள் என்றும் தொ.ப.குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்திலிருந்தும் , கல்வெட்டுகள் மூலமாகவும் , சடங்குகள் மூலமாகவும் தமிழகத்தில் இருக்கும் தாய்த் தெய்வ வழிபாடு பற்றி தெளிவாக விளக்குகிறார்.

' தாங்கள் வணங்குகின்ற பகவதியம்மன் ஒரு சமணத் தெய்வமென்பதும் முனீஸ்வரர் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தங்கரர் சமண மதத்தவர் என்பதும் வழிபடுகின்ற "இந்து" மக்களுக்குத் தெரியவே தெரியாது' என்கிறார், தொ.ப.

' உலக வரலாறு நெடுகிலும் ஒரு பிரிவின் வழிபாட்டுத்தலத்தை மற்றவர் இடிப்பதும் அழிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. அரசியல் என்பது மத அடிப்படைவாத அரசியலாக மாறிக்கொண்டிருக்கும் காலமிது. அடுத்தவர் வழிபாட்டிடத்தை இடிப்பதும் அழிப்பதும் அரசர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்கின்ற வேலை என்பதே அன்றும் இன்றும் வரலாறு ஆகும். சனநாயக உணர்வுள்ள எளிய மக்கள் அதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.'

வள்ளலார் பற்றிய கட்டுரையில் எப்படியான சூழலில் வள்ளலார் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார் என்பதை சான்றுகளுடன் விளக்குகிறார். சமய வழிபாட்டு முறைகளில் இருந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்ததுடன் , அங்கே கடைபிடிக்கப்பட்டு வந்த சாதிய பாகுபாடுகளையும் கடுமையாக எதிர்த்திருக்கிறார். 'அடியவருக்கு உணவளித்தல் என்ற கோயில் நடைமுறையினையும் சாதி, மதம் கடந்து ஏழை, எளியவர்களுக்கு உணவளித்தல் என்ற நடைமுறையாக மாற்றிக் காட்டினார்,வள்ளலார் ' என்கிறார், தொ.ப.

'ஆழ்வார் பாடல்களும் கண்ணன் பாட்டும்' கட்டுரையில் இராம, கிருஷ்ண அவதாரங்களில் தமிழ்நாட்டு வைணவம் கிருஷ்ண அவதாரத்தையே பெரிதும் கொண்டாடியது. கிருஷ்ணன் என்னும் கண்ணனுக்கு மகிழிணையாக வடநாட்டு இலக்கிய மரபுகள் ராதையைக் கொண்டாடியது போலத் தமிழிலக்கியங்கள் நப்பினையைக் கொண்டாடின, என்று தொ.ப. கூறுகிறார்.

கம்பராமாயணம் இங்கு செல்வாக்கு பெற்றிருந்தாலும் கூட ராமன் செல்வாக்கு பெறவில்லை. கம்பரின் கவித்திறமையை வெளிப்படுத்துவதாகவே கம்பராமாயணம் இங்கே பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இங்கே கண்ணனுக்கு பதில் ராமன் செல்வாக்கு அடைந்திருந்தால் தற்போது ஆளும் பாஜக அரசிற்கு அது வசதியாகப் போயிருக்கும்.

' கண்ணனைக் குழந்தையாகவும் நாயகனாகவும் தெய்வமாகவும் மட்டுமே ஆழ்வார்கள் பார்க்க பாரதியோ, தாயாகவும் தோழனாகவும் சற்குருவாகவும் ஆண்டானாகவும் அடிமையாகவும் நாயகியாகவும் பார்க்கிறான்.'

' பாரதி முழுமையான விடுதலையினை யாசித்த ஒரு கவிஞர். ' வேண்டுமடி எப்போதும் விடுதலை' என்று மீண்டும் அடிமைத்தளையில் சிக்க மறுக்கின்ற கவிஞர். பாரதியின் விடுதலை உணர்வு அரசியல் தளத்தில் மட்டுமல்லாது கலைத் தளத்திலும் பரவிநிற்கின்றது. அதிகாரம் சார்ந்த எல்லா வகையான ஒழுங்கு முறைகளையும் மீற விரும்புவது கவிஞரின் மனமாகும்.'

வைணவக் குடும்பத்தில் பிறக்காத பாரதியார், வைணவ கடவுளாகப் பார்க்கப்படும் கண்ணனை முன் வைத்து எழுதிய 'கண்ணன் பாட்டு ' என்ற கலைப் படைப்பைக் கண்டு தொ.ப.வியக்கிறார்.

பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும், பெரியாழ்வாரும் ( ஆண்டாளின் தந்தை ) பார்ப்பனரல்லாத மக்கள் திரளின் வாழ்வினையும், உணர்வுகளையும் உள்வாங்கி பாடியுள்ளார்கள் என்பதை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் 'பண்பாட்டுக் கலப்பு ' எனும் கட்டுரையின் வாயிலாக விளக்குகிறார்.

' நாட்டார் தெய்வங்கள் எவையும் 'முன்னே வந்து' வரம் தரும் தெய்வங்கள் அல்ல; 'பின்னே நின்று' பாதுகாப்புத் தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும், அறுவடைக் காலத்திலும், கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும், ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. '

'நாட்டார் தெய்வங்களில் 90%க்கு மேல் பெண் தெய்வங்கள் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். நாட்டார் தெய்வக் கோயில்களில் மட்டுமே தெய்வத்தைத் தன்மேல் நிறுத்திச் சாமியாடவும் குறி (அருள்வாக்கு) சொல்லவும் அடியவர்களுக்குத் திருநீறு வழங்கி அருள் பாலிக்கவும் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. இது மேல் சாதி மரபில் பெருந்தெய்வக் கோயில்களில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. '

நாட்டார் தெய்வங்களை வழிபடும் எல்லா மனிதர்களையும் தெய்வ நம்பிக்கையிலிருந்து விடுதலை செய்ய முடியாது. ஆனால் அவர்கள் மதம் என்ற அதிகார அமைப்பிற்குள் சிக்குவதை தடுக்க நாம் நாட்டார் தெய்வங்களை ஆதரிக்க வேண்டும் என்கிறார் தொ.ப.

பக்தி இலக்கியங்கள் சார்ந்த ஆய்வுகள் மிகவும் குறைவாக இருப்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். இத்தகைய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை கா.சிவத்தம்பியின் ஆய்வுகள் மூலமாக விளக்குகிறார்.

'வேதத்தை மட்டுமே கடவுளாகக் கொண்ட ஸ்மார்த்தர்கள், ஆகமங்களையும் கோயில் வழிபாட்டையும் முன்னிறுத்தும் சைவ வைணவர்கள், இந்த இரண்டு நெறிகளுக்குள்ளும் அடங்காத தொல்பழஞ் சமயக் கூறுகளையுடைய பெருவாரியான மக்கள் திரள் இவர்கள் அனைவரையும் 'இந்துக்கள்' என்ற கட்டுக்குள் அடக்க முயலுவதையே நாம் சமய ஆதிக்க உணர்வு என்கிறோம். இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 'இந்து' என்ற மேலைச் சொல்லாடலுக்கு நேரிடையான வரைவிலக்கணம் எதனையும் தரவில்லை என்பது இந்துத்துவவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்தச் சொல் பல்வேறு சமயங்களையும் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும் '

'இந்து' என்ற சொல்லுக்கான அரசியல் சட்ட வரைவிலக்கணம் உருவாக்கபட வேண்டும் என்பதே தொ.ப.வின் விருப்பமாகும்.

'தெய்வம் என்பதோர்...' என்ற தலைப்பு 'தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி' என்னும் திருவாசக அடியிலிருந்து பெறப்பட்டதாக தொ.ப. என மக்களால் அன்பாக அழைக்கப்படும் தொ.பரமசிவன் குறிப்பிடுகிறார். 'காலச்சுவடு' பதிப்பகம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது. உண்மையிலேயே தெய்வ வழிபாடு குறித்தான தட்டையான பார்வையை இப்புத்தகம் மாற்றியிருக்கிறது

இக்கட்டுரை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி' எனும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. 

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,
9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

மேலும் படிக்க :


Thursday, March 4, 2021

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

 


தமிழ்த் திரையுலக வரலாற்றை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. அப்படிப்பட்ட கலைவாணரின் வரலாற்றை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் கால இயந்திரத்தில் பயணம் செய்து நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார், அறந்தை நாராயணன். போகிற போக்கில் துதிபாடும் மனநிலையில் எழுதாமல் ஆய்வுப்பூர்வமாக தமிழக அரசியல்,கலை வரலாற்றுடன் சேர்த்தே கலைவாணரையும் எழுதி இருக்கிறார். தரவுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


'நகைச்சுவை அரசு' , 'தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் ', 'கலைவாணர் ' என பல பட்டங்கள் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நூலாசிரியர் ஏன் 'நாகரீகக் கோமாளி ' எனும் பட்டத்தை நூலின் தலைப்பாக தேர்ந்தெடுத்தார் ? என்ற கேள்விக்கான பதில் நூலாசிரியரின் ' என்னுரை' யில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கலைவாணர் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பட்டப்பெயர் ' நாகரீகக் கோமாளி ' என்பதாகும். அதனால் அதையே இப்புத்தகத்தின் தலைப்பாக வைத்ததாக அறந்தை நாராயணன் கூறியிருக்கிறார். 

குடும்பச் சூழல் காரணமாக சிறு வயதிலேயே நாடகத் துறைக்கு வந்து தங்களின் திறமைகளை மெருகேற்றி சினிமாவிலும் வெற்றி பெற்ற வரலாறு உலகெங்கிலுமே பலருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட வரலாறு தான் கலைவாணருடையதும். நாடக நடிகர்களும், நாடக கம்பெனிகளும் தொடர்ந்து செல்வாக்காக எந்தக்காலத்திலும் இருந்ததில்லை என்பதையே தமிழக நாடக வரலாறு வெளிப்படுத்துகிறது.சினிமாவின் வரவு நாடக நடிகர்களுக்கு புது வாழ்வை அளித்ததையும் காண முடிகிறது. ஆனால் மக்கள், நாடகங்களையும் கொண்டாடியிருக்கிறார்கள், சினிமாவையும் கொண்டாடியிருக்கிறார்கள். 

சினிமாவின் ஆரம்ப காலங்களில் மற்றவர்கள் உருவாக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர், பின்னாட்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அவரது காட்சிகளை அவரே உருவாக்கி நடிக்க ஆரம்பித்தார். உடுமலை நாராயணகவி போன்றவர்களுடன் சேர்ந்து இவர் பாட வேண்டிய பாடல்களையும் உருவாக்கினார். கலைவாணர்-மதுரம் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாகவே திரைவாழ்வின் கடைசி வரை இருந்திருக்கிறது. நிஜ வாழ்விலும் மதுரம் , கலைவாணரின் வாழ்வில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். லட்சுமிகாந்தன் கொலைவழக்கு காலங்களில் கலைவாணரை வெளியே கொண்டு வர படாதபாடு பட்டிருக்கிறார். பெரும் வள்ளலாக இருந்த போதிலும் கலைவாணர் சிறையில் இருந்த காலங்களில் வழக்குச் செலவிற்காக அலைந்து திரிந்தும் மதுரத்திற்கு போதிய பண உதவி கிடைக்கவில்லை. இது குறித்து வருத்தம் உண்டானாலும் கடைசி வரை தனது வள்ளல் குணத்தை கலைவாணர் மாற்றிக் கொள்ளவேயில்லை.

மற்ற துறைகளைப் போல நாடகத் துறையிலும் தீண்டாமை இருந்திருக்கிறது. பிராமண நடிகர்களுக்கு தனிச்சாப்பாடும், மற்றவர்களுக்கு தனிச்சாப்பாடும் என்றிருந்த முறையை 1934ல் தனது மதிநுட்பத்தால் மாற்றிக் காட்டியிருக்கிறார், கலைவாணர். மற்ற இடங்களில் எப்படியோ அவர் இருக்கும் இடங்களில் பாரபட்சம் இல்லாமல் இருப்பதேயே விரும்பியிருக்கிறார். கலைவாணர் நடத்திய நிகழ்வுகளில் பெரிய தலைவர்கள் பங்கெடுத்தாலும் சாப்பாடு என்பது ஒரே மாதிரியாகத்தான் போடப்பட்டுள்ளது. 

சமூக சீர்திருத்தக் கருத்துகளை ஆரம்ப கட்டங்களிலேயே தனது நடிப்பில் சேர்க்க ஆரம்பித்து விட்டார், கலைவாணர். இயக்குநர் யாராக இருந்தாலும் இவரது காட்சிகளை இவரே உருவாக்கிக் கொண்டதால் ஒரு தொடர்ச்சியை இவரது படங்களில் காண முடிகிறது. திரைப்படம், பக்திப்படமாக இருந்தாலும் அந்த பக்திக்குள் இருக்கும் மூடத்தனங்களை பகடி செய்வதாக கலைவாணரின் பாத்திர அமைப்பு இருக்கும். தமிழக நகைச்சுவை நடிகர்களுக்கு ஆரம்ப காலம் முதலே ஒரு மதிப்பும், மரியாதையும் உண்டாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே முதல் காரணம். அதே போல தமிழ் திரைப்பட வரலாற்றில் நகைச்சுவை, வெறும் நகைச்சுவையாக கடந்து போய்விடாமல் சமூகசீர்திருத்த கருத்துகள் இன்று வரை நகைச்சுவை காட்சிகளில் இடம்பெறுவதற்கும் கலைவாணரே முன்னோடி. 

கலைவாணர் தனது வாழ்நாளில் பலரை நல்வழிபடுத்தியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும் இருமுறை அறிவுரை கூறியிருப்பது நமக்குத் தெரிய வருகிறது. அதில் ஒன்று, 1938ஆம் ஆண்டு படபிடிப்பிற்காக கல்கத்தா சென்றிருந்த போது ஒரு வாய்க்காலைத் தாண்டும் போது எம்.ஜி.ஆரின் செருப்பு ஒன்றின் வார் அறுந்துவிடுகிறது. அறுந்த செருப்பையும், மற்றொரு செருப்பையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுகிறார். மறுநாள், கலைவாணரிடம் வந்து " வாங்க, செருப்பு வாங்க போகலாம் " என்று எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார். " நாளைக்கு போகலாம் " என்று பதிலளிக்கிறார், கலைவாணர். மறுநாள் வந்த எம்.ஜி.ஆர்., " கடைக்கு போலாம்", என்று கலைவாணரைக் கூப்பிடுகிறார். 

" போகலாமா ? பணம் எடுத்துண்டையா ? இரு ! சட்டையை மாட்டிக்கிட்டு வர்றேன் !" என்று கூறிய , கிருஷ்ணன் உள்ளே போய், "ராமச்சந்திரா! " என்று குரல் கொடுக்கிறார்.

ராமச்சந்திரன் உள்ளே போகிறார்.

"அந்த நாற்காலியில் உட்கார்!" என்று கூறிய கிருஷ்ணன், கீழே கிடந்த ஒரு பொட்டலத்தைக் காட்டி , " இந்தச் செருப்பு உன் காலுக்குச் சரியா இருக்கா, பாரு!" என்கிறார் 

பொட்டலத்தைப் பிரித்ததும் எம்.ஜி.ராமச்சந்திரன் திகைத்தார். முதல் நாள் அவர் விசிறி எறிந்த அதே செருப்புக்கள் புதுப்பிக்கப்பட்டு , மெருகிடப்பட்டிருந்தன. ஏதோ பேச முயன்றார் எம்.ஜி.ராமச்சந்திரன். முந்திக் கொண்டார் கிருஷ்ணன்:

" உன்னுடைய பழைய செருப்புத்தான். நீ வீசி எறிந்துவிட்டுப் போனதை பின்னால் வந்து கொண்டிருந்த நான் பார்த்தேன். அப்பவே பத்திரமா எடுத்து வந்துவிட்டேன். ஆணி அடித்து, தைத்து சரி பண்ணிட்டேன் இப்போ இதுக்கு என்ன குறை ? இன்னும் ஆறுமாசம் வரும். உன்னையும் உன் அண்ணனையும் பிரிந்து அறியாத உங்கம்மா , நீங்க கல்கத்தா வருவதற்கு ஒத்துக் கொண்டது ஏன் ? நீங்க சினிமாவிலே நடிச்சு முன்னேறுவீங்க. நல்லா சம்பாதிப்பீங்க, பணம் அனுப்புவீங்கனு எதிர்பார்த்துத் தானே ? செருப்புதாதானே ? பழசென்ன, புதிசென்ன ? முடிஞ்சவரை எதையும் முழுசா பயன்படுத்திப் பழகணும் " என்றார். 

இது ஏற்கனவே பலருக்கும் தெரிந்த செய்தி தான் என்றாலும் மீண்டும் குறிப்பிடக் காரணம், " பழசென்ன , புதிசென்ன? முடிஞ்சவரை எதையும் முழுசா பயன்படுத்திப் பழகணும் " என்ற கலைவாணரின் வார்த்தைகள் தான். உலகமயமாக்கல் விரிவடைய , விரிவடைய 'எதையும் முழுதாகப் பயன்படுத்த வேண்டும்' என்ற மனநிலை நம்மிடையே மறைந்து வருகிறது. தேவையில்லாமல், தேவையில்லாத பொருட்களை வாங்கி குவித்துக்கொண்டே இருக்கிறோம். இந்த மனநிலை மாற வேண்டும். முடிந்தவரை எதையும் முழுதாக பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். 

கலைவாணரின் அசோகா பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வருமானவரி செலுத்த அவரின் உதவியாளர், திருவேங்கடம் கணக்குகளை எடுத்துக் கொண்டு கோவையில் உள்ள வருமானவரி அலுவலகத்திற்குச் சென்றார். ஹனுமந்தராவ் என்பவர் அதிகாரியாக இருந்தார். கணக்கைப் பார்த்தார் ஹனுமந்தராவ். 

" தர்மம், தர்மம் என்று தான் கணக்கில் பெரும்பகுதி காணப்படுகிறது !இதெல்லாம் உண்மையா? உண்மையாக இருந்தாலும் வரி விலக்கு எப்படிக் கொடுக்க முடியும் ? " என்று கேட்கிறார், ஹனுமந்தராவ். 

உதவியாளர், திருவேங்கடம், " நீங்கள் வேணும்னா , ஆபீஸர் என்பதை மறந்து சென்டிரல் ஸ்டுடியோவுக்கு ஒரு சாதாரண மனிதர் போலப் போங்க ! என் மகளுக்குக் கல்யாணம், வரதட்சிணையின் காரணமாக நிற்கிறது என்று என்.எஸ்.கிருஷ்ணனிடம் சொல்லிப் பாருங்க! அவர் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு வந்து இந்தக் கணக்குகளைச் சரி பாருங்க !" என்றார்.

திருவேங்கடம் ஒரு பேச்சுக்குத்தான் அப்படிச் சொன்னார். ஆனால், ஹனுமந்தராவ், உடனேயே சென்ட்ரல் ஸ்டுடியோவிற்கு சென்று என்.எஸ்.கிருஷ்ணனிடம் ,

" ஒரு பெண்ணைப் பெத்தவன் நான். ஆயிரம் ரூபாய் இல்லாததால் பெண்ணின் கல்யாணம் தடைபடும் போலிருக்கிறது " என்றார், ஹனுமந்தராவ்.

" ஆயிரம் ரூபாய்க்காக நல்ல காரியம் நிற்க வேண்டாம்.தயவு செய்து கொஞ்ச நேரம் இருங்கள். என்னுடைய ஆள் இன்கம்டாக்ஸ் ஆபிசுக்குப் போயிருக்கிறார். வந்தவுடன் நீங்கள் கேட்ட தொகையுடன், உங்களை எனது காரிலேயே அனுப்பி வைக்கிறேன்" என்றார் கிருஷ்ணன். 

அசந்து போனார், இன்கம்டாக்ஸ் ஆபீசர் ஹனுமந்தராவ். " உனக்கு கர்ணன் என்ற பெயரை வைத்திருக்கணும் .தவறாக, உன் அப்பா உனக்கு கிருஷ்ணன்னு பேர் வச்சிட்டார் ! அப்பா கிருஷ்ணா! நான் தான் இன்கம்டாக்ஸ் ஆபீசர்! உன்னுடைய ஆள் என்னிடம் வந்து உனது தர்ம குணத்தைக் கூறினார். நம்பாமல் நானே வந்தேன். இனி, நான் இருக்கும் வரை உனது தர்மச் செலவுத் தொகைக்கு வரி விலக்குத் தருகிறேன். ஆனால், நீ கொடுக்கும் தொகைக்கு வவுச்சர் மட்டும் வாங்கி வைத்துக் கொள் ! " என்று கூறிவிட்டு, ஹனுமந்தராவ் புறப்பட்டார்.

கலைவாணரின் வள்ளல் குணத்திற்கு இந்தச் சம்பவம் உதாரணமாகச் சொல்லப்படுகிறது.யாரென்றே தெரியாதவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தன் வாழ்நாள் முழுவதும் வாரி வாரி வழங்கியிருக்கிறார்.பல்வேறு அமைப்புகளுக்கு, தனிநபர்களுக்கு நிதியுதவி நாடகங்களை தொடர்ந்து நடத்திக் கொடுத்திருக்கிறார். வள்ளல்களாக நிறைய பேர் வாழ்ந்து மறைந்திருக்கலாம். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் போல நிபந்தனையற்ற வள்ளலாக இருந்திருப்பார்களா ? என்பது சந்தேகமே. 

"நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம்." என்று எம்.ஜி.ஆர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். பார்ப்பன எதிர்ப்பை தனது திரைப்படங்களில் வலுவாகவே பதிவு செய்திருந்தாலும் எந்தக் கட்சியையும் சாராதவராகவே கடைசி வரை வாழ்ந்திருக்கிறார். முதன் முதலாக நடிகர்களுக்கென சங்கம் தொடங்கியவர். நடிகர்கள், கூத்தாடிகள் என அழைக்கப்பட்டதை மாற்றி கலைஞர்கள் என அழைக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார்.
இயக்குநர்கள் கையில் இருந்த தமிழ் சினிமா, கதாநாயகர்கள் கைக்கு மாறுவதை கண்டு வறுத்தம் அடைந்திருக்கிறார். 

1948 ஜனவரி 21ம் தேதி கம்யூனிச தலைவர் ப.ஜீவானந்தத்திற்கும், பத்மாவதிக்கும் காதல் திருமணம் எளிய முறையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ,சொந்தக்காரர்களுக்கும்,நண்பர்களுக்கும் தெரிவிக்காமல் எளிதாக நடைபெற்ற செய்தி இரண்டு நாளுக்கு பிறகே கலைவாணருக்கு தெரிய வந்தது. " நாடறிந்த தலைவருக்கு , அதுவும் என் நாஞ்சில் நாட்டுத் தலைவருக்கு ரகசியக் கல்யாணமா ? இதை நான் அனுமதிக்க மாட்டேன் !" என்று சொன்ன கலைவாணர் " ஜீவா - பத்மா திருமணப் பாராட்டு விழா ! ஜனவரி 30-ம் நாள் மாலை " என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். திடீரென, ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால் , கலைவாணர் விரும்பிய ஜீவா -பத்மா திருமண வரவேற்பு விழா நடைபெறவில்லை.

மதுவிலக்கு குறித்தான கருத்துகளைப் பரப்ப 'நல்லதம்பி ' திரைப்படத்தின் பெரும்பகுதியை ஒதுக்கினார், கலைவாணர். அவர், காந்தி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது கதறி அழுதிருக்கிறார். காந்திக்காக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக அவரது மனதில் இருந்தது. அதற்கு செயல் வடிவம் கொடுக்க தனது சொந்த ஊரான நாகர்கோயிலில் உள்ள நகரப் பூங்காவில் யாரிடமும் பணம் பெறாமல் அன்றைய மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்க்கும் மேலாக செலவு செய்து 60 அடி உயர காந்தி நினைவுத் தூணை எழுப்பியிருக்கிறார். இன்றும் அந்த தூண் இருக்கிறதா என்று தெரியவில்லை? 

என்.எஸ்.கிருஷ்ணனை 'தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் ' என்று குறிப்பிடதற்கு அவரது பதில்,
" சார்லி சாப்ளினை ஆயிரம் பங்கு போட்டு வர்ற ஒரு பங்குக்கு கூட நான் சமானம் இல்லே. என்னைவிடச் சிறந்த நடிகருங்க வட நாட்டிலே , மலையாளத்திலே, தெலுங்கு தேசத்திலே எத்தனையோ பேர் இருக்காங்க ! ஆனா, அவங்க யாரும் இந்த என்.எஸ்.கிருஷ்ணன் புகழப்படுவது போலப் புகழப்படுவதில்லை.அதற்குக் காரணம் அவர்களிடம் தமிழர்களைப் போல அவ்வளவு அதிகமான தாய்மொழிப் பற்று இல்லாமல் போனதுதான். தமிழர்களிடம் தமிழ் மொழி மேலே ரொம்பப் பற்று ! அதனாலே, இந்த என்.எஸ்.கிருஷ்ணனிடமும் பற்று ! அவ்வளவுதான் !".


" சேலத்திற்குச் சென்றிருந்த கலைவாணர் ஒரு தியேட்டரில் , 'மந்திரி குமாரி' படத்தைப் பார்த்தார்; வசனச் சிறப்பு கண்டு பிரமித்தார்; மறுநாள் , காலையில், சேலத்தில் தங்கியிருந்த, அப்படத்தின் கதை - வசன ஆசிரியர் மு.கருணாநிதியைச் சந்தித்தார்; வாழ்த்தினார்; பாராடாடினார். "நான் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள 'மணமகள்' படத்திற்கு நீங்கள் தான் திரைக்கதை- வசனம் எழுத வேண்டும் " - என்று கலைவாணர் வலியுறுத்தினார். 
எழுத்து ஊதியமாக ரூபாய் 10 ஆயிரம் பேசி முடிக்கப்பட்டது. கலைவாணரின் கட்டாயத்தால் , மு.கருணாநிதியின் குடும்பம் சென்னையில் குடியேறியது. "
கலைஞர் மு.கருணாநிதி சென்னையில் குடியேறியதற்கு கலைவாணரும் ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறார்.

"1956 நவம்பர் முதல் நாள் . கேரளத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியிலிருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு , செங்கோட்டை உள்ளிட்ட இரண்டாயிரம் சதுரமைல் பரப்பளவுள்ள தமிழ் மண் தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்களில் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை. ஒதுக்கப்பட்டவர்களில் ஒருவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 

1945ம் ஆண்டு தொடங்கிய திருவிதாங்கூர் தமிழரியக்கத்திற்கு ஏராளமாகப் பண உதவிகளைத் தாராளமாகச் செய்தவர் கலைவாணர், அவர் மாத்திரம் இல்லாதிருந்தால் , இயக்கம் தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் மாண்டு மடிந்து போயிருக்கும். அத்தகைய "கலைவாணருக்கு அழைப்பில்லையா ?" என்று நாகர்கோயில் திலகர் வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் கொதித்தனர். அதே நவம்பர் முதல் தேதி மாலையிலேயே பெரிய வீதியில் இணைப்பு விழாவைத் தங்கள் சொந்த முயற்சியில் திலகர் வாலிபர் சங்கத்தினர் நடத்தினர். " 

சமூக சீர்திருத்தம் என்பதையே முழுமூச்சாக கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி இருக்கிறார்,கலைவாணர். பெரியாரின் தாக்கத்தால், பார்ப்பன எதிர்ப்பு, சாதி மறுப்பு திருமணம் ,விதவை மறுமணம், ஆண் பெண் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், கல்வியின் முக்கியத்துவம் என்று இன்று நாம் முற்போக்கு என்று சொல்லும் அனைத்தையும் அவரது படங்களில் அப்போதே வெளிப்படுத்தியுள்ளார். 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கலைக்காகவும், கலைஞர்களுக்காகவும் மட்டுமல்லாமல் மக்களுக்காகவும், மண்ணிற்காகவும் வாழ்ந்து மறைந்த மக்களின் கலைஞர்!

இந்தப் புத்தக உருவாக்கத்திற்கான அறந்தை நாராயணன் அவர்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது !

தலைப்பு - 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்', 
ஆசிரியர் - அறந்தை நாராயணன், வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் .

அச்சு எழுத்துரு, மற்ற புத்தகங்களில் உள்ளதை விட சிறியதாக இருந்ததால் வாசிக்க சிரமமாக இருந்தது. பதிப்பகத்தார் அடுத்த பதிப்பின் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இக்கட்டுரை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி' எனும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. 

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :


Thursday, October 31, 2019

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!



ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு  நாளிதழிலோ, வார இதழிலோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஒரு துணுக்கு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அந்த துணுக்கின் கீழே " அறந்தை நாராயணன் எழுதிய 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ' எனும் நூலிலிருந்து " என்று போட்டிருந்தது. அன்றிலிருந்து தொடங்கிய தேடல் இப்போது தான் முடிவிற்கு வந்திருக்கிறது. அந்த அளவிற்கு அந்த துணுக்குச் செய்தியில் ஒரு வசீகரம் இருந்தது. எப்படியாவது இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற தேடல் தொடங்கியது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் எனது முதல் வழிகாட்டி. என்னையறியாமலேயே எனக்குள் பொதுவுடமை கருத்துக்களை அவரது பாடல்கள் மூலம் விதைத்தவர்.

இந்த புத்தகத்திற்கான தேடலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய எவ்வளவோ புத்தகங்கள் கண்ணில்பட்டன, அவற்றில் பலவும் வாங்கப்பட்டன.ஆனால் எதுவும் ஈர்க்கவில்லை. இதனால் அறந்தை நாராயணன் எழுதிய புத்தகத்திற்கான தேடல் முடிவடையவேயில்லை. எந்த புத்தக கடைக்குச் சென்றாலும் , எந்த புத்தகத் திருவிழாவிற்குச் சென்றாலும் கண்கள் முதலில் இந்தப் புத்தகத்தைத் தான் முதலில் தேடும். இந்தப் புத்தகம் ஒரு சாகித்ய அகாதமி வெளியீடு என்பதால் புத்தகத்திருவிழாவில் ஆர்வத்துடன் நுழையும் இடமாக சாகித்ய அகாதமி அரங்கே இதுவரை இருந்திருக்கிறது. இந்நிலை இனி மாறக்கூடும்.

சமீபத்தில் தோழர் யமுனா ராஜேந்திரன் எழுதிய பதிவொன்றில் அறந்தை நாராயணனின் அறச்சீற்றம் பற்றி குறிப்பிட்டு இருந்தார். எதற்கும் மீண்டும் ஒரு முறை அறந்தை நாராயணன் பற்றி தேடிப்பார்ப்போம் என்று இணையத்தில் தேடிய போது CommonFolks இணையதளத்தில் அறந்தை நாராயணனின் மூன்று நூல்கள் விற்பனைக்கு இருந்தன. அதில் இத்தனை ஆண்டுகளாக தேடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய புத்தகமும் இருந்தது. மற்ற இரண்டு நூல்களுக்கு அட்டைப்படங்கள் இருந்தன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நூலிற்கு அட்டைப்படம் கூட இல்லை. எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று உடனடியாக மூன்று புத்தகங்களையும் ( மற்ற இரண்டு நூல்கள் , நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன், மேடையில் பேசலாம் வாருங்கள் ) வாங்குவதற்கு பணம் செலுத்தினேன். இரண்டு நூல்கள் மட்டுமே உள்ளன அவற்றை உங்களுக்கு அனுப்புகிறோம் என்று குறுஞ்செய்தி வந்தது. இம்முறையும் கிடைக்காது போல என நினைத்திருக்கும் போது மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. 'மேடையில் பேசலாம் வாருங்கள்' புத்தகம் மட்டும் இல்லை என்று. மனம் பெருமகிழ்ச்சி அடைந்தது.

மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு மதிய வேளையில் புத்தகங்கள் அடங்கிய பொட்டலம் கைக்கு வந்து சேர்ந்தது. மிகுந்து ஆர்வத்துடன் பிரித்து இந்தப் புத்தகத்தின் அட்டையை மட்டும் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். 15 ஆண்டுகளுக்கும் மேலான தேடல் அல்லவா ? பிறகு ஒரே மூச்சில் இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்த மூன்றாவது புத்தகம் இது என நினைக்கிறேன். முந்தைய இரு நூல்கள் , ' எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்', ' நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ' . அறந்தை நாராயணனின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இப்படியொரு புத்தகத்தை வாசிப்பதற்கு இன்னும் பத்தாண்டுகள் கூட காத்திருக்கலாம் என்ற மனநிலையே உருவானது. அந்த அளவிற்கு அறந்தை நாராயணனின் எழுத்து நடை அமைந்திருந்தது. இவரின் அனைத்து புத்தகங்களையும் வாசிக்க ஆவல் பெருகுகிறது. ஒரு வாசகரை இப்படி உணரச்செய்வது சாதாரண விசயம் அல்ல. ஆனால் அறந்தை நாராயணன் இப்படி உணர வைக்கிறார். இந்தப் புத்தகம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரலாற்றை மட்டும் சொல்லவில்லை, கூடவே இடதுசாரி இயக்கங்களின் வரலாற்றையும் கூறிச் செல்கிறது. துல்லியமான தரவுகளுடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரலாறும், இடதுசாரி இயக்கங்களின் வரலாறும் நம் கண் முன்னே விரிகிறது.

இடதுசாரி இயக்கத் தலைவர்கள் பற்றிய நிறைய குறிப்புகள் இந்நூலில் உள்ளன. தஞ்சாவூர் பகுதியில் இடதுசாரி இயக்கங்கள் செழித்து வளர்ந்ததற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் உள்ள தொடர்பு விளக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடல் உருவாவதற்கு காரணமான பின்னணி அழகாக விவரிக்கப்படுகிறது. தேவையான இடங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை மிகவும் நெருக்கமாக உணரச் செய்கிறது, இப்புத்தகம். பெரும் உழைப்பைக் கொடுத்தே இந்நூலை எழுதியிருக்கிறார், அறந்தை நாராயணன். மக்கள் கவிஞருக்கு உரிய மரியாதையை இந்நூல் செய்திருக்கிறது.

மண்ணில் வாழ்ந்தது 29 ஆண்டுகள் தானென்றாலும், எழுதிய பாடல்கள் குறைவென்றாலும் காலத்தால் அவ்வளவு எளிதாக அழிக்க முடியாத பாடல்களை எழுதிச் சென்றிருக்கிறார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருக்கு பிறகு தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்களில் இடதுசாரி சிந்தனையுடையவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. திராவிட மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் திராவிட திரையிசைப் பாடலாசிரியரே இன்னும் உருவாகவில்லை. அப்புறம் எங்கே இடதுசாரி பாடலாசிரியர் பற்றி சிந்திப்பது. மக்கள் கவிஞரை நேசிப்பவர்கள் , இடதுசாரி சிந்தனையுடையவர்கள் தவறவிடவே கூடாத புத்தகமிது. வாய்ப்புள்ளவர்கள் வாசியுங்கள். 96 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை ₹50.

இந்தப் புத்தகம் இவ்வளவு நாளாக கிடைக்காமல் போனதற்கு அச்சில் இல்லாதது தான் காரணம். முதற்பதிப்பு 1998 ஆம் வந்துள்ளது. அதன் பிறகு இரண்டாம் பதிப்பு கடந்த ஆண்டு (2018) தான் வெளிவந்திருக்கிறது. அதனால் தான் இப்போது கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க :

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்



Tuesday, September 30, 2014

காகித மலர்கள் !

தமிழ்  இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையான ஆதவனால் எழுதப்பட்டது தான் இந்த 'காகித மலர்கள் ' ( 1977 ) நாவல் . மனிதர்களின் மனப்போக்குகளை ,வேசங்களை இவ்வளவு நெருக்கமாக எழுத்தில் பதிவு பண்ண முடியுமா ? என்ற ஆச்சரியம் நாவல்  முழுமைக்கும் உள்ளது . ஆனால், இது சாத்தியம் என்றே நிரூபித்திருக்கிறார் ,ஆதவன் .ஆம் ,இவருக்கு மட்டுமே சாத்தியம் . 70 களில் டெல்லியில் வாழ்ந்த சில தமிழ்க் குடும்பங்கள்  எப்படி இருந்தன என்ற பிம்பத்தை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது .

 நாகரிக வாழ்வு என்ற பெயரில் தனது சுயத்தை இழந்து விதவிதமான வேசங்கள் அணிவதன் மூலம் தன்னை திருப்திபடுத்த முயலும் கதாப்பாத்திரங்களை 'காகித மலர்கள் ' முன்வைக்கிறது . மனிதர்களின் சுயம் , தனித்துவம் , அணியும் பிம்பங்கள் பற்றி அதிகம் பேசும் இந்நாவல் இயற்கை குறித்தும் ,செயற்கை உரங்கள் மற்றும் வீரிய விதைகளின் தீமைகள் குறித்தும் , மத்திய அரசில் அதிகாரத்தை கைபற்றத் துப்பில்லாத தமிழக அரசியல் கட்சிகள் குறித்தும் பேசுகிறது . இந்நாவலில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் விதவிதமான வேசங்கள் அணிந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனச்சாட்சி அவர்களைக் கேள்வி கேட்கிறது ; தாங்கள் அணியும் வேசங்களை உணருகிறார்கள் .ஆனால் ,மீண்டும்  வேசங்களையே அணிகிறார்கள் .

இந்த நாவலிலிருந்து சில பகுதிகள் :-

" தன்னைத் தன் பார்வையில் நிரூபித்துக்கொள்வதுதான் அவனுக்கு முக்கியம் .தன்னைப் பற்றித் தன் திருப்திக்காகத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் .ஆழத்தில் வெகு ஆழத்தில் , அவன் யார் ? அவன் யாசிப்பது எது?

இதை அவன் கண்டுபிடிக்க வேண்டும் . தேடியவாறிருக்க வேண்டும் .மற்றவர்கள் அவனைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களுக்குப் பலியாகமல் அவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் "

...........

"ஆம்; திரையுலகத்துக்கு வெளியிலும்கூட சிறிய அளவிலோ பெரிய அளவிலோ ஒவ்வொருவருக்கும் நடிப்புத்திறமை தேவைப்படுகிறது "

.................

" இயற்கை , பெண்ணைப்போல , மனிதனை இயங்க வைக்கும் சக்தி ; மனித குலத்துக்குத் தொடர்ச்சியை அளிப்பது ; அதை மிகையாக இலட்சியப்படுத்தி பூஜை செய்யாமல் அன்னியோன்னியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அதைப் பயன்படுத்த வேண்டும் - அதே சமயத்தில் அதைச் சூறையாடிவிடக்கூடாது "

......................

" முதலில் , நம்மை நாமே தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம் . அதற்கு வேண்டிய அவகாசத்தைக்கூட நாம் பெறாமலிருப்பதே நம் துரதிஷ்டம் . இதுதான் வெற்றி , இதுதான் முன்னேற்றம் , என்று ஏதோ சிலவற்றை நாம் நிச்சயமாக நம்பிக்கொண்டு , அவற்றையே அடிப்படையாகக் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விட்டோம் . இந்த நம்பிக்கைகள் தவறாக இருக்கலாம் ; இவற்றைச் சார்ந்து உருவான அமைப்புகள் யாவும் தவறாக இருக்கலாம் . எது நமக்கு உண்மையிலேயே முக்கியமானது ? எது நமக்கு உண்மையிலே இன்பம் தருவது ? சாதிக்கக்கூடியதாக இருப்பதாலேயே எல்லாவற்றையும் சாதிக்க வேண்டியதில்லை. வெல்லக்கூடிய யாவற்றையும் வெல்ல வேண்டியதில்லை . செலவழிக்கக்கூடிய எல்லாவற்றையும் செலவழிக்க வேண்டியதில்லை. மனிதன் மென்மேலும் தன் ஆற்றல்களை உணர்ந்து வருகிறான் . ஆனால் அவற்றை எப்படி , எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்பதை மட்டும் உணரவில்லை. எல்லாவற்றையுமே பயன்படுத்த முயலவேண்டியதில்லை என்பதையும் உணரவில்லை..."

........................

" ரெனி டு போ என்ற ஃபிரெஞ்ச் அறிஞர் சொல்லியிருக்கிறார் , மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைக் குடிவைக்கும்போது நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகூட மனிதர்களை நகரங்களில் குடிவைக்கும்போது எடுத்துக் கொள்வதில்லையென்று. வெவ்வேறு மிருகங்களின் இயல்பான வசிக்குமிடத்துக்கேற்றவாறு இங்கு தனித்தனிப் பாணிகளில் ஒவ்வொரு மிருகத்திற்கும் இடம் அமைத்திருக்கிறார்கள் . ஆனால் நம் நகரங்களில் வெவ்வேறு பூர்வீகங்கள் , மதக் கலாச்சாரச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மனிதர்கள் ஒரேவிதமான வீடுகளில் வளர்கிறார்கள் , ஒரே விதமான பள்ளிகளில் ஒரே விதமான கல்வியைக் கற்கிறார்கள் , ஒரே விதமான வேலைகளில் திணிக்கப்படுகிறார்கள் , ஒரே விதமான பிம்பங்களை அணிகிறார்கள் , யாசிக்கிறார்கள். "

............................

" உலகெங்கிலும் குண்டர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் . மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் . சில குழுக்கள் , இவர்களுடைய சுயநலமான நோக்கங்கள் , மனித சமூகத்தின் முன்னேற்றம் ,மேம்பாடு என்று எதையெதையோ இவர்கள் கொச்சையாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கியுள்ள  கொள்கைகள்,அமைப்புகள் , இவற்றின் பொருட்டுத் தவறான முறையில் சூறையாடப்பட்டுவரும் , சேததமடைந்து வரும் , இயற்கை வளங்கள் , மனித இயல்புகள்..."

..................................

" தனி மனிதன் நிர்வாக அமைப்பில் தன்னையும் பங்குதாரனாக உணராமல் அதனின்றும் தனிமைப் படுத்தப்பட்டவனாக உணருவதால், தன் பிரச்சனைகளின் தீர்வுக்காகத் தானே நேரடியாகச் செயல்படும் தெம்போ, ஊக்கமோ அவனுக்கில்லை... மறு பக்கத்தில் பெரும்பாலானவர்கள் பெரும் அமைப்புகளில் ஒரு ஆணியாகவோ பல்சக்கரமாகவோ இயங்கிக் கொண்டு , தன் செயல்களின் இறுதி விளைவுகளை நிர்ணயிக்கும் திறனற்றவராய் இருப்பதும் , தம்மிடமிருந்து தாமே அந்நியப்பட்ட , ஆரோக்கியமான சுய உந்துதல்களால் மழுங்கி மரத்துப்போன ஒரு மக்கள் சமூகம் உருவாகவே வழிசெய்கிறது..."

..................................................

" வீர்ய விதைகளுக்கு அதிக அளவில் தண்ணீரும் , செயற்கை உரமும் , பூச்சிக் கொல்லிகளும் தேவைப்படுகின்றன . இம்மூன்றில் ஒன்று குறைந்தாலும் விளைச்சல் பழைய பாணி விதைகள் மூலம்  கிடைப்பதை விடவும் குறைந்துவிடுகிறது ...."

இந்நாவலில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் போலியான வேசங்களையே அணிவதால் அவர்கள் தான் வாசமில்லா " காகித மலர்கள் " என்று அர்த்தப்படுத்துகிறார், ஆதவன் .

நன்றி - ஆதவன் , உயிர்மை பதிப்பகம் .

மேலும் படிக்க :-

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

...................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms