Tuesday, March 31, 2026

காயமே இது மேய்யடா - போப்பு !


சரியான நேரத்தில் வாசிக்க கிடைத்த சரியான புத்தகம். தற்போதைய நமது வாழ்க்கை முறை, உடல்நலம் குறித்தான நிறைய சந்தேகங்களையும், குழப்பங்களையும் உருவாக்குகிறது. நமது உடல் குறித்தான பிரக்ஞையே நம்மிடம் இல்லை. உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் நாம் பேணி காக்க தவறிவிடுகிறோம். இப்படியான சூழலில், தோழர் போப்புவின் இந்தப் புத்தகம் நமது உடல் குறித்தான ஒரு குறுக்குவெட்டு பார்வையை முன்வைக்கிறது. 


தி இந்து தமிழ் நாளிதழின் ' நலம் வாழ' இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அந்த கட்டுரைகளின் மூலமே போப்பு அவர்கள் அறிமுகம். அதன் பிறகு முகநூலில் தேடிப்பிடித்து நண்பராக சேர்ந்தாச்சு. உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை என்று மனித உடலைச் சொல்லுவார்கள். அது முற்றிலும் உண்மை. அமேசான் காடுகளில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத உயிரினங்கள் இருப்பது போல நமது உடலிலும் இன்னமும் விடுவிக்கப்படாத புதிர்கள் இருக்கின்றன. உலகவணிகமயமாக்கலுக்கு பிறகான நமது வாழ்க்கை முறையால் நமது உடல் பெரிய அளவில் இன்னல்களைச் சந்தித்து வருகிறது. உடல் வெளிப்படுத்தும் சமிக்கைகளை கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டியது அவசியம் என இப்புத்தகம் வலியுறுத்துகிறது.


நமது உடல் குறித்தான நிறைய புரிதல்களை இந்நூலை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். போப்பு அவர்கள் சொல்லியிருக்கும் அனைத்தையும் எல்லோராலும் இன்றைய வாழ்வில் செயல்படுத்த இயலாத சூழலே நிழவுகிறது. அவர் கூறியிருப்பதில் கால்வாசியை நாம் நடைமுறைப்படுத்தினால் கூட அது இந்த நூலின் வெற்றிதான். அவர் முக்கியமாக குறிப்பிடுவது இரவில் கண்டிப்பாக 10 மணிக்குள் தூங்க வேண்டும் என்பதுதான். இது எல்லோருக்கும் சாத்தியமா என்று தெரியவில்லை. சாத்தியமுள்ளவர்கள் இதை நடைமுறைபடுத்துவதன் மூலம் நற்பலன்களைப் பெற முடியும். அதே போல காலையில் 6 மணிக்குள் எழுவதும். 


நமது உடலைப் பொறுத்தவரை இதுவரை பழக்கப்படாத எதுவும் அந்நியப் பொருள்தான். நாம் பயன்படுத்தும் பற்பசை, சோப்பு , சாம்பு மற்றும் பிற பொருட்கள் எவ்வளவு உயர்வானதென்று நாம் கருதினாலும் அவை நமது உடலின் இயல்பிற்கு எதிராக செயல்படுவதை விளக்குகிறார். அதே போல அதிக வாசனையுள்ள உணவோ அல்லது அதிக வாசனையுள்ள அழகுசாதனப் பொருட்களோ நமது உடலுக்கு அதிக தீங்குகளை விளைவிப்பதையும் குறிப்பிடுகிறார். 


மொத்தத்தில் நாம் தற்போது வாழும் வாழ்க்கை முறை நமது சூழலுக்கும் நமது உடலுக்கும் பொருந்தாத வாழ்க்கை முறைதான். இயற்கையின் ஒரு பகுதியான மனித இனம் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைக்கு திரும்புவதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். நடைமுறையில் இது எந்த அளவிற்குச் சாத்தியம் என தெரியவில்லை. ஆனால் ஓரளவிற்கு சிக்கலில்லாத வாழ்க்கையை மனித இனம் இப்பூமியில் வாழ இதை விட்டால் வேறு வழியும் இல்லை. 


இவ்வளவு தகவல்களையும் " நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை " என்ற பாணியில் முன்வைக்காமல் உடலின் இயக்கத்தை விளக்குவதன் மூலம் முன் வைப்பதால் இந்நூல் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. எப்படி " கேளுங்கள் மனம் சொல்வதை ..." என்று சொல்கிறமோ அதே போல உடல் சொல்வதையும் நாம் கேட்க வேண்டியது அவசியமாகிறது. நமது உடலுக்கு நேரும் பெரிய பாதிப்புகள் கூட அவை சிறிய பாதிப்புகளாக இருந்த போது உடல் வெளிப்படுத்திய சமிக்கைகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் காரணம் என்கிறார், ஆசிரியர். 


ஒரு படைப்பின் வெற்றி என்பது அந்தப் படைப்பை வெளிப்படுத்திய படைப்பாளியின் மற்ற படைப்புகள் நோக்கி நகர வைப்பதுதான். அந்த வகையில் இந்தப் படைப்பு வெற்றி பெற்றிருக்கிறது. தோழர் போப்புவின் மற்ற நூல்களையும் வாசிக்க வேண்டும்.


நதி போல தனது வாழ்க்கையை வாழும் போப்பு அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்! 

( பிப்ரவரி 11 2022 )

மேலும் படிக்க:

உணவுக்கு முதல் வணக்கம் - போப்பு !

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms