Thursday, October 31, 2019

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!



ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு  நாளிதழிலோ, வார இதழிலோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஒரு துணுக்கு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அந்த துணுக்கின் கீழே " அறந்தை நாராயணன் எழுதிய 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ' எனும் நூலிலிருந்து " என்று போட்டிருந்தது. அன்றிலிருந்து தொடங்கிய தேடல் இப்போது தான் முடிவிற்கு வந்திருக்கிறது. அந்த அளவிற்கு அந்த துணுக்குச் செய்தியில் ஒரு வசீகரம் இருந்தது. எப்படியாவது இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற தேடல் தொடங்கியது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் எனது முதல் வழிகாட்டி. என்னையறியாமலேயே எனக்குள் பொதுவுடமை கருத்துக்களை அவரது பாடல்கள் மூலம் விதைத்தவர்.

இந்த புத்தகத்திற்கான தேடலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய எவ்வளவோ புத்தகங்கள் கண்ணில்பட்டன, அவற்றில் பலவும் வாங்கப்பட்டன.ஆனால் எதுவும் ஈர்க்கவில்லை. இதனால் அறந்தை நாராயணன் எழுதிய புத்தகத்திற்கான தேடல் முடிவடையவேயில்லை. எந்த புத்தக கடைக்குச் சென்றாலும் , எந்த புத்தகத் திருவிழாவிற்குச் சென்றாலும் கண்கள் முதலில் இந்தப் புத்தகத்தைத் தான் முதலில் தேடும். இந்தப் புத்தகம் ஒரு சாகித்ய அகாதமி வெளியீடு என்பதால் புத்தகத்திருவிழாவில் ஆர்வத்துடன் நுழையும் இடமாக சாகித்ய அகாதமி அரங்கே இதுவரை இருந்திருக்கிறது. இந்நிலை இனி மாறக்கூடும்.

சமீபத்தில் தோழர் யமுனா ராஜேந்திரன் எழுதிய பதிவொன்றில் அறந்தை நாராயணனின் அறச்சீற்றம் பற்றி குறிப்பிட்டு இருந்தார். எதற்கும் மீண்டும் ஒரு முறை அறந்தை நாராயணன் பற்றி தேடிப்பார்ப்போம் என்று இணையத்தில் தேடிய போது CommonFolks இணையதளத்தில் அறந்தை நாராயணனின் மூன்று நூல்கள் விற்பனைக்கு இருந்தன. அதில் இத்தனை ஆண்டுகளாக தேடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய புத்தகமும் இருந்தது. மற்ற இரண்டு நூல்களுக்கு அட்டைப்படங்கள் இருந்தன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நூலிற்கு அட்டைப்படம் கூட இல்லை. எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று உடனடியாக மூன்று புத்தகங்களையும் ( மற்ற இரண்டு நூல்கள் , நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன், மேடையில் பேசலாம் வாருங்கள் ) வாங்குவதற்கு பணம் செலுத்தினேன். இரண்டு நூல்கள் மட்டுமே உள்ளன அவற்றை உங்களுக்கு அனுப்புகிறோம் என்று குறுஞ்செய்தி வந்தது. இம்முறையும் கிடைக்காது போல என நினைத்திருக்கும் போது மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. 'மேடையில் பேசலாம் வாருங்கள்' புத்தகம் மட்டும் இல்லை என்று. மனம் பெருமகிழ்ச்சி அடைந்தது.

மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு மதிய வேளையில் புத்தகங்கள் அடங்கிய பொட்டலம் கைக்கு வந்து சேர்ந்தது. மிகுந்து ஆர்வத்துடன் பிரித்து இந்தப் புத்தகத்தின் அட்டையை மட்டும் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். 15 ஆண்டுகளுக்கும் மேலான தேடல் அல்லவா ? பிறகு ஒரே மூச்சில் இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்த மூன்றாவது புத்தகம் இது என நினைக்கிறேன். முந்தைய இரு நூல்கள் , ' எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்', ' நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ' . அறந்தை நாராயணனின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இப்படியொரு புத்தகத்தை வாசிப்பதற்கு இன்னும் பத்தாண்டுகள் கூட காத்திருக்கலாம் என்ற மனநிலையே உருவானது. அந்த அளவிற்கு அறந்தை நாராயணனின் எழுத்து நடை அமைந்திருந்தது. இவரின் அனைத்து புத்தகங்களையும் வாசிக்க ஆவல் பெருகுகிறது. ஒரு வாசகரை இப்படி உணரச்செய்வது சாதாரண விசயம் அல்ல. ஆனால் அறந்தை நாராயணன் இப்படி உணர வைக்கிறார். இந்தப் புத்தகம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரலாற்றை மட்டும் சொல்லவில்லை, கூடவே இடதுசாரி இயக்கங்களின் வரலாற்றையும் கூறிச் செல்கிறது. துல்லியமான தரவுகளுடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரலாறும், இடதுசாரி இயக்கங்களின் வரலாறும் நம் கண் முன்னே விரிகிறது.

இடதுசாரி இயக்கத் தலைவர்கள் பற்றிய நிறைய குறிப்புகள் இந்நூலில் உள்ளன. தஞ்சாவூர் பகுதியில் இடதுசாரி இயக்கங்கள் செழித்து வளர்ந்ததற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் உள்ள தொடர்பு விளக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடல் உருவாவதற்கு காரணமான பின்னணி அழகாக விவரிக்கப்படுகிறது. தேவையான இடங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை மிகவும் நெருக்கமாக உணரச் செய்கிறது, இப்புத்தகம். பெரும் உழைப்பைக் கொடுத்தே இந்நூலை எழுதியிருக்கிறார், அறந்தை நாராயணன். மக்கள் கவிஞருக்கு உரிய மரியாதையை இந்நூல் செய்திருக்கிறது.

மண்ணில் வாழ்ந்தது 29 ஆண்டுகள் தானென்றாலும், எழுதிய பாடல்கள் குறைவென்றாலும் காலத்தால் அவ்வளவு எளிதாக அழிக்க முடியாத பாடல்களை எழுதிச் சென்றிருக்கிறார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருக்கு பிறகு தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்களில் இடதுசாரி சிந்தனையுடையவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. திராவிட மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் திராவிட திரையிசைப் பாடலாசிரியரே இன்னும் உருவாகவில்லை. அப்புறம் எங்கே இடதுசாரி பாடலாசிரியர் பற்றி சிந்திப்பது. மக்கள் கவிஞரை நேசிப்பவர்கள் , இடதுசாரி சிந்தனையுடையவர்கள் தவறவிடவே கூடாத புத்தகமிது. வாய்ப்புள்ளவர்கள் வாசியுங்கள். 96 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை ₹50.

இந்தப் புத்தகம் இவ்வளவு நாளாக கிடைக்காமல் போனதற்கு அச்சில் இல்லாதது தான் காரணம். முதற்பதிப்பு 1998 ஆம் வந்துள்ளது. அதன் பிறகு இரண்டாம் பதிப்பு கடந்த ஆண்டு (2018) தான் வெளிவந்திருக்கிறது. அதனால் தான் இப்போது கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க :

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்



Tuesday, October 29, 2019

நாமெல்லாம் கொலைகாரர்களே !

படம் - ரவி பேலட்

வளர்ந்தவர்களை மலக்குழியில் தள்ளி கொல்கிறோம். வளராதவர்களை ஆழ்துளை கிணற்றில் தள்ளி கொல்கிறோம். எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் கடந்து போகவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். மலக்குழி மரணங்கள் இன்று வரை விவாதப் பொருளாக ஆனதேயில்லை. ஆழ்துளை கிணறு மரணங்கள் விவாதப் பொருளாக மாறுவதற்கு இரண்டு வயது பிஞ்சுவின் மரணம் தேவையாய் இருக்கிறது. இரண்டுக்குமே முறையான இயந்திரங்களோ, பாதுகாப்பு வசதிகளோ இல்லை.

முதலில் இந்தியாவில் குழந்தைகள், குழந்தைகளாக நடத்தப்படுவதேயில்லை. குடும்பம், சமூகம், அரசு என மூன்றுமே குழந்தைகளின் மனநிலைகளையும், அவர்களைக் காத்து சரியாக வழி நடத்துவது எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்ந்ததேயில்லை. இன்றைய குழந்தைகள் தானே நாளைய எதிர்காலம் என்ற உணர்வு இந்திய நாட்டில் யாருக்கும் இல்லை. இந்தியாவில் கலை, இலக்கியம் கூட குழந்தைகளை கைவிட்டு விட்டன. அரிதாகவே கலையும், இலக்கியமும் குழந்தைகளை பதிவு செய்கிறது.

பேரிடர் மேலண்மை என்பது தமிழகத்தில் சுத்தமாக இல்லை. பேரிடர் மேலாண்மை குறித்த படிப்பும் குறிப்பிடும்படியாக எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை. பேரிடர் மேலண்மையில் முக்கியமாக தேவைப்படுவது சூழியல் அறிவு. இதுவரை நடந்த பேரிடர்களின் போது இவர்கள் செயல்பட்ட விதத்தைப் பார்க்கும் போது சூழியல் அறிவு என்பது யாருக்கும் இல்லை என தெளிவாகத் தெரிகிறது. கடலில் எண்ணெய் கொட்டினால் வாளியில் அள்ளுவது, திடீர் வெள்ளம் வந்தால் எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் முழிப்பது, நில அமைப்பு எப்படி இருக்கிறது என்ற புரிதல் இல்லாமல் இருப்பது, ஒக்கி புயலின் போதும், கஜா புயலின் போதும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது என சொல்லிக்கொண்டே போக முடியும். ஒக்கிப் புயலின் போது மீனவர்களை சாகவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தானே நாம்.  சூழியல் அறிவா ? அப்படியென்றால் என்ன ? என்று கேட்கும் நிலையே அரசிடம் இருக்கிறது. ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் அட்டையை விரித்தவர்கள் தானே அவர்கள்.

கல்பாக்கம், கூடங்குளம் என ஒன்றுக்கு இரண்டு அணுமின் நிலையங்கள் இருக்கின்றன. சிறு விபத்து ஏற்பட்டாலும் பேச கூட நேரம் இருக்காது. செத்து மடிந்து விடுவோம். நினைக்கவே அச்சமாக இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் எண்ணை எடுக்கும் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டால் ? பேரிடர்களை சமாளிக்கும் தகுதியே இல்லாமல் கார்பரேட்காரர்களுக்காக நாசகார திட்டங்களை தமிழகத்தில் எதற்காக அனுமதிக்கிறீர்கள் ? இரண்டு அரசுகளும் சேர்ந்து தான் அவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையிலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை அமைத்தன. இப்போது நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கத் துடிக்கிறார்கள், கொலைகாரர்கள்.

அறிவியல் , வளர்ச்சி என்பதெல்லாம் யாருக்கானது ? எல்லாமே மக்களுக்கானது. இதை பெரும்பாலான அரசுகள் உணரவேயில்லை. அரசு என்பது மக்களால், மக்களின் வரிப்பணத்தில் தான் நடக்கிறது என்பதே அரசு எப்போதும் நினைவில் வைப்பதேயில்லை.அரசுக்குத் துணையாக மக்களும் இதை மறந்துவிடுகிறார்கள். மக்களை கொத்து கொத்தாக கொல்வதற்கு, இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஓராயிரம் கருவிகள் இருக்கின்றன. கழிவுகளின் அடைப்பை சரிசெய்யவோ, ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறு உயிரைக் காப்பாற்றவோ நம்மிடம் முறையான கருவிகள் இல்லை. நிலவிற்கு ராக்கெட் அனுப்பியதற்கு பெருமிதம் அடைந்தவர்களே உங்கள் முகத்தில் நீங்களே காறி உமிழ்ந்து கொள்ளுங்கள்.

பெரிய அளவிலான உளவியல் பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது இந்நிகழ்வு. இரண்டு, மூன்று வயது குழந்தைகளை பார்க்கும் போது இவர்களைப் போற்றவன் தானே சுஜித்தும் என்ற எண்ணம் தான் முதலில் வருகிறது. யாராலும் இயல்பாக தங்களின் அன்றாட வேலைகளை கவனிக்க முடியவில்லை. '5 அடி, 10 அடி ' என எங்காவது வாசிக்க நேர்ந்தால் கூட சுஜித் தான் முதலில் நினைவிற்கு வருகிறான். என்ன செய்தும் , நம்மை நோக்கி கையசைந்த அந்த பிஞ்சை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வை ஒருபோதும் நம்மால் நீக்கிவிட முடியாது. நம்மை நம்பிய அந்த உயிரை குழிக்குள் வைத்தே கொன்று விட்டோம். நாமெல்லாம் கொலைகாரர்களே.

கடைசி நாளில் என்ன அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமோ அதை பிசக்காமல் செய்து முடித்திருக்கிறார்கள்.குழந்தையின் கைகளில் அசைவில்லை, குழந்தை மீது ஒரு அடி வரை மண் விழுந்துவிட்டது, உள்ளிருந்து துர்நாற்றம் வீசுகிறது, குழந்தை இறந்துவிட்டது என்று படிப்படியாக சொல்லி குழந்தையை அழுகிய நிலையில் மீட்டோம் என்று சொல்லி முடிவிற்கு கொண்டு வந்து விட்டார்கள். மீட்டது உண்மையிலேயே சுஜித் உடல் தானா ? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. போஸ்ட்மார்ட்டம் அறிக்கை என்று எதை காண்பிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முழுமையான விளக்கம் தேவை. அரசு இயந்திரத்திற்கு மனசாட்சி , குற்றவுணர்ச்சி என்றெல்லாம் எதுவும் இல்லை என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் மீது கைவைக்கும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்று பல முறை நமக்கு படிப்பினைகளை இயற்கை கொடுத்திருக்கிறது. ஆனாலும் நமது செயல்பாடுகளில் துளியும் மாற்றமில்லை. தனிப்பட்ட முறையிலும்,அரசு மற்றும் கார்பரேட் நிறுவனங்களாலும் இயற்கை வளங்கள் பெருமளவு பாதிப்புகளைச் சந்திக்கின்றன. இதற்கெல்லாம் சேர்த்து இயற்கை பதிலடி தரும் போது நம்மால் எதிர்கொள்ள முடிவதில்லை. இயற்கைக்கு கருணையே கிடையாதா ? ஆம், இயற்கைக்கு கருணை என்பது எப்போதும் இல்லை. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும் தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டே தான் இருக்கும். ஏற்கனவே இருப்பது அழிவது பற்றியோ, புதிதாக உருவாவது பற்றியோ எப்போதும் கவலைப்படாது. சமநிலை, சமநிலை அது மட்டுமே இலக்கு.

மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்கள் இயற்கையின் சமநிலையை பாதிப்பது இல்லை. இயற்கையுடன் இணைந்த வாழ்வையே அமைத்துக் கொள்கின்றன. மனித இனம் தான் இயற்கையின் சமநிலையை ஒவ்வொரு நிமிடமும் சிதைக்கிறது. அதற்கான பலனை அனுபவித்தாலும் திருந்தவேயில்லை. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை மட்டுமே நம்மை மீட்கும்.

Friday, October 4, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 10 !



இந்தியாவில் பாலியல் சார்ந்த சிக்கல்கள் அதிகமாக இருப்பதற்கு 'பாலியல் வறட்சி' தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. 'பாலியல் வறட்சி' மட்டுமே காரணமல்ல, 'பாலியல் வறட்சி'யும் ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. நாளுக்கு நாள் இந்திய சமூகம் அறிவியலை புறந்தள்ளுவது தான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு சில விசயங்களில் தொழிற்நுட்பங்களை மிக வேகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். மற்ற பல விசயங்களை அறிவியல் கண் கொண்டு பார்ப்பதும் இல்லை. எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துவதும் இல்லை. இந்த மனநிலையால் அதிகம் பயனடைவது மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டும் மத அடிப்படைவாதிகள் தான். மிகச் சாதாரண விசயங்களை கூட அறிவியல்படி பார்ப்பதில்லை. இதனாலேயே மற்ற நாடுகளைப் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம் இங்கே நிகழ்வது இல்லை. பாலியல் சார்ந்த விசயங்களையும் அறிவியல்படி பார்க்காதது தான் இந்திய சமூகம் தங்களுக்குள்ளே உருவாக்கிக்கொள்ளும் அதிகப்படியான பாலியல் சிக்கல்களுக்கும், பாலியல் வறட்சிக்கும் காரணம்.

பாலியல் குற்றங்கள் என்பது எல்லா நாடுகளிலும் நிகழ்கின்றன. ஆனால் அதிகப்படியான பாலியல் சிக்கல்கள் பெண்களை அடிமைகளாக நடத்தும் பின்தங்கிய நாடுகளிலேயே அதிகம் இருக்கின்றன. உதாரணமாக பெண்களின் உடை என்பது வளர்ந்த நாடுகளில் ஒரு பாலியல் சிக்கலாக இல்லை. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களின் உடை தான் எல்லா பாலியல் குற்றங்களுக்கும் காரணம் என எண்ணும் மனப்போக்கு உள்ளது. இதே போல பிடித்தமான துணையை தேர்ந்தெடுப்பதிலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகப்படியான சிக்கல்கள் இருக்கின்றன. எவ்வளவு படித்தாலும் கூட பெரும்பாலான பெண்களின் மற்றும் ஆண்களின் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், சுதந்திரமும் அவர்களிடம் இல்லை. இருவருக்கும் விருப்பமிருந்தால் அதிக வயது ஆண், குறைந்த வயது பெண்ணையோ, அதிக வயது பெண், குறைந்த வயது ஆணையோ திருமணம் செய்து கொள்வதில் எந்தவிதமான மனத் தடையோ, சமூகத் தடையோ வளர்ந்த நாடுகளில் இல்லை. ஆனால் இன்றும் தமிழகத்தில் பெரியார், குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்ததை பெரிய குற்றமாக பார்க்கிறார்கள். வயது வித்தியாசம் அதிகம் உள்ள ஜோடிகளை சமூகம் இயல்பாக பார்ப்பதில்லை. இதை ஒரு குறையாக பார்க்கும் மனநிலையே அதிகம் இருக்கிறது. பிடித்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் எந்தக் குறையும் இல்லை என்பதை உணரப் போகிறோமோ ? தெரியவில்லை.

' ஒடுக்கப்படுவது எந்த இனமாக இருந்தாலும், அந்த இனத்தின் குரலாக இருப்பதே சிறப்பு ' என்பதன் அடிப்படையில் பாலியல் சிக்கல்கள் என்று வரும் போது பெண்களின் பார்வையிலிருந்து அணுகுவது தான் சரியாக இருக்கும். ஆனால் யதார்தத்தில்
'பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது, ஆண்களுக்கு எல்லாம் தெரியும், பெண் என்றால் முட்டாள், ஆண் புத்திசாலி ' என்ற மனநிலை தான் மேலோங்கி இருக்கிறது. கிராமம், நகரம், படித்தவர், படிக்காதவர் என வேறுபாடில்லாமல் இந்த ஆணாதிக்க மனநிலை வேரூன்றி இருக்கிறது. இந்த மனநிலை ஆண்களிடமும், பெண்களிடமும் நிறைய மனக்குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. பெண்களை சகமனிதர்களாக நினைக்க ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை.

பெண்கள் தொடர்ந்து உடைமைகளாகவே பார்க்கப்படுவதற்கு , நடத்தப்படுவதற்கு பெரிய திரையான சினிமாவும், சின்னத்திரையான தொலைக்காட்சியும் தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மீண்டும் மீண்டும் போகப்பொருளாக, சிறியது முதல் பெரிய அளவிலான வன்முறைகளை ஏவும் உடலாக மட்டுமே பெண்கள், பெரிய திரையிலும், சின்னத்திரையிலும் சித்தரிக்கப்படுகிறார்கள். அதிலும் புதிய அறிமுகமாக 'கேம் ஷோ' என்ற பெயரில் பெண்களை உடலாகவே நிறுவும், அறுவெறுக்கத்தக்க ,கேவலமான வார்த்தைகளை பேசும் நிகழ்ச்சிகள் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் அதிகரித்து வருகின்றன. எந்தவித உறுத்தலும் இல்லாமல் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்புகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இதில் பங்குபெறும் பெண்களுக்கே தங்களை கேவலமாக சித்தரிக்கிறார்கள் என்று தெரியாமல் இருப்பது தான். அதிலும் தற்போதைய தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் அனைத்தும் பிற்போக்குத்தனங்களின் கூடாரம்.ஒரு மனிதராக, ஒரு குடும்பமாக, ஒரு சமூகமாக எதையெல்லாம் உதறிவிட்டு மேலெழுந்து வர வேண்டுமோ , அதையெல்லாம் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. மக்களை தொடர்ந்து அறியாமையில் வைத்திருக்கவே சின்னத்திரைகள் உதவுகின்றன.

சினிமாவில் பெண்கள், சித்தரிக்கப்படும் விதத்தில் இன்றும் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழவில்லை. தமிழ் சினிமா, திரையில் காட்டும் எந்தப்பெண்ணும் நிஜத்தில் அப்படி இருக்கமாட்டார். நிஜத்தில் இருக்கும் பெண்ணையும் சித்தரிப்பதில்லை, பெண் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியும் சித்தரிப்பதில்லை. ஆண்களின் கதாப்பாத்திரங்களுக்கு அழகு சேர்க்கவும், ஆண்களின் வீர தீரங்களை வெளிப்படுத்தவும், ஆண்களை சார்ந்து இருக்கும் வகையிலேயே பெண்களின் கதாப்பாத்திரங்கள் மரியாதைக் குறைவாகவே வடிவமைக்கப்படுகின்றன. பெண்களை சுயமரியாதையோடு சித்தரித்த திரைப்படங்கள் ( 'அவள் அப்படித்தான் ' போல ) மிகவும் குறைவு. அதிலும் சமீப காலங்களில் மனித சமத்துவத்திற்கு எதிரான மதம் சார்ந்த விசயங்கள் இரண்டு திரைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கப்படுகின்றன. இதே போல நிஜமான சிறுவர்களின் உலகம் திரையில் வெளிப்படுத்தப்படுவதேயில்லை. சமீப காலங்களில் இரண்டு திரைகளிலும் சிறுவர்களை, குழந்தைகளை காட்டுவதையே மிகவும் குறைத்துவிட்டார்கள். இவர்களெல்லாம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இல்லாத உலகத்தில் வாழ்வார்கள் போல.

எல்லாவிதமான ஊடகங்களும் மக்களுக்கு துணையாக இருப்பதற்கு பதிலாக , மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. பாலியல் சிக்கல்கள் குறித்து பெரிய அளவிலான விழிப்புணர்வை ஊடகங்களால் மக்களுக்கு ஏற்படுத்த முடியும். ஆனால் செய்யமாட்டார்கள். மக்களின் நலனிற்கு எதிராக செயல்படும் அரசுகளை மட்டுமல்லாமல் ஊடகங்களையும் சேர்த்தே எதிர்க்க வேண்டிய தேவை மக்களுக்கு உருவாகியிருக்கிறது. அரசுகள், ஊடகங்கள் இவற்றுக்கு பின் இருப்பது கார்பரேட்கள். கார்பரேட் துணையில்லாமல் அரசோ, ஊடகமோ செயல்பட முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். மக்களை தொடர்ச்சியான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பது தான் கார்பரேட் வணிகம். இதற்கு அரசுகளும், ஊடகங்களும் துணை போகின்றன.

பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளை, குற்றங்களை அரசாலும், ஊடகங்களாலும் தடுக்க இயலும். ஆனால் தடுப்பதற்கு பதிலாக மேலும் பிரச்சனைகளையே அரசும், ஊடகங்களும் உருவாக்குகின்றன. எந்தப் பிரச்சனையையும் அந்தப் பிரச்சனையாகவே சுருக்கி கடந்து போய்விடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட பிரச்சனை குறித்து தீர ஆராய்வதேயில்லை. அதே குற்றம் மீண்டும் நிகழாதவாறு தடுக்கும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது, ஊடகங்களுக்கும் இருக்கிறது.ஆனால் எளிதாக பொறுப்பைத் தட்டிக் கழித்து அடுத்த பிரச்சனையைத் தேடிப் போய்விடுகிறார்கள். மக்கள், தொடர்ந்து சுயசிந்தனை இல்லாதவர்களாக இருக்கவே அரசும், ஊடகங்களும் விரும்புகின்றன. அப்போது தான் கார்பரேட் அங்கே கால் பதிக்க முடியும். இன்றைய சூழலில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும் கார்பரேட்டின் பங்கு இருக்கிறது.
அதீத கார்பரேட் வணிகத்தில் அறம் என்ற வார்த்தைக்கு துளி கூட இடமில்லை. இனி வரும் காலம் என்பது கார்பரேட்களை எதிர்ப்பதில் தான் கழியப் போகிறது.

நாம் சந்திக்கும் அனைத்துவிதமான சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் இயற்கையிடம் மட்டுமே உள்ளன. கார்பரேட்களையும் இயற்கையின் துணை கொண்டு தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது. கார்பரேட்களுக்கு எதிரான வலிமையான ஆயுதம், இயற்கை. பாலியல் சார்ந்த சிக்கல்களுக்கும் இயற்கையே தான் தீர்வு. மற்ற விலங்கினங்களில் பாலியல் சார்ந்த சிக்கல்களும், பாலியல் சார்ந்த வன்முறைகளும் மிகவும் குறைவு அல்லது சுத்தமாக இல்லை என்றே கூறலாம். உலகிற்கே தான் ராஜா என நினைத்துக் கொண்டிருக்கும் மனித இனம் தான் பாலியல் சார்ந்த வன்முறைகளில் அதிகம் ஈடுபடுகிறது.

குழந்தைகளையும், சிறுவர்களையும் பாலியல் சார்ந்த அத்துமீறல்களில் இருந்து காப்பாற்றுவது தான் சமூகத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும். எந்தவித பாலியல் நோக்கமும் இல்லாமல் குழந்தைகளை குழந்தைகளாகவும், சிறுவர்களை சிறுவர்களாகவும் பார்க்கும் மனநிலை எல்லா மட்டத்திலும் உருவாவது அவசியமாகிறது. பெரும்பாலான குற்றங்களுக்கும் , பாலியல் குற்றங்களுக்கும் போதை தான் முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட மனிதரோ/ மனிதர்களோ போதையில் இல்லாமல் இருந்திருந்தால் அந்த குற்றம் அங்கே நிகழ்ந்திருக்காது. குற்றங்களை தடுக்க வேண்டுமானால் இந்த பார்வையும் முக்கியம்.

பிடித்த மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பது இன்றும் எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றாக இல்லை. புரிதல் இல்லாத உறவில் தொடர்வது கொடுமையானது. இந்த சூழலில் பிரிவதும் எளிதாக இல்லை, மறுதுணையை தேர்வு செய்வதும் எளிதாக இல்லை. அதிலும் பெண்கள் கல்யாணம் செய்வதற்காக மட்டுமே பிறந்தவர்கள் என்று இந்திய நாட்டின் பிரதமரே நினைக்கும் அளவிற்கு தான் இந்திய மனநிலை இருக்கிறது. இதில் மறுதுணை என்பது பெண்களுக்கு எளிதான ஒன்றாக இல்லை. முதல் திருமணத்தில் கிடைத்த கசப்பான விசயங்களால் பெண்கள் ,மறுமணம் குறித்து சிந்திப்பதும் குறைந்து வருகிறது. குழந்தைகள் இருந்தாலும் தனியாக வளர்த்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்.

கள்ளக்காதல் என சமூகம் வரையறுக்கும், சமூகத்தின் வரம்பு மீறிய காதல் என்பது காலங்காலமாக இருந்து வந்தாலும் அந்த காதலால் நிகழும் கொலைகள் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் கள்ளக்காதல் கொலைகள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. எந்த ஒன்றுக்கும் வன்முறை தீர்வு ஆகாது. இந்த கொலைகளால் அவர்களின் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோரில் ஒருவர் கொல்லப்படுவதும், மற்றொருவர் ஜெயிலில் இருப்பதும் எந்த அளவிற்கு அந்த குழந்தையின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதையும் சமூகம் உணர வேண்டும்.

தமிழகம் இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பதற்கு கல்வியில் அடைந்த முன்னேற்றமே முக்கிய காரணம். பகுத்தறிவு மண் என்று சொல்லிக்கொள்ளும் இதே தமிழகம் பாலியல் சார்ந்த விசயங்களை பகுத்தறிவுடன் ஆராய்வதில்லை. பாலியல் கல்வி தான் இன்றைய முதன்மையான தேவையாக இருக்கிறது. எங்கோ ஒரு மூளையில் யாரோ ஒருவர் பாலியல் சிக்கல்கள் பற்றி எழுதுவதாலோ, பேசுவதலோ ஒன்றும் நிகழ்ந்துவிடாது. முறையான பாலியல் கல்வியின் மூலமே சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும். பாலியல் சிக்கல்களை குறைப்பதற்கான முதல் ஆயுதம் பாலியல் கல்வி தான்.

சமூகத்தின் கருத்துப்படியே பார்த்தாலும் பாலியல் வறட்சியே இல்லாமல் செய்துவிட்டால் பாலியல் சிக்கல்கள் தீர்ந்துவிடும் தானே. இந்தியாவில் 'செக்ஸ் டாய்ஸ்' களுக்கு தடை இருப்பதாக சொல்கிறார்கள். இந்த தடையே நீக்கி விட்டாலே பாலியல் வறட்சி காணாமல் போய்விடும் தானே. இன்னொரு மனிதரை பாதிக்காத எதுவும் தவறில்லை . பல நாடுகள் 'செக்ஸ் டாய்ஸ்' குறித்தான விரிவான ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றன. எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செக்ஸ் டாய் இருக்கும் சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இருப்பது ஒரு வாழ்க்கை தானே வாழுங்கள். இதிலென்ன இருக்கு பேசுங்கள் !

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :










Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms