Wednesday, December 22, 2021

Sex Education - Netflix Series !


இந்தியப் பொதுவெளியில் ' செக்ஸ் ' என்ற வார்த்தையே ஒருவித ஒவ்வாமையுடனும், அருவருப்புடனும்தான் பார்க்கப்படுகிறது. மாறாக தனிவெளியில் கிளுகிளுப்பு நிறைந்ததாக அணுகப்படுகிறது. செக்ஸ் என்பது இயல்பான ஒன்று என்பதை இந்திய சமூகம் ஏற்பதில்லை. மதங்களின் மூலமாக மிகவும் பிற்போக்கான, இயற்கைக்கு எதிரான விசயங்கள் மக்களிடம் பரப்பப்பட்டிருக்கின்றன. 

இங்கே எந்த வயதிலும் செக்ஸ் பற்றி பேசுவது தவறாகவே பார்க்கப்படுகிறது. செக்ஸ் எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும் பதின்பருவம் மிகவும் முக்கியமானது. உடல் குறித்தான நிறைய சந்தேகங்களும் ,குழப்பங்களும் எழும் பருவம். இந்தியச் சூழலில் பதின்பருவத்தினரின் பாலியல் குறித்தான சந்தேகங்களும், குழப்பங்களும் தீர்க்கப்படுவதேயில்லை. இதனால் வளர்ந்த பிறகும் , மணமான பிறகும் கூட பாலியல் சிக்கல்கள் தொடர்கின்றன. பாலியலையும் வயதையும் சேர்த்து குழப்பிக் கொள்வது இங்கே தொடர்ந்து நிகழ்கிறது. ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறனவர்கள் என்பது போல அவர்களின் பாலியல் விருப்பமும் வெவ்வேறானவை.

அனைத்து வயதினருக்குமான ஆண் மற்றும் பெண் குறித்தான பாலியல் சிக்கல்களே இன்னும் இங்கே பேசப்படவில்லை. இந்தச் சூழலில்தான் ஆண்,பெண் மட்டுமல்ல LGBTQ+ பிரிவினரையும் அவர்களின் பாலியல் சிக்கல்களையும் சேர்த்தே இந்த 'SEX EDUCATION ' தொடர் பேசுகிறது. Netflix-ல் வெளியாகி மூன்று சீசன்களைக் கடந்திருக்கிறது இந்தத் தொடர். ஓட்டிஸ் மற்றும் மேவ் ஆகியோருக்கு இடையிலான காதல் கதைதான் பிரதானமானது என்றாலும் கூட அனைத்து வயதினருக்குமான பாலியல் சிக்கல்களை உள்ளடக்கிய நிறைய கிளைக்கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன. 

வயதுவந்த அனைவரும் வாய்ப்பிருந்தால் பாருங்கள். நமது சூழலில் இவ்வாறான தொடர் எடுப்பதற்கான தேவை இருக்கிறது. பாலியல் என்பதை அறிவியல்படி அணுகும் மனநிலை என்பது இங்கே குறைவாகவே இருக்கிறது அல்லது சுத்தமாக இல்லை. பெண்ணுடலை காமத்திற்கான வடிகாலாக சித்தரிப்பதுதான் இங்கே தொடர்ந்து நிகழ்கிறது. இந்த மாதிரியான சித்தரிப்புகளால் இந்தியப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மிக அதிகம். பெண்களை காட்சிப்படுத்துவதில் இந்திய இயக்குநர்களுக்கு இன்னுமும் பொறுப்புணர்ச்சி வரவில்லை. 

எப்படி பார்த்தாலும் பாலியல் சிக்கல்களைத் தீர்ப்பதில் நாம் கடக்க வேண்டிய தூரம் என்பது மிகவும் அதிகம் என்றாலும் முதல் அடியை இப்போதாவது எடுத்து வைக்க வேண்டும்!

மேலும் படிக்க :

சர்தார் உத்தம் - உலகத்தரம்!



Tuesday, November 23, 2021

சர்தார் உத்தம் (Sardar Udham)- உலகத்தரம் !

 


உலகத்தரம் வாய்ந்த உருவாக்கம். இந்திய அளவில் ஒரு பீரியட் திரைப்படம் (Period Movie ) இவ்வளவு கச்சிதமாக, பிசிறில்லாமல் படமாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் கலை இயக்குநரே கண்முன் தெரிந்தார். அந்த அளவிற்கு கடந்த காலத்தை அப்படியே காட்ட உழைத்திருக்கிறார்கள். மன்ஷி மேத்தா ( Mansi Mehta ) என்ற இந்திய கலை இயக்குநரும், டிமிட்ரி மாலிஷ் ( Dmitriy Malich ) என்ற சர்வதேச கலை இயக்குநரும் சேர்ந்து இத்திரைப்படத்திற்கு கலைவடிவம் கொடுத்திருக்கிறார்கள். இருவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள். 

திரைப்படம் பார்த்த பிறகு இயக்குநர் யார் என்று தேடிய போது சூஜித் சிர்கார் ( Shoojit Sircar ) என்ற இந்திய இயக்குநர் என தெரிய வந்த போது ஆச்சரியமாக இருந்தது. இந்த திரைப்படத்தை 1990 லே படமாக்க நினைத்திருக்கிறார், சூஜித். அடுத்த தலைமுறைக்கு உத்தம் சிங்கின் வரலாற்றை முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இருபது ஆண்டுகள் அவரைப் பற்றி ஆய்வு (இடையில் வேறு படங்கள் இயக்கினாலும் ) செய்து , திரைப்படமாக இப்போது வெளியிட்டு இருக்கிறார். அவரின் இருபது வருட உழைப்பு வீண் போகவில்லை. தவறு நேர்ந்துவிடாதவாறு மிகக் கவனமாக ஒவ்வொரு காட்சியும் படமாக்கி இருக்கிறார், இயக்குநர் . சூஜித் இயக்கும் முதல் பீரியட் திரைப்படம் என்பதால் நிறைய வெளிநாட்டு திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் பார்த்து அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். 

முதலில் இர்பான் கான் நடிப்பதாக இருந்திருக்கிறது. உடல்நல பிரச்சனை காரணமாக அவர் விலக வேண்டி வந்ததால் விக்கி கௌஷல் உத்தம் சிங்காக மாறியிருக்கிறார். நான் லினியர் ( Non linear ) பாணி கதை சொல்லும் முறை திரைப்படத்திற்கு கூடுதல் சுவாரசியத்தைத் தருகிறது. தமிழில் தற்போது வெளிவந்து கவனம் பெற்றிருக்கும் ' ஜெய்பீம் ' திரைப்படமும் Non linear பாணியில் அமைந்ததுதான். நமக்கெல்லாம் பகத்சிங் பற்றி தெரிந்த அளவிற்கு அவரது நண்பரான உத்தம் சிங் பற்றி தெரிந்திருக்கவில்லை. இத்திரைப்படம் உத்தம் சிங்கை நமக்கு தெரிய வைத்திருக்கிறது. அந்த அளவில் இயக்குநரின் எண்ணம் நிறைவேறியிருக்கிறது. 

கலை என்ன செய்யும்? கலை என்ன வேண்டுமானாலும் செய்யும்.இத்திரைப்படத்தின் மூலமாக ஒரு போராளியை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது.1000 பேர்களுக்கும் மேல் கொன்று குவிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919 ஏப்ரல் 13) என்பது வரலாற்றுத் துயரம். இந்நிகழ்வை இரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்வே உத்தம் சிங் எனும் போராளி உருவாகக் காரணம். இந்நிகழ்வு நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகே அதாவது 2019ல்தான் பிரிட்டன் அரசு இந்த நிகழ்விற்கு மன்னிப்பு கோரியிருக்கிறது. 

பழிக்குப்பழி என்பது எதற்குமே தீர்வாகாது என்றாலும் கூட இப்படியான கொடூரமான நிகழ்வை நடத்தி காட்டியவருக்கு அரசு எந்தவித தண்டனையும் அளிக்காத போது மக்களின் சார்பாக, உத்தம் சிங் மூலமாக அளிக்கப்பட்ட தண்டனைதான் ஜெனரல் ஓ டயரின் மரணம். திரைப்பட விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். உலகத்தரத்தில் ஒரு இந்திய சினிமா !

மேலும் படிக்க:

ஜெய்பீம் - அறத்தின் குரல் !


ஜெய்பீம் -அறத்தின் குரல் !



ஜெய்பீம் அறம் என்ற நெருப்பை பற்ற வைத்திருக்கிறது. அந்த நெருப்பு, பற்றி எரிவதும் புகைந்து போவதும் நம் கைகளில் தான் இருக்கிறது. சமீப காலங்களில் மற்ற மொழி திரைப்படங்களையே அதிகம் கொண்டாடி இருக்கிறோம். தமிழ் திரைப்படங்கள் இன்றும் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. மிகவும் பிற்போக்கான விசயங்களையே தொடர்ந்து முன்னிலைப்படுத்துகின்றன. நாயகத்துதிபாடல் இன்னமும் ஒழிந்தபாடில்லை. யதார்த்தமின்மையும், லாஜிக் மீறல்களும் அதிகம் உள்ளதாகவே தமிழ்திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இப்படியான சூழலில்தான் ஜெய்பீம் ஒரு முழுமையான படைப்பாக வெளியாகியிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் 'ஜெய்பீம் ' திரைப்படத்தை கொண்டாடுவது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உண்மை, நீதி ,நியாயம், நேர்மை போன்றவற்றின் மீதான நம்பிக்கையை 90களுக்கு பிறகு உலகவணியமயமாக்கலால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். ' சுயநலம் ' என்ற ஒன்றை மட்டுமே உலகவணியமயமாக்கல் நமக்குப் போதிக்கிறது. இன்று, இவற்றையெல்லாம் முன்நிறுத்தி பேசுபவர்களை பைத்தியக்காரர்கள் என்றே மக்கள் நினைக்கவைக்கப்படுகிறார்கள். இதனாலேயே கம்யூனிஸ்ட்கள் என்றால் கார்பரேட்கள் அஞ்சுகிறார்கள். பொதுமக்கள் மத்தியிலும் கம்யூனிசம் மற்றும் கம்யூனிஸ்ட்கள் பற்றிய ஒவ்வாமை இருக்கிறது. நேரடியாக பயனடைந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகள் சென்று சேராதவாறு மறைக்கப்படுகின்றன. இதனாலேயே நாம் ஜெய்பீம் திரைப்படத்தை வெகுவாக கொண்டாடவேண்டியுள்ளது.

" நீங்க பேசறதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிபட்டு வரும். நடைமுறைக்கு சரிப்பட்டு வராது " என்றே அறத்தின் பக்கம் நின்று பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். எல்லா இடங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்க வேண்டும் என்றே வலதுசாரி மனம் விரும்புகிறது. அதனாலேயே இப்போது இருப்பது அப்படியே தொடர வேண்டும் என்று விரும்புகிறது. இதனாலேயே சமத்துவம் பேசுபவர்களைக் கண்டால் இவர்களுக்கு பிடிப்பதில்லை. இப்படி பெரும்பான்மை மக்களால் ஒதுக்கப்படுவர்களுக்கு இத்திரைப்படம் பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

அழுவாச்சி திரைப்படமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் நேர்த்தியான திரைக்கதையால் ஒரு சுவாரசியமான அதே நேரம் மிக அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கிறது. நிறைய மக்களின் ஏன் ஆளும் கட்சியின் மனசாட்சியையும் சேர்த்தே இத்திரைப்படம் உலுக்கியிருக்கிறது. கொஞ்சமேனும் மனதில் ஈரமுள்ள எவராலும் உடனே கடந்த போக முடியாத படைப்பு இது.

மக்களின் ரசனைக்கு மதிப்பு கொடுத்து ஒவ்வொரு காட்சியும் மிக கவனமாக உருவாக்கியிருக்கிறார்கள். பொதுவாக பெரும்பாலான தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள், மக்களின் உணர்வுகளுக்கோ, ரசனைகளுக்கோ எப்போதும் மதிப்பளிப்பதில்லை. " நாம எதைப் படம் பிடித்து போட்டாலும் பார்ப்பாங்க.." என்றே நினைக்கிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு உரிய மரியாதை கொடுத்து இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. சூர்யாவிற்கென்று , கதாநாயகிக்கென்று ஒருசில காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இது இயக்குநரின் திரைப்படமாகவே இருக்கிறது.

பெரும்பாலான யூடியூப் சேனல்கள் மிக அதிகளவில் இத்திரைப்படத்தை பற்றி பேசுவதின் மூலம் இத்திரைப்படம் சொல்ல வரும் அரசியலை திசைமாற்றப் பார்க்கின்றன. தோழர் ரபீக் ராஜா சொல்வது போல இத்திரைப்படம் ராசகண்ணு வழக்கு மூலம் சொல்ல வருவது 'அதிகார எதிர்ப்பு '. ஆனால் பேசு பொருளாக சூர்யா மட்டுமே இருக்கிறார். இப்படியான ஒரு படைப்பை உருவாக்க உதவியதற்கு சூர்யாவை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஆனால் பேசு பொருளாக அதிகார எதிர்ப்பே இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமலேயே போகிறது. எல்லா வழக்குகளுக்கும் சந்துருவும் , பெருமாள்சாமியும் கிடைத்துவிட மாட்டார்கள். சமத்துவத்திற்கு எதிரானது 'அதிகாரம் '. மக்கள் மீது செலுத்தப்படும் அனைத்துவிதமான அதிகாரங்களும் முடிவிற்கு வர வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களால் மட்டுமே இந்தபூமி சுழலவில்லை. உழைக்கும் மக்களாலேயே இந்த பூமி சுழலுகிறது.

இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் விவரிக்கப்படும் விதம் அவ்வளவு அழகு. ஏகப்பட்ட குறியுடுகள் திரைப்படம் முழுக்க இருக்கின்றன. அசலான மனிதர்கள், அசலான பேச்சு வழக்கு, அசலான வாழ்க்கை என அப்படியை பதிவாகியிருக்கிறது. மற்ற திரைப்படங்களைப் போல பின்னணி இசை எந்த இடத்திலும் உறுத்தவில்லை. அதே போல பாடல்களும் திரைப்படத்திலிருந்து விலகிச் செல்லவில்லை. தேர்ந்த அரசியலறிவும் ,சினிமா பற்றிய சரியான புரிதலும் உள்ள ஒருவராலேயே இப்படியான ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் இயக்குநர் ஞானவேல்❤ கொண்டாடப்பட வேண்டியவர். அறத்தின் பக்கம் நின்று அறத்தின் குரலை மிக வலுவாக கொண்டு சேர்த்திருக்கிறார். நிச்சயம் நல்ல மாற்றங்கள் நிகழும் என நம்புவோம்.

"ஜெய்பீம் என்றால் ஒளி...
ஜெய்பீம் என்றால் அன்பு...
ஜெய்பீம் என்றால் இருளிலிருந்து
வெளிச்சத்தை நோக்கிய பயணம்...
ஜெய்பீம் என்றால் பலகோடி
மக்களின் கண்ணீர்த்துளி...
"
என்ற மராத்திய கவிதையை திரைப்படத்தின் இறுதியில் காட்டுவதன் மூலம் எதற்காக இத்திரைப்படத்திற்கு ' ஜெய்பீம் ' என பெயரிடப்பட்டது என்பதை சொல்லாமல் சொல்கிறார், இயக்குநர். மிகப்பொருத்தமான தலைப்பு. இந்தத் திரைப்படத்திற்கும் இந்தக் கவிதைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

ஜெய்பீம் பற்ற வைத்திருக்கும் இந்த அறம் என்ற நெருப்பை அணையாமல் காப்பது நம் கடமையாகும் !

மேலும் படிக்க :

Thursday, March 4, 2021

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

 


தமிழ்த் திரையுலக வரலாற்றை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. அப்படிப்பட்ட கலைவாணரின் வரலாற்றை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் கால இயந்திரத்தில் பயணம் செய்து நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார், அறந்தை நாராயணன். போகிற போக்கில் துதிபாடும் மனநிலையில் எழுதாமல் ஆய்வுப்பூர்வமாக தமிழக அரசியல்,கலை வரலாற்றுடன் சேர்த்தே கலைவாணரையும் எழுதி இருக்கிறார். தரவுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


'நகைச்சுவை அரசு' , 'தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் ', 'கலைவாணர் ' என பல பட்டங்கள் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நூலாசிரியர் ஏன் 'நாகரீகக் கோமாளி ' எனும் பட்டத்தை நூலின் தலைப்பாக தேர்ந்தெடுத்தார் ? என்ற கேள்விக்கான பதில் நூலாசிரியரின் ' என்னுரை' யில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கலைவாணர் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பட்டப்பெயர் ' நாகரீகக் கோமாளி ' என்பதாகும். அதனால் அதையே இப்புத்தகத்தின் தலைப்பாக வைத்ததாக அறந்தை நாராயணன் கூறியிருக்கிறார். 

குடும்பச் சூழல் காரணமாக சிறு வயதிலேயே நாடகத் துறைக்கு வந்து தங்களின் திறமைகளை மெருகேற்றி சினிமாவிலும் வெற்றி பெற்ற வரலாறு உலகெங்கிலுமே பலருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட வரலாறு தான் கலைவாணருடையதும். நாடக நடிகர்களும், நாடக கம்பெனிகளும் தொடர்ந்து செல்வாக்காக எந்தக்காலத்திலும் இருந்ததில்லை என்பதையே தமிழக நாடக வரலாறு வெளிப்படுத்துகிறது.சினிமாவின் வரவு நாடக நடிகர்களுக்கு புது வாழ்வை அளித்ததையும் காண முடிகிறது. ஆனால் மக்கள், நாடகங்களையும் கொண்டாடியிருக்கிறார்கள், சினிமாவையும் கொண்டாடியிருக்கிறார்கள். 

சினிமாவின் ஆரம்ப காலங்களில் மற்றவர்கள் உருவாக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர், பின்னாட்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அவரது காட்சிகளை அவரே உருவாக்கி நடிக்க ஆரம்பித்தார். உடுமலை நாராயணகவி போன்றவர்களுடன் சேர்ந்து இவர் பாட வேண்டிய பாடல்களையும் உருவாக்கினார். கலைவாணர்-மதுரம் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாகவே திரைவாழ்வின் கடைசி வரை இருந்திருக்கிறது. நிஜ வாழ்விலும் மதுரம் , கலைவாணரின் வாழ்வில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். லட்சுமிகாந்தன் கொலைவழக்கு காலங்களில் கலைவாணரை வெளியே கொண்டு வர படாதபாடு பட்டிருக்கிறார். பெரும் வள்ளலாக இருந்த போதிலும் கலைவாணர் சிறையில் இருந்த காலங்களில் வழக்குச் செலவிற்காக அலைந்து திரிந்தும் மதுரத்திற்கு போதிய பண உதவி கிடைக்கவில்லை. இது குறித்து வருத்தம் உண்டானாலும் கடைசி வரை தனது வள்ளல் குணத்தை கலைவாணர் மாற்றிக் கொள்ளவேயில்லை.

மற்ற துறைகளைப் போல நாடகத் துறையிலும் தீண்டாமை இருந்திருக்கிறது. பிராமண நடிகர்களுக்கு தனிச்சாப்பாடும், மற்றவர்களுக்கு தனிச்சாப்பாடும் என்றிருந்த முறையை 1934ல் தனது மதிநுட்பத்தால் மாற்றிக் காட்டியிருக்கிறார், கலைவாணர். மற்ற இடங்களில் எப்படியோ அவர் இருக்கும் இடங்களில் பாரபட்சம் இல்லாமல் இருப்பதேயே விரும்பியிருக்கிறார். கலைவாணர் நடத்திய நிகழ்வுகளில் பெரிய தலைவர்கள் பங்கெடுத்தாலும் சாப்பாடு என்பது ஒரே மாதிரியாகத்தான் போடப்பட்டுள்ளது. 

சமூக சீர்திருத்தக் கருத்துகளை ஆரம்ப கட்டங்களிலேயே தனது நடிப்பில் சேர்க்க ஆரம்பித்து விட்டார், கலைவாணர். இயக்குநர் யாராக இருந்தாலும் இவரது காட்சிகளை இவரே உருவாக்கிக் கொண்டதால் ஒரு தொடர்ச்சியை இவரது படங்களில் காண முடிகிறது. திரைப்படம், பக்திப்படமாக இருந்தாலும் அந்த பக்திக்குள் இருக்கும் மூடத்தனங்களை பகடி செய்வதாக கலைவாணரின் பாத்திர அமைப்பு இருக்கும். தமிழக நகைச்சுவை நடிகர்களுக்கு ஆரம்ப காலம் முதலே ஒரு மதிப்பும், மரியாதையும் உண்டாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே முதல் காரணம். அதே போல தமிழ் திரைப்பட வரலாற்றில் நகைச்சுவை, வெறும் நகைச்சுவையாக கடந்து போய்விடாமல் சமூகசீர்திருத்த கருத்துகள் இன்று வரை நகைச்சுவை காட்சிகளில் இடம்பெறுவதற்கும் கலைவாணரே முன்னோடி. 

கலைவாணர் தனது வாழ்நாளில் பலரை நல்வழிபடுத்தியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும் இருமுறை அறிவுரை கூறியிருப்பது நமக்குத் தெரிய வருகிறது. அதில் ஒன்று, 1938ஆம் ஆண்டு படபிடிப்பிற்காக கல்கத்தா சென்றிருந்த போது ஒரு வாய்க்காலைத் தாண்டும் போது எம்.ஜி.ஆரின் செருப்பு ஒன்றின் வார் அறுந்துவிடுகிறது. அறுந்த செருப்பையும், மற்றொரு செருப்பையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுகிறார். மறுநாள், கலைவாணரிடம் வந்து " வாங்க, செருப்பு வாங்க போகலாம் " என்று எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார். " நாளைக்கு போகலாம் " என்று பதிலளிக்கிறார், கலைவாணர். மறுநாள் வந்த எம்.ஜி.ஆர்., " கடைக்கு போலாம்", என்று கலைவாணரைக் கூப்பிடுகிறார். 

" போகலாமா ? பணம் எடுத்துண்டையா ? இரு ! சட்டையை மாட்டிக்கிட்டு வர்றேன் !" என்று கூறிய , கிருஷ்ணன் உள்ளே போய், "ராமச்சந்திரா! " என்று குரல் கொடுக்கிறார்.

ராமச்சந்திரன் உள்ளே போகிறார்.

"அந்த நாற்காலியில் உட்கார்!" என்று கூறிய கிருஷ்ணன், கீழே கிடந்த ஒரு பொட்டலத்தைக் காட்டி , " இந்தச் செருப்பு உன் காலுக்குச் சரியா இருக்கா, பாரு!" என்கிறார் 

பொட்டலத்தைப் பிரித்ததும் எம்.ஜி.ராமச்சந்திரன் திகைத்தார். முதல் நாள் அவர் விசிறி எறிந்த அதே செருப்புக்கள் புதுப்பிக்கப்பட்டு , மெருகிடப்பட்டிருந்தன. ஏதோ பேச முயன்றார் எம்.ஜி.ராமச்சந்திரன். முந்திக் கொண்டார் கிருஷ்ணன்:

" உன்னுடைய பழைய செருப்புத்தான். நீ வீசி எறிந்துவிட்டுப் போனதை பின்னால் வந்து கொண்டிருந்த நான் பார்த்தேன். அப்பவே பத்திரமா எடுத்து வந்துவிட்டேன். ஆணி அடித்து, தைத்து சரி பண்ணிட்டேன் இப்போ இதுக்கு என்ன குறை ? இன்னும் ஆறுமாசம் வரும். உன்னையும் உன் அண்ணனையும் பிரிந்து அறியாத உங்கம்மா , நீங்க கல்கத்தா வருவதற்கு ஒத்துக் கொண்டது ஏன் ? நீங்க சினிமாவிலே நடிச்சு முன்னேறுவீங்க. நல்லா சம்பாதிப்பீங்க, பணம் அனுப்புவீங்கனு எதிர்பார்த்துத் தானே ? செருப்புதாதானே ? பழசென்ன, புதிசென்ன ? முடிஞ்சவரை எதையும் முழுசா பயன்படுத்திப் பழகணும் " என்றார். 

இது ஏற்கனவே பலருக்கும் தெரிந்த செய்தி தான் என்றாலும் மீண்டும் குறிப்பிடக் காரணம், " பழசென்ன , புதிசென்ன? முடிஞ்சவரை எதையும் முழுசா பயன்படுத்திப் பழகணும் " என்ற கலைவாணரின் வார்த்தைகள் தான். உலகமயமாக்கல் விரிவடைய , விரிவடைய 'எதையும் முழுதாகப் பயன்படுத்த வேண்டும்' என்ற மனநிலை நம்மிடையே மறைந்து வருகிறது. தேவையில்லாமல், தேவையில்லாத பொருட்களை வாங்கி குவித்துக்கொண்டே இருக்கிறோம். இந்த மனநிலை மாற வேண்டும். முடிந்தவரை எதையும் முழுதாக பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். 

கலைவாணரின் அசோகா பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வருமானவரி செலுத்த அவரின் உதவியாளர், திருவேங்கடம் கணக்குகளை எடுத்துக் கொண்டு கோவையில் உள்ள வருமானவரி அலுவலகத்திற்குச் சென்றார். ஹனுமந்தராவ் என்பவர் அதிகாரியாக இருந்தார். கணக்கைப் பார்த்தார் ஹனுமந்தராவ். 

" தர்மம், தர்மம் என்று தான் கணக்கில் பெரும்பகுதி காணப்படுகிறது !இதெல்லாம் உண்மையா? உண்மையாக இருந்தாலும் வரி விலக்கு எப்படிக் கொடுக்க முடியும் ? " என்று கேட்கிறார், ஹனுமந்தராவ். 

உதவியாளர், திருவேங்கடம், " நீங்கள் வேணும்னா , ஆபீஸர் என்பதை மறந்து சென்டிரல் ஸ்டுடியோவுக்கு ஒரு சாதாரண மனிதர் போலப் போங்க ! என் மகளுக்குக் கல்யாணம், வரதட்சிணையின் காரணமாக நிற்கிறது என்று என்.எஸ்.கிருஷ்ணனிடம் சொல்லிப் பாருங்க! அவர் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு வந்து இந்தக் கணக்குகளைச் சரி பாருங்க !" என்றார்.

திருவேங்கடம் ஒரு பேச்சுக்குத்தான் அப்படிச் சொன்னார். ஆனால், ஹனுமந்தராவ், உடனேயே சென்ட்ரல் ஸ்டுடியோவிற்கு சென்று என்.எஸ்.கிருஷ்ணனிடம் ,

" ஒரு பெண்ணைப் பெத்தவன் நான். ஆயிரம் ரூபாய் இல்லாததால் பெண்ணின் கல்யாணம் தடைபடும் போலிருக்கிறது " என்றார், ஹனுமந்தராவ்.

" ஆயிரம் ரூபாய்க்காக நல்ல காரியம் நிற்க வேண்டாம்.தயவு செய்து கொஞ்ச நேரம் இருங்கள். என்னுடைய ஆள் இன்கம்டாக்ஸ் ஆபிசுக்குப் போயிருக்கிறார். வந்தவுடன் நீங்கள் கேட்ட தொகையுடன், உங்களை எனது காரிலேயே அனுப்பி வைக்கிறேன்" என்றார் கிருஷ்ணன். 

அசந்து போனார், இன்கம்டாக்ஸ் ஆபீசர் ஹனுமந்தராவ். " உனக்கு கர்ணன் என்ற பெயரை வைத்திருக்கணும் .தவறாக, உன் அப்பா உனக்கு கிருஷ்ணன்னு பேர் வச்சிட்டார் ! அப்பா கிருஷ்ணா! நான் தான் இன்கம்டாக்ஸ் ஆபீசர்! உன்னுடைய ஆள் என்னிடம் வந்து உனது தர்ம குணத்தைக் கூறினார். நம்பாமல் நானே வந்தேன். இனி, நான் இருக்கும் வரை உனது தர்மச் செலவுத் தொகைக்கு வரி விலக்குத் தருகிறேன். ஆனால், நீ கொடுக்கும் தொகைக்கு வவுச்சர் மட்டும் வாங்கி வைத்துக் கொள் ! " என்று கூறிவிட்டு, ஹனுமந்தராவ் புறப்பட்டார்.

கலைவாணரின் வள்ளல் குணத்திற்கு இந்தச் சம்பவம் உதாரணமாகச் சொல்லப்படுகிறது.யாரென்றே தெரியாதவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தன் வாழ்நாள் முழுவதும் வாரி வாரி வழங்கியிருக்கிறார்.பல்வேறு அமைப்புகளுக்கு, தனிநபர்களுக்கு நிதியுதவி நாடகங்களை தொடர்ந்து நடத்திக் கொடுத்திருக்கிறார். வள்ளல்களாக நிறைய பேர் வாழ்ந்து மறைந்திருக்கலாம். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் போல நிபந்தனையற்ற வள்ளலாக இருந்திருப்பார்களா ? என்பது சந்தேகமே. 

"நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம்." என்று எம்.ஜி.ஆர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். பார்ப்பன எதிர்ப்பை தனது திரைப்படங்களில் வலுவாகவே பதிவு செய்திருந்தாலும் எந்தக் கட்சியையும் சாராதவராகவே கடைசி வரை வாழ்ந்திருக்கிறார். முதன் முதலாக நடிகர்களுக்கென சங்கம் தொடங்கியவர். நடிகர்கள், கூத்தாடிகள் என அழைக்கப்பட்டதை மாற்றி கலைஞர்கள் என அழைக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார்.
இயக்குநர்கள் கையில் இருந்த தமிழ் சினிமா, கதாநாயகர்கள் கைக்கு மாறுவதை கண்டு வறுத்தம் அடைந்திருக்கிறார். 

1948 ஜனவரி 21ம் தேதி கம்யூனிச தலைவர் ப.ஜீவானந்தத்திற்கும், பத்மாவதிக்கும் காதல் திருமணம் எளிய முறையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ,சொந்தக்காரர்களுக்கும்,நண்பர்களுக்கும் தெரிவிக்காமல் எளிதாக நடைபெற்ற செய்தி இரண்டு நாளுக்கு பிறகே கலைவாணருக்கு தெரிய வந்தது. " நாடறிந்த தலைவருக்கு , அதுவும் என் நாஞ்சில் நாட்டுத் தலைவருக்கு ரகசியக் கல்யாணமா ? இதை நான் அனுமதிக்க மாட்டேன் !" என்று சொன்ன கலைவாணர் " ஜீவா - பத்மா திருமணப் பாராட்டு விழா ! ஜனவரி 30-ம் நாள் மாலை " என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். திடீரென, ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால் , கலைவாணர் விரும்பிய ஜீவா -பத்மா திருமண வரவேற்பு விழா நடைபெறவில்லை.

மதுவிலக்கு குறித்தான கருத்துகளைப் பரப்ப 'நல்லதம்பி ' திரைப்படத்தின் பெரும்பகுதியை ஒதுக்கினார், கலைவாணர். அவர், காந்தி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது கதறி அழுதிருக்கிறார். காந்திக்காக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக அவரது மனதில் இருந்தது. அதற்கு செயல் வடிவம் கொடுக்க தனது சொந்த ஊரான நாகர்கோயிலில் உள்ள நகரப் பூங்காவில் யாரிடமும் பணம் பெறாமல் அன்றைய மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்க்கும் மேலாக செலவு செய்து 60 அடி உயர காந்தி நினைவுத் தூணை எழுப்பியிருக்கிறார். இன்றும் அந்த தூண் இருக்கிறதா என்று தெரியவில்லை? 

என்.எஸ்.கிருஷ்ணனை 'தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் ' என்று குறிப்பிடதற்கு அவரது பதில்,
" சார்லி சாப்ளினை ஆயிரம் பங்கு போட்டு வர்ற ஒரு பங்குக்கு கூட நான் சமானம் இல்லே. என்னைவிடச் சிறந்த நடிகருங்க வட நாட்டிலே , மலையாளத்திலே, தெலுங்கு தேசத்திலே எத்தனையோ பேர் இருக்காங்க ! ஆனா, அவங்க யாரும் இந்த என்.எஸ்.கிருஷ்ணன் புகழப்படுவது போலப் புகழப்படுவதில்லை.அதற்குக் காரணம் அவர்களிடம் தமிழர்களைப் போல அவ்வளவு அதிகமான தாய்மொழிப் பற்று இல்லாமல் போனதுதான். தமிழர்களிடம் தமிழ் மொழி மேலே ரொம்பப் பற்று ! அதனாலே, இந்த என்.எஸ்.கிருஷ்ணனிடமும் பற்று ! அவ்வளவுதான் !".


" சேலத்திற்குச் சென்றிருந்த கலைவாணர் ஒரு தியேட்டரில் , 'மந்திரி குமாரி' படத்தைப் பார்த்தார்; வசனச் சிறப்பு கண்டு பிரமித்தார்; மறுநாள் , காலையில், சேலத்தில் தங்கியிருந்த, அப்படத்தின் கதை - வசன ஆசிரியர் மு.கருணாநிதியைச் சந்தித்தார்; வாழ்த்தினார்; பாராடாடினார். "நான் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள 'மணமகள்' படத்திற்கு நீங்கள் தான் திரைக்கதை- வசனம் எழுத வேண்டும் " - என்று கலைவாணர் வலியுறுத்தினார். 
எழுத்து ஊதியமாக ரூபாய் 10 ஆயிரம் பேசி முடிக்கப்பட்டது. கலைவாணரின் கட்டாயத்தால் , மு.கருணாநிதியின் குடும்பம் சென்னையில் குடியேறியது. "
கலைஞர் மு.கருணாநிதி சென்னையில் குடியேறியதற்கு கலைவாணரும் ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறார்.

"1956 நவம்பர் முதல் நாள் . கேரளத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியிலிருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு , செங்கோட்டை உள்ளிட்ட இரண்டாயிரம் சதுரமைல் பரப்பளவுள்ள தமிழ் மண் தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்களில் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை. ஒதுக்கப்பட்டவர்களில் ஒருவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 

1945ம் ஆண்டு தொடங்கிய திருவிதாங்கூர் தமிழரியக்கத்திற்கு ஏராளமாகப் பண உதவிகளைத் தாராளமாகச் செய்தவர் கலைவாணர், அவர் மாத்திரம் இல்லாதிருந்தால் , இயக்கம் தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் மாண்டு மடிந்து போயிருக்கும். அத்தகைய "கலைவாணருக்கு அழைப்பில்லையா ?" என்று நாகர்கோயில் திலகர் வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் கொதித்தனர். அதே நவம்பர் முதல் தேதி மாலையிலேயே பெரிய வீதியில் இணைப்பு விழாவைத் தங்கள் சொந்த முயற்சியில் திலகர் வாலிபர் சங்கத்தினர் நடத்தினர். " 

சமூக சீர்திருத்தம் என்பதையே முழுமூச்சாக கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி இருக்கிறார்,கலைவாணர். பெரியாரின் தாக்கத்தால், பார்ப்பன எதிர்ப்பு, சாதி மறுப்பு திருமணம் ,விதவை மறுமணம், ஆண் பெண் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், கல்வியின் முக்கியத்துவம் என்று இன்று நாம் முற்போக்கு என்று சொல்லும் அனைத்தையும் அவரது படங்களில் அப்போதே வெளிப்படுத்தியுள்ளார். 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கலைக்காகவும், கலைஞர்களுக்காகவும் மட்டுமல்லாமல் மக்களுக்காகவும், மண்ணிற்காகவும் வாழ்ந்து மறைந்த மக்களின் கலைஞர்!

இந்தப் புத்தக உருவாக்கத்திற்கான அறந்தை நாராயணன் அவர்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது !

தலைப்பு - 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்', 
ஆசிரியர் - அறந்தை நாராயணன், வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் .

அச்சு எழுத்துரு, மற்ற புத்தகங்களில் உள்ளதை விட சிறியதாக இருந்ததால் வாசிக்க சிரமமாக இருந்தது. பதிப்பகத்தார் அடுத்த பதிப்பின் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இக்கட்டுரை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி' எனும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. 

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms