நவீன வாழ்வு நாள்தோறும் நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. நாம் சந்திக்க நேரும் நெருக்கடிகளை தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து விரைவாக வெளியேறலாம். எந்த நெருக்கடிக்கான தீர்வும் அந்த நெருக்கடிக்குள் இருப்பதில்லை. அந்த நெருக்கடிக்கு வெளியிலிருந்து அணுகுவதன் மூலமே அந்த நெருக்கடியைக் கடக்க முடியும். எந்த ஒன்று நெருக்கடியிலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்து அந்த நெருக்கடியை கடக்க உதவுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லாவித நெருக்கடிகளையும் ஒரே மாதிரியாக நம்மால் கடக்க முடியாது. எதுவெல்லாம் நெருக்கடியிலிருந்து நம்மை வெளியேற உதவுகிறதோ அதுவே அதிகம் நினைவில் இருக்கும் ,அதுவே அதிகம் கொண்டாடப்படவும் செய்யும். இயற்கை ஒரு மாபெரும் ' Stress Buster ' ஆக இருக்கிறது. இயற்கையை நெருக்கமாக கவனிப்பதன் மூலமே இந்த வாழ்வு தரும் அழுத்தத்திலிருந்து வெளியேறலாம். நாம் செல்லும் பாதையின் ஊடாக கடந்து செல்லும் ஒரு பறவையின் நிழலுக்கு கூட நம் மனநிலையை மாற்றும் வல்லமை இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு செயல்பாடும் கவனிக்க வேண்டியதே. மழை ஒரு கொண்டாட்ட மனநிலையை எல்லோருக்கும் கொடுக்கிறது. மனதை சாந்தப்படுத்துகிறது. மழை பெய்யும் நேரத்தில் ஏதாவது செய்ய மிகவும் பிடிக்கிறது. மழைக்கு முந்தைய மனநிலையும் பிந்தைய மனநிலையும் வேறு வேறாகவே இருக்கின்றது. மழை மட்டுமல்ல , சூரியன் ,நிலவு , வானம் , மலை,மரம் ,செடி,கொடி,பூ ,காய் ,கனி , பறவைகள் ,விலங்குகள் என இயற்கையின் ஒவ்வொன்றுமே தனித்துவத்துடன் இயங்குகின்றன. இதை கவனிப்பதன் மூலமே நமக்கான சமாதானங்களைப் பெற முடியும்.
இயற்கைக்கு அடுத்ததாக கலை இருக்கிறது. பாடல்கள் கேட்டல் ,புத்தகம் வாசித்தல் ,எழுதுதல், திரைப்படங்கள், பயணங்கள் என ஏதோ ஒன்றை செய்வதன் மூலம் நமக்கான நெருக்கடிகளை விரட்ட முடியும். இதுவும் கடந்து போகும் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியது தான். கடந்த போக எது துணை புரிகிறது என்று பார்க்க வேண்டும். இன்றைய சூழலில் இளையராஜாவும் ,வடிவேலுவும் இல்லையென்றால் நமக்கு பைத்தியமே பிடித்துவிடும். அந்த அளவிற்கு இந்த இருவரும் தமிழ் சமூகத்தை ஆக்கிரமித்துள்ளனர். தினசரி வாழ்க்கையின் ஊடாக நமக்கு பிடித்தமான ஒன்றைச் செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. பொழுதுபோக்கு என வகைப்படுத்தினாலும் அதைச் செய்யும் போது நமக்கு மகிழ்ச்சி உண்டாக வேண்டும். அதானால் தான் ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது முக்கியமானதாகிறது.
மனம் விட்டு பேசுவதன் மூலமும் நெருக்கடியை கடக்கலாம். இன்றைய சூழலில் சரியான புரிதல் இல்லாதவர்களிடம் மனம் விட்டு பேசுவது மேலும் நெருக்கடியையே உருவாக்குகிறது. இன்னொரு மனிதரின் மனக்குறைகளை கேட்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். மிகவும் சிறிய காரணங்களுக்காக நிகழும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. அதுவும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாங்களும் சாவது என்பது அதிகரித்து வருகிறது. அவர்கள் வாழ்வதற்கான நம்பிக்கையை நாம் கொடுக்கவில்லை. சமூகம் என்ற அமைப்பில் நிகழும் தற்கொலைகளுக்கு நாமும் மறைமுக காரணம் தான்.எல்லா மனிதர்களும் வாழ்வதற்கான நம்பிக்கையை சமூகம் கொடுக்க வேண்டும். மனித மனம் விசித்திரமானது தான். எப்போது எப்படி நினைக்கும் என்று தெரியாது தான். தற்கொலைகள் எங்குமே தான் நிகழ்கின்றன. ஆனால் தற்கொலைக்கான காரணங்கள் ஆராயபட வேண்டியவை, விவாதிக்கப்பட வேண்டியவை. எந்தச் சூழலிலும் அந்த எண்ணம் வராத வாழ்க்கையை வழி நடத்துவது தான் முக்கியமானதாகிறது. மரணம் எல்லோருக்கும் பொதுவென்றாலும் அது தானாய் நிகழ வேண்டும்.
இயற்கையையும், கலையையும் கொண்டாடுவதன் மூலமே வாழ்க்கையையும் கொண்டாட முடியும் !
மேலும் படிக்க:
பாலியல் சுரண்டல்கள் ஒழியட்டும் !
0 comments:
Post a Comment