Friday, November 20, 2020

ஆதிக்கமும் அதிகாரமும் !

அதிகாரமும், ஆதிக்கமும் தான் அனைத்துவிதமான வன்முறைகளுக்கும், தீங்குகளுக்கும் காரணங்களாக இருக்கின்றன. அரசு அதிகாரம், சாதி அதிகாரம், பண அதிகாரம், கட்சி அதிகாரம் என பலவிதமான அதிகாரங்கள் மக்களைப் பாதிப்புகளுக்கு உள்ளாக்குகின்றன. மனிதர்கள் அதிகாரம் கையில் இருக்கும் போது ஒரு மாதிரியும், அதிகாரம் கையில் இல்லாத போது வேறு மாதிரியும் நடந்து கொள்கிறார்கள். சிறிய அளவிலான மிரட்டலிலிருந்து பெரிய அளவிலான வன்கொடுமைகள் வரை நடப்பதற்கு இந்த அதிகார மனநிலைதான் காரணமாக இருக்கிறது. வெகுஜன மக்கள் அதிகாரங்களுக்கு அடங்கிப் போகவே பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அதிகாரங்கள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதேயில்லை. ஆனால் அவை கண்டிப்பாக கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். 


ஆண் ஆதிக்கம், இன ஆதிக்கம் , மொழி ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம் போன்ற பலவிதமான ஆதிக்கங்கள் மனிதர்களுக்கு தொடர்ந்து ஆதிக்க உணர்வை அளித்து வருகின்றன. ஆதிக்க மனநிலை மட்டும் இல்லையென்றால் இந்த பூமி ஒரே நாளில் அமைதிப் பூங்காவாக மாறிவிடும். ஒவ்வொரு நாடும் கோடிக்கணக்கான பணத்தை தினமும் மிச்சப்படுத்த முடியும். மனிதர்களாகிய நாம் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறோம். ஆதிக்க மனநிலையால் ஒரு குற்றம் நிகழ்த்தப்படும் போது அந்த குற்றத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் மிகவும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். குற்றவாளிகள் நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயம் அந்த குற்றத்தை நிகழ்த்தத் தூண்டிய மனநிலையை நாம் கேள்விக்கு உட்படுத்துவதேயில்லை. அந்த ஆதிக்க மனநிலையை நாம் தொடர்ச்சியாக கேள்விக்கு உட்படுத்துவதன் மூலமே அதே குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். 

அதிகார மனநிலையையும், ஆதிக்க மனநிலையையும் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்தெறிவதன் மூலமே ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்க முடியும்.

அதிகார மனநிலையையும், ஆதிக்க மனநிலையையும் அழிந்து போகட்டும் !

மேலும் படிக்க:
 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms