Saturday, January 18, 2025

One Hundred Years of Solitude - Fantastic experience ❤️


தற்போதைய தொடுதிரை வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்து நம்மை விடுவித்து சில மணி நேரங்களாவது நம்மதியாக தூங்க வைப்பது மட்டும் கலையல்ல. நம்மைத் தூங்க விடாமல் செய்வதும் கலை தான். அப்படியாக இந்தத் தொடரின் முதல் தொகுதியின் 8 பகுதிகளும் பார்த்து முடிக்கும் வரை நிம்மதியாக தூங்க முடியவில்லை. விழித்திருக்கும் நேரம், தூங்கும் நேரம் என அனைத்திலும் இந்த 'One Hundred Years of Solitude' தான் நிரம்பியிருந்தது. உண்மையிலேயே இது புது அனுபவம்.


லத்தின் அமெரிக்க எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய நாவலான இந்த 'One Hundred Years of Solitude' பற்றி முன்பே நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை வாசிக்கவில்லை. மாய யதார்த்தம் (Magical Realism) என்பதற்கு உதாரணமாக இந்த நாவலே முதன்மையாக முன்நிறுத்தப்படுகிறது. கிளாசிக் தன்மையுள்ள இந்த நாவலை மிகக் கவனமாக படமாக்கி இருக்கிறார்கள். நாவலை வாசித்தவர்கள் இன்னும் நெருக்கமாக உணர்வார்களாக இருக்கும். நாவல் வாசிப்பது போலவே கதாப்பாத்திரங்கள் அறிமுகம், அந்த கதாப்பாத்திரங்களின் பெயர்களை மீண்டும் மீண்டும் உச்சரித்து பதிய வைப்பது என நாவலை வாசித்த உணர்வையே இந்தத் தொடர் கொடுத்தது.


வெறும் அழகியல் மட்டுமே கலையாகாது. அழகியலுடன் அரசியலும் சேரும் போது தான் கலை முழுமையடைகிறது. அப்படியாக இந்த ' One Hundred Years of Solitude ' ஒரு முழுமையான கலைப்படைப்பு. அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்த மக்களிடையே 'அரசு' என்ற அதிகாரத்தை மட்டுமே முன்வைக்கும் அமைப்பு உள் நுழைந்தவுடன் உருவாகும் சிக்கல்களை மிகத் தெளிவாக முன் வைத்திருக்கிறார், மார்க்கேஸ். இடதுசாரியாக இருந்தாலும் அதிகாரம் கைக்கு வந்தவுடன் எப்படி மாறிப் போகிறார்கள் என்பதையும் காட்டத் தவறவில்லை. 


இசையும், ஒளிப்பதிவும் அற்புதம். நாமும் அந்தச் சூழலில் வாழ்வது போலவே தோன்றுகிறது. அடுத்த தொகுதி (Season-2) எப்போது வரும் என்ற ஆவல் அதிகரித்திருக்கிறது. அடுத்ததாக இந்த நாவலை வாங்கி வாசிக்க வேண்டும். வாசிக்கவில்லை என்றால் கூட இந்த நாவல் நம் வீட்டில் இருக்க வேண்டும் என்ற மனநிலை உருவாக்கியிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் நாமும் மக்கோன்டோ(Macondo)-வின் குடிமகனாகவும் உணர வைக்கிறது இந்த  One Hundred Years of Solitude. இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


2006 ஆம் ஆண்டு, மார்க்கேஸ் பிறந்த ஊரான Aracataca- வை Macondo என‌ பெயர் மாற்ற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. போதிய நபர்கள் ஆதரவாக வாக்களிக்காததால் பெயர் மாற்றம் சாத்தியமாகவில்லை. அதனாலென்ன இந்த நாவலை வாசித்தவர்கள், இந்தத் தொடரை பார்த்தவர்கள் மனங்களில் மக்கோன்டோ (Macondo) என்ற பெயர் எப்போதும் நிறைந்திருக்கும். 


One Hundred Years of Solitude is a  Eternal art ❤️

மேலும் படிக்க:

EXTRAORDINARY ATTORNEY WOO - FEEL GOOD SERIES !  

Sunday, November 24, 2024

திண்டுக்கல் துளிர் நண்பர்கள் 2வது விருது வழங்கும் விழா !

திண்டுக்கல் நகரத்தில் வருடம் ஒரு முறை நடைபெறும் புத்தகத் திருவிழா தவிர்த்து இலக்கியம் சார்ந்த வேறு நிகழ்வுகள் நடைபெறுவது அரிது. துளிர் நண்பர்கள் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்ட முதல் நிகழ்வு லக்சர்ட் பள்ளியில் நடைபெற்ற ' பவா செல்லத்துரையின் பெருங்கதையாடல்'. உண்மையிலேயே நீண்ட காலம் நினைவில் இருக்கும் நல்ல நிகழ்வு. ( https://www.facebook.com/share/p/14sGXSXmHR/  ) அதன் பிறகு இப்போது தான் அந்த அமைப்பின் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. காரணம் சனிக்கிழமை. சனிக்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் சனிக்கிழமை நடைபெறும் நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொள்ள முடிகிறது.


திண்டுக்கல் GTN கல்லூரி அருகிலிருக்கும் RK மஹாலில் இந்த துளிர் நண்பர்கள் அமைப்பின் 2வது விருது வழங்கும் விழா தொடங்கியது. துளிர் நண்பர்கள் இதற்கு முன்பு ஒருகிணைத்த நிகழ்வுகள் குறித்தான தகவல்கள் சொல்லப்பட்டன.முதலாவது நிகழ்வாக ந.செந்தில்குமரன் அவர்களின் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு பற்றிய 'நீலகிரி வரையாடு' எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. அவர் பதிவு செய்த வரையாடு பற்றிய காணொளியும் ஒளிபரப்பப்பட்டது. செந்தில்குமரன் பொறியாளராக இருந்தும் வனவிலங்குகள் மீது உண்டான கவனம் பற்றியும், இந்த நூல் எப்படி சாத்தியமானது என்பது பற்றியும் பேசினார்.


ஜெ.பிரான்சிஸ் கிருபா விருது வெய்யில் அவர்களுக்கு வழங்கப்பட்டது." ஜி.நாகராஜன் பெயரிலும், ஜெ.பிரான்சிஸ் கிருபா பெயரிலும் விருது வழங்க முடிவெடுத்ததே மிகவும் நல்ல விசயம். அந்த பெயரில் நான் விருது வாங்குவது மிகவும் மகிழ்ச்சி " என்று வெய்யில் குறிப்பிட்டார். நிறைய வாசர்களுக்கும் இதுவே தோன்றும். ஜி.நாகராஜன் எழுத்தை வாசித்துவிட்டு கடந்து போகவே நிறைய பேர் விரும்புவார்கள். அவர் பெயரில் விருது என்பது ரொம்பவே பெரிய விசயம்தான். தனக்கும் பிரான்சிஸ் கிருபாவிற்கும் இடையிலான நட்பு குறித்தும் வெய்யில் குறிப்பிட்டார். 


ஜி.நாகராஜன் விருதை நரன் பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் கவிதை எழுதத் தொடங்கி அப்புறம் சிறுகதை எழுத ஆரம்பித்தது. கவிஞர் வெய்யிலுக்கும் அவருக்குமான நட்பு. மூன்று விருதுகள் வெய்யிலுடன் சேர்ந்து பெற்றிருப்பது. பதிப்பகம் தொடங்கி எழுதும் திறமையுள்ள புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என நரன் பேசினார். 


வெய்யிலும் சரி , நரனும் சரி ஒரு ஜென் மனநிலையில் தான் அமர்ந்திருந்தனர். எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. அவ்வளவு முதிர்ச்சி அவர்களிடத்தில். விருது கொடுப்பதற்கு பதிலாக யாராவது அவர்களைக் கூப்பிட்டு வைத்து திட்டினால் கூட அலட்டிக்கொள்ள மாட்டார்கள் போல. ரொம்பவே நல்ல விசயம். நாமும் கற்றுக்கொள்ள வேண்டும்.


அடுத்ததாக வாழ்நாள் சாதனையாளர் விருது திண்டுகல்லைச் சேர்ந்த தமிழ்ச்செம்மல், து.இராசகோபால் அவர்களுக்கு வழங்கப்பட்டது. துளிர் நண்பர்கள் அமைப்பின் அ.முகமது யூசுப் அன்சாரி முதல் நாள் தனது முகநூல் பக்கத்திலும், நிகழ்வின் போது தனது பேச்சிலும் குறிப்பிட்டது தான் ஐயா, இராசகோபால் அவர்கள் நமக்கு அளிக்கும் செய்தி " சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்". 


வெய்யில் அவர்களின் கவிதைகள் குறித்தும், நரன் அவர்களின் 'கேசம்' மற்றும் 'வாரணாசி' சிறுகதைகள் குறித்தும் பவா செல்லத்துரை பேசினார். மைக்கை கையில் வாங்கியவுடன் ஒட்டு மொத்த கூட்டத்தையும் வசீகரிக்கும் வல்லமை தோழர் பவா செல்லத்துரை அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அதனால் தான் அவர் எவ்வளவு நேரம் பேசினாலும் சலிப்பில்லாமல் நம்மால் கேட்க முடிகிறது. அவர் குறிப்பிட்டது போல எந்தக் கதையாக இருந்தாலும் எழுத்தாளர் எழுதியிருக்கும் கோணத்திலிருந்து சொல்லாமல் வாசிக்கும் போது எப்படி உணர்ந்தாரோ அப்படியே சொல்வது தான் அவர் கூறும் கதைகள் மீதான நெருக்கத்தை நமக்கு உருவாக்குகிறது. நிகழ்வில் அவர் சொன்ன நரனின் 'வாரணாசி' கதையும் அப்படியானதுதான். 


நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நிகழ்வை நன்றாக ஒருகிணைத்தனர். தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் தகவல்கள் சொல்லப்பட்டன். முனைவர்களே தொகுப்பாளர்களாக இருக்கும் போது இதெல்லாம் சாதாரணம் தான். சத்தமே இல்லாமல் நிறைய பேர் பங்கெடுத்து இருப்பார்கள் போல. தமிழ் இலக்கியத்தின் முக்கிய மொழி பெயர்ப்பாளர் கார்த்திகை பாண்டியன் அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்து நிகழ்வை கண்டு ரசித்தார். அப்புறம் முகமது யூசுப் அன்சாரி அவர்கள் பழனிக்குமார் ( தொழில் செய விரும்பு) அவர்களை அழைத்து மேடையில் அமர வைத்தார். நாளைய இயக்குநராக போகும் ராஜ்குமார் பற்றி நரன் குறிப்பிட்டார். இன்னும் வெளியே தெரியாதவர்கள் நிறைய இருக்கலாம்.


கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பெரும்பாலானோர் வாழ்க்கையில் கூடுதல் இறுக்கம் சேர்ந்துள்ளது. அந்த இறுக்கத்திலிருந்து இசை, புத்தகம், சினிமா, ஓவியம் என கலை சார்ந்த செயல்பாடுகளே நம்மை தளர்த்துகின்றன. இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுக்கவே அரசுகள் அனைத்தும் உலகவணிகமயமாக்கலின் பிடியில் சிக்கியுள்ளன. தற்போதைய சூழலில் பூமியில் மக்களுக்கான அரசுகள் என்று இருப்பவை மிக மிக குறைவு. இப்படியான சூழலில் கலை மட்டுமே நாம், இந்த சூழலை எதிர்கொள்ளவும், இந்த சூழலிலிருந்து வெளிவரவும் துணை நிற்கும். அந்த வகையில் நிகழ்கால வாழ்வு தரும் இறுக்கத்தைத் தளர்த்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.


இலக்கியத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து இயங்கும் துளிர் நண்பர்கள் அமைப்பிற்கு பாராட்டுகள் மற்றும் நன்றி. தொடர்ந்து திண்டுக்கல் நகரில் இலக்கிய நிகழ்வுகள் நடத்த துளிர் நண்பர்கள் அமைப்பை வாழ்த்துகிறோம். 


நாளை மற்றொரு நாளே !





Saturday, October 5, 2024

ஆலோலங் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே... !

 


"ஆற்றில் குளித்த

தென்றலே சொல்லுமே

கிளி சொல்லுமே துள்ளாதடி

துவளாதடி வம்புக்காரி

கொஞ்சாதடி குலுங்காதடி

குறும்புக்காரி..."


காலையில் இப்படியான ஒரு பாடலைக் கேட்டுக்கொண்டே பார்ப்பது அவ்வளவு அலாதியானது. நாள் முழுக்க இப்பாடலே காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. 


இளையராஜாவின் பாடல்களை ஒவ்வொன்றாக கேட்டு ரசித்து முடிக்க இந்த ஒரு ஆயுள் பத்தாது போலவே. இந்தப் பாடலிலும் எவ்வளவு இசை நுணுக்கங்கள்.தொடர்ந்து எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றே தோன்றுகிறது. Ilayaraja music is always mesmerizing us. 


"ஆலோலங் கிளி

தோப்பிலே தங்கிடும் கிளி

தங்கமே..." பாடலாசிரியர் அறிவுமதி எழுதிய இந்தப்பாடல்  1996-ஆம் ஆண்டு வெளியான 'சிறைச்சாலை' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.


இப்பாடலின் இசை ஒரு கவிதை

இப்பாடலின் வரிகள் ஒரு கவிதை 

இப்பாடலின் ஒளிப்பதிவு ஒரு கவிதை

இப்பாடலின் நடன அமைப்பு ஒரு கவிதை

இப்பாடலை பாடியவர்கள்  ஒரு கவிதை 

மொத்தத்தில் பாடலே ஒரு கவிதை ❤️


இத்திரைப்படத்தில் இடம்பெற்ற இதே மாதிரியான இன்னொரு கவிதை " செம்பூவே பூவே..." பாடல் ❤️.


இசையாலே வாழ்வோம் ❤️மே


மேலும் படிக்க :

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️

அடி ராக்கம்மா கையத்தட்டு...!


ஜமா - கலையின் கலை !


ஒரு படத்தை இரண்டு முறை பார்ப்பதெல்லாம் எப்போதும் நடக்காது. ஆனால் இந்த 'ஜமா' இரண்டு முறை பார்க்க வைத்துவிட்டது. அந்த அளவிற்கு இதில் பங்கு பெற்றவர்களின் உழைப்பு இருக்கிறது.ஒவ்வொரு பகுதியும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது. 


இரண்டாம் முறை பார்ப்பதற்கு இளையராஜா இசை தான் முக்கிய காரணம் என்றாலும் முதல் முறை பார்த்த போது தவறவிட்ட சில விசயங்கள் தென்பட்டன. முதலாவது திரைக்கதை பாணி. முதல் பகுதி, இந்த சினிமா எதைப் பற்றி பேசப் போகிறது என்பதற்கான அறிமுகம். இரண்டாம் பகுதி, கூத்துக் கலையில் பெண் வேடமிடும் கல்யாணம் பற்றியும் அவருக்கு பெண் தேடும் படலத்தையும் பேசியது. மூன்றாம் பகுதி ஜகாவிற்கும் கல்யாணத்திற்கும் இடையிலான காதல் பற்றியது. நான்காம் பகுதி கல்யாணத்தின் இலக்கு பற்றியது. ஐந்தாம் பகுதி, முன்கதைச் சுருக்கம். இந்த இடத்தில் தான் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார்கள். ஏற்கனவே கதையில் சொன்ன பகுதிகள் மீண்டும் வருவதால் சுவாரசியத்தன்மை குறைந்து விடுகிறது. முன்கதைச் சுருக்கத்தை காட்சி மொழியில் வேறுபடுத்திக் காண்பிக்க மெனக்கெட்டவர்கள், இதிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். அடுத்து ஆறாம் பகுதி , இலக்கை அடைதல். இப்படி இந்தத் திரைப்படத்தை பிரித்துப் பார்க்க முடிந்தது.


அடுத்ததாக கண்ணில் பட்டது, படம் முழுக்கவே குறிப்பிட்ட காட்சியில் திரைக்கு வெளியே இருந்து பேசுபவர்களின் குரல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது காட்சியை இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது. கூத்துக் கலை குறித்தான நிறைய தகவல்களைச் சேகரித்து, கூத்துக் கலையில் பங்கெடுத்தவர்களின் துணையுடன் இப்படைப்பு உருவாகியுள்ளதால் பார்வையாளர்களை எளிதில் உள்ளிழுத்து விடுகிறது. 


சக கலைஞர்களுக்கு இடையில் இருக்கும் ஆதரவு, சகோதரத்துவம், போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, ஏமாற்று உள்ளிட்ட உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கலையின் முன் சமநிலைக்கு வருவதும் காட்டப்படுகிறது. உண்மையில் இலக்கியம் , இசை, ஓவியங்கள், திரைப்படங்கள், நாடகக்கலை, நாட்டார் கலை உள்ளிட்ட கலை வடிவங்கள் மனிதர்களின் கீழ்மையான எண்ணங்களிலிருந்தும்,   நிஜ வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்தும் விடபட உதவுகின்றன. 


பொதுவாகவே இறுதிச்சடங்குகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சமீப காலங்களில் அரிதாகவே சடங்குகளில் பெண்கள் பங்கெடுக்கின்றனர். இதற்கு பின் பெரும் போராட்டம் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகி இறுதிச்சடங்கில் இயல்பாக பங்கேற்பது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமானது. தொடர்ந்து இப்படி காட்சிப்படுத்தும் போது ஆண் வாரிசு என்ற பிம்பம் உடையும்.


இயக்குநராக முதல் திரைப்படம் என்பதே பெரும் சவால் என்ற சூழலில் , கூடவே நடிப்பையும் தேர்ந்தெடுத்ததுடன் மிகவும் சவாலான கதாப்பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அந்தக் கதாபாத்திரத்திரத்திற்கும் திருவண்ணாமலையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தெருக்கூத்து கலைக்கும் நியாயம் செய்திருக்கிறார், பாரி இளவழகன். சேத்தன், கல்யாணத்தின் அம்மா, அம்மு அபிராமி, அம்மு அபிராமியின் அம்மா மற்றும் கூத்துக் கலைஞர்களாக வருபவர்கள் என அனைவரும் தங்களின் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். திருவண்ணாமலை வட்டார வழக்கு சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. தமிழ் மொழியை எந்த வட்டார வழக்கிலும் கேட்பது இனிமையே.  


இளையராஜாவின் இசை படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நம்மைக் கூட்டிச் செல்கிறது. படத்தின் கதையைச் சொல்வதும் இசை தான். ஒரு கதை சொல்லி போல ஏற்ற இறக்கங்களுடன் திரைக்குள் நம்மை கொண்டு செல்கிறது. இளையராஜாவின் இசைக்காக மீண்டும் பார்த்தது வீண் போகவில்லை. படத்தில் வரும் ஒரே ஒரு பாடலையும் இளையராஜாவே எழுதியிருக்கிறார். அதுவும் கேட்க நன்றாக இருக்கிறது. மீண்டும் கேட்கவும் தூண்டுகிறது. முன்கதை சுருக்கத்தைத் தவிர்த்துவிட்டு இன்னொரு முறை கூட இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். தவறில்லை. 


பெரும்பாலும் இசை தான் ஒரு திரைப்படத்தை மறுமுறை பார்க்கத் தூண்டுகிறது. சமீபத்தில் அப்படி இசைக்காக இரண்டு முறை பார்த்த மற்றொரு திரைப்படம் ' Amar Singh Chamkila ', ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக. 


மொத்தத்தில் 'ஜமா' பாரி இளவழகன் மற்றும் குழுவினரின் உழைப்பால் நல்ல படைப்பாக வந்திருக்கிறது. இப்படி ஒரு படைப்பைக் கொடுத்ததற்கு அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி ! 

மேலும் படிக்க:

AMAR SINGH CHAMKILA !

ஹர்காரா - மண்ணின் கதை !



Monday, September 2, 2024

கட்றா தாலிய -கலகலப்பான குறும்படம் ❤️


மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருகிறது. பொருத்தமான நடிகர்கள் தேர்வு, பட்டைய கிளப்பும் டைமிங்கான வசனங்கள், அழகான காட்சியமைப்புகள், கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் இசை மற்றும் ஒளிப்பதிவு என எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது. 


ஒரு பக்கம் ரகளையான அங்கமுத்து - வன்ராஜ்  கூட்டணி. இன்னொரு பக்கம் கலக்கலான சீமத்தண்ணி - கிருத்திகா கூட்டணி.  நீங்கள் ஒதுக்கப் போகும் 30 நிமிடங்கள் வீணாகாது.


இயக்குநர் சேவியர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


YouTube தளத்தில் காணலாம் !





மேலும் படிக்க :


5 ரூபா -குறும்படம் !

மக்காமிஷி ( Makkamisi) ❤️


குழந்தைகள் உலகிலிருந்து தெரிந்து கொண்ட பாடல். கடந்த ஒரு வாரமாக அவங்களுக்கு 'Morning Vibe' இந்தப் பாடல் தான். அவங்களுடன் சேர்ந்து கேட்டு ஓய்வு நேரங்களில் முனுமுனுக்கும் அளவிற்கு பிடித்துப் போய்விட்டது. 


ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜெயம் ரவி நடித்து வெளியாக இருக்கும் ' Brother ' எனும் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. பால் டப்பா எனும் பெயருடைய தமிழ் ராப் பாடகர் இப்பாடலை எழுதி பாடியிருக்கிறார். கேட்கும் போது மிகவும் எனர்ஜியாக இருக்கிறது. இந்தக் கால தத்துவபாடல் என்றும் சொல்லலாம். பால் டப்பா, ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


பால் டப்பா யார் என்று தேடும் போது தான் தெரிந்தது குழந்தைகளின் போன வார ' Morning Vibe' பாடலான 'காத்து மேல ' பாடலை எழுதி பாடியவர் என்று. இந்த இரண்டு பாடல்களிலேயே குழந்தைகளை கவர்ந்துவிட்டார் பால் டப்பா ❤️. 


" மக்காமிஷி.. 

பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி......"


மேலும் படிக்க :

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️

அடி ராக்கம்மா கையத்தட்டு...!

பாலியல் சுரண்டல்கள் ஒழியட்டும் !


கேரள திரையுலகில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத் திரையுலகிலும் ஏன் உலகத்தில் உள்ள எல்லா திரையுலகிலும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலும் , பாலியல் சுரண்டலும் இருக்கிறது. இதை உலகில் உள்ள எந்தத் திரையுலகும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்தம். 


மூடி மறைக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு முதலில் திரையுலகில் இருப்பவர்களே இதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் மனநிலை ஒழியாமல் எந்த மாற்றமும் நிகழாது.


இந்தியாவைப் பொறுத்தவரை பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் காவலர்களாக இருந்தாலும், வழக்கறிஞர்களாக இருந்தாலும் கூட பாலியல் ரீதியான அத்துமீறல்களும், வன்கொடுமைகளும் பணியிடங்களில் நிகழ்கின்றன. 

இவை எல்லாவற்றுக்கும் ஆணாதிக்க மனநிலை தான் காரணமாக இருக்கிறது. ஆணாதிக்க மனநிலை ஒழியாமல் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எங்கும் கிடைக்காது. 


இயல்பாகவே ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மாற்று பாலினத்தவராக இருந்தாலும் இன்னொரு மனிதர் மீது ஈர்ப்பு வருவது இயல்பு. இதில் எந்தத் தவறும் இல்லை.பெண்ணோ, ஆணோ 'Mutual Consent ' இல்லாமல் நடக்கும் எதுவும் தவறு தான்; குற்றம் தான். 


வாழ்க்கைச் சூழல் காரணமாக வெவ்வேறு விதமான பணிகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். 


ஆணாதிக்க மனநிலையை வளர்ப்பதில் தமிழ்த் திரைப்படங்களும், சின்னத்திரையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாயக்துதிபாடலை வளர்ப்பதுடன் , அதீத வன்முறையையும், பெண்களை கவர்ச்சி பொருளாகவும் முன்வைக்கின்றன. பள்ளி மாணவர்களின் மோதல்கள் கூட மரணம் வரை செல்வதற்கு யார் காரணம்? 


இயற்கையைப் போலத்தான் பெண்களும் எத்தனை விதமான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து இயங்குவதை யாராலும் தடுக்க முடியாது. 


ஆணாதிக்க மனநிலை ஒழியட்டும் !


எல்லோருக்கும் நல்வாழ்வு அமையட்டும் !


மேலும் படிக்க:

பெண் எனும் உருமாறும் சக்தி !


காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️


ராசய்யா(1995) திரைப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவான இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் சாதாரணமாக கடந்து போக முடிந்ததில்லை. சமீப காலங்களில் சன் லைப் தொலைக்காட்சியில் தான் இப்பாடலை அதிகம் பார்த்திருக்கிறேன். 


இளையராஜாவின் இசை, வாலியின் டச் நிறைந்த பாடல் வரிகள், பிரபுதேவாவின் நடனம், ரோஜாவின் வசீகரம் இவற்றையெல்லாம் கடந்து அதிகம் ஈர்த்தது அந்த பெண் குரல். தேடிய போது தான் தெரிந்தது, அந்தக் குரலிற்குச் சொந்தக்காரர் பிரித்தி உத்தம்சிங் என்று. இவர், இளையராஜாவின் உதவியாளராக இருந்து பின்னாளில் இசையமைப்பாளராக மாறிய உத்தம் சிங்ஙின் மகள். 


குறிப்பாக இந்த வரிகள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 


"அன்னையாம் ஒரு

தந்தையாம் அது காதல்தான்

காதல்தான் ஓ..."


"அப்பர் சுந்தரர்

அய்யன் காதலில் ஆண்டாள்

கொண்டதும் காதல்தான்..."


"ஓம் சாந்தி ஓம்

சாந்தி ஓம் சாந்தி ஓம்

சாந்தி ஓம்"


அதே ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற "அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்...(சந்திரலேகா)" பாடலும் இந்த பிரித்தி உத்தம்சிங் பாடியது தான். இரண்டு பாடல்களிலும் ஆண் குரல்களைத் தாண்டி ஒலிப்பது பிரித்தியின் குரல் தான். வேறு தமிழ் பாடல்கள் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. 


உயிரை மீட்டும் குரல் பிரித்தி உத்தம் சிங்ஙுடையது . இவரது மற்ற மொழி பாடல்களையும் கேட்க வேண்டும்.


மேலும் படிக்க  :


அடி ராக்கம்மா கையத்தட்டு...!


பட்டுவண்ண ரோசாவாம் ...!



Maharaj - வடக்கிலிருந்து ஒரு வெளிச்சம் 👍


தமிழ்நாட்டில் இப்படியான பகுத்தறிவு கருத்துகளை முன்வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் எடுக்கமாட்டார்கள். கடந்த ஓராண்டாக பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் வடக்கிலிருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இந்தச் சூழலில் இப்படியானதொரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. 


19ம் நூற்றாண்டில் பம்பாய் நகரத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த 'மகராஜ்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த கருத்துகளை யார் சொன்னாலும் நாம் வரவேற்க வேண்டும். குஜராத்தில் பிறந்த கர்சன்தாஸ் எனும் பிராமணர், பகுத்தறிவு கருத்துகளை அங்கே அந்த காலகட்டத்தில் முன் வைத்திருக்கிறார். அதனால் இன்னல்களையும் சந்தித்திருக்கிறார். எல்லோரையும் சமமாக நடத்தும் எவரும் ( பிராமணராக இருந்தாலும் ) பார்ப்பனர் அல்ல. பிறப்பால், தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என நினைக்கும் ஒவ்வொருவரும் ( பிராமணராக இல்லாவிட்டாலும் )பார்ப்பனர் தான். பிறப்பால் அனைவரும் சமமே.


பக்தியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் இன்றும் குறைந்தபாடில்லை. அப்படி பக்தியை துணையாக வைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி குளிர்காய்ந்த மகராஜ் எனும் ஒரு மடத்தைச் சேர்ந்த சாமியாரின் அயோக்கியத்தனத்தை தோலுரித்து காட்டும் திரைப்படம் தான் இது. கடவுளுக்கும் பக்தருக்கும் இடையில் சாமியாரோ ,வேறு யாருமோ தேவையில்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே வழிபட வேண்டும். கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றும் கூட்டத்துடன் எப்போதும் சேரக்கூடாது. 


தற்போதைய காலம் என்பது ஜக்கி, நித்தியானந்தா, ரவிசங்கர், பாபா ராம்தேவ், பால் தினகரன் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் காலமாக இருக்கிறது. இவர்கள் எவரையும் நம்பக்கூடாது. இவர்கள் இல்லாமல் இந்தியா முழுவதும் விதவிதமான ஆதீனங்கள், அமைப்புகள் இருக்கின்றன. இவர்களும் ஏமாற்றுக்காரர்கள் தான். எந்த மதமாக இருந்தாலும் எந்தக் கடவுளாக இருந்தாலும் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் யாரும் தேவையில்லை. கடவுளே தேவையில்லை என்பது தனியாக விவாதிக்க வேண்டியது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே நம்புங்கள்.


ஒரே நேர்கோட்டில் கதையை சொல்லி முடித்திருக்கிறார்கள். " ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது" - என்ற கிராம்சியின் கூற்றுக்கிணங்க இந்திய மக்களின் பண்பாட்டுத் தளத்திலும் இறங்கி போராடினால் மட்டுமே இந்த பாசிச, மக்கள் விரோத,மதவாத பாஜக அரசை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிய முடியும். இந்து என்பது வேறு இந்துத்துவம் என்பது வேறு என்பதை இந்திய மக்கள் உணரும் போது பாஜக அதிகாரத்தில் இருக்காது.


விதவிதமான வடிவங்களில் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் அதிகளவில் பிற்போக்குத் தனங்கள் பரப்பப்படும் பாலிவுட் சினிமாவிலிருந்து இப்படியானதொரு திரைப்படம் வந்திருப்பது ஆச்சரியம் தான். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். பிற்போக்குத் தனங்கள் ஒழிந்து போகட்டும். எல்லா மதங்களிலும் சாமியார்களின் ஆதிக்கம் அழியட்டும். சமத்துவம் பரவட்டும்.


மேலும் படிக்க  :


FANDRY - மனதிற்கு நெருக்கமான படைப்பு !


DAREDEVIL MUSTHAFA - FANTASTIC MAKING !

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms