Friday, October 4, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 10 !



இந்தியாவில் பாலியல் சார்ந்த சிக்கல்கள் அதிகமாக இருப்பதற்கு 'பாலியல் வறட்சி' தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. 'பாலியல் வறட்சி' மட்டுமே காரணமல்ல, 'பாலியல் வறட்சி'யும் ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. நாளுக்கு நாள் இந்திய சமூகம் அறிவியலை புறந்தள்ளுவது தான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு சில விசயங்களில் தொழிற்நுட்பங்களை மிக வேகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். மற்ற பல விசயங்களை அறிவியல் கண் கொண்டு பார்ப்பதும் இல்லை. எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துவதும் இல்லை. இந்த மனநிலையால் அதிகம் பயனடைவது மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டும் மத அடிப்படைவாதிகள் தான். மிகச் சாதாரண விசயங்களை கூட அறிவியல்படி பார்ப்பதில்லை. இதனாலேயே மற்ற நாடுகளைப் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம் இங்கே நிகழ்வது இல்லை. பாலியல் சார்ந்த விசயங்களையும் அறிவியல்படி பார்க்காதது தான் இந்திய சமூகம் தங்களுக்குள்ளே உருவாக்கிக்கொள்ளும் அதிகப்படியான பாலியல் சிக்கல்களுக்கும், பாலியல் வறட்சிக்கும் காரணம்.

பாலியல் குற்றங்கள் என்பது எல்லா நாடுகளிலும் நிகழ்கின்றன. ஆனால் அதிகப்படியான பாலியல் சிக்கல்கள் பெண்களை அடிமைகளாக நடத்தும் பின்தங்கிய நாடுகளிலேயே அதிகம் இருக்கின்றன. உதாரணமாக பெண்களின் உடை என்பது வளர்ந்த நாடுகளில் ஒரு பாலியல் சிக்கலாக இல்லை. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களின் உடை தான் எல்லா பாலியல் குற்றங்களுக்கும் காரணம் என எண்ணும் மனப்போக்கு உள்ளது. இதே போல பிடித்தமான துணையை தேர்ந்தெடுப்பதிலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகப்படியான சிக்கல்கள் இருக்கின்றன. எவ்வளவு படித்தாலும் கூட பெரும்பாலான பெண்களின் மற்றும் ஆண்களின் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், சுதந்திரமும் அவர்களிடம் இல்லை. இருவருக்கும் விருப்பமிருந்தால் அதிக வயது ஆண், குறைந்த வயது பெண்ணையோ, அதிக வயது பெண், குறைந்த வயது ஆணையோ திருமணம் செய்து கொள்வதில் எந்தவிதமான மனத் தடையோ, சமூகத் தடையோ வளர்ந்த நாடுகளில் இல்லை. ஆனால் இன்றும் தமிழகத்தில் பெரியார், குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்ததை பெரிய குற்றமாக பார்க்கிறார்கள். வயது வித்தியாசம் அதிகம் உள்ள ஜோடிகளை சமூகம் இயல்பாக பார்ப்பதில்லை. இதை ஒரு குறையாக பார்க்கும் மனநிலையே அதிகம் இருக்கிறது. பிடித்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் எந்தக் குறையும் இல்லை என்பதை உணரப் போகிறோமோ ? தெரியவில்லை.

' ஒடுக்கப்படுவது எந்த இனமாக இருந்தாலும், அந்த இனத்தின் குரலாக இருப்பதே சிறப்பு ' என்பதன் அடிப்படையில் பாலியல் சிக்கல்கள் என்று வரும் போது பெண்களின் பார்வையிலிருந்து அணுகுவது தான் சரியாக இருக்கும். ஆனால் யதார்தத்தில்
'பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது, ஆண்களுக்கு எல்லாம் தெரியும், பெண் என்றால் முட்டாள், ஆண் புத்திசாலி ' என்ற மனநிலை தான் மேலோங்கி இருக்கிறது. கிராமம், நகரம், படித்தவர், படிக்காதவர் என வேறுபாடில்லாமல் இந்த ஆணாதிக்க மனநிலை வேரூன்றி இருக்கிறது. இந்த மனநிலை ஆண்களிடமும், பெண்களிடமும் நிறைய மனக்குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. பெண்களை சகமனிதர்களாக நினைக்க ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை.

பெண்கள் தொடர்ந்து உடைமைகளாகவே பார்க்கப்படுவதற்கு , நடத்தப்படுவதற்கு பெரிய திரையான சினிமாவும், சின்னத்திரையான தொலைக்காட்சியும் தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மீண்டும் மீண்டும் போகப்பொருளாக, சிறியது முதல் பெரிய அளவிலான வன்முறைகளை ஏவும் உடலாக மட்டுமே பெண்கள், பெரிய திரையிலும், சின்னத்திரையிலும் சித்தரிக்கப்படுகிறார்கள். அதிலும் புதிய அறிமுகமாக 'கேம் ஷோ' என்ற பெயரில் பெண்களை உடலாகவே நிறுவும், அறுவெறுக்கத்தக்க ,கேவலமான வார்த்தைகளை பேசும் நிகழ்ச்சிகள் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் அதிகரித்து வருகின்றன. எந்தவித உறுத்தலும் இல்லாமல் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்புகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இதில் பங்குபெறும் பெண்களுக்கே தங்களை கேவலமாக சித்தரிக்கிறார்கள் என்று தெரியாமல் இருப்பது தான். அதிலும் தற்போதைய தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் அனைத்தும் பிற்போக்குத்தனங்களின் கூடாரம்.ஒரு மனிதராக, ஒரு குடும்பமாக, ஒரு சமூகமாக எதையெல்லாம் உதறிவிட்டு மேலெழுந்து வர வேண்டுமோ , அதையெல்லாம் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. மக்களை தொடர்ந்து அறியாமையில் வைத்திருக்கவே சின்னத்திரைகள் உதவுகின்றன.

சினிமாவில் பெண்கள், சித்தரிக்கப்படும் விதத்தில் இன்றும் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழவில்லை. தமிழ் சினிமா, திரையில் காட்டும் எந்தப்பெண்ணும் நிஜத்தில் அப்படி இருக்கமாட்டார். நிஜத்தில் இருக்கும் பெண்ணையும் சித்தரிப்பதில்லை, பெண் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியும் சித்தரிப்பதில்லை. ஆண்களின் கதாப்பாத்திரங்களுக்கு அழகு சேர்க்கவும், ஆண்களின் வீர தீரங்களை வெளிப்படுத்தவும், ஆண்களை சார்ந்து இருக்கும் வகையிலேயே பெண்களின் கதாப்பாத்திரங்கள் மரியாதைக் குறைவாகவே வடிவமைக்கப்படுகின்றன. பெண்களை சுயமரியாதையோடு சித்தரித்த திரைப்படங்கள் ( 'அவள் அப்படித்தான் ' போல ) மிகவும் குறைவு. அதிலும் சமீப காலங்களில் மனித சமத்துவத்திற்கு எதிரான மதம் சார்ந்த விசயங்கள் இரண்டு திரைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கப்படுகின்றன. இதே போல நிஜமான சிறுவர்களின் உலகம் திரையில் வெளிப்படுத்தப்படுவதேயில்லை. சமீப காலங்களில் இரண்டு திரைகளிலும் சிறுவர்களை, குழந்தைகளை காட்டுவதையே மிகவும் குறைத்துவிட்டார்கள். இவர்களெல்லாம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இல்லாத உலகத்தில் வாழ்வார்கள் போல.

எல்லாவிதமான ஊடகங்களும் மக்களுக்கு துணையாக இருப்பதற்கு பதிலாக , மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. பாலியல் சிக்கல்கள் குறித்து பெரிய அளவிலான விழிப்புணர்வை ஊடகங்களால் மக்களுக்கு ஏற்படுத்த முடியும். ஆனால் செய்யமாட்டார்கள். மக்களின் நலனிற்கு எதிராக செயல்படும் அரசுகளை மட்டுமல்லாமல் ஊடகங்களையும் சேர்த்தே எதிர்க்க வேண்டிய தேவை மக்களுக்கு உருவாகியிருக்கிறது. அரசுகள், ஊடகங்கள் இவற்றுக்கு பின் இருப்பது கார்பரேட்கள். கார்பரேட் துணையில்லாமல் அரசோ, ஊடகமோ செயல்பட முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். மக்களை தொடர்ச்சியான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பது தான் கார்பரேட் வணிகம். இதற்கு அரசுகளும், ஊடகங்களும் துணை போகின்றன.

பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளை, குற்றங்களை அரசாலும், ஊடகங்களாலும் தடுக்க இயலும். ஆனால் தடுப்பதற்கு பதிலாக மேலும் பிரச்சனைகளையே அரசும், ஊடகங்களும் உருவாக்குகின்றன. எந்தப் பிரச்சனையையும் அந்தப் பிரச்சனையாகவே சுருக்கி கடந்து போய்விடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட பிரச்சனை குறித்து தீர ஆராய்வதேயில்லை. அதே குற்றம் மீண்டும் நிகழாதவாறு தடுக்கும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது, ஊடகங்களுக்கும் இருக்கிறது.ஆனால் எளிதாக பொறுப்பைத் தட்டிக் கழித்து அடுத்த பிரச்சனையைத் தேடிப் போய்விடுகிறார்கள். மக்கள், தொடர்ந்து சுயசிந்தனை இல்லாதவர்களாக இருக்கவே அரசும், ஊடகங்களும் விரும்புகின்றன. அப்போது தான் கார்பரேட் அங்கே கால் பதிக்க முடியும். இன்றைய சூழலில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும் கார்பரேட்டின் பங்கு இருக்கிறது.
அதீத கார்பரேட் வணிகத்தில் அறம் என்ற வார்த்தைக்கு துளி கூட இடமில்லை. இனி வரும் காலம் என்பது கார்பரேட்களை எதிர்ப்பதில் தான் கழியப் போகிறது.

நாம் சந்திக்கும் அனைத்துவிதமான சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் இயற்கையிடம் மட்டுமே உள்ளன. கார்பரேட்களையும் இயற்கையின் துணை கொண்டு தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது. கார்பரேட்களுக்கு எதிரான வலிமையான ஆயுதம், இயற்கை. பாலியல் சார்ந்த சிக்கல்களுக்கும் இயற்கையே தான் தீர்வு. மற்ற விலங்கினங்களில் பாலியல் சார்ந்த சிக்கல்களும், பாலியல் சார்ந்த வன்முறைகளும் மிகவும் குறைவு அல்லது சுத்தமாக இல்லை என்றே கூறலாம். உலகிற்கே தான் ராஜா என நினைத்துக் கொண்டிருக்கும் மனித இனம் தான் பாலியல் சார்ந்த வன்முறைகளில் அதிகம் ஈடுபடுகிறது.

குழந்தைகளையும், சிறுவர்களையும் பாலியல் சார்ந்த அத்துமீறல்களில் இருந்து காப்பாற்றுவது தான் சமூகத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும். எந்தவித பாலியல் நோக்கமும் இல்லாமல் குழந்தைகளை குழந்தைகளாகவும், சிறுவர்களை சிறுவர்களாகவும் பார்க்கும் மனநிலை எல்லா மட்டத்திலும் உருவாவது அவசியமாகிறது. பெரும்பாலான குற்றங்களுக்கும் , பாலியல் குற்றங்களுக்கும் போதை தான் முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட மனிதரோ/ மனிதர்களோ போதையில் இல்லாமல் இருந்திருந்தால் அந்த குற்றம் அங்கே நிகழ்ந்திருக்காது. குற்றங்களை தடுக்க வேண்டுமானால் இந்த பார்வையும் முக்கியம்.

பிடித்த மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பது இன்றும் எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றாக இல்லை. புரிதல் இல்லாத உறவில் தொடர்வது கொடுமையானது. இந்த சூழலில் பிரிவதும் எளிதாக இல்லை, மறுதுணையை தேர்வு செய்வதும் எளிதாக இல்லை. அதிலும் பெண்கள் கல்யாணம் செய்வதற்காக மட்டுமே பிறந்தவர்கள் என்று இந்திய நாட்டின் பிரதமரே நினைக்கும் அளவிற்கு தான் இந்திய மனநிலை இருக்கிறது. இதில் மறுதுணை என்பது பெண்களுக்கு எளிதான ஒன்றாக இல்லை. முதல் திருமணத்தில் கிடைத்த கசப்பான விசயங்களால் பெண்கள் ,மறுமணம் குறித்து சிந்திப்பதும் குறைந்து வருகிறது. குழந்தைகள் இருந்தாலும் தனியாக வளர்த்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்.

கள்ளக்காதல் என சமூகம் வரையறுக்கும், சமூகத்தின் வரம்பு மீறிய காதல் என்பது காலங்காலமாக இருந்து வந்தாலும் அந்த காதலால் நிகழும் கொலைகள் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் கள்ளக்காதல் கொலைகள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. எந்த ஒன்றுக்கும் வன்முறை தீர்வு ஆகாது. இந்த கொலைகளால் அவர்களின் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோரில் ஒருவர் கொல்லப்படுவதும், மற்றொருவர் ஜெயிலில் இருப்பதும் எந்த அளவிற்கு அந்த குழந்தையின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதையும் சமூகம் உணர வேண்டும்.

தமிழகம் இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பதற்கு கல்வியில் அடைந்த முன்னேற்றமே முக்கிய காரணம். பகுத்தறிவு மண் என்று சொல்லிக்கொள்ளும் இதே தமிழகம் பாலியல் சார்ந்த விசயங்களை பகுத்தறிவுடன் ஆராய்வதில்லை. பாலியல் கல்வி தான் இன்றைய முதன்மையான தேவையாக இருக்கிறது. எங்கோ ஒரு மூளையில் யாரோ ஒருவர் பாலியல் சிக்கல்கள் பற்றி எழுதுவதாலோ, பேசுவதலோ ஒன்றும் நிகழ்ந்துவிடாது. முறையான பாலியல் கல்வியின் மூலமே சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும். பாலியல் சிக்கல்களை குறைப்பதற்கான முதல் ஆயுதம் பாலியல் கல்வி தான்.

சமூகத்தின் கருத்துப்படியே பார்த்தாலும் பாலியல் வறட்சியே இல்லாமல் செய்துவிட்டால் பாலியல் சிக்கல்கள் தீர்ந்துவிடும் தானே. இந்தியாவில் 'செக்ஸ் டாய்ஸ்' களுக்கு தடை இருப்பதாக சொல்கிறார்கள். இந்த தடையே நீக்கி விட்டாலே பாலியல் வறட்சி காணாமல் போய்விடும் தானே. இன்னொரு மனிதரை பாதிக்காத எதுவும் தவறில்லை . பல நாடுகள் 'செக்ஸ் டாய்ஸ்' குறித்தான விரிவான ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றன. எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செக்ஸ் டாய் இருக்கும் சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இருப்பது ஒரு வாழ்க்கை தானே வாழுங்கள். இதிலென்ன இருக்கு பேசுங்கள் !

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :










0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms