Thursday, October 31, 2019

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!



ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு  நாளிதழிலோ, வார இதழிலோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஒரு துணுக்கு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அந்த துணுக்கின் கீழே " அறந்தை நாராயணன் எழுதிய 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ' எனும் நூலிலிருந்து " என்று போட்டிருந்தது. அன்றிலிருந்து தொடங்கிய தேடல் இப்போது தான் முடிவிற்கு வந்திருக்கிறது. அந்த அளவிற்கு அந்த துணுக்குச் செய்தியில் ஒரு வசீகரம் இருந்தது. எப்படியாவது இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற தேடல் தொடங்கியது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் எனது முதல் வழிகாட்டி. என்னையறியாமலேயே எனக்குள் பொதுவுடமை கருத்துக்களை அவரது பாடல்கள் மூலம் விதைத்தவர்.

இந்த புத்தகத்திற்கான தேடலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய எவ்வளவோ புத்தகங்கள் கண்ணில்பட்டன, அவற்றில் பலவும் வாங்கப்பட்டன.ஆனால் எதுவும் ஈர்க்கவில்லை. இதனால் அறந்தை நாராயணன் எழுதிய புத்தகத்திற்கான தேடல் முடிவடையவேயில்லை. எந்த புத்தக கடைக்குச் சென்றாலும் , எந்த புத்தகத் திருவிழாவிற்குச் சென்றாலும் கண்கள் முதலில் இந்தப் புத்தகத்தைத் தான் முதலில் தேடும். இந்தப் புத்தகம் ஒரு சாகித்ய அகாதமி வெளியீடு என்பதால் புத்தகத்திருவிழாவில் ஆர்வத்துடன் நுழையும் இடமாக சாகித்ய அகாதமி அரங்கே இதுவரை இருந்திருக்கிறது. இந்நிலை இனி மாறக்கூடும்.

சமீபத்தில் தோழர் யமுனா ராஜேந்திரன் எழுதிய பதிவொன்றில் அறந்தை நாராயணனின் அறச்சீற்றம் பற்றி குறிப்பிட்டு இருந்தார். எதற்கும் மீண்டும் ஒரு முறை அறந்தை நாராயணன் பற்றி தேடிப்பார்ப்போம் என்று இணையத்தில் தேடிய போது CommonFolks இணையதளத்தில் அறந்தை நாராயணனின் மூன்று நூல்கள் விற்பனைக்கு இருந்தன. அதில் இத்தனை ஆண்டுகளாக தேடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய புத்தகமும் இருந்தது. மற்ற இரண்டு நூல்களுக்கு அட்டைப்படங்கள் இருந்தன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நூலிற்கு அட்டைப்படம் கூட இல்லை. எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று உடனடியாக மூன்று புத்தகங்களையும் ( மற்ற இரண்டு நூல்கள் , நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன், மேடையில் பேசலாம் வாருங்கள் ) வாங்குவதற்கு பணம் செலுத்தினேன். இரண்டு நூல்கள் மட்டுமே உள்ளன அவற்றை உங்களுக்கு அனுப்புகிறோம் என்று குறுஞ்செய்தி வந்தது. இம்முறையும் கிடைக்காது போல என நினைத்திருக்கும் போது மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. 'மேடையில் பேசலாம் வாருங்கள்' புத்தகம் மட்டும் இல்லை என்று. மனம் பெருமகிழ்ச்சி அடைந்தது.

மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு மதிய வேளையில் புத்தகங்கள் அடங்கிய பொட்டலம் கைக்கு வந்து சேர்ந்தது. மிகுந்து ஆர்வத்துடன் பிரித்து இந்தப் புத்தகத்தின் அட்டையை மட்டும் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். 15 ஆண்டுகளுக்கும் மேலான தேடல் அல்லவா ? பிறகு ஒரே மூச்சில் இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்த மூன்றாவது புத்தகம் இது என நினைக்கிறேன். முந்தைய இரு நூல்கள் , ' எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்', ' நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ' . அறந்தை நாராயணனின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இப்படியொரு புத்தகத்தை வாசிப்பதற்கு இன்னும் பத்தாண்டுகள் கூட காத்திருக்கலாம் என்ற மனநிலையே உருவானது. அந்த அளவிற்கு அறந்தை நாராயணனின் எழுத்து நடை அமைந்திருந்தது. இவரின் அனைத்து புத்தகங்களையும் வாசிக்க ஆவல் பெருகுகிறது. ஒரு வாசகரை இப்படி உணரச்செய்வது சாதாரண விசயம் அல்ல. ஆனால் அறந்தை நாராயணன் இப்படி உணர வைக்கிறார். இந்தப் புத்தகம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரலாற்றை மட்டும் சொல்லவில்லை, கூடவே இடதுசாரி இயக்கங்களின் வரலாற்றையும் கூறிச் செல்கிறது. துல்லியமான தரவுகளுடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரலாறும், இடதுசாரி இயக்கங்களின் வரலாறும் நம் கண் முன்னே விரிகிறது.

இடதுசாரி இயக்கத் தலைவர்கள் பற்றிய நிறைய குறிப்புகள் இந்நூலில் உள்ளன. தஞ்சாவூர் பகுதியில் இடதுசாரி இயக்கங்கள் செழித்து வளர்ந்ததற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் உள்ள தொடர்பு விளக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடல் உருவாவதற்கு காரணமான பின்னணி அழகாக விவரிக்கப்படுகிறது. தேவையான இடங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை மிகவும் நெருக்கமாக உணரச் செய்கிறது, இப்புத்தகம். பெரும் உழைப்பைக் கொடுத்தே இந்நூலை எழுதியிருக்கிறார், அறந்தை நாராயணன். மக்கள் கவிஞருக்கு உரிய மரியாதையை இந்நூல் செய்திருக்கிறது.

மண்ணில் வாழ்ந்தது 29 ஆண்டுகள் தானென்றாலும், எழுதிய பாடல்கள் குறைவென்றாலும் காலத்தால் அவ்வளவு எளிதாக அழிக்க முடியாத பாடல்களை எழுதிச் சென்றிருக்கிறார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருக்கு பிறகு தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்களில் இடதுசாரி சிந்தனையுடையவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. திராவிட மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் திராவிட திரையிசைப் பாடலாசிரியரே இன்னும் உருவாகவில்லை. அப்புறம் எங்கே இடதுசாரி பாடலாசிரியர் பற்றி சிந்திப்பது. மக்கள் கவிஞரை நேசிப்பவர்கள் , இடதுசாரி சிந்தனையுடையவர்கள் தவறவிடவே கூடாத புத்தகமிது. வாய்ப்புள்ளவர்கள் வாசியுங்கள். 96 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை ₹50.

இந்தப் புத்தகம் இவ்வளவு நாளாக கிடைக்காமல் போனதற்கு அச்சில் இல்லாதது தான் காரணம். முதற்பதிப்பு 1998 ஆம் வந்துள்ளது. அதன் பிறகு இரண்டாம் பதிப்பு கடந்த ஆண்டு (2018) தான் வெளிவந்திருக்கிறது. அதனால் தான் இப்போது கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க :

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms