Tuesday, November 23, 2021

சர்தார் உத்தம் (Sardar Udham)- உலகத்தரம் !

 


உலகத்தரம் வாய்ந்த உருவாக்கம். இந்திய அளவில் ஒரு பீரியட் திரைப்படம் (Period Movie ) இவ்வளவு கச்சிதமாக, பிசிறில்லாமல் படமாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் கலை இயக்குநரே கண்முன் தெரிந்தார். அந்த அளவிற்கு கடந்த காலத்தை அப்படியே காட்ட உழைத்திருக்கிறார்கள். மன்ஷி மேத்தா ( Mansi Mehta ) என்ற இந்திய கலை இயக்குநரும், டிமிட்ரி மாலிஷ் ( Dmitriy Malich ) என்ற சர்வதேச கலை இயக்குநரும் சேர்ந்து இத்திரைப்படத்திற்கு கலைவடிவம் கொடுத்திருக்கிறார்கள். இருவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள். 

திரைப்படம் பார்த்த பிறகு இயக்குநர் யார் என்று தேடிய போது சூஜித் சிர்கார் ( Shoojit Sircar ) என்ற இந்திய இயக்குநர் என தெரிய வந்த போது ஆச்சரியமாக இருந்தது. இந்த திரைப்படத்தை 1990 லே படமாக்க நினைத்திருக்கிறார், சூஜித். அடுத்த தலைமுறைக்கு உத்தம் சிங்கின் வரலாற்றை முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இருபது ஆண்டுகள் அவரைப் பற்றி ஆய்வு (இடையில் வேறு படங்கள் இயக்கினாலும் ) செய்து , திரைப்படமாக இப்போது வெளியிட்டு இருக்கிறார். அவரின் இருபது வருட உழைப்பு வீண் போகவில்லை. தவறு நேர்ந்துவிடாதவாறு மிகக் கவனமாக ஒவ்வொரு காட்சியும் படமாக்கி இருக்கிறார், இயக்குநர் . சூஜித் இயக்கும் முதல் பீரியட் திரைப்படம் என்பதால் நிறைய வெளிநாட்டு திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் பார்த்து அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். 

முதலில் இர்பான் கான் நடிப்பதாக இருந்திருக்கிறது. உடல்நல பிரச்சனை காரணமாக அவர் விலக வேண்டி வந்ததால் விக்கி கௌஷல் உத்தம் சிங்காக மாறியிருக்கிறார். நான் லினியர் ( Non linear ) பாணி கதை சொல்லும் முறை திரைப்படத்திற்கு கூடுதல் சுவாரசியத்தைத் தருகிறது. தமிழில் தற்போது வெளிவந்து கவனம் பெற்றிருக்கும் ' ஜெய்பீம் ' திரைப்படமும் Non linear பாணியில் அமைந்ததுதான். நமக்கெல்லாம் பகத்சிங் பற்றி தெரிந்த அளவிற்கு அவரது நண்பரான உத்தம் சிங் பற்றி தெரிந்திருக்கவில்லை. இத்திரைப்படம் உத்தம் சிங்கை நமக்கு தெரிய வைத்திருக்கிறது. அந்த அளவில் இயக்குநரின் எண்ணம் நிறைவேறியிருக்கிறது. 

கலை என்ன செய்யும்? கலை என்ன வேண்டுமானாலும் செய்யும்.இத்திரைப்படத்தின் மூலமாக ஒரு போராளியை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது.1000 பேர்களுக்கும் மேல் கொன்று குவிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919 ஏப்ரல் 13) என்பது வரலாற்றுத் துயரம். இந்நிகழ்வை இரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்வே உத்தம் சிங் எனும் போராளி உருவாகக் காரணம். இந்நிகழ்வு நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகே அதாவது 2019ல்தான் பிரிட்டன் அரசு இந்த நிகழ்விற்கு மன்னிப்பு கோரியிருக்கிறது. 

பழிக்குப்பழி என்பது எதற்குமே தீர்வாகாது என்றாலும் கூட இப்படியான கொடூரமான நிகழ்வை நடத்தி காட்டியவருக்கு அரசு எந்தவித தண்டனையும் அளிக்காத போது மக்களின் சார்பாக, உத்தம் சிங் மூலமாக அளிக்கப்பட்ட தண்டனைதான் ஜெனரல் ஓ டயரின் மரணம். திரைப்பட விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். உலகத்தரத்தில் ஒரு இந்திய சினிமா !

மேலும் படிக்க:

ஜெய்பீம் - அறத்தின் குரல் !


ஜெய்பீம் -அறத்தின் குரல் !



ஜெய்பீம் அறம் என்ற நெருப்பை பற்ற வைத்திருக்கிறது. அந்த நெருப்பு, பற்றி எரிவதும் புகைந்து போவதும் நம் கைகளில் தான் இருக்கிறது. சமீப காலங்களில் மற்ற மொழி திரைப்படங்களையே அதிகம் கொண்டாடி இருக்கிறோம். தமிழ் திரைப்படங்கள் இன்றும் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. மிகவும் பிற்போக்கான விசயங்களையே தொடர்ந்து முன்னிலைப்படுத்துகின்றன. நாயகத்துதிபாடல் இன்னமும் ஒழிந்தபாடில்லை. யதார்த்தமின்மையும், லாஜிக் மீறல்களும் அதிகம் உள்ளதாகவே தமிழ்திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இப்படியான சூழலில்தான் ஜெய்பீம் ஒரு முழுமையான படைப்பாக வெளியாகியிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் 'ஜெய்பீம் ' திரைப்படத்தை கொண்டாடுவது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உண்மை, நீதி ,நியாயம், நேர்மை போன்றவற்றின் மீதான நம்பிக்கையை 90களுக்கு பிறகு உலகவணியமயமாக்கலால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். ' சுயநலம் ' என்ற ஒன்றை மட்டுமே உலகவணியமயமாக்கல் நமக்குப் போதிக்கிறது. இன்று, இவற்றையெல்லாம் முன்நிறுத்தி பேசுபவர்களை பைத்தியக்காரர்கள் என்றே மக்கள் நினைக்கவைக்கப்படுகிறார்கள். இதனாலேயே கம்யூனிஸ்ட்கள் என்றால் கார்பரேட்கள் அஞ்சுகிறார்கள். பொதுமக்கள் மத்தியிலும் கம்யூனிசம் மற்றும் கம்யூனிஸ்ட்கள் பற்றிய ஒவ்வாமை இருக்கிறது. நேரடியாக பயனடைந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகள் சென்று சேராதவாறு மறைக்கப்படுகின்றன. இதனாலேயே நாம் ஜெய்பீம் திரைப்படத்தை வெகுவாக கொண்டாடவேண்டியுள்ளது.

" நீங்க பேசறதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிபட்டு வரும். நடைமுறைக்கு சரிப்பட்டு வராது " என்றே அறத்தின் பக்கம் நின்று பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். எல்லா இடங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்க வேண்டும் என்றே வலதுசாரி மனம் விரும்புகிறது. அதனாலேயே இப்போது இருப்பது அப்படியே தொடர வேண்டும் என்று விரும்புகிறது. இதனாலேயே சமத்துவம் பேசுபவர்களைக் கண்டால் இவர்களுக்கு பிடிப்பதில்லை. இப்படி பெரும்பான்மை மக்களால் ஒதுக்கப்படுவர்களுக்கு இத்திரைப்படம் பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

அழுவாச்சி திரைப்படமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் நேர்த்தியான திரைக்கதையால் ஒரு சுவாரசியமான அதே நேரம் மிக அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கிறது. நிறைய மக்களின் ஏன் ஆளும் கட்சியின் மனசாட்சியையும் சேர்த்தே இத்திரைப்படம் உலுக்கியிருக்கிறது. கொஞ்சமேனும் மனதில் ஈரமுள்ள எவராலும் உடனே கடந்த போக முடியாத படைப்பு இது.

மக்களின் ரசனைக்கு மதிப்பு கொடுத்து ஒவ்வொரு காட்சியும் மிக கவனமாக உருவாக்கியிருக்கிறார்கள். பொதுவாக பெரும்பாலான தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள், மக்களின் உணர்வுகளுக்கோ, ரசனைகளுக்கோ எப்போதும் மதிப்பளிப்பதில்லை. " நாம எதைப் படம் பிடித்து போட்டாலும் பார்ப்பாங்க.." என்றே நினைக்கிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு உரிய மரியாதை கொடுத்து இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. சூர்யாவிற்கென்று , கதாநாயகிக்கென்று ஒருசில காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இது இயக்குநரின் திரைப்படமாகவே இருக்கிறது.

பெரும்பாலான யூடியூப் சேனல்கள் மிக அதிகளவில் இத்திரைப்படத்தை பற்றி பேசுவதின் மூலம் இத்திரைப்படம் சொல்ல வரும் அரசியலை திசைமாற்றப் பார்க்கின்றன. தோழர் ரபீக் ராஜா சொல்வது போல இத்திரைப்படம் ராசகண்ணு வழக்கு மூலம் சொல்ல வருவது 'அதிகார எதிர்ப்பு '. ஆனால் பேசு பொருளாக சூர்யா மட்டுமே இருக்கிறார். இப்படியான ஒரு படைப்பை உருவாக்க உதவியதற்கு சூர்யாவை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஆனால் பேசு பொருளாக அதிகார எதிர்ப்பே இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமலேயே போகிறது. எல்லா வழக்குகளுக்கும் சந்துருவும் , பெருமாள்சாமியும் கிடைத்துவிட மாட்டார்கள். சமத்துவத்திற்கு எதிரானது 'அதிகாரம் '. மக்கள் மீது செலுத்தப்படும் அனைத்துவிதமான அதிகாரங்களும் முடிவிற்கு வர வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களால் மட்டுமே இந்தபூமி சுழலவில்லை. உழைக்கும் மக்களாலேயே இந்த பூமி சுழலுகிறது.

இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் விவரிக்கப்படும் விதம் அவ்வளவு அழகு. ஏகப்பட்ட குறியுடுகள் திரைப்படம் முழுக்க இருக்கின்றன. அசலான மனிதர்கள், அசலான பேச்சு வழக்கு, அசலான வாழ்க்கை என அப்படியை பதிவாகியிருக்கிறது. மற்ற திரைப்படங்களைப் போல பின்னணி இசை எந்த இடத்திலும் உறுத்தவில்லை. அதே போல பாடல்களும் திரைப்படத்திலிருந்து விலகிச் செல்லவில்லை. தேர்ந்த அரசியலறிவும் ,சினிமா பற்றிய சரியான புரிதலும் உள்ள ஒருவராலேயே இப்படியான ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் இயக்குநர் ஞானவேல்❤ கொண்டாடப்பட வேண்டியவர். அறத்தின் பக்கம் நின்று அறத்தின் குரலை மிக வலுவாக கொண்டு சேர்த்திருக்கிறார். நிச்சயம் நல்ல மாற்றங்கள் நிகழும் என நம்புவோம்.

"ஜெய்பீம் என்றால் ஒளி...
ஜெய்பீம் என்றால் அன்பு...
ஜெய்பீம் என்றால் இருளிலிருந்து
வெளிச்சத்தை நோக்கிய பயணம்...
ஜெய்பீம் என்றால் பலகோடி
மக்களின் கண்ணீர்த்துளி...
"
என்ற மராத்திய கவிதையை திரைப்படத்தின் இறுதியில் காட்டுவதன் மூலம் எதற்காக இத்திரைப்படத்திற்கு ' ஜெய்பீம் ' என பெயரிடப்பட்டது என்பதை சொல்லாமல் சொல்கிறார், இயக்குநர். மிகப்பொருத்தமான தலைப்பு. இந்தத் திரைப்படத்திற்கும் இந்தக் கவிதைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

ஜெய்பீம் பற்ற வைத்திருக்கும் இந்த அறம் என்ற நெருப்பை அணையாமல் காப்பது நம் கடமையாகும் !

மேலும் படிக்க :

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms