Tuesday, December 23, 2025

காதில் விழுந்த கதைகள் - கி.ராஜநாராயணன் !

 


இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் தொடுதிரை வாழ்விலிருந்து விலகி புத்தகங்களை வாசிக்க நேரம் ஒதுக்குவது சவாலானதாகவே இருக்கிறது. புத்தகங்களை வாசிக்க ஆசை இருந்தாலும் தினசரி வாழ்வு தரும் அழுத்தங்கள் நம்மை அனுமதிப்பதில்லை. இதையெல்லாம் கடந்துதான் வாசிக்க வேண்டியுள்ளது. இன்றைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வாசிப்பைத் தொடருபவர்கள் திறமையானவர்கள். 


கடந்த ஜுலை மாதத்தில் வேடசந்தூர் கிளை நூலகத்தில் நியூ செஞ்சுரி பதிப்பகம் சார்பாக புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கலந்து கொள்ளும் போதே " ஏற்கனவே வாங்கிய புத்தகங்களே வாசிக்காமல் கெடக்குது. இதுல இவரு புதுசா வேற புத்தகம் வாங்கக் கிளம்பி வந்துட்டாரு " என்று உள்மனது எச்சரித்தது. அதனால் உடனே வாசிக்கக் கூடிய எளிய புத்தகங்களை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தே தேடல் தொடங்கியது. தேடலில் சிக்கியவை ' காதில் விழுந்த கதைகள்' மற்றும் ' சிறுவர் நாடோடிக் கதைகள் '. இந்த இரண்டு புத்தகங்களும் வாசித்து முடிக்கப்பட்டுவிட்டன. இந்த இரண்டு புத்தகங்களும் கொடுத்த நம்பிக்கையில்தான் அக்டோபர் மாதத்தில் நடந்த திண்டுக்கல் புத்தகக் கண்காட்சியில் கூடுதலாக புத்தகங்கள் வாங்கப்பட்டன. 


'Don't judge a book by its cover ' என்பதற்கு உதாரணம் இந்த ' காதில் விழுந்த கதைகள் ' புத்தகம். இந்தப் புத்தகம் இந்தளவிற்கு வசீகரிக்கும் என எதிர்பார்க்கவில்லை. கதைகள் என்றாலே வசீகரமானதுதான். அதிலும் நமது மண் சார்ந்த கதைகள் இன்னமும் வசீகரமானவை. அந்த அட்டகாசமான மொழிநடை கூடுதல் குதூகலம். பொதுவாகவே நாம் எல்லோருமே கதைகள் கேட்க எப்போதும் தயாராகவே இருக்கிறோம். கதைகளை பார்க்க விரும்புகிறோம்; கேட்க விரும்புகிறோம்; வாசிக்க விரும்புகிறோம்; பேச விரும்புகிறோம். கதைகள், காற்றைப் போல எங்கும் நிறைந்திருக்கின்றன. 


பாரததேவி மற்றும் கழினியூரான் இவர்கள் சேகரித்த கதைகளுடன் தான் சேகரித்த கதைகளையும் சேர்த்து இந்நூலை தொகுத்து நமக்குக் கொடுத்திருக்கிறார், கி.ராஜநாராயணன். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், வாசிக்க சுவாரசியமாக இருப்பதுடன் எந்த கட்டுக்குள்ளும் அடக்க முடியாததாக இருக்கின்றன. தினம் ஒரு கதையாக வாசித்து முடிச்சாச்சு. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கதைகள் வாசிக்க நேரமிருந்தாலும் நாளுக்கு ஒரு கதை என்றே நாட்கள் கடந்தன. ஒவ்வொரு நாளும் அடுத்த கதை எப்படி இருக்கும் என்ற ஆவலுடன்தான் புத்தகம் கையிலெடுக்கப்பட்டது. அந்த அளவிற்கு ஒரு கதையே வாசிப்பிற்கான நிறைவைக் கொடுத்தது. இதற்கு முன்பு அப்படி வாசித்தது தேவதச்சன் கவிதைகளைத்தான். ஒரு நாளிற்கான நிறைவை அவரது ஒரு கவிதையே நிறைவு செய்தது.


தமிழ் நிலத்தில் இன்னமும் தீவிரமாக கொண்டாடப்பட வேண்டியவை கி.ராஜநாராயணனின் படைப்புகள். அவர் சேகரித்து கொடுத்த நாட்டார் கதைகளுக்காகவே நாம் அவரைக் காலமெல்லாம் கொண்டாட வேண்டும். நாட்டார் பாலியல் கதைகள் அடங்கிய தொகுப்பான ' வயது வந்தவர்களுக்கு மட்டும் ' ஒரு முக்கியமான தொகுப்பு. இப்போது வாங்கிய ' சிறுவர் நாடோடிக் கதைகள் ' தொகுப்பும் சிறப்பாகவே இருந்தது. மற்ற மொழிபெயர்ப்பு சிறார் கதைகளை விட இந்தத் தொகுப்பில் இருந்த சிறார் கதைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தன. அது தான் தாய்மொழியின் சிறப்பு.


எது எப்படியோ தொடுதிரை வாழ்விலிருந்து கொஞ்சமேனும் விலகி வாசிப்பை நோக்கி திருப்பியிருக்கிறார், கி.ரா. இதைத் தொடர வேண்டும். அதுதான் இப்போதைய தேவையாக இருக்கிறது. பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல் வேறு நீண்டுகொண்டே போகிறது. அதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.


மொத்தத்தில் Worth to read 👍


மேலும் படிக்க :

எது கலாசாரம் - கி.ரா...! 

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms