Monday, September 23, 2013

சின்னக்குட்டி நாத்தனா..!


மக்களோடு மக்களாக மக்களின் கவிஞராக வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்களின் பாடலான நாட்டுப்புறப் பாடல்களையும் எழுதியுள்ளார் .இவர் நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்தப் பாடல் பெரும்புகழ் பெற்ற பாடலாக இருக்கிறது . 1957 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆரவல்லி"  என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .தனித்துவமாக பாடும் திறமையுள்ள  திருச்சி லோகநாதன் இந்தப்பாடலைப் பாடியுள்ளார்.

அந்தப்பாடல் :

பாடல் வரிகள் :



சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போறவண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!
குளிரடிக்கிற குழந்தைமேலே
துணியப்போடடுப் போத்துனா
குவாக்குவான்னு கத்தினதாலே
முதுகிலரெண்டு சாத்துனா
கிலுகிலுப்பயக் கையில்கொடுத்து
அழுதபிள்ளையைத் தேத்துனா (சின்ன…)


பன்னப்பட்டிக் கிராமத்திலே
பழையசோறு தின்னுக்கிட்டா
பங்காளிவீட்டுச் சிங்காரத்தோட
பழையகதையும் பேசிக்கிட்டா (சின்ன…)

கண்ணுக்குட்டிய மல்லுக்கட்டியே
கயித்தப்போட்டுப் பிடிச்சுக்கிட்டா
மண்ணுக்கட்டியால் மாங்காஅடிச்சு
வாயில போட்டுக் கடிச்சுக்கிட்டா! (சின்ன…)

நன்றி :  http://www.pattukkottaiyar.com/site/ .


மேலும் படிக்க :

 உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ...! 

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

..................................................................................................................................................................

Friday, August 30, 2013

மதுவும் மனிதனும் !

மனித இனம் வளர வளர மதுவும் வளர்ந்துள்ளது .மதுவைத் தவிர்த்து மனித வரலாற்றை அறிய முடியாது . அது ,மனித இனத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது .நெடுங்காலமாக கொண்டாட்டத்தின் அடையாளமாக மட்டுமே மது இருந்து வந்துள்ளது . காலப்போக்கில் மதுவின் பயன்பாடு விரிவடைந்து இன்று நம் சமூக அமைப்பையே மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் ஒன்றாக மாறிவிட்ட சூழல் நாம் வாழும் காலத்தின் அவலம் . மற்ற வரலாற்றைப் போலவே மதுவின் வரலாறும் சுவாரசியமானது தான் .

' நாகரீகமும் புளிக்கவைப்பதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதது ' என்றார் ஓர் அறிஞர் . காடு காடாக அலைந்த ஆதிமனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பலனாக நிலையாக வாழ ஆரம்பித்தான் . அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊறவிட்டபோது அது புளித்தது தற்செயலாக நடந்த ஒன்று . அது தான் வெறித்தன்மையைக் கொடுத்த முதல் பானம். பீர் . முளைவிட்ட தானியத்தில் தண்ணீரை ஊற்றி ,சுடவைத்து புளிக்கவைத்தபோது பீரின் சுவை இன்னும் கூடி வெறித்தன்மையும் அதிகமாகியது ( பீர் தான் மனிதன் கண்டுபிடித்த முதல் பானம் என்பது எனக்கெல்லாம் ஆச்சரியமானது ).

 பீருக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த பானம் வைன் .பழச்சாறைப் புளிக்கவைத்துக் கிடைப்பது வைன் . வைனைக் காய்ச்சி வடிகட்டினால் கிடைப்பது பிராந்தி .பீரைக் காய்ச்சி வடிகட்டும்போது கிடைப்பது விஸ்கி .கரும்புச்சக்கையிலிருந்து வீரியமிக்க மது செய்ய்லாம் என்பதை 1657 -ல் ரம்புல்லியன் என்பவர் கண்டுபிடித்தார் . குடித்தவுடன் வெறிக்கச் செய்யும் அந்த மதுவின் பெயர் ரம் ஆனது .அடிமைகளைப் பிடிப்பவர்களுக்கு ரம் விலையாகத் தரப்பட்டது . ரம்மை உற்பத்தி செய்யும் அடிமைகளுக்கு சம்பளமும் ரம் .இப்படி மது உலகம் முழுக்க ஆளத் தொடங்கியது .

எத்தியோப்பியாவில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது சில ஆடுகள் ஒரு செடியின் காய்களைத் தின்று விட்டு துள்ளிக் குதிப்பதை அவதானித்தான் . அவனும் அந்த விதைகளைத் தின்று பார்த்தபோது புத்துணர்ச்சி உண்டானது .மனிதனை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இயங்கவைக்கும் காபி பிறந்த கதை இது . 4700 ஆண்டுகளுக்கு முன்னர் சீனப் பேரரசர் ஷென் நுங் காட்டிலே தண்ணீர் கொதிக்கவைத்துக் கொண்டிருந்த போது சில இலைகள் காற்றில் அடிபட்டு நீரில் விழுந்தன . அந்த நீரை அரசர் பருகியபோது புத்துணர்வு பெற்றதுபோல உணர்ந்தார் . அப்படிப் பிறந்தது தான் தேநீர்.

சீனாவின் தேயிலை ஆட்சியை முறியடிக்க பிரிட்டன் முடிவு செய்தது . இந்தியாவில் அதை எங்கே வளர்க்கலாம் என ஆராய்ச்சி செய்தபோது அஸ்ஸாமில் ஏற்கனவே தேயிலை காட்டுச்செடியாக வளர்ந்தது தெரியவந்தது . இந்தியாவில் தேயிலை உற்பத்தி ஆரம்பமானது . இன்று உலக அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா முதல் இடம் ( 23% ) .இவ்வாறு தேயிலை உற்பத்தி செய்ய எவ்வளவு காடுகளை அழித்தார்களோ ? 1886 ம் ஆண்டு பெம்பர்டன் என்ற அமெரிக்கர் தலைவலிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் . அவருடைய முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தாலும் அவர் தளராது பல்வேறு விதமான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார் . ஒரு நாள் ,தென் அமெரிக்காவில் கிடைக்கும் கொக்கோ இலை
 (உண்ணும் போது மயக்கம் தருவது ), மேற்கு ஆப்ரிக்காவின் கோலாநட் ( இதுவும் போதைப் பொருள் தான் ) இவை இரண்டையும் சேர்த்து ஒரு பழுப்பு நிற பானத்தைத் தயாரித்தார் .அது தான் ' கொக்கோ கோலா '.

பீர்,வைன்,பிராந்தி,விஸ்கி,காபி,தேநீர் ,கொக்கோ கோலா இந்தப் பானங்களின் கதையைப் பற்றி தமிழ் மொழியின் ரசவாத எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ,ஆகஸ்ட் "உயிர்மை " மாத இதழில் 'ஆறு கோப்பைகள் ' என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதிலிருந்து சில பகுதிகளை மேலே குறிப்பிட்டுள்ளேன் . அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துச் சுவை அவ்வளவு ருசியானது . அந்தச் சுவையை நீங்களும் ருசிக்க அவரது எழுத்துக்களை வாசியுங்கள் ; இடைவிடாமல் ஆச்சரியங்களும் ,புதுமைகளும் கிடைத்துக் கொண்டே இருக்கும் .

 உலகில் மனிதன் வாழும் அனைத்து இடங்களிலும் பல விதமான பானங்கள் அருந்தப்படுகின்றன. அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அந்த பானங்களின் தன்மை இருக்கும் . உலகமயமாக்கல் காரணமாக இன்று எந்தப் பானமும் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கிறது ;அருந்தப்படுகிறது .வலுத்தது நிலைக்கும் என்பது இந்தப் பானங்களுக்கும் உண்டு . ஆங்கிலேயர் இந்தியாவின் மீது படையெடுக்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் இவ்வளவு பானங்கள் இருந்திருக்காது .

மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்த போதே மதுவின் பயன்பாடு தொடங்கிவிட்டது .காலம் சுழல சுழல மனிதனின் பெருக்கத்தைப் போல மதுவும் பெருகிவிட்டது .புளிக்க வைக்கும் எந்த உணவிற்கும் ஒரு வித போதை இருக்கும் போல .இரவில் மிச்சமான சாதத்தில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு காலையில் எழுந்து அதைக் குடித்தால் கள் குடிப்பது போல் இருக்கும் . ஆனால் , இது நம் வயிற்றுக்கு மிகவும் நல்லது .சென்னைப் பகுதியில் சுண்ட கஞ்சி என்ற பானம் ,இவ்வாறு புளிக்க வைப்பதன் மூலமே தயாரிக்கப்படுகிறது .

இன்றைய சூழலில் கலாச்சார பானங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன . கலாச்சாரக் குடிதாங்கிகள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை . ஜாதி ,மதம் மட்டும் முக்கியமாய்த் தெரிகிறது இந்தக் குடிதாங்கிகளுக்கு . தமிழ்நாட்டில் அருந்தப்பட்ட உள்ளூர் பானங்களுக்கு மாற்றாக விதவிதமான நிறங்களில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் அயல்நாட்டு குளிர் பானங்கள் ,மதுபானக் கடைகளில் விற்கப்படும் பலவிதமான மதுபானங்கள் (இலவசங்களின் வருமானம் ) மட்டுமே மக்களுக்கு கிடைக்கின்றன . மிஞ்சி நிற்கும் சில கலாச்சார உள்ளூர்  பானங்கள் ஜிகர்தண்டா,நன்னாரி சர்பத்,பன்னீர் சோடா ,பொவண்டோ ,காதலோ....இளநீர் ( பணப் பேய்களிடமிருந்து தப்பித்த ஒரே பானம் , விலை மட்டும் இடத்திற்கு இடம் மாறுபடுவதால் மக்கள் தொடர்ந்து இளநீர் குடிக்கத் தயங்குகின்றனர் .விலை எவ்வளவாக இருந்தாலும் தமிழகத்திற்கென்று பொதுவான விலை நிர்ணயிக்கலாம் !) . தண்ணீர் ( தண்ணீரையும் பானங்கள் வரிசையில் சேர்க்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள், படுபாவிகள் ! பெட்ரோல் ,டீசல் போல தண்ணீரையும் மாற்றி விட்டார்கள் .அடுத்த பெரிய வணிகம் தண்ணீர் வணிகம் தான் . இன்று எண்ணைக் கிணறு வைத்திருப்பவன் பெரிய ஆள்,நாளை தண்ணீர்க் கிணறு வைத்திருப்பவன் தான் பெரிய ஆள் ).

மதுபானங்கள் வரவிற்கு முன்பு கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்துள்ளது .இரண்டு விதமான கள் இருக்கின்றன .தென்னங்கள் மற்றும் பனங்கள் . இயற்கையான மதுபானங்கள் என்று இவற்றை அழைக்கலாம் . அரசே மதுக்கடைகளை நடத்தும் சூழலில் கள் இறக்க தடை இருப்பது முரணான விசயமாக இருக்கிறது .கையில் கிடைப்பதை எல்லாம் போட்டு சாராயம் காய்ச்சுவார்கள் போல , பல நேரங்களில் நல்ல சாராயமாக இருப்பது மரணங்கள் நிகழும் போது வெளிச்சத்திற்கு வந்து கள்ளச்சாராயமாக மாறிவிடுகிறது . இன்று சாராயம் காய்ச்சுவது முற்றிலும் தடுக்கப்பட்டது போலவே தெரிகிறது .இன்று சாராயத்தினால் மரணங்கள் நிகழ்வது நின்று போனாலும் மதுவினால் சாராயத்தை விட அதிக மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன .     

எந்த பானமும் பானமாக இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை ,அது பழக்கமாக மாறும் போது தான் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது .எந்த பானமும் அது தேநீர் ,காபியாக  இருந்தாலும் சரி மதுவாக இருந்தாலும் சரி அளவோடு அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை . தேநீர் மற்றும் காபி அதிகமாக அருந்துவதால் உண்டாகும் பாதிப்புகளை விட மது அதிகமாக அருந்துவதால் உண்டாகும் சமூக பாதிப்புகள் அதிகம் .

ஒரு மனிதன் புகைப்பிடிப்பதால் அவனுக்கு மட்டுமே பாதிப்பு அதிகம் ,மற்றபடி அந்தப் புகையைச் சுவாசிக்கும் வேறு மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கவே செய்யும் .ஆனால் புகைப்பிடிப்பதால் பெரிய அளவில் சமூகப்பாதிப்புகள் இல்லை ( அதிக பணத்தை புகைப்பிடிக்க செலவு செய்வதால் குடும்ப பாதிப்புகள் இருக்கலாம்). மதுவினால் குடிப்பவருக்கு உடல்ரீதியான பாதிப்புகள் அதிகம் .அதைவிடவும் அந்த பழக்கத்தால் ஏற்படும்  சமூகப் பாதிப்புகள் அதிகம் .அடுத்த மனிதனைப் பாதிக்காத எந்தப் பழக்கமும் தவறில்லை .அடுத்த மனிதனைப் பாதிக்கும் எந்தவொரு செயலுக்கும் சமூக அமைப்பில் இருக்கும் மனிதன் பதில் சொல்லியே ஆக வேண்டும் .

சமீப காலமாக மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன . அதுவும் தமிழகத்தில் நிலமை மிகவும் மோசம் . மதுவை வணிகரீதியாக பயன்படுத்துவதன் விளைவு தான் இது . உணவுவிடுதி போல தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. சாராயத்தை ஒழிப்பது தான் நோக்கம் என்றால் ஊருக்கு ஒரே ஒரு டாஸ்மாக் கடை திறக்க வேண்டியது தானே. இதில் ஒவ்வொரு மாவட்டமும் மாதம் இவ்வளவு ரூபாய்க்கு மது விற்க வேண்டும் என்ற மாத இலக்கு வேறு. எல்லா வகையிலும் மது குடிப்பதை ஊக்கப்படுத்திவிட்டு " மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என்று பிரச்சாரம் செய்கிறார்கள் .

மதுவை யார் குடிக்கலாம் ? வயது வந்தவர்கள் தான் குடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது . தொலைக்காட்சியிலும் ,சினிமாவிலும் மதுக் குடிப்பதை நேரடியாக காட்டுகிறீர்கள் .இதை தொடர்ந்து பார்த்து வளரும் குழந்தைகள் 18 வயதிற்கு முன்பே மது குடிக்கப் பழகிவிடுகின்றனர் .ஆண் ,பெண் உடலை ,உடல் உறவை ஒரு வரம்பிற்குள் தான் காட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது . மதுக்குடிப்பதைக் திரையில் காட்டுவதில் எந்தக் கட்டுப்பாடும் ("மது உடல் நலத்திற்கு தீங்கானது " என்ற ஒரு வரி போடுவதைத் தவிர ) கிடையாது . மது என்ன எல்லோரும் குடிக்கும் பானாமா? "வயது வராதவர்கள் பார்க்க வேண்டாம் " அடைமொழியுடன் ஆண் பெண் உடலுறவு காட்சியை நேரடியாக திரையில் காட்ட வேண்டியது தானே .

நாட்டில் கற்பழிப்பு அதிகமாக நடக்கிறது என்ற காரணத்திற்காக வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைப் போல சிவப்பு விளக்கு பகுதியை உருவாக்க வேண்டியது தானே .இதிலும் வருமானம் கிடைக்கும் இதை வைத்து இன்னும் மக்களை சோம்பேறியாக்க ரேசன் கடைகளில் உணவுப் பொருளுடன் மாதம் மாதம்  ஒரு தொகையும் கொடுக்கலாம் .நம்ப முடியாது ,ஒரு வேளை இது நடந்தாலும் நடக்கும் ! அவ்வளவு கேடு கெட்ட அரசியல்வாதிகள் நம் நாட்டில் இருக்கின்றார்கள் . அதிகளவு மது விற்பதை சாதனை என்று கொண்டாடும் ஜென்மங்கள் அல்லவா நம் அரசியல்வாதிகள் .

வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தான் .ஒவ்வொருவருக்கும் இருப்பது ஒரு வாழ்க்கை தான் அதை எல்லாவிதத்திலும் கொண்டாட எல்லொருக்கும் உரிமை உண்டு .இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை .மது என்பது கொண்டாட்டத்திற்கான பானம் . மது அருந்துவதில் எந்தத் தவறும் இல்லை . மனித இன வரலாறு முழுவதும் மதுவிற்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது .இன்றும் உணவின் போது உட்கொள்ளும் பானாமாக மது உலகெங்கும் பல நாடுகளில் ஆண்கள் மற்றும் பெண்களால் அருந்தப்படுகின்றன . ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் மதுக்கடைகள் இருக்கின்றன மதுவினால் உண்டாகும் சின்ன சின்ன தகராறுகளும் ( கிரிக்கெட் வீரர்கள் (வீரர்கள்!) அவ்வப்போது குடிபோதையில் தகராறு செய்து மாட்டிக் கொள்கிறார்கள் ) இருக்கின்றன. ஆனால் , நம் நாட்டைப் போல பெரிய அளவிலான சமூகப்பாதிப்புகள் இருகின்றனவா என்று தெரியவில்லை .  

போதையில் நண்பனைக் கொல்லுதல் , தாய்,தந்தை,மனைவியைக் கொல்லுதல் , பணத்திற்காக யாரை வேண்டுமானாலும் கொல்லுதல், வாகனத்தை தாறுமாறாக ஓட்டி தானும் செத்து மற்றவர்களையும் சாகடித்தல் .மற்றவர்களுடன் வீண் சண்டைக்குப் போதல், அதிக குடியால் தன் குடும்பத்தை தவிக்க விட்டு செத்துப் போதல் , குடும்பத்திற்காக பெண் சம்பாதிக்கும் பணத்தையும் புடுங்கி குடித்தல் , குடித்துவிட்டு பொதுமக்களிடமும் தகராறு செய்தல் ;பெண்களைத் தொந்தரவு செய்தல், குடித்துவிட்டு வந்து பொண்டாட்டி பிள்ளைகளை அடித்தல் என்று மது பழகத்தால் உண்டாகும் சமூகப்பாதிப்புகள் நம் நாட்டில் மிகவும் அதிகம் .மற்ற நாடுகளில் மதுவினால் இவ்வளவு பாதிப்புகள் உண்டாகின்றனவா என்று தெரியவில்லை .

பொதுவாக உணவாக இருந்தாலும் மதுவாக இருந்தாலும் நாம் வாழும் சூழலுக்கு எது பொருந்துமோ அதை உட்கொள்வதுதான் நம் உடலுக்கு நல்லது . இன்றைய உலக வணிகமயமாக்கத்தின் விளைவாக எந்த நாட்டு உணவும் ,பானமும் எங்கும் கிடைக்கின்றன .நாம் பூமியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் நம்மை வைத்து பணம் சம்பாதிக்க வித விதமான தளங்களில் வித விதமான பொய்களுடன் ஒரு  மாபெரும் கூட்டம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது .  மது குடித்தல் என்பது சமூகத்திற்கு கேடு உண்டாக்கும் ஒரு பழக்கமாக மாறுவதை தடுக்காமல்  மது குடிப்பதை ஊக்கப்படுத்தும் ஒரு அரசு இருக்கும் வரை சமூகக் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும் .

மதுவும் மனிதனும் - பிரிக்க முடியாதவை !

மதுப்பழக்கமும் மனிதனும் - பிரிக்க முடிபவை !

பின்குறிப்பு :

 இந்தக் கட்டுரையும் மதுவைப் போல நீண்ட நாட்களாக ஊர வைத்து எழுதியது தான் .

நன்றி :- அ.முத்துலிங்கம் ,உயிர்மை.

மேலும் படிக்க :

கலாசார விடுதலையே சமூக விடுதலை !

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !
...................................................................................................................................................................

Saturday, August 3, 2013

நல்லவன் கையில் நாணயம் !

தமிழ்  இசைக்கடலில் மூழ்கி தேட தேட முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கினறன. சமீபத்தில் கிடைத்த முத்து இந்தப் பாடல் .1972 ஆம் வருடம் வெளிவந்த "யார் ஜம்புலிங்கம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இசையமைத்து இந்தப்பாடலைப் பாடியவர் தமிழ் இசைச் சித்தர் என்றழைக்கப்படும் சி.எஸ்.ஜெயராமன் .இவர் ஆரம்ப கால தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடகர் . இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை.

 அந்தப் பாடல் :


பாடல் வரிகள் :

நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

அது பொல்லாதவன் பையில் இருந்தால்
எல்லா உயிர்க்கும் பாதகம்
எல்லா உயிர்க்கும் பாதகம்
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான் 
 
இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான்  
 
பணத்திமிர் கொண்ட மனிதர் நிமிர்ந்திருந்தாலும்
நடை பிணமாக நடக்கின்றான் 
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம்
எச்சிலை போலே பறக்குமடா
 
அச்சடித்திருக்கும் காகித பெருமை
ஆண்டவனார்க்கும் இல்லையடா
ஆண்டவனார்க்கும் இல்லையடா
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

ஓடும் உருலும்
ஓடும் உருலும் உலகம் தண்ணில்
தேடும் பொருளும் தேவைதான்
தேடும் பொருளும் தேவைதான்
 
அதில் மயக்கம் இல்லாமல் அடக்கம் இருந்தால்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் 
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்  
 
" லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம் எச்சிலை போலே பறக்குமடா ", 
எது உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு சிறந்த விளக்கம் இந்த வரிகள்," ஓடும் உருலும்
 உலகம் தண்ணில்தேடும் பொருளும் தேவைதான், அதில் மயக்கம் இல்லாமல் 
அடக்கம் இருந்தால்,அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் "
 
மேலும் படிக்க :
 
எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?  

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 
...................................................................................

Tuesday, July 30, 2013

K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

K.A.தங்கவேலு , தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் ; நல்ல குரல்வளம் உடையவர் . தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நகைச்சுவையாக்கும் கலை அவருக்கு மட்டுமே வாய்த்தது .ஆபாச வசனங்களைப் பேசாத அற்புதக் கலைஞர் என்றும் அவருடைய குரலின் ஏற்ற இறக்கமே காட்சிக்கும் வசனத்திற்கும் தனி பலத்தைத் தந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். அவருக்கு பின்னால் வந்த ஏராளமான நகைச்சுவை நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் .கடைசி காலம் வரை நாடகங்கள் நடத்தியவர் .ஜாடிக்கு ஏத்த மூடி போல இவருக்கு மனைவியாக வந்தவர் , எம்.சரோஜா .சரோஜாவும் நகைச்சுவை நடிகை தான் . இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகளெல்லாம் நமக்கு இரட்டைக் கொண்டாட்டம் .

தங்கவேலுவின் நலினமான பேச்சுத் திறமை வேறு எவருக்கும் வாய்க்கவில்லை . அவர் பேசுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்;பார்க்கக் கூட வேண்டியதில்லை;சலிக்கவே சலிக்காது .உடல்மொழியில் சிரிக்க வைக்க பலர் இருந்தாலும் ,குரல் மொழியில் சிரிக்க வைக்க இவர் மட்டுமே இருந்தார்;இருக்கிறார் ;இருப்பார் .தங்கவேலு  பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் என்னைச் சிரிக்கவைத்துவிடும் . இவருக்கு அடுத்ததாக குரல் மொழியில் சிரிக்க வைத்தவர் ,வி.கே.ராமசமி .

23-01-1983 , ஆனந்த விகடன் பேட்டியில் தங்கவேலு ,  " ஆரம்ப காலத்துலே சினிமாவிலே நடிக்க சான்ஸ் கேட்டு கம்பெனி கம்பெனியா படியேறி இறங்கினவன் நான் . ' பாடத் தெரியுமா ?'னு கேட்பாங்க ;'நீஞ்சத் தெரியுமா ?'னு கேட்பாங்க . சிமென்ட் தரையிலே நெஞ்சு தேய நீஞ்சிக் காட்டியிருக்கேன் . எனக்குப் பொன்னாடை போர்த்த யாரையும் நான் அனுமதிக்கறதில்லே. வேணுமானா துப்பட்டியைக் கையிலே கொடுத்துடுங்கன்னு சொல்லி வாங்கிக்கிடுவேன் . ஏன்னா , ஒருத்தருக்குப் பொன்னாடை போர்த்தறாங்கன்னு சொன்னா , அந்த ஆள் அவுட்னு அர்த்தம் ! பாலையா அண்ணே கடைசி வரைக்கும் பொன்னாடை போர்த்திக்கலையே...!" என்று சொல்லியிருக்கிறார் .

பாலையா ஒரு பேட்டியில் " நான் பார்த்த அளவில் என்.எஸ்.கிருஷ்ணனுகுப் பிறகு சிறந்த நகைச்சுவை நடிகர் தங்கவேலு தான் " என்று சொல்லியிருகிறார்.
நம் நகைச்சுவைச் சக்கரவர்த்தி, காரைக்கால் (பாண்டிச்சேரி) பகுதியில் உள்ள திருமலராஜன்பட்டினத்தில் பிறந்ததாக விக்கிப்பீடியா சொல்கிறது .1950 முதல் 1970 வரை நிறைய படங்களில் நடித்துள்ளார். சிங்காரி (1951) அமரகவி (1952) கலியுகம் (1952) பணம் (1952) அன்பு (1952) திரும்பி பார் (1952) பணக்காரி (1953) இல்லற ஜோதி (1954) சுகம் எங்கே (1954) நண்பன் (1954) பணம் படுத்தும் பாடு (1954) பொன் வயல் (1954) போன மச்சான் திரும்பி வந்தான் (1954) விளையாட்டு பிள்ளை (1954) வைர மாலை (1954) உலகம் பலவிதம் (1955) எல்லாம் இன்பமயம் (1955) கதாநாயகி (1955) குலேபகாவலி (1955) கோடீஸ்வரன் (1955) கோமதியின் காதலன் (1955) செல்ல பிள்ளை (1955) மகேஸ்வரி (1955) மங்கையர் திலகம் (1955) மேதாவிகள் (1955) மிஸ்ஸியம்மா (1955) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1955) அமர தீபம் (1956) காலம் மாறிப்போச்சு (1956) குடும்ப விளக்கு (1956) நல்ல வீடு (1956) நாக பஞ்சமி (1956) மர்ம வீரன் (1956) மாதர்குல மாணிக்கம் (1956) அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957) அம்பிகாபதி (1957) எங்க வீட்டு மகாலக்ஷ்மி (1957) கற்புக்கரசி (1957) சக்ரவர்த்தி திருமகள் (1957) சௌபாக்கியவதி (1957) நீலமலை திருடன் (1957) பக்த மார்க்கண்டேயா (1957) பாக்யவதி (1957) மல்லிகா (1957) மாயா பஜார் (1957) வனங்காமுடி (1957) உத்தம புத்திரன் (1958) கடன் வாங்கி கல்யாணம் (1958) கன்னியின் சபதம் (1958) காத்தவராயன் (1958) செஞ்சுலக்ஷ்மி (1958) நீலாவுக்கு நிறஞ்ச மனசு (1958) பூலோக ரம்பை (1958) மனமுள்ள மறுதரம் (1958) மாங்கல்ய பாக்கியம் (1958) வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958) கல்யாண பரிசு (1959) தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959) நான் சொல்லும் ரகசியம் (1959) மஞ்சள் மகிமை (1959) அடுத்த வீட்டு பெண் (1960) அன்பிற்கோர் அண்ணி (1960) இரும்புத்திரை (1960) கடவுளின் குழந்தை (1960) கைதி கண்ணாயிரம் (1960)  கைராசி (1960) தங்கம் மனசு தங்கம் (1960) தங்கரத்தினம் (1960) தெய்வ பிறவி (1960) நான் கண்ட சொர்க்கம் (1960)  பாட்டாளியின் வெற்றி (1960) புதிய பாதை (1960) மீண்ட சொர்க்கம் (1960) அரசிளங்குமாரி (1961) திருடாதே (1961) பாசமலர் (1961) எங்க வீட்டு பெண் (1965) Konte pilla (1967) உயிர் மேல் ஆசை (1967) ராஜாத்தி (1967) தில்லானா மோகனாம்பாள் (1968) நம் நாடு (1969) வியட்நாம் வீடு (1970) . 1970 -குப் பிறகும் படங்களில் நடித்தார்.இவரைப் பற்றிய முழுவிவரம் தெரியவில்லை .

ரம்பையின் காதல் ,நான் கண்ட சொர்க்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் ,சில படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார். பல்வேறு வேடங்களில் நடித்திருந்தாலும் நகைச்சுவை நடிப்பில் ஒரு சிறந்த கலைஞன் .மேலே கொடுத்த படங்கள் உதாரணங்கள் தான் . இந்தக் கலைஞனை பற்றி மேலும் அறிந்து கொள்ள அவரது மற்ற படங்களையும் பார்க்க வேண்டும்.சிரிப்புக்கு உத்திரவாதம் தரும் இந்த மாபெரும் கலைஞனுக்கு நாம் செய்தது என்ன?

எந்த வருடம் பிறந்தார் என்றும் தெரியவில்லை .இறந்த நாள் 28-செப்டம்பர் -1994 என்று விக்கிப்பீடியா சொல்கிறது . மொத்தம் எத்தனை படங்களில் நடித்தார் என்றும் தெரியவில்லை .தனது கடைசி காலம் வரை நாடகம் நடத்தியிருக்கிறார் .எந்தக் கலைஞனையும் வாழும் காலத்தில் தமிழகம் கொண்டாடியதில்லை .அதற்கு இவரும் விதிவிலக்கில்லை .இவரையும் கடைசி காலத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

1971-ல் ஆனந்த விகடனில் வந்த பேட்டி

கேள்வி- " நீங்கள் இருவரும்  இப்போதெல்லாம் படங்களில் ஏன் நடிப்பதில்லை ? நீங்களாக ஒதுங்கிவிட்டீர்களா? அல்லது திரையுலகம் உங்களை ஒதுக்கி விட்டதா?"

பதில் - " ரொம்பச் சங்கடமான கேள்வியைக் கேட்டுட்டீங்களே.." என்று தனக்கே உரித்தான ஒரு குரலுடன் நம்மைப் பார்த்துப் புன்னகைத்தார் தங்கவேலு .
" நானாகவும் ஒதுங்கலை;அவங்களாவும் ஒதுக்கிடலை.என்னமோ தெரியலே ,ஒரு 'பிரேக்' வந்துடுச்சி . இந்த  'பிரேக்' வந்து பத்து வருசம் ஆகப்போவுது . நான் நடிச்சுக்கிட்டிருந்த போது ஒரு கணிசமான தொகையை வாங்கிக்கிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு சில பேர் வந்து குறைந்த தொகையை வாங்கிக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. 'குறைந்த தொகை'யை மனசிலே வச்சுக்கிட்டு எல்லோரும் அந்தப் பக்கம் போயிட்டங்க .நானும் சரோஜாவும் மட்டும் இந்தப் பக்கம் தனியா நின்னுட்டோம். அவ்வளவுதாங்க விசயம்..."

கேள்வி - "இப்போ உங்க வாழ்க்கை வசதி எல்லாம் எப்படி?"

பதில் - " கலைவாணர் ஆசியாலே நான் அப்போ இருந்த மாதிரியே இப்போதும் ஸ்டெடியா,செளக்கியமா இருந்துக்கிட்டு வர்றேன். அதுலே பாருங்க, ஒரு விசேஷம்... நாங்க வெளியூருக்கு நாடகம் நடத்தப் போனா, அங்கே பார்க்கிறவங்க எல்லாம் நான் கல்யாண பரிசிலே சொன்ன டயலாகையே திருப்பி என்னைப் பார்த்துச் சொல்றாங்க. ' தங்கவேலு அண்ணாச்சி, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சி ! ' அப்படீன்னு கேட்கிறாங்க . இதுக்கு என்னங்க சொல்றது...!"  என்று சிரிக்கிறார் தங்கவேலு .

 தங்கவேலுவைப் பற்றி யாராவது புத்தகம் எழுதியிருக்கிறார்களா ? தெரியவில்லை .அவரைப்  பற்றிய புத்தகம் கண்ணில் பட்டால் எனக்குச் சொல்லுங்கள் . இவரை வைத்து ஒரு டாகுமென்ட்ரி படமே எடுக்கலாம் .
கைதி கண்ணாயிரம் படத்தில் மனோகர் ,தங்கவேலுவைப் பார்த்துக் கேட்பார்
"சிங்காரம் (தங்கவேலு )செத்தவனைக் கூட நீ சிரிக்க வச்சுருவியேப்பா ". உண்மை தான். யாரையும் நோக வைக்காமல் எல்லொரையும் சிரிக்க வைத்தவருக்குக் கிடைத்த அங்கிகாரம் இந்த வசனம் .

இந்தக் கலைஞனுக்கு நன்றி சொல்வோம் !

இந்தக் கலைஞனைக் கொண்டாடுவோம் !

நன்றி : ஆனந்த விகடன் ,விக்கிப்பீடியா.

மேலும் படிக்க :

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !

ஜம்புலிங்கமே ஜடாதரா ...!

எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?
..................................................................................................................................................................

Saturday, July 13, 2013

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பள்ளிக்கூடங்கள் ,கல்லூரிகள் தங்கள் பெயர்களில் சாதிப் பெயர்களைக் கொண்டுள்ளன .முதலில் கல்விக்கூடங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வெண்டும் .படித்தவர்கள் சுயசிந்தனையாளர்களாக இருக்கும் வகையில் நம் கல்விமுறை அமைய வெண்டும் .பல தனியார் நிறுவனங்கள் சாதி அடிப்படையிலேயே வேலையாட்களைத் தேர்வு செய்கின்றன .ஒவ்வொரு விழாவின் போதும் வைக்கப்படும் பேனர்கள் சாதி வெறியைப் பரப்புகின்றன.அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதியை வெளிப்படுத்தும் பேனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 

உலகெங்கிலும் மனிதர்கள் மீதான அடக்குமுறை மனிதர்களாலேயே வெவ்வேறு பெயர்களில் நிகழ்த்தப்படுகிறது .இனம் ,மதம்,மொழி மற்றும் சாதி சார்ந்து உலகம் முழுக்கவே அடக்குமுறைகள் நிகழ்கின்றன .இன்னொரு மனிதனை அடக்க நினைக்கும் அனைத்தையும் எதிர்க்க வேண்டும்.

படிக்காதவர்களை விட படித்தவர்கள் அதிகமான சாதி வெறியுடன் இருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் . சாதியும் அரசியலும் பிரிக்க முடியாத நிலையில் இருக்கின்றன . சாதிகளை களைய வேண்டிய கல்விக்கூடங்கள்,தங்கள் பெயர்களில் சாதிகளின் பெயரைத் தாங்கி இருக்கின்றன . பள்ளியிலிருந்து தொடங்க வெண்டும். சேர்க்கையின் போதே சாதி கேட்கப்படுகிறதே.  மனிதன் எப்போதுமே தனக்கு கீழ் அடிமையாக யாரவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். ஆண்டான் அடிமை மனநிலை இன்னும் மாறவில்லை .பொருளாதார வளர்ச்சி மட்டுமே இன்று தீர்வாக இருக்கிறது . எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதிகாரமும் , பணமும் மட்டுமெ நம் சமூக அமைப்பில் மரியாதையைத் பெற்றுத்தருகிறது . அதை எல்லோரும் அடையவிடாமல் தடுக்கவே ஒரு பெரும் கூட்டம் தொடர்ந்து செயல்படுகிறது.

நம் பெயரைச் சொல்லும் போதே நம் மதத்தையும் சேர்த்தே சொல்கிறோம்.தமிழன் என்று சொல்லும் போதே நம் இனதத்திலுள்ள சாதிகளையும் சேர்த்தே சொல்கிறோம்.சாதி இல்லாமல் போக தமிழன் என்ற இன அடையாளத்தை துறக்க வேண்டும்.எத்தனை பேர் தயார்? சாதி அடையாளத்தை வெறுக்கும் அல்லது வெறுக்க நினைக்கும் பலர் இன அடையாளத்தை துறக்கத் தயாறாக இல்லை.சாதி,மதம் ,இனம்,மொழி,மாநிலம்,நாடு சார்ந்த பேதங்கள் உலகெங்கிலும் இருக்கின்றன. பேதங்களால் வரும் பிரச்சனைகளை சிறிது சிறிதாகத்தான் குறைக்க முடியும் .பிரச்சனை வரும்போது மட்டும் ஒன்று கூடி கத்திப் கத்திப் பேசிவிட்டு ஓய்ந்து விடுவதால் ஒன்றும் நடக்காது .

பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் சாதி,மத,இன ரீதியான பிரச்சனைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது . பெண் தாழ்ந்த சாதி என்று வரையறுக்கப்படும் சாதியாக இருந்து,  ஆண் உயர்ந்த சாதி  என்று வரையறுக்கப்படும் சாதியாக இருந்துவிட்டால் அங்கே பிரச்சனை மூடி மறைக்கப்படுகிறது .மூடத்தனமான கலாச்சாரக் கூறுகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாதவரை இம்மாதிரியான பிரச்சனைகள் அரசியலாக்கப்படும் .
முதலில் ஒட்டு மொத்த பெண் விடுதலைக்காகப் போராடுவோம் .பிறகு சாதிக்கு எதிராக போராடுவோம்.

கற்காலத்தை நோக்கிப் பயணித்தால் மட்டுமே பொதுத்தளம் சாத்தியம்.பூமியில் எந்தப்பகுதியில் வாழும் மனிதனும் நம்மைப் போலவே குருதியும் , மூக்கிலே மூச்சு விடக்கூடியவள்/வன் தான் என்பதை உணர்ந்து எல்லோரும் மனிதர்கள் என்ற நிலையை அடைந்து பூமியில் இருக்கும் எல்லோரும் உயிரினங்கள் என்ற நிலையை அடைய வேண்டும். எப்பொது???

மேலும் படிக்க:

கலாசார விடுதலையே சமூக விடுதலை !  

ஒன்று எங்கள் ஜாதியே ...!  

கட்சி அரசியலை வேரறுப்போம் !  
..................................................................................................................................................................

Thursday, July 4, 2013

உதிரிப்பூக்கள் !


வாழ்க்கை நமக்குத்தரும் அனுபவங்கள் அற்புதமானவை . உறவுகள் , இயற்கை, காலம் , சமூகம்  ஆகியவை தரும் அனுபவங்களை விட ஒரு திரைப்படம் தரும் அனுபவம் அலாதியானது . நீண்ட நாட்களாக காத்திருந்து பார்த்த திரைப்படம் " உதிரிப்பூக்கள்" . ஒரே திரைப்படத்தில் இவ்வளவு அனுபவங்கள் கிடைப்பது அபூர்வம் . கலாச்சார கோட்பாடுகளுக்கு உட்பட்டு ,காலச்சாரத்தை விசாரணை செய்யும் வகையில் இத்திரைப்படம் கட்டமைக்கப்பட்டுள்ளது .இந்த ஒரே திரைப்படத்திற்காக இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமா பெருமைப்பட்டுக்கொள்ளலாம் .

1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத்திரைப்படம் இன்றுவரை ஈர்ப்புக் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், உயிரோட்டமான திரைக்கதை தான் .புதுமைப்பித்தன் எழுதிய " சிற்றன்னை " என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது .பொதுவாகவே மகேந்திரனின் திரைப்படங்களில் வசனங்கள் கூர்மையாக இருக்கும் ;இந்தப்படத்திலும் அப்படியே . ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஏதோ ஒரு இடத்தில் ஒரு அழுத்தமான வசனத்தை பேசிவிடுகிறது .கதாப்பாத்திரங்களின் தேர்வும் ,இந்தத் திரைக்கதையில் அந்தக் கதாப்பாத்திரங்கள் கோர்க்கப்பட்டிருக்கும் விதமும் அவ்வளவு அழகு.

தொடர்ந்து கதாநாயகன் துதி பாடும் படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் முற்றிலும் கதையை நம்பிப் படமெடுத்து அதை வெற்றி பெறவும் செய்த பெருமை மகேந்திரனுடையது . தமிழ்சினிமா வரலாற்றில் இந்தப்படம் ஒரு திருப்புமுனை .அதுவரை வெற்றி விதிகள் என்று சொல்லப்பட்ட அத்தனையையும் இந்தப்படம் மீறியது. எப்படிப்பார்த்தாலும் கதையை நம்பி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தான் காலம் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படுகின்றன . 

விஜயன் ,சுந்தரவடிவேலுவாக நடித்திருக்கிறார். அவரது முகம் வெளிப்படுத்தும் பாவங்கள் சிறப்பானது .எவ்வளவு நடந்தாலும் எதைப்பற்றியும் கவலையில்லாமல் தன் போக்கிலே கடைசிவரை இருக்கும் வகையில் இவரது கதாப்பாத்திரம் அமைந்துள்ளது . இந்தப் படத்திற்கு பிறகு விஜயன் எத்தனையோ படங்களில் நடித்தாலும் இந்த சுந்தரவடிவேலு கதாப்பாத்திரம் தான் நம் கண் முன்னே வந்து போகிறது .

லஷ்மியாக அஷ்வினி வாழ்ந்துள்ளார். திரைப்படத்தில் இரண்டு இடங்களில் கதை சொல்லும் பாணியில் புதுமையை புகுத்தியுள்ளார் . சுந்தரவடிவேலுவின் அம்மா முறை உள்ளவர், அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இவர் பதில் சொல்வதற்குப் பதிலாக இவரது மகன் பதில் சொல்வதுபோல காட்சியும் , லஷ்மி தன் கணவனான சுந்தரவடிவேலுவிடம் கேட்க நினைத்த கேள்வியாக (எனக்கு இன்னொரு புருசன் வேணும்னு நான் கேட்டா நீங்க சரீனு சொல்வீங்களா இப்படி சத்தம் போட்டு கேட்க எந்த பொண்ணுக்கும் வழி இல்லையே ) காட்டப்படும் காட்சியும் நிச்சயம் புதுமை தான் . சுந்தரவடிவேலுவிடம் அஸ்வினி மற்றும் சரத்பாபு அடிவாங்கிய காட்சிகளை நேரடியாக காட்டாமல் தவிர்த்தது அழகு . 

சாருஹாசன் பேசும் ஒவ்வொரு வசனமும் அர்த்தம் பொதிந்ததாகவும் ,முதிர்ச்சியாகவும் இருக்கிறது . அட என்னடா நம்ம ஊரல எல்லாம் பஞ்சாயத்து ராத்திரில நடக்கும் , நிறையப் படத்துல பகல்ல நடக்கற மாதிரியே காமிக்கிறாங்களேனு   நீண்ட காலம எனக்கு ஒரு வருத்தம் இருந்தது .இந்தப் படம் பார்த்த பிறகு அந்த வருத்தம் போய்விட்டது .எங்க ஊர்ல பஞ்சாயத்து ராத்திரில தான் நடக்கும் ; வாய்சண்டை அதிகம் ,கைச்சண்டை குறைவு . 

ஒரு கலாச்சார அமைப்பில் ஒருவன், மற்றவர்களின் விருப்பதிற்கு மாறாக வரம்பு மீறீ நடப்பதால் ஏற்படும் சிக்கல்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ,இயக்குனர் மகேந்திரன் . நான் இதுவரை பார்த்த திரைப்படங்களில் ஒரு திரைப்படத்தின் தலைப்பு , திரைப்படத்திற்கு இவ்வளவு பொருத்தமாக அமைந்தது இந்தத் திரைப்படத்திற்குத்தான் .இளையராஜாவின் பின்னணி இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது . இந்தப்படத்தில் பாடியதற்காக எஸ்.ஜானகி தமிழக அரசின் சிறந்த பின்னணிப்பாடகி விருதை வென்றார் . இந்தப்படம் ,எடிட்டர் லெனின் அவர்களின் முதல் திரைப்படம்.

மகேந்திரன் , தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் . இவரது திரைமொழியும் ,வசனங்களும் வீரியம் மிக்கவை .குறைவான படங்களே இயக்கியிருந்தாலும் தனித்துவமானவர் .இவரது எழுத்தும் வசீகரமானவை .விகடன் பொக்கிசத்தில் வந்த இவரது பேட்டி அருமை . நிஜ வாழ்விலும் தனித்துவமானவர் என்பதை அவரது பேட்டி உணர்த்தியது . இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வெண்டும் ,அவர் MGR . ஆம் திரைத்துறையை விட்டு மூன்று முறை விலகிச்சென்ற மகேந்திரனை மீண்டும் திரைத்துறைக்கு கொண்டு வந்து சேர்த்தவர் . மணிரத்னம் உதவியாளராக சேர விரும்பிய ஒரே இயக்குனர் மகேந்திரன் மட்டும் தான்.
மகேந்திரனின் மற்ற படங்கள் முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுகள், ஜானி,நெஞ்சத்தை கிள்ளாதே ,நண்டு,மெட்டி,அழகிய கண்ணே,கை கொடுக்கும் கை,கண்ணுக்கு மை அழகு,ஊர் பஞ்சாயத்து,சாசனம் . நல்ல அனுபவத்திற்கு அவரது மற்ற படங்ளையும் பார்க்க வெண்டும் .


உதிரிப்பூக்கள் :


மேலும் படிக்க :

அவள் அப்படித்தான் !

..................................................................................................................................................................

Saturday, June 8, 2013

அவள் அப்படித்தான் !

தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு திரைப்படங்களைத் தவிர்த்து வாழ்வது மிகவும் கடினமான காரியம் . அந்த அளவிற்கு திரைப்படங்கள் நம் வாழ்வுடன் பிண்ணிப்  பிணைந்து உள்ளன . எந்த மாதிரியான படங்களை பார்க்க வேண்டும் என்பதை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன . இது ரசனை சார்ந்த விசயம் என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும்படியான திரைப்படம் இதுவரை எடுக்கப்படவில்லை .ஒருவருக்கு  பிடிக்கும் ஒரு திரைப்படம் மற்றவருக்கு பிடிக்காது . அவரவர்களுக்கு பிடிக்கும் படங்களைப் பார்க்க வேண்டியது தான் .

 ஒரு சிலருக்கு சிறுவயதில் பார்க்க நினைத்த படங்களை இப்போது பார்க்க வேண்டும் என்று தோன்றும் . தனக்குப் பிடித்த நடிகர்,நடிகை மற்றும்  இயக்குனர்களின் வேறு படங்களைப் பார்க்கத் தோன்றும் . வாசிப்பின் மூலமும் நிறைய திரைப்படங்களைப் பார்க்கத் தோன்றும் . நண்பர்கள் மூலமாகவும் தற்போது Facebook மூலமாகவும் உலகெங்கும் வெவ்வேறு மொழிகளில் உருவான மாறுபட்ட திரைப்படங்கள் பற்றித் தெரிந்து கொள்கிறோம் .புதுத்திரைப்படங்கள் ,படம் பார்த்தவர்களின் கருத்துக்களை வைத்தே மற்றவர்களால் பார்க்கப்படுகின்றன . திரைப்படம் பார்க்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவருக்கும்  " இந்தப் திரைப்படங்களைப்  பார்க்க வேண்டும் !" என்று பட்டியல் வைத்து இருப்பார்கள் . ஒவ்வொருவரின் பட்டியலும் கண்டிப்பாக வேறுபடும் .

பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல், அனுபவம் கூட கூட  மாறிக்கொண்டே இருக்கும் . நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த திரைப்படங்களில் ஒன்றுதான், " அவள் அப்படித்தான் ". 1978  ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை இயக்கியவர்,ருத்ரய்யா . ஸ்ரீபிரியா,கமல்,ரஜினி மற்றும் பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். எனது எதிர்பார்ப்புகளை பல மடங்கு பூர்த்தி செய்த படம் .மஞ்சு,அருண் மற்றும் தியாகு இந்த மூன்று கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான உரையாடல் தான் இந்தத் திரைப்படம் . உரையாடல்களின் மையப்புள்ளி அருண் கதாப்பாத்திரம் . அருண் மற்றும் தியாகு ஆகிய இருவருக்கும் இடையேயான உரையாடல் .அருண் மற்றும் மஞ்சு இடையேயான உரையாடல் இத்திரைப்படத்தில் அடுத்தடுத்து இடம்பெறுகிறது . ஆனால் , இந்தக் கதையின் மையப்புள்ளி மஞ்சு கதாப்பாத்திரம் .

உரையாடல் ,  இந்தத் திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலப்படங்கள் போல இந்தப்படத்திற்கு ருத்ரய்யா ,வண்ணநிலவன் மற்றும் சோமசுந்தரேஸ்வர் ஆகிய மூவரும்  இணைந்து திரைக்கதையும் ,உரையாடலும் எழுதியுள்ளனர் .தமிழ்ச் சூழலில் இது மிகவும் அரிது . ஆங்கில வசனங்கள் அதிகம் இடம்பெற்று இருந்தாலும் கதைச் சூழலுக்குப் அழகாக பொருந்துகின்றன. ஒரு சமூக சேவகி கேமரா முன்பு  தோன்ற மேக் அப் போடனுமா னு கேட்குறாங்க .அதற்கு மஞ்சு கதாப்பாத்திரம் சொல்லும் பதில் " நீங்க எப்பவும் போடுவீங்களே இந்த சொசைட்டி மேக் அப் அதைப் போட்டா போதும் " ," வித்தியாசமா இருக்குற மாதிரி காட்டிகிறது ஒரு passon " என்று மஞ்சு தியாகுவே பார்த்து கேட்பார் .அதற்கு அருண் (கமல்)" அப்படி இருக்குறதுதான் சரி னு நான் நம்பறேன் "என்று சொல்வார் . அந்த வசனம் இன்று கமலை நேரடியாகவே விமர்சிப்பது போல அமைத்துவிட்டது . இன்னும் குறிப்பிடும்படியான வசனங்கள் படமெங்கும் உள்ளன .

மனித மனங்களின் கருப்புப்பக்கங்களைப் படம்பிடித்துக் காட்டப்படுவதன் காரணமாகவோ என்னவோ இந்தப்படத்தின் பெரும் பகுதி இருட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது . குளோசப் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன . நல்லுசாமி மற்றும் ஞானசேகரன்  ஆகியோர்  ஒளிப்பதிவு செய்துள்ளனர் . இளையராஜாவின் இசையில் "உறவுகள் தொடர்கதை .."," பன்னீர் புஷ்பங்களே .." ஆகிய பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன .இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர், கங்கை அமரன் .

ஆறுமுகம் என்னும் தனது பெயரை ருத்ரய்யா என்று மாற்றி வைத்துக்கொண்டார் இப்படத்தின் இயக்குனர் . இவர் இயக்கிய இன்னொரு படம் " கிராமத்து அத்தியாயம் ". அதன்பிறகு படம் இயக்கவில்லை ; கமலுக்காகவும் , பாலச்சந்தருக்காகவும் பல ஆண்டுகள் வேலை செய்துள்ளார் . இப்படி ஒரு படம் எடுக்க மிகப்பெரும் துணிச்சல் வேண்டும் . படிப்பறிவு சதவீதம் மிகவும் அதிகரித்துள்ள இன்றைய சூழலில் இப்படி ஒரு படம் எடுக்க யாருக்கும் துணிச்சல் இல்லை . 1978 -ல் இப்படி ஒரு படம் தயாரிக்க யாரும் முன்வராத காரணத்தாலோ என்னவோ ருத்ரய்யாவே இந்தப்படத்தை தயாரித்துள்ளார் . 

டைட்டில் முதல் முடிவு வரை இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகிறது . டாகுமென்ட்ரி படத்திற்கு செயல்ரீல் என்று சொன்னது பால்ய காலத்தை நினைவு படுத்தியது . மஞ்சு  கதாப்பாத்திரம் ,மிகவும் சிறப்பாக  கட்டமைக்கப்பட்டுள்ளது . பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்து மிகவும் குறைந்த படங்களே தமிழ் மொழியில் எடுக்கப்பட்டுள்ளன . அதுவும் இந்தப்படம் பெண்களைப் பற்றிப் பேசுகிறது . சிறந்த தமிழ்ப் படங்களை
வரிசைப்படுத்தினால் முதல் 5 படங்களுக்குள் இந்தப்படம் கண்டிப்பாக இடம்பெறும் . உரையாடலுக்காக மட்டுமே இந்தப்படம் இன்னும் பல வருடங்கள் பேசப்படும் .

அவள் அப்படித்தான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நல்லுசாமி அவர்களின் பேட்டி ஏப்ரல் மாத " அந்திமழை " மாத இதழில் வந்துள்ளது .இந்தப் படம் பற்றி அவர் கூறி இருக்கும் தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன . இந்தப் பேட்டியை அவசியம் படியுங்கள்.அந்தப் பேட்டி -http://andhimazhai.com/news/view/nallusamy-12-4-2013.html



அவள் அப்படித்தான்  : ( ஒரு நல்ல அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் )



கடந்த ஒரு வருடத்தில் தேடிப்  பார்த்த படங்கள்  400 blows , City Lights ,Modern Times ,The Great Dictator ,Pather Panchali ,செம்மீன் ,பாலை ,மதுபானக்கடை,Cinema Paradiso ,Spring Summer Winter Fall ,Crocodile . பாலை படம் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் . சார்லி சாப்ளின் ஒரு  மாபெரும் கலைஞன் .சாப்ளினைப் போல் மனிதர்களை இவ்வளவு தூரம் யாரும் பகடி செய்ததில்லை.கொரிய இயக்குனரான கிம் டி டுக் -ன்  படங்கள் (Spring Summer Winter Fall ,Crocodile,etc ) நம்மை தத்துவ விசாரணை செய்பவை .

தற்போது பார்க்க விரும்பும் படங்கள் - வீடு ,உதிரிப்பூக்கள் ,La Strada ,Rashomon,Lime Light ..

மேலும் படிக்க :

ஆக்காட்டி ஆக்காட்டி ! 

கட்ட புள்ள குட்ட புள்ள ...!

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !
.....................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms