Wednesday, August 17, 2011

காங்கிரஸை அழிப்போம் !

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட நம் பொருளாதரத்தை வணிகமயமாக மாற்றியதன் விளைவு தான் இது . வழக்கமான உணவுப் பொருட்களை பயிரிட்டு வந்த விவசாயிகளை, பணப்பயிர்களை பயிரிட அரசு ஊக்குவித்தது.  வழக்கமான பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு, அந்த விளைபொருட்கள் விற்காவிட்டாலும், அந்த உணவு தானியங்களை வைத்து பட்டினியை தவிர்க்க முடிந்தது.  ஆனால், பருத்தி ,மக்காச்சோளம் ,சூரியகாந்தி போன்ற பணப்பயிர்களை பயிரிட்டு, உரிய விலை கிடைக்காத விவசாயிகள், கடும் வறுமையில் சிக்கி, தற்கொலையை நோக்கி தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

வனத்தை தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் மலைவாழ் மக்களை அப்புறப்படுத்துகிறார்கள் . எதற்காக என்றால் அங்கு இருக்கும் கனிம வளத்தைத் தோண்டி எடுக்க . இயற்கை வளத்தையும் அழித்து , மக்களையும் அப்புறப்படுத்தி பணமுதலைகளுக்கு விற்பதை வளர்ச்சி என்று சொல்கிறார்கள் . பாஸ்கோ நிறுவனம் ஒரிசாவை அழிக்கப் பார்க்கிறது . இப்படியே போனால் ஒவ்வொரு மாநிலத்தையும்  ஒவ்வொரு நிறுவனத்திற்கு விற்றுவிடுவார்கள் . அவர்கள் இந்தியாவைச் சுரண்டி இந்தியாவை குப்பைத்தொட்டி  ஆக்கிவிட்டு பணத்தை எண்ணிக்கொண்டு போய்விடுவார்கள் . இளிச்சவாயர்கள் நாம் மட்டும் தான் . 

உண்மையில் கறை படிந்த கட்சி காங்கிரஸ் தான் . சாதாரண கறை அல்ல ரத்தக்கறை . விவசாயிகளின் ரத்தம் , மலைவாழ்மக்களின் ரத்தம் ,ஈழத் தமிழர்களின் ரத்தம் , தற்போது ஒரிசா மக்களின் ரத்தம் என்று ரத்தத்தைக்  குடித்து உயிர் வாழ்கிறது காங்கிரஸ் . இலங்கையில்  " இறுதி கட்டப்போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மை தான் " என்று இலங்கை அரசே ஒப்புக்கொண்டுவிட்ட நிலையிலும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு எதுவும் சொல்லாமல் மவுனமாக  இருக்கிறது .இந்த மவுனத்தின் மூலம் போரை நடத்தியது இலங்கை அல்ல நாங்கள் தான் என்று இன்றைய காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டு விட்டது .காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரதமர் கொல்லப்பட்டதற்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களைக் கொன்று விட்டனர் . இது போதாது என்று இன்னும் மூவரையும் தூக்கிலிட்டு கொல்ல நினைக்கிறது காங்கிரஸ் அரசு . காங்கிரசின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை .

காங்கிரஸ் ஆட்சியில் பெருமுதலாளிகள் மட்டுமே பிழைக்க முடியும் , வளர முடியும் . சாதாரண மக்கள் வளரவே முடியாது  . பெரும் முதலாளிகளை வளர வைக்க எது வேண்டுமானாலும் செய்வார்கள் . நமக்கு எதுவும் செய்யமாட்டார்கள் .காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுக்கும் பேட்டியைப் பார்த்தால்  நம்மைக் கேலிப்பொருளாக மட்டுமே பார்ப்பது புரியும் . பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு பொம்மை சொல்கிறது " உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழிக்க முடியாது " என்று . வேறு எப்படி ஒழிப்பது .ஆயுதம் எடுத்தா ? நாங்கள் " ஓட்டு " என்னும் ஆயுதத்தை எடுத்துவிட்டோம்  உங்களை ஒழிப்பதற்கு . ஒழிக்காமல் ஓய மாட்டோம் . நமது சுதந்திரமே உண்ணாவிரதத்தால்தானே கிடைத்தது .

 இந்த நிலையில் தொடர் சில்லறை  வணிக கடைகள் தொடங்குவதற்கு 51 % அந்நிய முதலீட்டை அனுமதிக்க இருக்கிறது . இதன் மூலம் விலைவாசி குறையும் என்று அரசு சொல்கிறது . ஆனால் அப்படி நடக்காது . நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும் ,சிறுவணிகர்களும் அழிக்கப்படுவார்கள் .நாட்டில்  சிறுமுதலாளிகள் இருக்க மாட்டார்கள் .அந்நிய நிறுவனங்களின்  தொழிலாளிகளாக மாற்றப்படுவார்கள்  .சீனத் தயாரிப்புகள் மலிவான விலையில் கிடைக்கும் .லாபம் அமெரிக்காவுக்குச் சென்றுவிடும் .நம் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சார்ந்ததாக மாறிவிடும் .அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் நமது பொருளாதாரமும் இப்போது பாதிக்கப்படுவதை விட அதிகளவு  பாதிக்கும் .நாமெல்லாம் பிச்சைக்காரர்களாகவும் ,அடிமைகளாகவும் மாற்றப்படுவோம் .இவற்றில் எதையும் உணரும் மனநிலையில் தற்போதைய  காங்கிரஸ் அரசு இல்லை .

 சர்க்கரைநோய் , இதயநோய் , எயிட்ஸ் ,புற்றுநோய் அதிகம் உள்ள தேசமாக இந்தியா மாறிப்போய் விட்டது . இவற்றைத் தடுப்பதற்கோ ,குறைப்பதற்கோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை . போலி மருந்து , மாத்திரைகளும் , மற்ற நாடுகளில் தடை செய்யப்பட மருத்துகளும் இந்தியாவில்  தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன . பெரிய மருத்துவமனைகள் பணத்தைக் குறி வைத்தே இயங்குகின்றன . இவர்களுக்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை. 

121 கோடி மக்கள் இருந்தும் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்லவே போராட வேண்டியிருக்கிறது . ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுக்கு என்று ஒதுக்கப்படும் நிதி எங்கே போகிறது .

நம் மக்கள்தொகையில் 30 % அதிகமானவர்கள் ஒரு வேளை உணவுக்கே போராடும் நிலை தான் இன்றும் உள்ளது .எத்தனையோ நோய்கள் உலகில் இருந்தாலும் பசியால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை இன்றும்அதிகம் . உலகில் பசியால் வாடும் மூவரில் ஒருவர் இந்தியர் (http://www.bhookh.com/) . ஆனால் உலகப் பெரும்பணக்காரர்களில்  முதல் பத்தில் மூவர் இந்தியாவில் தான் உள்ளனர் . என்ன கொடுமை இது ? எவ்வளவு பெரிய பொருளாதார வேறுபாடு . எங்கெல்லாம் இந்தப் பொருளாதார வேறுபாடு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறது . எங்கெல்லாம் இந்தப் பொருளாதார வேறுபாடு அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நல்லாட்சி நடக்கவில்லை . கண்டிப்பாக இந்தியாவில் நடப்பது நல்லாட்சி அல்ல கொல்லாட்சி .

தேசியக்கொடியின் நிறங்களை காங்கிரஸ் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் . தேசிய கொடியின் நிறங்களில் இரண்டை மட்டுமே மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் . 

மனசாட்சி உள்ள எந்த மனிதனும் காங்கிரஸ் கட்சியில்  இருக்கமாட்டான் . ஏனென்றால் உண்மையான காங்கிரஸ் காமராஜர் செத்த போதே செத்துவிட்டது  . உண்மையான  காங்கிரஸ்காரர் யாரும் இன்று  காங்கிரஸில் இல்லை. காங்கிரஸ் இந்தியாவை ஆட்சி செய்யும் வரை நான் இந்தியன் என்று சொல்லவே வெட்கப்படுகிறேன் . உள்ளாட்சித்  தேர்தல் , சட்டமன்றத்  தேர்தல் , நாடாளுமன்றத்  தேர்தல் என்று எந்தத் தேர்தலாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட வேண்டாம் .வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள் . தன் தலையில் தானே தீ வைத்துக்கொள்ள விரும்புவர்கள் மட்டும் மனசாட்சியே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் பொன்னான ஒட்டைப்போடுங்கள் .

 இந்தியா இன்றும் அடிமை தேசம் தான் . அன்று அந்நியர்கள் நேரடியாக ஆண்டார்கள் .இன்று ,  காங்கிரஸ் உதவியுடன் மறைமுகமாக ஆள்கிறார்கள் . என்று இந்த போலியான காங்கிரஸ் அழிகிறதோ அன்று தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் !

போலியான காங்கிரஸ் அழியட்டும் ! 

இந்தியா சுதந்திரம் பெறட்டும் !

மேலும் படிக்க :



................................................... 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms