Thursday, July 4, 2013

உதிரிப்பூக்கள் !


வாழ்க்கை நமக்குத்தரும் அனுபவங்கள் அற்புதமானவை . உறவுகள் , இயற்கை, காலம் , சமூகம்  ஆகியவை தரும் அனுபவங்களை விட ஒரு திரைப்படம் தரும் அனுபவம் அலாதியானது . நீண்ட நாட்களாக காத்திருந்து பார்த்த திரைப்படம் " உதிரிப்பூக்கள்" . ஒரே திரைப்படத்தில் இவ்வளவு அனுபவங்கள் கிடைப்பது அபூர்வம் . கலாச்சார கோட்பாடுகளுக்கு உட்பட்டு ,காலச்சாரத்தை விசாரணை செய்யும் வகையில் இத்திரைப்படம் கட்டமைக்கப்பட்டுள்ளது .இந்த ஒரே திரைப்படத்திற்காக இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமா பெருமைப்பட்டுக்கொள்ளலாம் .

1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத்திரைப்படம் இன்றுவரை ஈர்ப்புக் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், உயிரோட்டமான திரைக்கதை தான் .புதுமைப்பித்தன் எழுதிய " சிற்றன்னை " என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது .பொதுவாகவே மகேந்திரனின் திரைப்படங்களில் வசனங்கள் கூர்மையாக இருக்கும் ;இந்தப்படத்திலும் அப்படியே . ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஏதோ ஒரு இடத்தில் ஒரு அழுத்தமான வசனத்தை பேசிவிடுகிறது .கதாப்பாத்திரங்களின் தேர்வும் ,இந்தத் திரைக்கதையில் அந்தக் கதாப்பாத்திரங்கள் கோர்க்கப்பட்டிருக்கும் விதமும் அவ்வளவு அழகு.

தொடர்ந்து கதாநாயகன் துதி பாடும் படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் முற்றிலும் கதையை நம்பிப் படமெடுத்து அதை வெற்றி பெறவும் செய்த பெருமை மகேந்திரனுடையது . தமிழ்சினிமா வரலாற்றில் இந்தப்படம் ஒரு திருப்புமுனை .அதுவரை வெற்றி விதிகள் என்று சொல்லப்பட்ட அத்தனையையும் இந்தப்படம் மீறியது. எப்படிப்பார்த்தாலும் கதையை நம்பி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தான் காலம் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படுகின்றன . 

விஜயன் ,சுந்தரவடிவேலுவாக நடித்திருக்கிறார். அவரது முகம் வெளிப்படுத்தும் பாவங்கள் சிறப்பானது .எவ்வளவு நடந்தாலும் எதைப்பற்றியும் கவலையில்லாமல் தன் போக்கிலே கடைசிவரை இருக்கும் வகையில் இவரது கதாப்பாத்திரம் அமைந்துள்ளது . இந்தப் படத்திற்கு பிறகு விஜயன் எத்தனையோ படங்களில் நடித்தாலும் இந்த சுந்தரவடிவேலு கதாப்பாத்திரம் தான் நம் கண் முன்னே வந்து போகிறது .

லஷ்மியாக அஷ்வினி வாழ்ந்துள்ளார். திரைப்படத்தில் இரண்டு இடங்களில் கதை சொல்லும் பாணியில் புதுமையை புகுத்தியுள்ளார் . சுந்தரவடிவேலுவின் அம்மா முறை உள்ளவர், அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இவர் பதில் சொல்வதற்குப் பதிலாக இவரது மகன் பதில் சொல்வதுபோல காட்சியும் , லஷ்மி தன் கணவனான சுந்தரவடிவேலுவிடம் கேட்க நினைத்த கேள்வியாக (எனக்கு இன்னொரு புருசன் வேணும்னு நான் கேட்டா நீங்க சரீனு சொல்வீங்களா இப்படி சத்தம் போட்டு கேட்க எந்த பொண்ணுக்கும் வழி இல்லையே ) காட்டப்படும் காட்சியும் நிச்சயம் புதுமை தான் . சுந்தரவடிவேலுவிடம் அஸ்வினி மற்றும் சரத்பாபு அடிவாங்கிய காட்சிகளை நேரடியாக காட்டாமல் தவிர்த்தது அழகு . 

சாருஹாசன் பேசும் ஒவ்வொரு வசனமும் அர்த்தம் பொதிந்ததாகவும் ,முதிர்ச்சியாகவும் இருக்கிறது . அட என்னடா நம்ம ஊரல எல்லாம் பஞ்சாயத்து ராத்திரில நடக்கும் , நிறையப் படத்துல பகல்ல நடக்கற மாதிரியே காமிக்கிறாங்களேனு   நீண்ட காலம எனக்கு ஒரு வருத்தம் இருந்தது .இந்தப் படம் பார்த்த பிறகு அந்த வருத்தம் போய்விட்டது .எங்க ஊர்ல பஞ்சாயத்து ராத்திரில தான் நடக்கும் ; வாய்சண்டை அதிகம் ,கைச்சண்டை குறைவு . 

ஒரு கலாச்சார அமைப்பில் ஒருவன், மற்றவர்களின் விருப்பதிற்கு மாறாக வரம்பு மீறீ நடப்பதால் ஏற்படும் சிக்கல்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ,இயக்குனர் மகேந்திரன் . நான் இதுவரை பார்த்த திரைப்படங்களில் ஒரு திரைப்படத்தின் தலைப்பு , திரைப்படத்திற்கு இவ்வளவு பொருத்தமாக அமைந்தது இந்தத் திரைப்படத்திற்குத்தான் .இளையராஜாவின் பின்னணி இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது . இந்தப்படத்தில் பாடியதற்காக எஸ்.ஜானகி தமிழக அரசின் சிறந்த பின்னணிப்பாடகி விருதை வென்றார் . இந்தப்படம் ,எடிட்டர் லெனின் அவர்களின் முதல் திரைப்படம்.

மகேந்திரன் , தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் . இவரது திரைமொழியும் ,வசனங்களும் வீரியம் மிக்கவை .குறைவான படங்களே இயக்கியிருந்தாலும் தனித்துவமானவர் .இவரது எழுத்தும் வசீகரமானவை .விகடன் பொக்கிசத்தில் வந்த இவரது பேட்டி அருமை . நிஜ வாழ்விலும் தனித்துவமானவர் என்பதை அவரது பேட்டி உணர்த்தியது . இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வெண்டும் ,அவர் MGR . ஆம் திரைத்துறையை விட்டு மூன்று முறை விலகிச்சென்ற மகேந்திரனை மீண்டும் திரைத்துறைக்கு கொண்டு வந்து சேர்த்தவர் . மணிரத்னம் உதவியாளராக சேர விரும்பிய ஒரே இயக்குனர் மகேந்திரன் மட்டும் தான்.
மகேந்திரனின் மற்ற படங்கள் முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுகள், ஜானி,நெஞ்சத்தை கிள்ளாதே ,நண்டு,மெட்டி,அழகிய கண்ணே,கை கொடுக்கும் கை,கண்ணுக்கு மை அழகு,ஊர் பஞ்சாயத்து,சாசனம் . நல்ல அனுபவத்திற்கு அவரது மற்ற படங்ளையும் பார்க்க வெண்டும் .


உதிரிப்பூக்கள் :


மேலும் படிக்க :

அவள் அப்படித்தான் !

..................................................................................................................................................................

Saturday, June 8, 2013

அவள் அப்படித்தான் !

தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு திரைப்படங்களைத் தவிர்த்து வாழ்வது மிகவும் கடினமான காரியம் . அந்த அளவிற்கு திரைப்படங்கள் நம் வாழ்வுடன் பிண்ணிப்  பிணைந்து உள்ளன . எந்த மாதிரியான படங்களை பார்க்க வேண்டும் என்பதை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன . இது ரசனை சார்ந்த விசயம் என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும்படியான திரைப்படம் இதுவரை எடுக்கப்படவில்லை .ஒருவருக்கு  பிடிக்கும் ஒரு திரைப்படம் மற்றவருக்கு பிடிக்காது . அவரவர்களுக்கு பிடிக்கும் படங்களைப் பார்க்க வேண்டியது தான் .

 ஒரு சிலருக்கு சிறுவயதில் பார்க்க நினைத்த படங்களை இப்போது பார்க்க வேண்டும் என்று தோன்றும் . தனக்குப் பிடித்த நடிகர்,நடிகை மற்றும்  இயக்குனர்களின் வேறு படங்களைப் பார்க்கத் தோன்றும் . வாசிப்பின் மூலமும் நிறைய திரைப்படங்களைப் பார்க்கத் தோன்றும் . நண்பர்கள் மூலமாகவும் தற்போது Facebook மூலமாகவும் உலகெங்கும் வெவ்வேறு மொழிகளில் உருவான மாறுபட்ட திரைப்படங்கள் பற்றித் தெரிந்து கொள்கிறோம் .புதுத்திரைப்படங்கள் ,படம் பார்த்தவர்களின் கருத்துக்களை வைத்தே மற்றவர்களால் பார்க்கப்படுகின்றன . திரைப்படம் பார்க்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவருக்கும்  " இந்தப் திரைப்படங்களைப்  பார்க்க வேண்டும் !" என்று பட்டியல் வைத்து இருப்பார்கள் . ஒவ்வொருவரின் பட்டியலும் கண்டிப்பாக வேறுபடும் .

பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல், அனுபவம் கூட கூட  மாறிக்கொண்டே இருக்கும் . நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த திரைப்படங்களில் ஒன்றுதான், " அவள் அப்படித்தான் ". 1978  ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை இயக்கியவர்,ருத்ரய்யா . ஸ்ரீபிரியா,கமல்,ரஜினி மற்றும் பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். எனது எதிர்பார்ப்புகளை பல மடங்கு பூர்த்தி செய்த படம் .மஞ்சு,அருண் மற்றும் தியாகு இந்த மூன்று கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான உரையாடல் தான் இந்தத் திரைப்படம் . உரையாடல்களின் மையப்புள்ளி அருண் கதாப்பாத்திரம் . அருண் மற்றும் தியாகு ஆகிய இருவருக்கும் இடையேயான உரையாடல் .அருண் மற்றும் மஞ்சு இடையேயான உரையாடல் இத்திரைப்படத்தில் அடுத்தடுத்து இடம்பெறுகிறது . ஆனால் , இந்தக் கதையின் மையப்புள்ளி மஞ்சு கதாப்பாத்திரம் .

உரையாடல் ,  இந்தத் திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலப்படங்கள் போல இந்தப்படத்திற்கு ருத்ரய்யா ,வண்ணநிலவன் மற்றும் சோமசுந்தரேஸ்வர் ஆகிய மூவரும்  இணைந்து திரைக்கதையும் ,உரையாடலும் எழுதியுள்ளனர் .தமிழ்ச் சூழலில் இது மிகவும் அரிது . ஆங்கில வசனங்கள் அதிகம் இடம்பெற்று இருந்தாலும் கதைச் சூழலுக்குப் அழகாக பொருந்துகின்றன. ஒரு சமூக சேவகி கேமரா முன்பு  தோன்ற மேக் அப் போடனுமா னு கேட்குறாங்க .அதற்கு மஞ்சு கதாப்பாத்திரம் சொல்லும் பதில் " நீங்க எப்பவும் போடுவீங்களே இந்த சொசைட்டி மேக் அப் அதைப் போட்டா போதும் " ," வித்தியாசமா இருக்குற மாதிரி காட்டிகிறது ஒரு passon " என்று மஞ்சு தியாகுவே பார்த்து கேட்பார் .அதற்கு அருண் (கமல்)" அப்படி இருக்குறதுதான் சரி னு நான் நம்பறேன் "என்று சொல்வார் . அந்த வசனம் இன்று கமலை நேரடியாகவே விமர்சிப்பது போல அமைத்துவிட்டது . இன்னும் குறிப்பிடும்படியான வசனங்கள் படமெங்கும் உள்ளன .

மனித மனங்களின் கருப்புப்பக்கங்களைப் படம்பிடித்துக் காட்டப்படுவதன் காரணமாகவோ என்னவோ இந்தப்படத்தின் பெரும் பகுதி இருட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது . குளோசப் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன . நல்லுசாமி மற்றும் ஞானசேகரன்  ஆகியோர்  ஒளிப்பதிவு செய்துள்ளனர் . இளையராஜாவின் இசையில் "உறவுகள் தொடர்கதை .."," பன்னீர் புஷ்பங்களே .." ஆகிய பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன .இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர், கங்கை அமரன் .

ஆறுமுகம் என்னும் தனது பெயரை ருத்ரய்யா என்று மாற்றி வைத்துக்கொண்டார் இப்படத்தின் இயக்குனர் . இவர் இயக்கிய இன்னொரு படம் " கிராமத்து அத்தியாயம் ". அதன்பிறகு படம் இயக்கவில்லை ; கமலுக்காகவும் , பாலச்சந்தருக்காகவும் பல ஆண்டுகள் வேலை செய்துள்ளார் . இப்படி ஒரு படம் எடுக்க மிகப்பெரும் துணிச்சல் வேண்டும் . படிப்பறிவு சதவீதம் மிகவும் அதிகரித்துள்ள இன்றைய சூழலில் இப்படி ஒரு படம் எடுக்க யாருக்கும் துணிச்சல் இல்லை . 1978 -ல் இப்படி ஒரு படம் தயாரிக்க யாரும் முன்வராத காரணத்தாலோ என்னவோ ருத்ரய்யாவே இந்தப்படத்தை தயாரித்துள்ளார் . 

டைட்டில் முதல் முடிவு வரை இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகிறது . டாகுமென்ட்ரி படத்திற்கு செயல்ரீல் என்று சொன்னது பால்ய காலத்தை நினைவு படுத்தியது . மஞ்சு  கதாப்பாத்திரம் ,மிகவும் சிறப்பாக  கட்டமைக்கப்பட்டுள்ளது . பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்து மிகவும் குறைந்த படங்களே தமிழ் மொழியில் எடுக்கப்பட்டுள்ளன . அதுவும் இந்தப்படம் பெண்களைப் பற்றிப் பேசுகிறது . சிறந்த தமிழ்ப் படங்களை
வரிசைப்படுத்தினால் முதல் 5 படங்களுக்குள் இந்தப்படம் கண்டிப்பாக இடம்பெறும் . உரையாடலுக்காக மட்டுமே இந்தப்படம் இன்னும் பல வருடங்கள் பேசப்படும் .

அவள் அப்படித்தான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நல்லுசாமி அவர்களின் பேட்டி ஏப்ரல் மாத " அந்திமழை " மாத இதழில் வந்துள்ளது .இந்தப் படம் பற்றி அவர் கூறி இருக்கும் தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன . இந்தப் பேட்டியை அவசியம் படியுங்கள்.அந்தப் பேட்டி -http://andhimazhai.com/news/view/nallusamy-12-4-2013.html



அவள் அப்படித்தான்  : ( ஒரு நல்ல அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் )



கடந்த ஒரு வருடத்தில் தேடிப்  பார்த்த படங்கள்  400 blows , City Lights ,Modern Times ,The Great Dictator ,Pather Panchali ,செம்மீன் ,பாலை ,மதுபானக்கடை,Cinema Paradiso ,Spring Summer Winter Fall ,Crocodile . பாலை படம் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் . சார்லி சாப்ளின் ஒரு  மாபெரும் கலைஞன் .சாப்ளினைப் போல் மனிதர்களை இவ்வளவு தூரம் யாரும் பகடி செய்ததில்லை.கொரிய இயக்குனரான கிம் டி டுக் -ன்  படங்கள் (Spring Summer Winter Fall ,Crocodile,etc ) நம்மை தத்துவ விசாரணை செய்பவை .

தற்போது பார்க்க விரும்பும் படங்கள் - வீடு ,உதிரிப்பூக்கள் ,La Strada ,Rashomon,Lime Light ..

மேலும் படிக்க :

ஆக்காட்டி ஆக்காட்டி ! 

கட்ட புள்ள குட்ட புள்ள ...!

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !
.....................................................................................................................................................................

Sunday, June 2, 2013

உரல் -திருகை கல்...!

Friday, May 31, 2013

கட்ட புள்ள குட்ட புள்ள ...!

தமிழ் மண்ணோடும் மக்களோடும் கலந்துவிட்ட குரல், டி.எம்.எஸ்.-ன் குரல் . தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பாடகர்களில் பெரும் புகழ்பெற்றவர் டி.எம்.எஸ் மட்டுமே . டி.எம்.எஸ்., தமிழ் திரையிசைப் பாடல்களின் தனிப்பெரும் தலைவன் . அவர் இசையமைத்துப் பாடிய முருகன் பாடல்கள் மக்களிடையே பெரும்புகழ் பெற்றன . ஆனந்த விகடனில் வெளிவந்த விகடன் 25 மூலமும் மற்றும்  இசை விமர்சகர் ஷாஜி ,டி.எம்.எஸ். பற்றி எழுதிய கட்டுரை மூலமும்  டி.எம்.எஸ்.பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது . டி.எம்.எஸ். பற்றி ஷாஜி எழுதிய கட்டுரை - http://musicshaji.blogspot.in/2011/01/blog-post_03.html.டி.எம்.எஸ். பற்றி எழுதப்பட்ட விரிவான கட்டுரை . 

 சிவாஜி மற்றும் எம்.ஜி .ஆருக்கு பாடியதை தவிர மற்றவர்களுக்குப் பாடியதில் ரஜினிக்காக பாடிய இந்தப்பாடலும் (கட்ட புள்ள குட்ட புள்ள ...) "ரயில் பயணங்களில்" திரைப்படத்தில் டி.எம்.எஸ்.-ன் குரல்களில் ஒலித்த "அமைதிக்குப் பெயர் தான் சாந்தி.. ", "நூலுமில்லை வானுமில்லை .." பாடல்களும் பெரும் புகழ் பெற்றன . 

டி.எம்.எஸ். மற்றும் ஜானகியின் குரல்களில் ஒலிக்கும் இந்தப்பாடல் இளையராஜாவின் இசையமைப்பில்  1978 ஆம் ஆண்டு வெளிவந்த " பைரவி " என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது . பெண் பின்னணிப் பாடகிகளில் தனிப்பெரும் தலைவி எஸ் .ஜானகி தான் .

டி.எம்.எஸ். -ன் உடலுக்கு மட்டுமே மரணம் . தமிழ் மக்களின் துக்கத்தை நீண்ட காலமாக பகிர்ந்து கொள்ளும் குரல் டி.எம்.எஸ்.-ன்  குரல் தான் . மகிழ்ச்சியைக் கொடுத்த குரல் ,தன்னம்பிக்கை கொடுத்த குரல், எத்தனையோ மனிதர்களின் துயர்களைத் துடைத்த குரல் அழியப்போவதில்லை . உலகில் எங்கோ ஒரு மூலையில் அவரது குரல் ஒலித்துக்கொண்டே தான் இருக்கப்போகிறது .

மேலும் படிக்க :

 என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே ! 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!  

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு !  

...................................................................................................................................................

Saturday, April 20, 2013

எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?


 பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்கள் ,சதிகாரர்கள் . பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட பணம் .இன்று மனிதனின் சுவாசமாகவே மாறிவிட்டது . நிறைய பிரச்சனைகளின் தொடக்கப்புள்ளியாகவும் முடிவுப்புள்ளியாகவும் பணமே இருப்பது நம் வாழும் காலத்தின் கோலம் . நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் ,நம் உண்மையான தேவையை  உணர்ந்து பணத்தைப் பயன்படுத்தினால் பல சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம் . நம் கடுமையான உழைப்பின் மூலம்  சம்பாதிக்கும் பணத்தை விளம்பரங்களின் மூலம் கவர்ந்து செல்ல  ஒரு பெரும் கூட்டம் எப்போதும் தயாராகவே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .

"இளமையில் பெருக்காவிட்டலும் முதுமையில் சிறுக்காமல் இருக்கவேண்டும் "  என்று சங்கப்பாடல் ஒன்று கூறுகிறது . அதாவது இளமைப் பருவத்தில் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் ,முதுமைப் பருவத்தில் இருப்பதை இழக்காமல் இருக்கவேண்டும் என்பது தான் அந்தப் பாடலின் பொருள் . எல்லோரது வீட்டிலும் இருக்கும் பொருள் நம் வீட்டிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை . மனிதன் வாழும் வரை பணம் தொடர்பான சிக்கல்களும் தொடரும் .எல்லோரும் பணத்தைத் தேடி ஓட வேண்டியதும் தொடரும் . தேவையைக் குறைத்துக் கொண்டால் பணம் நமக்கு அடிமை . தேவையை வளர்த்துக் கொண்டால் நாம் பணத்திற்கு அடிமை .

1952 ஆம் ஆண்டு வெளிவந்த " பணம் " என்ற திரைப்படத்தில் கண்ணதாசனால் எழுதப்பட்ட  இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது . N .S .கிருஷ்ணன் அவர்களை நினைவுபடுத்தும் பாடலாகவே இன்றும் உள்ளது . N .S .கிருஷ்ணனால் சிறப்பாக பாடி நடிக்கப்பட்ட பாடலிது .

பாடல் வரிகள் :

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன் பணத்தை
எங்கே தேடுவேன்?

பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
எங்கே தேடுவேன் பணத்தை

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே பணமே!

வேடிக்கையாக பாடப்பட்ட பாடலாக இருந்தாலும் பொருள் நிறைந்த பாடல் .
எங்கே தேடுவேன் ?

பணம் பற்றிய இன்னொரு தமிழ்ப் பாடல் -காசே தான் கடவுளப்பா !

கல்லறை கூட சில்லரை  இருந்தால் வாய் திறந்தே மொழி பேசுமடா !

மேலும் படிக்க :

வரவு எட்டணா செலவு பத்தணா ! 

 கையில வாங்கினேன் பையில போடல ...!

.....................................................................................................................................................................

Wednesday, March 13, 2013

ஈழத்தை நோக்கி ....

ஊடகங்களின் பிடியிலிருந்து வெளிவந்து சமூகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டியது நம் கடமை . நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மறைத்து தொடர்ந்து ஒரு போலியான ,மாயமான உலகை நம் கண்முன் நிறுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலையை மட்டுமே ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன . அப்படிப்பட்ட ஊடகங்களைத் தாண்டி இப்படி போராட்டம் தொடங்கி இருப்பதற்காக நாம் பெருமைப்பட வேண்டும் . சினிமாவைத் தாண்டி ,அரசியலைத் தாண்டி நம் ஊடகங்கள் யோசிப்பதே இல்லை . அரசியல் செய்திகளும் ,சினிமா செய்திகளும் ,கிரிக்கெட் செய்திகளும் மட்டுமே ஊடகங்களால் தொடர்ந்து முன்நிறுத்தப்படுகின்றன . நம் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் வேலை ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்படுகின்றன .

இந்த மாணவர்கள் போராட்டத்தை மறைக்கவே ஊடகங்கள் விரும்புகின்றன . ஆளும் கட்சி என்ன சொல்கிறதோ அதைச் செய்வதும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே ஊடகங்களின் கடமைகளாக இருக்கின்றன . நாளிதழ்களில் மாணவர்கள் போராட்டம் பற்றிய செய்திகள் வெளியிடப்படவில்லை.செய்தி  தொலைக்காட்சிகளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மாணவர்கள் போராட்டம் பற்றிப் பேசுகிறார்கள் .மற்ற நேரங்களில் அடக்கி வாசிக்கிறார்கள் . செய்தித் தொலைக்காட்சிகளின் மூலம் நடக்கும் ஒரே நல்ல விசயம் "கருத்துச் சுதந்திரம் ".இதற்கு முன்பு யாரையும் யாருக்கு எதிராகவும் கருத்துச் சொல்ல எந்தச் தொலைக்காட்சியும் அனுமதித்ததில்லை . இன்று கருத்துகள் மக்களைச் சென்றடைகின்றன . அவர்கள் சொல்வது சரியா? தவறா ?என்று முடிவு செய்வது மக்கள் வேலை . அரசுக்கு எதிராக கருத்துச் சொல்லவே இவ்வளவு காலம் ஆகிவிட்டது . எப்போது நம் உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறோமோ தெரியவில்லை .

உணர்ச்சிவசப்படாமல் ,அமைதியாக ஆக்கப்பூர்வமாக சிந்தித்து இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் . தமிழக மாணவர்களின் குரலாக மட்டுமல்லாமல் தமிழர்களின் குரலாக ,இந்தியர்களின் குரலாக ,உலக நாடுகளின் குரலாக ,மனிதர்களின் குரலாக ஒலிக்க வேண்டும் . இந்தியாவின் 65 சதவீத இளைஞர்களின் சக்தியை சரியாகப்  பயன்படுத்த வேண்டும் . வன்முறையைத் தூண்டி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே ஆளும் அதிகார வர்க்கம் விரும்பும் என்பதை மனதில் கொண்டு கூடங்குளம் போராட்டத்தைப் போல தொடர்ந்து அற வழியில் போராட வேண்டும் .

இலங்கையில் கொல்லப்பட்டது தமிழர்கள் மட்டுமல்ல சக மனிதர்கள் தான் என்ற மனப்போக்கை இந்தியா முழுவதும் , உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் . அதை நோக்கி இந்தப் போராட்டம் முன் நகர்ந்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும் .தனித் தமிழ் ஈழம் கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் . சமீபத்தில்  டெல்லி போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது .அதன் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக உலகெங்கும் விவாதங்கள் நடந்தன . முன்பை விட தற்பொழுது இந்தியாவில் என்ன நடந்தாலும் உலகம் கூர்ந்து கவனிக்கிறது ,கருத்து சொல்கிறது .இந்தச் சூழலை நாம் தவர விடக்கூடாது .

அடுத்த கட்டமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களை ஒன்றிணைத்து இந்தப் போராட்டத்தில் பங்குபெறச் செய்ய வேண்டும் . பெரும்பான்மையான தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து இந்தப்போராட்டம் தொடங்கியிருப்பது தான் சரியானது .போராட்டத்தின் முதன்மையான நோக்கம் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழத்தை உருவாகுவது தான் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் .

தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் ஆதரவு இல்லாமல் தமிழ் ஈழம் உருவாக முடியாது என்பது தான் உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை . இந்த நிலையிலாவது அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் .இன்னொரு அடியை அவர்களால் தாங்க முடியாது .அவர்கள் துணையுடன் உலகத் தமிழர்களின் ,உலக மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் .பொது வாக்கெடுப்பின் மூலம் தெற்கு சூடான் உருவானது  போல தனி ஈழம் உருவாகும் வரை போராட்டம் தொடர வேண்டும்  . 




கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் . கிடைப்பது சுதந்திர தனி ஈழமாக இருக்கட்டும் !

நான் காலத்தை நம்புகிறேன் !

2011,ஜூலை 11 - இன்று தெற்கு சூடான் , நாளை தமிழ் ஈழம் ...! ....



Saturday, February 9, 2013

ஒன்று எங்கள் ஜாதியே ...!


படிக்காதவர்களை விட படித்தவர்கள் அதிகமான ஜாதி  வெறியுடன் இருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் . ஜாதியும் அரசியலும் பிரிக்க முடியாத நிலையில் இருக்கின்றன . ஜாதிகளை களைய வேண்டிய கல்விக்கூடங்கள்,தங்கள் பெயர்களில்  ஜாதிகளின் பெயரைத் தாங்கி இருக்கின்றன . மனிதன், எப்போதுமே தனக்கு கீழ் அடிமை நிலையில் யாரவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் . அதிகாரத்தின் அடிமையாகவும் ,விளம்பரங்களின் அடிமையாகவும் இருப்பதைப் பற்றியெல்லாம் அவனுக்கு கவலைகள் இல்லை . கல்வியின் மூலமே ஜாதியம் குறையும் . எப்போது ? பாடத்திற்கு வெளியேயும் எப்போது படிக்கிறார்களோ ?ஜாதியத்திற்கு எதிராக எப்போது கேள்விகள் கேட்கிறார்களோ ? அப்போது .


1964 ஆம் ஆண்டு வெளிவந்த "பணக்கார குடும்பம் " என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .பாடியவர்கள் ,T .M .சவுந்தர்ராஜன் ,L .R .ஈஸ்வரி .இசை ,விஸ்வநாதன் ராமமூர்த்தி .இப்பாடலை எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும் . உழைப்பை முன் வைத்து முன்னேற்றம் கண்டு " இல்லை என்பதே இல்லை " என்ற நிலையை உருவாக்காமல் ஜாதியம் பேசுவதால் என்ன பயன் ?

உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே ...!

மேலும் படிக்க :

கலாசார விடுதலையே சமூக விடுதலை !
...................................................................................................................................................................

Thursday, January 10, 2013

கலாச்சார விடுதலையே சமூக விடுதலை !

தற்போது நடக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு கலாச்சாரக் கூறுகள் தான் காரணமாக இருக்கின்றன . கலாச்சாரக் கூறுகளிலிருந்து வெளியே வராத வரை மனித சமூகம் முன்னோக்கிச் செல்ல முடியாது . உணவு ,உடை,இருப்பிடம் ,மனித உறவுகள் ,பழக்கவழக்கம் ,குழந்தைகள் ,ஆண் மற்றும் பெண் குறித்த நிலைப்பாடுகள் ,பாலியல் ,வாழும் முறை என்று  ஒவ்வொரு விசயத்திற்கும் ஒவ்வொரு விதமான வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் கலாச்சாரத்தில் இருக்கின்றன . சமூக அமைப்பில் இருக்கும் ஒரு சிலர்  தங்களுக்கு ஆதாயம் தரும் அனைத்து கலாச்சாரக் கூறுகளையும் மிகக் கவனமாக பாதுகாத்து வருகின்றனர் ; ஆதாயம் தராதவற்றை காற்றில் விடவும் அவர்கள் தயங்குவதில்லை . சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர எத்தனையோ தலைவர்கள் தீவிரமாக போராடினார்கள் . அவர்களது செயல்பாடுகள்  சமூகத்தில் நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வராவிட்டாலும் நிலைமை மோசமாகாமல் பார்த்துக்கொண்டது .

குழந்தைகளை குழந்தைகள் போலவும் ,பெண்களைப் பெண்கள் போலவும் நடத்தாத எந்தக் கலாச்சாரமும் குற்றமுடையது தான் . நம் இந்தியக் கலாச்சாரம் ,தமிழக கலாச்சாரம்  குற்றமுடையது தான் . பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உலகெங்கிலும் இருந்தாலும் இந்தியாவில் அதிகமாகவே இருக்கின்றன . உலக அளவில் பெண்கள் பாதுகாப்பில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்குப் பின்னால் தான் இந்தியா உள்ளது . ஆணாதிக்க கலாசாரம் தான் இந்தியாவில் உள்ளது .பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நன்றாக படிக்கவும் ,நன்றாக சம்பாதிக்கவும் மட்டுமே தூண்டப்படுகிறார்கள் .  மற்ற எந்த விசயங்களிலும் கவனம் செலுத்த பெற்றோரும் ,கல்விக் கூடங்களும் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை . இங்கு ஆண் குழந்தையை ஒரு விதமாகவும் பெண் குழந்தையை வேறு  விதமாகவும் தான் வளர்க்கிறார்கள் . ஆண் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் சுதந்திரம் பெண் பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லை . தங்களை தாங்களே தாழ்வு மனப்பான்மையுடன் நினைக்கும் நிலை பெண் பிள்ளைகளுக்கு உருவாகிறது . சமூகத்தின் அனைத்து கூறுகளும்  பெண்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன .

இன்றும் பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும்  திருமணத்திற்குப் பின் கணவன் சொல்லும்படி நடந்து கொள்ள பணிக்கப்படுகிறார்கள் . எவ்வளவு அவமானப் படுத்தினாலும் குடும்ப மானம் கெட்டுவிடும் என்பதற்காகப் பொறுத்துப் போகிறார்கள் . விதவைகள் மறுமணம் செய்ய நம் கலாசாரம் இன்னுமும் முழுமையான சுதந்திரம் தரவில்லை . ஒரு பெண் தன் கணவனை இழந்த பிறகு , குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் ஆண்கள்  அந்தப் பெண்ணைப்  அடைய முயற்சி செய்கின்றனர் .இதே நிலை ஆணுக்கு வரும்போது அவனின் அடுத்த திருமணம் பற்றி மட்டுமே நம் கலாசாரம் பேசுகிறது .

அன்று பெண்கள் உடன்கட்டை ஏறியதற்குக் காரணம் வீட்டிற்குள் நடந்த பாலியல் தொந்தரவுகள் தான் காரணமாக இருந்திருக்கின்றன . பெண்களுக்கு வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பாலியல் தொந்தரவுகள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன . குடும்ப மானம் போய்விடும் என்பதற்காக வீட்டிற்குள்ளும் வெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகள் மூடி மறைக்கப் படுகின்றன .இந்தப் மனப்பான்மை தவறு செய்தவர்களை மீண்டும் தவறு செய்யத் தூண்டுகிறது . அதனால் தான் கி.ராஜநாராயணன்,  "ஒழுக்கம் ,ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ ,அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும் . ஒவ்வொருத்தனும் மனுசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான் .வெளியே பேசுறது பதிவிரதத்தனம் .சென்னையிலேயே,ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா ? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு , குழாயை  உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா ? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு ? அட , பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது ? என்னடா , இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது .இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது , இல்லையா ?மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன் " என்று சொன்னாரோ என்னவோ . குடும்பம் என்கிற அமைப்பு மீது நம் கலாசாரம் கட்டமைத்து வைத்திருக்கும் கூறுகள் மீது நாம் கேள்வி எழுப்ப வேண்டிய நேரமிது .

உலகெங்கிலும் அதிகமாக துன்புறுத்தப்படுவது பெண்ணின் உடல் தான் . நாடுகளுக்கு இடையிலான போர்களின் போதும் , இனத்தின் பெயரால் நடத்தப்படும் போர்களின் போதும் , மதக் கலவரங்களின் போதும் ,ஜாதிக் கலவரங்களின் போதும் முதலில் பாதிக்கப்படுவது  பெண்களின் உடல் தான் . எல்லா இடங்களிலும் பெண்களை கட்டுப்படுத்தி விட்டு பெண்களைத்  தெய்வம் என்று சொல்லி  போலியான உருவகம் நம் நாட்டில் கொடுக்கப்படுகிறது . தினமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் போகிறது . டெல்லி சம்பவத்திற்குப் பிறகு எல்லா மட்டங்களிலும் தொடர்ந்து உணர்வு சார்ந்த நிலையிலேயே விவாதித்துக் கொண்டே இருக்கிறார்கள் . அடிப்படைக் காரணத்தை அறியவும் அதைக் களையவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

இந்தியாவில் நடக்கும் அனைத்து பாலியல் வன்கொடுமைகளும்  எந்தச் சூழலில் நடக்கின்றன . அதை வகைப்படுத்தி மூல காரணத்தை அறிந்தால் மட்டுமே நம்மால் இம்மாதிரியான குற்றம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும் . புதிதாக சட்டம் இயற்றியவுடன் எல்லாம் நின்று விடும் என்று நினைப்பது முட்டாள்தனம் . இந்தியாவில் ஏற்கனவே நிறைய சட்டங்கள் இருக்கின்றன ,அதைச் செயல்படுத்துபவர்கள் தான் தொடர்ந்து தவறு செய்கிறார்கள் .

காவல்துறை இந்த விசயத்தில் மிக மோசமாக செயல்படுகிறது . ஏன் காவல்துறை அதிகாரிகளே தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதாரணப் பெண்களையும் , இன்னும் சொல்லப்போனால் பெண் காவலர்களையே தங்கள் பாலியல் இச்சைக்கு இணங்கும் படி துன்புறுத்துகிறார்கள் . அரசியல்வாதிகளின் மகன்கள்  செய்யும் அட்டூழியங்கள் அனைத்தும் காவல்துறையால் மறைக்கப்படுகிறது .இந்த நிலையில் பாலியல் குற்றங்களை எவ்வாறு காவல்துறையால் தடுக்க முடியும் என்று தெரியவில்லை .

நம் நாட்டில் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகுவதற்கு மதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது . மதுவுக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது என்றாலும் கொண்டாட்டங்களின் போது மட்டுமே அன்று மது பயன்படுத்தப்பட்டது . இன்று போல் எப்பாடு பட்டாவது தினமும் மது அருந்துதல் என்பது அன்று இருக்கவில்லை . இன்று ," காதல் செய்யாதவன் இளைஞன் இல்லை , மது குடிக்காதவன் மனிதன் இல்லை " என்ற நிலை உருவாகிவிட்டது . குற்றங்களுக்கு மூல காரணமான மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் சட்டம் இயற்றுவதால் எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை ஊடகங்களில் பெண்களை போகப் பொருளாக இன்னும் இழிவாக சித்தரிக்கிறார்கள் . இதையெல்லாம் தடுக்க  வேண்டும் .எழுத்தாளர் பாமரன் பக்கம் :- சட்டங்கள் காக்குமா சரிகாக்களை….?

பாலியல் கல்வி தரப்பட வேண்டிய அவசியம் குறித்து கி.ராஜநாராயணன் கூறியது :

"பாலியல் கல்வி கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும் . எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும் . பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் . மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விசயமாக்கிட்டோம் . பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு , அந்த ஞாபகமாகவே அலையுது . நான் கேட்குறேன் ... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா , அது சிக்கலா, இல்லையா ? அது அவனோட சிக்கல் மட்டும்தானா .. சமுதாயத்தோட சிக்கலுமா ? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே ,அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன ? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி , கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க . ரெண்டு பசியுமே மோசமானது . ஆனா, இங்கே எல்லோருமே மேல் வயித்துப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம் . கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம்  "

பாலியல் கல்வி கொடுக்கப் பட வேண்டிய அவசியத்தை நம் கல்வியாளர்கள் உணர வேண்டும் . ஆணுக்குப் பெண்ணைப் பற்றிய புரிதல்களையும் ,பெண்ணுக்கு ஆணைப் பற்றிய புரிதல்களையும் முதலில் கற்பிக்க வேண்டும் . ஆண்களுக்கு தனியாகவும் ,பெண்களுக்குத் தனியாகவும் நடத்தப்படும் கல்விகூடங்களைத் தடை செய்து இருபாலரும் பயிலும் கல்விக் கூடங்களை மட்டுமே இயங்க அனுமதிக்க வேண்டும் . இருபாலர்களும் படிக்கும் நிறைய கல்விக்கூடங்களில் ஆண்கள்  பெண்களுடனும் , பெண்கள் ஆண்களுடனும்  பேச தடை விதித்துள்ளனர் . இது மனிதத்தமையற்ற செயல் . ஆண்களை பெண்களும் ,பெண்களை ஆண்களும் சிறு வயது முதலே புரிந்து கொண்டாலே போதும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து விடும் .
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஆண்களிடமிருந்து பாலியல் ரீதியாக தங்களைக் காத்துக்கொள்ள பெண்களுக்குப்  பயிற்சி அளிக்க வேண்டும் .

இயற்கையிலேயே  ஆணுக்கு பெண் மீதும் , பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும் . பெண் ,ஆண்களால் ரசிக்கப்படுவதையும் , ஆண் , பெண்களால் ரசிக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் . ஆனால் ,இந்த இயல்பான விசயத்தை தங்கள் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர் நவீன முதலாளிகள் . அதனால் தான் அழகு சாதனப் பொருட்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது . ஆண் மீது பெண்ணுக்கு உள்ள ஈர்ப்பை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதில்லை . எந்த வணிக விளம்பரங்களும் ஆணின் உடலை கவர்ச்சிப் பொருளாக காட்டவில்லை .ஆணின் தொப்புள் குழியை விதவிதமாக காட்டவில்லை ; பம்பரம் விடவில்லை . ஆண்கள் சட்டை அணியாமல் தெருவில் நடந்தால் கூட அதைக் கவர்ச்சியைத் தூண்டும் விதத்தில் யாரும் கவனிப்பதில்லை . காரணம் ,நம் கலாசாரம் ஆணாதிக்க கலாசாரம் .ஆண் எது செய்தாலும் சரி ,என்பது நம் சமூகத்தின் பொதுப்புத்தியாகவே உள்ளது .   ஆனால் , பெண் மீது ஆணுக்கு இருக்கும் ஈர்ப்பை முழுவதும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி பெண்ணை ஒரு போகப் பொருளாக பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டன , இன்றைய ஊடகங்களும்  ( தொ(ல்)லைக்காட்சி , பத்திரிகைகள் ,சினிமா  இன்னும் பல ) , வணிக நிறுவனங்களும் .


ஒரு அழகான ஆண் தெருவில் நடந்து போனால் ,சில  பெண்கள் அந்த ஆணைப் பார்க்கக் கூடும் . அதே நேரத்தில் ஒரு அழகான் பெண் தெருவில் நடந்து போனால் வயது வித்தியாசமின்றி இளம்வயது ஆண் முதல் முதிய ஆண் வரை அந்தப் பெண்ணை விரசமான பார்வையோடு பார்க்கிறார்கள் . பெண்ணின் உடலில் எந்த பாகம் உடையால் மூடப் படாமல் இருக்கிறதோ அங்கேயே ஏறக்குறைய எல்லா ஆண்களின் பார்வையும் போகிறது .  குடும்பங்களில் சொத்துக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் பெண்களுக்கு நேரடியான பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுகின்றன .பேருந்துகளில் பெண்களை உரச ஆண்களின் உடல்கள் துடிக்கின்றன .மோசமான  குடும்ப சூழ்நிலை காரணமாகவும் , குடும்பப் பொருளாதாரத்திற்காகவும் , தங்கள் வேலையக் காப்பாற்றிக் கொள்ளவும் , சுய கெளரவதிற்காகவும்  தாங்கள் படும் இன்னல்களை மறைக்கிறார்கள்  . ஒரு சிலர் காதல் என்ற பெயரைச் சொல்லி பெண்களை வல்லாங்கு செய்கிறார்கள் . பெண்களுக்கு எதிரான பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் , ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி மிரட்டி அவர்களை தங்கள் ஆசைக்கு தொடர்ந்து பணிய வைக்கின்றனர் வக்கிர புத்தி ஆண்கள் .

ஆண்கள் பெண்கள் சேர்ந்து வளர்வதை ஒரு குறிப்பட்ட வயதிற்குப் பிறகு நம் கலாசாரம் தடை செய்கிறது . அதே கலாசாரம் திருமணம் என்று வரும்போது ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரே அறைக்குள் தள்ளிவிட்டு நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழுங்கள்  என்று சொல்கிறது . பருவ வயதில் ஆணுக்கும் ,பெண்ணுக்கும் தங்கள் உடலில்  நடைபெறும் ஹார்மோன் சார்ந்த மாற்றங்கள் பற்றிய புரிதல் வேண்டும் . எதிர்பாலினத்தின் உடலில் நடைபெறும் மாற்றங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் . மொத்தத்தில் பாலியல் அறிவு குறைபாடு தான் பாலியல் சார்ந்த குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது .


 ஒரு ஆண், ஒரு பெண்ணை அடித்தால் அது மிகச் சாதாரணமாகப் பார்க்கப்படுகிறது . அதே நேரத்தில் ஒரு பெண் ,ஒரு ஆணை அடித்தால் அது அவமானமாகப் பார்க்கப்படுகிறது .படித்த ஆண்கள் முதல் படிக்காத ஆண்கள் வரை பெண்களை அடிகிறார்கள் .அதை நம் கலாசாரம் பெரிது படுத்துவதில்லை ."அடிக்கிற கை தான் அணைக்கும் "," கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்"  என்று சொல்லி ஆணின் மிருகத்தனத்திற்கு வக்காலத்து வாங்குகிறது ,நம் கலாசாரம் .சமத்துவத்தை பேண வேண்டிய இடமான கல்விக்கூடங்களும் ஆண்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் பிரிவினையையே உண்டாக்குகிறது . தன்னை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடத்தில் ஆண் ,தன் மிருகத்தனத்தைக் காட்டுகிறான் .ஆணாதிக்க சமூகம் இருக்கும் வரை உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறவே செய்யும் .பெண்ணைப் பற்றிய நம் எண்ணங்கள் மாற வேண்டும் . பெண்ணிற்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து சக மனுசியாக நடத்த வேண்டும் . ஆண் பெண் சமத்துவத்தைப் பேணும் கலாசாரமே சிறந்த கலாசாரம் .

பாலியல் சுதந்திரம் பற்றி பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது . இருவருக்கும் விருப்பம் இருந்தால் யார் யாரை வேண்டுமாலும் காதலிக்கலாம் .யார் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் . விருப்பம் இல்லையென்றால் யாரும் யாரையும் துன்புறுத்தக் கூடாது . இந்த நிலை உருவானாலே பாதிப் பிரச்னை தீர்ந்து விடும் .ஆண்கள் ,காதலிக்கவும் , காதலை பெண்ணிடம் சொல்லவும் , பெண்ணைப் பார்த்து படுக்கையைப் பகிர்ந்து கொள்ளலாமா என்று கேட்பதற்கும் சுதந்திரம் இங்கே இருக்கிறது . அதே சுதந்திரம் இங்கே பெண்ணுக்கு இல்லை . பெண் விடுதலை தான் சமூக விடுதலையின் தொடக்கமாக இருக்க முடியும் .

தமிழகத்தில் இயங்கும் பெரும்பான்மையான கல்விக்கூடங்களின் பெயர்கள் அனைத்தும் சாதியின் பெயரைத் தாங்கி இருக்கின்றன . இந்த நிலையில் இந்தக் கல்விக் கூடங்கள் சாதியை ஒழிக்கும் என்று நாம் எப்படி நம்புவது ? முதலில் சாதியின் பெயர்  எந்தக் கல்விக் கூடத்தின் பெயரிலும் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் . கலாசாரத்தின் பிடியிலும் ,மதத்தின் பிடியிலும் சமூகம் இருக்கும் வரை சாதியை ஒழிக்க முடியாது . சாதியின் பெயரால் தமிழனும் ,மொழியின் பெயரால் இந்தியனும் பிளவுபட்டு இருக்கிறான் . ஆதலால் நாம் , மனிதர்களை ஒன்றிணைப்போம் . மனிதம் வெல்லட்டும் !

பெண் விடுதலை , மதுவிலக்கு ,சாதி ,தீண்டாமை என்று பெரியார் முன்னெடுத்த அனைத்து பிரச்சனைகளும் இன்றும் அப்படியே உள்ளன .

பெண் விடுதலை ,பாலியல் விடுதலை மற்றும் கலாசார விடுதலையே சமூக விடுதலை !

மேலும் படிக்க :

எது கலாசாரம் - கி.ரா...!

சமத்துவத்தைப் பேணுமா கல்வி ?
...................................................................................................................................................

Wednesday, December 19, 2012

சிறகசைவில்...!


அத்தனையும்
அற்றுப்போன நிலையிலும்
துளிர்க்கிறேன்
உன் சிறகசைவில்
ஒவ்வொரு முறையும்...!


நன்றி :-   http://praying-mantis101.blogspot.in/

மேலும் படிக்க :

பிரியாத பிரியங்கள் ...!

 ஒற்றையடிப் பாதை ! 

கேணி வீடு !

..........................................................................................................................

Friday, December 14, 2012

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினாலும் ,அங்கேயே தங்கிவிட இயற்கை அனுமதிக்கவில்லை . மனித இனம் , தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பூமியின் பல்வேறு இடங்களுக்கும் இடம்  பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .பல்வேறு மாறுதல்கள் அடைந்த பிறகு நாடு என்ற அமைப்பு உருவானது . இன்றும் பல்வேறு விலங்குகள் தங்களுக்கென்று எல்லைகள் வகுத்துக் கொண்டு வாழ்கின்றன . தனது எல்லைக்குள் தன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு விலங்கை அனுபதிப்பதில்லை . அது போலவே மனிதனும் தனக்கென்று எல்லைகள் வகுத்துக்கொண்டு வாழ்கிறான் . வீடு ,வயல் ,பாதை ,ஊர் ,வட்டம் ,மாவட்டம் ,மாநிலம் ,நாடு என்று வெளிப்புறத்திலும் மொழி , ஜாதி ,மதம் ,இனம் ,மாநிலம் ,நாடு என்று உள்ளுக்குள்ளும் எல்லைகள் வகுத்துக்கொண்டு நிதமும் தன் சக இனத்திடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் .மனிதன் இன்னமும் விலங்கு தான் ; இனிமேலும் விலங்கு தான் .மனிதன் என்று ,எல்லாவற்றையும் கடந்து சக மனிதனை ,சக மனிதனாக நினைக்கிறானோ , தானும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்று உணர்கிறானோ, அன்று சொல்லிக் கொள்ளலாம் "தான் ஆறறிவு படைத்த விலங்கு" என்று .

ஒரு நாட்டின் வளம் ,செல்வம் என்பதெல்லாம் நீண்ட காலம் நீடிப்பதில்லை . அன்று செல்வ வளமுடன் இருந்த நாடு , இன்று ஏழை நாடு .அன்று மனிதர்களே இல்லாமல் இருந்த நிலப்பரப்பு இன்று வளர்ச்சியடைந்த நாடு . அன்று அனைத்து விலங்குகளாலும் அடித்து துரத்தப்பட்ட மனித இனம் , இன்று  மற்ற அனைத்து விலங்குகளையும் அடித்து துரத்துகிறது ; இயற்கையைக் கட்டுப்பாடில்லாமல் அழிக்கிறது . எல்லாம் ஒரு சுழற்சி தான் போல . வரலாற்றைப் புரட்டும்போது இந்தியா ,ஒரு காலத்தில் மிகவும் அதிகமான செல்வ வளங்கள் நிறைந்த நாடாக இருந்திருக்கிறது . இந்தியாவை அடைய பல நாடுகளில் இருந்து கடல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இந்தியாவை கண்டுபிக்கும் சாக்கில் கண்டறியப்பட்ட நிலப்பகுதிகள் அதிகம் . அப்படி வந்த மெக்காலே இங்கிலாந்தில் ஆற்றிய உரை சுவாரசியமானது .

1835 ம்  ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதியன்று பிரிட்டிஷ் பார்லிமென்டில் லார்டு மெக்காலே ஆற்றிய உரை இது :

"நான் இந்திய நாட்டை குறுக்கிலும் நெடுக்கிலுமாகச் சுற்றுப் பயணம் செய்து பார்த்துவிட்டேன் . எங்கும் ஒரு பிச்சைக்காரனையோ , திருடனையோ நான் காணவில்லை ! இந்திய நாடு ஏராளமான செல்வம் கொழிக்கும் ஒரு நாடு ! உயர்ந்த பண்பு நலன்கள் கொண்ட நாடு ! சிறந்த மனநலமும் குணநலமும் கொண்ட மக்கள் . இப்படி ஒரு நாட்டை நாம் வெற்றி கொள்ள முடியும் என்று நான் எண்ணவில்லை . அவ்வாறு நாம் இந்திய நாட்டை வெற்றி கொள்ள வேண்டுமானால் நாம் முதலில் அந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள ,காலம் காலமாக வளர்ந்து வந்த ஆன்மீகத்தையும் , பண்பாட்டையும் உடைத்து எறிய வேண்டும் . எனவேதான் இந்தியாவின் பழமை மிக்க கல்வி முறையையும் இயல்பான பண்பாட்டையும் நாம் மாற்றி விட வேண்டும் என்று யோசனை கூறுகிறேன் .

இந்தியர்கள் தங்களது நாட்டையும் , தங்கள் மொழியையும் விட இங்கிலாந்து நாடும் , ஆங்கில மொழியும் சிறந்தது என நினைக்கும்படி நாம் செய்துவிட்டால் அவர்கள் தங்கள் கெளரவத்தையும்  சொந்த கலாசாரம் , பண்பாடு முதலியவற்றையும் இழந்து விடுவார்கள் . பிறகு நாம் எப்படி நினைத்தோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள் . அடிமைகளாகி  விடுவார்கள் . இந்தியா ஓர் உண்மையான அடிமை நாடாகிவிடும் ."

விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் நாம் ஆங்கில மொழிக்குத் தான் அதிக மரியாதை கொடுக்கிறோம் . மக்களே கவனியுங்கள் , பிச்சைக்காரனோ ,திருடனோ கண்ணில் படவில்லையாம் . அப்படி வளம் மிகுந்த நாட்டை பல்வேறு படையெடுப்புகள் மூலம் கொள்ளையடித்துச் சென்றனர் . பிரிட்டிஷ்காரர்கள்  நிலையாக வியாபாரத் தளத்தை அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி இனி கொள்ளையடிப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தார்கள் . இந்தியாவின் வளம் குன்றாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக சுதந்திரம் கிடைத்திருக்காது . ஒரு நெடிய சுதந்திரப் போராட்டமும்  பல ஆயிரம் உயிர்களும் தேவைப்பட்டன அந்த சுதந்திரத்தைப் பெற . அப்படி வாங்கப்பட்ட சுதந்திரம் , சாதாரண இந்திய மக்களுக்கு பெரிய அளவில் எந்தப் பயனையும் தரவில்லை . சுரண்டலும் ,கொள்ளையடித்தலும் நிகழ்கிறது ,அன்று வெள்ளையர்களால் ,இன்று இந்தியர்களால் ,நாளை வெள்ளைக்காரர்களால் ?

இன்று இந்தியா தான் உலகின் மிகப்பெரிய சந்தை . எதைக் கண்ணில் காட்டினாலும் மறு பேச்சு இல்லாமல் வாங்கும் கூட்டம் அதிகமுள்ள நாடு இந்தியா . சாப்பாட்டை விட மற்ற விசயங்களுக்கு  அதிகம் செலவு செய்யும் மக்கள் நிரம்பிய நாடு . அதனால் , வணிக நிறுவனங்களின்  ஒரே நோக்கம் எப்படியாவது இந்தியாவில் கடை விரித்து லாபம் பார்ப்பது . அதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய பெரு முதலாளிகள் தயாராக உள்ளனர் . சின்ன உதாரணம் , வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைய மட்டும் 125 கோடி செலவு செய்துள்ளது . உள்ளே நுழையவே 125 கோடி என்றால் இந்தியாவின் சந்தை மதிப்பை கற்பனை செய்து கொள்ளுங்கள் . இந்தியாவை மறுபடியும் வெள்ளைக்காரர்கள்  உரிமையுடன் ஆளப் போகிறார்கள் .

இந்த விசயமெல்லாம் தெரியாத ஒரு மனுஷன், சமாதியில இருந்து எந்திருச்சு உட்கார்ந்து  கத்துறார் ,கத்துறார் .கேட்க நாதியே இல்லை .எல்லாப் பேரும்  கோடிகளில்  புரள்கிறார்கள் .அரசியவாதிகள் பணக் கோடிகளில் ,மக்கள் தெருக் கோடிகளில் . அதனால் அவர் கத்துவது யாருக்கும் கேட்கவில்லை . அவர் ஒன்றைத் தான் சதா புலம்பிக் கொண்டே இருக்கிறார்  .அது  "இப்படி ஒரு நிலை வரவா சுதந்திரம் பெற்றோம் . சுதந்திரம் பெறாமலே இருந்து இருக்கலாமே ! " என்பது தான் . அந்த வெவரம் கெட்ட மனுஷன் வேற யாரும் இல்ல நம்ம "காந்தி" தான் .

ரூபாய்க்கு மதிப்பு இருந்த வரை காந்திக்கும் மதிப்பு இருந்தது .ரூபாயின் மதிப்பு குறைந்து  கோடிகள் எல்லாம் சாதாரணம் என்றாகிவிட்ட நிலையில் இன்று காந்திக்கும் மதிப்பு இல்லை . காந்தியின் கொள்கைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன . காந்தி வளர்த்து  விட்ட " காங்கிரஸ் கட்சி " மட்டும் இன்று தேவைப்படுகிறது , ஊழல் மட்டும் செய்யவும் , கொள்ளையடிக்கவும் ,நாட்டை சகாய விலையில் விலை பேசவும் . இன்றைய  காங்கிரஸ் கட்சிக்கும் காந்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை . மக்கள் என்றால்  யார் ? அவர்கள் எப்படி இருப்பார்கள் ?என்று அறிவுப்பூர்வமான  கேள்விகள் கேட்கும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே இன்று காங்கிரஸ் கட்சியில்  இருக்கிறார்கள் . மக்களாட்சி என்பதற்கும் காங்கிரஸ் ஆட்சி என்பதற்கும் துளியும் தொடர்பில்லை . கிராமப்  பொருளாதரத்தை மேம்படுத்தாமல் வளர்ச்சியை கொண்டு வர முடியாது . வளர்ச்சி கீழிருந்து மேல் நோக்கியதாக இருக்க வேண்டும் .இந்தியாவில் வளர்ச்சி என்பது அந்தரத்தில் இருக்கிறது .

தேசிய ஒருமைப்பாடு என்பது மிகவும் மோசமடைந்து வருகிறது . தண்ணீர் ,மின்சாரம் ,இனம் ,பகுதி என்று பலவித பிரிவினைகள் . இந்தியன் எல்லா இடத்திலும் இந்தியனாக இல்லை . மின்சாரத்தைப் போல தண்ணீரையும் தேசியமயமாக்கினால் தான் என்ன ? எப்படியாவது பதவிக்கு வர வேண்டும் என்று நினைக்காமல் ,பல்வேறு பட்ட மக்கள் ,பல்வேறு கலாசாரங்களுடன் வாழும் இந்தியாவைப் பற்றி கொஞ்சமாவது அரசியல் கட்சிகள் நினைக்க வேண்டும் .இல்லையென்றால் இவர்கள்  பதவிக்கு வர எதுவும் இருக்காது .

ஆசையின் விளைவாக உலகில் நிகழும் மாற்றங்களை மெளனமாக பார்த்து ரசித்துச் சிரிக்கிறார் ,புத்தர் .

புத்தர் சிரிக்கிறார் !

பின் குறிப்பு :

உலகம் அழியுமா ? இப்போதைக்கு அழியாது . ஒரு காலத்தில் டைனோசர்கள் உலகை ஆண்டன .இன்று ,மனிதர்கள் ஆள்கிறார்கள் .நாளை ,வேறு ஏதாவது ஒரு விலங்கு உலகை ஆளலாம் . பூமி அழியவே அழியாதா .அழியும் ,சூரியன் என்று அழிகிறதோ அன்று பூமியும் அழிந்துவிடும் . மனிதர்கள் அழிந்தாலும் சூரியன் இருக்கும் வரை, பூமி உயிருடன் இருக்கும் என்று தான் தோன்றுகிறது .

நன்றி :- தினமணி ,  Wall Street journal.

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

" இந்தியா " - சர்வாதிகாரிகளின் தேசம் !

காங்கிரஸை அழிப்போம் !

.................................................................................................................................................



Wednesday, December 5, 2012

எது கலாசாரம் - கி.ரா...!

 கி.ராஜநாரயணன் ,வட்டார மொழி இலக்கியத்தின் முன்னோடி , தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் . ஊரூராக தேடியலைந்து நாட்டார் கதைககளை ஆவணப்படுத்தியவர் . நாட்டார் வழக்கில் இயல்பாகவே  இழையோடியிருந்த பாலியலையும் ,பாலியல் கதைகளையும் பதிவு செய்தவர் . தலைசிறந்த கதைசொல்லியான அவரது நேர்காணல் 14-11-12 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது . ஒரு சில வார்த்தைகளின் மூலம் மட்டுமே பெரிய கோட்டையையே தகர்க்கும் சக்தி உண்மையான படைப்பாளிகளுக்கு மட்டுமே வாய்க்கிறது . எந்தவித விழுமியங்களிலும் சிக்காமல் வாழ்க்கையை எளிமையாக அணுகுகிறார் ,கி .ரா . அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . கலாசாரம் குறித்து அவர் சொன்னதை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .


சமஸ் :-

" கட்டுக்கோப்பான கலாசாரத்திற்குப் பேர் போன இடைசெவல் மாதிரி ஒரு இந்தியக் கிராமம் ; உலகிலேயே முற்போக்கானதாகச் சொல்லப்படும் பிரெஞ்சு  கலாசாரச்  சூழல் நிலவும் பாண்டிச்சேரி மாதிரி ஒரு நகரம் .. இரண்டிலும் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் . எந்தக் கலாசாரம் உண்மையில் உன்னதமானதாக உங்களுக்குத் தெரிகிறது ?"

 கி.ரா :-

" பிரெஞ்சு கலாசாரம் தான் உன்னதமாத் தெரியுது . இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோசமா வாழனும் . அதுதான் நோக்கம் .சந்தோசமா எப்படி வாழறது ? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும் . எந்தக் கட்டுப்பாடும் இல்லாம , அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா,சந்தோசமா வாழனும் . அதுக்கு எந்தக் கலாசாரம் எடம் கொடுக்குது ? இந்தியக் கலாசாரம் எடம் கொடுக்கல .அட , விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே ? ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாசாரம் இருந்துச்சு . விருப்பம்போல வாழலாம் ; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம் .இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம் . புள்ளைங்களுக்கும்  தெரியும் . அம்மாதான் நம்மளோட அம்மா ,நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது . ஊருக்கும் தெரியும் . யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை .சந்தோஷமா இருந்தாங்க .ஆனா ,அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது . நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான் .கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடுச்சு அலையுறோம் ."

சமஸ் :-

"அப்படி என்றால் , ஒரு கலாசாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம் தான் அளவுகோலா ? "


கி.ரா :-

" ஆமா ,கலாசாரம்னு பேசுனா , மொதல்ல அங்கே இருந்து தானே தொடங்கணும் ? ஒழுக்கம் ,ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ ,அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும் . ஒவ்வொருத்தனும் மனுசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான் .வெளியே பேசுறது பதிவிரதத்தனம் .சென்னையிலேயே,ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா ? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு , குழாயை  உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா ? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு ? அட , பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது ? என்னடா , இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது .இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது , இல்லையா ?மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன் ."

சமஸ் :-

" இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா? "

கி.ரா.:-

" கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும் . எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும் . பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் . மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விசயமாக்கிட்டோம் . பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு , அந்த ஞாபகமாகவே அலையுது . நான் கேட்குறேன் ... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா , அது சிக்கலா, இல்லையா ? அது அவனோட சிக்கல் மட்டும்தானா .. சமுதாயத்தோட சிக்கலுமா ? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே ,அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன ? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி , கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க . ரெண்டு பசியுமே மோசமானது . ஆனா, இங்கே எல்லோருமே மேல் வயித்துப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம் . கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம் .  "


சமஸ் :-

" இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா ? "

கி.ரா :-

"     முதல் காதல் ... ஹா ... ஹா ... பசிக்குது . அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு .உடனே கிடைச்சுட்டா ,அதை ஒரு விசயமா நெனைப்போமா ? அப்படித்தான் இந்தக் காதலும் . கிடைச்சுட்டா , அந்த நேரச் சாப்பாடு . கிடைக்காட்டி , அதுக்குப் பேர் காதல் . கிடைக்கவே கிடைக்காட்டி , அது  அமரக் காதல் , காவியக் காதல் . ஒரு விஷயம் சொல்லலாம் . காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை .வந்துக்கிட்டே இருக்குறது . "


இந்த 90 வயதுக்காரரிடம் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது ...!

நன்றி - ஆனந்த விகடன் .


மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை !

உண்மையான கொண்டாட்டம் !

வாழ்க்கை ஒரு போராட்டம் !
.................................................................................................................................................

Tuesday, November 13, 2012

உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ...!

 நாம் முன்தீர்மானம் செய்யும் அனைத்தையும் தவிடுபொடியாக்கி அசுர வேகத்தில் சுழல்கிறது,காலம் . எதைப்பற்றியும் கவனம் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம் . மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்திலிருந்தே விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன . பண்டிகைகள் சமூக வாழ்வின் ஓர் அங்கம் . வேலை நிமித்தமாக பிரிந்து இருக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்க பண்டிகைகள் உதவுகின்றன . முன் எப்போதையும் விட தற்போது ,செய்யும்  வேலை காரணமாக மனிதர்கள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கிறார்கள் . அவர்களை ஒன்று சேர்க்க , ஒரு நாலாவது தங்களது இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட பண்டிகைகள் உதவுகின்றன .

 தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து தற்போது பலவிதமான கருத்துகள் உருவாகியுள்ளன . சுற்றுச்சூழல் சார்ந்து சிந்திக்க ஆரம்பித்திருப்பது மிகநல்ல விசயம் . ஆனால் ஒரே நாளில் நம் பட்டாசு கொளுத்துவதை நிறுத்திவிட முடியாது . பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள் .யாரும் விருப்பப்பட்டு வெடிமருந்துடன் கழியும் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்லவில்லை . உயிர் பிழைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்கின்றனர் . அவர்களுக்கு மாற்று வழி தேட வழி செய்துவிட்டு பட்டாசு கொளுத்துவதை நிறுத்த முயல வேண்டும் . உரிய பாதுகாப்பு இல்லாத பட்டாசு ஆலைகளை செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது .

பிளாஸ்டிக் போலத்தான் பட்டாசும் பல வருடங்கள் அதோ இதோ என்கிறார்கள் எதுவும் நடந்தபாடில்லை . முன்பைவிட பிளாஸ்டிக்கும் ,பட்டாசும் அதிகமாகத் தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள் . தற்போது கிராமங்களில் நடக்கும் குடும்ப விழாக்களில் கூட  பட்டாசுகள் பயன்படுத்தப்படுகின்றன . ஊடகங்கள் மூலம் மோசமான பழக்கங்களையே மக்களுக்குப் போதிக்கிறோம் . ஊடகங்கள் மூலம் நாம் நினைக்கும் அனைத்து மாற்றங்களையும் சமூகத்தில் கொண்டு வர முடியும் . அனைத்தும் வணிகமாகி விட்ட இன்றைய சூழலில் ஊடகங்கள் வருமானம் வராத எதையும் செய்யப்போவதில்லை . பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்துப் பேசும் நம்மில் எத்தனைபேர் கடைக்குப் பொருட்கள் வாங்க பை எடுத்துக்கொண்டு போகிறோம் . பட்டாசின் தீமைகள் குறித்துப்பேசும் எத்தனைபேர் பட்டாசு வெடிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை . யாராக இருந்தாலும் முடிந்தவரை பிளாஸ்டிக்கையும் ,பட்டாசையும் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் .முடியாதபோது குறைவாக பயன்படுத்தலாம் .

எப்படிப் பார்த்தாலும் பண்டிகைகள் நம் சமூக வாழ்வின் வரம் . பண்டிகைகள் காரணமாக விதவிதமான பொருட்கள் விற்பதன் மூலம் பயனடையும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் . பண்டிகைகளை தவிர்க்க வேண்டியதில்லை . காலத்துக்கேற்ற மாற்றத்தைச் சந்திக்காத எதுவும் நிலைப்பதில்லை . காலத்திற்கு ஏற்ற மாற்றத்துடன் பண்டிகைகளைக் கூடிக் கொண்டாடுவோம் .

தீபாவளி குறித்து எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன . A.M.ராஜாவின் இசையமைப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கல்யாண பரிசு " திரைப்படத்தில் இடம்பெற்ற "உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட.." பாடல் தீபாவளிப் பாடல்களில் ஒன்று . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலிது . இப்படாலை P .சுசீலா பாடியுள்ளார் .

அந்தப்பாடல் :


பாடல்வரிகள் :

உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா _ ஆ… உறவாடும் நேரமடா

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீவாடா -கன்ன
எண்ணத்தில் உனக்காக இடம்நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?
வல்லமை சேர நல்லவ னாக
வளர்ந்தாலே போதுமடா… வளர்ந்தாலே போதுமடா

சித்திரைப் பூப்போல சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு!
முத்திரைப் பசும்பொன்னே ஏனிந்தச் சிரிப்பு?
முகமோ? மலரோ? இது என்ன ரசிப்பு!
மின்னொளி வீசும் உன்எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா? _  வேறென்ன வேணுமடா? (உன்னை…

 எனக்குப்பிடித்த இன்னொரு தீபாவளிப் பாடல் " வா வா வசந்தமே ... " . 1982 ஆம் ஆண்டு வெளிவந்த புதுக்கவிதை திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது . மலேசியா வாசுதேவன் இப்பாடலை அற்புதமாகப் பாடியிருப்பார் .


மேலும் படிக்க :

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

பட்டுவண்ண ரோசாவாம் ...!
 
...........................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms