Monday, June 30, 2014

ரிமோட் கன்ரோல் வாழ்க்கை !

ரிமோட் கன்ரோல் செயல்பாடு மனித வாழ்வில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது . இந்தப் பாதிப்பு நாம் உணரா வண்ணம் நிகழ்ந்துள்ளது. ரிமோட் கன்ரோலைப் பயன்படுத்தாமலே   தொலைக்காட்சி பார்த்தோம், கார் ஓட்டினோம் , வீட்டில் வாழ்ந்தோம் இன்னும் பல வேலைகள் செய்தோம் . அப்போதும் ஒரு வாழ்க்கை வாழ்ந்தோம் . ரிமோட் கன்ரோலைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொண்டும் ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் .என்ன வித்தியாசம் ?

நாம் இயக்க நினைக்கும் பொருட்களை தொலைவிலிருந்தே உடனடியாக இயக்க ரிமோட் கன்ரோல் பயன்படுகிறது. நமது நேரத்தை மிச்சப்படுத்திய ஒரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் ஒரு விதத்தில் நம்மை சோம்பேறியாகவும் மாற்றிவிட்டது . விசயம் அதுவல்ல. இந்த ரிமோட் கன்ரோல் செயல்பாடு நம் வாழ்வை எவ்வாறு பாதித்துள்ளது என்பது சற்றே அதிர்ச்சி தரும் விசயம்.

நாம் பயன்படுத்தும் பலவிதமான ரிமோட்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது தொலைக்காட்சி ரிமோட் தான். தொலைக்காட்சி ரிமோட்டால் சண்டை வராத வீடுகளே இல்லை. ரிமோட் என்ன செய்கிறது ,நாம் அமுக்கிய பட்டனுக்கு உரிய வேலையை எந்தக் கேள்வியும் கேட்காமல் செய்து முடிக்கிறது. ரிமோட்டின் இந்த கேள்வி கேட்காத தன்மை நமக்கு மிகவும் பிடித்திருககிறது. பொதுவாகவே  தனது செயல் குறித்து மற்றவர்கள் கேள்வி கேட்பதை மனிதன் விரும்புவதில்லை. ஆகவே நமக்கு ரிமோட் மிகவும் பிடித்த பொருளாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை . இதில் பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பொருட்கள் இயங்குவது போல் சக மனிதர்களும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் சொல்படி இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறபோதுதான்.

 தான் சொல்லும் வேலையைச் செய்யாதவர்கள் மீது எரிந்து விழுகிறோம் . தான் கொடுத்த வேலை குறித்து கேள்விகள்  கேட்பதும் பிடிப்பதில்லை. தான் சொல்லும் வேலையை எந்தக் கேள்வியும் கேட்காமல் மற்றவர்கள் செய்து முடிக்க வேண்டும் என்ற மனநிலை சமூகத்தின் அனைத்து தளத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது . அரசுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடும்பங்கள் அனைத்திலும் இந்த ரிமோட் கன்ரோல் மனநிலை பெருகியுள்ளது. குறிப்பாக குடும்பங்களில் கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ ரிமோட் போல இயக்க நினைப்பதாலேயே நிறைய பிரச்சனைகள் வெடிக்கின்றன.

இந்த ரிமோட் கன்ரோல் மனநிலை நம்மை நாமே அழித்துக் கொள்ள மிகச் சிறந்த வழி . " தி கிரேட் டிக்டேட்டர் " திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சார்லி சாப்ளின் மேடையில் பேசும் பேச்சு , நாம் இயந்திரத்திற்கு எவ்வளவு மரியாதை தர வேண்டும் ,மனிதர்களுக்கு எவ்வளவு மரியாதை தர வேண்டும் என்பதை மிக தெளிவாக எடுத்துக் கூறியது . இயந்திரங்கள் எப்போதும் இயந்திரங்களே , அவற்றுக்கு மனிதத்தன்மை கிடையாது . எப்போதும் மனிதனை இயந்திரத்தோடு ஒப்பீடு செய்யக்கூடாது . சாப்ளின் தனது " மாடர்ன் டைம்ஸ் " திரைப்படத்தில் இயந்திரங்களின் செயல்பாட்டை அழுத்தமாக பகடி செய்திருப்பார் . ஒவ்வொரு நொடியும் இயந்திரங்களுடனே வாழ வேண்டிய சூழலில் நமது மனதிலும் இயந்திரத்தன்மை அதிகரித்தபடியே இருக்கிறது . மனிதத்தன்மை குறைய குறைய மனித இனத்திற்கு அழிவு தான் .

ரிமோட் கன்ரோல் மனநிலையையும் ,இயந்திரத்தன்மையையும் தொலைவில் வைப்போம் .மனிதத்தன்மையை மனதில் வைப்போம் !

மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை !

வாழ்க்கை ஒரு போராட்டம் !
............................................................

Friday, May 23, 2014

எது வளர்ச்சி ?

எங்க பார்த்தாலும் வளர்ச்சி வளர்ச்சினே பேசிக்கிறாங்க . தனி மனித வளர்ச்சி , கிராம நகர வளர்ச்சி , பொருளாதார வளர்ச்சி ,நாட்டின் வளர்ச்சி , உலகின் வளர்ச்சினு பலவிதமான வளர்ச்சி பற்றி பலரும் வகுப்பெடுக்கறாங்க . உலகமயமாக்கல், இந்த வளர்ச்சின்ற பேர சொல்லிக்கிட்டு தான் உலகெங்கும் கிளை பரப்புகிறது. உண்மையில் உலகமயமாக்கலால் வளர்ந்ததை விட அழிந்ததே அதிகம். அப்படியென்றால் வளர்ச்சியை எப்படி நிர்ணயம் செய்வது ?

வளர்ச்சியின் உண்மையான பொருள் இயற்கையிடமிருக்கிறது. இயற்கையில் வளர்ச்சி என்பது அழிவால் வருவதில்லை. அழிவு இருந்தாலும் ஒரு கட்டுப்பாடான சமநிலை இயற்கையில் பேணப்படுகிறது. அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் இயற்கை ஒருபோதும் ஆதரிப்பதில்லை . இன்றைய நவீன வளர்ச்சி என்பது அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் நோக்கி மனிதனைத் தள்ளுகிறது .உலகமய வளர்ச்சியில் சமநிலைக்கு சிறிதும் இடமில்லை. ஏற்றத்தாழ்வுகளை முன்பிருந்ததை விட அதிகப்படுத்தியது தான் உலகமயமாக்கலின் சாதனை. முற்றுப் பெறாத வளர்ச்சியை உலகமயமாக்கல் தொடர்ந்து வலியுறுத்துகிறது. இந்த முற்றப்பெறாத வளர்ச்சி தான் ஒரு நிறுவனத்தின் அழிவுக்குக் காரணமாகிறது .

உண்மையில் வளர்ச்சி என்பது கொடுத்துப் பெறுவதும் , பெற்றுக் கொண்டு  கொடுப்பதும் தான் , ஒன்றை அழித்துப் பெறுவதல்ல . ஒரு மரத்தின் வளர்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம் . ஒரு மரம் விதையிலிருந்து வளர்ந்து முழு வளர்ச்சியை அடைவது வரை நீர் , வேதிப் பொருட்கள், நுண்ணுயிரிகள், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்சைடு , ஆக்ஸிஜன் , வெப்பம் , குளிர் போன்ற பல்வேறு காரணிகள் தேவைப்படுகின்றன. அதே மரம் வளரும் போதும் , வளர்ந்த பின்பும் நிறைய பலன்களைத் தருகிறது . மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது , ஆக்ஸிஜன் கிடைக்கிறது , மழைப் பொழிவுக்குக் காரணமாகிறது, பல்வேறு விதமான உயிரினங்கள் வாழ்வதற்கு வாழிடத்தையும் , உணவையும் தருகிறது , வறண்ட காற்றை குளுமைப்படுத்துகிறது ,நிழல் தருகிறது இவ்வாறு பலவற்றை தன்னைச் சுற்றி இருப்பவற்றுக்கு தருகிறது. பல நாடுகளில் சம்பாதித்து ஒரே இடத்தில் குமிக்கும் வேலையை  மரங்கள் செய்வதில்லை ; மனிதர்கள் செய்கிறார்கள் . மாறாத சமநிலையுடன் தன்னைச் சுற்றி இருப்பவற்றிடமிருந்து பெற்றுக் கொண்டு கொடுப்பதும் , கொடுத்துப் பெறுவதும்  தான் உண்மையான வளர்ச்சி .

சமநிலையைப் பேணாத எதுவும் வளர்ச்சியல்ல ; குறைபாடு தான் . இன்றைய வளர்ச்சி என்பது இயற்கையை அழிப்பதில் தொடங்கி இயற்கையை அழிப்பதிலேயே முடிகிறது. ஆறுகளும் , மலைகளும், மரங்களும் பெரிய அளவில் ஒரே நேரத்தில் அழிவைச் சந்திக்கின்றன , வளர்ச்சியின் காரணமாக . கட்டுப்பாடுள்ள வளர்ச்சி தான் எல்லோருக்கும் நல்லது. பத்தடி வளரும் மரம் 12 அடி வளரலாம் , நூறடி வளர்ந்தால் யாருக்கும் லாபமில்லை. அதிகபட்ச வளர்ச்சியே அதிகபட்ச அழிவைத்தரும் மரத்துக்கும் தான் ,மனிதனுக்கும் தான் , நாட்டுக்குந்தான்.    பெரு நிறுவனங்களின் வளர்ச்சியை கட்டுக்குள் வைப்பது தான் அரசாங்கத்தின் கடமை .கடமையைச் செய்யாமல் இருக்க அரசுகளே விலை போகின்றன.

ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி !

மேலும் படிக்க :

விவசாயமும் கிராமமும் தொலைக்காட்சியும் !

இந்தியா - மேட் இன் சீனா !


Wednesday, April 30, 2014

ஆம் ஆத்மியின் குரல் !

நடந்து முடிந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியின் குரல் ,லஞ்சம் , ஊழலுக்கு எதிரான குரலா ? அல்லது மாற்றத்திற்கான குரலா ? தெரியவில்லை. மக்களுக்காகப் போராடும் களப்போராளிகள் அதிகம்பேர் பங்குபெற்ற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கிறது. இத்தனை பேரையும் நேரடியாக அரசியலில் பங்கு பெற வைத்தது நிச்சயமாக ஆம் ஆத்மியின் சாதனை தான். ஆம் ஆத்மியின் வேட்பாளர் தேர்வு மிகவும் வெளிப்படையாகவே உள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி சார்பில் 25 வேட்பாளர்கள் என்பது ஆச்சரியம் தான். வெளியில் மதசார்பற்றவர்கள் போல் காட்டிக் கொண்டு சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது தான் மாநில , தேசிய அளவிளான அரசியல் கட்சிகளின் பொது புத்தி . ஆம் ஆத்மி இவ்வாறு இல்லை என்பது சற்றே ஆறுதல் தருகிறது.

ஒரு தேசிய கட்சியாக நாடு முழுவதும் களமிறங்கியிருக்கும் ஆம் ஆத்மியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒட்டு மொத்த இந்தியாவின் மாற்று அரசியலுக்கான நம்பிக்கைக் கீற்றாய் டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி அவசரப்பட்டு சிறுபிள்ளைத்தனமாக பதவியிலிருந்து விலகியது பெரிய விமர்சனமாக உள்ளது. எதற்காக பதவி விலகியது என்பது சிந்திக்க வேண்டிய விசயம் . மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாத காரணத்தால் தான் ஆம் ஆத்மி பதவி விலகியது . பதவிக்காக எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமானலும் நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் அதிகம் இருக்கும் நாடு தான் இந்தியா. பதவிக்காக இங்கே கருணாநிதி என்னவெல்லாம் செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே.

 கெஜிரிவால் ,காங்கிரஸ் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டிலிருந்து திடீரென்று மோடி எதிப்பு நிலைப்பாட்டிற்கு மாறியது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை . ஆம் ஆத்மியின் கொள்கை ஊழல் எதிப்பு என்றால் கெஜிரிவால், ராகுலை எதிர்த்து தான் போட்டியிட்டுருக்க வேண்டும் . கெஜிரிவால் ,மோடிக்கு எதிராக நிற்பது காங்கிரஸுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது . கெஜிரிவால் ஒரு சர்வாதிகாரி போலவே செயல்படுகிறார் என்றும் சொல்கிறார்கள். இப்படி ஆம் ஆத்மி மீதும், கெஜிரிவால் மீதும் நிறைய விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன .ஒரு அரசியல் கட்சிக்கு ஊழல் எதிர்ப்பு , வெளிப்படைத் தன்மை இவை மற்றும் போதுமா ? காங்கிரஸ் ,பா.ஜ.க., மற்றும் பல்வேறு மாநில கட்சிகள் மீது இருக்கும் வெறுப்பை ஆம் ஆத்மி எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகிறது ? தெரியவில்லை .

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி பெறும் ஒவ்வொரு ஓட்டும் மாற்றத்திற்கான ஓட்டாகவே இருக்கும் . இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி இந்தியா முழுவதும் பெறப் போகும் வாக்கு சதவீதம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடும் . ஒட்டு மொத்த இந்தியாவிற்காக கொள்கைகள் வகுத்து செயல்பட்டால் மட்டுமே ஆம் ஆத்மி வளர முடியும் . இந்தியாவை ஒரே விதமான அளவுகோலில் எப்போதுமே அளக்க முடியாது . பல்வேறு தரப்பட்ட மக்களின் குரலாக ஆம் ஆத்மி ஒலிக்க இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் . எது எப்படியோ " நோட்டா " வில் விழும் ஓட்டும் " ஆம் ஆத்மி "ல் விழும் ஓட்டும் மற்ற கட்சிகளுக்கு மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற அச்சத்தை நிச்சயம் உண்டாக்கும் .

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

...................................................................................................................................................................

Saturday, March 22, 2014

விவசாயமும் கிராமமும் தொலைக்காட்சியும் !

விவசாயம்,விவசாயி குறித்து யாரும் எந்த நிகழ்ச்சியும் தயாரிக்கவோ ,ஒளிபரப்பவோ முன்வருவதில்லை. வெள்ளித்திரை, சின்னத்திரை மனிதர்கள் மட்டுமே பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றனர். இதுவும் ஒருவிதமான தீண்டாமை தான்.இன்றைய சமூகத்தில் மிகப்பெரிய தீண்டாமையைச் சந்திப்பது விவசாயமும், விவசாயியும் தான். "தன் மகன்(ள்) ஒரு விவசாயி ஆக இருப்பதில் தான் பெருமை " என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலை உருவாகும் வரை விவசாயம் என்பது தீண்டத்தகாததாகவே இருக்கும் . இதை மாற்ற வேண்டியது யாருடைய கடமை?

சமூகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் 70 % திரைப்படங்கள் விவசாயம் குறித்தோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்தோ , அதில் ஈடுபடும் மனிதர்கள் குறித்தோ இருக்க வேண்டும் . ஆனால், இங்கு, விதவிதமான காதல்கள் தவிர தமிழ் சினிமாவில் என்ன இருக்கிறது.


 இந்தியாவின் ஆன்மா, இன்னமும் கிராமங்களில் வாழ்வதாகச் சொல்கிறார்கள் . ஆனால் , எல்லாத் தரப்பினராலும் கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன . ஆட்சியாளர்களும் ,அரசியல்வாதிகளும் " கிராமம் " என்ற வாரத்தையை மறந்தும் உச்சரிப்பதில்லை . சமீபத்தில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டன . ஒரு தேர்தல் அறிக்கையில் கூட கிராமம் என்ற வாரத்தையே இல்லை . இந்தியாவில் கிராமங்கள் என்பதே இல்லையா ? இதுல காந்திய தேசம் ( கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு - காந்தி ) என்ற பெருமை வேறு .

கிராமிய கலைகளை மையமாக வைத்து ஒரே ஒரு நிகழ்ச்சி நடத்தக் கூடாதா ! சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சினிமாப் பாடல்களைப் பாடவும் , சினிமாப்பாடல்களுக்கு ஆடவும் வைக்கிறீர்களே .பாடத் தெரியாதவர்களுக்கு பாடச் சொல்லிக்கொடுத்தும் , ஆடத் தெரியாதவர்களுக்கு ஆடச் சொல்லிக்கொடுத்தும் நிகழ்ச்சிகள் நடத்துகிறீர்களே . ஏன்  கிராமியக் கலைகளை கற்றுக் கொடுத்து ஒரு நிகழ்ச்சியாவது நடத்தக் கூடாது ? தமிழ்நாட்டில்  சினிமாவைத் தவிர எதுவுமே  இல்லையா !

 இயல் ,இசை , நாடகம் என்று மூன்று தமிழ் உண்டெனச் சொல்கிறார்கள் .   இயல் என்பது இன்றைய இலக்கியம் , நாடகம் என்பது இன்றைய சினிமா , இசை என்பது ?  சினிமா இசை தான் தமிழிசையாக மாறிப் போய்விட்டது .சினிமாப் பாடல் தவிர்த்து , ஒரு புதிய பாடலை உருவாக்கி பாடும் வகையில் போட்டிகள் நடத்தலாம் . புதிய வகை நடனப் போட்டிகள் வைக்கலாம் . நல்ல இசைக்கானப் போட்டிகள் நடத்தலாம் . அதை விடுத்து வெறும் சினிமாப் பாடல்களைப் மட்டுமே பாடவும் , ஆடவும் வைத்துக்கொண்டு மார்க் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .இதுல சீசன் 1,2,3,4,5,6,7,8 வேறு .
 சினிமா ஸ்டுடியோ சென்னையில் இருக்கலாம் . அதற்காக நகர மக்களுக்காக மட்டுமே நீங்கள் நிகழ்ச்சிகள் தயாரிப்பீர்களா !

தமிழ்நாடு முழுக்க கடுமையான  வறட்சி நிலவும் இன்றைய சூழலில் , அன்றன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் சோதனையாக இருக்கும் நிலையில் " ஒல்லி பெல்லி " குறித்தெல்லாம் கவலை இல்லை . எங்கள் பகுதிகளில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை . விவசாயம் நன்றாக நடைபெற்றால் மட்டுமே எல்லோருக்கும் வேலை கிடைக்கும் . வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை  உள்ளது உள்ளது .சற்று இளைப்பாற தொலைக்காட்சியை நாடினால் அது தொல்லைக்காட்சியாக இருக்கிறது .குறிப்பாக இந்த செய்தி சேனல்கள் பக்கமும் , ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ற சேனல்கள் பக்கமும் எட்டிப் பார்க்கக் கூட முடியவில்லை . இடையில இந்த சீசன்கள் வேறு . அதனால் பெண்களுக்கு , வன்முறைக் காட்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நெடுந்தொடர்கள் . ஆண்களுக்கு , நேரத்தை விழுங்கும் கிரிக்கெட் ! தான் பொழுதுபோக்கு . நெடுந்தொடர்களிடமிருந்து பெண்களையும் , கிரிக்கெட்டிடமிருந்து ஆண்களையும் காப்பாற்றுங்கள்.

நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடுத்து " கண்டிப்பாக ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் வாரத்தில் ஒரு மணி நேரமாவது வார இறுதி நாட்களில் மாலை 6 முதல் 10க்குள் விவசாயம், கிராமம் , கிராமம் சார்ந்த கலைகள் ,நிகழ்ச்சிகளாக ஒளிபரப்ப வேண்டும் " என்று தீர்ப்பு தான் வாங்க வேண்டும் போல ...!

(  இந்தப் பதிவு , என்னால்  முகநூலில் எழுதப்பட்ட இரண்டு கருத்துரைகளின்  தொகுப்பு )

மேலும் படிக்க :

 ஆக்காட்டி ஆக்காட்டி ! 
                                                                                                                                        
சினிமா - கிரிக்கெட் - இந்தியா ! 

MGR அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் !

...................................................................................................................................................................

Wednesday, February 19, 2014

தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் !

இந்திய கிரிக்கெட் வரலாறு இரண்டு இடங்களில் தோனியின் பெயரை அழுத்தமாக பதிவு செய்யும் . ஒன்று , அனைத்து சர்வதேச கோப்பைகளையும் வென்ற இந்தியாவின் சிறந்த அணித்தலைவர் .இரண்டு ,தனி ஒரு நாட்டுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணங்களில் மோசமான தோல்விகளை அதிகளவு  சந்தித்த இந்தியாவின் அணித்தலைவர் . இந்திய கிரிக்கெட் அணி , 1970 களில் கத்துக்குட்டி அணியாக சர்வதேச போட்டிகளில்  விளையாடி மோசமான தோல்விகளை சந்தித்த போது  அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . வளரும் அணி தொடர்ந்து தோற்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது . அந்த அணி வெற்றி பெற முயற்சிப்பதே சாதனையாக பார்க்கப் படுகிறது . ஒரு நாள் போட்டியில் சாம்பியன் , டெஸ்ட் மற்றும் 20-20 போட்டிகளில் உலகத்  தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ள ஒரு அணி தொடர்ந்து மோசமாக தோற்பது தான் இந்திய ரசிகர்களால்  மட்டுமல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களாலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு என்றாலும் வெற்றி, தோல்வி இரண்டுக்கும் அணித்தலைவரே பொறுப்பேற்கிறார் . வெற்றிகளை குவித்த போது தோனியைத்  தலையில் வைத்து கொண்டாடினோம் .தற்போது அதே தோனி தொடர் தோல்விகளை சந்திக்கும் போது நமது உதடுகள்  அவரை ஏசுகின்றன . இந்த நிலை விரைவில் மாறி இந்திய அணி வெற்றிகளைக் குவிக்கும் போது நாம் மீண்டும் தோனியைப் புகழ ஆரம்பித்து விடுவோம் . முன்பு இங்கிலாந்திலும் ,ஆஸ்திரேலியாவிலும் அடைந்த மோசமான தோல்விகளுக்கு ( இரண்டு நாடுகளிலும் நான்கு டெஸ்டிலும் தோல்வி ) நன்றாக செயல்படாத வீரர்களை பழைய சாதனைகளுக்காக தொடர்ந்து தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினர் தான் காரணம் . அடுத்ததாக நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைக்கு முற்றிலும் புதிய அணியை  ( IPL போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்கள் ) தேர்வு குழு தேர்ந்தெடுத்தது. அதன் விளைவாக சாம்பியன்ஸ் கோப்பையை அசத்தலாக வென்றது . நான் இதுவரை பார்த்த கிரிக்கெட் தொடர்களில் ,ஒரு தொடர் முழுவதும் இந்தியா சிறப்பாக பந்துவீசியது கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மட்டுமே .20 ஓவராக குறைக்கப்பட்ட இறுதிப் போட்டியில் ( இலக்கு 126 )கூட பந்துவீச்சால் தான் இந்தியா வென்றது . அதன் பிறகு இந்தியாவில் நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவை நான்கு டெஸ்ட்களிலும் தோற்கடித்தது . பிறகு நடந்த  7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ஆஸ்திரேலியாவை வென்றது . சச்சினுக்காக தென்னாப்பிரிக்கத்  தொடரைச்  சிதைத்து மேற்கு இந்தியத் தீவுகள் உடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் திடீரென்று உருவாக்கப்பட்டது . அதிலும் இந்தியா வென்றது . போதிய பயிற்சியும் , அனுபவமும் இல்லாததால் தென்னாப்பிரிக்கத் தொடரில் மோசமான தோல்விகளை இந்தியா சந்தித்தது .

நியுசிலாந்தில் இவ்வளவு மோசமான தோல்விகள் எதிர்பார்க்காதது தான் . தோல்விகளுக்கு 11 பேர் கொண்ட அணித்தேர்வும் ,தோனியின் தற்காப்பு மனோபாவமும் ஒரு காரணம் . 5 ஒரு நாள் போட்டிகள் 2 டெஸ்ட் அனைத்திலும் டாஸ் வென்றாலும் ஒரு  போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்தார் . இந்த அணுகுமுறை வெற்றி தராதபோதும் மீண்டும் மீண்டும் பந்துவீச்சையே ஏன் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை? தோனிக்கு ,மட்டையாளர்கள் ,பந்துவீச்சாளர்கள் யார் மீது நம்பிக்கை இல்லை அல்லது  யாரை அதிகம் நம்புகிறார் குழப்பமாக இருக்கிறது .திறமை இருந்தாலும் புதிய வீரர்களைக்  களமிறக்குவதில் தோனி மிகவும் அதிகப்படியான தயக்கம் காட்டுகிறார் . கடந்த IPL தொடரிலும் இதையே செய்தார் . பத்ரிநாத் சிறப்பாக விளையாடாத போதும் இறுதிப் போட்டி வரை தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார் . பாப் டு பிளிசிஸ் ,பாபா அபராஜித் போன்ற வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை . இந்த ஆண்டும் இந்த இரண்டு வீரர்களையும் சென்னை வாங்கியுள்ளது . முதலில் சென்னை அணி இந்த IPL ல் பங்கேற்பதே கேள்விக்குறி தான். கோடிகளிலே புரண்டாலும் சூது கவ்வத்தான் செய்கிறது .இது சூதின் குணமா அல்லது மனிதனின் பேராசையா !அதிகாரத்திற்கும் நீதிக்கும் இடையேயான போட்டியில் எது வெல்லும் என்று தெரியவில்லை . ராஜஸ்தான் அணியின் அணுகுமுறை தான் கோடிகள் புரண்டாலும்   IPL போட்டிகளை அர்த்தப்படுத்துகிறது . ரஹானே ,ஸ்டுவர்ட் பின்னி , சஞ்சு சாம்சன்  ,தாம்பே என்று வயது வித்தியாசம் பார்க்காமல் திறமைக்கு மதிப்புக் கொடுக்கிறது . ரகானே ,ஸ்டுவர்ட் பின்னி இந்திய அணியில் இடம்பெற்று விட்டனர் .  விரைவில் சஞ்சு சாம்சனும் இடம் பெறுவார் .

பந்து வீச்சாளர்களைப்  பயன்படுத்துவதிலும் தோனியின் அணுகுமுறை பெரும்பாலும் வெற்றி தருவதில்லை . கடந்த இரண்டு ,மூன்று தொடர்களிலும்  இந்தியப்  பந்துவீச்சு எதிரணிக்கு ஏந்தவித நெருக்கடியையும் தரவில்லை . அனுபவமின்மை ஒரு காரணமாக  இருந்தாலும் தோனியின் அணுகுமுறையும் ஒரு காரணம் . சுழற்பந்து எடுபடும் மைதானங்களிலும் வேகப்பந்து வீச்சிற்கே முன்னுரிமை கொடுக்கிறார் .பகுதிநேரப் பந்துவீச்சாளர்களைப் பெரும் தயக்கத்துடன் தான் பந்து வீச அழைக்கிறார். அவர்கள் சிறப்பாகவே பந்து வீசினாலும் முழுமையாக பயன்படுத்துவதில்லை.கள வியூகம் அமைப்பதிலும் தோனி பின்தங்கியே உள்ளார். இவ்வளவிற்கு பிறகும் இந்தியா பெற்ற வெற்றிகளுக்கு தோனி, வீரர்களிடம் வைத்திருக்கும் அதிகப்படியான நம்பிக்கை தான் காரணம் . இதற்கு முந்தைய அணித்தலைவர்கள் தோனி அளவிற்கு வீரர்களை நம்பியதில்லை . தோனியின் இந்த நம்பிக்கை தான், அவருக்கு  இவ்வளவு வெற்றிகளையும் , பேரையும் ,புகழையும் பெற்றுத்தந்துள்ளது .t20 இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வேறு அணித்தலைவராக இருந்த்திருந்தால் ஜோகிந்தர் சர்மாவை கண்டிப்பாக பந்துவீச அழைத்திருக்க மாட்டார் . ஆனால் ,தோனியின் நம்பிக்கை வென்றது .
தோனிக்கு பெரிய வெற்றிகளைப் பெற்றுத்தந்த இந்த அதிகப்படியான நம்பிக்கை தான் தற்போது தோல்விகளையும் பெற்றுத்தருகிறது. குறைவான திறமை உள்ளவர்களிடமிருந்தும் அதிகப்படியான திறமையை எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்.

அணித்தேர்வு :

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலிருந்து 15 பேரைத் தேர்வு செய்வது மிகவும் சவாலானது. தேர்வுக்குழு இந்தப்பணியைத் திறம்படவே செய்கிறது . உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்கள் தேசிய அணியில் இடம்பெறுகின்றனர். முன்பை விட தற்போது அணித்தேர்வில் வெளிப்படைத்தன்மை தெரிகிறது.

11 பேர் தேர்வு :

களமிறங்கும் 11பேரைத் தேர்ந்தெடுப்பதில் கடந்த இரண்டு , மூன்று தொடர்களாக தோனி சொதப்பி வருகிறார்.சரியான 11 பேரை தேர்வு செய்து விட்டாலே அணித்தலைவரின் பாதிப்பணி முடிந்துவிடும். வெற்றி பெற்றாலோ,  தோல்வி அடைந்தாலோ முதலில் தீர்மானித்த அணி தான் தொடர் முழுவதும் விளையாடுகிறது. நியுசிலாந்து தொடர் ஆரம்பிக்கும் போதே தோனி சொல்கிறார் " பரிசோதனை முயற்சிகளில் இறங்க மாட்டோம் " .சரி, அப்படி பரிசோதனை முயற்சி எதுவும் செய்யாததால் நியுசிலாந்து தொடரில் இந்தியா பெற்றது என்ன ? தோல்விகள் மட்டும் தான் . அதே வேளையில் நியுசிலாந்து அணி தொடர் முழுவதும் பரிசோதனை முயற்சிகளில் இறங்கியது . ஒவ்வொரு போட்டிக்கும் அணி வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தது . இந்தியா ஒரு போதும் இவ்வாறு செயல்படாது . குறைபாடுகள் அதிகம் இருந்தாலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணியை மாற்றவே மாட்டார்கள் . 50 ஓவர்கள் விளையாடும் போட்டியில் கூட ஜடேஜாவுடன்  சேர்த்து 5 பந்து வீச்சாளர்கள் இடம்பெறுகிறார்கள் . 200 முதல் 300 ஓவர்கள் பந்துவீச வேண்டிய டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுடன்  சேர்த்து 4 பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஆடும் அணியில் இடம்பெறுகிறார்கள் . டெஸ்ட் அணிக்கு முற்றிலும் பொருந்தாத வீரராக ஜடேஜா இருந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது .டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள்  தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அஸ்வினுக்கு இரண்டு டெஸ்ட்களிலும் வாய்ப்பளிக்கவில்லை .ஜடேஜாவை விட அஸ்வின் சிறந்த ஆல்ரவுண்டர் . அமித் மிஸ்ரா தொடர்ந்து இரண்டு தொடர்களாக  புறக்கணிக்கப்பட்டுள்ளார் . ஈஸ்வர் பாண்டேவுக்கு வாய்ப்பளிக்கவில்லை .பேருக்கு ஒரு போட்டியில் மட்டும் ஸ்டுவர்ட் பின்னிக்கு வாய்ப்பு . அடுத்து ஆசியக் கண்டத்தில் நடைபெறும் போட்டிகளில் என்ன செய்யப் போகிறார்களோ .

பந்துவீச்சு : 

இந்தியக் கிரிக்கெட் அணியா ! வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டது ; பந்து வீச்சு சுமார் தான் , எப்பவாவது சிறப்பாக பந்து வீசுவார்கள் .இந்தக் கதையைத் தான் நாம் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த ஆரம்பித்த காலத்தில் இருந்துu சொல்கிறார்கள் . மற்ற நாடுகளில்  சிறந்த பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள் . உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் யாரும் தற்போது இந்திய அணியில் இல்லை .முன்பாவது இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கென்று ஒரு தனித்துவம் இருந்தது . மற்ற அனைத்து அணிகளும் இந்தியச் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள அஞ்சும் . தற்போது அந்த நிலையும் இல்லை . அனைத்து அணிகளும் மிக எளிதாக இந்தியச் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்கின்றன . இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கட் வீழ்த்தும் தகுதியுள்ள பவுன்சர் பந்துகளை வீசத் தெரிவதே இல்லை . பேருக்கு பவுன்சர் போடுகிறோம் என்று வீசுகிறார்கள், அது 6 ஆகவோ 4 ஆகவோ மாறிவிடுகிறது . இந்தியப் பந்துவீச்சில் நிலைப்புத்தன்மை என்பதே எப்போதும் இல்லை .எப்ப நன்றாக பந்து வீசுவார்கள் ,எப்ப மோசமாக பந்து வீசுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது . இப்போது இந்தியக் கிரிக்கெட் அணியின் இடத்தைத் தக்கவைக்க தரமான பந்து வீச்சாளர்களைக் கண்டடைவது அவசியம் .

மட்டைவீச்சு :

 இந்திய அணியின் மட்டைவீச்சு எப்போதும் கொஞ்சம் அதிகமான திறனுடன் தான் இருக்கிறது. அந்த திறனை முழுதாக பயன்படுத்த தவறிவிடுகிறார்கள் .பொதுவாகவே இந்திய வீரர்களிடம் மனோபலம் சற்று குறைவாகவே உள்ளது. கடினமான போட்டியில் ஒரு அளவிற்கு மேல் வெற்றி பெற போராடுவதே இல்லை. மட்டைவீச்சாளர்கள் போராட்ட குணத்துடன் செயல்பட்டால் இன்னும் அதிகமான போட்டிகளில் வெற்றி பெறலாம்.

களவியூகம் :

இந்திய அணி களவியூகம் அமைப்பதில் அனைத்துவிதமான போட்டிகளிலும் அழகாக சொதப்புகிறது. பார்மில் இல்லாத வீரர்கள் கூட இந்தியாவிற்கு எதிராக அட்டகாசமாக ஆடுகிறார்கள் . பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினாலும் பார்ட்னர்சிப்பை பிரிக்கும் வகையில் கள வியூகம் அமைக்கப்படுவதில்லை. எதிரணி வீரர்கள் அடித்து ஆடாவிட்டாலும்  களத்தடுப்பாளர்களை எல்லைக்கோட்டிலேயே நிறுத்துகிறார், தோனி. மோசமான கள வியூகத்தால் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் அணிகள் ஒரு நாள் போட்டிகளில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் எடுத்துவிடுகிறார்கள். சமீபத்திய தோல்விகளுக்கு மோசமான கள வியூகமும் ஒரு காரணம். தோனி இதைப்புரிந்து கொள்ள வேண்டும் .

தோனி , வெளிநாடுகளில் தனியொரு நாட்டிற்கு எதிரான தொடர்களில் பெரிய தோல்விகளைச் சந்தித்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் பங்கு பெறும் கிரிக்கெட் தொடர்களில் பெரிய வெற்றிகளைப் பெற்று இருக்கிறார். அடுத்த தொடர்களில் என்ன நடக்குமோ தெரியவில்லை . பலவீனங்கள் இருந்தாலும் இந்தியா தரவரிசையில் தொடர்ந்து நல்ல நிலையிலேயே இருக்கிறது. இதைத் தக்கவைக்குமா என்பதுதான் தெரியவில்லை.

மேலும் படிக்க :

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

சினிமா - கிரிக்கெட் - இந்தியா !
....................................................................................................................................................................

Wednesday, January 22, 2014

K.A.தங்கவேலுவின் நகைச்சுவை !

 
தமிழ் திரைப்பட வரலாற்றில் அன்று முதல் இன்று வரை  கதாநாயகனுக்கு நண்பனாக ஒரு நகைச்சுவை நடிகர் தான் நடிக்கிறார் .ஏன்? தெரியவில்லை . கதாநாயகனை ஒப்பந்தம் செய்தவுடன் நகைச்சுவை நடிகரைத் தான் ஒப்பந்தம் செய்கிறார்கள் .ஜெமினி கணேசனின் நண்பனாக பல படங்களில் தங்கவேலு நடித்துள்ளார். 


அம்பிகாபதி -தங்கவேலு , நகைச்சுவை நடிகர் கருணாநிதியுடன் ( வெங்காய புலவர் ) இணைந்து நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்யும் நகைச்சுவை அசரடிக்கும்.முழுப் படத்தையும் பார்க்க.


கல்யாண பரிசு - " மன்னார் அன் கம்பெனி " யை மறக்க முடியுமா ? மன்னார் அன் கம்பெனியின் மேனேஜர் என்று பொய் சொல்லிக் கொண்டு இவர் பண்ணும் அலப்பரை அருமை .K.A.தங்கவேலுவிற்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்த படம் .




 
கைதி கண்ணாயிரம்-இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகன் அளவிற்கு முக்கியமான வேடம் .கவுண்டமணி பிற்காலத்தில் இந்தத் தலையா ! அந்தத் தலையா! என்று சொல்வதற்கு முன்பே தங்கவேலு இந்தப்பயலே! அந்தப் பயலே! (பணாதப் பயலே, ஊசிப் பயலே,கொரங்குப் பயலே,மூஞ்சூருப் பயலே ..) என்று சொல்லியிருக்கிறார். இந்தப்படத்தில் தங்கவேலுவிற்கு ஜோடிப் பாடலும் உண்டு.




இரும்புத்திரை - தங்கவேலுவின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த படம் .ஒரு தொழிலாளியாக தங்கவேலுவின் நடிப்பு அபாரம் . "கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல.." இன்றும் இந்தப் பாடல் பாட்டாளி மக்களின் நிலையைப் பிரதிபளிக்கிறது . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட அற்புதமான பாடலிது.நான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கும் படம் இது தான்.


அடுத்த வீட்டுப்பெண் - தன் மனைவி சரோஜாவுடன் இணைந்து கலக்கிய படம் ." கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..!" கதாநாயகன் பாடுவது போல அமைந்த பாடலை அறைக்கு உள்ளிருந்து தங்கவேலு பாடுவார்.

அறிவாளி - முற்போக்கான பத்திரிகை எழுத்தாளராக நடித்திருப்பார் நம் சக்ரவர்த்தி .  படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்டு அவர் படும்பாடு அட்டகாச நகைச்சுவை .


ரம்பையின் காதல் - தங்கவேலு கதாநாயகனாக நடித்த படம் .இந்தப் படத்தின் கதாநாயகி பானுமதி . இந்தப் படத்தைத் தழுவித்தான் வடிவெலு நடித்த "இந்திரலோகத்தில் நா.அழகப்பன் " படம் எடுக்கப்பட்டது .டி.எஸ்.பாலையா எமனாக நடித்திருப்பார் .எமன் வேசத்தில் பாலையாவைப் பார்க்கும் போதே சிரிப்பு வந்துவிடும் .அலட்டிக்காமல் சிரிக்க வைக்கும் திறமை பாலையாவிற்கு உண்டு .

தங்கவேலுவின் மேலும்  சில நகைச்சுவைக் காட்சிகள் :

 
 
 
 
 
 
 
 
 
 
 
மேலும் படிக்க :                                                                                                                       
                                                     
 
 
.....................................................................................................................................................................
 
                                                            
 
 

Tuesday, December 31, 2013

வட்டியில் சுழலும் வாழ்வு ..!

நீங்கள் உலகின் எந்தப்பகுதியில் வசித்தாலும் வட்டியுடன் தான் வாழ வேண்டிய சூழல் உள்ளது . கொடுத்த கடனுக்கு வட்டி வாங்குபவராகவோ அல்லது வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுபவராகவோ இருக்க வேண்டும் . வட்டி கட்டுபவர்களின் எண்ணிக்கை  தான் அதிகமாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .ஏன் ?எல்லா நாடுகளுமே உலக வங்கியிடம் கடன் பெற்றுள்ளன ;வட்டியும் கட்டுகின்றன.கடன், பல வேளைகளில் ஆக்கசக்தியாக இருந்தாலும் சில வேளைகளில் வாழ்வையே அழிக்கும் அழிவுசக்தியாகவும் இருக்கிறது .சாதரணமாகவே வாழ்வைப் பாதிக்கும்  கடனும் ,வட்டியும்,  உலக வணிகமயமாக்கத்தின் காரணமாக சமூக அமைப்பில் இருக்கும் அனைவரையும் வெகுவாக பாதிக்கும் காரணிகளாக மாறிவிட்டன .

மருத்துவத்திற்காகவும் ,கல்விக்காகவும் தான் நாம் அதிகம் கடன் வாங்குகிறோம் . "தகவல் பெறும் உரிமை போல , மருத்துவ சேவை பெறும் உரிமையையும் , கல்வி பெரும் உரிமையையும் நமது அரசிடமிருந்து பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் .மக்களின் மருத்துவ சேவைக்காக சீனா செலவளிக்கும் தொகையில் நான்கில் ஒரு பங்கைத் தான் இந்திய அரசு, இந்திய மக்களுக்காக செலவிடுகிறது " என்று  பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் சொல்கிறார்.

ஒரு வலிமையான நாட்டை உருவாக்க மக்களின் ஆரோக்கியமும் , சர்வதேச தரமுள்ள கல்வியும் அவசியம் .இந்தியாவில் மருந்துகள்,மருத்துவர்களின் சேவை மற்றும் மருத்துவமனைகள் என அனைத்தும் மிகப்பெரும் வணிகம் .மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் வாங்கி முழுதும் பயன்படுத்தாமல் தூக்கி எறியப்படும் மருந்துகளின் வழியே , மக்கள் பணம் அதிகமாக குப்பைக்குப் போகிறது . " எவ்வளவு செலவானாலும் பராயில்லை " இந்த வசனம் இரண்டு இடங்களில் அதிகமாகப் பேசப்படுகிறது .ஒன்று , உயிர் போகக் கூடிய இக்கட்டான நிலையில் மருத்துவமனைகளில் .இரண்டு ,ஓரளவு உள்ளூர்த் தரமான படிப்பிற்காக கல்விநிலையங்களில் . இந்த இரண்டு இடங்களிலும் எந்தக்கேள்வியும் கேட்காமல் பணத்தைக்கொட்ட நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம் .பணத்தைக் கொட்ட முடியாதவர்கள் அந்த இரண்டு இடங்களிலும் அனுமதிக்கப்படுவதில்லை . ஒரு பெரிய மருத்துவச் செலவோ அல்லது கல்விச் செலவோ ஒரு குடும்பத்தின் மொத்த சொத்தையே அழித்துவிடுகிறது . வங்கிகள் தற்போது கல்விக்காக கடன் கொடுப்பது போல, மருத்தவ செலவிற்காகவும் கடன் கொடுக்கும் நிலை வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் .தமிழக அரசின் இலவச காப்பீட்டுத் திட்டங்கள் இன்னும் எளிமைப்படுத்தப்பட வேண்டும் .

நம் அரசியல்வாதிகள், இனி மேடைகளில் பேசும் போது " அன்பார்ந்த வாக்களப் பெரும்குடி கடனாளிகளே .." என்று தான் பேச வேண்டியிருக்கும் . அந்த அளவிற்கு நிலமை மோசமாகி வருகிறது ." ஒரு ரூபாய் கூட கடனில்லாமல் வாழும் வாழ்க்கை தான் சிறந்தது " ," கடனில்லாதவனே பெரும் பணக்காரன் " போன்ற கற்பிதங்கள் காற்றில் பறக்கின்றன . கடன் பட்டாவது மற்றவர்கள் நுகரும் (பயன்படுத்தும் ) பொருளை வாங்கியே தீர்வது என்று வெறி கொண்டு அழைகிறோம் .அந்த வெறியில் வட்டி என்று ஒன்று இருப்பது கண்ணுக்கே தெரிவதில்லை .வட்டிக்கு கடன் கொடுக்க தயாராக இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் கடன் வாங்குகிறோம் .இந்த வாய்ப்பை நன்றாகப்  பயன்படுத்தி கொள்ளும் கடன் கொடுப்பவர்கள் பணத்தைக் கொடுத்து தங்கள் விருப்பம் போல் வட்டி வசூல் செய்கின்றனர் . கடன் வாங்குவதில் இருந்த கற்பிதங்களைப் போல கடன் கொடுப்பதில் இருந்த கற்பிதங்களும் ( " அதிக வட்டி வாங்குபவன் குடும்பம் ,  வம்ச விருத்தி இல்லாமல் அழிந்து போகும் " , "வட்டிப் பணத்துல மட்டும் திங்கிற சோறு உடம்பில் தங்குமா ? ") கரைந்தே போய்விட்டன . பணத்தைச் சேமிப்பாக வங்கியிலோ ,வீட்டிலோ வைக்காமல் குறைந்த வட்டிக்கு பணத்தைக் கடனாக கொடுப்பர்களையும் இந்த வட்டிப் பேர்வளிகள் கெடுத்துவிடுகிறார்கள் .

விவசாயம் , சிறு தொழில் போல வட்டித்தொழிலும் கணிசமான நபர்களால் செய்யப்படுகிறது . குறைந்த நேரத்தில் ,குறைந்த  உடலுழைப்பில் நிறைய வருமானம் சம்பாதிக்கும் தொழிலாக இது உள்ளது .சிலர் அரசின் அனுமதி வாங்கியும் பலர் அனுமதி வாங்காமலும் வட்டித்தொழில் செய்கின்றனர் .அனுமதி வாங்கியோ வாங்காமலோ நேர்மையுடன் முறையாக செய்யப்படும் வட்டித்தொழிலால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை . குண்டர் படையுடன் அநியாய வட்டி வாங்கி மக்களின் உழைப்பை வட்டியாக திங்கும் கூட்டத்தால் தங்கள் வாழ்வை இழந்தவர்களும் , வாழ்வை அழித்துக்கொண்டவர்களும் அநேகம் .காலம் காலமாக இது தொடர்கிறது . 

 மற்றவர்கள்  செய்வதைப் பார்த்து தாங்களும் வட்டித்தொழில் செய்து அழிந்த குடும்பங்களும் இருக்கவே செய்கின்றன .வட்டித்தொழில் செய்வதற்கும் ஒரு  திறமை வேண்டும் .இல்லாவிட்டால் போட்ட பணத்தை எடுக்க முடியாது . 
" கட்டுக்கட்டா நோட்டுச்சேருது கெட்டிக்காரன் பொட்டியில.. அது குட்டியும் போடுது வட்டியில .." என்று பட்டுக்கோட்டையார் எழுதியது எவ்வளவு பொருத்தமாக உள்ளது .

கால மாற்றத்தில் கடனும் ,வட்டியும் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத விசயங்களாக மாறிவிட்டன .கடன் என்று வரும் போது ஒன்றுகு பல முறை யோசித்து தான் வாங்க வேண்டும் . ஏனென்றால் கடன் வாங்கிக் கொடுக்க முடியாவிட்டால் நம்மை மிகவும் கீழ்த்தரமாக பேசுவார்கள் , அவமானப்படுத்துவார்கள் .மானத்தை பெரிதாக நினைப்பவர்கள் கடனே வாங்கக் கூடாது .எப்படி பார்த்து பார்த்து வாங்கினாலும் கடன் ஒரு நாளாவது நம்மை அவமானப்படுத்தும் .

சமீப காலமாக நகையை அடமானமாக வைத்து வாங்கும் கடனான " நகைக் கடன் " மிகவும் அதிகரித்துள்ளது . இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைய தனியார் நிறுவனங்கள் நகைக்கு கடன் கொடுக்கும் துறையில் குதித்து பல வருடங்கள் ஆகி விட்டன .சிறிய அளவிலும், பெரிய அளவிலும் நகைக்கு கடன் கொடுக்கின்றனர் . கடன் கொடுப்பவர்களும்  கையில் நகை இருப்பதால், வந்தால் பணம் ,வராமல் போனால் நகை என்று தைரியமாக  கடனைக் கொடுக்கின்றனர் . மற்ற கடன்களை விட நகைக்கடன் மிக விரைவாக கிடைக்கிறது .இந்தியாவில் தங்கம், அதிகம் விற்பனையாவதற்கு இதுவும் ஒரு காரணம் .அவசரத்திற்கு உதவும் என்றே நிறைய பேர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர் .

அடுத்ததாக " ஆட்டோ பைனான்ஸ் " என்ற பெயரில் வாகனங்கள் வாங்க கடன் கொடுத்து கடனுடன் வட்டியையும் வசூல் செய்வது . பதிய வாகனம் ,பழைய வாகனம் எதுவாக இருந்தாலும் பைனான்ஸ் கிடைக்கிறது .ஒரே நிபந்தனை, வாகன பதிவு புத்தகத்தை (ஆர்.சி.புக்)அடமானமாகக் கொடுக்க வேண்டும் .முழுக்கடனையும் அடைத்த பிறகு பதிவுப்புத்தகத்தை மீட்டுக்கொள்ளலாம் . குறு,சிறு மற்றும் பெரு நகரங்களில் இந்த ஆட்டோ பைனான்ஸ் -களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது .சாலைகளில் இந்த அளவிற்கு வாகனங்கள் பெருகியதற்கு இந்த ஆட்டோ பைனான்ஸ் களும் ஒரு காரணம் .அதே நேரத்தில் சாதாரண ,மிகவும் குறைவாக சம்பாதிப்பவர்களையும் தாங்கள் நினைத்த வாகனத்தில் பயணிக்க வைத்து ஒரு சமூக அடையாளத்தைக் கொடுத்ததும் இந்த ஆட்டோ பைனான்ஸ் -கள் தான் .வங்கிகளும் வாகனங்கள் வாங்க கடன் கொடுக்கின்றன .

வீடு கட்டுவது என்பது அன்று முதல் இன்று வரை பெரும் செலவு வைப்பதும் , நாம் போட்ட கணக்கை பொய்யாக்கி நம்மைக் கடனாளி ஆக்குவதும் தான் . எப்படித்தான் பார்த்துப் பார்த்து கட்டினாலும் ஒரு கட்டத்தில் கடன் வாங்கும் சூழல் உருவாகி விடுகிறது .வங்கிகளும் வீடு கட்ட கடன் தருகின்றன . மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கிறது .கூலி வேலை செய்பவர்களுக்கும் ,விவசாயிகளுக்கும் ,சிறு தொழில் செய்பவர்களுக்கும் வங்கிகள் எளிதில் கடன் கொடுப்பதில்லை ,அப்படியே கொடுத்தாலும் மிகக் குறைந்த அளவே கடன் தருகிறார்கள். அதே நேரத்தில் பக்கவான தகவல்களைத் தயார் செய்து ஏமாற்றும் நோக்கத்துடன் கோடிக்கணக்கில் கடன் கேட்கும்  மிகப்பெரிய நிறுவனங்களுக்கு கடன் உடனே கிடைத்து விடுகிறது .இன்று மத்தியில் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் இந்தப் பெரு நிறுவன முதலாளிகள் தான் .

எந்த வகைக் கடனாக இருந்தாலும் வங்கிகளில் ,அதுவும் அரசு வங்கிகளில் வாங்குவது மிகவும் நல்லது .வங்கி கொடுக்கும் கடனுக்கும் ,தனி நபர் கொடுக்கும் கடனுக்கும் உள்ள பெரிய வித்தியாசம்  " முறைப்படி நடத்தல் (Systematic Planning ) ". தனி நபர் கொடுக்கும் கடனில் இந்த முறைப்படி நடப்பதை எதிர்பார்க்க முடியாது .உதாரணமாக ,ஒரு நாள் வட்டி கட்ட தாமதமானால் வங்கி அந்த ஒரு நாள் வட்டியை மட்டுமே கட்ட வேண்டிய வட்டியுடன் சேர்த்துக் கொள்ளும் .தனி நபர் வட்டி வாங்கும் விசயத்தில் இது சாத்தியமில்லை ,ஒரு நாள் தாமதமானாலும் ஒரு மாத வட்டியையே சேர்த்து வாங்கும் மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர்.

கடன் வாங்கியிருக்கேன் என்று சொன்னவுடன் கேட்கப்படும் முதல் கேள்வி , எத்தனை வட்டிக்கு கடன் வாங்கியிருக்கீங்க ? அதாவது வட்டி சதவீதம்  ( %) எவ்வளவு ? என்பது தான் . கடன் வாங்குவதில் இந்த வட்டி சதவீதம் பெரும் பங்கு வகிக்கிறது . கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த வட்டி சதவீதமே மூலக்காரணம் . பெரும்பாலான நேரங்களில் கடன் ஒரு பிரச்சனையே இல்லை .வட்டியால் ,அபராத வட்டியால் ஏற்படும் பிரச்சனைகளை அதிகம் .மிகவும் நம்பகமான இடங்களிலும் ,வங்கிகளிலும் கடன் பெறுவதே நல்லது . அவசர காலங்களில் வேறு வழியில்லாமல் பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தும் யாரிடமாவது கடன் பெற வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது .

கடனால் உண்டாகும் மன உலைச்சல்களையும் , பிரச்சனைகளையும் தவிர்க்க வாங்கிய கடனை வட்டியுடன் கட்டி நாணயமாக நடந்து கொள்வது தான் ஒரே வழி . " நாணயம் மனுசனுக்கு அவசியம், மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம் .." என்று ஒரு பழைய தமிழ்த்திரைப்பாடலே ( அமர தீபம் என்னும் படத்தில் காமாட்சி என்பவர் எழுதிய பாடலிது ) உள்ளது . மற்றவர்கள் வாங்கிய கடனை கட்டுகிறார்களா இல்லையா என்பதைக் கவனிக்காமல் நாம் வாங்கிய கடனைக் கட்டுவதில் நாணயமாக நடந்து கொண்டால் தான் நம் மனம் நிம்மதியடையும் . நிம்மதியான வாழ்விற்கு நாணயமும்  நாணயமும் அவசியம் . நம் வாழ்க்கை நம் கையில்...

மேலும் படிக்க :

கலாசார விடுதலையே சமூக விடுதலை !

மதுவும் மனிதனும் !

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

..................................................................................................................................................................

Thursday, November 14, 2013

K.A.தங்கவேலு நடித்த பாடல்கள் !

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான தங்கவேலு நிறைய பாடல் காட்சிகளில் நடித்துள்ளார் . எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நடிப்புக்குச் சொந்தக்காரர் தான் நம் தங்கவேலு . அவர் நடித்த பாடல் காட்சிகளைக் காண்பது இன்னும் சுவாரசியம் நிரம்பியதாகவே இருக்கிறது .பாட்டாளி மக்களின் சாமானிய குரலை பிரதிபளிப்பது போலவே நிறைய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் . அவர் நடித்த பெரும்பாலான பாடல் காட்சிகள் எளிமையான முறையிலேயே படமாக்கப்பட்டுள்ளன . பாடல் வரிகளும் மிகவும் எளிமையாகவே உள்ளன . இந்த மாபெரும் கலைஞனின் சில பாடல்கள் .

பார்த்தீரா ஐயா  பார்த்தீரா ...


உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ...


புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான் ...


கண்ணாலே பேசி பேசிக் கொள்ளாதே...


சாலா மிஸ்திரி பருப்பு பிஸ்தா பருப்பு ....


கண்ணு தெரிஞ்சு நடக்கணும்...


அத்தானும் நான் தானே....



சாஞ்சா சாயர பக்கமே ஆடுர செம்மறி ஆடுகளா...


அங்கமிது அங்கமிது...


அச்சா பகத் அச்சா...


அதோ கீர்த்தனா ஆரம்பத்திலே...




கண்டாலும் கண்டேனே...



காதல் உண்டாகும் கட்டழகி உன்னைக் கண்டாலே...


 மேலும் படிக்க :

 K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !
.................................................................................................................................................................... 

Wednesday, October 23, 2013

சினிமா - கிரிக்கெட் - இந்தியா !

 
இந்தியாவில் ,உங்களின் பொழுதுபோக்கு என்ன ? என்ற கேள்வியைக் கேட்டால் பெருவாரியான இளைஞர்களின் பதில் ஒன்று கிரிக்கெட் அல்லது சினிமாவாகத்தான் இருக்கும் .கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இவை மாறிவிட்டன .அதிலும் சினிமாவின் தாக்கம் மிகவும் அதிகம் .டேப் ரெக்கார்டர் ,தொலைக்காட்சி ,கணிப்பொறி , செல்போன் ,இணையம் பரவாத சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை சினிமாவின் தாக்கம் நம் வாழ்வியல் சூழலுடன் கலந்துள்ளது .டேப் ரெக்கார்டர் ,
தொலைக்காட்சி ,கணிப்பொறி , செல்போன் ,இணையம் போன்றவை
 மற்ற நாடுகளில் எதற்காக அதிகம் பயன்படுகிறதோ தெரியாது ,இந்தியாவில் இவை சினிமா சார்ந்தே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன .

டேப் ரெக்கார்டர் மூலம் மற்ற நாட்டுக்காரர்கள் , ஆல்பமாக வெளியிடப்படும் பாப் பாடல்களைக் கேட்டார்கள் . நாம் சினிமாப் பாடல்களைக் கேட்டோம் .அதோடு நில்லாமல் பாடியவர்,இசையமைத்தவர் மற்றும் எழுதியவரைப் புகழாமல் வாயசைத்த நடிகர்களை தலைவனாக கொண்டாடினோம் .டேப் ரெக்கார்டரின் பயன்பாடு முடிவுக்கு வந்துவிட்டது .ஆனால் , நடிகர்களை தலைவனாக கொண்டாடுவது இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை .மற்றவர்களின் பெரும் உழைப்பிற்கு வடிவம் கொடுப்பவர்கள் தான் நடிகர்கள் . ஒரு படத்தின் வெற்றிக்கு நடிகர் மட்டுமே காரணமல்ல . அதே சமயம் நன்றாக நடிப்பவர்களை ஊக்குவித்து பாராட்ட வேண்டும் ;துதி பாடக்கூடாது .ஒரு பாடல் வெற்றி பெற எத்தனையோ பேர்  உழைத்திருந்தாலும் அந்தப்புகழ் வாயசைத்த நடிகரை மையமாக வைத்து இது எம்.ஜி.யார்.பாட்டு ,இது கமல் பாட்டு ,இது விமல் பாட்டு என்று சொல்வது எவ்வளவு அபத்தம் .சமீப காலமாக இந்த நிலை கொஞ்சம் மாறி வருகிறது .தற்போது ஒரு பாடல் வெற்றி பெறும்போது  பாடகர்கள் ,இசையமைப்பாளர்கள் ,பாடலாசிரியர்கள் குறித்து சிறிதேனும் தெரிந்து கொள்கிறோம் .அதே போல இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிபெறும் போது  கதாநாயகன் தாண்டியும் மற்ற காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன . தங்களைத்  துதி பாட விரும்புபவர்களையும்  , துதிபாடிகளையும் கடந்த   இந்த ஆரோக்கியமான நிலை தொடர வேண்டும் .
 
தமிழ்ச் சூழலில் சின்னத்திரை என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி சினிமாவையும் ,சினிமாக்காரர்களையும்  பெரிதும் சார்ந்துள்ளது . திரைப்படங்கள்,பாடல்கள் , நகைச்சுவைக் காட்சிகள் என்று சினிமாவை நம்பியே  தமிழ்த்  தொலைக்காட்சிகள்  உலா வருகின்றன . சினிமா தொடர்பான  நிகழ்ச்சியை ஒளிபரப்பாத தமிழ்த் தொலைக்காட்சியே இல்லை எனலாம் . மற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கே தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது .
அதுவும் பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம் .காலை முதல் மாலை வரை சினிமா நடிக நடிகர்களின் பேட்டிகள் இடம்பெறும் ;சினிமாவில் சாதித்தவர்கள் பேட்டிகள் இடம் பெறாது .விதவிதமான விளம்பரங்கள் மூலம்  மக்களைப்  பொருள் சார்ந்த வாழ்க்கை வாழப் பழக்கிய பெரும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் நம் தொலைக்காட்சிக்காரர்கள் .
 
தொலைக்காட்சி ,கணிப்பொறி , செல்போன் ,இணையம் போன்றவை சினிமா சார்ந்த விசயங்களுக்காகவே மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன . அதிலும் தற்போது இலவசமாக கொடுக்கப்பட்ட மடிக்கணினி பாடல்கள் கேட்கவும் ,படம் பார்க்கவும் மட்டுமே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன .
இருந்தாலும் கணினி மீதிருந்த பெரும் மதிப்பை தவிடு பொடியாக்கிய பெருமை ,இலவச மடிக்கணினிகளையே சேரும் .நம் வரிப்பணத்தை நாமே நேரடியாக நம் வீட்டில்வைத்து பயன்படுத்துவதில் ஒரு ஆனந்தம் இருக்கவே செய்கிறது . முன்பு,  மிதிவண்டி , தொலைக்காட்சி , தற்போது ஆடு ,மாடு,
மின்விசிறி ,மிக்சி ,கிரைன்டர் மற்றும் மடிக்கணினி . அதிகாரத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்று விரும்புவது போல, பொருள்களை அடையும் உரிமையும் எல்லோருக்கும் உண்டு . அதற்கு நம் வரிப்பணம் உதவுகிறது அவ்வளவுதான் .
 
சினிமாவின் தாக்கம் நம் சூழலில் மிகவும் அதிகம் . சினிமாவின் பிரதிபளிப்பு வேண்டுமானால் சமூகத்தில் இருக்கலாம் . ஆனால்,சமுகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்று சொல்லமுடியாது . சமுகத்தில் 70 சதவீத மக்கள் விவசாயத்தையும் ,விவசாயம் சார்ந்த தொழில்களையும் செய்கின்றனர் .சமுகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் திரைக்கு வரும் படங்களில் 70 சதவீதம் விவசாயிகளின் வாழ்க்கை பற்றியும்  , விவசாயத்தைச்  சார்ந்து இருப்பவர்களின் வாழ்க்கை பற்றியும் மட்டுமே இருக்க வேண்டும் .ஆனால் ,நிலைமை அப்படி இல்லை . திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளின் வாயிலாக சமுகத்தில் நிறைய பழக்கங்கள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகின்றன . பெண்கள் குறித்த தவறான புரிதல்களை சமூகத்தில் பரவவிடும் சாதனையை சினிமா தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.நல்ல வாசிப்பு உள்ளவர்கள் இயக்குநர்களாக மாறும் போது இந்த நிலை மாறக்கூடும் .இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காதல் ,காதல் என்று ரக ரகமான காதல் காட்சிகளையும் ,அபத்தமான நகைச்சுவைக் காட்சிகளையும் ,விதவிதமான பாடல் காட்சிகளையும் திரைப்படங்களில் அங்கங்கே சொருகி கதையைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல், திரைக்கதையையும் சொதப்பி நம் உயிரை வாங்குவார்களோ ? ஆங்கிலப் படங்கள் பெரும் வெற்றி பெறுவதற்கு அவர்களின் அசத்தலான திரைக்கதை தான் காரணமாக இருக்கிறது .அங்கே ,இரண்டு ,மூன்று பேர் சேர்ந்து ஒரு படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார்கள் .எப்படிப்பார்த்தாலும் எல்லோருக்குமான பெரிய பொழுதுபோக்கு சினிமா தான் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.இனி மாற்றம் நிகழவேண்டியது சினிமா முன்னிறுத்தும் குறியீடுகளில் தான் .


இரண்டாவது பொழுதுபோக்கு கிரிக்கெட் என்னும் மட்டைப்பந்தாட்டம் தான் .இந்தியா மிகவும் மோசமாக விளையாடிய காலகட்டத்திலேயே வெறி கொண்டு கிரிக்கெட் பார்த்தவர்கள் நாம் .தோனியின் காலமான தற்போது கேட்கவா வேண்டும் . தோனியின் வரவு, முன்பு கிரிக்கெட் வெறியர்களாக இருந்து இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் கிரிக்கெட் பார்ப்பதை விட்டவர்களை மீண்டும் கிரிக்கெட் வெறியர்களாக மாற்றியது . 22 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை கோடிக்கணக்கான முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் இந்தியா போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் கிரிக்கெட் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் போகிறது .  இன்றைய இயந்திர வாழ்க்கை நம்மை பெரும் நெருக்கடியை நோக்கி தினமும் தள்ளுகிறது . இதிலிருந்து விடுபட ஏதாவது ஒரு வடிகால் தேவைப்படுகிறது .பெரும்பாலானோருக்கு அந்த வடிகாலாக கிரிக்கெட் இருக்கிறது .ஒரு சிலருக்கு அரசியல் சார்ந்த விசயங்கள் வடிகாலாக இருக்கிறது .

கிரிக்கெட் ஒரு தியானம் போல நம் தினசரி நெருக்கடிகளை மறக்கச் செய்து ஒரு ஆனந்தத்தை நம்முள் பரவச்செய்கிறது . பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆனந்தத்திற்கு அடிமை . அதுவும் கிரிக்கெட் நடைபெறும் நேரங்களில் அணியின் நிலவரத்தை (ஸ்கோர் )தெரிந்துகொள்ள நம் ஆட்கள் படும்பாடு இருக்கிறதே அட அட .. . தொலைக்காட்சி ,தொலைக்காட்சி விற்பனையகங்கள் , செல்போன் , பண்பலை ,இணையம் ,தேநீர் விடுதி இவையனைத்தும் ஸ்கோரை தெரிந்து கொள்ள மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது போல கொண்டாடுவார்கள் . கிரிக்கெட் நடைபெறும் நேரங்களில் நம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைவாக இருக்கும் .

தொலைக்காட்சிகளில்  நாடகங்கள் ஒளிபரப்பாகும் நேரங்களில் கிரிக்கெட்டும் ஒளிபரப்பப்பட்டால் வீட்டிலுள்ள ஆண்கள் படும்பாடு இருக்கிறதே ,அதனால் தான் முடிந்தவரை கிரிக்கெட் பார்க்க வீட்டைத் தவிர மற்ற இடங்களையே ஆண்கள் பெரிதும் தேர்வு செய்கிறார்கள் .விளையாட்டு தொலைக்காட்சிகளில் மீண்டும் ஒளிபரப்பப்படும் பழைய போட்டிகளையும் வெறிகொண்டு பார்க்கும் ஆட்கள் நிறையவே நம்மிடம் இருக்கிறார்கள். எங்கள் பகுதியில் ஒரு மருத்துவர் இருக்கிறார்,நாம் எப்போது போனாலும்  அவரது அறையில் இருக்கும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் மட்டுமே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சத்தமில்லாமல் . செய்தித்தாளை எடுத்தவுடன் பெரும்பாலான ஆண்கள் படிப்பது விளையாட்டு பகுதியில் இருக்கும் கிரிக்கெட் செய்திகளைத் தான் . அதுவும் தேநீர் விடுதிகளில் காலை நேரங்களில் கிரிக்கெட்  செய்தி உள்ள செய்திதாளுக்கு பெரும் போட்டி இருக்கும் ,காத்திருந்துதான் படிக்க முடியும் . மற்ற நாட்களில்  என்னப்பா கிரிக்கெட் செய்தியே போடல என்று அரசியலையும் ,சினிமாவையும் ஒரு மேய் மேய்ந்துவிட்டு இடத்தை காலி செய்வார்கள் .

கிரிக்கெட் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல , அது ஒற்றுமையின் அடையாளம் . நாடு ,ஜாதி , மதம் , மொழி , கட்சி , பணக்காரன் ,ஏழை என்ற வேறுபாடுகள் களைந்து எல்லோரும் ஒன்றுபடுவது இந்த விசயத்தில் தான் . அதனால் கிரிக்கெட்டை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை . எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கான இளைப்பாறுதலும் , உற்சாகமும் ,மகிழ்ச்சியும் தருவது கிரிக்கெட் தான் . அதனால் கிரிக்கெட்டைக் கொண்டாடுவதில் தவறில்லை . வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தானே .
 
 சினிமாக்காரர்களும் கிரிக்கெட் வீரர்களும் மட்டுமே அதிக விளம்பரங்களில் தோன்றுகின்றனர் .கோடிக்கணக்கான மக்களை தங்கள் பிடியில் வைத்திருக்கும் சினிமாவும் கிரிக்கெட்டும் வணிகம் சார்ந்தவையாக இருப்பதில் எந்தவித  ஆச்சரியமும் இல்லை .யாருக்காகவும் கொடி பிடிக்காமல் ,துதி பாடாமல் ,தோரணம் கட்டாமல் நல்ல சினிமாவை தவறு தவறு  ,நல்ல சினிமா ,கெட்ட சினிமா என்று எதுவும் இல்லை , நமக்குப்பிடித்த சினிமாவையும்  , நேரம் கிடைக்கையில் பார்க்கும் கிரிக்கெட்டையும் பார்த்து ரசித்து பேரானந்தம் கொள்வோமாக !

மேலும் படிக்க :

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

ஆஸ்திரேலியாவின் 16 ஆண்டு கால ஆதிக்கத்தை நொறுக்கியது இந்தியா !

....................................................................................................................................................................

Monday, September 23, 2013

சின்னக்குட்டி நாத்தனா..!


மக்களோடு மக்களாக மக்களின் கவிஞராக வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்களின் பாடலான நாட்டுப்புறப் பாடல்களையும் எழுதியுள்ளார் .இவர் நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்தப் பாடல் பெரும்புகழ் பெற்ற பாடலாக இருக்கிறது . 1957 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆரவல்லி"  என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .தனித்துவமாக பாடும் திறமையுள்ள  திருச்சி லோகநாதன் இந்தப்பாடலைப் பாடியுள்ளார்.

அந்தப்பாடல் :

பாடல் வரிகள் :



சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போறவண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!
குளிரடிக்கிற குழந்தைமேலே
துணியப்போடடுப் போத்துனா
குவாக்குவான்னு கத்தினதாலே
முதுகிலரெண்டு சாத்துனா
கிலுகிலுப்பயக் கையில்கொடுத்து
அழுதபிள்ளையைத் தேத்துனா (சின்ன…)


பன்னப்பட்டிக் கிராமத்திலே
பழையசோறு தின்னுக்கிட்டா
பங்காளிவீட்டுச் சிங்காரத்தோட
பழையகதையும் பேசிக்கிட்டா (சின்ன…)

கண்ணுக்குட்டிய மல்லுக்கட்டியே
கயித்தப்போட்டுப் பிடிச்சுக்கிட்டா
மண்ணுக்கட்டியால் மாங்காஅடிச்சு
வாயில போட்டுக் கடிச்சுக்கிட்டா! (சின்ன…)

நன்றி :  http://www.pattukkottaiyar.com/site/ .


மேலும் படிக்க :

 உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ...! 

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

..................................................................................................................................................................

Friday, August 30, 2013

மதுவும் மனிதனும் !

மனித இனம் வளர வளர மதுவும் வளர்ந்துள்ளது .மதுவைத் தவிர்த்து மனித வரலாற்றை அறிய முடியாது . அது ,மனித இனத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது .நெடுங்காலமாக கொண்டாட்டத்தின் அடையாளமாக மட்டுமே மது இருந்து வந்துள்ளது . காலப்போக்கில் மதுவின் பயன்பாடு விரிவடைந்து இன்று நம் சமூக அமைப்பையே மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் ஒன்றாக மாறிவிட்ட சூழல் நாம் வாழும் காலத்தின் அவலம் . மற்ற வரலாற்றைப் போலவே மதுவின் வரலாறும் சுவாரசியமானது தான் .

' நாகரீகமும் புளிக்கவைப்பதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதது ' என்றார் ஓர் அறிஞர் . காடு காடாக அலைந்த ஆதிமனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பலனாக நிலையாக வாழ ஆரம்பித்தான் . அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊறவிட்டபோது அது புளித்தது தற்செயலாக நடந்த ஒன்று . அது தான் வெறித்தன்மையைக் கொடுத்த முதல் பானம். பீர் . முளைவிட்ட தானியத்தில் தண்ணீரை ஊற்றி ,சுடவைத்து புளிக்கவைத்தபோது பீரின் சுவை இன்னும் கூடி வெறித்தன்மையும் அதிகமாகியது ( பீர் தான் மனிதன் கண்டுபிடித்த முதல் பானம் என்பது எனக்கெல்லாம் ஆச்சரியமானது ).

 பீருக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த பானம் வைன் .பழச்சாறைப் புளிக்கவைத்துக் கிடைப்பது வைன் . வைனைக் காய்ச்சி வடிகட்டினால் கிடைப்பது பிராந்தி .பீரைக் காய்ச்சி வடிகட்டும்போது கிடைப்பது விஸ்கி .கரும்புச்சக்கையிலிருந்து வீரியமிக்க மது செய்ய்லாம் என்பதை 1657 -ல் ரம்புல்லியன் என்பவர் கண்டுபிடித்தார் . குடித்தவுடன் வெறிக்கச் செய்யும் அந்த மதுவின் பெயர் ரம் ஆனது .அடிமைகளைப் பிடிப்பவர்களுக்கு ரம் விலையாகத் தரப்பட்டது . ரம்மை உற்பத்தி செய்யும் அடிமைகளுக்கு சம்பளமும் ரம் .இப்படி மது உலகம் முழுக்க ஆளத் தொடங்கியது .

எத்தியோப்பியாவில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது சில ஆடுகள் ஒரு செடியின் காய்களைத் தின்று விட்டு துள்ளிக் குதிப்பதை அவதானித்தான் . அவனும் அந்த விதைகளைத் தின்று பார்த்தபோது புத்துணர்ச்சி உண்டானது .மனிதனை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இயங்கவைக்கும் காபி பிறந்த கதை இது . 4700 ஆண்டுகளுக்கு முன்னர் சீனப் பேரரசர் ஷென் நுங் காட்டிலே தண்ணீர் கொதிக்கவைத்துக் கொண்டிருந்த போது சில இலைகள் காற்றில் அடிபட்டு நீரில் விழுந்தன . அந்த நீரை அரசர் பருகியபோது புத்துணர்வு பெற்றதுபோல உணர்ந்தார் . அப்படிப் பிறந்தது தான் தேநீர்.

சீனாவின் தேயிலை ஆட்சியை முறியடிக்க பிரிட்டன் முடிவு செய்தது . இந்தியாவில் அதை எங்கே வளர்க்கலாம் என ஆராய்ச்சி செய்தபோது அஸ்ஸாமில் ஏற்கனவே தேயிலை காட்டுச்செடியாக வளர்ந்தது தெரியவந்தது . இந்தியாவில் தேயிலை உற்பத்தி ஆரம்பமானது . இன்று உலக அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா முதல் இடம் ( 23% ) .இவ்வாறு தேயிலை உற்பத்தி செய்ய எவ்வளவு காடுகளை அழித்தார்களோ ? 1886 ம் ஆண்டு பெம்பர்டன் என்ற அமெரிக்கர் தலைவலிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் . அவருடைய முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தாலும் அவர் தளராது பல்வேறு விதமான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார் . ஒரு நாள் ,தென் அமெரிக்காவில் கிடைக்கும் கொக்கோ இலை
 (உண்ணும் போது மயக்கம் தருவது ), மேற்கு ஆப்ரிக்காவின் கோலாநட் ( இதுவும் போதைப் பொருள் தான் ) இவை இரண்டையும் சேர்த்து ஒரு பழுப்பு நிற பானத்தைத் தயாரித்தார் .அது தான் ' கொக்கோ கோலா '.

பீர்,வைன்,பிராந்தி,விஸ்கி,காபி,தேநீர் ,கொக்கோ கோலா இந்தப் பானங்களின் கதையைப் பற்றி தமிழ் மொழியின் ரசவாத எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ,ஆகஸ்ட் "உயிர்மை " மாத இதழில் 'ஆறு கோப்பைகள் ' என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதிலிருந்து சில பகுதிகளை மேலே குறிப்பிட்டுள்ளேன் . அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துச் சுவை அவ்வளவு ருசியானது . அந்தச் சுவையை நீங்களும் ருசிக்க அவரது எழுத்துக்களை வாசியுங்கள் ; இடைவிடாமல் ஆச்சரியங்களும் ,புதுமைகளும் கிடைத்துக் கொண்டே இருக்கும் .

 உலகில் மனிதன் வாழும் அனைத்து இடங்களிலும் பல விதமான பானங்கள் அருந்தப்படுகின்றன. அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அந்த பானங்களின் தன்மை இருக்கும் . உலகமயமாக்கல் காரணமாக இன்று எந்தப் பானமும் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கிறது ;அருந்தப்படுகிறது .வலுத்தது நிலைக்கும் என்பது இந்தப் பானங்களுக்கும் உண்டு . ஆங்கிலேயர் இந்தியாவின் மீது படையெடுக்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் இவ்வளவு பானங்கள் இருந்திருக்காது .

மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்த போதே மதுவின் பயன்பாடு தொடங்கிவிட்டது .காலம் சுழல சுழல மனிதனின் பெருக்கத்தைப் போல மதுவும் பெருகிவிட்டது .புளிக்க வைக்கும் எந்த உணவிற்கும் ஒரு வித போதை இருக்கும் போல .இரவில் மிச்சமான சாதத்தில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு காலையில் எழுந்து அதைக் குடித்தால் கள் குடிப்பது போல் இருக்கும் . ஆனால் , இது நம் வயிற்றுக்கு மிகவும் நல்லது .சென்னைப் பகுதியில் சுண்ட கஞ்சி என்ற பானம் ,இவ்வாறு புளிக்க வைப்பதன் மூலமே தயாரிக்கப்படுகிறது .

இன்றைய சூழலில் கலாச்சார பானங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன . கலாச்சாரக் குடிதாங்கிகள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை . ஜாதி ,மதம் மட்டும் முக்கியமாய்த் தெரிகிறது இந்தக் குடிதாங்கிகளுக்கு . தமிழ்நாட்டில் அருந்தப்பட்ட உள்ளூர் பானங்களுக்கு மாற்றாக விதவிதமான நிறங்களில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் அயல்நாட்டு குளிர் பானங்கள் ,மதுபானக் கடைகளில் விற்கப்படும் பலவிதமான மதுபானங்கள் (இலவசங்களின் வருமானம் ) மட்டுமே மக்களுக்கு கிடைக்கின்றன . மிஞ்சி நிற்கும் சில கலாச்சார உள்ளூர்  பானங்கள் ஜிகர்தண்டா,நன்னாரி சர்பத்,பன்னீர் சோடா ,பொவண்டோ ,காதலோ....இளநீர் ( பணப் பேய்களிடமிருந்து தப்பித்த ஒரே பானம் , விலை மட்டும் இடத்திற்கு இடம் மாறுபடுவதால் மக்கள் தொடர்ந்து இளநீர் குடிக்கத் தயங்குகின்றனர் .விலை எவ்வளவாக இருந்தாலும் தமிழகத்திற்கென்று பொதுவான விலை நிர்ணயிக்கலாம் !) . தண்ணீர் ( தண்ணீரையும் பானங்கள் வரிசையில் சேர்க்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள், படுபாவிகள் ! பெட்ரோல் ,டீசல் போல தண்ணீரையும் மாற்றி விட்டார்கள் .அடுத்த பெரிய வணிகம் தண்ணீர் வணிகம் தான் . இன்று எண்ணைக் கிணறு வைத்திருப்பவன் பெரிய ஆள்,நாளை தண்ணீர்க் கிணறு வைத்திருப்பவன் தான் பெரிய ஆள் ).

மதுபானங்கள் வரவிற்கு முன்பு கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்துள்ளது .இரண்டு விதமான கள் இருக்கின்றன .தென்னங்கள் மற்றும் பனங்கள் . இயற்கையான மதுபானங்கள் என்று இவற்றை அழைக்கலாம் . அரசே மதுக்கடைகளை நடத்தும் சூழலில் கள் இறக்க தடை இருப்பது முரணான விசயமாக இருக்கிறது .கையில் கிடைப்பதை எல்லாம் போட்டு சாராயம் காய்ச்சுவார்கள் போல , பல நேரங்களில் நல்ல சாராயமாக இருப்பது மரணங்கள் நிகழும் போது வெளிச்சத்திற்கு வந்து கள்ளச்சாராயமாக மாறிவிடுகிறது . இன்று சாராயம் காய்ச்சுவது முற்றிலும் தடுக்கப்பட்டது போலவே தெரிகிறது .இன்று சாராயத்தினால் மரணங்கள் நிகழ்வது நின்று போனாலும் மதுவினால் சாராயத்தை விட அதிக மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன .     

எந்த பானமும் பானமாக இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை ,அது பழக்கமாக மாறும் போது தான் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது .எந்த பானமும் அது தேநீர் ,காபியாக  இருந்தாலும் சரி மதுவாக இருந்தாலும் சரி அளவோடு அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை . தேநீர் மற்றும் காபி அதிகமாக அருந்துவதால் உண்டாகும் பாதிப்புகளை விட மது அதிகமாக அருந்துவதால் உண்டாகும் சமூக பாதிப்புகள் அதிகம் .

ஒரு மனிதன் புகைப்பிடிப்பதால் அவனுக்கு மட்டுமே பாதிப்பு அதிகம் ,மற்றபடி அந்தப் புகையைச் சுவாசிக்கும் வேறு மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கவே செய்யும் .ஆனால் புகைப்பிடிப்பதால் பெரிய அளவில் சமூகப்பாதிப்புகள் இல்லை ( அதிக பணத்தை புகைப்பிடிக்க செலவு செய்வதால் குடும்ப பாதிப்புகள் இருக்கலாம்). மதுவினால் குடிப்பவருக்கு உடல்ரீதியான பாதிப்புகள் அதிகம் .அதைவிடவும் அந்த பழக்கத்தால் ஏற்படும்  சமூகப் பாதிப்புகள் அதிகம் .அடுத்த மனிதனைப் பாதிக்காத எந்தப் பழக்கமும் தவறில்லை .அடுத்த மனிதனைப் பாதிக்கும் எந்தவொரு செயலுக்கும் சமூக அமைப்பில் இருக்கும் மனிதன் பதில் சொல்லியே ஆக வேண்டும் .

சமீப காலமாக மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன . அதுவும் தமிழகத்தில் நிலமை மிகவும் மோசம் . மதுவை வணிகரீதியாக பயன்படுத்துவதன் விளைவு தான் இது . உணவுவிடுதி போல தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. சாராயத்தை ஒழிப்பது தான் நோக்கம் என்றால் ஊருக்கு ஒரே ஒரு டாஸ்மாக் கடை திறக்க வேண்டியது தானே. இதில் ஒவ்வொரு மாவட்டமும் மாதம் இவ்வளவு ரூபாய்க்கு மது விற்க வேண்டும் என்ற மாத இலக்கு வேறு. எல்லா வகையிலும் மது குடிப்பதை ஊக்கப்படுத்திவிட்டு " மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என்று பிரச்சாரம் செய்கிறார்கள் .

மதுவை யார் குடிக்கலாம் ? வயது வந்தவர்கள் தான் குடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது . தொலைக்காட்சியிலும் ,சினிமாவிலும் மதுக் குடிப்பதை நேரடியாக காட்டுகிறீர்கள் .இதை தொடர்ந்து பார்த்து வளரும் குழந்தைகள் 18 வயதிற்கு முன்பே மது குடிக்கப் பழகிவிடுகின்றனர் .ஆண் ,பெண் உடலை ,உடல் உறவை ஒரு வரம்பிற்குள் தான் காட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது . மதுக்குடிப்பதைக் திரையில் காட்டுவதில் எந்தக் கட்டுப்பாடும் ("மது உடல் நலத்திற்கு தீங்கானது " என்ற ஒரு வரி போடுவதைத் தவிர ) கிடையாது . மது என்ன எல்லோரும் குடிக்கும் பானாமா? "வயது வராதவர்கள் பார்க்க வேண்டாம் " அடைமொழியுடன் ஆண் பெண் உடலுறவு காட்சியை நேரடியாக திரையில் காட்ட வேண்டியது தானே .

நாட்டில் கற்பழிப்பு அதிகமாக நடக்கிறது என்ற காரணத்திற்காக வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைப் போல சிவப்பு விளக்கு பகுதியை உருவாக்க வேண்டியது தானே .இதிலும் வருமானம் கிடைக்கும் இதை வைத்து இன்னும் மக்களை சோம்பேறியாக்க ரேசன் கடைகளில் உணவுப் பொருளுடன் மாதம் மாதம்  ஒரு தொகையும் கொடுக்கலாம் .நம்ப முடியாது ,ஒரு வேளை இது நடந்தாலும் நடக்கும் ! அவ்வளவு கேடு கெட்ட அரசியல்வாதிகள் நம் நாட்டில் இருக்கின்றார்கள் . அதிகளவு மது விற்பதை சாதனை என்று கொண்டாடும் ஜென்மங்கள் அல்லவா நம் அரசியல்வாதிகள் .

வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தான் .ஒவ்வொருவருக்கும் இருப்பது ஒரு வாழ்க்கை தான் அதை எல்லாவிதத்திலும் கொண்டாட எல்லொருக்கும் உரிமை உண்டு .இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை .மது என்பது கொண்டாட்டத்திற்கான பானம் . மது அருந்துவதில் எந்தத் தவறும் இல்லை . மனித இன வரலாறு முழுவதும் மதுவிற்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது .இன்றும் உணவின் போது உட்கொள்ளும் பானாமாக மது உலகெங்கும் பல நாடுகளில் ஆண்கள் மற்றும் பெண்களால் அருந்தப்படுகின்றன . ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் மதுக்கடைகள் இருக்கின்றன மதுவினால் உண்டாகும் சின்ன சின்ன தகராறுகளும் ( கிரிக்கெட் வீரர்கள் (வீரர்கள்!) அவ்வப்போது குடிபோதையில் தகராறு செய்து மாட்டிக் கொள்கிறார்கள் ) இருக்கின்றன. ஆனால் , நம் நாட்டைப் போல பெரிய அளவிலான சமூகப்பாதிப்புகள் இருகின்றனவா என்று தெரியவில்லை .  

போதையில் நண்பனைக் கொல்லுதல் , தாய்,தந்தை,மனைவியைக் கொல்லுதல் , பணத்திற்காக யாரை வேண்டுமானாலும் கொல்லுதல், வாகனத்தை தாறுமாறாக ஓட்டி தானும் செத்து மற்றவர்களையும் சாகடித்தல் .மற்றவர்களுடன் வீண் சண்டைக்குப் போதல், அதிக குடியால் தன் குடும்பத்தை தவிக்க விட்டு செத்துப் போதல் , குடும்பத்திற்காக பெண் சம்பாதிக்கும் பணத்தையும் புடுங்கி குடித்தல் , குடித்துவிட்டு பொதுமக்களிடமும் தகராறு செய்தல் ;பெண்களைத் தொந்தரவு செய்தல், குடித்துவிட்டு வந்து பொண்டாட்டி பிள்ளைகளை அடித்தல் என்று மது பழகத்தால் உண்டாகும் சமூகப்பாதிப்புகள் நம் நாட்டில் மிகவும் அதிகம் .மற்ற நாடுகளில் மதுவினால் இவ்வளவு பாதிப்புகள் உண்டாகின்றனவா என்று தெரியவில்லை .

பொதுவாக உணவாக இருந்தாலும் மதுவாக இருந்தாலும் நாம் வாழும் சூழலுக்கு எது பொருந்துமோ அதை உட்கொள்வதுதான் நம் உடலுக்கு நல்லது . இன்றைய உலக வணிகமயமாக்கத்தின் விளைவாக எந்த நாட்டு உணவும் ,பானமும் எங்கும் கிடைக்கின்றன .நாம் பூமியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் நம்மை வைத்து பணம் சம்பாதிக்க வித விதமான தளங்களில் வித விதமான பொய்களுடன் ஒரு  மாபெரும் கூட்டம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது .  மது குடித்தல் என்பது சமூகத்திற்கு கேடு உண்டாக்கும் ஒரு பழக்கமாக மாறுவதை தடுக்காமல்  மது குடிப்பதை ஊக்கப்படுத்தும் ஒரு அரசு இருக்கும் வரை சமூகக் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும் .

மதுவும் மனிதனும் - பிரிக்க முடியாதவை !

மதுப்பழக்கமும் மனிதனும் - பிரிக்க முடிபவை !

பின்குறிப்பு :

 இந்தக் கட்டுரையும் மதுவைப் போல நீண்ட நாட்களாக ஊர வைத்து எழுதியது தான் .

நன்றி :- அ.முத்துலிங்கம் ,உயிர்மை.

மேலும் படிக்க :

கலாசார விடுதலையே சமூக விடுதலை !

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !
...................................................................................................................................................................

Saturday, August 3, 2013

நல்லவன் கையில் நாணயம் !

தமிழ்  இசைக்கடலில் மூழ்கி தேட தேட முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கினறன. சமீபத்தில் கிடைத்த முத்து இந்தப் பாடல் .1972 ஆம் வருடம் வெளிவந்த "யார் ஜம்புலிங்கம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இசையமைத்து இந்தப்பாடலைப் பாடியவர் தமிழ் இசைச் சித்தர் என்றழைக்கப்படும் சி.எஸ்.ஜெயராமன் .இவர் ஆரம்ப கால தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடகர் . இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை.

 அந்தப் பாடல் :


பாடல் வரிகள் :

நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

அது பொல்லாதவன் பையில் இருந்தால்
எல்லா உயிர்க்கும் பாதகம்
எல்லா உயிர்க்கும் பாதகம்
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான் 
 
இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான்  
 
பணத்திமிர் கொண்ட மனிதர் நிமிர்ந்திருந்தாலும்
நடை பிணமாக நடக்கின்றான் 
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம்
எச்சிலை போலே பறக்குமடா
 
அச்சடித்திருக்கும் காகித பெருமை
ஆண்டவனார்க்கும் இல்லையடா
ஆண்டவனார்க்கும் இல்லையடா
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

ஓடும் உருலும்
ஓடும் உருலும் உலகம் தண்ணில்
தேடும் பொருளும் தேவைதான்
தேடும் பொருளும் தேவைதான்
 
அதில் மயக்கம் இல்லாமல் அடக்கம் இருந்தால்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் 
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்  
 
" லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம் எச்சிலை போலே பறக்குமடா ", 
எது உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு சிறந்த விளக்கம் இந்த வரிகள்," ஓடும் உருலும்
 உலகம் தண்ணில்தேடும் பொருளும் தேவைதான், அதில் மயக்கம் இல்லாமல் 
அடக்கம் இருந்தால்,அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் "
 
மேலும் படிக்க :
 
எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?  

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 
...................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms