Thursday, April 26, 2012

ஆக்காட்டி ஆக்காட்டி !

" தவமாய் தவமிருந்து " படத்திற்காக எடுக்கப்பட்டு படத்தில் இடம்பெறாத அற்புதமான பாடல் . பாடலின் நடன அமைப்பும் ,பாடல் வரிகளும் அருமை . பாடலின் தொடக்கத்தில் வரும் உறுமி இசை கலக்கலாக உள்ளது . அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர் .படத்தில்  இருக்கும் ஜெயமூர்த்தி என்பவர் தான் இந்தப்பாடலைப் பாடியவர். நல்ல குரல் , நல்ல பாடல் .

நன்றி - எஸ் .ராமகிருஷ்ணன்.

மேலும் பார்க்க :

ஜம்புலிங்கமே ஜடாதரா ...!  

Saturday, April 21, 2012

எண்ணைக்காக எள்ளு காயுது ;எலிப்புழுக்கை எதுக்கு காயுது ?

எந்த மொழியாக இருந்தாலும் பழமொழிகள் எப்போதும் மொழிக்கு ஆதாரமாக இருக்கின்றன . தங்களின் எளிய வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை கேலி செய்யும் வகையில் நிறைய பழமொழிகள் புழக்கத்தில் உள்ளன .

ங்குனி பருக்கிறதுமில்லை , சித்திரை சிறுக்கிறதுமில்லை.

சும்மா கிடக்கிற கோடாலிய தூக்கி காலில் போடுவானே , கால் வலிக்குதுன்னு ஏன் கத்திக்கிட்டு கிடப்பானே.

ரிக்கு பண்ணாட்டு கொடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்.

ரவெட்டி வீட்டுல படலைக் கட்டிச் சாத்தனானாம்.

சும்மா இருக்கிற கோழிக்கு சோத்தைப் போடுவானேன் ;அது கொண்டைய ஆட்டிக்கிட்டு கொத்த வருவானேன்.

ன்றிகளின் முன் முத்துக்களைப் போடாதீர்.

ருண்டோடும் கல் பாசி பாடியது.

ண்ணைக்காக எள்ளு காயுது ;எலிப்புழுக்கை எதுக்கு காயுது ?

சிலிக்கு மாவிடிச்சா குருது கம்புக்குத்தான் சேதாரம்.

டந்து போனது கரணம் போட்டாலும் வராது.

நினைத்தவுடன் நெய்க்காரன் குதிரை ஏற முடியுமா.

நாம நாயை ஏவினால் , நாய் வாலை ஏவுமாம்.

தெரிந்ததை விட்டவனும் கெட்டான் , தெரியாததைத் தொட்டவனும் கெட்டான்.

ழைக்கிற மாடு ஊருக்குப் போனா , அங்கேயும் உழவு ஓட்டுவார்களாம் .

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.

சொப்பனத்தில் கண்ட அரிசி ,சோற்றுக்கு உதவாது.

பூசணிக்காய் போறது தெரியாதாம் , கடுகு போறதைப் பற்றிக் கவலைப்படுவானாம்.

ழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது .

ரு பிள்ளையைப் பெற்றவளுக்கு உறியிலே சோறு , நாலு பிள்ளையைப் பெற்றவளுக்கு நடுத்தெருவுலதான் சோறு.

லமரத்தை பிடித்த பேய் அத்திமரத்தையும் பிடித்ததாம் .

குந்தித் தின்னா குன்றும் மாளும் .

ட்லியைத்   தட்டில் போட்டுவிட்டு இடியைத் தலையில் போடுவது போல் .

தேனை எடுத்தவன் புறங்கையை நக்காம இருப்பனா ?    

ரும்பு  அடிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலை ?

முயலை எழுப்பி விட்டுவிட்டு நாய் படுத்துக்குமாம் .

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது .

கும்பி கூழுக்கு அழும்போது கொண்டை பூவுக்கு அழுதுச்சாம் .

றக்குறது உழக்குப் பாலு ,எட்டி உதைக்கிறது பல்லுப்போக .

மேலும் படிக்க :

வாழ்க்கை 

காணொளி 
.............................................................................................. 

Saturday, March 24, 2012

கேணி வீடு !


ஆழமாக
அழகாக
அதிசயமாக 

வற்றாத சுவை நீர்
வழங்கிய
நீச்சல் பழகிய
புறாக்கள் கூடு
கட்டிய 
பயிர்களை
விளைவித்து
பசி போக்கிய
கேணி மீது
மண்  மூடி  
கட்டப்படும் வீட்டுக்கு
என்ன பேர் வைப்பார்கள் ?
என்ன பேர் வைத்தாலும்
இனி எங்களுக்கு
அது  கேணி வீடு  தான் !
கோடை காலத்தின்
வறண்ட தழுவலால்
துவளும்  அந்த வீட்டின்
தரையை இனி கேணியின் 
வற்றாத ஊற்றுகளின்
ஜீவிதம் நனைக்கக்கூடும் !
இப்படிதான் முடிகிறது
எங்கள் ஊர் கேணிகளின்
ஆயுட்காலமும் 
விளைநிலத்தின் 
ஆயுட்காலமும் !    

மேலும் படிக்க :

ஒற்றையடிப் பாதை !
....................................................................................................................................................................

Wednesday, February 29, 2012

உனக்காக எல்லாம் உனக்காக ..!

தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் பாடல்களாக இருப்பவை சந்திரபாபுவின் பாடல்கள் .அவரது பாடும் தொனியும் ஆடும் நடனமும் அலாதியானது .அந்த வரிசையில் " உனக்காக எல்லாம் உனக்காக.." பாடலுக்கு தனி இடம் உண்டு . விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த " புதையல் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இந்தப்பாடலை எழுதியவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . பொதுவுடைமை பாடல்கள் மட்டுமல்ல அற்புதமான காதல் பாடல்களையும் எழுதியவர் தான் பட்டுக்கோட்டையார் .

அந்தப்பாடல் :



பாடல் வரிகள் :

உனக்காக எல்லாம் உனக்காக _ இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக

எதுக்காக கண்ணே எதுக்காக? _ நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக?
கண்ணுக்குள்ளேவந்து கலகம்செய்வதும் எதுக்காக? _ மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக ( உனக்காக…)

பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா? _ இல்லே
பயித்தியமாய்ப் பாடியாடி நடிக்கணுமா?
துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா? _ சொல்லு
சோறுதண்ணி வேறுஏதுமில்லாமெக் கெடக்கணுமா?

இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தைஇங்கேருந்தே தாண்டிடுவேன்;
மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் _ இடி
மின்னல்மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன் (உனக்காக…)

என்னே காதல் ததும்பும் வரிகள் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

ராக் அண்ட் ரோல் - சந்திரபாபு நடனம் 

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது ! 
.................................................................................................................................................................... 

Saturday, February 25, 2012

சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !

அதிகார மையத்தின் கைகள் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகின்றன . என்ன தப்பு செய்கிறார் என்பது முக்கியமல்ல , யார் தப்பு செய்கிறார் என்பது தான் முக்கியமாகப் போய்விட்டது . சமூகத்தில் நாம் இருக்கும் இடத்தைப் பொறுத்தே நமது தப்புக்குத் தண்டனை . மற்றபடி நீதி ,நியாயம் ,சமதர்மம் என்பதெல்லாம் மண்ணை விட்டு மறைந்தே போய் விட்டது போல தோன்றுகிறது .ஆறறிவு சமூகத்தின் மிகப்பெரிய அவலம் இது . அதிகார வர்க்கம் செய்யும் அனைத்து செயல்களையும் நியாமாக்குவது தான் ஊடகங்களின் முதல் வேலையாகிவிட்டது . எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் தான் சாதாரண மனிதனின் ஒவ்வொரு நாளும் கடந்து போகிறது .

சென்னையில் இரண்டு வங்கிகளில் கொள்ளையடித்தவர்களில்  5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் . காரணம் , மக்களின் பணத்தில் சில லட்சங்கள் அவர்களால் திருடப்பட்டுள்ளது . அதற்கு தண்டனை மரணம் . என்னிடம் இருப்பது ஒரே கேள்வி தான் . மக்கள் பணத்தில் சில லட்சங்கள் திருடியவர்களுக்கே தண்டனை  மரணம் என்றால் மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை ?

திருடுவது சரி என்று நான் சொல்லவில்லை .யார் திருடினாலும் தப்பு தப்பு  தான் .தண்டனையும் தேவை தான் .ஆனால் , தண்டனை என்று வரும் பொழுது எளிய மனிதன் தான் அதிகம் பாதிக்கப்படுகிறான் . அதிகாரவர்க்கம் எவ்வளவு பெரிய தப்பு செய்தாலும் என்றுமே தண்டனை அனுபவித்ததில்லை . இதே 35,00,000 ரூபாய் மக்கள் பணத்தை ஒரு அரசியல்வாதி திருடிவிட்டான் என்று வைத்துக்கொள்வோம் . திருடப்பட்டது மக்கள் பணம் என்று கொதித்து எழும் காவல் துறை அந்த அரசியல்வாதியை  உடனே சுட்டுக்கொல்லுமா ?

வங்கிகளில் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக இவ்வளவு விரைவாக செயலாற்றிய காவல்துறை மற்ற கொள்ளைக்காரர்களுக்கு ( அரசியல்வாதிகள் இன்னும் பலர் ) எதிராக எப்போதும் பொங்காமலே இருப்பது ஏன் ? இரண்டு பிரிவிலும் திருடப்படுவது மக்கள் பணம் தான் . எந்த வித அடையாளமும் இல்லாத மனிதன் திருடும் போது அவனுக்கு கிடைக்கும் பரிசு மரணம் . பல்வேறு அடையாளங்களுடன் ( கட்சி ,பதவி ,அதிகாரம் இன்னும் பல ) திருடுபவர்களுக்கு கிடைக்கும் பரிசு புகழ் ( இன்னும் பல. ஆனால் ,கண்டிப்பாக மரணம் கிடைக்காது !?) . ஏன் இவ்வளவு பெரிய வேறுபாடு ???

 அப்ப ,என்ன தப்பு செய்கிறார் என்பது முக்கியமல்ல ,யார் தப்பு செய்கிறார் என்பது தான் முக்கியம் .அப்படித் தானே .இதைத் தட்டிக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஊடகங்கள் ,  கேள்வி கேட்பதற்கு பதிலாக அதிகாரவர்க்கத்தைப்    பாராட்டவே செய்கின்றன .என்ன கொடுமை இது ? நீதி செத்துப்போன இடத்தில் ஊடகங்கள்  மட்டும் உயிரோடவா இருக்கும் .

 இந்தத் திருட்டுக்காக 5 பேர் கொல்லப்பட்டது .சந்தேகமே இல்லாமல் நம் சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !

அடுத்த தடவ பேருந்துல போகும் போது டிக்கெட் எடுக்க மறந்துடாதிங்க , ஏன்னா உங்களையும் என்கவுன்டர்ல போட்டாலும் போட்ருவாங்க !? சூதானமா இருங்க !

Wednesday, February 22, 2012

மரங்களை வெட்டுங்கள்!!

காட்டு கருவேல மரம் ,சீமை கருவேல மரம் மற்றும் சீத்தை மரம் ( இவை அனைத்தும் ஒரே மரத்தின் வேறு பெயர்களா ? தெரியவில்லை ) நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்கள் . ஆனால் , தமிழ்நாட்டில் இந்த மரங்கள் தான் எங்கெங்கு காணினும் நீக்கமற நிறைந்திருக்கின்றன . இவை அழிக்கப்படுவதின் அவசியத்தை இந்தக் கட்டுரை விளக்குகிறது .இந்தக் கட்டுரையை நிறைய பேர் படித்திருக்கலாம் .இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி  படிக்காதவர்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .இது என் சொந்த கட்டுரை அல்ல . இரவல் கட்டுரை .

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன் :

 
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )


நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே' ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள் :

 
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம் :

 
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு :

 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

 
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம் :

 
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள் .இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
 

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்

இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல், வேரோடு புடுங்கி எறியுங்கள்..உங்கள் ஊர் பள்ளி ஆசிரியரை சந்தித்து இதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக்கச்  சொல்லுங்கள்.
 

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! 

நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! 

பின்குறிப்பு :
அறிவியல் படி பார்த்தால்  இந்த மரங்கள் தமிழ்நாட்டின் வெற்றியாளர்கள் தான் . எத்தனையோ வகையான மரங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்  இந்த வேளையில் இவை தங்களின் இருப்பை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன . வலுத்தது நிலைக்கும் !

மேலும் படிக்க :

 நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ? 

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 
..................................................................................................................................................................... 

Sunday, January 29, 2012

ராக் அண்ட் ரோல் - சந்திரபாபு நடனம்

1940 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் தோன்றிய இசை வடிவம் தான் ராக் அண்ட் ரோல் ( Rock & Roll or Rock 'n' Roll ) . ஆப்பிரிக்க இசையும் அமெரிக்க இசையும் கலந்து தான் " ராக் அண்ட் ரோல் " உருவானதாக சொல்லப்படுகிறது . இந்த இசை வடிவத்தில் முதலில் பியானோ அல்லது  சாக்ஸபோன் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது . பிறகு கிட்டார் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டது .1960 குப்  பிறகு தான் இந்த இசை வடிவம் பெரிய அளவில் புகழ் பெற்றதாம் . 

1958 ஆம் ஆண்டு வெளிவந்த பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர் . இந்தப்பாடலை எஸ் .சண்முகசுந்தரம்  மற்றும் ஆர் .கணேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் . சந்திரபாபு இந்தப்பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார் . என்னை ஆச்சரியப்படுத்திய விசயம் , இந்தப் பாடலை எழுதியிருப்பவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பது தான் . 

 பாடல்  வரிகள் : 

1-வது ஆள் : ஒன்… அண்ட்டூ… அண்ட்த்ரீ… அண்ட்போர்
2-வது ஆள் : தைதைதை… தை… தை… தை… தை… தை
1-வது ஆள் : ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல் (ராக்…
இங்கிலீஷ் டேன்ஸ் ஒன் அண்ட் டூ அண்ட்
இண்டியன் டேன்ஸ் தை… தை… தை… தை…
சைனா டேன்ஸ் சிங் சாங் சிங் சாங்
பர்மா டேன்ஸ் டிங் டாங் டிங் டாங்
லேடி டேன்ஸ் ஜோடி டேன்ஸ்
பாடி பியூட்டிகள் பப்ளி சிட்டிகள்
பாடி ஆடிடும் டேன்ஸ்!

2-வது ஆள் : ஆடினார் அன்றே ஆடினார்
தில்லை அம்பலத்தே நின்று
அரகரனாம் திருநடன சபேசன்
ஆடினார் அன்றோ!
அண்டம் குலுங்கிடத் தொண்டர் நடுங்கிட
நந்தி மத்தளம் எங்கும் முழங்கிட
அரங்கினில் ஆடினார் (அன்றே…)

1-வது ஆள் : ஸார்… ஸார்… ஸார்… டோண்டு ஒரி ஸார்
பார்… பார்… பார்… வேலைகளைப் பார்
பாய்… பாய்… பாய்… படேபடே பாய்
ரார்… டீடி… ராட்டி… டா
கொம்பிலே பழம்பழுத்துத் தொங்குறதும் கலை!
லவ்வுலே மனம்மயங்கிப் பொங்குறதும் கலை!
வீதியிலே கர்ணம்போட்டு ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்…
கலை… கலை… கலை!

2-வது ஆள் : கோபியர் கூடவே காவினி லாடிடும்
குறும்புக்காரன் கோபலன் நந்தபாலன்
குழலோசை கேட்காத குறைசெய்த காது
குறைந்தென்ன வளர்ந்தென்ன
ஒன்றுக்கும் உதவாது!

1-வது ஆள் : ராக் ராக் ராக் அண்ட் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல்

" கொம்பிலே பழம்பழுத்துத் தொங்குறதும் கலை!  லவ்வுலே  மனம்மயங்கிப் பொங்குறதும் கலை!  வீதியிலே கர்ணம்போட்டு ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்…கலை… கலை… கலை! " என்ன அருமையான வரிகள் .

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

திண்ணைப் பேச்சு வீரரிடம் !

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே ! 
..................................................................................................................................................................

Saturday, January 21, 2012

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?

நியூட்ரினோ என்பது மின்சுமை இல்லாத ஒளியை விட வேகமாக(?) பயணிக்கும் துகள் என்று சொல்லப்படுகிறது . இது , மின்காந்த அலைகள் மற்றும் வேறு எந்தத் துகள்களாலும் பாதிக்கப்படாமல் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடியது . நியூட்ரினோக்கள், இயற்கையான முறையில் சூரியனில் நடைபெறும் வேதியல் மாற்றங்களால் கிடைக்கின்றன . செயற்கையான முறையில் அணு உலைகள் மூலமாகவோ அல்லது காஸ்மிக் கதிர்கள் மூலமாக அணுவைத் தாக்குவதன் மூலமாகவோ நியூட்ரினோக்களை உருவாக்க முடியும் .ஆனால் , இது மிகவும் கடினம் மற்றும் ஆபத்து அதிகம் . அதனால் , சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களை பிடித்து ஆய்வு செய்யவே உலகெங்கும் நியூட்ரினோ ஆய்வுமையங்கள் அமைக்கப்படுகின்றன . இதுவும் எளிதல்ல .


நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சம் உருவான விதத்தையும் , சூரியனின் ரகசியங்களையும் அறியமுடியும் என்று அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள் . மேலும் இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் . இவர்களால் நம்பிக்கை மட்டுமே தெரிவிக்க முடியும் . ஆனால் , முடிவு எப்போதும் இயற்கையின் கையில் .

மூன்று விதமான நியூட்ரினோக்கள் :
                         Electron நியூட்ரினோ ( ne), Muon நியூட்ரினோ( nm) மற்றும்  Tau நியூட்ரினோ( nt)  என்று மொத்தம் மூன்று விதமான நியூட்ரினோக்கள் இருக்கின்றன .

Neutrino ne nm nt
Charged Partner electron (e) muon
(m)
tau
(t)

1930  ஆம் ஆண்டிலிருந்தே நியூட்ரினோ பற்றிய ஆய்வுகள் தொடங்கி விட்டன . ஆனால் இன்றுவரை பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை . நியூட்ரினோ துகள்களுக்கு எடை உண்டு என்று மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது .ஜப்பான்ல வச்சிருக்காக ,அமெரிக்கால வச்சிருக்காக அதனால நாமும் ஒன்ன உண்டு பண்ணலாம் என்று நெடு நாட்களாக இந்தியா முயற்சித்து வருகிறது . இதற்கு  முன்பு வடமாநிலத்தில் ஏதோ ஒரு இடத்தில் அமைய இருந்ததும் , நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் அமைய இருந்ததும் இயற்கை ஆர்வலர்களின் பலத்த எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது . அதனால்   கோலார் தங்க வயலில் நியூட்ரினோ  ஆய்வுமையம் செயல்பட்டு வந்தது . இதுவரை எவ்வளவு பணம் செலவளிக்கப்பட்டுள்ளது ? என்ன கண்டுபித்திருக்கிறார்கள்  ? என்று எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை .


இந்தநிலையில் தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது . இதற்கு தேவாரம் பகுதி மக்கள் கடந்த ஆண்டே எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால் , பெரிய போராட்டமாக முன்னெடுக்க முடியவில்லை . கண்டிப்பாக ஆய்வு மையம் அமையும் இடத்தில் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் . இந்தப்பாதிப்பு இன்னொரு " தானே " புயல் போல ஏதோ ஒரு வடிவத்தில் பூமியைப் பாதிக்கும் . இயற்கையின் அடி வலிமையாக மட்டுமே இருக்கும் .
இந்திய மூளைகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்றே வைத்துக்கொள்வோம் . இவர்களை ஜப்பான் அல்லது அமெரிக்காவிற்கு அனுப்பி அவர்களுடன் இணைந்து ஆய்வுகளை நடத்தச் சொல்லலாமே . அதை விடுத்து புதிதாக ஆய்வு மையம் அமைப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் அதிகளவு விரையமாகப்  போகிறது .மலையைக் குடைவதன் மூலமும் , சுரங்கம் அமைப்பதன் மூலமும் இயற்கை சூழலும் , சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படும் .


இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு ஏற்பட்டதன்  விளைவாக  மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.  


அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் தொடர்ந்து இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது ஒரு கூட்டம் . இன்று உலகில் கோடிக்கணக்கான ஆலைகள் மற்றும் ஆய்வு மையங்கள்  உள்ளன . ஆலையின் கழிவுகள் நுண்ணுயிரிகளை அதிகம் பாதிக்கின்றன . இயற்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாத கழிவுகளை வெளியிட எந்த அறிவியல் முறையாலும் முடியவில்லை . அதே வேளையில் இயற்கையில் கழிவு என்பதே இல்லை . இயற்கையின் கழிவு மற்றொரு உயிரினத்தின் வளர்ச்சிக்கு ஊட்டமாக மாறுகிறது .  

" இடுப்பு வேட்டிக்கு வக்கில்லையாம் ; இதுல இன்டர்நெட் கனெக்சன் கேட்குதாம் " என்று சுஜாதா வேடிக்கையாக சொன்னது போல, " சோத்துக்கே வழியில்லையாம் (இந்தியாவில்  வாழும் 40 % சதவீத மக்களுக்கு இன்னும் சரியான உணவு கிடைத்தபாடில்லை ) ; இதுல நியூட்ரினோ  ஆய்வுமையம் கேட்குதாம் " .

மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

...................................................................................................................................................................

Saturday, January 7, 2012

ஒற்றையடிப் பாதை !


ரயிலில் பயணிக்கிறேன்
சிறியதும் பெரியதுமாக
நீளமும் குட்டையுமாக
குறுக்கும் நெடுக்குமாக
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகள்
நினைவூட்டுகின்றன
முன்பு நான் நடந்த
ஒற்றையடிப் பாதைகளின்
பாதையோரப் புற்களையும்
நான்கு பனைமரங்களுக்கு
அருகில் இருந்த
ஒரே நுங்கு மரத்தையும்
குளக்கரையையும்
பூவரசமர நிழலையும்
பலமுறை பார்த்த
வேறு வேறு பாம்புகளையும்
முள் தைத்து மிதிவண்டி
பஞ்சர் ஆனதையும்
அடைமழை காலத்தில்
பாதையின்  குறுக்கே இருந்த
ஓடையில் வந்த வெள்ளத்தையும்
தூக்கிபிடித்த பிறகும் கூட
டவுசரின் ஓரத்தை
நனைத்த வெள்ளத் தண்ணீரையும்
ஓடையை ஒட்டியிருந்த
நாவல்மர பழத்தின்
மறக்க முடியாத சுவையையும்
வாழ்க்கையைப் போலவே
பள்ளத்தையும் மேடையும்
கூடவே
ஒற்றையடிப் பாதைகளை
மறந்த என் நிகழ்காலத்தையும் !

மேலும் படிக்க :

நிலவே நீ ஒரு ...!

மெதுவான எளிய வாழ்க்கை !
.................................................................................................................................................................... 

தனிமை !


நீளமான மின் கம்பியில்
ஒரே ரெட்டைவால்குருவி
என்னைப் போலவே !

மேலும் படிக்க :

கவிதை மாதிரி ! 

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !
...................................................................................................................................................................

நிலவே நீ ஒரு ...!


உனது பெயர்
சில ஆண்களுக்கும்
சில பெண்களுக்கும்
உன்னைப்பற்றி எழுதாத
இலக்கியமுமில்லை
அறிவியலுமில்லை
 நீயில்லாவிட்டால்
ஜோதிட உலகமே
இயங்காது
இரவுகள் உனக்கானவை
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நிரந்தரமல்ல
கற்றுத்தருவது நீ தான்
வர்ணிக்கப்படுகிறாய்
ஆண் என்றும்
பெண் என்றும்
உண்மையில்
நிலவே நீ ஒரு
திருநங்கை !

மேலும் படிக்க : 

கவிதை மாதிரி !

 நாமெல்லாம் குற்றவாளிகளே !
....................................................................................................................................................................

Sunday, January 1, 2012

கவிஞர்களே இவ்வருஷம் - எழுத்தாளர் சுஜாதா !

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

கவிஞர்களே !  இவ்வருஷம்  குறைத்துக்  கொள்வோம்
                   கவிதைகளில்  தேன்தடவல்  நிறுத்திக்  கொள்வோம்
செவிகளுக்கு  இனிமைதரும்  செய்யுள்  வேண்டாம் 
                   சினிமாவுக்(கு)   எழுதிவரும்  பொய்கள்  வேண்டாம் 
உவமைகளைத்  துப்புரவாய்  நீக்கிப்  பார்ப்போம்
                   உலகத்தைத்  திருத்துவதைப்  போக்கிப்  பார்ப்போம்
சிவபெருமான்,  சீனிவாசர்  முருகன்  மீது
                   சீர்தளைகள் தவறாத கவிகள் போதும் ...

அரசியலில்  மாறுதலைச்  சாட  வேண்டாம்
                  ஆளுநர்கள்,  முதல்வர்களைப்  பாட  வேண்டாம்
பரிசுதரும்  தலைவர்களைத்  தேட  வேண்டாம்
                   பட்டிமன்றம்  கவிராத்திரி  கூட  வேண்டாம்
வரிச்சுமைகள்,  பெண்ணுரிமை,  தமிழின்  இனிமை
                  வாரொன்று  மென்முலைகள்,  வளையல் சப்தம்
முரசறைந்த   பழந்தமிழர்  காதல்,  வீரம்
                   முதுகுடுமிப் பெருவழுதி எதுவும் வேண்டாம் ...

இத்தனையும்  துறந்துவிட்டால்  மிச்சம்  என்ன
                   எழுதுவதற்கு  என்றென்னைக்  கேட்பீர்  ஆயின்
நித்தநித்தம்  உயிர்வாழும்  யத்த  னத்தில்
                  நேர்மைக்கும்  கவிதைக்கும்  நேரம்  இன்றி
செத்தொழியக்  காத்திருக்கும்  மனுசர்  நெஞ்சின்
                  சிந்தனையைக்  கவிதைகளாய்ச்  செய்து  பார்ப்போம்
முத்தனைய *   சிலவரிகள்  கிடைக்கா  விட்டால்
                  மூன்றுலட்சம்  ' ராமஜெயம் '  எழுதிப்  பார்ப்போம் ..!

* ஒரே ஒரு உவமைக்கு மன்னிக்கவும் .
                                                                                                 - சுஜாதா
                                                                                                    14 - 4 -1991
                                                                                                   ஆனந்த விகடன் 

 நண்பர்களே இந்த செய்யுள் அல்லது கவிதை எழுதப்பட்ட வருடத்தைக் கவனிக்கவும் . 1991 !?

நன்றி - ஆனந்த விகடன் .

மேலும் படிக்க :

2011 ம் வருடமும் சாமானியனும் ! 
.....................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms