Monday, September 5, 2011

ஜப்பானும் தனிமனித ஒழுக்கமும் !

"திருடனாய்ப்  பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .." , " தனியொரு மனிதன் திருந்திவிட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை ..." இரண்டும் புகழ்பெற்ற பாடல் வரிகள் . நாம் எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் இன்னும் நம்மால் நிறைய விசயங்களை மாற்றமுடியவில்லை . செயல்படுத்துபவர்களும் , பின்பற்றுபவர்களும் சரியாக இல்லாதவரை சட்டங்களால் என்ன செய்ய முடியும் ?

அண்ணா  ஹசாரே , சமீபத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் . பாதிப்பேர் அவரை ஆதரிக்கிறார்கள் மீதிப்பேர் அவரையும் ,ஜன் லோக்பாலையும் எதிர்க்கிறார்கள் . அண்ணாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான் விசயம் "அகிம்சை " . அவரது போராட்டத்தின் போது யாருக்கும் எந்த இடையூறும் ,முக்கியமாக பொதுச்சொத்துக்கு எந்தவிதமான சேதமும் ஏற்ப்படவில்லை. மற்றவர்கள் நடத்திய , நடத்தும் போராட்டங்களில் இவை சாத்தியமில்லை .அகிம்சையின் சக்தியை தற்போது எல்லோராலும் உணர முடிந்திருக்கிறது . இவரை காந்தியுடன் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை .

 யாரும் எதுவும் செய்யமாட்டேன் என்கிறார்கள் , யாரவது எதாவது செய்யும் போது அவரை எதிர்க்க மட்டும் அணி திரண்டு விடுகிறார்கள் . இது ஒரு வகையான  நோய் . கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெறும்  போது அந்த அணி தோற்கவேண்டும் என்று எல்லோரும் வேண்டுகிறோம் . இது நம்மால் முடியாததை இன்னொருவன் செய்யும்போது ஏற்படும் ஆற்றாமையின் வெளிப்பாடு . நாமளும் எதுவும் செய்யக்கூடாது , அடுத்தவனும் எதுவும் செய்யக்கூடாது என்ற மனநிலையையே இதற்குக் காரணம் .

நாட்டில் ஊழலைவிடப் பெரிய பிரச்னைகள் இருக்கின்றன . அதில் கவனம் செலுத்தாத மக்கள் , "ஜன் லோக்பால்" மீது கவனம் செலுத்துவது நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை . உண்மையைச் சொல்லப்போனால் ஜன் லோக்பால் மூலமாக மற்ற பிரச்னைகளான இரோம் சர்மிளா , ஒரிசா போஸ்கோ , பழங்குடியினர் பிரச்னைகள் அதிக மக்களைச் சென்றடைந்திருக்கின்றன . மற்ற பிரச்னைகளை மக்கள் கவனிக்கவில்லை என்று சொல்பவர்கள் அதை அண்ணா ஹசாரே உண்ணாவிரத மேடையில் சொல்லியிருந்தால் அது எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்குமே , அதைச் செய்யாமல் எல்லோரும் ஒவ்வொரு மூலையிலிருந்து எதிர்ப்புக் குரல் மட்டுமே கொடுத்தார்கள் .எப்போதும் போல்  எதையும் செயல் படுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு விட்டார்களோ என்னவோ !


 நம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்னை "தனிமனித ஒழுக்கம்" தான் ,சட்டங்கள் அல்ல . தனிமனித ஒழுக்கம் இல்லாதவரையில் எந்தச் சட்டங்களாலும் எந்தப்பயனும் இல்லை .தனிமனித ஒழுக்கத்திற்கு சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம் , ஜப்பான் மக்கள் . ஜப்பான் மக்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . அவ்வளவு பெரிய பேரழிவு நிகழ்ந்தபோதும் அமைதியாக நேர்மையான வழியில் நடந்து கொண்டனர் . திறந்து கிடந்த கடையில் யாரும் திருடவில்லை , அமைதியாக வரிசையில் நின்று பொருட்கள் வாங்கினர் . சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில்  கிடந்த பணத்தை எடுத்து தொடர்ந்து அரசுக்கு செலுத்தி வருகின்றனர் . இதுவரை 800 கோடிக்கும் அதிகமான பணம் அரசிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது . இவை எப்போதும் இந்தியாவில்  சாத்தியமில்லை . காரணம் ?

நாம் இன்று செய்ய வேண்டியது தனிமனித ஒழுக்கத்தை இந்தியச் சமூகத்தில் பரவச் செய்வது மட்டுமே . போராட்டத்தில் கலந்து கொள்ளும் எல்லோரும் எதோ ஒரு வகையில் லஞ்சத்திற்கும் , ஊழலுக்கும் துணை போனவர்கள் தான் .தனி மனிதனாக நாம் நிறைய விசயங்களிடம் தொடர்ந்து தோற்றுக்கொண்டே தான் இருக்கிறோம். பிளாஸ்டிக்கிடம் தோற்கிறோம் , காலத்திடம் தோற்கிறோம், இயற்கையை ரசிக்க மறக்கிறோம் , உடலிடம் தோற்கிறோம் , உணவிடம் தோற்கிறோம் . இவ்வளவு விசயங்களில் தோற்றாலும் மீண்டும் அவற்றை வெற்றிக்கொள்ள தொடர்ந்து போராட வேண்டியிள்ளது .

இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் மிகப் பெரிய எதிரி " உலகமயமாக்கல் " மட்டுமே . உலகமயமாக்கல் , நம்மை நாமாக பார்க்க அனுமதிக்காமல் மற்றவர்களுடன் பொருத்திப் (Comparison) பார்க்கவே செய்கிறது .மற்றவர்கள் போல் இருக்க நாம் தினமும் தூண்டப்படுகிறோம் . நம் சுயத்தை இழக்கிறோம் . நம்மை நினைத்து நாம் பெருமைப் படுவதற்குப் பதிலாக , மற்றவர்களைச் கவனிக்கச் செய்து நம்மை கவலைப்பட வைப்பது தான் உலகமயமாக்கலின் தந்திரம் . முக அழகு கிரீம் , முடி வளர , முடி கொட்டாமல் இருக்க,ஒல்லியாக ,குண்டாக  என்று விதவிதமான குப்பைகளை  நம் தலையில் கட்டுகிறார்கள் . நாம் உணவுக்குச்  செலவு செய்வதை விட நம் ஆடம்பரத்துக்கு அதிகம் செலவழிக்கிறோம் . கடன் வாங்கியாவது நம் ஆடம்பரத்தை நிலை நாட்டுகிறோம் .

பழங்குடியினர் பிரச்னை, ஒரிசா போஸ்கோ பிரச்னை என்று பல பிரச்னைகளுக்கு உலகமயமாக்கல் தான் காரணம் . உலகமயமாக்கலால் மற்ற நாடுகள்  சூடு பட்ட நிலையிலும் தற்போதைய காங்கிரஸ் அரசு , உலகமயமாக்கலின் உதவியுடன் இந்தியாவை மற்றவர்களின் அடிமை தேசமாக மாற்றவே தொடர்ந்து முயல்கிறது . 

 தொடர்ந்து பெரிய முதலாளிகளை வளர்ப்பது ,சிறிய முதலாளிகளைப் அழிப்பது , இயற்கை வளங்களை அழிப்பது , விவசாயத்தைக் கெடுப்பது , பூமியின் சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிப்பது , பணத்தை ஒரே இடத்தில் சேர்ப்பது , பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள வித்தியாசத்தை தாறுமாறாக உயர்த்துவது , ஒட்டுமொத்தப்  பொருளாதாரமே ஒருசிலரை நம்பி இருப்பது ,கலாச்சார அடையாளங்களை அழிப்பது ,எல்லோரையும் நோயாளிகளாக்குவது ,   இவை தான் உலகமயமாக்களின் சாதனைகள் .

தனிமனித ஒழுக்கமும், உலகமயமாக்கலும் தான் நமது பெரிய பிரச்னைகள் !

நமக்கு நடக்காத வரை எல்லாமும் வேடிக்கை தான் !

மேலும் படிக்க :


.......................................................................................


2 comments:

Anonymous said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்.ஒவ்வொருவரும் சரியான பாதையில் சென்றால் சமூகமே நல்ல இலக்கை அடைந்து விடுவது போலதானே!!!அது இங்கு ஜப்பான் போல ந்டந்து விடுமா என்ன?- ஹரிகரன்.

கோவை நேரம் said...

அருமையான பதிவு.ஜப்பான் அதனால் தான் இன்னும் தொழில் துறைகளில் நம்பர் ஒன் ஆக இருக்கிறது.நம்மூர் அரசியல் வாதிகள் எப்படி ஊழல் செய்யலாம் என்பதிலேயே குறிக்கோள் கொண்டு உள்ளனர்.அப்புறம் எப்பூடி..?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms