Monday, December 26, 2011

ஜம்புலிங்கமே ஜடாதரா ...!

முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது .1972 ஆண்டு வெளிவந்த " காசேதான் கடவுளடா ", AVM நிறுவனம் தயாரித்த  ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் . இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஜம்புலிங்கமே ஜடாதரா.." என்ற பாடலைப் எங்கவாது பார்க்க நேரும்போது அடக்க முடியாத சிரிப்பு வந்துவிடும் . வாலியின் கவிவண்ணத்தில் பாடல் அவ்வளவு சிரிப்பு . இந்தப்பாடலை கி .வீரமணி ,கோவை சவுந்தரராஜன் மற்றும் தாராபுரம் சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர் .

     
முடிந்தால் இந்தத் திரைப்படத்தையே முழுமையாக பாருங்கள் .
அவ்வளவு சிரிப்பு ! 

மேலும் படிக்க :


நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! 


மெதுவான எளிய வாழ்க்கை !  
......................................................................................................................................................................

Saturday, December 24, 2011

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே !

பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம்  , பொதுவுடைமை கருத்துக்களை மையமாக கொண்ட பாடல்களை மட்டும் எழுதவில்லை . கற்பனை வளம் ததும்பக் கூடிய நிறைய பாடல்களை எழுதியுள்ளார் . அவற்றில் ஒரு துளி தான் இந்தப்பாடல் . நிலவை  எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக வர்ணனை செய்துள்ளனர் . இந்தப் பாடலில்  பட்டுக்கோட்டையார் , நிலவை தன் காதலியின் சகோதரியாக கற்பனை செய்து , காதலியை கேலி செய்வதுடன் நிலவையும் கேலி செய்து அற்புதமாக எழுதியுள்ளார் . 1960 ஆம் ஆண்டு வெளிவந்த " எல்லோரும் இந்நாட்டு மன்னர் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . T.M.செளந்தர்ராஜன்  , இந்தப் பாடலை சிறப்பாக பாடியுள்ளார் .

பாடல் வரிகள் :

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே? (என்…)


கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே _ உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே? (கண்…)

கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே? _ உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்…)

கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே _ அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே _ அதை
வாங்கிவந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்…)

கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே…
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே _ நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே _ இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே _ இது (அவள்…)

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே?

நிலவே
இப்போதாவது சொல்
நீ  இளையவளா மூத்தவளா ?!

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ! 

மட்டமான பேச்சு ! 

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! 
 ...................................................................................................................................................................  

Thursday, December 22, 2011

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !

" உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு . உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை " என்று சொல்கிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .1960 ஆம் ஆண்டு வெளிவந்த "  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . சக மனிதர்களைச் சாராமல் யாராலும் வாழ முடியாது . நாம் சாப்பிடும் ஒரு வேளை உணவில் எத்தனையோ மனிதர்களின் பங்களிப்பு இருக்கிறது . 

 அந்தப் பாடல் :


பாடல் வரிகள் :

பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஆண் : ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு (ஒன்று…)

இருவர் : உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்று…)

பெண் : ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
தேதியில் தோன்றும் பெருமை

ஆண் : சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
தாரணியில் அது புதுமை (ஜாதிகள்…)

இருவர் : உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்
ஓடி மறைந்திடும் மடமை (ஒன்று…)

பெண் : நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
நேர்வழி வேண்டும் உறவில்

ஆண் : பேசிடும் அன்பு செயல் முறையானால்
பேரின்பம் வேறெது உலகில்?

இருவர் : காணா வளமும் மாறா நலமும்
கண்டிடலாம் அன்பு நிலையில் (ஒன்று…)

உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .

மேலும் படிக்க :

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...! 

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! 

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

...................................................................................................................................................................... 

Monday, December 19, 2011

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விடங்களில்  கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து கொண்டிருக்கும் குரல் மலேசியா வாசுதேவனுடையது .  தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாசுதேவனின் குரலும் ஜானகியின்  குரலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன . தமிழிசையோடு கலந்துவிட்ட குரல்கள் அவை . வாசுதேவன் பாடிய உயிரோட்டமான  பாடல்கள் , நமக்கு மகிழ்ச்சியையும் ,சோகத்தையும் , மனதிற்கு இதத்தையும் ,கொண்டாட்டத்தையும் , ஆறுதலையும் ,வாழ்வதற்கான நம்பிக்கையையும் தரக்கூடியவை .

மலேசியாவில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு தமிழக கிராமிய பாணியிலான பாடும் முறை எப்படி வாய்த்தது ? இளையராஜா முக்கிய காரணமாக இருக்ககூடும் .வாசுதேவன் , வார்த்தை உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் . எல்லாவிதமான பாடல்களிலும் மிகத் தெளிவான வார்த்தை உச்சரிப்பு . கிராமிய பாடல்களில் கிராமத்தான் போன்ற உச்சரிப்பு அவரது காலத்தில் இவரால் மட்டுமே முடிந்திருக்கிறது . எந்த மாதிரியான படாலாக இருந்தாலும் அதற்கேற்றவாறு தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட பாடலுக்கு உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார் .

அவர் பாடிய எந்தப்பாடலாக இருந்தாலும் முதல் இரண்டு வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள் . முதல் இரண்டு வார்த்தைகளிலேயே  அந்தப்பாடலுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகிறார் .அதன் பிறகு, பாடல் முடியும் வரை நாம் அந்தக்குரலின் கட்டுப்பாட்டில் தான் இருப்போம் . தெரிந்தோ தெரியாமலோ சினிமாவில் பாடுவதில் சமத்துவத்தைக் கொண்டுவந்தவர் , வாசுதேவன் அவர்கள் . ஆம் , அவர் கதாநாயகர்களுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை , துண்டு துக்கடா வேடங்களில் நடிப்பவர்கள் ,குணச்சித்திர நடிகர்கள் மற்றும்  நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் அவரது குரல் ஒலிக்கிறது . அதிகமான திருவிழாப் பாடல்கள் பாடியவர் இவராகத் தான் இருப்பார் . 80 ,90 களில் வெளிவந்த பாடல்களில் கோவில் முன்பு ஒரு குழு ஆடத் தயாரானாலே நாம் முடிவு செய்து விடலாம் அடுத்து ஒலிக்கும் குரல் வாசுதேவன் குரலாகவே இருக்கும் .

நடிகரின் பெயராலோ , இசையமைப்பாளரின் பெயராலோ , படத்தின் பெயராலோ மட்டுமே அவரது அநேக பாடல்கள் கேட்கப்படுகின்றன . மலேசியா வாசுதேவன் பற்றி இசை விமர்சகர் ஷாஜி எழுதிய கட்டுரை அந்தப்போக்கை மாற்றியமைத்தது என்றே சொல்லலாம் . மிகச்சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை அது . அந்த ஒரு கட்டுரைக்காக நிறைய உழைத்திருக்கிறார் . அந்தக்கட்டுரை - மலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன் . எல்லோரும் அவரை மறந்திருந்த வேளையில் வாசுதேவன் பற்றி மிக விரிவாக எழுதப்பட்ட கட்டுரையிது . உயிர்மையில் வெளிவந்த இந்தக்கட்டுரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . அவரை முற்றிலுமாக மறந்திருந்த திரையுலகமும் சற்றே திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் முகத்தைத் திரும்பிக்கொண்டது .

ஷாஜி ," இசையின் தனிமை " - என்ற தனது புத்தக கலந்துரையாடல் மூலமாக மலேசியா வாசுதேவனைப் பாராட்டி மகிழ்ந்தார் . அரிதாக அந்த நிகழ்வில் பங்குபெறும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது . அந்த நிகழ்வு பற்றி நான் ஷாஜிக்கு  எழுதிய மின்னஞ்சலை அவரது வலைப்பதிவில் பிரசுரித்தார் . அந்தப் பதிவு - வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள்  . அன்று பேசிய மலேசியா வாசுதேவன் " புகழ் நிலையற்றது "  என்று கூறினார் . இதற்கு அவரது வாழ்க்கையே மிகச் சிறந்த உதாரணம் .

 2010 டிசம்பர் மாதம் பொதிகை தொலைக்காட்சியில் அவரது பேட்டி ஒளிபரப்பானது . அந்தப் பேட்டியில் பாதியை மட்டுமே பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது .அந்தப் பேட்டியில் அவர்,
" நாம் கலைஞர்களை உருவாக்க வேண்டும் , இளையராஜா என்னை உருவாக்கியதைப்போல, இன்று புதுப் பாடகர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை , இரண்டு மூன்று பாடல்கள் மட்டுமே பாட வாய்ப்புக் கிடைக்கின்றன. எல்லா வகையான (சோகம் ,தத்துவம் )  பாடல்களைப்  பாட வாய்ப்பு கிடைப்பதில்லை . சோகம் ,தத்துவம் நிறைந்த பாடல்கள் இன்றைய படங்களில் இல்லை . சோகப்பாடல்கள் மட்டுமே மனிதனின் உணர்வுகளை ஊடுருவும் . புதுப் பாடகர்கள் எந்த மொழியில்  பாடினாலும்  வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க வேண்டும். இந்த  மாதிரியான  தொலைக்காட்சியில் பேசக் கிடைக்கும் வாய்ப்புகள் எனது ஆதங்கத்தை
வெளிப்படுத்தஉதவுகின்றன. ஒரு பாடல் மட்டும் பாடினால் போதும் என்று
தான் சென்னை வந்தேன் . 5000 பாடல்கள் பாடிவிட்டேன்  இதற்குமேல்  என்ன வேண்டும் " என்று கூறினார் .

20-02-2011 அன்று  மலேசியா வாசுதேவன் மரணமடைந்தபோது கூட பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை . அவரது மரணம் ரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் பாதித்தது . இவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு மரணம் வரும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. திரையுலகின் அன்பும் , ஆதரவும் அவருக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருப்பார் . திரையுலகம் செய்யாததை ஷாஜி செய்தார் .ஷாஜியின் அன்பு அவருக்கு நிச்சயம் ஆறுதலாய் இருந்து இருக்கும் . மலேசியா வாசுதேவன் 
பற்றிய  ஷாஜியின் கட்டுரையின் அதிர்வுகள் இன்னும் என்னுள்  ஒலித்துக்கொண்டே இருக்கின்றன .

ஆனந்த விகடன் இதழில் ஒரு ஓரத்தில் வெறும் ஒரு பக்கத்தில் மட்டுமே மலேசியா வாசுதேவன் மரணம் பற்றிய குறிப்பு இருந்தது . உண்மையில் அவரது மரணத்தை விட அதிகமாக வலித்தது . ஒரு உன்னதமான இசைக்கலைஞனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை  இவ்வளவுதானா ?. இதே ஆனந்த விகடனில் ஒன்னுக்கும் உருப்படாத விசயங்கள்  எல்லாம்  பக்கத்தை நிரப்பும் போது வாசுதேவன் அவர்களுக்காக ஒரு மூனு பக்கம் கூட ஒதுக்க முடியவில்லை .எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம் ? வெறும் வணிகம் மட்டும் தான் வாழ்க்கையா ? மற்ற இதழ்களில் அந்த ஒரு பக்கமும் இடம் பெறவில்லை என்றே நினைக்கிறேன் .

நான் பார்த்த வரையில்  பொதிகை தொலைக்காட்சி மட்டுமே வாசுதேவன் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை இரவு 10 . 15 க்கு என்றும் இனிமை பகுதியில் ஒளிபரப்பியது . ஆனால் , அவரது பாடல்களால் பயன் பெரும் அனைவரும் அவரை மறந்து விட்டனர் . அவரது இறப்பை விட வருத்தமான விசயம் ,
 இறந்த பின்பும் அவரை  புறக்கணிக்கும் இந்த உலகம் தான் .

வரலாற்றில் , தனித்துவம் மிக்கவர்களுக்கு எப்போது  முக்கியத்துவம் 
கொடுத்துள்ளோம் ? அவர்கள் வாழ்ந்த  காலத்திற்கு பிறகு தான் அவர்களைக்  கொண்டாடி வந்துள்ளோம்  . வாசுதேவன் அவர்களின் மரணச் செய்தியைக் கேட்ட போது எனக்கு மகாகவி பாரதி தான் நினைவுக்கு வந்தார் . அவரை எப்படிப்  புறக்கணித்தார்களோ , அது போலவே வாசுதேவன் அவர்களையும் புறக்கணித்து உள்ளோம் . இன்று எப்படிப்  பாரதியை இந்த உலகம் கொண்டடுதோ , அதுபோலவே  நாளை வாசுதேவன் அவர்களையும் இந்த உலகம் கொண்டாடத்தான் போகிறது .

பூங்காற்று திரும்பத் தான் போகிறது . அதை நாம் பார்க்கத்தான் போகிறோம் . எனக்கு தெரிந்த வரையில் தமிழ் மண்ணோடு கலந்துவிட்ட  இரண்டு  ஆண்  குரல்கள் ஒன்று T.M.சவுந்தர்ராஜன்,  இன்னொன்று மலேசியா வாசுதேவன் .தமிழ், இயல் , இசை , நாடகம்  என்னும்  மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது . 
இசைத்தமிழில் இவர்கள் இருவருக்கும் நிச்சயம் இடம் இருக்கும் . காலத்தால் அழிக்க முடியாத குரல்கள் . இவர்களுக்கு யாருமே மாற்று இல்லை .  மரணம், வாசுதேவன் அவர்களின் உடலுக்குத்தான் .   
அவரது பாடல்களுக்கு இல்லை .

கலைஞனுக்கு என்றுமே அழிவில்லை !

அவர்கள் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் ! 

மேலும் படிக்க :


எக்காலத்திற்குமான கலைஞன் !  

முகப்பு பக்கம் 
..................................................................................................................................................................... 

Friday, December 16, 2011

பொறக்கும் போது பொறந்த குணம் !

மனிதன் பிறக்கும்போது பிறந்த குணங்கள் காலப்போக்கில் எப்படி மாறிவிடுகின்றன என்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப்பாடல் மூலம் உணர்த்துகிறார் . "சக்கரவர்த்தி திருமகள் " என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி ,MGR வாயசைப்பது போல அமைந்த பாடலிது . மக்களின் அறியாமை  இருளை நீக்குவதற்காகவே நிறையப்  பாடல்களை  எழுதியுள்ளார் , பட்டுக்கோட்டையார் . அதில் இந்தப்பாடலும் ஒன்று .

 அந்தப்பாடல் :
                                        
திரைப்படத்தில் -  http://www.pattukkottaiyar.com/site/?p=477

 
 பாடல் வரிகள் :
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் _ காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் _ ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் _ ஆனால்
இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போக மாறுது _ எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது  - மனிதன் (பொறக்…)


பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது _ ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ்சேர்ந்து
திருடனென்றே உதைக்குது -மனிதன் (பொறக்…)

காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது _ புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்புடிச்சி ஆட்டுது _ வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது _ ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது -மனிதன் (பொறக்…)

புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை _ பச்சைப்
புளுகை விற்றுச் சலுகை பெற்ற மந்தை _ இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை    -இதில்
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் _ நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் _ நாம்
உளறி என்ன? கதறி என்ன? ஒன்றுமே நடக்கவில்லை
தோழா _ ரொம்ப நாளா!1 (பொறக்…)

"எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம் இறக்கும்போது சேருது", "பட்டப்பகல் திருடர்களைப் பட்டாடைகள் மறைக்குது ", "காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது ", "வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது" , "இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை " -அருமையான வரிகள் .

நமது குணங்கள் பற்றி சிந்திப்போமாக !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .

மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை ! 

பட்டுக்கோட்டையார் பாடல்கள் !

....................................................................................................................................................................

Wednesday, December 14, 2011

மெதுவான எளிய வாழ்க்கை !

வாழ்க்கை எளிதானது அல்ல . ஆனால் ,எளிய வாழ்க்கை என்பது அழகானது ,ஆனந்தமானது ,அன்பானது ,நிறைவானது . ஆடம்பரமிக்க ,பரப்பான ,வேகமான வாழ்கையை நோக்கியே நாம் தள்ளப்படுகிறோம் . எலிக்கதை ஒன்று சொல்வார்கள் " ஒரு ஊருல ஆயிரக்கணக்கான எலிகள் ஒரு தெருவில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன .அந்தத் தெருவுல இருந்த வீட்டிலிருந்து ஒரு எலி எட்டிப்பார்த்து "எல்லோரும் எங்க போறீங்க " என்று கேட்டது .அதுக்கு தெருவுல போன ஒரு எலி, " எனக்குத் தெரியாது .எல்லோரும் போறாங்க நானும் போறேன் " என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஓடியது . அந்தக்கூட்டத்தில் அந்த வீட்டு எலியும் சேர்ந்து கொண்டது " . அந்த வீட்டு எலியின் மனநிலையில் தான் நாம் இருக்கிறோம் .

பெரும்பாலான நேரங்களில் நம்முடைய வாழ்க்கை நம் கைகளில் இல்லை . சமூக அங்கீகாரம் தான் பெரிதாக பார்க்கப்படுகிறது .புகழ் மிக்க வாழ்க்கை எல்லோருக்கும் சாத்தியமில்லை . புரிந்துகொள்ளும் மனநிலை நமக்கில்லை . எந்நேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் பவனி வரும் புகழ் மிக்க மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் இழப்பவை  ஏராளம் . சாதாரண மனிதர்களைப் போல அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியாது . புகழின் அளவைப் பொருத்து அவர்களுக்கு மனநெருக்கடி இருக்கும் .இந்த மனநெருக்கடியை சமாளிப்பவர்கள் புத்திசாலிகள் .எந்தத் தனி மனிதனையும் கடவுளாகவோ ,தலைவனாகவோ கொண்டாடக்கூடாது . நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே தலைவர்கள் ,கடவுள்கள் .

எல்லோருக்கும் ஒரே ஒரு வாழ்க்கை தான் . பணக்காரர்களுக்கும் ஒரு வாழ்க்கை தான் .புகழ் மிக்கவர்களுக்கும் ஒரு வாழக்கை தான் . ஏழைகளுக்கும் ஒரு வாழ்க்கை தான் . எல்லோருடைய வாழ்க்கையும் மரணத்தின் முன் சமம் . பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கை தான் எல்லோருக்கும் . உயிரினங்களின் பிறப்பு என்பது ஒரு மலர் மலர்வது போல எங்கும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது . கிராமத்தில் வசிப்பவர்கள் , விதவிதமாக நிகழும் மரணங்களை  மிக நெருக்கமாக நேரடியாக உணருகிறார்கள் கூடவே வாழ்வின் நிலையாமையையும் . மரணம் காற்றைப்போல எங்கும் நிறைந்திருக்கிறது .

எளிய மனிதர்களையும் ,எளிய வாழ்க்கையையும் கவனத்தில் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம் . சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை அவ்வளவு அழகானது , மகிழ்ச்சியானது . சரி ,சுற்றுப்புறத்தை மறந்து நீங்கள் கடைசியாக எப்போது வாய்விட்டு சத்தம் போட்டு சிரித்தீர்கள் ? யோசிக்கிறோம் . ஆனால் , அவர்களுக்கு இது தினமும் சாத்தியம் . சிரிக்க மறந்து இயந்திரம் போலவே வாழ்கிறோம் . நாலு பேர் ,நாலு பேர் என்று சதா புலம்பிக்கொண்டு நமக்காக வாழாமல் நாலு பேர் முன்னாடி பேர் வாங்கவே வாழ்கிறோம் .

எளிய மனிதர்கள் ,எளிய மனிதர்களோடு வெகு எளிதில் நெருக்கமாகி விடுகிறார்கள் .பிச்சைக்காரர்கள் ,பிளாட்பாரவாசிகள் ,குப்பை பொருக்குபவர்கள் ,வீட்டுவேலை செய்பவர்கள் ,கூலித் தொழிலாளிகள்  இவர்களின் வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள் உண்மை புரியும் .நாம் ,சக மனிதர்களிடம் நாலு வார்த்தைகள் பேசுவதற்குக் கூட  எப்போதும் தயங்கிக் கொண்டே இருக்கிறோம் . இன்றைய நிலையில்  தினமும் சந்திக்கும் மனிதர்களிடம் நாலு வார்த்தைகள் பேசுவது தான் நாம் செய்யும் பெரிய  சேவை .இயல்பாக பேசுவதற்கும் ,சிரிப்பதற்கும் கூட யோசிப்பது கொண்டே இருப்பது என்ன மாதிரியான வாழ்க்கை ?

மூன்று தலைமுறைகளுக்கு மேல் யாரும் தொடர்ந்து பணக்காரனாகவோ  ஏழையாகவோ  இருந்ததில்லை . ஒரு சிலரைத் தவிர இது எல்லோருக்கும் பொருந்தும் .வாழ்வின் நிலையாமையை உணராமல்  சமூக அங்கீகாரம் ,சமூக அங்கீகாரம் என்று சொல்லிக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ நிறைய பணம் ,சொந்த வாகனம் ,சொந்த வீடு என்று சேர்க்கவே விரும்புகிறோம் . சமூகத்தின் எந்த மட்டத்தில் வாழ்ந்தாலும் நமக்கான நிம்மதிக்கும்  ,மகிழ்ச்சிக்கும் நாம் மட்டுமே காரணம் .

எளிய வாழ்க்கை பற்றிச் சிந்திப்பவர்களுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம் ,தோல்வி அடைந்தவன் ,பணம் சேர்க்க வக்கில்லாதவன் , ஆடத் தெரியாதவன் (ஆடத் தெரியாதவனுக்குத் தான் தெரு கோணல் !) .தனது உழைப்பின் மூலம் தனக்குத் தேவையான உணவைத் தானே தேடி உண்ணும் எல்லா உயிரினங்களும் ( மனிதர்களும் )  வெற்றியாளர்கள் தான் . பணத்தை வைத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டாம் .

சுய புலம்பல் :
மெதுவான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன் . எந்நேரமும் வேகமாகவும் பரபரப்பாகவும் இருப்பது பிடிக்கவில்லை .பெரும்பாலும்  நடந்து செல்லவே விரும்புகிறேன் ,தேவைபட்டால் மட்டும் வாகனத்தின் உதவியை நாடுகிறேன் . டவுன் பஸில் போகவே பிடிக்கிறது . ஒரு குறிப்பிட்ட சாதனைக்காக ,வெற்றிக்காக வாழ்க்கையை இழக்காமல் ஒவ்வொரு நாளாக வாழ விரும்புகிறேன் .

இந்த சிந்தனை இப்படியே தொடருமா ? அல்லது காலம் எனது சிந்தனையை மாற்றியமைக்குமா ? தெரியாது . எப்படி இருந்தாலும் காலத்தின் விளையாட்டை விடாமல் ரசிக்கிறேன் .யாராலும் ஆற்றமுடியாத அத்தனை துயரங்களையும் ஆற்றும் வல்லமை காலத்திற்கு மட்டுமே உண்டு . வருடங்கள் ஓடுகின்றன . ஆனால் ,காலம் மாறவில்லை . பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும்  ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் தான் இன்றும் ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் தான் . மின்சாரமோ ,கான்கிரிட் வீடோ , நல்ல சாலையோ ,வாகனமோ,துரித உணவோ , சோப்போ ,பற்பசையோ ,அரிசி உணவோ  இல்லாமல் இயற்கையையும் தனது உழைப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்த நம் முன்னோர்களின் ஒவ்வொரு நாளும் இருபத்து நான்கு மணி நேரங்களிலானது . இன்றைய நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அதே இருபத்து நான்கு மணி நேரங்களிலானது தானே . 

அடுத்த நொடி இந்த உலகம் தரப்போகின்ற அற்புதங்களும் ஆச்சரியங்களும் ஏராளம் !

மேலும் படிக்க :

உண்மையான கொண்டாட்டம் ! 

கண்ணீர் துளி - மனிதத்தின் சுவாசம் 

எது நிரந்தரம் ? 

வாழ்க்கை ஒரு போராட்டம் ! 
......................................................................................................................................................................   

Wednesday, December 7, 2011

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

பூமியை அழிக்க யாராவது வேறு கிரகத்தில் இருந்து வந்தால் மட்டும் தான் பூமியர்கள் ( மனிதர்கள் ) அனைவரும் ஒன்றுபடுவார்கள் போல . அதுவரை எங்கேயும் எப்போதும் அடிதடி தான் . நாடு ,மாநிலம் ,மாவட்டம் ,ஊர்,கிராமம் ,தெரு ,சந்து ,பக்கத்து வீடு , குடும்பம் என்று பிரிவினைகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது தான் ஒரு நாகரிக சமூகத்தின் வளர்ச்சியா ?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எதிரி நாடு உள்ளது . நான் இந்த நாட்டுக்காரன் ,நான் அந்த நாட்டுக்காரன் என்று ஓயாத பெருமை வேறு . நாட்டுக்காரன் பெருமையெல்லாம் மாநிலம் என்று வரும்போது உடைந்து விடுகிறது . நான் இந்த மாநிலத்துக்காரன் , நான் இந்த மாவட்டத்துக்காரன் ,நான் இந்த ஊர்க்காரன் , நான் இந்த தெருக்காரன் ,நான் இந்த குடும்பத்துக்காரன் என்று பெருமை பேசி சதா சண்டைக்கு போவது தான் நம் வேலையா ?

இவற்றையெல்லாம் விட பெரிய பிரிவினைகள் இனம் ,மதம் ,மொழி ,ஜாதி ,கட்சி சார்ந்த பிரிவினைகள் தான் . இனம் இனம் என்று மேடையில் பேசுவார்கள் ,இறங்கி வந்ததும் ஜாதி பற்றியும் , கட்சி பற்றியும் மட்டுமே சிந்தனை செய்வார்கள் . மனிதர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் செய்வதே இந்த பிரிவினைகளின் நோக்கம் . உரக்க உரக்க பேசியே நம்மை  இந்தப் பிரிவினைகளின் ( நம் இனம் ,நம் மொழி ,நம் ஜாதி ,நம் கட்சி )கூண்டுக்குள் அடைத்துவிடுவார்கள் .

நம்மைச் சுயநலவாதிகளாக மாற்றுவது தான் இந்த பிரிவினைவாதிகளின் நோக்கம் . அப்போதுதான் நம்மை வைத்து அவர்கள் குளிர்காய முடியும் . இவை எல்லாவற்றுக்கும் பின்னால் அரசியல் மட்டுமே இருக்கிறது . எல்லாப் பிரிவினைகளிலும் அரசியல் கலப்பதால் தான் மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது . அரசியல் கலக்காதவரை பிரிவினைகளால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை .

ஒரு சில வளர்ந்த நாடுகள் ,வளராத நாடுகளுக்கிடையே பிரிவினைகளை உருவாக்கி ஆயுதங்களை விற்கின்றன . ஆயுதங்கள் விற்பனையை மட்டும் தடை செய்துவிட்டால் ஒரு சில வளர்ந்த நாடுகள் ஒரே நாளில் வளரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடும் .

மாநிலங்களைப் பொருத்தவரை  எல்லா மாநிலங்களும் கண்டிப்பாக ஒற்றுமையுடன் இருக்கக் கூடாது என்பதுதான் நாட்டை ஆட்சி செய்பவர்களின் நோக்கம் . ஒரு வேளை எல்லா மாநிலங்களிலும் ஒற்றுமையாக செயல்பட்டால் , நாட்டை ஆளும் அரசு மற்றவர்கள் மீது அதிகாரம் பண்ண முடியாது ,ஊழல் பண்ண முடியாது ,மாநில ஆட்சியைக் கைப்பற்ற முடியாது ,நம்மை வெளிநாடுகளுக்கு விலை பேசி விற்கமுடியாது . அதனால் மாநிலங்களுக்கிடையே  பிரிவினைகள் அவசியம் என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது .ஏமாளிகள் நாம் மட்டுமே .

மற்ற பிரிவினைகளை விட கட்சி சார்ந்த பிரிவினைகள் தான் நாளுக்குநாள் அதிகமாகிறது . தான் பின்பற்றும் அரசியல் கட்சி எவ்வளவு அட்டூழியங்கள் செய்தாலும் வீம்புக்கென்று அந்த அரசியல் கட்சியை தொடர்ந்து ஆதரிப்பது முட்டாள்தனமல்லவா . இந்த முட்டாள்தனத்தை மூலதனமாக வைத்துதான் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூச்சமே இல்லாமல் தொடர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள்  . கட்சியையும் ,கட்சித் தலைவரையும் தொடர்ந்து கொண்டாடும் வரை நமக்கு எந்த நல்லதும் நடக்காது .

இனம் , மொழி, மதம், ஜாதி சார்ந்த பிரிவினைகளை வளரவிடக்கூடாது . இவற்றை வைத்துதான் அரசியலே நடக்கிறது .நாம் , பிரிவினைவாதக் கூண்டுக்குள் இருந்து வெளியே வராதவாறு கவனமாக பார்த்துக் கொள்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை . எல்லோரும் மனிதர்கள் தான் , இன்னும் சொல்லப்போனால் எல்லோரும் தாவர ,விலங்குகளைப் போல   சாதாரண உயிரினங்கள் தான் என்ற எண்ணம் வளராதவரை நமக்கு வளர்ச்சி என்பதே கிடையாது .

நாமெல்லாம் இயற்கையின் குழந்தைகள் !

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் ! 
 .................................................................................................................................

Thursday, December 1, 2011

உண்மையான கொண்டாட்டம் !

குழந்தைகளின் உலகம் மிகவும் அழகானது ,மிகவும் அற்புதமானது ,மிகவும் ஆனந்தமானது ,மிகவும் கொண்டாட்டமானது . இதை உணராத மனநிலையில் நாம் இருக்கிறோம் . குழந்தைகளின் தினசரி வாழ்வில் நிறைய அன்பும் ,நிறைய பிணைப்பும் , கொஞ்சம் சண்டையும் கலந்திருக்கின்றன . குழந்தைகளை குழந்தைகளாக வளர நாம் அனுமதிப்பதே இல்லை . நான்கு வயதிற்குள் , தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் .

அறிவியல் என்ன சொல்கிறது என்றால் , குழந்தையின் 14 வயது வரை நம் கைகள் அவர்களைத் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் குழந்தை தனக்காக இவர் இருக்கிறார் என்று உணரும் .இல்லாவிட்டால்  தனக்காக யாரும் இல்லை என்று உணர்த்து அதற்கேற்றவாறு  நடந்து கொள்ளும் . அப்புறம் " எம்புள்ளை என் மேல பாசமாவே இல்லை " னு புலம்புவதால் ஒன்றும் நடக்காது .

" தொடுதல் " - ஒரு அற்புதமான நிகழ்வு . நெருக்கமானவர்கள் சந்திக்கும் போது தொட்டுக்கொண்டே பேசுங்கள் . தொடுதல் ,உங்களில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும் . குழந்தைகள் நம்மிடமிருந்து அதிக தொடுதலையும் ,அதிக நெருக்கத்தையும் எதிர்பார்க்கிறார்கள் . இதை செய்யாதே ,அதை செய்யாதே என்று நாளும் நம்மிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள் ."பேசாமல் உட்கார்ந்து டிவி பார் " - என்று பணிக்கப்படுகிறார்கள் . அப்படி டிவி பார்க்கும் குழந்தை , ' நல்லபிள்ளை ' என்று பெயர் வாங்குகிறது .என்ன கொடுமை இது ? " எண்ணிலடங்காத விளையாட்டுகளால் நிரம்பியது தான் அவர்களின் உலகம் "  என்று எப்போது உணரப்போகிறோம் . 

"மண்ணுல விளையாடாதே! " என்று தடுத்து மண்ணோடு உருவாகும்  நெருக்கத்தைப்  பறிக்கிறோம் . இன்று , நகரங்களில் மண்ணைப் பார்ப்பதே அரிதிலும் அரிதாகிவிட்டது .எங்கெங்கு காணினும் கான்கிரிட் .வண்ணதாசன் சொன்னது போல " கையிலும் ,காலிலும் மண் படாத வாழ்க்கை ,ஒரு வாழ்க்கையா ? ".  செருப்பைத்  துறந்து ஒரு முறை மண்ணில் நடந்து பாருங்கள் ,ஒரு முறை மண்ணை கைகளால் அள்ளுங்கள் ,ஒரு முறை மண்ணில் உங்கள் கால்களைப் புதைத்து அமருங்கள் .மண் உங்களோடு பேசுவதை உணர முடியும் . நான் குறிப்பிட்டது ,கடல் மணலையோ அல்லது நம் புண்ணியவான்கள் எச்சி துப்பி வைத்திருக்கும் மண்ணையோ அல்ல .

" குழந்தைகள் மண்ணோடு விளையாடும் போது அவர்களின்  நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கிறது "- என்று புதிய ஆய்வு ஒன்று அறிவிக்கிறது . இனி மேலாவது குழந்தைகளை மண்ணோடு விளையாட அனுமதிப்பார்களா ? மண்ணில் விளையாட சொல்வதற்குக்கூட யாரோ ஒருவர் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது .எனது குழந்தைப் பருவத்தில் மழை பெய்து முடிந்த ஒவ்வொரு அடுத்தநாளும் அவ்வளவு அற்புதமானது . மழைநீர் ஓடிய தடம் அவ்வளவு அழகாக இருக்கும் .விதவிதமான நிறங்களாலான மண் துகள்கள் கலந்த ஈரமண்ணிலேயே கழியும் எங்களது காலையும் ,மாலையும் .  கொட்டாங்குச்சியில் ஈரமண்ணை நிரப்பி இட்லி சுட்டு விளையாடிய நாட்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன . இன்றும் மழை பெய்கிறது , மழை நீர் ஓடுகிறது ,கொட்டாங்குச்சியும் இருக்கிறது .ஆனால் , நிறங்களாலான மண் துகள்களையும் ,இட்லி சுடும் குழந்தைகளையும் காணவில்லை .காரணம் , சிமென்ட் சாலை .

" கேள்வி கேட்பது " - மிகவும் அவசியாமான செயல் . குழந்தைகள் மட்டும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவதில்லை . குழந்தைகள் ,அபத்தமான , வேடிக்கையான , கற்பனையான ,எதார்த்தமான மற்றும் அறிவான கேள்விகளுக்குச்  சொந்தக்காரர்கள் .அவர்களின் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில்கள் கிடைக்கின்றன , பல கேள்விகளுக்கான பதில்கள் , அதன் எளிமையாலும் ,கடினத்தாலும் , நேரமின்மை என்று காட்டிக்கொள்வதாலும்  வீட்டிலும் ,பள்ளியிலும் மறுக்கப்படுகின்றன . தொடர்ந்து கேள்விகள் கேட்கும் குழந்தையே ஆரோக்கியமானது , உலகைப்  புரிந்து கொள்வதின் ஆரம்பமே கேள்விகள் என்று நாம் உணர வேண்டும் .      

பழைய கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாக காட்டப்பட்டார்கள் .அவர்களுக்கென்று அவர்களுடைய பாணியில் தனிப்பாடல்கள் இருந்தன . நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களாக குழந்தைகள் இருந்தனர் . அவர்களைச் சுற்றியே கதை நகர்ந்தது .இன்றைய திரைப்படங்கள் , குழந்தைகளைக் குழந்தைகளாக காட்டுவதில்லை , குழந்தைகளுக்கென்று தனிப்பாடல்கள் இல்லை,
குழந்தைகளை அபத்தமான நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்துகின்றன .

டிவி பார்க்கவும் , கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கேம்ஸ் விளையாடவும் மட்டுமே அனுமதிக்காமல் மண்ணிலும் மற்ற குழந்தைகளுடனும் விளையாட அனுமதிக்க வேண்டும் . இயற்கையை ரசிக்கவும் , இயற்கையின் மாறுதல்களைப்  புரிந்து கொள்ளவும் கற்றுத்தர வேண்டும் . மூன்று வயதிலேயே  படி! படி! என்று அதட்டாமல் வேண்டிய மட்டும் விளையாட அனுமதிக்க வேண்டும் . விளையாட துணை கிடைக்காத போது நாமே துணையாக மாறி அவர்களுடன் விளையாட வேண்டும் .

சமீபத்தில் ஒரு 5 வயது குழந்தை பாடிய பாடல் :

தக்காளி தக்காளி
எப்ப கல்யாணம்
நேத்து மத்தியானம்
யாரு வந்தாரு
ஐயர் வந்தாரு
என்னா கேட்டாரு
மோர் கேட்டாரு
என்னா மோர்
விச மோர்
என்னா விசம்
பாம்பு விசம்
என்னா பாம்பு
மலைப்பாம்பு
என்னா மலை
அண்ணாமலை !

14 வயது வரை அவர்கள் குழந்தைகள் தான் என்பதை நாம் உணர வேண்டும் . குழந்தைகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள் ,நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விசயங்கள் கிடைக்கும் .நமது கொண்டாட்டமெல்லாம் கொண்டாட்டமே இல்லை .

ரரின்றா பிரகர்சா ( Rarindra Prakarsa ) , இயற்கையான சூழ்நிலையில் எடுத்த குழந்தைகளின் அற்புதமான படங்களைப் பார்க்க - http://photo.net/photodb/member-photos?user_id=2231437

குழந்தைகளின் கொண்டாட்டமே  உண்மையான கொண்டாட்டம் !

நன்றி - http://photo.net/
  
மேலும் படிக்க :

காங்கிரஸை அழிப்போம் ! 

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 
................................................................................................................................................................

மட்டமான பேச்சு !

மட்டமான பேச்சைப் பேசுவதில் என்றும் முதலிடம் வகிப்பது நம் அரசியல்வாதிகள் தான் .எந்த மாதிரியான பிரச்சனையாக இருந்தாலும் அவர்களின் பேச்சு மட்டமானதாகவே உள்ளது . சில விதிவிலக்குகள் இருக்கலாம் .ஏதாவது ஒரு அரசியல்வாதியை எடுத்துக்கொள்ளுங்கள் , அவர் அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை பேசிய பேச்சைக் கேட்டுப் பாருங்கள் . அவரது  பேச்சு எதற்கும் பயன்படாது போனது புரியும் .

அரசியல்வாதிகள் தவிர்த்து , நம்மைச் சுற்றி எப்போதும் வெட்டிப்பேச்சு பேச ஆட்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் . அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இல்லாவிட்டால்  " மட்டமான பேச்சு அவர்கள் வாயைக் கெடுப்பதுடன் ,நம் காதையும் கெடுக்கும் " என்று சொல்கிறார் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . 1965 ஆம் ஆண்டு வெளிவந்த " மகனே கேள் " என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை எழுதியுள்ளார் . A .L . ராகவனும் , ஜிக்கியும் இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் .

அந்தப் பாடல் :




பாடல் வரிகள் :

மட்டமான பேச்சு _ தன்
வாயைக் கெடுக்குதுங்க _ அது
வெட்டித்தனமாக் கேக்கிறவங்க
காதையும் கெடுக்குதுங்க (மட்ட… )

சந்திலும் பொந்திலும் வாதம் _ அதால்
தலைவலி மருந்துக்கு லாபம் _ அந்த
ஜாடையிலே சில கேடிகள் செய்வது
சட்டையின் பைகளைக் கெடுக்குதுங்க (மட்ட…)

கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து
குடும்பத்தைக் கலைக்குதுங்க _ பெருங்
குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி
பொழப்பையும் கெடுக்குதுங்க

புரளியும் வதந்தியும் மூட்டி _ ஒரு
பொய்யை நூறாகக் கூட்டி _ கரும்
பூதமென்றும் சிறு பேய்களென்றும் _ பல
பாதையில் மூளையைக் கெடுக்குதுங்க (மட்ட…)

அறையில் வளர்ந்து வெளியில் பறந்து
அவதிப் படுத்துதுங்க _ ஊரை
அவதிப் படுத்துதுங்க _ அது
அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே
அமைதியைக் கெடுக்குதுங்க

பாழும் பொய்யென்று காட்டி _ உடல்
மாயக் கூடென்று கூட்டி _ உயர்
வானத்திலே பரலோகத்தைப் பாரென
மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க (மட்ட…)

 "சந்திலும் பொந்திலும் வாதம் _ அதால் தலைவலி மருந்துக்கு லாபம் ", "கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து குடும்பத்தைக் கலைக்குதுங்க","அறையில் வளர்ந்து வெளியில் பறந்து அவதிப் படுத்துதுங்க","வானத்திலே பரலோகத்தைப் பாரென
மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க" - எவ்வளவு அழுத்தமான வரிகள் .

குடும்பத்தைக் கெடுக்கவும் ,ஊரைக் கெடுக்கவும் ,நாட்டைக் கெடுக்கவும் ,உங்களின் நேரத்தை விழுங்கவும்  நிறையபேர் அலைகிறார்கள் . உசாராக இருங்கள் !

காதப் பொத்திக்கிங்க !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ மற்றும்  கிருபாகரன் .

மேலும் படிக்க :

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...! 
 ................................................................................................................................................................
 

Monday, November 28, 2011

ஆய கலைகள் 64 !

ஆய கலைகள் 64 பற்றி நமது ராஜாக்கள் கதைகளிலும் ,பள்ளிப்பாடத்திலும் கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை . தற்செயலாக  இணையத்தில் கிடைத்தது . அவை ,
 
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)


நன்றி : Tamil .

மேலும் படிக்க : 
 
நாமெல்லாம் யார் ?  


சிவில் சர்வீசஸ் தேர்வில் கேள்விகள் தமிழிலும் இருக்க வேண்டும் ! 
 .............................................................................................................................
 

Sunday, November 27, 2011

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு !

சுய சிந்தனையே இல்லாமல் மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்புபவர்களுக்கும் , மூட நம்பிக்கைகளை நம்புபவர்களுக்கும், " ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! " என்று சொல்கிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . 1965 ஆம் ஆண்டு வெளிவந்த " மகனே கேள் " என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை எழுதினார் .

அந்தப் பாடல் :    



பாடல் வரிகள் :

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு  (ஆறறி…)


அடக்கமில்லாப் பெண்கள் சிலர்
நடக்கும் எடக்கு நடையிலும்
ஆதிகாலப் பண்பைக் காறறல
பறக்க விடும் உடையிலும் (ஆறறி…)

தன்ரேகை தெரியாத
பொய்ரேகைக் காரரிடம்
கைரேகை பார்க்கவரும் முறையிலும் _ அவன்
கண்டதுபோல் சொல்லுவதை
நம்பிவிடும் வகையிலும் (ஆறறி…)

ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும்
எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும்
சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும்
சொந்த நிலையை மறந்துதிரியும் ஈனப் பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச்சோத்து மடங்களிலும் (ஆறறி…)


 " தன்ரேகை தெரியாத பொய்ரேகைக் காரரிடம் " ," ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும் எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும் "," சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும் " , எவ்வளவு வலிமையான வரிகள் .

நமக்கு ஆறு அறிவா ? ஐந்து அறிவா ?

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

......................................................................................................................

Friday, November 25, 2011

நாமெல்லாம் குற்றவாளிகளே !

நாம் வாழும் இந்தப்  பூமி, கோடிக்கணக்கான உயிரினங்களுக்குச் சொந்தமானது . ஆனால் , விலங்கினங்களில் ஒன்றான மனிதன் ,தனக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதுகிறான் . இந்த ஒரு விலங்குக்கூட்டம்
( மனிதர்கள் ) வாழ்வதற்கு மற்ற அனைத்து  உயிரினங்களையும்  பாதிக்கிறது .பாதிப்பு எதுவும் வந்தாலும் ,தான் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதுகிறான் ,மற்ற உயிரினங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை .பூமியில்  வாழும் சகமனிதர்கள் பற்றியும் கவலையில்லை .இதுல , தான் மட்டுமே ஆறறிவு உள்ள மிருகம் என்ற பெருமை வேறு .

 மற்ற உயிரினங்களைச் சாராமல் எந்த உயிராலும் பூமியில் வாழ முடியாது .மனிதன் ,மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன் அல்ல .அவன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமே .மற்ற உயிரினங்கள் இருக்கும் வரை தான் மனிதனாலும் வாழ முடியும் . செடி ,கொடிகள் ,மரங்கள் சூரிய சக்தியிலிருந்து உணவு தயாரிக்கிறது . இந்தத் தாவரங்களைச் சார்ந்து சிறிய பூச்சிகள் முதல் விலங்கினங்கள் வரை வாழ்கின்றன . தாவரங்களோ ,விலங்குகளோ இறந்து விட்டால் ,இவற்றை மண்ணோடு மண்ணாக மட்கச் செய்யும் பணியில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் (மட்க்குண்ணிகள்)  ஈடு பட்டுள்ளன . மட்கிப் போனவை , தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன . இயற்கையில் கழிவு என்பதே இல்லை .

மனிதனுக்கு வியாதி வந்தால் ,மருத்துவரிடம் போகிறான் . மரம் ,செடி ,கொடிகள்,பூச்சிகள் ,விலங்குகள் ,நுண்ணுயிரிகள் , இவற்றுக்கு வியாதி வந்தால் யாரிடம் போகும் . உடலில் குறைபாடுள்ள மனிதர்களுக்காக நாம் கவலைப்படுகிறோம் . ஆனால் ,மற்ற உயிரினங்களில் உள்ள குறைப்பாடுகளைக்  கவனிக்க யார் இருக்கிறார்கள் .இயற்கை மட்டுமே இருக்கிறது .மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை .

எந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும்  இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே  எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .

மனிதன் எப்போதும் இயற்கைக்கு விரோதமாக செயல்படுவதில் ஆர்வம் கொண்டவனாகவே இருக்கிறான் . இத்தகைய போக்கினால் அவன் சந்திக்கும் துன்பங்கள் ஏராளாம் . ஆனாலும் அவனது குணம் மாறவே இல்லை .ஆறாம் அறிவு என்னும் தலைக்கனம் அவனை ஆட்டி வைக்கிறது . இயற்கையின் உதவியில்லாமல் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறான் .இது எப்போதும் சாத்தியமில்லை . மனிதனால் இயற்கையை மீறி எதையும் செய்ய முடியாது .வெற்றி பெறுவது போல காட்டிக்கொண்டு தினமும் இயற்கையிடம் தோற்றுக் கொண்டே தான் இருக்கிறான் .

பூச்சிக்கொல்லிகள் ,உரம் ,பிளாஸ்டிக் ,மின் கழிவுகள் ,தொழிற்ச்சாலைக்   கழிவுகள்... இவையெல்லாம் சேர்ந்து நிலம் ,நீர்,காற்று என்று அனைத்தையும் பாதிக்கின்றன . நிலம் ,நீர் ,காற்று என்று எது மாசுபட்டாலும் தனக்கு ஏற்ப்படக்கூடிய பாதிப்புகள் பற்றி மட்டுமே சிந்திக்கிறான் . மாசுப்பாடுகளால் பாதிக்கப்படும் நுண்ணுயிரிகள், பூச்சிகள் ,மரம் ,செடி ,கொடிகள்,பறவைகள் , விலங்குகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை .மனிதனும் ஒரு சாதாரண உயிரினம் தான் .இதை உணர்ந்தாலே நம்முடைய பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . இயற்கைக்கு  எதிராக செயல்படும் வரை ,இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம்  குற்றவாளிகளே !

மற்ற உயிரினங்கள் ,எதை வேண்டுமானாலும் இழப்பதற்கும் ,பெறுவதற்கும்
தயாராகவே இருக்கின்றன . இது இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை . மூன்று வேளையும் சாப்பிட வேண்டிய கட்டாயமும் இல்லை . பசிக்கும் போது மட்டுமே உணவு தேடும் . விலங்குகள் ,குறிப்பிட்ட வயது வரை மட்டுமே தங்கள் குட்டிகளுக்கு ஆதரவு தருகின்றன .அதற்குமேல் அவற்றுக்கு ஆதரவும் தருவதில்லை ,அவற்றிடம் எதையும்   எதிர்பார்ப்பதுமில்லை . எல்லாவற்றையும் இயற்கைக்கு கொடுத்து விட்டு ,தனக்குத் தேவையானதை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன .

மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள் ,மனிதனை விட உயர்ந்ததாகவே மதிக்கப்படுகின்றன . சில இடங்களில் பசுவின் சிறுநீர் புனிதமானதாக கருதப்படுகிறது .பசுவின் சாணம் எருவாகவும் ,எருவாட்டியாகவும் பயன்படுகிறது . மனிதக் கழிவு ???  பூமியில் இதுவரை எத்தனையோ உயிரினங்கள் தோன்றி , வாழ்ந்து அழிந்துவிட்டன .எதிர்காலத்தில் இதில் மனிதனும் இடம் பிடிக்கலாம் .

மனிதர்களே இல்லாத பூமி கம்பீரமாக சுழலக் கூடும் !



மேலும் படிக்க :

நீரின்றி அமையாது உலகு ! 

வேடந்தாங்கலில் ஒரு நாள் !  
............................................................ 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms