Monday, August 6, 2012

ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - ஒரு பார்வை !


29 -07-2012 , ஞாயிற்றுக்கிழமை , பரபரப்பான நாட்களுக்கிடையே வந்த ஒரு வசந்த நாள் . ஆம் ,உண்மையில் வசந்த நாள் தான் நம் மண்ணுக்கும் மனதிற்கும் .நம்  மண்ணைப்பற்றி நமக்கு நினைவூட்டிய நாள் .மக்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  சென்னை நகரத்தில் ,லயோலா கல்லூரியில் நடந்தேறியது அவ்விழா . தமிழ் கூறும் நல்லுலகின் வசந்த விழா .அது , பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த " ஐந்திணை சுற்றுச்சூழல் விழா ". குறிஞ்சி ,முல்லை ,மருதம் ,நெய்தல் மற்றும் பாலை இந்தப் பேர்களைக் கேட்கும் போது எல்லோருக்கும் பள்ளிக்கூட நினைவுகளும் , தமிழ் மண்ணின் தனிச் சிறப்பும் பொங்கி வருவதைத் தடுக்க முடியாது .ஆனால் , அவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் ஐந்திணையின் இன்றைய நிலை என்ன ?

நோபெல் பரிசுக்கு இணையாக மதிக்கப்படும் " Right Livelihood Award (2008 )" வென்ற மண்ணுக்கும் மனிதர்களுக்குமான போராளியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார் . வினோ பாவே இயக்கத்தில் தான் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் மக்களுக்காக எப்படியெல்லாம் பாடுபட்டார்கள் என்பதையும் வினோ பாவேவின் தொலைநோக்கு பார்வை குறித்தும் ,மக்கள் மேம்பாடுக்கான பணிகள் பற்றியும் குறிப்பிட்டார் .இறால் பண்ணைகள் அமைத்து கடற்கரையை நாசமாக்க முயன்றவர்களிடமிருந்து  தமிழக கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க எப்படியெல்லாம் போராடினார் என்பதையும் விளக்கிக் கூறினார் .

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மிகவும் வருத்தப்பட்ட விசயம் நம் கல்வி நிலையங்களின் அமைவிடங்கள் பற்றியது ." தடுக்கி விழுந்த இடத்திலெல்லாம் இன்ஜினியரிங் கல்லூரிகள் ;பாவிகளா ,அந்த கல்லூரிகளை எந்தப்பொருளும் விளைய தகுதியற்ற இடங்களில் கட்டலாமே .நெல் அதிகம் விளைந்த தஞ்சாவூர் எங்கும் கல்வி நிலையங்கள் .முக்கியத்துவம் அறிவுக்கா ? உணவுக்கா ? நாமெல்லாம் மாதம் முழுதும் உழைத்தாலும் போதிய பணம் கிடைப்பதே அரிது . நம்மைச் சுற்றி கொள்ளைகாரங்களா இருக்காங்க , இந்தக் கொள்ளைக்காரங்க அளவுக்கதிகமான பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரிகள் கட்டி மறுபடியும் கொள்ளையடிக்கிறாங்க .இதப் போய் மக்கள்கிட்ட சொல்லுங்க ,விளைநிலங்களை  காப்பாத்துங்க "  என்று உருக்கமாக பேசினார் .

நம்மாழ்வார் பேசும்போதும் வினோ பாவே பற்றிக் குறிப்பிட்டார் . இளங்கோவடிகள் மற்றும் அவ்வையாரின் பாடல்களை மேற்கோள் காட்டி இன்றைய சூழலில் ஐந்திணையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பேசினார் .சூரிய ஒளி ஆற்றலை உள்ளே விட்டும் , வெப்ப ஆற்றலை வெளிவிடாத கார்பன் வளையங்கள் பற்றி குறிப்பிட்டார் .எவ்வாறு மரங்கள் கார்பன் வளையங்களைக் குறைக்கும் என்பதையும் சொன்னார் . மாலத்தீவில் கடலுக்கு அடியில் நடந்த உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பற்றிச் சொன்னது புதிதாக இருந்தது . ஹோமோ சேப்பியன் என்று சொல்லிக்கொள்ளும் நாம் "இயற்கைக்கு விரோதமானத சாப்பிட்டு இயற்கைக்கு விரோதமா சிந்திக்கிறோம் " என்று சொன்னார் .கல்விக்கூடங்களின் மோசமான செயல்பாட்டை சுட்டிக்காட்டினார் ." புத்தகங்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை, நம் கல்வி முறை நம்மைச் சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்றவாறு வாழ நம்மைப் பழக்கவில்லை " என்றார் .
  
காலை 9-30 முதல்  மாலை  5.00 வரை ஐந்திணைகள் பற்றிப் செயல்பாட்டாளர்கள்  பேசினார்கள் .ஐந்திணைகள் பற்றிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன . பாரம்பரிய விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது , நம் மரபு வழி விதைகளை இழந்து விட்டோம் ,உணவே மருந்து என்ற நிலை மாறிவிட்டது என்று கூறினார் அடுத்து பேசிய சுல்தான் இஸ்மாயில் . வினோ பாவே வேம்புக்கு கொடுத்த முக்கியத்துவம் குறித்துப் பேசினார் . தேசிய கொடியை சமையலறையில் ஓட்டச் சொன்னார் .எதற்கு என்றால் நாம் சாப்பிடும் உணவில் ஆரஞ்ச் ,வெள்ளை மற்றும் பச்சை நிற  உணவுகள் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் . நடுவில் உள்ள ஊதா நிறச் சக்கரம் தண்ணீரைக் குறிக்கிறது .இவ்வாறு நாம் இருந்தால் சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கையைப் போல 24 மணி நேரமும் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் .Ecology ,Economyயாக  மாறும் போது தான் பிரச்சனையே .Management , t யை எடுத்து விட்டால் Managemen , n யை எடுத்து விட்டால் Manageme என்று சுவாரசியமாகப் பேசினார் .     

குறிஞ்சி நிலப்பரப்பு குறித்து வேலூர் சி .சீனிவாசன் பேசினார் . வேலூரில் தாங்கள் செயல்படுத்தி வரும் VHRP - Vellore Hill Restoration Project பற்றிக் குறிப்பிட்டார் .மலைக் குன்றுகளில் சிறு சிறு குளங்கள் அமைப்பதும் , வறண்ட மலைக் குன்றுப் பகுதிகளைப் பசுமையாக்குவதும் இந்த செயல் திட்டத்தின் முக்கிய நோக்கம் .இதன் பயனாக மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றாமல் இருக்கிறது .பயனுள்ள முயற்சியாக தெரிந்தது .

குறிஞ்சி நிலப்பரப்பு குறித்து அடுத்து பேசிய வழக்குரைஞர் இரா .முருகவேல் பழங்குடிகளுக்கும் காட்டுக்கும் ,இயற்கைக்கும் உள்ள நெருக்கம் பற்றிக் குறிப்பிட்டார் . பழங்குடிகள் தாங்கள் குடியிருக்க வீடுகள் கட்ட மூங்கிலையும் ,நாணலையும் பயன்படுதுகின்றனர் . மூங்கில் மீண்டும் வளரும் ,நாணல் காய்ந்தால் காட்டுத் தீயை அதிகப்படுத்தும் . சமவெளியில் வாழும் மக்களே காடுகளின் அழிவிற்கு காரணம் .பழங்குடிகளால் மட்டுமே காடுகளை பாதுகாக்க முடியும் ,அவர்கள் பழங்குடிகளாக இருக்கும் வரை .

முல்லை நிலப்பரப்பு குறித்து பேசிய பேராசிரியர் .த .முருகவேல் , பிணந்திண்ணி கழுகுகளின் அழிவு எவ்வாறு உயிர்ச் சூழ்நிலையை பாதிக்கிறது என்றும் காடுகளின் பரப்பு குறைவதால் சிறுத்தை போன்ற விலங்குகளை காடுகளை விட நிலப்பரப்பில் அதிகம் காண முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

முல்லை பற்றி அடுத்து பேசிய பேராசிரியர் கு.வி .கிருஷ்ணமூர்த்தி திணைச்  சிதைவு பற்றிக் குறிப்பிட்டார் . ஒரு நிலப்பரப்பில் வாழும் உயிருள்ள மற்றும் உயிரட்ட கலவையே திணை எனப்படும் .அதாவது நிலத்தோடு இயைந்த பண்பாட்டுக் கூறுகளே திணையாகும் . இன்று எந்த நிலப்பரப்பும் திணையாக இல்லை .வெறும் நிலமாகச் சுருங்கிவிட்டது அல்லது வேறு திணையின் கூறுகளோடு கலந்து விட்டது . குறிஞ்சி ,முல்லை ,மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நான்கு திணைகளும் ஒருங்கே அமைந்த மாவட்டம் ,திருநெல்வேலி . வரகு ,குதிரைவாலி ,சாமை ஆகியன முல்லையின் உணவுப்பொருட்கள் . 10000 ஆண்டுகளுக்கு முன்பு 70 % இருந்த முல்லை நிலப்பரப்பு ,இன்று 15 % குறைந்து விட்டது .

ருதம் பற்றி வைகை குமாரசாமியும் ,அறச்சலூர் செல்வமும் பேசினார்கள் .இயற்கை விவசாயம் குறித்து பேசினார்கள் . இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பொருட்கள் விலை ஏன் அதிகமாக உள்ளது என்று விளக்கினார்கள் .உழுதல் ,மழையைக் கணித்தல் ,விதைகளைத் தேர்ந்தெடுத்தல் , நாடு நடுதல் ,சரியாக நீர் பாய்ச்சுதல் ,சரியான நேரத்தில் களை பறித்தல் ,சாகுபடி செய்தல்  என்று  60 கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் தெரிந்த ஒருவன் மட்டுமே விவசாயியாக இருக்க முடியும் . விதையிழப்பும் , நவீன இயந்திரங்களால் தொழில்நுட்ப இழப்புமே விவசாயம் , விவசாயிகளின் அழிவிற்கு காரணங்கள் .

பாலை நிலம் பற்றி சு .தியோடர் பாஸ்கரன் பேசினார் . காங்கிரஸ் அமைப்பைத் தோற்றுவித்தவரான  A .O .ஹியூம் , பறவைகளை அவதானிப்பதில் வல்லவராக இருந்திருக்கிறார் . அவர் Bustard என்று அழைக்கப்படும் கான மயிலைப் பார்த்திருக்கிறார் . இதுவே இந்தியாவின் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டியது .Bustard  என்ற வார்த்தை தவறாக உச்சரிக்கப்பட்டால் தவறாகப் போய்விடும் என்ற காரணத்தால் தேசிய பறவையாக இடம் பெறவில்லை . இது பாலை நிலத்தின் பறவையாகும் . முன்பு தமிழ்நாட்டில் அதிகளவில் இருந்த கான மயில்கள் தற்போது இல்லை . மத்திய பிரதேசத்திலும்  ,கர்நாடகாவிலும் உள்ள சரணாலயங்களில் மட்டுமே தற்போது கான மயில்கள் உள்ளன . காடை ,கள் கவுதாரி ,ஆள்காட்டிக் குருவி முதலிய பறவைகளும் ,குள்ள நரி ,குழி நரி ,காட்டுப்பூனை முதலிய விலங்குகளும் பாலை நிலத்தில் வாழ்ந்துள்ளன . பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் பிங்களர்கள் என்று அழைக்கப்பட்டனர் . துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு தான் அதிகமான காட்டுயிர்கள் கொல்லப்பட்டுள்ளன . இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு தான் அதிக காடுகளும் ,காட்டுயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன .அணைகள் கட்டுவதால் பாலை நிலம் அழிகிறது .

 கான மயில் :


நெய்தல் நிலம் பற்றிப்  பேசிய வறீதையா அழுத்தமான கருத்துகளை முன்வைத்தார் . வரலாற்றிலும் சரி தற்போதும் சரி நெய்தல் நில மக்களான பரதவர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை ." மீனை உணவாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள் , மீன் தான் எங்கள் வாழ்க்கை என்பதை நீங்கள் உணரவேயில்லை "  என்று சாடினார் . சேது சமுத்திரத் திட்டத்தின் காரணமாக பவளப்பாறைகள் சேதப்படுத்தப் பட்டதால் தான் சுனாமியின் காரணமாக நாகபட்டினமும் ,வேளாங்கண்ணியும் அதிகளவு பாதிக்கப்பட்டன ;பவளப் பாறைகளால் ராமேஸ்வரமும் ,கன்னியாகுமரியும் தப்பித்துக் கொண்டன .

நெய்தல் நிலம் பற்றி அடுத்து பேசிய அருள் எழிலன் , நெய்தல் நில மக்கள் குறித்த நீண்ட  வரலாற்றை  பதிவு செய்தார் . கிறித்துவம் நெய்தல் நில மக்களுடன் எப்படிக் கலந்தது ,தற்போது எப்படி உள்ளது என்று விளக்கினார் . புன்னைகாயல் என்னும் இடத்தில் தான் தமிழகத்தின் முதல் அச்சகமும் ,முதல் மருத்துவமனையும் மற்றும் முதல் கல்விக்கூடமும் இருந்ததாக குறிப்பிட்டார் . சென்னையில் கடலை நம்பி வாழ்ந்தவர்கள் கண்ணகி நகருக்கும் ,செம்மஞ்சேரிக்கும் துரத்தி அடிக்கப்பட்டது குறித்தும் வேதனையுடன் குறிப்பிட்டார் .ஜோ .டி .குரூஸ் நெய்தல் நில உரைகளுக்கு தலைமை தாங்கினார் .

மொத்தத்தில் வளர்ச்சி என்ற பெயரால் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறோம் . இப்படியே போனால் ஐந்திணை என்பதே இருக்காது .ஒரே திணையான காங்கிரட் திணை மட்டுமே இருக்கும் .

மாலை 5 மணிக்கு மேல் இருளர் பழங்குடி மக்களின் களை நிகழ்ச்சிகளும் ,கொல்லிமலை மலையாளி பழங்குடிகளின் சேர்வையாட்டமும் நடைபெற்றது . அடுத்ததாக சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டன .சிறு தானிய உணவுகளில் உள்ள சத்துகள் குறித்து சித்த மருத்துவர் கு .சிவராமன் தெளிவாக விளக்கிக் கூறினார் . நீண்ட நாட்களாக நான் பார்க்க விரும்பிய மருத்துவர் புகழேந்தியைச் சந்திக்க முடிந்தது .முடிவாக பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது .


அந்த உணவில் இடம்பெற்ற உணவு வகைகள்,
1.பானகம்
2.தேனும் தினை மாவும்
3.காணச்சாறு( கொள்ளு )
4.கம்பு வல்லாரை தோசை
5.நிலக்கடலைச் சட்னி
6.சாமை தயிர்சோறு
7.வழுதுணங்காய் ( கத்தரிக்காய் )  சாம்பார்
8.பருப்புக்கீரை மசியல்
9.குதிரைவாலி புளிச்சோறு
10.ராகி வாழைப்பூ வறுத்த சோறு
11.வரகு கூட்டாஞ்சோறு
12.தட்டைப்பயறு பிரட்டல்
13.தினை இனிப்புப் பொங்கல்
14.நவதானிய கொழுக்கட்டை
கிராமத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் சாமை ,வரகு ,தினை , குதிரைவாலி சாப்பிட்டதில்லை .இந்நிகழ்வின் மூலம் இவற்றையெல்லாம் உண்ணவும் ,உணரவும் முடிந்தது . எங்கள் வீட்டில் சிறு தானிய உணவுகளை சேர்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டோம் .

இனம் ,மொழி ,மதம் ,நாடு போன்ற பேதங்களில் சிக்க வேண்டாம் என்று தான் இருக்கிறேன் . ஆனால் , நம் முன்னோர்கள் பிரித்த இந்த ஐந்திணை என்னை பெருமைப்பட வைக்கிறது . உலகில் வேறு எங்கும் இது போல நிலத்தை பிரித்து வாழ்ந்தார்களா என்று தெரியவில்லை .

பூவுலகின் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ..!

 பூவுலகின் நண்பர்களின் இணையதளம் :-  www.poovulagu.net .

 ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - காணொளி -http://www.periyarthalam.com/2012/07/31/ainthinai-vizha-videos/

மேலும் படிக்க : -

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?

நாமெல்லாம் குற்றவாளிகளே !
.....................................................................................................................................................................

Thursday, August 2, 2012

விகடன் வலையோசையில்...!

ஆனந்த விகடன் எனக்கு அறிமுகம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன .இதுவரை வாங்கிப் படித்த அனைத்து ஆனந்த விகடன் பிரதிகளையும் சேமித்து வைத்துள்ளேன் . தற்போது தமிழில் வெளிவரும் வார இதழ்களில் ஆனந்த விகடனே சிறந்தது .இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை . 16-05-2012 தேதியிட்ட ஆனந்த விகடன் வரவேற்பறையில் ! எனது வலைப்பூ இடம்பெற்றது . அதைப்பற்றி எனது வலைப்பூவில் குறிப்பிடும் போது " கடந்த இரண்டு மாதங்களாக விகடன் படிப்பதில்லை " என்று குறிப்பிட்டிருந்தேன் . அதற்கு கடும் எதிர்ப்பு , உங்கள் வலைப்பூவே விகடன் மூலம் தான் எங்களுக்குத் தெரிந்தது ஆனால் நீங்கள் ஏன் விகடன் படிக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பினார்கள்  இப்போதும் விகடன் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கவில்லை .

ஒட்டு மொத்த ஊடகங்கள் மீதான கோபம் தான் விகடன் படிக்காததற்கும்  காரணம் . பொதுவாக எந்தப் புத்தகம் படித்தாலும் முன்பக்க அட்டை முதல் பின்பக்க அட்டை வரை படித்துத் தான் பழக்கம் . சமீப கால ஆனந்த விகடனை அவ்வாறு படிக்க முடியவில்லை . சினிமாக்காரர்களின் சொந்த வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் ? நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தால் சினிமாக்காரர்கள் வாழ்க்கையை விட சுவாரசியமாகவே இருக்கும் . அப்படி இருக்கும் போது நமக்கெதுக்கு சினிமாக்காரர்களின் சொந்த வாழ்க்கை .  அடுத்து அதிகமாக இடம்பெறுவது ,அரசியல்வாதிகளின் சுயபுராணம் .   

விகடன் மட்டுமல்ல பெரும்பான்மையான ஊடகங்கள் சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும்  மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது . இந்தக் கோபம் தான் விகடன் படிக்காததற்கு காரணம் . மற்றபடி நம் சமூகத்திலிருந்து சினிமாவையும் ,அரசியலையும் பிரிக்க முடியாது . அரசியல் குறித்தும் , நல்ல சினிமா குறித்தும் ஆக்கப்பூர்வமான ,அவசியமான விவாதங்கள் அவசியம் .விகடன் படிக்கவில்லை என்றாலும் " இன்று ஒன்று நன்று " தொடர்ந்து கேட்டுவருகிறேன் .தற்போதைய விகடனில் " வட்டியும் முதலும் " ," நானே கேள்வி நானே பதில் " ," சிறுகதைகள் ","ஓவியங்கள் " , " கார்டூன் " ,"தலையங்கம் " ," வலைபாயுதே (சினிமா மற்றும் அரசியல் தவிர்த்த பதிவுகள் ) " போன்ற பகுதிகள் ரசிக்கும்படி உள்ளன . ஆனாலும் மிதமிஞ்சிய அரசியல் , சினிமா செய்திகளால் விகடன் தொடர்ந்து படிக்க முடியவில்லை . என்று தோன்றுகிறதோ அன்று தொடர்ந்து படிக்க ஆரம்பித்து விடுவேன் .

25-07-12 தேதியிட்ட ஆனந்த விகடன், என் விகடன் மதுரை பதிப்பில் எனது வலைப்பூ இடம் பெற்றுள்ளது.






நன்றி :- விகடன் .


மேலும் படிக்க :

ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் !


விகடன் வரவேற்பறையில் !


.....................................................................................................................................................................


Tuesday, July 24, 2012

சமத்துவத்தைப் பேணுமா கல்வி ?

" மாற்றம் ஒன்றே மாறாதது " என்பது பொது நியதி .ஆனால் ,அது  ஒன்றே ஒன்றுக்கு மட்டும் பொருந்தாது .அது நம் கல்வி முறை . அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் , தொழில்நுட்பப் புரட்சியாலும் உலகம் எவ்வளவோ மாறுதலுக்கு உட்பட்ட பிறகும் நம் இந்திய கல்வி முறை மாற்றம் இல்லாமல் தொடர்கிறது . மனப்பாடம் செய்யும் திறமையை மட்டுமே நம் கல்வி முறை தொடர்ந்து வளர்த்து வருகிறது .எல் .கே .ஜி . படித்தாலும் இன்ஜினியரிங் படித்தாலும் மனப்பாடம் செய்யத் தெரிந்தால் போதும் நீங்கள் பாஸ் . மற்ற எதுவும் தேவையில்லை . உலகம் குறித்தோ , இயற்கை குறித்தோ , அரசியல் குறித்தோ , மனித இனத்தின் வரலாறு குறித்தோ ,தன்னைச் சுற்றி வாழும் மனிதர்கள் குறித்தோ எந்தப் புரிதல்களும் நம் கல்வி முறையால் ஏற்படுத்தப் படுவதில்லை .

அழகான , பகட்டான , அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் ஒரு பள்ளியில் தன் பிள்ளையைச் சேர்த்துவிட்டால் போதும் , தன் கடமை முடிந்தது என்று பெற்றோர் முடிவெடுத்து ஒதுங்கி விடுகின்றனர் .ஆசிரியர்கள் பாடத்திட்டத்தைத்  தாண்டி எதையும் கற்பிப்பதில்லை . வகுப்பறையின் ஜன்னல் வழியே தெரியும் மரத்தின் பெயர் கூட அங்கு படிப்பவர்களுக்கு சொல்லித்தரப்படுவதில்லை . அற்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர் பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது .பெற்றோரும் , "மற்றவர்களுடன் சேராதே , மற்றவர்கள் பற்றிக் கவலைப் படாதே " என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளை சுயநலவாதிகளாக வளர்கின்றனர் .ஊடகங்கள், இந்த சுயநல மனப்போக்கை கவனமாக வளர்க்கின்றன . ஒரு குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி யாரையும் இன்றைய ஊடகங்கள் சிந்திக்க விடுவதில்லை . நம் காலத்தின் மிகப்பெரும் அவலம் இது .


செய்முறைப் பயிற்சி என்பது நம் கல்வி முறையில் மிகவும் குறைவாக உள்ளது .ஒரு மரத்தை வரைபடமாக காட்டுவதை விட நேரடியாக மரத்தைக் காட்டிச் சொல்லிக் கொடுத்தால் எளிதில் புரியும் . எல்லாவற்றிலும் இப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை . முடிந்தவற்றை இவ்வாறு சொல்லித் தரலாம் .அடுத்து ,எவ்வளவு படித்தாலும் வேலைக்காக அரசாங்கத்தையோ , தனியார் நிறுவனங்களையோ சார்ந்து இருக்கும் வகையிலேயே நம் கல்வி முறை உள்ளது . தொழில் முனைவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் நம் கல்வி முறை அமைய வேண்டும் . எந்தக் குடும்பமாக இருந்தாலும் கல்விக்காகவும் , மருத்துவத்திற்காகவும் மட்டுமே அதிக பணம் செலவிடுகிறது .

கல்வி முறையில் மாற்றத்தை அரசால் மட்டுமே கொண்டு வர முடியாது . பெற்றோர்களும் ஆசிரியர்களும் அரசும் சேர்ந்து தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் . தான் யார் என்பதை உணர வைத்தல் மூலமே பாதி மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும் . உலகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில் தானும் ஒரு சாதாரண விலங்கு ( பல நேரங்களில் தானும்  ஒரு மிருகம் தான் என்பதை மனிதன் மறந்து விடுகிறான் ) இனம் தான் என்பதையும் , இயற்கையின் ஒரு சிறு பகுதி தான் மனிதர்கள் என்பதையும் , மரங்கள் ,பறவைகள் ,விலங்குகள் என்று இயற்கையின் பங்களிப்பில்லாமல் நம்மால் வாழவே முடியாது என்பதையும்  உணர வைக்க வேண்டும் .

சமத்துவத்தை உருவாக்கும் கல்வியே நல்ல கல்வியாக இருக்க முடியும் . ஆண்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ , அதே அளவு உரிமை பெண்களுக்கும் உண்டு .  எந்த உயிரினத்திலும் பெண் இல்லாவிட்டால் உலகே இல்லை என்பதையும் , நாகரிக வளர்ச்சி இல்லாத சமயத்தில் மனித சமூதாயம் பெண் வழிச் சமூதாயமாக தான் இருந்தது என்பதையும் உணர வைத்து பெண்ணைத் தன் சக மனுசியாக மதிக்க கற்றுத் தருவது தான் இன்றைய கல்வியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் . அப்படிச் செய்தால் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும் . படித்தவர்களும் பெண்களைத் தரக் குறைவாக நடத்துகின்றனர் . கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை ஒடுக்குவதைத் தடுக்க வேண்டும் .பெண்களை பொத்தி பொத்தி வளர்க்காமல் ஆண்கள் போலவே வளர அனுமதிப்பதன் மூலமே நம்மால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் .ஆபிரிக்காவில் வாழ்வதற்கு ஏற்றவாறு எந்த சிறப்புத் தகுதிகளும் இல்லாத ,மற்ற விலங்குகளால் அடித்து விரட்டப்பட்ட ஒரு விலங்கு இனம் தான் மனித இனம் என்பதையும் புரிய வைக்க வேண்டும் .

சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் வாழும் மனிதர்களை தன் சக மனிதனாக மதிக்க வேண்டும் . நாகரிக மனிதன் என்று சொல்லிக் கொள்ளும் நாம் இன்னும் ஜாதி ,மத , இன , மொழி ,தேச பேதங்களில் இருந்து வெளி வரவில்லை .இவை அனைத்தும் கடந்த சமத்துவத்தில் என்று வாழ்கிறோமோ அன்று தான் நாம் நாகரிக மனிதன் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது .அதுவரை நாம் காட்டுமிராண்டிகள் தான் .  

கல்வி கற்போரை  சுய சிந்தனை உடையவர்களாக ,தனக்கு ஏற்படும் எந்த விதமான பிரச்சனைகளையும் எதிர் கொண்டு தீர்வு காணும் திறமை மிக்கவர்களாக , அரசியல் குறித்து கவனிப்பவர்களாக , சுய வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்பவர்களாக , ஆண் , பெண் என்ற பாலின பேதங்களைக் கடந்து ஒரு பொது வெளியில் இயங்குபவர்களாக ,பெண்களையும் ,சக மனிதர்களையும் ,மற்ற உயிரினங்களையும் தனக்கு இணையாக மதிப்பவர்களாக , இயற்கையின் உன்னதத்தைக் கொண்டாடுபவர்களாக , தனித்துவம் மிக்கவர்களாக , பணம் சம்பாதிப்பதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக மாற்றுவது நமது கல்வி முறையின் நோக்கமாக இருக்க வேண்டும் . பெற்றோரும் ,ஆசிரியர்களும் மற்றும் சமூகமும் இணைந்து தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் .

இதையெல்லாம் சொல்வதற்கு எனக்கு எந்தவித  சிறப்புத் தகுதியும் இல்லை . நானும் ஒரு சமூதாய விலங்கு தான் என்ற தகுதியைத் தவிர ...

மேலும் படிக்க :

 செல்போன் சேவை நிறுவனங்களின் பகல் கொள்ளை !


கழிப்பிடங்கள் எங்கே ?
....................................................................................................................................................................

Tuesday, June 26, 2012

வாடிக்கை மறந்ததும் ஏனோ?


தமிழின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான A.M.ராஜாவின் இசையமைப்பில்  1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கல்யாண பரிசு " என்ற மாபெரும் வெற்றிப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . கல்யாண பரிசு , இயக்குனர் ஸ்ரீதரின் முதல் படம் .இந்தப்படத்தில் இடம்பெற்ற தங்கவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்று வரை ரசிக்கப்படுகின்றன .காதல் ரசம் சொட்ட சொட்ட இந்தப்பாடலை எழுதியுள்ளார்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . இவரே இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார் . A.M.ராஜாவும் சுசீலாவும் இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் . பாடும் திறமையுள்ள இசையமைப்பாளர்களில் A.M.ராஜாவே முதன்மையானவர் .சிறப்பான முறையில் பாடப்பட்ட பாடலிது . 



ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ? _ என்னை
வாட்டிட ஆசை தானோ? _ பல
கோடி மலரழகை மூடிவைத்து மனதைக்
கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை…)

பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ? _ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ? _ புது
மங்கைஎந்தன் மனதில் பொங்கிவரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை…)

ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? _ பல
உயிர்கள் மகிழ்வதும் ஏது? _ நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வைத்
தனித்துப் பெற முடியாது

பெண் : அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா?
அன்புக் கரங்கள் சேரும்போது
வம்பு வார்த்தைகள் ஏனோ?
இன்ப வேகம் தானோ? (வாடிக்கை…)

ஆண் : காந்தமோ இது கண்ணொளி தானோ?
காதல் நதியில் நீந்திடும் மீனோ?
கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ?

பெண் : பொறுமை இழந்திட லாமோ? _ பெரும்
புரட்சியில் இறங்கி லாமோ? _ நான்
கருங்கல்லுச் சிலையோ? காதலெனக் கில்லையோ?
வரம்பு மீறுதல் முறையோ?

இருவர் : சைக்கிளும் ஓடமண் மேலே _ இரு
சக்கரம் சுழல்வது போலே _ அணை
தாண்டிவரும் சுகமும், தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே

இந்தப்பாடல் , பட்டுக்கோட்டையாரின் மற்றுமொரு சிறந்த காதல் பாடலுக்கு உதாரணம் ." இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வைத் தனித்துப் பெற முடியாது" ,"அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா? " ,"காந்தமோ இது கண்ணொளி தானோ? காதல் நதியில் நீந்திடும் மீனோ? ","நான்
கருங்கல்லுச் சிலையோ? காதலெனக் கில்லையோ? வரம்பு மீறுதல் முறையோ? " என்னே அழகான  வரிகள் !

சேர்ந்ததே உறவாலே...!

நன்றி :  http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே ! 

உனக்காக எல்லாம் உனக்காக ..!
......................................................................................................................................................................

Monday, June 18, 2012

பிரியாத பிரியங்கள் ...!

நீ என்னைவிட்டு பிரிந்த பின்பும்
பிரியாத பிரியங்களை என்ன செய்ய
கடலில் கரைத்தேன் மழையாக
பொழிந்து என்னை வந்து சேர்ந்தன
காற்றில் தூவினேன் சுவாசிக்கும் போது
மீண்டும் என்னுள் வந்துவிட்டன
மண்ணில் கலந்தேன் என் வீட்டு தக்காளிச்செடிக்கு
உரமாகி பழமாகி உணவாகி என்னை அடைந்தன
இறக்கைகள் கொடுத்து பறக்க விட்டேன்
சிறகொடிந்து என் வீட்டு மாடியில் விழுந்து விட்டன
நீயே சொல்லிவிடு
உன் பிரியங்களை என்ன செய்ய !

மேலும் படிக்க :

முதல் காதல் !
.................................................................................................................................................................

Sunday, June 17, 2012

அக்னியையும் தாண்டி ...!

தலைப்பைப் பார்த்ததும் இந்தியா நம் வரிப்பணத்தில் பாயவிட்ட அக்னி 5 பற்றியோ அல்லது வராத ,வரக்கூடாத போருக்காக அடுத்து பாயவிட தயாராகும் அக்னி 6 ,அக்னி 7 பற்றியோ எதுவும் சொல்லவரவில்லை . மற்ற அனைத்து ஆராச்சிகளையும் குறைத்துவிட்டு இயற்கைக்குப்  பாதிப்பு இல்லாமல் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் உடனே  செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . விசயத்துக்கு வருவோம் .அக்னி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது குறித்து தான் எல்லா ஊர்களிலும் உள்ள மக்கள் கவலைப்படுகின்றனர் .

அக்னி வெயில் முடிந்த பிறகும் வெப்பம் குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம் ? எளிய காரணங்கள் தான் தென்படுகின்றன . நாம் பள்ளியில் படித்திருக்கிறோம் " ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ; ஆனால் , ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக முடியும் " என்று . நாம பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்களின் பயன்பாட்டின் போதும்  பயன்பாட்டிற்கு பிறகு வெளிவரும் ஆற்றலாக இருப்பது " வெப்ப ஆற்றல் ".

                 மின் ஆற்றல் --> இயந்திர ஆற்றல் --> வெப்ப ஆற்றல்
                 மின் ஆற்றல் --> ஒளி ஆற்றல்  --> வெப்ப ஆற்றல்
                                   
 டிவி ,ரேடியோ ,செல்போன் ,தொலைபேசி ,கணினி ,கிரைண்டர் ,மிக்ஸி ,குளிர்சாதன பெட்டி ,காற்றாடி ,ஒளி விளக்குகள்  போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் மூலம் வெப்ப ஆற்றல் வெளிவருகிறது .

ருசக்கர ,நான்கு சக்கர மற்றும் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களும் வெப்ப ஆற்றலை வெளிவிடுகின்றன .

பூமியிலிருந்து  தண்ணீர் இழுக்க பயன்படும் மின்சார மோட்டார்கள் ,மின்தடைக்கு மாற்றாக பயன்படுத்தும் ஜெனரேட்டர்கள் ,UPS போன்றவையும் வெப்பத்தை வெளிவிடுகின்றன .

ல்வேறு வகையான தொழிற்சாலைகளில் ,பல்வேறு விதமான இயந்திரங்கள் இயக்கப்படுவதன் மூலம் பெருமளவில் வெப்பம் வெளியேற்றப்படுகிறது .  

ரிபொருள் எங்கெல்லாம் எரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வெப்பம் வெளியேறும் . அது பெட்ரோலிய பொருட்களாக இருந்தாலும் சரி , குளுக்கோஸாக இருந்தாலும் சரி வெளிவருவது வெப்பம் தான் . அது போல இயந்திரங்கள் (சிறியது முதல் பெரியது வரை ) எங்கெல்லாம் இயக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வெப்ப ஆற்றல்  வெளிவரும் .

வ்வளவு வெப்பமும் எங்கு போகும் ? பூமில் தான் இருக்கும் .  வாகனங்கள் அதிகம் ஓடும் இடங்களிலும் ,தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது .அதனால் தான் காலநிலையில் பெருமளவு மாற்றங்கள் நடைபெறுகிறது .

ரண்டு தீர்வுகள் தான் தெரிகின்றன . ஒன்று மிதமிஞ்சிய வெப்ப ஆற்றலை வேறு வகை ஆற்றலாக மாற்றுவது ;இரண்டு அதிக அளவில் மரங்கள் நடுவது . மூன்றாவதாக ஒரு தீர்வு உள்ளது .அது பூமியின் கையில் உள்ளது . வலுத்தது நிலைக்கும் ( Survival of Fittest ) என்ற கொள்கையின் படி பூமி ,வெப்ப ஆற்றலைக் கட்டுப்படுத்தி தானாகவே சம நிலைக்குக் கொண்டு வரலாம் .இயற்கையின் போக்கை யாராலும் நிர்ணயிக்க முடியாது .

மற்றபடி சூரியனையும் ,வெயிலையும் திட்டுவதில் எந்தப் பயனும் இல்லை . சூரிய வெப்பம் தேவையானது .சூரியன் இல்லாமல் பூமியில் யாருக்கும் வாழ்க்கை கிடையாது .ஏன் பூமியே கிடையாது . எல்லாவற்றுக்கும் மாற்றுவழி நாம் தான் தேட வேண்டும் . இல்லையேல் இயற்கையின் விளையாட்டை பொறுமையாக ரசிக்கவும் .

பொருத்துக்கொண்டிருக்கும் பூமி என்று பொங்கப் போகிறதோ ..!


மேலும் படிக்க :

 நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

வேடந்தாங்கலில் ஒரு நாள் !
..................................................................................................................................................................

Wednesday, June 6, 2012

முதல் காதல் !

மழையின்               
முதல் துளி
சிட்டுக்குருவியின்
முதல் சிணுங்கல்
மலரை தீண்டும்   
முதல் தென்றல்
சூரியனின்               
முதல் வெளிச்சம்
துளிர் விடும்          
முதல் இலை
வானவில்லின்     
முதல் தரிசனம்
பவுர்ணமி இரவின்
முதல் குளுமை
கடல் அலைகளின்
முதல் நனைத்தல்
நம்  முதல் காதல் !

மேலும் படிக்க :

ஒற்றையடிப் பாதை ! 

கேணியின் ஆயுட்காலம் !
..................................................................................................................................................................

Saturday, June 2, 2012

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

தில் எதுவும் சொல்ல வேண்டாம்
பதிலுக்கு என்னைப் பார்க்கவும்
வேண்டாம்
உன்னைத் தீண்டும் போது
பதிலுக்குப் பதில்
என்னைத் தொட்டுவிடத் தேவையில்லை
பார்வையில் பட்டோ
படாமலோ
அருகிருந்தால் போதும்
என்னை நனைக்கும்
நீரின் ஈரம்
எதற்கும் பதிலாக இல்லை
                                         - தேவதச்சன்

நீங்கள் கவிதை வாசிக்கும் பழக்கம் உள்ளவரா ? இல்லையென்றாலும் பரவாயில்லை , ஒரு முறை தேவதச்சனின் கவிதைகளைப் படித்துப் பாருங்கள் . உங்கள் தினசரி வாழ்க்கையை சுவை மிக்கதாக மாற்றும் வல்லமை அவரது கவிதைகளுக்கு உண்டு .ஒரு நாள் முழுவதும் வாசிப்பதின் மூலம் கிடைக்கும் அனுபவத்தை அவரது ஒரே ஒரு கவிதை கொடுத்துவிடும் .

இதுவரை கவிதைகளின் பக்கம் திரும்பியதில்லை .அவ்வப்போது வாசிப்பின் இடையில் தட்டுப்படும் கவிதைகளை மட்டுமே படிப்பது வழக்கம் .அப்படி வாசித்த கவிதைகளின் வழியே அறிமுகமானவர் தான் " தேவதச்சன் ( Devathachchan )" . ஏனோ இவரது கவிதைகளை மட்டும் மிகவும் பிடித்துப் போனது .அவரது கவிதை தொகுப்புகளை வாங்கி நாளுக்கு ஒரு கவிதை என சுவைத்து வாசிக்கிறேன் . ஆம் , ஒரு நாளுக்கு ஒரு கவிதை போதும் ,அந்தக் கவிதையின் இனிமை அந்த முழு நாளுக்கும் போதுமானது .

எஸ் .ராமகிருஷ்ணன் மொழியில் ( வாழ்க்கையை கரும்பைச் சுவைப்பது போல் சுவைத்து வாழ வேண்டும் ) சொல்வதென்றால் தேவதச்சன் கவிதைகளை கரும்பைப் போல சுவைத்து வாசிக்க வேண்டும் .

வாழ்வின் எளிய கணங்களை அழகாக ,இனிமையாக ,சுவையாக தனது எளிய கவிதைகளின் வழியே வெளிப்படுத்துகிறார் . " ஜென் கவிதைகள் போல் அர்த்தம்  பொதிந்ததாய் தேவதச்சனின் கவிதைகள் இருக்கின்றன " என்று எஸ் .ரா ., குறிப்பிடுகிறார் . தினசரி வாழ்வில் நம் கண்ணில் படும் , நாம் பயன்படுத்தும் , நாம் கற்பனை செய்யும் பொருள்களின் வாயிலாக தான் சொல்ல விரும்புவதை சொல்லும் பேரற்புதத்தை தேவதச்சனால் மட்டுமே செய்ய முடியும் .

தேவதச்சனின் கவிதைகள் எல்லைகள் அற்றதாய் இருக்கின்றன . எந்த வரையறைக்குள்ளும் அவரது கவிதைகள் அடங்குவதில்லை . பிரபஞ்சத்தைப் போலவே அவரது கவிதைகளின் பரப்பை நம்மால் கண்டறிய முடியாது . பூமியில் இருக்கும் அனைத்து பொருட்களும் அவரது கவிதைகளின் பகுதிப் பொருட்களாக இருக்கின்றன .உயிருள்ளவை - உயிரற்றவை ,முக்கியமானவை - முக்கியமற்றவை என்ற பேதமெல்லாம் இல்லை . உதாரணமாக மைனா ,சூரியன்,நீல பலூன்,இலை,மரம்,பாலிதீன் பை ,கடிகாரம் ,காக்கி நிற டப்பா , முரட்டு லாரி , மீன்,கடற்கன்னிகள், லோயா தீவு ,மலை ,ஜெல்லி மீன் , சைக்கிள் பூட்டு ,பிரபஞ்சத்தின் வெளிபிரகாரம் ,சர்க்கஸ் கோமாளிகள் ,புகையிலைப் பொட்டலம் , ஓணான் ,இரும்புக் கிராதி ,நீல நிற இலந்தைப் பழங்கள் , சிறுவண்டுகள் , ஆழத் திமிங்கலம் ,வாலைப் பெண் ,நகப்பூச்சு , கண்ணாடி டம்ளர் , இளம்பெண் துறவி , தேநீர்த் தோழி ,மலர்கள் ,ரகசியக்கல் , அலைபேசி ,டினோசர் ,நகவெட்டி ,புத்தக குவியல்கள் , நிலைவாசல் ,பழச்சாறு , அமரர் ஊர்தி  இவையெல்லாம் " ஹேம்ஸ் என்னும் காற்று " என்னும் தொகுப்பில் இடம் பெற்ற சில வார்த்தைகள்  . 

தேவதச்சனின் கவிதைகளில் சில சாதாரணமாய் வாசிக்கும் போது ஒன்றும் புரியாதது போல் தெரியும் . முதல் வரிக்கும் ,அடுத்த வரிக்கும் தொடர்பு இல்லாதது போல் தெரியும் . ஒரு அழகான செடி இருக்கிறது .செடி என்றாலே அழகு தான் ;அழகான செடி வேறு உள்ளதா என்ன ? (வண்ணதாசன் மொழி ) அதன் இலை ஒரு வித அழகு ,கிளை ஒரு வித அழகு ,மொட்டு ஒரு வித அழகு .
எவ்வளவு அழகான செடி என்றாலும் தேன் என்பது மலரில் மட்டுமே இருக்கும் .ஆனால் தேனை செடியின் எல்லா பகுதிகளிலும் எதிர்பார்ப்பது நம் சமூகத்தின் மிகப்பெரிய முட்டாள்தனம் . நமக்கு எல்லா விசயத்திலும் ஒரு தொடக்கம் ஒரு நிறைவுடன் கூடிய முடிவு தேவைப்படுகிறது . தேவதச்சன் கவிதைகளில் இதை எதிர்பார்க்க முடியாது . நிறைய நல்ல திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு இந்த மனநிலை தான் காரணம் .

கிளிங் என்று
கீழே விழுந்து
உடைகிறது கண்ணாடி டம்ளர்
                     அழகிய இளம்பெண் துறவியைப் போல
                     இருந்த அது
                     அல்லும் சில்லுமாய்
                     உடைந்தாலும்
ஒவ்வொரு துண்டாய்
                     சுத்தம் பண்ணுகையில்
                     விரல் கீறி
                     குருதி கொப்புளிக்கும் என்றாலும்
நீர்மையின் அந்தரங்க ரகசியத்தை
                     போட்டு உடைத்து விட்டது என்றாலும்
இனிமையாகவே இருக்கிறது
ளிங் ஒலி.
ஏனோ நினைவிற்கு வருகிறாள்
என் தேநீர்த்தோழி
                                         - தேவதச்சன்  

எஸ் .ஆறுமுகம் எனும் இயற்பெயர் கொண்ட தேவதச்சன் எழுபதுகளில் ( 1970 ) இருந்து எழுதுகிறார் . மிகக் குறைவாகவே எழுதியுள்ளார் .ஆனாலும்  அனைத்தும் அழுத்தமான பதிவுகள் . விளம்பர வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார் . அழுத்தமான ,ஆழமான மொழிநடை அவருடையிது . தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் . 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அவருக்குக் கிடைத்தது . 


அவரது நூல்கள் :

கடைசி டினோசார்  :


யாருமற்ற நிழல் :


ஹேம்ஸ் என்னும் காற்று :


இரண்டு சூரியன் :


அனைத்து நூல்களையும்  உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது .

அவரது ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன . மொத்தக் கவிதைகளிலும் ஒரு கவிதை கூட மற்றொரு கவிதை போல இல்லை .

லைகள் மலர்கள்
ஒருசில மணிநேரங்களில் வித்தியாசமாகி விடுகின்றன
நீயும் நானும்
சில வருடங்களில்
அதற்குள்
ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாமல்
போய்விடுகிறோம்
அடையாளம் தெரியாமல் போகும்
அடையாளத்தில்
ஒருவருக்கொருவர்
முகமன் கூறிக்கொள்கிறோம்
நமது புன்னகைகளும் கைகுலுக்கல்களும்
குருடர்கள் இல்லைபோலும் , எப்படியோ
அவற்றிற்கு
எப்போதும்
அடையாளம் தெரிந்தேவிடுகிறது
                                          - தேவதச்சன்

தமிழ் கூறும் நல்லுலகின் ( சுஜாதா மொழி ) ஈடு இணையற்ற கவிஞனாக ,   கலைஞனாக , அழுத்தமான படைப்பாளியாகவே தேவதச்சன் தெரிகிறார் .

உரிய மீனுக்காக ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கைப் போல , தேவதச்சனின் புதிய கவிதைகளுக்காக காத்திருக்கிறேன் !



நன்றி - தேவதச்சன் ,உயிர்மை .

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !  

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !  
...................................................................................................................................................................  

Thursday, May 31, 2012

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !


K.V.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் , T.R.ராஜகோபால் இசையமைப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கண் திறந்தது " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .பட்டுக்கோட்டையாரின் எழுத்து வண்ணத்தில் உருவான இன்னுமொரு சிறந்த பாடலிது .

அந்தப் பாடல் :


பாடல் வரிகள் :

ஒருகுறையும் செய்யாமே
ஒலகத்திலே யாருமில்லே _ அப்படி
உத்தமனாய் வாழந்தவனை _ இந்த ஒலகம்
ஒதைக்காம விட்டதில்லை…

இருக்கும் பொழுதை ரசிக்கணும் _ அட
இன்பமாகக் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்கணும் _ நீ
ஏங்கி எதுக்குத் துடிக்கணும்? (இருக்…)

நாளை நாளை என்று பொன்னான
நாளைக் கெடுப்பவன் குருடன்
நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
நலிஞ்சு போறவன் மடையன் _ சுத்த மடையன்
நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
நெனச்சதைச் செய்யிறவன் மனுஷன் (இருக்…)

ஆடி ஓடிப் பொருளைத் தேடி…
அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்…
அதிலே இதிலே பணத்தைச் சேத்து
வெளியிடப் பயந்து மறச்சு வைப்பான்;
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
ஆருக்கும் சொல்லாமப் பொதச்சு வைப்பான்;
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான் _ ஆமா
பொதச்சு வைப்பான் (இருக்…)

நல்ல வழியிலே வாழ நெனச்சு
நாயா அலையாதே _ அது இந்த நாளில் முடியாதே
நரியைப் போலே எலியைப் போலே
நடக்கத் தெரிஞ்சுக்கணும் _ தம்பி
உடம்பு அழுக்கு; உடையும் அழுக்கு!
உள்ளம் அழுக்குங்க _ அதுலேதான் உலகம் கிடக்குங்க _ இது
உமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்
ஒண்ணும் சுத்தமில்லை _ உள்ளதைச்
சொன்னாக் குத்தமில்லை… (இருக்…)

அட ஆமாங்க  "இருக்கும் பொழுதை ரசிக்கணும் , இன்பமாகக் கழிக்கணும் "!

நன்றி :  http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

திண்ணைப் பேச்சு வீரரிடம் !  

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!  

...................................................................................................................................................................

Saturday, May 26, 2012

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !




சிரிப்பு  வருது  சிரிப்பு  வருது
சிரிக்க  சிரிக்க   சிரிப்பு  வருது

சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன்
செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது
சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன்
செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது...

மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு
மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு
கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு
கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு
பணத்தை  எடுத்து  நீட்டு  கழுதை  பாடும்  பாட்டு
ஆசை  வார்த்தை  காட்டு  உனக்கும்  கூட  வோட்டு...

உள்ளே  பணத்தைப்  புட்டி  வச்சி  வள்ளல்  வேஷம்  போடு
உள்ளே  பணத்தைப்  புட்டி  வச்சி  வள்ளல்  வேஷம்  போடு
ஒளிஞ்சி  மறைஞ்சி  ஆட்டம்  போட்டு  உத்தமன்  போல்  பேசு
ஒளிஞ்சி  மறைஞ்சி  ஆட்டம்  போட்டு  உத்தமன்  போல்  பேசு
நல்ல  கணக்கை  மாதி  கள்ளக்  கணக்கை  ஏத்தி
நல்ல  நேரம்  பாத்து  நண்பனையே  மாத்து...



1964 ஆம் ஆண்டு M.S.விசுவநாதன் -ராமமூர்த்தி இசையமைப்பில் வெளிவந்த  " ஆண்டவன் கட்டளை " என்னும் திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . இந்தப்பாடலை எழுதியவர் கண்ணதாசன் . பாடியவர் சொல்லித் தெரியவேண்டியதில்லை , காலத்தைக் கடந்தும் எல்லோராலும் ரசிக்கப்படும் குரலுக்குச் சொந்தக்காரரான சந்திரபாபு .

இந்தப்பாடல் எளிமையாக , வித்தியாசமாக அதே சமயம் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது . சந்திரபாபுவின் உடல்மொழி மிகவும் ரசிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது . இந்தப்பாடலின் வரிகள் அரசியல்வாதிகளையும் ,பொய்க்கணக்கு காட்டி அரசை ஏமாற்றும் பணமுதலைகளையும் நேரடியாக சாடுகின்றன . பெரிய மனுசன் என்னும் போர்வையில் இருந்துகொண்டு மிகக் கீழ்த்தரமான் செயல்களைச் செய்பவர்களையும் கேலி செய்கிறது இந்தப்பாடல் .

ஒரு அரசியல்வாதி ஒரு ஆண்டு முழுக்க கொடுத்த பேட்டிகளை ஒரு முறை தொகுத்து படித்துப்பாருங்கள் , உங்களுக்கு அவ்வளவு சிரிப்பு வரும் . நம்மை எவ்வளவு எளிதாக ஏமாற்றி உள்ளனர் என்பதும் புரியும் .

ஈழத்தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு காரணமாக இருந்துவிட்டு , தனி ஈழம் சாத்தியமில்லை என்று சொல்லியவர் தற்போது தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்று சொல்லும் போது சிரிப்பு வருது !

ஒரு நாளைக்கு 28 ரூபாய் மேல் சம்பாதிப்பவர்கள் ஏழை அல்ல என்று சொல்லும் மத்திய அரசை நினைத்துச்  சிரிப்பு வருது !

இடைத்தேர்தலுக்கு முன்பு வரை கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டாம் என்று சொல்லியவர் ,இடைத்தேர்தலுக்கு பின் கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படும் ;தயாராகும் மின்சாரம் நிறைய வேண்டும் என்று சொல்லும்போது சிரிப்பு வருது !

நாட்டில் ,உலகில் ,பிரபஞ்சத்தில் எவ்வளவோ விசயங்கள் நடந்து இருக்கும் போது சம்பந்தமே இல்லாத விசயத்தை தலைப்பு செய்தியாக போடும் நாளிதழ்கள் மற்றும் வாரயிதழ்களைப் பார்க்கும் போது சிரிப்பு வருது !

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களைப் பார்க்கும் போது அவ்வளவு சிரிப்பு வருது ! புதிதாக சின்னத்திரை நடிகர் நடிகைகள் அசத்தும் புதிய விளம்பரங்களான " சென்னைக்கு மிக அருகில் ...." என்று ஆரம்பிக்கும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. 1980 களில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் ஒரு காட்டுப்பகுதியை பார்த்து கவுண்டமணி பேசும் வசனம் " இங்க இப்படி ஒரு இடம் இருக்கா , எங்க ஆளுகளுக்குத் தெரிஞ்சா " சென்னைக்கு மிக அருகில் " னு பிளாட் போட்டு வித்துருவாய்ங்க " . 30 வருடங்களுக்குப் பிறகும் நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம் !

இதற்கு முன்பு வரை இந்திய ஜனாதிபதி பதவி ஒன்றுக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று தான் நினைத்தேன் . இப்போது தான் தெரிகிறது 200 கோடி ரூபாய் வரை மக்கள் பணத்தில் ஊர் சுற்றும் உரிமை உள்ள பதவி என்று . இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும் " 28 ரூபாய் சம்பாதிப்பவர் ஏழை அல்ல " அதே சமயம் எந்த அதிகாரமும் இல்லாத நாட்டின் முதல் குடிமகன்/ குடிமகள் 200 கோடி வரை செலவு செய்யலாம் . சிரிப்பு வருது !

டாஸ்மாக் வருமானத்தில் இலவசங்கள் கொடுக்கும் அரசுகளை நினைக்கும்போது  சிரிப்பு வருது ! இதில் புதிய வகை மதுவுக்கு செயல் விளக்கப் பயிற்சி வேறு கொடுக்கப்படுகிறதாம் .ஒசத்தியான சரக்கு விக்க எலைட் பார் வேறு வருதாம் .அப்படியே ஒவ்வொரு டாஸ்மாக் பக்கத்திலையும் ஒவ்வொரு  காவல் நிலையம் கொண்டு வந்தா பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் . மாதக் கடைசியில் காவலர்கள் வழக்கு பதிவு செய்ய சந்து சந்தாக நிக்க வேண்டிய நிலைமையும் வராது . 

இதையெல்லாம் நினைக்கும் போது என்னை நினைத்து எனக்கே சிரிப்பு வருது !உலகத்த விட்டுடுவோம் . நீங்க கடைசியா எப்ப வாய் விட்டு சிரிச்சீங்க ??? ( நான் "கலகலப்பு" படம் பார்க்கும் போது வாய் விட்டு கண்ணில் நீர் வரச் சிரித்தேன் )  வாய் விட்டு  சிரிக்கும் தருணங்கள் குறைந்து வருகின்றன . வாய் விட்டு  சிரிக்கும் தருணங்களை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்  . எளிமையான மனதைப் பெற்றால் மட்டுமே நம்மால் வாய் விட்டு சிரிக்க முடியும் .

சிரிப்பு வருது !
      
மேலும் படிக்க :


உண்மையான கொண்டாட்டம் !

Friday, May 18, 2012

விகடன் வரவேற்பறையில் !

கடந்த 4 வருடங்களாக ஆனந்த விகடனை தொடர்ந்து படித்து வருகிறேன் . நிறைய விசயங்களை ஆக்கப்பூர்வமாக பதிவு செய்கிறது . விகடன் மூலம் நான் பெற்றவை அதிகம் . ஏன் ப்ளாக் (வலைப்பூ ) எழுதுவது கூட விகடனிடம் இருந்து பெற்றது தான் . 2009 ஆண்டே வலைப்பூ எழுத தொடங்கி பிறகு  நிறுத்திவிட்டேன் . மீண்டும் வலைப்பூ எழுத காரணம் விகடன் . விகடனின் எனர்ஜி பக்கங்களில் வலைப்பூ பற்றிய தெளிவான கட்டுரை படித்த பிறகு தான் மீண்டும் வலைப்பூ எழுத ஆரம்பித்தேன் . Blog aggregator பற்றி விகடன் கட்டுரை மூலம் தான் தெரியும் .ஓவ்வொரு முறையும் விகடன் வரவேற்பறை பார்க்கும் போது நமது வலைப்பூ  இதில் இடம் பெறாதா என்று ஏங்கியதுண்டு .இப்பொழுது விகடன் (16-05-12) வரவேற்பறையில் எனது வலைப்பூ வந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது . "  மரம் வெட்டுங்கள் " கட்டுரை  என் சொந்த கட்டுரை அல்ல . விகடனின்  பாராட்டு  அந்தக்  கட்டுரையை எழுதியவருக்குப் போய் சேரட்டும் .




இதில் சிறு வருத்தம் என்னவென்றால் கடந்த இரண்டு மாதங்களாக நான் விகடன் வாங்குவதில்லை .அதனால் எனது blog விகடனில் வந்தது 14-05-12 அன்று தான் தெரியும் .தற்போது " வட்டியும் முதலும் " பகுதி மட்டுமே பயனுள்ளதாக உள்ளது . எப்படியும் " வட்டியும் முதலும் "  தனிப் புத்தகமாக வந்துவிடும் அப்போது படித்துக் கொள்ளலாம் என்று இப்போது விகடன் வாங்குவதில்லை . அட்டைப்படத்தில் சினிமா நடிகர் நடிகைளைப் பார்க்கும் போது எனக்கு அவ்வளவு கோபம் வருகிறது . சினிமா , அரசியல் தவிர்த்து வாழ்க்கையே இல்லையா . முன்பை விட இப்பொழுது அதிக சினிமா ,அரசியல் செய்திகளை விகடன் வெளியிடுகிறது . அரசியல் , சினிமா பற்றி எழுதுவதில் தவறில்லை . சினிமாக்காரர்கள் பற்றியும் , அரசியல்வாதிகள் பற்றியும் அதிக செய்திகள் வருவது தான் நெருடலாக உள்ளது . சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் பேட்டிகள் இடம் பெறாத வார இதழ்கள் இல்லவே இல்லை . இன்பாக்ஸ் , வலைபாயுதே என்று எங்கு பார்த்தாலும் அரசியல் ,சினிமா தலைகள் தான் தெரிகின்றன .  தயவு செய்து சினிமா மற்றும் அரசியல் சார்ந்தவர்களை மட்டும் அட்டைப்படத்தில் போடாதீர்கள் . சமூகத்தில் வாழும்  அனைவருக்கும் வாய்ப்பு  கொடுங்கள் . அரசியல் அல்லது  சினிமாவுக்கு வந்தால் மட்டுமே புகழ் பெறலாம் என்ற மாயத் தோற்றத்தை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்குகின்றன .

நன்றி - விகடன் .

மேலும் படிக்க :

 ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் ! 
..................................................................................................................................................................



Friday, May 11, 2012

ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் !

ஊடகங்கள் அரசின் கைப்பிள்ளையாகவே செயல்படுகிறது . அரசிற்கு சாதகமான விசயங்களில் மட்டுமே அநேக ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன . ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதெல்லாம் சும்மா . எந்த முக்கியத்துவம் வாய்ந்த விசயத்தையும் மக்களை எளிதில் மறக்கச் செய்யும் வேலையை ஊடகங்கள் சரியாகச் செய்கின்றன .ஒரு பத்து நாளைக்கு தொழில் செய்ய ஊடகங்களுக்கு எதாவது விசயம் தேவை அவ்வளவு தான் .

அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டதை வைத்து நிறைய பேர் விளம்பரம் தேடிக்கொண்டனர் .சேர்க்கை நேரம் என்பதால்  அவர் படித்த கல்லூரி அவரது பழைய புகைப்படங்களை தேடி எடுத்து செய்திதாள்களில் தினமும் பிரசுரித்தது . விகடன் எங்களது பழைய மாணவ பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொண்டது . பேஸ்புக்கில் இருப்பவர்கள் எனது நண்பனின் நண்பன் ,அலெக்ஸ் பால் மேனன் என்றனர் . இவ்வாறு அவரை வைத்து நிறைய பேர் புகழ் அடைந்தனர் . அலெக்ஸ் பால் மேனன் குறித்து இவ்வளவு செய்திகளை சேகரித்தவர்கள் , அவரை காப்பதற்காக உயிரிழந்த பாதுகாவலர்கள்  பற்றி இவ்வளவு செய்திகளை ஏன் சேகரிக்கவில்லை ?

இங்கு நாம் கவனிக்க வேண்டியது , ஒரு மாவட்ட ஆட்சியர் அதாவது ஒரு உயர் அரசு அதிகாரி கடத்தப்பட்டுள்ளார் .அலெக்ஸ் பால் மேனன் இடத்தில் யார் இருந்திருந்தாலும் கடத்தப்பட்டு தான் இருப்பார்கள் . மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம் அலெக்ஸ் பால் மேனன் அவர்களைக் கடத்துவது அல்ல . அவர்களின் நோக்கம் ஒரு மாவட்ட ஆட்சியரைக் கடத்துவது .ஏன் ஒரு மாவட்ட ஆட்சியரைக் கடத்த வேண்டும் ? தொடர்ந்து அரசு அதிகாரிகளும் , சுற்றுலாப் பயணிகளும் கடத்தப்படுவதற்கு என்ன காரணம் ? மீண்டும் இதுபோல் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடாமல் ஒட்டு மொத்த ஊடகங்களும் மையம் கொண்ட ஒரு புள்ளி " அலெக்ஸ் பால் மேனன் " . அலெக்ஸ் பால் மேனன் பற்றிய தகவல்களைப் பரப்பவே நேரம் எடுத்துக்கொண்டனர் . அவரை வைத்து 12  நாட்களுக்கு தொழில் செய்தனர் அவ்வளவுதான் .

அரசியல் தொழில் செய்பவர்களின் அத்துமீறல்கள் தான் அனைத்திற்கும் காரணம் . இயற்கையைப் பற்றியோ , பல நூற்றாண்டுகளாக இயற்கையை நம்பி வாழும் மக்களைப் பற்றியோ எந்த புரிதலும் , கவலையும் இல்லாமல் நாடெங்கும் பரவியிருக்கும் கனிம வளங்களை பணம் பண்ணுபவர்களுக்கு பிடுங்கி கொடுக்கும் வேலையை மிகத் தெளிவாக செய்து வருகின்றனர் , அரசியல் தொழில் செய்பவர்கள் . அதனால் , இரு வகையான இனங்கள் பாதிக்கப்படுகின்றன . ஒன்று கேள்வி கேட்கத் தெரியாத விலங்கினம் ( வன விலங்குகள் மற்றும் உயிரினங்கள் ) , மற்றொன்று கேள்வி கேட்கத் தெரிந்த விலங்கினம் ( மனிதர்கள் ).

புலி ,சிறுத்தை , யானை ,காட்டெருமை போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கு காரணம் , நாம் மட்டுமே . காடுகளின் பரப்பளவு குறைவதால் தான் அவை ஊருக்குள் வருகின்றன . தமிழ்நாட்டில், வால்பாறைப் பகுதியில் அவ்வப்போது சிறுத்தையோ ,யானையோ வருவதற்கு காரணம் , மலையின் உச்சிப் பகுதியில் நிறைய மரங்கள் வெட்டப்பட்டு தேயிலை எஸ்டேட்களாக மாற்றப்படுவது தான் .நாம் சிறுத்தைகளின் இடத்தைப் பிடிக்கும் போது சிறுத்தை நம் இடத்தை நோக்கி வர உந்தப்படுகிறது .சிறுத்தைகளைக்   குற்றம் சொல்வதில் நியாயம் இல்லை . இந்த பூமியில் வாழ நமக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை சிறுத்தைக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு . பூமி எல்லோருக்கும் சொந்தம் .

கேள்வி கேட்கும் விலங்குகளாக பழங்குடியின மக்கள் , மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் . அவர்களுக்கான நீதி மறுக்கப்படும் போது ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள் . ஆயுதம் என்றவுடன் 5000 மையில் தூரம்  அணுகுண்டுகளைக் தூக்கி சென்று தாக்கும் அக்னி-5 என்று நினைத்துக்கொள்ளக் கூடாது . வருகிற வருவாயில் அதிக பணத்தை ராணுவத்திற்காக செலவழித்த பிறகும் ஆயுதம் போதவில்லை என்று சொல்லும் இந்திய அரசையும் நீங்கள் நினைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் . மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம் சுவிஸ் வங்கியில் பணம் சேர்ப்பது அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மக்களின் உதவியுடன் மக்களுக்காகவே போராடுகின்றனர் , அவர்களின் போராடும் முறை தான் தவறு .

நாட்டில் வாழும் உரிமை உள்ளவர்கள் ( பொதுமக்கள் ) தங்கள் கோரிக்கைகள்  நிறைவேற சாலை மறியலோ ,உண்ணாவிரதமோ செய்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் . உரிமை மறுக்கப்பட்டவர்கள் ( மாவோயிஸ்ட்டுகள் ) அரசு அதிகாரிகளைக் கடத்தி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு இயந்திரத்தைத் தூண்டுகின்றனர் . கடந்த நான்கு மாதங்களில் நிறைய அரசு அதிகாரிகள் நாடெங்கிலும் கடத்தி விடுவிக்கப்பட்டுள்ளனர் , யாரும் கொல்லப்படவில்லை , கடத்தலை தடுத்தவர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் . யாரையும் கொல்வது குற்றம் தான் . ஆனால் ,மக்களைக் காக்கிறோம் என்ற பெயரில் அரசின் முதல் அடியே கொலை தான் .அந்த கொலைக்கு பெயர்  " என்கவுன்டர் " ," பசுமை வேட்டை " . அரசின் நடவடிக்கைகளால் நாடெங்கிலும் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் எண்ணிக்கை ஏராளம் . சொந்த மக்களை ஒடுக்குவதில் இலங்கையும் இந்தியாவும் ஒன்று தான் போல . தங்களை யாரும் எந்தக் கேள்வியையும் கேட்கக் கூடாது என்று தான் உலகெங்கிலும் உள்ள அதிகார வர்க்கம் நினைக்கிறது .இதில் சீனா , இலங்கை , அமெரிக்கா ,இந்தியா என்ற பேதமெல்லாம் இல்லை . இந்த விசயத்தில் எல்லா நாடுகளும் ஒன்று தான் .

அரசிடம் நேர்மை என்பதே இல்லை . ஏனெனில் அதன் அங்கத்தினருக்கு நேர்மை என்பது அவசியமில்லை . வெட்கமே இல்லாமல் எப்படியெல்லாம் மக்கள் பணத்தை மக்களுக்கு பயன்படுத்தாமல் சுகபோகமாக வாழலாம் என்பது மட்டுமே முக்கியம் . மற்றதெல்லாம் அவசியமில்லை . மாவோயிஸ்ட்டுகளிடம் நேர்மை இருக்கிறது ,வீரப்பனிடமும் நேர்மை இருந்தது . வீரப்பன் இருக்கும் வரை , அவர் இருப்பதாக சொல்லப்படும் அனைத்து வனப்பகுதிகளும் வன அதிகாரிகள் இல்லாமலேயே மிகவும் பாதுகாப்பாக இருந்தன .அவர் இறந்த பிறகு நிலைமை தலைகீழ் . அவர் இருந்த பகுதிகளில் தற்போது வனம் பாதிக்கப்பட்டுள்ளது . இதே போல் தான் உலகெங்கிலும் , எங்கெல்லாம் போராட்டக்குழுக்கள் உள்ளனவோ அங்கெல்லாம் வனம் காக்கப்படுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது .

வனம் காக்கப்படுவது தான் அரசுகளுக்கு பிடிக்கவில்லை . ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஒவ்வொரு  மாநிலமாக விலை பேசி வருகிறார்கள் . அதற்குத்  தடையாக இருப்பவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் . நியாயமான முறையில் உண்ணாவிரதம் இருந்தாலும் ( கூடங்குளம் ) கண்டுகொள்வதில்லை . ஆயுதம் எடுத்தாலும் கண்டுகொள்வதில்லை . எங்கள் உரிமைகளுக்காக வேறு எப்படித் தான் நாங்கள் போராடுவது ? 

பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டே நிறைய ஊடகங்கள் இயங்குகின்றன . அவை , மக்கள் மத்தியில் ஒரு மாய உலகை காட்சிக்கு வைக்கின்றன . உண்மைகள் அனைத்தும் லாவகமாக மறைக்கப்படுகின்றன . தொடர்ந்து மக்களை சுயநலம் மிக்கவர்களாக மாற்றுகின்றன . எந்த விசயத்திலும் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதற்கு தேவையான அனைத்தும் ஊடகங்கள் மூலம் செய்யப்படுகின்றன .

அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஊடகங்கள் வெளியே வர வேண்டும் . கடவுளே ( இருக்காரா? இல்லையா ?)  உண்மையான  நேர்மையான ஊடகம் எது என்று எனக்கு அடையாளம் காட்டு .... ஐயோ கரன்ட் போச்சே !!!  


மேலும் படிக்க :

சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !
....................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms