Monday, September 24, 2012

" இந்தியா " - சர்வாதிகாரிகளின் தேசம் !

எத்தனையோ விதமான சர்வாதிகாரிகள் வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது . உலகில் இருந்து இன்னும் சர்வாதிகாரிகள் முற்றிலும் அழிந்துவிடவில்லை . காலத்துக்கேற்ற மாற்றம் பெற்று முன்னை விட வலுவாகவே வாழ்ந்து வருகிறார்கள் . உலகமயமாக்கம் சர்வாதிகாரத்திற்கு துணை போகிறது .இன்று சர்வாதிகாரிகளுக்குத்தான் மரியாதை . அரசாங்கத்தை விலைக்கு வாங்கி தான் நினைத்ததையெல்லாம் நடத்திக் காட்டுகிறார்கள் ,நவீன சர்வாதிகாரிகள் .

நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தடுத்த உறுப்பினர் முதல் அரசாங்க அதிகாரிகள் ,ஆட்சியாளர்கள் வரை எல்லோரும் சர்வாதிகாரிகளாகத்தான் செயல்படுகிறார்கள் . யாரைப் பற்றியும் எந்தவிதக் கவலையும் இல்லாமல் ,தன் சுயநலத்திற்காக தான் நினைத்ததை செய்து காட்டும் குணமுடைய அனைவரும் சர்வாதிகாரிகள் தான் .நம் குடும்ப உறுப்பினராக இருக்கலாம் ,முதல்வராக இருக்கலாம் ,பதவியில் இருக்கும் பொம்மைகளாகக்கூட இருக்கலாம் , அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்து சர்வாதிகாரத்தின் பாதிப்பு இருக்கும் . முதல்வரோ ,பிரதமரோ ,பிரதமர் போல செயல்படும் பொம்மையோ சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டால் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் .

சமீபத்தில் இந்தியாவில் நடந்து வரும் நிகழ்வுகள் ,விதவிதமான ஊழல்கள் பற்றி நம்மவர்கள் கொடுக்கும் பேட்டியின் மூலம் அவர்களது சர்வாதிகாரம் வெளிப்படுவதை வெளிப்படையாகக் காணலாம் .மக்களாட்சித் தத்துவம் மறைந்தே விட்டது . புதிய தத்துவம் தான் இன்று ஆட்சியாளர்களால் கடைபிடிக்கப்படுகிறது .அது ," பணக்காரர்களுக்காக பணக்காரார்களால் நடத்தப்படும் பணக்காரர்களின் அரசு " என்பதாகும் . ஒரு ஊழலை மறைக்க இன்னொரு ஊழல் ,அதை மறைக்க மக்கள் மீது பொருளாதார அடி .காந்தி தேசம் என்று சொல்லிக்கொள்ளும் நாட்டில் காந்திய வழிப் போராட்டத்திற்கு எந்தவித மதிப்பும் ,கவனமும் ஆளும் அரசுகளால் கொடுக்கப் படுவதில்லை .

மக்களின் போராட்டம் அனைத்து இடங்களிலும் முடக்கப்படுகிறது ,ஊடகங்களால்  மறைக்கப்படுகிறது .பணக்காரர்களுக்கு வேண்டிய அனைத்தும் தாராளமாகச் செய்யப்படுகிறது .அவர்களுக்கு இயற்கை வளங்கள் தாரைவார்க்கப்படுகிறது .அவர்களுக்காக பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது .காரணம் ,நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களும் அவர்களின் பகாசுர நிறுவனங்களும் தேவையாம் . கிராமத்தில் 28 ரூபாயும் ,நகரத்தில் 32 ரூபாயும் சம்பாதிப்பவர்கள் தேவையில்லை . அவர்களுக்கு கடனும் கிடைக்காது .மக்களின் நிலை பற்றி துளியும் கவலைகொள்ளாத ஆட்சியாளர்களை நம் காலத்தின் அவலம் . " மக்கள் தொடர்ந்து ஊழல்களை சகிப்பார்கள் " என்று அரசியல்வாதிகள் நம்பினால் இழப்பு அவர்களுக்குத்தான் . இந்நிலை தொடர்ந்தால் லிபியா ,எகிப்து ,துனிசியா ,ஏமன் போல இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் சூழல் உருவாகும் . அப்படி ஒரு நிலை வராமல் தடுக்க வேண்டியது இன்றைய ஆட்சியாளர்களின் கடமை .

பணக்காரர்களிடம் பணத்தை வாங்கி தேர்தலின் போது மட்டும் மக்களுக்கு கொடுத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எல்லா ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள் . மக்களை ரொம்ப நாட்களுக்கு ஏமாற்ற முடியாது . ஆட்சியாளர்களின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் . சிறு நெருப்பு அவர்களை உசுப்பேத்திவிடும் . மக்களின் அறவழிப் போராட்டம் தொடர்ந்து ஒடுக்கப்படுமானால் நிச்சயம் ஒரு நாள் புரட்சி வெடிக்கும் .

எல்லோருக்கும் ஒரு உயிர் ,ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது .பூமி எல்லோருக்கும் சொந்தம் !  



மேலும் படிக்க :

 சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 

...................................................................................................................................................
    

Saturday, September 8, 2012

பனை மரத்தில் முளைத்த ஆலமரம் !


Saturday, September 1, 2012

ஜோடிப் பாடலும் பிரிவுப் பாடலும் !

தினமும் எவ்வளவோ பாடல்களைப் பார்க்கிறோம் அல்லது கேட்கிறோம் . எந்தப் பாடலும்  பார்க்காமலோ அல்லது கேட்காமலோக் கூட இருக்கலாம் . ஆனால் ,பிடித்த பாடல் என்பது எல்லோருக்கும் இருக்கும் . இதுவரை எத்தனையோ பாடல்கள் கேட்டாலும் ,பிடித்த ஜோடிப் பாடல் என்றவுடன் என் காதுக்குள் கேட்கும் பாடலாக இருப்பது "வசந்த மாளிகை" திரைப்படத்தில் இடம்பெற்ற "மயக்கமென்ன இந்த மெளனம் என்ன ..." என்ற பாடல் .1973 ஆண்டு வெளிவந்த இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் K .V .மகாதேவன் . இந்தப் பாடலில் இடம்பெற்ற கவிரசம் ததும்பும் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் . இந்தப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதினார் .

அந்தப் பாடல் :


தேர்  போலே  ஒரு  பொன்  ஊஞ்சல்
அதில்  தேவதை  போலே  நீ  ஆட

பூவாடை  வரும்  மேனியிலே
உன்  புன்னகை  இதழ்கள்  விளையாட

கார்காலம்  என  விரிந்த  கூந்தல்
கன்னத்தின்  மீதே  கோலமிட

கை  வளையும்  மை  விழியும்
கட்டியணைத்து  கவி  பாட

அன்னத்தைத்  தொட்ட  கைகளினால்
மதுக்  கிண்ணத்தை  இனி  நான்  தொட  மாட்டேன்

கன்னத்தில்  இருக்கும்  கிண்ணத்தை  எடுத்து
மதுவருந்தாமல்  விட  மாட்டேன்

உன்னையல்லால்  ஒரு  பெண்ணை  இனி  நான்
உள்ளத்தினாலும்  தொட  மாட்டேன்  -

உன்  உள்ளம்  இருப்பது  என்னிடமே
அதை   உயிர்  போனாலும்  தர  மாட்டேன்

என்னே அற்புதமான வரிகள் ! கண்ணதாசன் கண்ணதாசன் தான் !

காதலில் ஒரு நிமிடப் பிரிவைக்கூட தாங்கி கொள்ளமுடியாதுனு சொல்றாங்க  . அந்தப் பிரிவின் வழியை அழுத்தமாக பதிவு செய்த பாடலாக இருப்பது "படகோட்டி " படத்தில் இடம்பெற்ற " பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ ..." என்ற பாடல் . கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட சிறந்த பாடலிது . 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படத்திற்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் . 

அந்தப் பாடல் :


பாட்டுக்குப்  பாட்டெடுத்து  - நான் 
பாடுவதைக்  கேட்டாயோ 
துள்ளி  வரும்  வெள்ளலையே  - நீ  போய்த் 
தூது  சொல்ல  மாட்டாயோ 

கொத்தும்  கிளி  இங்கிருக்க  கோவைப்பழம்  அங்கிருக்க 
தத்தி  வரும்  வெள்ளலையே  நீபோய்  தூது  சொல்ல  மாட்டாயோ

ஆசைக்கு  ஆசை  வச்சேன்  நான்  அப்புறந்தான்  காதலிச்சேன் 
ஓசையிடும்  பூங்காற்றே  நீதான்  ஓடிப்போய்  சொல்லிவிடு 

நெஞ்சு  மட்டும்  அங்கிருக்க  நான்  மட்டும்  இங்கிருக்க 
நான்  மட்டும்  இங்கிருக்க ...நான்  மட்டும்  இங்கிருக்க 

தாமரை  அவளிருக்க   இங்கே  சூரியன்  நானிருக்க 
சாட்சி  சொன்ன சந்திரனே  நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ 


வாலியின் சிறந்த வரிகள் . இந்தப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் வாலியே எழுதினார் . வாலிக்கு நல்ல பேரைப் பெற்றுத்தந்த படமிது . அதிலும் தரைமேல் பிறக்கவைத்தான் பாடல் , மீனவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்தது .

ஜோடிப்பாடல்,பிரிவுப் பாடல் இரண்டையும் பாடியவர்கள் T.M.செளந்தர்ராஜன் மற்றும் P .சுசீலா .T.M.செளந்தர்ராஜன் அவர்களின் மாறுபட்ட பாடும் திறமைக்கு இந்தப் பாடல்களும் சிறு உதாரணங்கள் .இந்தப் பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது . ஆனால் , எனக்குப் பிடிக்கும் .

மேலும் பார்க்க :

உலகத்தின் தூக்கம் கலையாதோ ?  

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே !  

...................................................................................................................................................

Tuesday, August 21, 2012

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

நாடோடிகளாக அலைந்து திரிந்த மனித இனம் ஒரே இடத்தில் தங்கி நாகரிக வாழ்க்கை வாழ வழிவகுத்த முதன்மைத் தொழில் தான் "விவசாயம் " . விவசாயத்தின் இன்றைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது .விவசாயம் இவ்வளவு மோசமான நிலையை அடைந்த பிறகும் எந்தவிதமான ஆதரவும் இல்லாமல் நிர்கதியாய் நிற்கிறான் விவசாயி . தொழில்துறைக்கும் ,சேவைத்துறைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் விவசாயத்திற்கு கொடுக்கப்படவில்லை .விளைவு ,விவசாய நிலம் சுருங்கி விட்டது ; விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது ;விலைவாசி உயர்ந்துவிட்டது .
அரசு , தொழில்துறை வளர்ச்சிக்கும் , சேவைத்துறை வளர்ச்சிக்கும் கொடுக்கும் சலுகைகளால் நேரடியாக வருமானத்தைப் பெறுகிறது . ஆனால் ,விவசாயத்திற்கு  கொடுக்கும் சலுகைகளால் அரசிற்கு நேரடியாக வருமானம் கிடைப்பதில்லை . அதனால் விவசாயம் ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது .வளர்ச்சியின் பெயரால் விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன .விவசாயம் செய்யத் தெரிந்த மனிதர்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது . விவசாயம் செய்ய ஏறக்குறைய 60 கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் (உழுதல் ,விதைத்தல் ,நீர் பாய்ச்சுதல் ,களை பறித்தல் ,அறுவடை செய்தல்......) தெரிந்திருக்க வேண்டும் . பரம்பரை பரம்பரையாக சொல்லிக்கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் இன்று பாதி தான் மிச்சம் இருக்கிறது . அதையும் கற்றுக்கொள்ள இன்று ஆட்கள் இல்லை .

விதை இழப்பு அடுத்த காரணம் . தலைமுறை தலைமுறையாக தங்கள் உயிரை விட மேலானதாக பாதுகாத்து வைக்கப்பட்ட பல்வேறு விதமான விதை வகைகளை இழந்துவிட்டோம் . நெல்லில் மட்டும் நூற்றுக்கணக்கான நெல் ரகங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது . இன்று அவற்றில் பத்து ரகங்கள் இருந்தாலே ஆச்சரியம் தான் . நெல்லில் மட்டும் இவ்வளவு இழப்பு மற்ற தானியங்கள் புழக்கத்தில் இல்லாத அளவிற்கு மறைந்து விட்டன . இன்று விவசாயம் செய்ய வேண்டுமானால் விதையை அங்காடியில் தான் வாங்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது . பசுமைப் புரட்சியின் விளைவு இது .

பாரம்பரிய தானிய வகைகள் அழிந்து போக பசுமைப்புரட்சி தான் முக்கிய காரணம் . மரபு விதைகளை அழித்தது, மகசூல் அதிகரிக்கச் செய்தல் என்ற பெயரில் மீண்டும் முளைக்காத கலப்பின விதைகளை அறிமுகப்படுத்தி மண்ணின் வளத்தைக் கெடுத்தது , விதவிதமான பூச்சி மருந்துகள் மூலம் மண்ணை நஞ்சாக்கியது ,பயிர்களுக்கும் ,மனிதர்களுக்கும் விதவிதமான நோய்களை உருவாக்கியது ,சுயசார்பு  வேளாண்மையை அழித்தது , விவசாயத்தை வணிகம் சார்ந்ததாக மாற்றியது  இவைதான் பசுமைப் புரட்சியின் சாதனை என்பது .  அன்றைய சூழலைச் சமாளிக்க உதவிய பசுமைப்புரட்சி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது .

தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்தவர்களின் இன்றைய தலைமுறை விவசாயம் செய்யவில்லை ;வேறு வேலைகளைத் தேடிக்கொண்டு நகர்புறங்களுக்குச் சென்று விட்டனர் . விவசாயம் செய்வது என்பது சமூகத்தில் மிகவும் மதிப்புக் குறைந்த தொழிலாக மாறிவிட்டது .தங்கள் குழந்தை  எதிர்காலத்தில் ஒரு விவசாயியாக வர வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை . ஏன் ஒரு விவசாயியே தன் குழந்தை விவசாயம் செய்வதை விரும்பவில்லை .காரணம் , விவசாயத்தைப் பாதித்துள்ள பல்வேறு விதமான காரணிகள் .

விவசாயம் தொடர்ந்து செய்வதால் ஏற்படும் வருவாய் இழப்பு .தொடர்ந்து விவசாயம் செய்ய தடையாக இருக்கிறது . கடந்த வாரம் ஒரு விவசாயி சொன்னார், " கடந்த வருடம் மட்டும் 3 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது . விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை .ஆட்கள் கிடைத்தாலும் 150 ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் வேலையாவதில்லை ,அதனால் இந்த வருடம் எதுவும் பெருசா பண்ணல .இருக்கும் இடங்களில் தென்னை மற்றும் நெல்லி மரங்களை நட்டுவிட்டேன் .விவசாயத்தை விட மனசில்லை ஆனாலும் என்ன செய்ய ,மகன்கள் வெளியூரில் தங்கிவிட்டனர்,பாடுபட ஆள் இல்லை  " .இன்றைய நிலை இது தான் .

காலநிலை மாற்றங்களால் சரியான நேரத்தில் மழை பெய்வதில்லை . உதாரணமாக  ஆடி மாதத்தில் மழை பெய்யும் ,எதாவது விதைக்கலாம் என்று காத்து இருந்த வானம் பார்த்த பூமிக்காரர்கள் ,மழை பெய்யாததால் ஏமாந்து போயினர் . மிதமிஞ்சிய வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது .பயிர் அறுவடை நேரத்தில் பெய்யும் மழை விவசாயியை கடனாளியாக்குகிறது . கிணற்றில் நீர் அதிகம் உள்ள நிலங்களில் விவசாயம் பார்க்க ஆட்கள் இல்லை . மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் விளைவாக விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை .

விவசாயத்தில் மட்டுமல்லாமல் ,எந்த வேலையிலும் உடலுழைப்பு சார்ந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை . எல்லோரும் வியர்வை சிந்தாமல் சொகுசாக வாழ விரும்புகிறோம் . அதானால் தான் இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வட இந்தியர்கள் ,உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் மிகவும் குறைவான சம்பளத்திற்கு அமர்த்தப்படுகின்றனர் .நாம் அதிக உடலுழைப்பு இல்லாமல் அதிகமாக உண்டு மருத்துவமனைகளின் தயவில் உயிர் வாழ்கிறோம் .

நகரமயமாக்கலின் விளைவாக விளைநிலங்கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றன . அதிக பணத்தின் மூலம் விவசாய நிலங்கள் விலைபேசப்பட்டு வாங்கப்படுகின்றன . அவை பிளாட் போட்டு கூவி கூவி விற்கப்படுகின்றன .விவசாய நிலமாக இருந்ததில் தான்  இன்று புதிதாக கல்வி நிலையங்கள் , தொழிற்சாலைகள் ,வீடுகள் கட்டப்படுகின்றன . எந்தவிதமான புதிய கட்டுமானமும் சுற்றுச்சூழலை பெருமளவில் பாதிக்கிறது . மணல் ஆற்றை நாசப்படுத்தி எடுக்கப்படுகிறது . கற்கள்,ஜல்லிகள் பாறையை அல்லது மலையை உடைத்து எடுக்கப்படுகின்றன .செங்கல் உருவாக்க செம்மண் விவசாய நிலத்திலிருந்து எடுக்கப்படுகிறது ;செங்கலைச் சூடு பண்ண நிறைய மரங்கள் வெட்டி எரிக்கப்படுகின்றன .

கட்டுமானத்திற்கு தேவையான தண்ணீர் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவத்தின் மூலமாக பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது .
தமிழகத்தின் எந்தப்பகுதியிலும் எப்போது வேண்டுமானாலும் இனி நிலநடுக்கம் வரலாம் ;தயாராக இருங்கள்.எந்தப்புதிய கட்டுமானமும் சுற்றுச்சூழலை நேரடியாகவும் ,விவசாயத்தை மறைமுகமாகவும் பாதிக்கிறது .அதனால் ,புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட நினைக்காத அனைவரும் பூவுலகின் நண்பர்கள் தான் . நம்ம சம்பாதிக்கிற பணத்தை வச்சு நிலத்தை பார்க்கத்தான் முடியும் ,வாங்க முடியாதுனு நினைக்கிறீங்களா ,சரி விடுங்க அதுவும் நல்லதுக்குத்தான் . நாமெல்லாம் பூவுலகின் நண்பர்கள் .

விவசாயம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் ,விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை . விவசாயப் பொருட்களுக்கு நிலையான விலை கிடைத்திருந்தால் விவசாயம் இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்து இருக்காது . விவசாயிக்கு பொருளை விற்பதற்கு பெரிய சந்தை கிடைப்பதில்லை . கூடவோ குறைச்சலோ உள்ளூர் சந்தையில் மட்டுமே பொருளை விற்க முடிகிறது .எப்படிப் பார்த்தாலும் விவசாயிக்கு குறைந்த அளவே லாபம் கிடைக்கிறது ,தரகர்களும் ,பெரிய வியாபாரிகளுமே அதிக லாபம் அடைகின்றனர் .

" உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது " என்ற பழமொழி இன்றைக்கும் மிகச் சரியாக பொருந்தும் . விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போனால் விவசாயி கடனாளி ஆகிறான் . மீள முடியாத கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது .1997 பிறகு மட்டும் 2,20,000 கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் .நாமெல்லாம் மறைமுக குற்றவாளிகள் .தூக்குத் தண்டனையை தடை செய்ய எத்தனையோ பேர் போராடுகிறார்கள் . விவசாயிகளுக்காக போராடக் கூடிய  ஆட்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் .  விவசாய கடன் தள்ளுபடி என்பதெல்லாம் கண்துடைப்பு . விவசாய மானியங்கள் விவசாயிக்குக் கிடைப்பதற்குப் பதிலாக ரசாயன உர நிறுவனங்களுக்கும் , பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும் கிடைக்கிறது . எந்த விதமான மானியங்களும் கிடைக்காத காரணத்தால் தான் இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன .

விலையேற்றம் ,சமீப காலமாக எல்லோரும் உணரும் விசயம் . விவசாயம் அதிகளவில் பாதிக்கப்பட்டதால் தான் விவசாயப் பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துவிட்டது . விவசாய நிலங்கள் அழிந்து வருவதை தினமும் பார்த்து வருகிறோம் .கடந்த ஆண்டு நெல் உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருந்தும் தற்போது அரிசி விலை எதனால் பெரிய அளவில் உயர்ந்தது . கிரானைட் குவாரிகளில் சோதனை நடத்தியது போல தனியாருக்குச் சொந்தமான அரிசி சேமிப்புக் கிடங்குகளில் சோதனை நடத்தினால் என்ன ? அரசிற்கு வருவாயும் ,ஊடகங்களின் பசிக்குத் தீனியும் கிடைக்கும் .பதுக்கல் திடீர் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது . அரசால் பதுக்கல் கண்காணிக்கப்பட வேண்டும் . அனைத்து விவசாயப் பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடிய சூழ்நிலை வந்தால் விலையேற்றம் இன்னும் அதிகமாகும் .நிலைமை நீடித்தால் உணவிற்கான உள்நாட்டுப்போர் உண்டானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை .

விவசாயத்திற்கு எதாவது செய்ய நினைத்தால் ,முதலில் விளைபொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் . எந்தப் பகுதியில் எந்தப்பொருள் அதிகம் விளைகிறதோ அங்கு அந்தப் பொருளைச் சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்குகள் கட்ட வேண்டும் .தன்னிறைவு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .விவசாயி ,தன்னால் விளைவிக்கக்கூடிய விவசாயப் பொருட்களை தானே உற்பத்தி செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் . அப்படி ஒரு சூழல் உருவானால் சந்தையில் பொருட்களின் தேவை கணிசமான அளவு குறையும் ;விலைவாசியும் கட்டுக்குள் இருக்கும் .

 மண்ணின் வளத்தை அதிகப்படுத்த தொடர்ந்து ஒரே பயிரை விளைவிக்காமல் பயிர் சுழற்சி முறையை ஊக்கப்படுத்த வேண்டும் . அரிசி ,கோதுமை மற்றும் கரும்பை மட்டும் கொள்முதல் செய்யாமல் அனைத்து தானிய வகைகளையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் .ரேசன் கடைகளில் நெல் ,கோதுமை ,சர்க்கரை மட்டும் விநியோகிக்காமல் மற்ற தானிய வகைகளையும் விநியோகம் செய்யலாம் . 

இயற்கை விவசாயத்திற்கு மானியம் வழங்க வேண்டும் . இயற்கை விவசாயத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . உணவே மருந்தாக இருந்த நிலை ,மருந்தே உணவாக மாறியதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளும் , ரசாயன உரங்கலுமே முக்கிய காரணம் .மிகக்கொடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று தெரிந்த பிறகும் " என்டோசல்பான் " பூச்சிக்கொல்லி மருந்தை தடை செய்ய மத்திய அரசு யோசிக்கிறது .நம் உடலுக்கு உகந்த நம் பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும் . துரித உணவுகள் உண்டாக்கும் தீமைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் மேற்கத்திய நாடுகளில் இருந்தே வெளிவருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

சமூகத்தில் விவசாயத்திற்கு மரியாதை கிடைக்க வேண்டும் . " என் மகன்  ஒரு விவசாயி ஆக வர விரும்புகிறேன் " என்று பெற்றோர் நினைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் .விவசாயம் செய்ய நிலம் ? வீட்டு மொட்டை மாடிகளிலும் ,வீட்டிற்கு அடியிலும் விவசாயம் நடைபெறலாம் .உணவு ,தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருளாகக் கூட மாறலாம் .மாத்திரைகளை விழுங்குவதன் மூலம் உடலிற்கு தேவைப்படும் சக்தியைப் பெறக்கூடிய நிலை உண்டாகலாம் .இந்நிலை வராமல் தடுக்க இருக்கும் விவசாய நிலங்களையாவது காப்பாற்ற வேண்டும் .

 நிலையான லாபம் தரும் தொழிலாக விவசாயத்தை மாற்ற வேண்டும் .இந்தியா ஒரே மாதிரியான நிலப்பரப்பும் ,காலநிலையும் கொண்ட தேசமல்ல .ஒரே மாதிரியான நிலைப்பாடுகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பொருந்தாது . ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் அவசியம் . நில மற்றும் நீர் பரப்புகள் வணிக நோக்கத்துடன் படிப்படியாக அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் .சுற்றியுள்ள சூழ்நிலைகள் உகந்ததாக இருந்தால் மட்டுமே நம்மால் விவசாயம் செய்ய முடியும் .

ஊடகங்கள் விவசாயத்தை தொடர்ந்து புறக்கணிக்கின்றன . 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயத்தை நம்பியுள்ள சூழலில் இதுவரை எத்தனை திரைப்படங்கள் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன . தொலைக்காட்சி நிறுவனங்களும் விவசாயத்தைக் கண்டுகொள்வதில்லை .ஏன் ஒரு விவசாயியின் உண்மை நிலையை ஒரு நெடுந்தொடராக எடுத்திருக்கலாமே  .ஏன் எடுக்கவில்லை ?

சமூகத்தின் பிரதிபளிப்பு தான் திரைப்படம் என்றால் 100 க்கு 70 திரைப்படங்கள் விவசாயம் சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியும் . விவசாயம் இவ்வளவு பாதிப்புக்குள்ளான பிறகும் விவசாயியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு திரைப்படம் கூட எடுக்கப்படவில்லையே .அப்புறம் நீங்கள் என்ன பெரிய படைப்பாளிகள் ? எந்தவொரு சமூக நிகழ்வையும் சுவாரசியமாக அதே நேரம் உண்மையாகவும் ,அழுத்தமாகவும் பதிவு செய்பவர்கள் மட்டுமே உண்மையான படைப்பாளிகளாக இருக்க முடியும் .அவ்வப்போது சில சிறுகதைகளும் ,நாவல்களும் மட்டுமே விவசாயியின் உணர்வுகளை பதிவு செய்கின்றன . 

இன்று எல்லாம் வணிகம் தான் .விவசாயமும் வணிகம் சார்ந்ததாக மாறி எவ்வளவோ நாட்களாகி விட்டது . விவசாயிகளும் பணப்பயிர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை உருவாக்கி விட்டோம் . விவசாயத்தை வணிகத்தின் பிடியிலிருந்து மீட்டு உணவுப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை  உருவாக்க வேண்டும் .

விவசாயத்தை நோக்கி ஒரு நாள் எல்லோரும் உறுதியாக திரும்பி வருவார்கள் .இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது . எல்லாம் ஒரு வட்டம் தான் . 

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு ...!

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

ஐந்திணை சுற்றுச்சூழல் விழா 2012 !

..................................................................................................................................................


Monday, August 6, 2012

ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - ஒரு பார்வை !


29 -07-2012 , ஞாயிற்றுக்கிழமை , பரபரப்பான நாட்களுக்கிடையே வந்த ஒரு வசந்த நாள் . ஆம் ,உண்மையில் வசந்த நாள் தான் நம் மண்ணுக்கும் மனதிற்கும் .நம்  மண்ணைப்பற்றி நமக்கு நினைவூட்டிய நாள் .மக்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  சென்னை நகரத்தில் ,லயோலா கல்லூரியில் நடந்தேறியது அவ்விழா . தமிழ் கூறும் நல்லுலகின் வசந்த விழா .அது , பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த " ஐந்திணை சுற்றுச்சூழல் விழா ". குறிஞ்சி ,முல்லை ,மருதம் ,நெய்தல் மற்றும் பாலை இந்தப் பேர்களைக் கேட்கும் போது எல்லோருக்கும் பள்ளிக்கூட நினைவுகளும் , தமிழ் மண்ணின் தனிச் சிறப்பும் பொங்கி வருவதைத் தடுக்க முடியாது .ஆனால் , அவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் ஐந்திணையின் இன்றைய நிலை என்ன ?

நோபெல் பரிசுக்கு இணையாக மதிக்கப்படும் " Right Livelihood Award (2008 )" வென்ற மண்ணுக்கும் மனிதர்களுக்குமான போராளியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார் . வினோ பாவே இயக்கத்தில் தான் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் மக்களுக்காக எப்படியெல்லாம் பாடுபட்டார்கள் என்பதையும் வினோ பாவேவின் தொலைநோக்கு பார்வை குறித்தும் ,மக்கள் மேம்பாடுக்கான பணிகள் பற்றியும் குறிப்பிட்டார் .இறால் பண்ணைகள் அமைத்து கடற்கரையை நாசமாக்க முயன்றவர்களிடமிருந்து  தமிழக கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க எப்படியெல்லாம் போராடினார் என்பதையும் விளக்கிக் கூறினார் .

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மிகவும் வருத்தப்பட்ட விசயம் நம் கல்வி நிலையங்களின் அமைவிடங்கள் பற்றியது ." தடுக்கி விழுந்த இடத்திலெல்லாம் இன்ஜினியரிங் கல்லூரிகள் ;பாவிகளா ,அந்த கல்லூரிகளை எந்தப்பொருளும் விளைய தகுதியற்ற இடங்களில் கட்டலாமே .நெல் அதிகம் விளைந்த தஞ்சாவூர் எங்கும் கல்வி நிலையங்கள் .முக்கியத்துவம் அறிவுக்கா ? உணவுக்கா ? நாமெல்லாம் மாதம் முழுதும் உழைத்தாலும் போதிய பணம் கிடைப்பதே அரிது . நம்மைச் சுற்றி கொள்ளைகாரங்களா இருக்காங்க , இந்தக் கொள்ளைக்காரங்க அளவுக்கதிகமான பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரிகள் கட்டி மறுபடியும் கொள்ளையடிக்கிறாங்க .இதப் போய் மக்கள்கிட்ட சொல்லுங்க ,விளைநிலங்களை  காப்பாத்துங்க "  என்று உருக்கமாக பேசினார் .

நம்மாழ்வார் பேசும்போதும் வினோ பாவே பற்றிக் குறிப்பிட்டார் . இளங்கோவடிகள் மற்றும் அவ்வையாரின் பாடல்களை மேற்கோள் காட்டி இன்றைய சூழலில் ஐந்திணையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பேசினார் .சூரிய ஒளி ஆற்றலை உள்ளே விட்டும் , வெப்ப ஆற்றலை வெளிவிடாத கார்பன் வளையங்கள் பற்றி குறிப்பிட்டார் .எவ்வாறு மரங்கள் கார்பன் வளையங்களைக் குறைக்கும் என்பதையும் சொன்னார் . மாலத்தீவில் கடலுக்கு அடியில் நடந்த உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பற்றிச் சொன்னது புதிதாக இருந்தது . ஹோமோ சேப்பியன் என்று சொல்லிக்கொள்ளும் நாம் "இயற்கைக்கு விரோதமானத சாப்பிட்டு இயற்கைக்கு விரோதமா சிந்திக்கிறோம் " என்று சொன்னார் .கல்விக்கூடங்களின் மோசமான செயல்பாட்டை சுட்டிக்காட்டினார் ." புத்தகங்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை, நம் கல்வி முறை நம்மைச் சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்றவாறு வாழ நம்மைப் பழக்கவில்லை " என்றார் .
  
காலை 9-30 முதல்  மாலை  5.00 வரை ஐந்திணைகள் பற்றிப் செயல்பாட்டாளர்கள்  பேசினார்கள் .ஐந்திணைகள் பற்றிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன . பாரம்பரிய விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது , நம் மரபு வழி விதைகளை இழந்து விட்டோம் ,உணவே மருந்து என்ற நிலை மாறிவிட்டது என்று கூறினார் அடுத்து பேசிய சுல்தான் இஸ்மாயில் . வினோ பாவே வேம்புக்கு கொடுத்த முக்கியத்துவம் குறித்துப் பேசினார் . தேசிய கொடியை சமையலறையில் ஓட்டச் சொன்னார் .எதற்கு என்றால் நாம் சாப்பிடும் உணவில் ஆரஞ்ச் ,வெள்ளை மற்றும் பச்சை நிற  உணவுகள் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் . நடுவில் உள்ள ஊதா நிறச் சக்கரம் தண்ணீரைக் குறிக்கிறது .இவ்வாறு நாம் இருந்தால் சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கையைப் போல 24 மணி நேரமும் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் .Ecology ,Economyயாக  மாறும் போது தான் பிரச்சனையே .Management , t யை எடுத்து விட்டால் Managemen , n யை எடுத்து விட்டால் Manageme என்று சுவாரசியமாகப் பேசினார் .     

குறிஞ்சி நிலப்பரப்பு குறித்து வேலூர் சி .சீனிவாசன் பேசினார் . வேலூரில் தாங்கள் செயல்படுத்தி வரும் VHRP - Vellore Hill Restoration Project பற்றிக் குறிப்பிட்டார் .மலைக் குன்றுகளில் சிறு சிறு குளங்கள் அமைப்பதும் , வறண்ட மலைக் குன்றுப் பகுதிகளைப் பசுமையாக்குவதும் இந்த செயல் திட்டத்தின் முக்கிய நோக்கம் .இதன் பயனாக மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றாமல் இருக்கிறது .பயனுள்ள முயற்சியாக தெரிந்தது .

குறிஞ்சி நிலப்பரப்பு குறித்து அடுத்து பேசிய வழக்குரைஞர் இரா .முருகவேல் பழங்குடிகளுக்கும் காட்டுக்கும் ,இயற்கைக்கும் உள்ள நெருக்கம் பற்றிக் குறிப்பிட்டார் . பழங்குடிகள் தாங்கள் குடியிருக்க வீடுகள் கட்ட மூங்கிலையும் ,நாணலையும் பயன்படுதுகின்றனர் . மூங்கில் மீண்டும் வளரும் ,நாணல் காய்ந்தால் காட்டுத் தீயை அதிகப்படுத்தும் . சமவெளியில் வாழும் மக்களே காடுகளின் அழிவிற்கு காரணம் .பழங்குடிகளால் மட்டுமே காடுகளை பாதுகாக்க முடியும் ,அவர்கள் பழங்குடிகளாக இருக்கும் வரை .

முல்லை நிலப்பரப்பு குறித்து பேசிய பேராசிரியர் .த .முருகவேல் , பிணந்திண்ணி கழுகுகளின் அழிவு எவ்வாறு உயிர்ச் சூழ்நிலையை பாதிக்கிறது என்றும் காடுகளின் பரப்பு குறைவதால் சிறுத்தை போன்ற விலங்குகளை காடுகளை விட நிலப்பரப்பில் அதிகம் காண முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

முல்லை பற்றி அடுத்து பேசிய பேராசிரியர் கு.வி .கிருஷ்ணமூர்த்தி திணைச்  சிதைவு பற்றிக் குறிப்பிட்டார் . ஒரு நிலப்பரப்பில் வாழும் உயிருள்ள மற்றும் உயிரட்ட கலவையே திணை எனப்படும் .அதாவது நிலத்தோடு இயைந்த பண்பாட்டுக் கூறுகளே திணையாகும் . இன்று எந்த நிலப்பரப்பும் திணையாக இல்லை .வெறும் நிலமாகச் சுருங்கிவிட்டது அல்லது வேறு திணையின் கூறுகளோடு கலந்து விட்டது . குறிஞ்சி ,முல்லை ,மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நான்கு திணைகளும் ஒருங்கே அமைந்த மாவட்டம் ,திருநெல்வேலி . வரகு ,குதிரைவாலி ,சாமை ஆகியன முல்லையின் உணவுப்பொருட்கள் . 10000 ஆண்டுகளுக்கு முன்பு 70 % இருந்த முல்லை நிலப்பரப்பு ,இன்று 15 % குறைந்து விட்டது .

ருதம் பற்றி வைகை குமாரசாமியும் ,அறச்சலூர் செல்வமும் பேசினார்கள் .இயற்கை விவசாயம் குறித்து பேசினார்கள் . இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பொருட்கள் விலை ஏன் அதிகமாக உள்ளது என்று விளக்கினார்கள் .உழுதல் ,மழையைக் கணித்தல் ,விதைகளைத் தேர்ந்தெடுத்தல் , நாடு நடுதல் ,சரியாக நீர் பாய்ச்சுதல் ,சரியான நேரத்தில் களை பறித்தல் ,சாகுபடி செய்தல்  என்று  60 கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் தெரிந்த ஒருவன் மட்டுமே விவசாயியாக இருக்க முடியும் . விதையிழப்பும் , நவீன இயந்திரங்களால் தொழில்நுட்ப இழப்புமே விவசாயம் , விவசாயிகளின் அழிவிற்கு காரணங்கள் .

பாலை நிலம் பற்றி சு .தியோடர் பாஸ்கரன் பேசினார் . காங்கிரஸ் அமைப்பைத் தோற்றுவித்தவரான  A .O .ஹியூம் , பறவைகளை அவதானிப்பதில் வல்லவராக இருந்திருக்கிறார் . அவர் Bustard என்று அழைக்கப்படும் கான மயிலைப் பார்த்திருக்கிறார் . இதுவே இந்தியாவின் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டியது .Bustard  என்ற வார்த்தை தவறாக உச்சரிக்கப்பட்டால் தவறாகப் போய்விடும் என்ற காரணத்தால் தேசிய பறவையாக இடம் பெறவில்லை . இது பாலை நிலத்தின் பறவையாகும் . முன்பு தமிழ்நாட்டில் அதிகளவில் இருந்த கான மயில்கள் தற்போது இல்லை . மத்திய பிரதேசத்திலும்  ,கர்நாடகாவிலும் உள்ள சரணாலயங்களில் மட்டுமே தற்போது கான மயில்கள் உள்ளன . காடை ,கள் கவுதாரி ,ஆள்காட்டிக் குருவி முதலிய பறவைகளும் ,குள்ள நரி ,குழி நரி ,காட்டுப்பூனை முதலிய விலங்குகளும் பாலை நிலத்தில் வாழ்ந்துள்ளன . பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் பிங்களர்கள் என்று அழைக்கப்பட்டனர் . துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு தான் அதிகமான காட்டுயிர்கள் கொல்லப்பட்டுள்ளன . இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு தான் அதிக காடுகளும் ,காட்டுயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன .அணைகள் கட்டுவதால் பாலை நிலம் அழிகிறது .

 கான மயில் :


நெய்தல் நிலம் பற்றிப்  பேசிய வறீதையா அழுத்தமான கருத்துகளை முன்வைத்தார் . வரலாற்றிலும் சரி தற்போதும் சரி நெய்தல் நில மக்களான பரதவர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை ." மீனை உணவாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள் , மீன் தான் எங்கள் வாழ்க்கை என்பதை நீங்கள் உணரவேயில்லை "  என்று சாடினார் . சேது சமுத்திரத் திட்டத்தின் காரணமாக பவளப்பாறைகள் சேதப்படுத்தப் பட்டதால் தான் சுனாமியின் காரணமாக நாகபட்டினமும் ,வேளாங்கண்ணியும் அதிகளவு பாதிக்கப்பட்டன ;பவளப் பாறைகளால் ராமேஸ்வரமும் ,கன்னியாகுமரியும் தப்பித்துக் கொண்டன .

நெய்தல் நிலம் பற்றி அடுத்து பேசிய அருள் எழிலன் , நெய்தல் நில மக்கள் குறித்த நீண்ட  வரலாற்றை  பதிவு செய்தார் . கிறித்துவம் நெய்தல் நில மக்களுடன் எப்படிக் கலந்தது ,தற்போது எப்படி உள்ளது என்று விளக்கினார் . புன்னைகாயல் என்னும் இடத்தில் தான் தமிழகத்தின் முதல் அச்சகமும் ,முதல் மருத்துவமனையும் மற்றும் முதல் கல்விக்கூடமும் இருந்ததாக குறிப்பிட்டார் . சென்னையில் கடலை நம்பி வாழ்ந்தவர்கள் கண்ணகி நகருக்கும் ,செம்மஞ்சேரிக்கும் துரத்தி அடிக்கப்பட்டது குறித்தும் வேதனையுடன் குறிப்பிட்டார் .ஜோ .டி .குரூஸ் நெய்தல் நில உரைகளுக்கு தலைமை தாங்கினார் .

மொத்தத்தில் வளர்ச்சி என்ற பெயரால் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறோம் . இப்படியே போனால் ஐந்திணை என்பதே இருக்காது .ஒரே திணையான காங்கிரட் திணை மட்டுமே இருக்கும் .

மாலை 5 மணிக்கு மேல் இருளர் பழங்குடி மக்களின் களை நிகழ்ச்சிகளும் ,கொல்லிமலை மலையாளி பழங்குடிகளின் சேர்வையாட்டமும் நடைபெற்றது . அடுத்ததாக சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டன .சிறு தானிய உணவுகளில் உள்ள சத்துகள் குறித்து சித்த மருத்துவர் கு .சிவராமன் தெளிவாக விளக்கிக் கூறினார் . நீண்ட நாட்களாக நான் பார்க்க விரும்பிய மருத்துவர் புகழேந்தியைச் சந்திக்க முடிந்தது .முடிவாக பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது .


அந்த உணவில் இடம்பெற்ற உணவு வகைகள்,
1.பானகம்
2.தேனும் தினை மாவும்
3.காணச்சாறு( கொள்ளு )
4.கம்பு வல்லாரை தோசை
5.நிலக்கடலைச் சட்னி
6.சாமை தயிர்சோறு
7.வழுதுணங்காய் ( கத்தரிக்காய் )  சாம்பார்
8.பருப்புக்கீரை மசியல்
9.குதிரைவாலி புளிச்சோறு
10.ராகி வாழைப்பூ வறுத்த சோறு
11.வரகு கூட்டாஞ்சோறு
12.தட்டைப்பயறு பிரட்டல்
13.தினை இனிப்புப் பொங்கல்
14.நவதானிய கொழுக்கட்டை
கிராமத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் சாமை ,வரகு ,தினை , குதிரைவாலி சாப்பிட்டதில்லை .இந்நிகழ்வின் மூலம் இவற்றையெல்லாம் உண்ணவும் ,உணரவும் முடிந்தது . எங்கள் வீட்டில் சிறு தானிய உணவுகளை சேர்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டோம் .

இனம் ,மொழி ,மதம் ,நாடு போன்ற பேதங்களில் சிக்க வேண்டாம் என்று தான் இருக்கிறேன் . ஆனால் , நம் முன்னோர்கள் பிரித்த இந்த ஐந்திணை என்னை பெருமைப்பட வைக்கிறது . உலகில் வேறு எங்கும் இது போல நிலத்தை பிரித்து வாழ்ந்தார்களா என்று தெரியவில்லை .

பூவுலகின் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ..!

 பூவுலகின் நண்பர்களின் இணையதளம் :-  www.poovulagu.net .

 ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - காணொளி -http://www.periyarthalam.com/2012/07/31/ainthinai-vizha-videos/

மேலும் படிக்க : -

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?

நாமெல்லாம் குற்றவாளிகளே !
.....................................................................................................................................................................

Thursday, August 2, 2012

விகடன் வலையோசையில்...!

ஆனந்த விகடன் எனக்கு அறிமுகம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன .இதுவரை வாங்கிப் படித்த அனைத்து ஆனந்த விகடன் பிரதிகளையும் சேமித்து வைத்துள்ளேன் . தற்போது தமிழில் வெளிவரும் வார இதழ்களில் ஆனந்த விகடனே சிறந்தது .இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை . 16-05-2012 தேதியிட்ட ஆனந்த விகடன் வரவேற்பறையில் ! எனது வலைப்பூ இடம்பெற்றது . அதைப்பற்றி எனது வலைப்பூவில் குறிப்பிடும் போது " கடந்த இரண்டு மாதங்களாக விகடன் படிப்பதில்லை " என்று குறிப்பிட்டிருந்தேன் . அதற்கு கடும் எதிர்ப்பு , உங்கள் வலைப்பூவே விகடன் மூலம் தான் எங்களுக்குத் தெரிந்தது ஆனால் நீங்கள் ஏன் விகடன் படிக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பினார்கள்  இப்போதும் விகடன் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கவில்லை .

ஒட்டு மொத்த ஊடகங்கள் மீதான கோபம் தான் விகடன் படிக்காததற்கும்  காரணம் . பொதுவாக எந்தப் புத்தகம் படித்தாலும் முன்பக்க அட்டை முதல் பின்பக்க அட்டை வரை படித்துத் தான் பழக்கம் . சமீப கால ஆனந்த விகடனை அவ்வாறு படிக்க முடியவில்லை . சினிமாக்காரர்களின் சொந்த வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் ? நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தால் சினிமாக்காரர்கள் வாழ்க்கையை விட சுவாரசியமாகவே இருக்கும் . அப்படி இருக்கும் போது நமக்கெதுக்கு சினிமாக்காரர்களின் சொந்த வாழ்க்கை .  அடுத்து அதிகமாக இடம்பெறுவது ,அரசியல்வாதிகளின் சுயபுராணம் .   

விகடன் மட்டுமல்ல பெரும்பான்மையான ஊடகங்கள் சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும்  மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது . இந்தக் கோபம் தான் விகடன் படிக்காததற்கு காரணம் . மற்றபடி நம் சமூகத்திலிருந்து சினிமாவையும் ,அரசியலையும் பிரிக்க முடியாது . அரசியல் குறித்தும் , நல்ல சினிமா குறித்தும் ஆக்கப்பூர்வமான ,அவசியமான விவாதங்கள் அவசியம் .விகடன் படிக்கவில்லை என்றாலும் " இன்று ஒன்று நன்று " தொடர்ந்து கேட்டுவருகிறேன் .தற்போதைய விகடனில் " வட்டியும் முதலும் " ," நானே கேள்வி நானே பதில் " ," சிறுகதைகள் ","ஓவியங்கள் " , " கார்டூன் " ,"தலையங்கம் " ," வலைபாயுதே (சினிமா மற்றும் அரசியல் தவிர்த்த பதிவுகள் ) " போன்ற பகுதிகள் ரசிக்கும்படி உள்ளன . ஆனாலும் மிதமிஞ்சிய அரசியல் , சினிமா செய்திகளால் விகடன் தொடர்ந்து படிக்க முடியவில்லை . என்று தோன்றுகிறதோ அன்று தொடர்ந்து படிக்க ஆரம்பித்து விடுவேன் .

25-07-12 தேதியிட்ட ஆனந்த விகடன், என் விகடன் மதுரை பதிப்பில் எனது வலைப்பூ இடம் பெற்றுள்ளது.






நன்றி :- விகடன் .


மேலும் படிக்க :

ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் !


விகடன் வரவேற்பறையில் !


.....................................................................................................................................................................


Tuesday, July 24, 2012

சமத்துவத்தைப் பேணுமா கல்வி ?

" மாற்றம் ஒன்றே மாறாதது " என்பது பொது நியதி .ஆனால் ,அது  ஒன்றே ஒன்றுக்கு மட்டும் பொருந்தாது .அது நம் கல்வி முறை . அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் , தொழில்நுட்பப் புரட்சியாலும் உலகம் எவ்வளவோ மாறுதலுக்கு உட்பட்ட பிறகும் நம் இந்திய கல்வி முறை மாற்றம் இல்லாமல் தொடர்கிறது . மனப்பாடம் செய்யும் திறமையை மட்டுமே நம் கல்வி முறை தொடர்ந்து வளர்த்து வருகிறது .எல் .கே .ஜி . படித்தாலும் இன்ஜினியரிங் படித்தாலும் மனப்பாடம் செய்யத் தெரிந்தால் போதும் நீங்கள் பாஸ் . மற்ற எதுவும் தேவையில்லை . உலகம் குறித்தோ , இயற்கை குறித்தோ , அரசியல் குறித்தோ , மனித இனத்தின் வரலாறு குறித்தோ ,தன்னைச் சுற்றி வாழும் மனிதர்கள் குறித்தோ எந்தப் புரிதல்களும் நம் கல்வி முறையால் ஏற்படுத்தப் படுவதில்லை .

அழகான , பகட்டான , அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் ஒரு பள்ளியில் தன் பிள்ளையைச் சேர்த்துவிட்டால் போதும் , தன் கடமை முடிந்தது என்று பெற்றோர் முடிவெடுத்து ஒதுங்கி விடுகின்றனர் .ஆசிரியர்கள் பாடத்திட்டத்தைத்  தாண்டி எதையும் கற்பிப்பதில்லை . வகுப்பறையின் ஜன்னல் வழியே தெரியும் மரத்தின் பெயர் கூட அங்கு படிப்பவர்களுக்கு சொல்லித்தரப்படுவதில்லை . அற்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர் பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது .பெற்றோரும் , "மற்றவர்களுடன் சேராதே , மற்றவர்கள் பற்றிக் கவலைப் படாதே " என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளை சுயநலவாதிகளாக வளர்கின்றனர் .ஊடகங்கள், இந்த சுயநல மனப்போக்கை கவனமாக வளர்க்கின்றன . ஒரு குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி யாரையும் இன்றைய ஊடகங்கள் சிந்திக்க விடுவதில்லை . நம் காலத்தின் மிகப்பெரும் அவலம் இது .


செய்முறைப் பயிற்சி என்பது நம் கல்வி முறையில் மிகவும் குறைவாக உள்ளது .ஒரு மரத்தை வரைபடமாக காட்டுவதை விட நேரடியாக மரத்தைக் காட்டிச் சொல்லிக் கொடுத்தால் எளிதில் புரியும் . எல்லாவற்றிலும் இப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை . முடிந்தவற்றை இவ்வாறு சொல்லித் தரலாம் .அடுத்து ,எவ்வளவு படித்தாலும் வேலைக்காக அரசாங்கத்தையோ , தனியார் நிறுவனங்களையோ சார்ந்து இருக்கும் வகையிலேயே நம் கல்வி முறை உள்ளது . தொழில் முனைவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் நம் கல்வி முறை அமைய வேண்டும் . எந்தக் குடும்பமாக இருந்தாலும் கல்விக்காகவும் , மருத்துவத்திற்காகவும் மட்டுமே அதிக பணம் செலவிடுகிறது .

கல்வி முறையில் மாற்றத்தை அரசால் மட்டுமே கொண்டு வர முடியாது . பெற்றோர்களும் ஆசிரியர்களும் அரசும் சேர்ந்து தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் . தான் யார் என்பதை உணர வைத்தல் மூலமே பாதி மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும் . உலகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில் தானும் ஒரு சாதாரண விலங்கு ( பல நேரங்களில் தானும்  ஒரு மிருகம் தான் என்பதை மனிதன் மறந்து விடுகிறான் ) இனம் தான் என்பதையும் , இயற்கையின் ஒரு சிறு பகுதி தான் மனிதர்கள் என்பதையும் , மரங்கள் ,பறவைகள் ,விலங்குகள் என்று இயற்கையின் பங்களிப்பில்லாமல் நம்மால் வாழவே முடியாது என்பதையும்  உணர வைக்க வேண்டும் .

சமத்துவத்தை உருவாக்கும் கல்வியே நல்ல கல்வியாக இருக்க முடியும் . ஆண்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ , அதே அளவு உரிமை பெண்களுக்கும் உண்டு .  எந்த உயிரினத்திலும் பெண் இல்லாவிட்டால் உலகே இல்லை என்பதையும் , நாகரிக வளர்ச்சி இல்லாத சமயத்தில் மனித சமூதாயம் பெண் வழிச் சமூதாயமாக தான் இருந்தது என்பதையும் உணர வைத்து பெண்ணைத் தன் சக மனுசியாக மதிக்க கற்றுத் தருவது தான் இன்றைய கல்வியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் . அப்படிச் செய்தால் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும் . படித்தவர்களும் பெண்களைத் தரக் குறைவாக நடத்துகின்றனர் . கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை ஒடுக்குவதைத் தடுக்க வேண்டும் .பெண்களை பொத்தி பொத்தி வளர்க்காமல் ஆண்கள் போலவே வளர அனுமதிப்பதன் மூலமே நம்மால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் .ஆபிரிக்காவில் வாழ்வதற்கு ஏற்றவாறு எந்த சிறப்புத் தகுதிகளும் இல்லாத ,மற்ற விலங்குகளால் அடித்து விரட்டப்பட்ட ஒரு விலங்கு இனம் தான் மனித இனம் என்பதையும் புரிய வைக்க வேண்டும் .

சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் வாழும் மனிதர்களை தன் சக மனிதனாக மதிக்க வேண்டும் . நாகரிக மனிதன் என்று சொல்லிக் கொள்ளும் நாம் இன்னும் ஜாதி ,மத , இன , மொழி ,தேச பேதங்களில் இருந்து வெளி வரவில்லை .இவை அனைத்தும் கடந்த சமத்துவத்தில் என்று வாழ்கிறோமோ அன்று தான் நாம் நாகரிக மனிதன் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது .அதுவரை நாம் காட்டுமிராண்டிகள் தான் .  

கல்வி கற்போரை  சுய சிந்தனை உடையவர்களாக ,தனக்கு ஏற்படும் எந்த விதமான பிரச்சனைகளையும் எதிர் கொண்டு தீர்வு காணும் திறமை மிக்கவர்களாக , அரசியல் குறித்து கவனிப்பவர்களாக , சுய வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்பவர்களாக , ஆண் , பெண் என்ற பாலின பேதங்களைக் கடந்து ஒரு பொது வெளியில் இயங்குபவர்களாக ,பெண்களையும் ,சக மனிதர்களையும் ,மற்ற உயிரினங்களையும் தனக்கு இணையாக மதிப்பவர்களாக , இயற்கையின் உன்னதத்தைக் கொண்டாடுபவர்களாக , தனித்துவம் மிக்கவர்களாக , பணம் சம்பாதிப்பதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக மாற்றுவது நமது கல்வி முறையின் நோக்கமாக இருக்க வேண்டும் . பெற்றோரும் ,ஆசிரியர்களும் மற்றும் சமூகமும் இணைந்து தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் .

இதையெல்லாம் சொல்வதற்கு எனக்கு எந்தவித  சிறப்புத் தகுதியும் இல்லை . நானும் ஒரு சமூதாய விலங்கு தான் என்ற தகுதியைத் தவிர ...

மேலும் படிக்க :

 செல்போன் சேவை நிறுவனங்களின் பகல் கொள்ளை !


கழிப்பிடங்கள் எங்கே ?
....................................................................................................................................................................

Tuesday, June 26, 2012

வாடிக்கை மறந்ததும் ஏனோ?


தமிழின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான A.M.ராஜாவின் இசையமைப்பில்  1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கல்யாண பரிசு " என்ற மாபெரும் வெற்றிப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . கல்யாண பரிசு , இயக்குனர் ஸ்ரீதரின் முதல் படம் .இந்தப்படத்தில் இடம்பெற்ற தங்கவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்று வரை ரசிக்கப்படுகின்றன .காதல் ரசம் சொட்ட சொட்ட இந்தப்பாடலை எழுதியுள்ளார்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . இவரே இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார் . A.M.ராஜாவும் சுசீலாவும் இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் . பாடும் திறமையுள்ள இசையமைப்பாளர்களில் A.M.ராஜாவே முதன்மையானவர் .சிறப்பான முறையில் பாடப்பட்ட பாடலிது . 



ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ? _ என்னை
வாட்டிட ஆசை தானோ? _ பல
கோடி மலரழகை மூடிவைத்து மனதைக்
கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை…)

பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ? _ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ? _ புது
மங்கைஎந்தன் மனதில் பொங்கிவரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை…)

ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? _ பல
உயிர்கள் மகிழ்வதும் ஏது? _ நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வைத்
தனித்துப் பெற முடியாது

பெண் : அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா?
அன்புக் கரங்கள் சேரும்போது
வம்பு வார்த்தைகள் ஏனோ?
இன்ப வேகம் தானோ? (வாடிக்கை…)

ஆண் : காந்தமோ இது கண்ணொளி தானோ?
காதல் நதியில் நீந்திடும் மீனோ?
கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ?

பெண் : பொறுமை இழந்திட லாமோ? _ பெரும்
புரட்சியில் இறங்கி லாமோ? _ நான்
கருங்கல்லுச் சிலையோ? காதலெனக் கில்லையோ?
வரம்பு மீறுதல் முறையோ?

இருவர் : சைக்கிளும் ஓடமண் மேலே _ இரு
சக்கரம் சுழல்வது போலே _ அணை
தாண்டிவரும் சுகமும், தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே

இந்தப்பாடல் , பட்டுக்கோட்டையாரின் மற்றுமொரு சிறந்த காதல் பாடலுக்கு உதாரணம் ." இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வைத் தனித்துப் பெற முடியாது" ,"அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா? " ,"காந்தமோ இது கண்ணொளி தானோ? காதல் நதியில் நீந்திடும் மீனோ? ","நான்
கருங்கல்லுச் சிலையோ? காதலெனக் கில்லையோ? வரம்பு மீறுதல் முறையோ? " என்னே அழகான  வரிகள் !

சேர்ந்ததே உறவாலே...!

நன்றி :  http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே ! 

உனக்காக எல்லாம் உனக்காக ..!
......................................................................................................................................................................

Monday, June 18, 2012

பிரியாத பிரியங்கள் ...!

நீ என்னைவிட்டு பிரிந்த பின்பும்
பிரியாத பிரியங்களை என்ன செய்ய
கடலில் கரைத்தேன் மழையாக
பொழிந்து என்னை வந்து சேர்ந்தன
காற்றில் தூவினேன் சுவாசிக்கும் போது
மீண்டும் என்னுள் வந்துவிட்டன
மண்ணில் கலந்தேன் என் வீட்டு தக்காளிச்செடிக்கு
உரமாகி பழமாகி உணவாகி என்னை அடைந்தன
இறக்கைகள் கொடுத்து பறக்க விட்டேன்
சிறகொடிந்து என் வீட்டு மாடியில் விழுந்து விட்டன
நீயே சொல்லிவிடு
உன் பிரியங்களை என்ன செய்ய !

மேலும் படிக்க :

முதல் காதல் !
.................................................................................................................................................................

Sunday, June 17, 2012

அக்னியையும் தாண்டி ...!

தலைப்பைப் பார்த்ததும் இந்தியா நம் வரிப்பணத்தில் பாயவிட்ட அக்னி 5 பற்றியோ அல்லது வராத ,வரக்கூடாத போருக்காக அடுத்து பாயவிட தயாராகும் அக்னி 6 ,அக்னி 7 பற்றியோ எதுவும் சொல்லவரவில்லை . மற்ற அனைத்து ஆராச்சிகளையும் குறைத்துவிட்டு இயற்கைக்குப்  பாதிப்பு இல்லாமல் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் உடனே  செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . விசயத்துக்கு வருவோம் .அக்னி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது குறித்து தான் எல்லா ஊர்களிலும் உள்ள மக்கள் கவலைப்படுகின்றனர் .

அக்னி வெயில் முடிந்த பிறகும் வெப்பம் குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம் ? எளிய காரணங்கள் தான் தென்படுகின்றன . நாம் பள்ளியில் படித்திருக்கிறோம் " ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ; ஆனால் , ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக முடியும் " என்று . நாம பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்களின் பயன்பாட்டின் போதும்  பயன்பாட்டிற்கு பிறகு வெளிவரும் ஆற்றலாக இருப்பது " வெப்ப ஆற்றல் ".

                 மின் ஆற்றல் --> இயந்திர ஆற்றல் --> வெப்ப ஆற்றல்
                 மின் ஆற்றல் --> ஒளி ஆற்றல்  --> வெப்ப ஆற்றல்
                                   
 டிவி ,ரேடியோ ,செல்போன் ,தொலைபேசி ,கணினி ,கிரைண்டர் ,மிக்ஸி ,குளிர்சாதன பெட்டி ,காற்றாடி ,ஒளி விளக்குகள்  போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் மூலம் வெப்ப ஆற்றல் வெளிவருகிறது .

ருசக்கர ,நான்கு சக்கர மற்றும் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களும் வெப்ப ஆற்றலை வெளிவிடுகின்றன .

பூமியிலிருந்து  தண்ணீர் இழுக்க பயன்படும் மின்சார மோட்டார்கள் ,மின்தடைக்கு மாற்றாக பயன்படுத்தும் ஜெனரேட்டர்கள் ,UPS போன்றவையும் வெப்பத்தை வெளிவிடுகின்றன .

ல்வேறு வகையான தொழிற்சாலைகளில் ,பல்வேறு விதமான இயந்திரங்கள் இயக்கப்படுவதன் மூலம் பெருமளவில் வெப்பம் வெளியேற்றப்படுகிறது .  

ரிபொருள் எங்கெல்லாம் எரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வெப்பம் வெளியேறும் . அது பெட்ரோலிய பொருட்களாக இருந்தாலும் சரி , குளுக்கோஸாக இருந்தாலும் சரி வெளிவருவது வெப்பம் தான் . அது போல இயந்திரங்கள் (சிறியது முதல் பெரியது வரை ) எங்கெல்லாம் இயக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வெப்ப ஆற்றல்  வெளிவரும் .

வ்வளவு வெப்பமும் எங்கு போகும் ? பூமில் தான் இருக்கும் .  வாகனங்கள் அதிகம் ஓடும் இடங்களிலும் ,தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது .அதனால் தான் காலநிலையில் பெருமளவு மாற்றங்கள் நடைபெறுகிறது .

ரண்டு தீர்வுகள் தான் தெரிகின்றன . ஒன்று மிதமிஞ்சிய வெப்ப ஆற்றலை வேறு வகை ஆற்றலாக மாற்றுவது ;இரண்டு அதிக அளவில் மரங்கள் நடுவது . மூன்றாவதாக ஒரு தீர்வு உள்ளது .அது பூமியின் கையில் உள்ளது . வலுத்தது நிலைக்கும் ( Survival of Fittest ) என்ற கொள்கையின் படி பூமி ,வெப்ப ஆற்றலைக் கட்டுப்படுத்தி தானாகவே சம நிலைக்குக் கொண்டு வரலாம் .இயற்கையின் போக்கை யாராலும் நிர்ணயிக்க முடியாது .

மற்றபடி சூரியனையும் ,வெயிலையும் திட்டுவதில் எந்தப் பயனும் இல்லை . சூரிய வெப்பம் தேவையானது .சூரியன் இல்லாமல் பூமியில் யாருக்கும் வாழ்க்கை கிடையாது .ஏன் பூமியே கிடையாது . எல்லாவற்றுக்கும் மாற்றுவழி நாம் தான் தேட வேண்டும் . இல்லையேல் இயற்கையின் விளையாட்டை பொறுமையாக ரசிக்கவும் .

பொருத்துக்கொண்டிருக்கும் பூமி என்று பொங்கப் போகிறதோ ..!


மேலும் படிக்க :

 நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

வேடந்தாங்கலில் ஒரு நாள் !
..................................................................................................................................................................

Wednesday, June 6, 2012

முதல் காதல் !

மழையின்               
முதல் துளி
சிட்டுக்குருவியின்
முதல் சிணுங்கல்
மலரை தீண்டும்   
முதல் தென்றல்
சூரியனின்               
முதல் வெளிச்சம்
துளிர் விடும்          
முதல் இலை
வானவில்லின்     
முதல் தரிசனம்
பவுர்ணமி இரவின்
முதல் குளுமை
கடல் அலைகளின்
முதல் நனைத்தல்
நம்  முதல் காதல் !

மேலும் படிக்க :

ஒற்றையடிப் பாதை ! 

கேணியின் ஆயுட்காலம் !
..................................................................................................................................................................

Saturday, June 2, 2012

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

தில் எதுவும் சொல்ல வேண்டாம்
பதிலுக்கு என்னைப் பார்க்கவும்
வேண்டாம்
உன்னைத் தீண்டும் போது
பதிலுக்குப் பதில்
என்னைத் தொட்டுவிடத் தேவையில்லை
பார்வையில் பட்டோ
படாமலோ
அருகிருந்தால் போதும்
என்னை நனைக்கும்
நீரின் ஈரம்
எதற்கும் பதிலாக இல்லை
                                         - தேவதச்சன்

நீங்கள் கவிதை வாசிக்கும் பழக்கம் உள்ளவரா ? இல்லையென்றாலும் பரவாயில்லை , ஒரு முறை தேவதச்சனின் கவிதைகளைப் படித்துப் பாருங்கள் . உங்கள் தினசரி வாழ்க்கையை சுவை மிக்கதாக மாற்றும் வல்லமை அவரது கவிதைகளுக்கு உண்டு .ஒரு நாள் முழுவதும் வாசிப்பதின் மூலம் கிடைக்கும் அனுபவத்தை அவரது ஒரே ஒரு கவிதை கொடுத்துவிடும் .

இதுவரை கவிதைகளின் பக்கம் திரும்பியதில்லை .அவ்வப்போது வாசிப்பின் இடையில் தட்டுப்படும் கவிதைகளை மட்டுமே படிப்பது வழக்கம் .அப்படி வாசித்த கவிதைகளின் வழியே அறிமுகமானவர் தான் " தேவதச்சன் ( Devathachchan )" . ஏனோ இவரது கவிதைகளை மட்டும் மிகவும் பிடித்துப் போனது .அவரது கவிதை தொகுப்புகளை வாங்கி நாளுக்கு ஒரு கவிதை என சுவைத்து வாசிக்கிறேன் . ஆம் , ஒரு நாளுக்கு ஒரு கவிதை போதும் ,அந்தக் கவிதையின் இனிமை அந்த முழு நாளுக்கும் போதுமானது .

எஸ் .ராமகிருஷ்ணன் மொழியில் ( வாழ்க்கையை கரும்பைச் சுவைப்பது போல் சுவைத்து வாழ வேண்டும் ) சொல்வதென்றால் தேவதச்சன் கவிதைகளை கரும்பைப் போல சுவைத்து வாசிக்க வேண்டும் .

வாழ்வின் எளிய கணங்களை அழகாக ,இனிமையாக ,சுவையாக தனது எளிய கவிதைகளின் வழியே வெளிப்படுத்துகிறார் . " ஜென் கவிதைகள் போல் அர்த்தம்  பொதிந்ததாய் தேவதச்சனின் கவிதைகள் இருக்கின்றன " என்று எஸ் .ரா ., குறிப்பிடுகிறார் . தினசரி வாழ்வில் நம் கண்ணில் படும் , நாம் பயன்படுத்தும் , நாம் கற்பனை செய்யும் பொருள்களின் வாயிலாக தான் சொல்ல விரும்புவதை சொல்லும் பேரற்புதத்தை தேவதச்சனால் மட்டுமே செய்ய முடியும் .

தேவதச்சனின் கவிதைகள் எல்லைகள் அற்றதாய் இருக்கின்றன . எந்த வரையறைக்குள்ளும் அவரது கவிதைகள் அடங்குவதில்லை . பிரபஞ்சத்தைப் போலவே அவரது கவிதைகளின் பரப்பை நம்மால் கண்டறிய முடியாது . பூமியில் இருக்கும் அனைத்து பொருட்களும் அவரது கவிதைகளின் பகுதிப் பொருட்களாக இருக்கின்றன .உயிருள்ளவை - உயிரற்றவை ,முக்கியமானவை - முக்கியமற்றவை என்ற பேதமெல்லாம் இல்லை . உதாரணமாக மைனா ,சூரியன்,நீல பலூன்,இலை,மரம்,பாலிதீன் பை ,கடிகாரம் ,காக்கி நிற டப்பா , முரட்டு லாரி , மீன்,கடற்கன்னிகள், லோயா தீவு ,மலை ,ஜெல்லி மீன் , சைக்கிள் பூட்டு ,பிரபஞ்சத்தின் வெளிபிரகாரம் ,சர்க்கஸ் கோமாளிகள் ,புகையிலைப் பொட்டலம் , ஓணான் ,இரும்புக் கிராதி ,நீல நிற இலந்தைப் பழங்கள் , சிறுவண்டுகள் , ஆழத் திமிங்கலம் ,வாலைப் பெண் ,நகப்பூச்சு , கண்ணாடி டம்ளர் , இளம்பெண் துறவி , தேநீர்த் தோழி ,மலர்கள் ,ரகசியக்கல் , அலைபேசி ,டினோசர் ,நகவெட்டி ,புத்தக குவியல்கள் , நிலைவாசல் ,பழச்சாறு , அமரர் ஊர்தி  இவையெல்லாம் " ஹேம்ஸ் என்னும் காற்று " என்னும் தொகுப்பில் இடம் பெற்ற சில வார்த்தைகள்  . 

தேவதச்சனின் கவிதைகளில் சில சாதாரணமாய் வாசிக்கும் போது ஒன்றும் புரியாதது போல் தெரியும் . முதல் வரிக்கும் ,அடுத்த வரிக்கும் தொடர்பு இல்லாதது போல் தெரியும் . ஒரு அழகான செடி இருக்கிறது .செடி என்றாலே அழகு தான் ;அழகான செடி வேறு உள்ளதா என்ன ? (வண்ணதாசன் மொழி ) அதன் இலை ஒரு வித அழகு ,கிளை ஒரு வித அழகு ,மொட்டு ஒரு வித அழகு .
எவ்வளவு அழகான செடி என்றாலும் தேன் என்பது மலரில் மட்டுமே இருக்கும் .ஆனால் தேனை செடியின் எல்லா பகுதிகளிலும் எதிர்பார்ப்பது நம் சமூகத்தின் மிகப்பெரிய முட்டாள்தனம் . நமக்கு எல்லா விசயத்திலும் ஒரு தொடக்கம் ஒரு நிறைவுடன் கூடிய முடிவு தேவைப்படுகிறது . தேவதச்சன் கவிதைகளில் இதை எதிர்பார்க்க முடியாது . நிறைய நல்ல திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு இந்த மனநிலை தான் காரணம் .

கிளிங் என்று
கீழே விழுந்து
உடைகிறது கண்ணாடி டம்ளர்
                     அழகிய இளம்பெண் துறவியைப் போல
                     இருந்த அது
                     அல்லும் சில்லுமாய்
                     உடைந்தாலும்
ஒவ்வொரு துண்டாய்
                     சுத்தம் பண்ணுகையில்
                     விரல் கீறி
                     குருதி கொப்புளிக்கும் என்றாலும்
நீர்மையின் அந்தரங்க ரகசியத்தை
                     போட்டு உடைத்து விட்டது என்றாலும்
இனிமையாகவே இருக்கிறது
ளிங் ஒலி.
ஏனோ நினைவிற்கு வருகிறாள்
என் தேநீர்த்தோழி
                                         - தேவதச்சன்  

எஸ் .ஆறுமுகம் எனும் இயற்பெயர் கொண்ட தேவதச்சன் எழுபதுகளில் ( 1970 ) இருந்து எழுதுகிறார் . மிகக் குறைவாகவே எழுதியுள்ளார் .ஆனாலும்  அனைத்தும் அழுத்தமான பதிவுகள் . விளம்பர வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார் . அழுத்தமான ,ஆழமான மொழிநடை அவருடையிது . தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் . 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அவருக்குக் கிடைத்தது . 


அவரது நூல்கள் :

கடைசி டினோசார்  :


யாருமற்ற நிழல் :


ஹேம்ஸ் என்னும் காற்று :


இரண்டு சூரியன் :


அனைத்து நூல்களையும்  உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது .

அவரது ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன . மொத்தக் கவிதைகளிலும் ஒரு கவிதை கூட மற்றொரு கவிதை போல இல்லை .

லைகள் மலர்கள்
ஒருசில மணிநேரங்களில் வித்தியாசமாகி விடுகின்றன
நீயும் நானும்
சில வருடங்களில்
அதற்குள்
ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாமல்
போய்விடுகிறோம்
அடையாளம் தெரியாமல் போகும்
அடையாளத்தில்
ஒருவருக்கொருவர்
முகமன் கூறிக்கொள்கிறோம்
நமது புன்னகைகளும் கைகுலுக்கல்களும்
குருடர்கள் இல்லைபோலும் , எப்படியோ
அவற்றிற்கு
எப்போதும்
அடையாளம் தெரிந்தேவிடுகிறது
                                          - தேவதச்சன்

தமிழ் கூறும் நல்லுலகின் ( சுஜாதா மொழி ) ஈடு இணையற்ற கவிஞனாக ,   கலைஞனாக , அழுத்தமான படைப்பாளியாகவே தேவதச்சன் தெரிகிறார் .

உரிய மீனுக்காக ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கைப் போல , தேவதச்சனின் புதிய கவிதைகளுக்காக காத்திருக்கிறேன் !



நன்றி - தேவதச்சன் ,உயிர்மை .

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !  

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !  
...................................................................................................................................................................  

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms