Monday, August 31, 2015

மரணத்திற்கும் விலை உண்டு !

இயற்கையில் மரணம் என்பது எப்போதும் எங்கேயும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.மனிதன் ஒரு அறிவுள்ள சுயநல விலங்காக இருப்பதால் தன் இனமான மனிதர்களின் மரணங்களை மட்டுமே பெரும்பாலும் கணக்கில் கொள்கிறான்.மற்ற உயிரினங்களின் மரணங்கள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை; புள்ளிவிவரங்களுடன் கணக்கை முடித்து விடுகிறான்.உலகவணிகமயமாக்கலின் தாக்கமும் , விளம்பரமயமாதலின் தாக்கமும் இந்த மனிதர்களின் மரணத்தையும் விட்டு வைக்கவில்லை .

மரணம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் , குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நிகழும் மரணங்கள் அந்ததந்த குடும்பங்களுக்கு இழப்பு தான் . அது யானைக் குடும்பமாக இருந்தாலும் சரி , பறவைக்  குடும்பமாக இருந்தாலும் சரி , பட்டாம்பூச்சிக்  குடும்பமாக இருந்தாலும் சரி , மனிதக் குடும்பமாக இருந்தாலும் சரி , மற்ற எந்த உயிரினக் குடும்பமாக இருந்தாலும் இழப்பு இழப்பு தான். நாம் மனித மரணங்களை மட்டுமே கணக்கில் கொள்வோம் என்றாலும் அவையும்  சமமாக மதிப்பிடப்படுவதில்லை.

மனித மரணம் நிகழ்கின்ற இடமும் , அது பெறுகிற விளம்பர வெளிச்சமும் பொது சமூகத்தின் , ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறுகிறது. எந்தவித கவனமும் பெறாத மனித மரணங்கள் பொது சமூகத்தாலோ , ஆட்சியாளர்களோ கண்டு கொள்ளப்படுவதில்லை. பல மரணங்கள் உறவுகளால் கண்டுகொள்ளப் படுகின்றன; சில மரணங்கள் யாராலும் கண்டுகொள்ளப் படுவதில்லை.

விபத்தால் நிகழும் திடீர் மரணங்களுக்கு அரசுகளால் இழப்பீடு வழங்கப்படுகின்றன. இந்த இழப்பீடுகளும் சமமாக இருப்பதில்லை. ஐம்பதாயிரம் ,ஒரு இலட்சம் , இரண்டு இலட்சம் , ஐந்து இலட்சம் , பத்து இலட்சம் என்று நிர்ணயம் செய்கிறார்கள்.சட்டத்தின் முன் மக்கள் எல்லோரும் சமம் என்று சொல்லும் ஒரு ஜனநாயக நாட்டில் எதன் அடிப்படையில் இழப்பீடை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது புதிராகவே உள்ளது. ஊடக வெளிச்சமும் , சமூக கவனமும் பெறுகின்ற மரணங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படுகிறது. மற்றவற்றுக்கு சொற்பம் தான்.பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இதயநோய் , இரத்த அழுத்தம் , புற்றுநோய் மற்றும் வேறுவிமான நோய்களின் காரணமாக நிகழும் திடீர் மரணங்களுக்கு கூட இழப்பீடு வழங்கப்படுவதில்லை. எதிலாவது அடிபட்டு துடிதுடித்து நிகழும் மரணங்கள் மட்டுமே இழப்பீட்டுக்குத் தகுதியுள்ளவை என்று எப்படி முடிவு செய்கிறார்கள் , நம் ஆட்சியாளர்கள்.முட்டாள்கள். இழப்பு என்பது எல்லோருக்கும் பொது தானே.

விமான விபத்தால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , ரோட்டில் அடிபட்டதால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , போராட்டத்தால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , குண்டடி பட்டதால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , மற்ற தீடீர் மரணங்களுக்கு எந்த விலையுமில்லை. இங்கு நிகழும் மனிதர்களின் மரணங்கள் ஒரே மாதிரியாக மதிப்பிடப்படுவதில்லை ;ஒரே மாதிரியான விலையும் நிர்ணயிக்கப்படுவதில்லை. பல மரணங்களுக்கு விலையே கிடைப்பதில்லை.  " மரணத்தின் முன்  எல்லோரும் சமம் " என்று இனியும் சொல்ல முடியுமா ?

நம் நவீன வாழ்வில் மரணத்திற்கும் சமமில்லாத விலை உண்டு . விலையில்லா மரணங்களுக்கும் இடமுண்டு . ஆனாலும் மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயம் என்று மட்டும் இயற்கை சொல்கிறது !

மேலும் படிக்க :

கதாநாயகத் துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் !

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
....................................................................................................................................................................

Friday, July 31, 2015

தென்றல் வந்து வீசாதோ !


1959 ஆம் ஆண்டு வெளிவந்த ' சிவகங்கை சீமை ' திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.கண்ணதாசன் இப்பாடலை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை தயாரித்து நஷ்டத்தை சந்தித்ததும் கண்ணதாசனே. எஸ்.வரலட்சுமியும் , டி.எஸ்.பகவதியும் 'தென்றல் வந்து வீசாதோ... ' என்ற இப்பாடலைப் பாடியுள்ளனர். இப்பாடலில் மட்டுமல்ல எஸ்.வரலட்சுமி பாடியுள்ள எப்பாடலிலும் அவரது குரல் தனித்து ஒலிக்கும்.

அப்பாடல் :



மேலும் படிக்க :

 
எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ? 

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 

...................................................................................................................................................................

Thursday, June 11, 2015

காக்கா முட்டை - ஒரு வாழ்வனுபவம் !


 " உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது , ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகின்றோம் " - கன்பூசியஸ்.

இணையத்தின் உதவியால் உலக சினிமா ஓரளவிற்கு பரிச்சயமான சூழலிலும் தமிழ் சினிமா, இன்னமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான காதல்களைச் சொல்வதிலும் , டூயட் பாடுவதிலும் ,ஓப்பனிங் சாங் வைப்பதிலும் , பஞ்ச் டயலாக் பேசுவதிலும் ,ஒரே அடியில் ஒன்பது பேரை காற்றில் பறக்க விடுவதிலும் , காமெடி என்ற பெயரில் கழுத்தை அறுப்பதிலும் , திரைக்கதையில் கவனம் செலுத்தாமலும் , முக்கியமாக கதையே இல்லாமல் படமெடுப்பதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் சூழலில் ' காக்கா முட்டை' திரைப்படம் பலவிதமான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

 தமிழ் சினிமா மீது பல வருடங்களாகவே இரு விசயங்கள் மீது கோபம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒன்று சிறுவர்களை சிறுவர்களாக திரையில் காண்பிக்காதது. மற்றொன்று திரையில் பெண்களுக்கு முக்கியத்துவமே கொடுக்காமல் இருப்பது. கருப்பு வெள்ளை திரைப்படங்களில் சிறுவர்களுக்கும் , பெண்களுக்கும் ஓரளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். பல திரைப்படங்களில் முக்கிய திருப்பங்கள், சிறுவர் / சிறுமிகளால் ஏற்படும் வகையில் திரைக்கதை பின்னப்பட்டிருக்கும்.  வண்ணப்படங்களின் வருகைக்குப் பிறகு இந்த இரு பிரிவினரும் முக்கியத்துவத்தை இழந்ததன் காரணம் பிடிபடவில்லை . எவ்வளவோ வளர்ந்து விட்டதாகவும் , உலகத் தொழிற்நுட்பங்களை எல்லாம் இங்கே பயன்படுத்துவதாகவும் சொல்லிக் கொண்டாலும் இந்த நிலை இன்னமும் மாறவில்லை.  சிறுவர் படங்கள் என்ற பெயரில் பெரிவர்கள் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரங்களில் சிறுவர்களை நடிக்க வைத்து காதலையும் , வன்முறையையும் திணித்த கொடுமையும் சமீப காலங்களில் இங்கே நடந்தது.!சிறுவர்களை ஓரளவிற்கு சிறுவர்களாக காதலில் , வன்முறையில் ஈடுபடாதவர்களாக  காட்டியதற்காகவே ' காக்கா முட்டை ' யை கொண்டாடலாம். ஏதோ ஒரு திரைப்படத்தின் பாதிப்பாக இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்காலாம். ஆனாலும் எடுக்கப்பட்ட விதம் வெகு இயல்பு. ஒரு தமிழ்படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வரும் போது முதன் முதலாக மிக லேசாக உணரவைத்தது இந்த காக்கா முட்டை . எல்லா விசயங்களையும் நேர்மறையாகவே காட்சிப்படுத்திய விதம் சிறப்பு .

போகிற போக்கில் கடந்து செல்கிற அதிகம் கவனம் பெறாத எளிய மக்களின் வாழ்க்கை இத்திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான சென்னைவாசிகளே கவனிக்காத வாழ்க்கை. முதல் இரண்டு காட்சிகளே இது  வழக்கமான தமிழ் சினிமா இல்லை என்பதைச் சொல்லி விடுகிறது. பெரும்பாலான வீடுகளில் தவறாமல் இடம்பெறும் பருப்பு சாம்பாரை அந்தக் கரண்டியில் எடுத்து தட்டில் ஊற்றுவது அவ்வளவு அழகு. சிறிய காட்சி என்றாலும் இது போல யதார்தத்தைக் காண்பிக்க வேண்டும். சிறுவனுக்கு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருப்பதும் அதன் மூலம் குடுப்பதினரால் லேசாக கேலி செய்யப்படுவதும் , காலப் போக்கில் இந்தப் பழக்கம் மாறிவிடுவதும் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிற்றூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் காக்காவின் முட்டையைப் பார்த்ததில்லை ; இந்தத் திரைப்படத்தில் பார்க்க முடிந்தது. படத்திற்கு காக்கா முட்டை என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்பதை தொடக்கத்திலேயே சொல்லி விடுவதால் படத்துடன் எளிதாக ஒன்றிவிட முடிகிறது. சரக்கு ரயிலிருந்து சிதறி தண்டவாளங்களில்  விழுந்த நிலக்கரித்துண்டுகளை சேகரித்து பழைய இரும்பு கடையில் எடைக்குப் போடும் பழக்கம் இருப்பதை இத்திரைப்படம் பதிவு செய்கிறது. இத்திரைப்படம் முழுவதுமே நாம் கடந்து போகிற எளிதில் கவனம் பெறாத நிறைய விசயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தங்களின் எளிமையான வாழ்க்கையில் மகிழ்ச்சி , துன்பம் , துயரம் என்று எல்லாவற்றையுமே  இயல்பாக கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். அந்தச் சிறவர்களின் அப்பா ஜெயிலுக்கு போனதற்காக யாரும் இவர்களின் குடும்பத்தை ஒதுக்கி வைக்கவில்லை.  அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் இந்த மக்களையும் சுரண்டி பிழைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையும் இயக்குநர் காட்சிப்படுத்துகிறார். சிறுவர்கள் இருவரும் வெறும் கால்களுடன் படம் முழுக்கவே மேடு , பள்ளம் , குப்பை , கூவம் , ரயிலடி , சாலை என்று நடந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து நாமும் நடக்கிறோம். இவர்களின் வாழ்வைப் போலவே திரைப்படமும்  எந்த இடத்திலும் தேங்கவேயில்லை. சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை புரிந்து கொண்டு காட்சிகளின் மூலமே நிறைய விசயங்களை வெளிப்படுத்துகிறார். இந்த சிறுவர்கள் அணியும் பொருத்தமில்லாத வெளுத்துப்போன ஆடைகள் , அன்றாட வாழ்வில் இந்த மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் என்று நிறையவே உண்மைக்கு நெருக்கமாக பதிவுசெய்யப்படுகின்றன.

ஏழ்மையான சூழலில் வாழ்ந்தாலும் தங்களின் சுயமரியாதையை இழக்காமல் வாழும் இந்த மக்களின் ( சிறுவர்களின் ) மீது மரியாதையை வரவழைக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது. திரைப்படக் காட்சிகள் வெகு இயல்பாக கட்டமைக்கப்பட்டிருந்தாலும் நுட்பமாக அரசியல் பேசுகின்றன. அவரவர் புரிதலுக்கு ஏற்ப இதைப் புரிந்து கொள்ளலாம். உலக வணிகமயமாக்கலின் தாக்கம் பிட்சாவை குறியீடாக வைத்து விவரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் அவ்வளவு எளிதாக வணிகமயமாக்கல் முன் வைக்கும் நவீன வாழ்விற்கு நகர்ந்து விட முடியாது என்பதையே இத்திரைப்படத்தின் கடைசி வசனம் " பிட்சா நல்லாவே இல்லடா , ஆயா சுட்ட தோசையே நல்லா இருந்துச்சு " உணர்த்துகிறது. விவசாய சூழலில் பிறந்து வளர்ந்த ஒருவர் இன்றைய வாழ்வு முன் வைக்கும் முதன்மை வேலையான குளுகுளு அறையில் இருந்த இடத்திலிருந்தே வேலை பார்க்கும் மென்பொறியாளர் பணியை மிகுந்த உழைப்பிற்கு , சிரமங்களுக்கு பிறகு அடைந்த பிறகு "சே ! இதுக்கு விவசாயமே பார்க்கலாம் " என்று நினைக்கிறார்கள் .நினைப்பதோடு மட்டுமல்லாமல் சமீப காலங்களில் கணிசமான எண்ணிக்கையில்  'இயற்கை விவசாயம் ' பார்க்க கிளம்பிக் கொண்டே இருக்கிறார்கள். நாகரிக வாழ்க்கை என்று சொல்லிக் கொண்டு தீண்டாமையை கைவிடாமல் தொடர்ந்து கடைபிடித்து வருவதை இத்திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது . பாரம்பரிய உடை என்று சொல்லிக் கொள்ளும் வேட்டியை கூட எல்லா இடங்களிலும் கட்டிக் கொள்ளும் உரிமையை ஒரு போராட்டத்திற்கு பிறகு தான் பெற முடிந்தது. போராடாமல் யாருக்கும் எதுவும் கிடைக்காது போல.

சில்ரன் ஆப் கெவன் உள்ளிட்ட சில திரைப்படங்களை நினைவுபடுத்தினாலும் இது ஒரு யதார்த்த சினிமா . இத்திரைப்படம் உலக சினிமாவா ? தெரியாது . ஆனால் , அசலான இந்திய சினிமா.  உலகின் வேறுபகுதிகளில் வசிப்பவர்கள் இத்திரைப்படத்தைப் பார்க்கும் போது இந்திய முகத்தைத் தெரிந்து கொள்ளலாம்.  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் பொருளாதார தீண்டாமைக்கு உலக நாடுகள் என்ன பதில் வைத்திருக்கின்றன. தெரியவில்லை.

ஒரு வாழ்வனுபவம் அழகாக நேர்மறையாக அசலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Friday, May 29, 2015

கதாநாயகத் துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் !


சினிமா , அரசியல் ,ஆன்மீகம் இந்த மூன்றும் தான் கதாநாயக துதிபாடலை அதிகம் வளர்க்கின்றன . சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும் ,ஆன்மீகவாதிகளையும் பிடிக்கும் என்பதற்கும் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டாடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .ஜாதி ,மதம் ,அரசியல்,சினிமா என  ஒவ்வொரு விசயத்திலும் பிரிவினைவாதம்  இந்த கதாநாயகத் துதிபாடல் மூலம் தான் வளர்க்கப்படுகிறது . தாங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டவர் என்ன சொன்னாலும் ,என்ன செய்தாலும் சரி என்று தான் வாதிடுவது தான் துதிபாடிகளின் பொதுக்குணமாக உள்ளது . இது எவ்வளவு  பெரிய முட்டாள்தனம் என்பதை ஒரு போதும் அறிய மாட்டார்கள் . 

சினிமாக்காரர்கள் ரசிகர் மன்றங்கள் முலமாகவும் , அரசியல்வாதிகள் கட்சிக் கிளைகள் மூலமாகவும் , ஆன்மீகவாதிகள் மடக் கிளைகள் மூலமாகவும் தொடர்ந்து துதிபாடப்படுகிறார்கள். ஒவ்வொரு ரசிகர் மன்றமும் , கட்சிக் கிளையும் , மடக் கிளையும் குறிபிடத்தக்க அளவு அங்கத்தினரைக் கொண்டு செயல்பட்டு கதாநாயக துதிபாடல் வற்றிப்போய்விடாமல் வளர்க்கப்படுகிறது. சமூக அளவில் பெரும் குற்றமாக கருதப்படுவதையோ , சமூக அளவில் மிகக்கேவலமாக மதிப்பிடப்படுவதையோ இந்தத் தலைவர்களாக கொண்டாடப்படுபவர்கள் செய்யும் போது இவர்களை இந்தத்துதிபாடிகள் குற்றவாளிகளாக ஏற்றுக் கொள்வதில்லை.  இவர்கள் செய்த குற்றத்திற்கு , கேவலமான செயலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவார்கள். இந்த இடத்தில் தான் துதிபாடிகள் அடிமைகளாக மாறுகிறார்கள்.

 தனிமனித துதிபாடல் எங்கெல்லாம் வளர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் எதிர்நிலைகள் தொடர்ந்து இயங்குகின்றன.  ஒரு அரசியல்வாதிக்கு மாற்றாக மற்றொரு அரசியல்வாதி , ஒரு சினிமாக்காரருக்கு மாற்றாக மற்றொரு சினிமாக்காரர் ,ஒரு ஆன்மீகவாதிக்கு மாற்றாக மற்றொரு ஆன்மீகவாதி , ஒரு கலைஞருக்கு மாற்றாக மற்றொரு கலைஞர் , ஒரு விளையாட்டு வீரருக்கு மாற்றாக மற்றொரு விளையாட்டு வீரர் என்று எதிர்நிலைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. எதிர்நிலைகள் காரணமாக இருபிரிவினருக்கும் இடையே மோதல்கள் உருவாகின்றன. தான் தலைவனாக நினைத்து துதிபாடும் ஒரு மனிதனை , இன்னொரு மனிதன் தரக்குறைவாக பேசும் போது அவனிடம் பெருங்கோபம் உண்டாகிறது. இந்தக் கோபம் மோதலுக்கு வழிவகுக்கிறது.

இந்தத் தனிமனித துதிபாடல் ஒரு மனிதனின் சுயத்தை அழித்து ஒரு சார்புநிலையை உருவாக்கிவிடுகிறது. தான் துதிபாடும் ஒருவர் எது செய்தாலும் சரிதான் என்ற மூடத்தனத்தை இந்த சார்புநிலை உருவாக்குகிறது. இந்தச் சார்புநிலை தான் ஆபத்தானது. பெரும் பாதிப்புகளை உருவாக்கக்கூடியது . அவ்வளவு எளிதாக தான் துதிபாடும் ஒருவரை மாற்றமாட்டார்கள் இந்தத் துதிபாடிகள். தனிமனித துதிபாடலில் முகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சினிமாக்காரர்களின் , அரசியல்வாதிகளின் , ஆன்மீகவாதிகளின் விதவிதமான கோணங்களில் படம்பிடிக்கப்பட்ட முகங்கள் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு விதத்தில் காட்டப்படுவதன் மூலம் இந்தத் துதிபாடல் அறுபடாமல் தொடர்ந்து பேணப்படுகிறது. இந்த முகங்களைக் காட்டி துதிபாடலை வளர்ப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரிகைகளும் , தொலைக்காட்சிகளும் தான் அதிகளவில் முகங்களைத் தொடர்ந்து காட்டி துதிபாடலை வளர்க்கின்றன.

சினிமாவையும் சினிமாக்காரர்களையும் தவிர்த்து தமிழ்நாட்டில் எதுவும் இல்லையா தொ(ல்)லைக்காட்சிகளே ?உலகவணிகமயமாக்கலின் முக்கிய கருவி இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் தான். இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதே இல்லை. எதை ஒளிபரப்பறாங்களோ அதைப் பார்க்க வைக்கணும், எதை விளம்பரப்படுத்துறாங்களோ அதை வாங்கத் தூண்டனும் இதைத் தான் எல்லாத் தொ.கா.களும் செய்கின்றன. நமது வீடுகளில் நமக்குப் பயன்படாத நிறைய பொருட்கள் அடைந்து கிடப்பதற்கும், நமது மூளையில் எதற்கும் பயன்தராத தகவல்கள் குவிந்துகிடப்பதற்கும் இந்த தொல்லைக்காட்சிகள் தான் முக்கிய காரணம்.சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் அதிகளவிலும் , அரசியல் ஆன்மீக அடுத்தடுத்த அளவிலும் இடம்பெறுகின்றன.

 ஒவ்வொரு சாதியும் சங்கம் வைத்திருக்கிறது. அந்த சாதியைச் சார்ந்தவர்களில் யார் சமுகத்தில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்களோ அவர்களை முன்நிறுத்தி அடுத்த தலைமுறைக்கும் சாதியை எளிதாக கடத்துகிறார்கள். இவர்களால் முன்னிறுத்தப்படும் சாதித் தலைவர்களில் பெரும்பான்மையோர் ஒட்டு மொத்த சமூகத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அந்தத் தலைவர்களை சாதித் தலைவர்களாக சுருக்கி விடுகிறார்கள்.   சமீப காலங்களில் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் சேர்ப்பதும் தங்களின் வாகனங்களில் சாதிப் பெயரை எழுதுவதும் அதிகரித்து வருகிறது. இது நல்ல அறிகுறி அல்ல. சாதியை ஒழிக்க வேண்டிய கல்விக்கூடங்களான பள்ளிகள் , கல்லூரிகளின் பெயர்களே வெளிப்படையான சாதிப் பெயர்களாகவும் மதப் பெயர்களாகவும் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. சாதியின் ஆணிவேரைக் கண்டடைந்து  வேரறுக்க வேண்டியது நம் சமூகத்தின் கடமை. பெரியார் அளவிற்கு மற்றவர்கள் செயல்படாதது தான் இன்றைய நிலைமைக்கு காரணம்.

எந்த மனிதரும் எந்த மனிதரையும் துதிபாடலாம் , கொண்டாடலாம் . தவறில்லை.  அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.ஆனால் இந்தத் துதிபாடலால் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். நடைமுறையில் இந்தத் துதிபாடலால் நடைபெறும் செயல்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், பிரிவினைவாதத்தை தொடர்ந்து முன்நிறுத்துவதாகவும் மட்டுமே இருக்கின்றன.  சார்புநிலையை விட்டு வெளியே வந்து தான் துதிபாடும் ஒருவர் தப்பு செய்தால் தப்பு தான் என்று கூறும் நடுநிலையான மனநிலையையே இப்போதைய தேவை. இந்தத் துதிபாடல்களாலும் , எதிர்நிலைகளாலும் , சார்புநிலைகளாலும் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவை கிடைக்காமலே போகின்றன. ஒரு சிறுவிசயத்திற்கு கூட காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. இந்தத் துதிபாடல்கள் காரணமாக செயல்படாதவர்கள் கூட தொடர்ந்து தலைவர்கள்களாக இருக்கிறார்கள். செயல்படும் தலைவர்கள் தான் இன்றைய தேவை. நாம் சுயமாக சிந்திப்பதற்கு இந்தத் துதிபாடல் சார்ந்த சார்புநிலை தடையாக இருக்கிறது.

 துதிபாடாமைக்கு துதிபாடுங்கள் !

Thursday, April 16, 2015

எக்காலத்திற்குமான கலைஞன் !

இந்த கலைஞனைப் பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உலகெங்கும்  இன்றும் எழுதப்படுகின்றன. தொடர்ந்து அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன ,புத்தகங்கள் எழுதப்படுகின்றன .திரைப்படம் எடுக்க கற்றுத்தரும் அனைத்து இடங்களிலும் இந்த கலைஞனின் படைப்புகள் விவாதிக்கப்படுகின்றன .எங்கெல்லாம் திரைப்படம் எடுக்கப்படுகிறதோ, பார்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த கலைஞனைக் கொண்டாடுகிறார்கள்.பெரியாரையும் ,பாரதியையும் பெற்றதற்கு தமிழ்நாடு பெருமைப்படலாம், காந்தியையும் , அம்பேத்கரையும் பெற்றதற்காக இந்தியா பெருமைப்படலாம். ஆனால், இந்த சார்லி சாப்ளினைப் பெற்றதற்காக உலகமே பெருமைப்படுகிறது .

நிறைய கலைஞர்கள் மொழி,இனம்,மதம்,நாடு இந்த மாதிரியான பிரிவினைகளுக்குள் அடங்குபவர்களாக இருக்கிறார்கள்.அதனால் இந்தப் பேதங்களைக் கடந்து அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. சார்லி சாப்ளின் ,இந்த மாதிரியான பேதங்களுக்குள் அடங்காதவராக இருக்கிறார். பேதங்களைக் கடந்த, சக மனிதர்கள் மீதான அக்கறையை அவரது படைப்புகள் வெளிப்படுத்துக்கின்றன.பொதுவாகவே நாம் கலைஞர்களை ஏன் கொண்டாடுகிறோம் ? ஏன் கொண்டாட வேண்டும் ?

வாழ்வியல் சூழலை ,இயற்கையை ,சக மனிதர்கள் குறித்த பதிவுகளை தங்களின் படைப்புகள் மூலமாக அழுத்தமாக வெளிப்படுத்துபவர்களைத் தான்  கலைஞர்கள் என்று சொல்கிறோம் . நாம் , கலைஞன் என்று கொண்டாடும் ஒரு மனிதனின் படைப்பு, ஏதோ ஒரு விதத்தில் எல்லைகளைக் கடந்து நிறைய மனிதர்களால் கவனிக்கப்படுகிறது .மற்றவர்களின் படைப்பை விட ,கலைஞனின் படைப்பில் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது .இந்த ஒரு கலைஞனைக் கொண்டாடுவதன் வாயிலாக நம்மை நாமே கொண்டாடுகிறோம் . நம்மை நாமே கொண்டாடத் தூண்டுகிற ஒவ்வொரு படைப்பும் உன்னதமே;ஒவ்வொரு மனிதனும் கலைஞனே.

சார்லி சாப்ளினை ஏன்  மீண்டும் மீண்டும் தொடர்ந்து  கொண்டாடுகிறோம் ?  " சார்லி சாப்ளின் " ,இந்தப் பெயரை நினைக்கும் போதோ,  வாசிக்கும் போதோ ,எழுதும் போதோ நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகவே இருக்கிறது. எந்தவித  பேதங்களுக்கும் இடமளிக்காமல் இந்தக் கலைஞனை அப்படியே நம் மனம் ஏற்றுக் கொள்கிறது .இந்த ரசவாதம் தான் சர் சார்லியின் மாபெரும் சாதனை .சார்லியின் படைப்புகள் , சக மனிதர்கள் மீதான அக்கறையை ,வாழ்வின் எளிய தருணங்களை அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. அதனால், சார்லி நமக்கு மிகவும் நெருக்கமானவராகி விடுகிறார்.

நாடகக்கலையின் மூலமே மிகச்சிறந்த நடிகர்கள் உலகெங்கும்  தோன்றியுள்ளனர் .தமிழ்நாட்டிலும் சிறந்த நடிகர்களாக இன்று கொண்டாடப்படும் அனைவரும் நாடகக்கலையின் கொடை தான். சாப்ளினும் நாடகக்கலையின் மூலம் கிடைத்தவர் தான் . இதில் சுவாரசியமும் ,சுடும் உண்மையும்  என்னவெனில் ,இவர்களில் யாரும் சிறந்த நடிகர்களாக உருவாக வேண்டுமென்று நாடகக்கலையைத் தேர்ந்தெடுக்கவில்லை . தங்களின் வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக்கலையைத் தேர்ந்தெடுத்தவர்கள் தான், உலகம் போற்றும் திறமை வாய்ந்த கலைஞர்களாக மாறியுள்ளனர்.

16-ஏப்ரல்-1889 அன்று இங்கிலாந்தில் பிறந்தார், சார்லி சாப்ளின். குழந்தைப்பருவத்தில் வறுமை அவரை வாட்டியது .5 வயதில் தனது அம்மாவிற்குப் பதிலாக முதன் முதலில் நடித்த சாப்ளின், 10 வயதிற்குப் பிறகு நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் .பின்பு ,சிறந்த நடிகராகவும் ,நகைச்சுவை நடிகராகவும் மாறினார். சாப்ளினின் திறமையைக் கண்டடைந்த பிரட் கார்னொ ( Fred Karno ) என்னும் இங்கிலாந்து நாடகக்கம்பெனி அவரை ஒப்பந்தம் செய்து அமெரிக்காவிற்கு ( 19வது வயதில் ) அழைத்துச் சென்றது. 1914-ல் கிஸ்டோன் ஸ்டுடியோ( Keystone Studios )விற்காக முதன் முதலாக திரையில் தோன்றினார் .அதன் பிறகு சார்லி சாப்ளினின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1918 -ல் உலகமே கண்டுகொள்ளும் நடிகராக மாறிய சார்லி சாப்ளினின் முதல் முழுநீளத் திரைப்படம் 1921-ல் வெளிவந்த "தி கிட் " . தனது திரைப்படங்களில்  திரைக்கதை,இயக்கம் ,தயாரிப்பு ,நடிப்பு என அனைத்தையும் சாப்ளினே செய்தார் .அவரது பிற அமெரிக்கப் படங்கள் , எ வுமென் ஆப் பாரிஸ் (1923)( நடிகராக நடிக்கவில்லை )  , தி கோல்டு ரஷ்  (1925), தி சர்க்கஸ் (1928),சிட்டி லைட்ஸ் (1931) ,மாடர்ன் டைம்ஸ் (1936), தி கிரேட் டிக்டேட்டர் (1940),மோன்சியர் வெர்டாக்ஸ்   (1947),லைம்லைட் (1952) .

தனது திரைப்படங்களின் மூலம் இடது சார்பு கருத்துக்களை பரப்பி வந்த சார்லி சாப்ளினை " கம்யூனிஸ்ட்"  என்று முத்திரை குத்தி அவரை அமெரிக்காவை விட்டு வெளியேற்ற நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர் FBI அதிகாரிகள்.அமெரிக்காவில் இருந்தாலும் தொடர்ந்து இங்கிலாந்து குடியுரிமையை நீட்டித்து வந்தார், சார்லி சாப்ளின்.1952 -ஆம் ஆண்டு தனது அடுத்த படமான  "  லைம்லைட் "  திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக இங்கிலாந்து சென்றிருந்தார், சாப்ளின்.இது தான் சமயம் என்று   FBI அதிகாரிகள் ,சாப்ளின் மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்கான நுழைவுச் சீட்டைக் காரணமே ( நேரடியான ) இல்லாமல் ரத்து செய்தார்கள் . அதனால் , அவர் ஐரோப்பாவிலேயே (சுவிஸர்லாந்தில்) தங்கும்படி நேர்ந்தது .  அன்றும் சரி ( சாப்ளின் ) , இன்றும் சரி ( ஸ்னோ டோன் ), அமெரிக்காவிற்கு பிடிக்காதவர்கள் தான் மக்களுக்காக போராடுபவர்களாக  இருக்கிறார்கள் . வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் இன்னும் நிறைய உதாரணங்கள் கிடைக்கும் .அமெரிக்காவை அமெரிக்காவில் பிறக்காத ஒபாமாவே ஆண்டாலும் அமெரிக்கப் புத்தி துளியும் மாறவில்லை . ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே அடக்கி ஆள நினைப்பது தான் அமெரிக்கப் புத்தி .

சாப்ளின் , ஐரோப்பாவிலிருந்தபடியே படமெடுக்க ஆரம்பித்தார் . அவரது முதல் ஐரோப்பிய  படம் ," எ கிங் இன் நியூயார்க் (A King in New York) (1957) " .  அமரிக்காவால் அவருக்கு நேர்ந்த அனுபவங்களை இப்படத்தின் திரைக்கதையில் புகுத்தி அமெரிக்காவைத் தைரியமாக விமர்சனம் செய்தார் .

அடக்குமுறைக்கு எதிராக தனது கலையின் மூலமே குரல் கொடுக்கும் துணிச்சல் ஒரு உண்மையான கலைஞனுக்கு இருக்க வேண்டும் . அந்தத் துணிச்சல் சார்லி சாப்ளினுக்கு இருந்தது .ஹிட்லரை ,அவர் வாழ்ந்த காலத்திலேயே தனது "தி கிரேட் டிக்டேட்டர் " திரைப்படம் மூலம் விமர்சனம் செய்த சாப்ளினுக்கு இது சாதாரணம் தான் . இன்றைய சூழலை நினைத்துப் பாருங்கள் . ராஜபக்சேவை விமர்சனம் செய்து படமெடுக்க முடியுமா? அமெரிக்காவின் செயல்பாடுகளை நேரடியாக விமர்சனம் செய்ய முடியுமா ? கருணாநிதி, ஜெயலலிதாவை பகடி செய்து படமெடுக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லையே ஏன் ? எவ்வளவோ முன்னேறி விட்டதாகச் சொல்லிக் கொள்கிறோம் .மனித சமுதாயத்தைக் காக்க எத்தனையோ அமைப்புகள் உலகெங்கும் உள்ளன. ஆனாலும் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு தான் அனைத்தும் நடக்கிறது . அப்புறம் எப்படி தற்காலக் கலைஞர்களைக் கொண்டாடுவது ? வேண்டுமானால் சமீபத்தில்,  அமெரிக்காவின் பாதக செயல்களை துணிந்து அம்பலப்படுத்திய  ஜூலியன் அஸாஞ்ஜே  மற்றும் ஸ்நோ டோன் இவர்களை வேண்டுமானால் கொண்டாடலாம் .

அமெரிக்காவை எதிர்ப்பது மட்டும் கலையின் நோக்கமல்ல, மனித சமுதாயத்தின் நலனை கெடுக்கும் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் . அழகியல் மட்டும் கலையின் நோக்கமாக இருக்கக்கூடாது . அழகியலுடன்  அரசியலும் சேர்ந்தது தான் உண்மையான கலைப்படைப்பாக இருக்க முடியும் . சாப்ளின் வெறும் நகைச்சுவைப் படம் மட்டும் எடுத்திருந்தால் எப்போதோ அவரை மறந்திருப்போம் . சாப்ளின் இன்று வரை நம் நினைவில் இருப்பதற்கு அவரது அழகியல் சார்ந்த அரசியலும் ஒரு காரணம் . சாப்ளினிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய விசயங்கள் உள்ளன .

சாப்ளினின் கடைசி மூன்று படங்களான மோன்சியர் வெர்டாக்ஸ்  ,லைம்லைட் மற்றும் எ கிங் இன் நியூயார்க்  சர்வதேச அங்கிகாரத்தைப் பெறவில்லை .அதனால் ,தனக்கு பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த ட்ராம்ப் கதாப்பாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தார் .சாப்ளின் உருவாக்கிய  ட்ராம்ப் ( Tramp ), தொலதொல ஆடையும், தொப்பியும், கைத்தடியும், வேறுபட்ட காலணியும் அணிந்த குள்ள மனிதக் கதாப்பாத்திரம் . சாப்ளின்  ட்ராம்ப் -ஆக தோன்றிய முதல் படம் " கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ் " , கடைசி படம்  "மாடர்ன் டைம்ஸ் ". தனது  பழைய  ட்ராம்ப்  பேசா குறும்சித்திரங்களான, எ டாக்'ஸ் லைஃப் (A Dog's Life) ,சோல்டர் ஆர்ம்ஸ் ( Shoulder Arms) மற்றும் தி பில்கிரிம் (The Pilgrim) ஆகிய படங்களை ஒன்றிணைத்து , இசையமைத்து ,முதல் உலகப்போரின் சில  காட்சிகளையும் இணைத்து தி சாப்ளின் ரிவ்யு (1959) என்ற பெயரில் முழு நீள ட்ராம்ப் படமாக வெளியிட்டார் .சாப்ளினின் கடைசி மற்றும் முதல் கலர் படம் , எ கௌண்டஸ் ஃப்ரம் ஹாங் காங் (1967). இந்தப்படத்திலும் ,எ வுமென் ஆப் பாரிஸ் படத்திலும் மட்டுமே சாப்ளின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவில்லை . நகைச்சுவைப் படமான இதில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் ,நடிகையான மார்லன் பிராண்டோ வும் சோபியா லாரனும் நடித்திருந்தனர் ,இருந்தும் இப்படம் பெரும் தோல்வியடைந்தது .இந்த எதிர்மறை விளைவால் மனமுடைந்த சாப்ளின் மீண்டும் படமெடுக்க விரும்பவில்லை .1972-ல் சாப்ளினுக்கு " கெளரவ ஆஸ்கார் விருது " அறிவிக்கப்பட்டது .முதலில் அமெரிக்கா செல்லத் தயங்கினார், சாப்ளின், பின்பு சமாதானம் ஆகி 20 வருடங்களுக்குப்  மீண்டும் அமெரிக்கா சென்று விருதைப் பெற்றுக்கொண்டார் .

திரையுலகில் பெரும் புகழ் பெற்றிருந்தாலும் சாப்ளினின் குடும்ப வாழ்க்கை அவருக்கு திருப்திகரமாக இல்லை .வயதில் மிகவும் குறைந்த பெண்களையே சாப்ளின் தொடர்ந்து மணமுடித்தார் . தனது முதல் மூன்று திருமணங்களும் கசப்பான விவாகரத்தில் முடிந்தது .மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சாப்ளினுக்கு விரைவாகவே நரைக்க ஆரம்பித்தது .சார்லியின் 54வது வயதில் 17 வயது ஓனா ஓ'நீலை நான்காவதாக மணமுடித்தார் . ஓனா ஓ'நீல் , சாப்ளினை நன்றாக புரிந்துகொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார் . இவர்களுக்கு மொத்தம் எட்டு குழ்ந்தைகள் பிறந்தனர் .1960களில் இருந்தே சிறு சிறு  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த  சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் எனும் சார்லி சாப்ளின் 1977 டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்மஸ் தினத்தன்று இந்த மண்ணைவிட்டு மறைந்தார் .

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கலைஞர் என்று சார்லி சாப்ளினைத் தைரியமாகக் குறிப்பிடலாம் .அரசியலை, வாழ்வியல் சூழலை ,இயந்திரங்களின் செயல்பாட்டை , சக மனிதர்களை, சாப்ளின் அளவிற்கு பகடி செய்த இன்னொருவரை கடந்த ஒரு நூற்றாண்டாக நாம்  கண்டதில்லை .பன்முகத்திறமை உடைய சாப்ளின், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என்று அனைத்து துறையிலும் வெற்றி பெற்றார் .

திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை மிகத்தெளிவாக உணர்ந்திருந்த சாப்ளின் பேசும் படங்கள் வந்த பிறகும் , பேசா படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார் .சாப்ளினிடமிருந்து அனைத்து இயக்குனர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடமிது . திரைப்படம் என்று வரும் பொழுது மிகவும் முக்கியமாக கவனம் செழுத்த வேண்டிய பகுதி திரைக்கதை . திரைக்கதை மட்டும் சிறப்பாக அமைந்துவிட்டால் போதும் கதையே இல்லாத படங்கள் கூட பெரும் வெற்றி பெறும். இது உலகறிந்த உண்மை ,இருந்தும் நம் தமிழ் திரையுலகில் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை ,காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை . வெறும் கதையை படித்தோ ,கேட்டோ தெரிந்து கொள்ளலாம் .திரைக்கதையை காட்சிகளின் மூலமே வெளிப்படுத்த முடியும் .நிறைய தமிழக இயக்குனர்கள் தங்களையே சுயம்புவாக எண்ணிக்கொண்டு  முற்றிலும் பொருந்தாத , மடத்தனமான காட்சிகளை வைத்தும் , தர்க்கப்பிழைகள் நிறைந்த திரைக்கதையை வைத்தும் படமெடுத்து  நம்மை முட்டாளாக்குகின்றனர் தனக்குத்தெரியாத விசயத்தைப் பற்றிப் படமெடுக்கும் போது ,அந்த விசயம் தெரிந்தவர்களை துணைக்குச் சேர்த்துக்கொண்டு திரைக்கதையெழுதினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள் .தமிழ் திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு வியாதி உண்டு . படத்தின் பெயர் பட்டியலில் கதை,திரைக்கதை,வசனம் ,இயக்கம்  என்று தங்கள் பெயரைப் போட்டுக்கொள்ளத் துடியாய் துடிப்பார்கள், அப்படி என்ன சுகம் கிடைக்குமோ தெரியவில்லை .எல்லோரும் சார்லி சாப்ளின் ஆகிவிட முடியுமா என்ன !

தி கோல்டு ரஷ்  ,சிட்டி லைட்ஸ் ,மாடர்ன் டைம்ஸ்  மற்றும் தி கிரேட் டிக்டேட்டர்  ஆகிய நான்கு படங்களும் சார்லியின் சிறந்த படங்கள் என்று பெரும்பான்மையான விமர்சகர்கள் சொல்கிறார்கள். இவற்றில் ஒவ்வொரு படமும் ஒவ்வொருவிதமாக இருத்தாலும் சிட்டி லைட்ஸ் -ம் ,மாடர்ன் டைம்ஸ் -ம் கொஞ்சம் நெருக்கமாக இருக்கும் . சார்லி  சாப்ளின் ஒரு பெர்பெக்சனிஸ்ட் (perfectionist) . அவரது ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு திருத்தமாக இருக்கும் . எதைக் காண்பிக்கிறாரோ அது அதுவாகவே நமக்குத் தோன்றும் . சாப்ளினின் படங்களில் மாடர்ன் டைம்ஸ்  என்னை மிகவும் பாதித்த திரைப்படம் . இந்தப்படத்தைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் ,முன்பே யாராவது எழுதியிருக்கக்கூடும் .இருந்தாலும் பரவாயில்லை இன்னொரு முறை கூட எழுதலாம்;தப்பில்லை . அந்த அளவிற்கு சிறந்த படமிது .

மாடர்ன் டைம்ஸ் -படம் பற்றி சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருந்தாலும் எதையும் சொல்லப்போவதில்லை.சார்லி சாப்ளின் யார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்த ஒரே ஒரு படமே போதும் . ரசனையான அழகியலுடன் நிறைய காட்சிகள் இந்தப்படத்தில் உள்ளன. நம் எதிர்பார்ப்பை நிறைய இடங்களில் தவிடு பொடியாக்கிவிடுவார் .மனிதர்களின் விநோதமான பழக்கங்களை கேலி செய்வார். எது எதார்த்தம் என்பதை நிலைநிறுத்த கதாநாயக பிம்பத்தை உடைத்தெறிவார் .இயந்திரங்களைப் பகடி செய்வார் . இந்தப்படத்தைப் பற்றி எதையும் சொல்லப்போவதில்லை என்று சொல்லியே இவ்வளவு விசயங்களைச் சொல்லிவிட்டேன் . இந்தப்படத்தை பார்க்காதவர்கள் முதலில் பாருங்கள், பார்த்தவர்கள் மீண்டும் பாருங்கள் .கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் .

மகாத்மா காந்தியின் வரலாற்றை "காந்தி(1983)" என்ற பெயரில் திரைப்படமாக எடுத்த ரிச்சர்ட் அட்டன்பறோ ,சார்லி சாப்ளினின் வரலாற்றையும் "சாப்ளின்(1992)" என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார். ராபர்ட் டவ்னி எனும் நடிகர், சாப்ளினாக மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். முடிந்தால் இந்தப்படத்தையும் பாருங்கள். எல்லா நாடுகளுக்கும் பொதுவான இந்தக் கலைஞனை , அன்றும் கொண்டாடினார்கள்; இன்றும் கொண்டாடுகிறார்கள்;நாளையும் கொண்டாடுவார்கள். ஏனென்றால் சார்லி சாப்ளின் , எக்காலத்திற்குமான கலைஞன் !

குறி எனும் சிற்றிதழில் வெளிவந்த கட்டுரை இது . ஒரு மழை நாளில் ,அவரது பிறந்த நாளில் இதைப் பதிவிடுவதில் மகிழ்ச்சி.

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !

K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

...............................................................................................................................................................


Saturday, April 11, 2015

சூரியன் எரியும் கதை !

சூரியனும் சந்திரனும் ஒரு விருந்திற்கு சென்றார்கள்.அங்கே வடை ,பாயாசத்துடன் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. உணவை விரைவாக வயிறு நிறைய சாப்பிட்ட சூரியன் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு வந்த சூரியனைப் பார்த்து அம்மா கேட்டார்,

 " வாடா, பெரியவனே விருந்தெல்லாம் முடிந்ததா ?"

 "முடிந்தது அம்மா ! ,இது போன்ற உணவை இதற்கு முன்பு உண்டதில்லை "

"எங்கடா மகனே எனக்கு உணவு ?"

சூரியன் மேலும் கீழும் விழித்தான்.
அப்போது சந்திரனும் வீடு வந்து சேர்ந்தான்.
சந்திரனிடமும் அதே கேள்விகளை அம்மா கேட்டார் .

"வாடா, சின்னவனே விருந்தெல்லாம் முடிந்ததா?"

"ஆமாம், அம்மா !"

"எங்கடா மகனே ,எனக்கு உணவு?"

"இலையை விரியுங்கள், அம்மா!"

"எதுக்குடா ?"

"முதலில் இலையை விரியுங்கள் ,பிறகு சொல்கிறேன் " என்றான் சந்திரன்.

வீட்டின் முன்புறத்தில் இருந்த வாழை மரத்தில் ஒரு இலையை அறுத்து வந்து விரித்தாள் ,அம்மா.

தனக்கு படைத்த உணவில் பாதியை எடுத்து வைத்துக் கொண்டு மீதியை உண்ட சந்திரன்.அந்த பாதி உணவை இலையில் வைத்தான்.பசியுடன் அந்த உணவை உண்ட அம்மாவின் வயிறு குளிர்ந்தது.அம்மா , மகன்களைப் பார்த்து

"சூரியனே,பசியால் என் வயிறு எரிந்தது போல நீயும் எரிந்து போ !"

"சந்திரனே , என் வயிறு குளிர்ந்தது போல நீயும் குளிர்ந்து போ !" என்று கூறினார் .

அதனால் தான் சூரியன் எப்போதும் எரிந்துகொண்டு வெப்பத்தையும்  ,சந்திரன் எப்போதும் குளிர்ச்சியையும் தருகிறார்களாம் .

சமீபத்தில் ஒரு டீக்கடையில் ,டீ மாஸ்டர் தனது வாடிக்கையாளரிடம் சொன்ன கதை இது .இந்தக் கதை நாடோடி கதைகள் பிரிவைச் சேர்ந்ததாகவே இருக்கும் என நினைக்கிறேன் . இந்த மாதிரியான அர்த்தமுள்ள வேடிக்கையான கதைகள் நம் வாழ்வை சுவாரசியப்படுத்துகின்றன .

கடந்த ஆண்டிற்கு முன்பு வரை வெப்பத்தை மட்டுமே அதிகமாக உணர்ந்தோம் . ஆனால் , கடந்த ஆண்டிலிருந்து வெப்பத்துடன் சேர்த்து எரிச்சலையும் தாங்க வேண்டியுள்ளது . கடந்த ஆண்டு , அக்னி நட்சத்திரத்திற்கு பிறகும் வெயில் கொளுத்தியது . இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயில் கொளுத்துகிறது எரிச்சலுடன் .  அளவிற்கு அதிகமான வெப்பம் உமிழும் பொருட்களையும், விதவிதமான வாயுக்களை வெளியேற்றும் பொருட்களையும் பயன்படுத்துவது தான் எரிச்சல் அதிகமாவதற்கு காரணமாக இருக்ககூடும் .ஆனாலும் , சூரியன் இல்லாத வாழ்வை பூமியில் கற்பனை கூட செய்ய முடியாது . உலக சக்திகளின் ஆதாரம் சூரியன் தான் .

மேலும் படிக்க :

சூரியன் - உலக சக்திகளின் மையம்

அக்னியையும் தாண்டி ...!

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?
...................................................................................................................................................................


Saturday, March 14, 2015

போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !


ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும்
போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி

இந்த வரிகளுடன் கூடிய பாடலை ,1960 ஆம் ஆண்டு  கே,வி.மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த 'வீரக்கனல் ' திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார் .இந்தப் பாடலை  எல்.ஆர். ஈஸ்வரியும் ,எஸ்,சி .கிருஷ்ணனும் பாடியுள்ளனர் .

இந்தப் பாடலைப் பார்க்க :-  http://www.pattukkottaiyar.com/site/?p=452

தாலி குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன . மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகள் தான் தீர்வு . பெண்களைப் பார்த்து என்னென்ன கேள்விகள் கேட்கிறோமோ ,அதே கேள்விகளை ஆண்களைப் பார்த்துக் கேட்கும்போது தான்  ஆண் -பெண் சமத்துவம் நிகழும் .

தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் தனிமனித சுதந்திரம் . நிறைய திருமணங்களின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளப்படுகிறது . அந்த மோதிரங்களைக் கழற்றி வைப்பார்களா ? அல்லது எப்போதும் அணிந்தே இருப்பார்களா ? என்று தெரியவில்லை .ஆனாலும் மணமுடிக்கும் இருவருமே மோதிரம் அணிகிறார்கள் .அப்படிப் பார்த்தால் இந்து சமய முறையில் மணமுடிக்கும் போதும் இருவருமே தாலி அணிந்து கொள்வது தானே நியாயமாக இருக்கும் . பெண்களை ஒடுக்குவது மட்டும் தான் இந்து கலச்சாரமா ?

ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும்
போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி.....

மேலும் படிக்க :

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

கலாச்சார விடுதலையே சமூக விடுதலை !

எது கலாசாரம் - கி.ரா...!
...................................................................................................................................................................

Saturday, January 10, 2015

என்ன செய்யப் போறீங்க மிஸ்டர்.மோடி ?


தூய்மை இந்தியா .கழிவு மேலாண்மையில்(Waste management) கவனம் செலுத்தாமல் சுத்தத்தைப் பற்றி பேசுவது  எவ்வளவு அபத்தம்.எளிதில் மட்காத குப்பைகளான பிளாஸ்டிக் ,எலக்ட்ரானிக் கழிவுகளை பிரித்தாலே போதும் மற்ற குப்பைகள் ( காய்கறி கழிவுகள், காகிதங்கள், இறந்த உடல்கள் ,etc) மட்குண்ணிகளால் (decomposers) ஒரு சில மாதங்களில் சிதைக்கப்பட்டு மண்ணிற்கு உரமாகிவிடும். இதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால் மண் எங்கே ? நகரத்தையும் ,கிராமத் தெருக்களையும் கான்கிரிட்டால் மூடிவிட்டோம். அப்புறம் நிலத்தடி நீர் கீழே போய்விட்டது. குப்பை அப்படியே கிடக்கிறது என்ற புலம்பல் தான் மிச்சம்.

 பூமியின் கதாநாயகர்கள் இந்த மட்குண்ணிகள் தான். இந்த மட்குண்ணிகள் இல்லாத பூமியை ஒரு நொடி கூட கற்பனை செய்ய முடியவில்லை. எளிதில் மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனியாக பிரித்து மறுசுழற்சி செய்தாலே பாதி இந்தியா சுத்தமாகி விடும்.

இயற்கையில் கழிவு என்பதே இல்லை. மனிதர்கள் தான் கழிவு என்பதை உருவாக்கி அதை சுத்தப்படுத்த வேறு மெனக்கெடுகிறோம். இயற்கையை நாம் ஒன்றும் காப்பாற்ற வேண்டியதில்லை. தன்னைக் காத்துக் கொள்ளும் பேராற்றல் இயற்கையிடம் இருக்கிறது. இயற்கை மீது நாம் கை வைக்காமல் ( மணல் அள்ளுதல், மலையைக் குடைதல், காடுகளை அழித்தல் ,ஆலைக் கழிவுகளை கலத்தல் etc ) இருந்தாலே போதும்.

எந்த உயிரினமும் தனது தேவைக்கு மீறிய எதையும் இயற்கையிடமிருந்து பெற முயல்வதில்லை மனிதனைத் தவிர. ஒரு பக்கம் பெருநிறுவனங்கள் மூலம் பலநூறு ஆண்டுகளாக சேர்த்துவைக்கப்பட்ட இயற்கையின் வளங்களை கொள்ளையடிக்க  அனுமதியளித்துவிட்டு மறுபக்கம் சுத்தத்தைப் பற்றி பேசுகிறார்கள். இயற்கையைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர்கள் தான் இங்கு ஆட்சி செய்கிறார்கள் ,சட்டம் இயற்றுகிறார்கள்,திரைப்படங்கள் எடுக்கிறார்கள் , பாடத்திட்டம் வகுக்கிறார்கள் etc..

மட்கும் குப்பைகளை உரமாகவோ, உயிரி வாயு (bio gas )வாகவோ மாற்றும் வகையில் திட்டம் செயல்படுத்த வேண்டும் . Bio gas plant அமைக்க மானியம் கொடுக்கலாம் அல்லது ஒவ்வொரு தெருவிலும் அரசே bio gas plant அமைக்கலாம். இதன் மூலம் அதிகப்படியான குப்பைகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும். மட்காத குப்பைகளை தனியே பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பலாம். ஒவ்வொரு வார்டிலும் ஒரு மையம் அமைத்து பிளாஸ்டிக் பொருட்களை கிலோ கணக்கில் மக்களிடமிருந்து பெற்று அதற்கு பணமும் கொடுக்கலாம்.

நேற்றைய குப்பையையும் இன்றைய குப்பையையும் சுத்தமாக்குவதுடன் தொழிற்சாலைகளில் உருவாகிக் கொண்டிருக்கும் நாளைய குப்பைகளை குறைப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் தேவை. தெருவுல இருக்கிறது மட்டும் தான் கழிவா , ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக பெற்று அனைத்து விதமான நீர் நிலைகளையும் சிதைத்துக் கொண்டிருக்கும் பெருநிறுவனங்கள் வெளியேற்றுவதெல்லாம் கழிவு இல்லையா. அதைப் பற்றி யாரும் வாயே திறக்க மாட்டேங்கிறீங்க. ஆளாளுக்கு தெருவுல நின்னே போஸ் கொடுக்கிறீங்க போஸு .

எல்லோருக்குமான சுத்தமான , சுகாதாரமான கழிப்பிடங்களை  உறுதி செய்வதுடன் மனிதக் கழிவுகளை கையாள்வதில் மனிதர்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுத்து ஆக்கப்பூர்வமான முறைகளை செயல்படுத்த வேண்டும்.

போலி விளம்பரத்தால் பிரதமர் ஆனது போல போலி விளம்பரத்தால் இந்தியாவை சுத்தம் செய்து விடலாம் என நினைக்கிறீர்களா மிஸ்டர்.மோடி ?

தற்போது மோடி பிரதமராக இருப்பதற்கு காங்கிரஸ் மீதான நீண்டகால வெறுப்பும் , மாற்றத்தை விரும்பிய மக்களின் மனநிலையும் தான் முக்கிய காரணம் .அதை விளம்பரங்கள் உதவியுடன் மோடி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

மருந்துவிலை கட்டுப்பாட்டு கொள்கை நீக்கம் , ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்  முடக்கம் , மரபணுமாற்றம் செய்த பயிர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் , பாதுகாப்பு குறைபாடு மற்றும் மக்களுக்கு வீண் அலைச்சலைத் தரும் ஆதார் திட்டம் மீண்டும் செயல்படுத்தல் என்று மோடி அரசு மக்களுக்கு பல சோதனைகளை செய்து வருகிறது . இன்னும் மக்களுக்கு என்னென்ன காத்திருக்கிறதோ தெரியவில்லை . யார் ஆட்சி செய்தாலும் பெருநிறுவனங்களுக்கு, மக்களை விட நிறைய சலுகைகள் கிடைக்கும் என்பது பொது விதியாய் போனது .சாதாரண  மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மிகவும் குறைந்தபட்ச சலுகைகள் கூட பறிக்கப்படுவது வருத்தத்தைத் தருகிறது .

சர்க்கரை வியாதி இந்தியாவின் தேச வியாதியாக மாறி வருகிறது . புற்றுநோய் கால் பதிக்காத ஊரே இல்லை என்ற நிலை மாறி , கால் பதிக்காத வீடே இல்லை என்ற நிலையை நோக்கிச் செல்கிறது . இதற்கு இந்திய அரசு என்ன பதில் வைத்திருக்கிறது ? அனைவருக்குமான மருத்துவ வசதியை உறுதி செய்யவேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு இருக்கிறது . அமர்த்தியா   சென் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி குறிப்பிட்டு இருந்தார் .

மன்மோகன் சிங் சோனியாவின் பொம்மையாக இருந்தது போல , மோடி இந்துத்துவா சக்திகளின் பொம்மையாக இருக்கிறார் . எல்லாப் பிரச்சனைகளுக்கும் மன்மோகன் போலவே மோடியும் வாயை மூடியே இருக்கிறார் . இந்துத்துவா சக்திகள் பாரதிய ஜனதா கட்சியின் பெரும்பான்மை ஆட்சியை  தவறாகப் பயன்படுத்துகின்றன . இந்துத்துவா சக்திகளின் செயல்பாடுகள் இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலும் , பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன . இந்திய ஜனநாயக நாட்டின் பிரதமரான நீங்கள்  என்ன செய்யப் போறீங்க மிஸ்டர்.மோடி ?

மேலும் படிக்க :

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

கட்சி அரசியலை வேரறுப்போம் !

..................................................................................................................................................................


Wednesday, December 31, 2014

புத்தகமும் திரைப்படமும் தான் எளிய எதிரிகளா ?

மதவாதிகளாலும் பிரிவினைவாதிகளாலும் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாவது புத்தகங்களும் திரைப்படங்களும் தான். கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மனநிலையை மதவாதிகள் பிரதிபளிக்கிறார்கள். அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பிளவுபடுத்துகிறார்கள். மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதைப் பற்றியோ , சாதாரண மக்களின் வளர்ச்சியைப் பற்றியோ  துளியும் கவலைப்படாதவர்கள் தான் மதத்திற்காக கொடிபிடிக்கிறார்கள். "மக்களுக்காக மதம் " என்பது போய் "மதத்திற்காக மக்கள்" என்றாகிவிட்டது தான் இன்றைய அவலம்.

புத்தகமாக இருந்தாலும் திரைப்படமாக இருந்தாலும் விமர்சனம் செய்யும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அதைவிட்டுவிட்டு புத்தகத்தை எரிப்பதையும் திரையரங்கங்களை தாக்குவதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எரிப்பதாலும் தாக்குவதாலும் புத்தகமும் திரைப்படமும் மறைமுக விளம்பரத்தையே பெருகின்றன.

மதம் பிடித்த யானையைப் போல மதம் பிடித்த மனிதனும் ஆபத்தானவன் தான்.மதத்திடமிருந்து மனிதனையும் , மனிதனிடமிருந்து மதத்தையும் காப்பாத்துங்க !


Saturday, December 6, 2014

ருத்ரய்யா - தனித்த படைப்பாளி !

ஒரே ஒரு படத்தால் ஒரு இயக்குனர் நீண்ட காலத்திற்கு பிறகும் கொண்டாடப்படுவாரா ? ஆம் கொண்டாடப்படுவார். ஆறுமுகம் என்ற இயற்பெயர் கொண்ட ருத்ரய்யாவை அப்படித்தான் கொண்டாடுகிறோம். இன்று ருத்ரய்யா நம்முடன் இல்லை . சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ருத்ரய்யா தனது 67வது வயதில் உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 18 அன்று நம்மை விட்டு பிரிந்தார்.

அவள் அப்படி தான் - தமிழ் சினிமா வரலாற்றின் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் . இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் தான் ருத்ரய்யா . இந்தத் திரைப்படம் குறித்து முன்பு எழுதிய பதிவு -  http://jselvaraj.blogspot.in/2013/06/blog-post_8.html .

சினிமாத்துறையில் இருந்து கொண்டு கடைசிவரை சமரசமில்லாமல் வாழ்ந்த படைப்பாளி. இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 20-11-14 தமிழ் 'தி இந்து ' நாளிதழ் ஒரு முழு நடுப்பக்கத்தை ஒதுக்கியுள்ளது ,பாராட்டத்தக்கது. இந்த நடுப்பக்கத்தில் அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி 'காதுள்ளவர்கள் கேட்பார்களாக' எனும் தலைப்பில் கட்டுரையாக வெளியிடப்பட்டது.

அந்தக் கட்டுரை :-

ருத்ரய்யா இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். வண்ணநிலவன், மா. அரங்கநாதன் ஆகிய இரண்டு எழுத்தாளர்களைப் பற்றியவைதான் அந்தக் கட்டுரைகள். ருத்ரய்யாவுக்குள் தேர்ந்த எழுத்தாளர் ஒருவரும், சமூக விமர்சகர் ஒருவரும் இருந்ததை இந்தக் கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது. மா. அரங்கநாதனைப் பற்றி ருத்ரய்யா எழுதிய கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழில் வந்துள்ள பெரும்பாலான படைப்புகள் தமிழ் சினிமாக்களைப் போன்றே மொக்கையானவை. அப்படிப்பட்ட சூழலில், சினிமாக்காரனான என்னைப் போய், “அரங்கநாதன் படைப்புகளைப் பற்றி என்னிடம் சொன்னதை ஒரு கட்டுரையாக எழுதுங் களேன்’’ என்று நண்பர் ரவிசுப்பிரமணியன் சொன்ன போது, எனக்குக் கூச்சமே ஏற்பட்டது. இதே மாதிரியான ஒரு கூச்சத்தை நான் அரங்க நாதனிடமும் கண்டேன். அதுதான் அவரை ஒதுங்கியிருக்கும்படி செய்திருக்க வேண்டும். ஒதுக்கியதே இன்னொரு கோணத்தில் அவரை ஆக்கியதும் என்று எனக்குப் புரிந்தது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது எழுத்துலகத் துக்கும் பொருந்தும் இந்த நாளில், பாவப்பட்ட ஊமைப் பிள்ளைகள் என்ன செய்ய முடியும்?
மா. அரங்கநாதன் என்ற பெயரே எனக்கு அறிமுகமானது மிகச் சமீபத்தில்தான். நண்பர் ரவிசுப்பிரமணியன் அவரைப் பற்றி ஆர்ப்பாட்ட மில்லாமல் எளிமையாக எடுத்திருந்த ஒரு ஆவணப்படத்தின் வழியாகவே அவரைப் பற்றி அறிந்தேன். தமிழ் வாசிப்பு என்பது எனக்கு நண்பர் வண்ணநிலவன் கொடுத்த கொடை. அப்படி நடக்காதிருந்தால் வெறும் கச்சடாக்களிலேயே என் காலம் முழுவதும் கழிந்திருக்கும்.

நேர்மையான கேள்விகள்

ஸ்வீடிஷ் இயக்குநர் இங்மார் பெர்க்மென் ஒரு தேவாலயப் போதகரின் மகன். வீட்டிலும் தேவாலயத்திலும் பைபிளின் வாசகங்களைவிட, அவரது தந்தையின் போதனை வாசகங்களும் கண்டிப்பும் கனக்குரலும் ஏச்சும் பேச்சுமே நிறைந்திருப்பதாக உணர்கிறார் பெர்க்மென். இதனால் கடும் பாதிப்படைந்த அவர் நாத்திகராகிறார். ஆனால், அவர் எடுத்த படங் களெல்லாம் கிறிஸ்துவத்தைப் பற்றியது. மதத்தின் மேன்மையை அதன் அற்புதத்தை அவருடைய படங்கள் விளக்குகின்றன என்று எல்லோரும் பிறழ விளங்கிக்கொண்டு அவரைக் கொண்டாட, அவரோ மிகமிக நுட்பமாக, கிறிஸ்துவ மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் காதல், மரணம், சாத்தான், சொர்க்கம், நரகம் பற்றித் தன் படைப்புகளின் வழியாக நேர்மையான, கரிசனம் நிறைந்த கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தார். மதம் குறித்த அவரது தீராத சந்தேகங்கள் காதுள்ளவர்களுக்கு இன்றும் கேட்கத்தான் செய்கின்றன.

தீர்மானிக்க இயலாத பிறப்பால், சைவப் பிள்ளையாகப் பிறந்த அரங்கநாதனுக்கு பெர்க்மென் போன்ற வாழ்வே இளமையில் லபித்திருக்கும்போல. சைவம் என்கிற அப்சஷன், மறைநூல்கள், தேவார-திருவாசக-திருமந்திரங்கள் அவரைப் பாடாய்ப் படுத்தி யிருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆச்சார அனுஷ்டானம் மிளிர, பயபக்தியோடு வாழ்ந்த அரைபிராமண வாழ்வோடு, அவரால் ஒட்ட முடியவில்லை என்பதைத்தான் அவருடைய படைப்புகள் சொல்கின்றன.

பொது எல்லாம் பொது

இது தமிழ்நாட்டுக்கோ இந்தியாவுக்கோ மட்டுமேயான பிரத்யேகமான விஷயம் இல்லை. இதில் மேலை, கீழை என்ற எந்தப் பகுப்பும் இல்லை. மனிதகுலத்துக்கே பொதுவான உணர்வு இது. மனித வரலாற்றில் தமிழன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்தான் என்றால், வெள்ளைத்தோல் ஆங்கிலேயனும் வாழ்ந்திருப்பான், ஆப்பிரிக்கனும் வாழ்ந் திருப்பான். நர மாமிசம் ஒருவன் சாப்பிட்டால், எல்லோரும் சாப்பிட்டிருப்பார்கள், விவசாயம் ஒருவன் பண்ணத் துவங்கியிருந்தால், எல்லோரும் செய்திருப்பார்கள் இல்லையா?
வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் தாண்டியே ஒவ்வொரு இனமும் வந்திருக்க முடியும். சிலசில சிறு வேறுபாடுகள் இருந் திருக்கலாம். அதனால், இதில் மேலை, கீழை என்று எதுவும் இல்லை. எல்லா மனிதர் களும் ஒன்றுதான். எல்லோரும் ஒரு வகையில் தொப்புள் கொடிவழியே ஜனித்தவர்கள்தான். இதைத்தானே வேறு கோணத்தில் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னான நம் சங்கத் தமிழ்ப் பாட்டன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ - என்று சொன்னான். இதனை இந்தியர்கள் - குறிப்பாகத் தமிழர்கள் உணர வேண்டும். மலட்டு ஆய்வாளர்களின் சுயநலத்தால், அறிவு குறுகிய அறிவுஜீவிகளின் அருள்வாக்குகளைச் சிந்திக்காமல் கேட்டு, சாமி யாடிக்கொண்டிருக்கிற வரையில் நாம் நம் சிந்தனையின் எல்லைகளை விரிவுபடுத்த முடியாது. சகிக்க முடியாத வெற்று சென்டிமெண்ட்களெல்லாம், அந்த ஈரோட்டுக் கிழவன் போக்கப் போராடிய மூடத்தனத்தில்தான் நம்மை மறுபடி கொண்டுபோய் நிறுத்தும். இறந்த காலத்திலேயே இருந்துகொண்டு, அதிலேயே கனவுகண்டு களிப்பதில் நம் தமிழர்கள் சமர்த்தர்கள். அப்படியே இருக்க விரும்பினால், அவர்கள் உலகப் பொருளா தாரம் பற்றிப் பேசக் கூடாது.

கார் வேண்டும், கணிப்பொறி வேண்டும், ரோபோ வேண்டும், மங்காணி வேண்டும்; ஆனால் அவன் கலாச் சாரம் மட்டும் வேண்டா மென்றால் உங்களை விடுமா கருப்பு? இது போன்ற மாயைகளைக் கேள்விகேட்டு உடைப்பவனே மனித குலத்தின் மேல் அக்கறை கொண்ட படைப்பாளி. ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு’ எல்லாம் சரி; எல்லோருக்கும் அது உண்டு இல்லையா! அதை வரலாறு சொல்லும்போது ஏற்கத் தவறினால், நாமல்லவா காணாமல் போவோம். அதற்காக, நான் பழையதை மறுக்கவில்லை; மறுதலிக்கவும் இல்லை. எல்லோருக்கும் அது உண்டு என்கிறேன். ஒரு வகையில் நாம் எல்லோரும் ஒன்று என்கிறேன். ஒன்றை மறந்துவிடாதீர்கள், அது வளர்ச்சியின் ஒரு அங்கம். அதுவும் சேர்ந்ததுதான் வளர்ச்சி. வரப்போகும் தலை முறை நீங்கள் பேசுவது போலவே உங்களைப் பற்றிப் பேசக் காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்!

தொகுப்பு: ஷங்கர்

கலைஞனுக்கு என்றுமே அழிவில்லை. அவர்கள் தங்களின் படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் .ருத்ரய்யா, அவள் அப்படித்தான் இருக்கும் வரை இவரும் இருப்பார்; ஸ்ரீபிரியாவும் இருப்பார். நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இந்த ஒரு படத்திற்காகவே ஸ்ரீபிரியா இன்னும் ரொம்ப நாட்களுக்கு நினைவில் இருப்பார். எல்லோரும் ஸ்ரீதேவியின் நடிப்பையும்,அழகையும் ரசித்த காலத்திலேயே நாங்கள் ஸ்ரீபிரியாவை ரசித்தோம். அவள் அப்படித்தான் பார்த்த பிறகு ஸ்ரீபிரியாவை இன்னும் அதிகமாகப் பிடிக்கிறது. லட்சுமியும் சிறந்த நடிகை. நடிப்பதற்கு லட்சுமிக்கு கிடைத்த வாய்ப்புகள் கூட ஸ்ரீபிரியாவிற்கு கிடைக்கவில்லை அ.அ. தவிர.

நன்றி - ருத்ரய்யா , தி இந்து .

மேலும் படிக்க :

அவள் அப்படித்தான் !

உதிரிப்பூக்கள் !
...................................................................

Tuesday, November 11, 2014

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !


கலாச்சாரம் என்பதை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குட்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறை என்று சுருக்கமாக சொல்லலாம் . தனித்த உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமய நம்பிக்கைகள் உள்ளிட்டவை வாழ்வியல் முறைக்குள் அடங்கும் . உலகெங்கிலும்  உள்ள இனக்குழுக்களால் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு  வந்த விதவிதமான கலாச்சாரங்கள் உலகமயமாக்கலின் விளைவாக கரையத் தொடங்கி நெடுநாட்களாகி விட்டன . அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த கலாச்சார வாழ்வியல் முறை இன்று உலகமயமாக்கல் தடம் பதித்துள்ள எந்த இடத்திலும் இல்லை . நாகரிகத்தின் பெயரால் ,வளர்ச்சியின் பெயரால் பாரம்பரிய விழுமியங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன . வளர்ச்சியின் வாடை படாத  பழங்குடி மக்களின் வாழ்வியல் முறை மட்டும் மாறாமல் இருக்கிறது .  காடுகளில் பயணம் செய்கிறோம் என்ற பெயரில் நகரத்து மக்கள் காடுகளில் நுழைவதால் அவர்களின்  வாழ்வியல் முறையும் மாறி வருகிறது .

கலாச்சாரம் மாறி வருவதை ஒரு பிரச்சனையாக கருத முடியாது .பூமியின் சுழற்சியில் எல்லாமும் ஒரு நாள் மாறித் தான் ஆக வேண்டும் . மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத எதுவும் இங்கே நிலை ( கொஞ்ச காலத்திற்காகவாவது ) பெற முடியாது . கலாச்சாரமும் இதற்கு விதிவிலக்கல்ல . உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமயநம்பிக்கைகள் என எல்லாமும் மாற்றத்தைச் சந்தித்தே வருகின்றன.

20 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணப்பட்ட எந்த உணவும் இன்று பரவலாக உண்ணப்படவில்லை. அப்படியே உண்ணப்பட்டாலும் பயன்படுத்தும் பொருட்கள் முதற்கொண்டு சமைக்கும் முறை, உண்ணும் முறை என அனைத்திலும் பலவிதமான மாற்றங்கள். நாம் வாழும் பகுதியில் என்ன விளைகிறதோ ,எந்தக் காலநிலையில் என்ன கிடைக்கிறதோ அதை மட்டுமே உண்டு வாழ்ந்த சூழியலுக்கும் உடலுக்கும் உகந்த வாழ்வியல் முறை எங்கும் இல்லை. உடலைப்பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் வணிக விளம்பரங்களில் மயங்கி கண்டதையும் உண்கிறோம். அன்று ,என்ன சாப்பிடுகிறோம் என தெரிந்து உணவே மருந்து என்றெண்ணி உண்டோம் இன்று,நாம் சாப்பிடும் ஒரு வாய் உணவில் என்னென்ன கலந்திருக்கிறது என்பதைத் தெரியாமலே உண்கிறோம். உலகவணிகமயமாக்கத்தால் நம் உணவுக் கலாச்சாரத்தில் நிகழ்ந்த இத்தகைய  மாற்றங்களையும்,பாதிப்புகளையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டது நம் கலாச்சாரம்.

நமது வாழிடங்களுக்கு அருகில் கிடைத்த பொருட்களை வைத்து வீடு கட்டி இயற்கையின் நண்பனாக வாழ்ந்த வாழ்வியல் முறை இன்று இல்லை. விதவிதமான கட்டம் கட்டமான எலிக்கூண்டுகளைக் காற்று புகாதவாறு கட்டிக்கொண்டு அதை வீடுகள் என்று சொல்கிறோம். செங்கல் , மணல்,ஜல்லி,கம்பி,கண்ணாடி,மரச்சாமான்கள் என வீடு கட்டப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் இயற்கையின் அழிவிலிருந்து தான் பிறக்கிறது. முன்பு கட்டுமான பொருட்களை இயற்கையில் மிஞ்சியவையிலிருந்து எடுத்தோம்;எடுத்ததை மீண்டும் உருவாக்கினோம் .நமது வீடுகளின் கலாச்சாரக் கூறுகளாக இருந்த திண்ணையும் ,முற்றமும் இன்றைய வீடுகளில் இல்லை . இன்றைய சூழலில் வீடு குறித்த அதிக முக்கியத்துவமும்,அதிக கவனமும் தேவையற்றது என்றே நினைக்கிறேன். இந்த மாற்றங்கள் குறித்து நம் கலாச்சாரம் எந்தக் கேள்வியும்  கேட்கவில்லை.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பிருந்த எழுத்து முறையும் ,பேச்சு வழக்கும் இன்றைய தமிழ் மொழிக்கு இல்லை. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் புதிப்பித்துக் கொண்டதாலேயே தமிழ் மொழி இன்று வரை இருக்கிறது. இந்த மாற்றம் குறித்தும் கலாச்சாரம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

ஒரே மாதிரியான சமயநம்பிக்கைகள் நம் கலாச்சாரத்தில் இல்லை. அன்றே குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐந்திணைகளுக்கும் ஐந்துவிதமான சமயநம்பிக்கைகள் இருந்துள்ளன. கால மாற்றத்தாலும் பல்வேறுவிதமான நாடுகளின் படையெடுப்புகளாலும் பல்வேறுவிதமான சமயநம்பிக்கைகள் இன்று பின்பற்றப்படுகின்றன. இதற்கும் நமது கலாச்சாரம் ஒன்றும் சொல்லவில்லை.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆளாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இன்றைய  நிலை எதிலும் இருக்காது.கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளையும் ஆங்கிலேய ஆட்சி முறை வெகுவாக பாதித்தது. உடையும் பலவிதமான மாற்றங்களை அடைந்தது. தொழில் ரீதியாகவும் மதரீதியாகவும் தனித்த அடையாளத்துடன் அணியபட்ட உடைகள் மாற்றம் அடைந்து ஒரு பொதுவான முறையில் அணியப்படுவது நல்ல விசயம். ஆனால் அதிலும் சூழலுக்குப் பொருந்தாத இறுக்கமாண உடைகளையே பெரிதும் விரும்புகிறோம்.ஆண்களைப் பொருத்தவரை ஒரே வேட்டியை தாங்கள் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கட்டியவர்கள் ,பட்டாப்பட்டி டவுசர் போட்டவர்கள் ,இன்று விதவிதமான பேண்ட்களையும் ,ஜாக்கியும் ,சார்ட்ஸும் அணிகிறார்கள். இதற்கும் கலாச்சாரம் மூச்சே விடவில்லை.

உணவு ,உடை,இருப்பிடம் ,சமயநம்பிக்கைகள் ,மொழி உள்ளிட்ட கலாச்சாரக் கூறுகளில் நிகழ்ந்த ,நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை நாம் தவறென்றே சொல்ல முடியாது. சில இழப்புகள் இருக்கலாம். 'அன்று இருந்தது ,இன்று இல்லை ' என்ற மனநிலை எல்லா காலகட்டங்களிலும் இருக்கிறது. ஒரு குற்ப்பிட்ட காலகட்டத்தில் எல்லாமுமே மாற்றத்தைச் சந்தித்தே தீருகின்றன. ஒரு தலைமுறை என மதிப்பிடப்படும் 33ஆண்டுகளில் அதிகபட்ச விசயங்கள்,பொருட்கள் மாற்றத்தைச் சந்திக்கின்றன. உலகவணிகமயமாக்கல் கால்பதித்த எந்த இடத்திலும் முன்பிருந்த தனித்த கலாச்சாரம் இன்றில்லை. பணம் ஒரே இடத்தில் குவிய அனுமதிக்கும் சுயநலமிக்க நுகர்வு கலாச்சாரம் தான் உலகமயமாக்கலின் சாதனை.

நிகழ்ந்த இவ்வளவு மாற்றங்களையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட நமது சமூகம் பெண்களின் உடை என்று வரும் போது மட்டும் பிந்தைய கலாச்சாரத்தை வலுக்கட்டயாக உள்ளே இழுப்பதன் பின்ணணியில் எவ்வளவு படித்திருந்தாலும் நாங்கள் ஆணாதிக்கத்தின் பிரதிநிதிகளே என்று ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் நிருபிக்கிறார்கள்.

ஆண்பிள்ளைகள் செய்யும் எவ்வளவு பெரிய தப்பையும் சிறிதும் தயக்கமே இல்லாமல் மூடி மறைக்கவே நமது பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதேசமயம் பெண்பிள்ளைகள் செய்யாத தப்பிற்கும் கேள்வி கேட்கப்படுகிறார்கள். பெண்கள் சம்பந்தபட்ட எல்லாக் குற்றங்களிலும் பெண்களையே குற்றவாளிகளாக்கி அழகு பார்ப்பது தான் கலாச்சாராமா ?

பொதுஇடத்தில் கண்ணியமாக உடை அணிய வேண்டியது ஆண்கள் மற்றும் பெண்களின் பொதுக்கடமை . இதைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு .ஆனால் ,யாருக்கும் முக்கியமாக பெண்களுக்கு இந்த உடை தான் அணியவேண்டும் என்ற எந்தக்கட்டுபாடும் விதிக்க வேண்டியதில்லை. ஆண்கள் எந்த உடை அணிந்தாலும் எப்படி அணிந்தாலும் உடையே அணியாவிட்டாலும் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதும் ,  ஆண்கள் ஆபாசமாக உடை அணிந்தால் பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு போக வேண்டும் என்பதும் எழுதப்படாத விதி .அதே சமயம் ,பெண்கள் என்று வரும் போது மட்டும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள் .

ஏன் பெண்களின் உடையை மட்டும் எதிர்க்கிறார்கள் ?

உணவில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் இன்றும் வீடுகளில் பெண்களே சமைக்கிறார்கள் , இருப்பிடம் மாறினாலும் பெண்களை இருப்பிடங்களை நிர்வகிக்கிறார்கள் , சமய நம்பிக்கைகள் மாறினாலும் பெண்கள் தான் முக்கிய பங்குவகிக்கிறார்கள் இவை அனைத்தும் பெண்கள் வேலைகள் என்று முத்திரையுடன் இன்றுவரை பெண்களாலேயே செய்யப்படுகிறது . ஆனால் ,பெண்கள் பொதுவெளியில் தங்களுக்குச் சரிசமமாக உடை அணிவதை மட்டும் ஆணாதிக்கச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

அன்று பெண்கள் வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த வரை உடை ஒரு பெரிய விசயமாக தெரியவில்லை. இன்று நிலமை அப்படியில்லை,   பல்வேறு விதமான  வேலைகளின்  நிமித்தமாக பெண்கள் பொதுவெளியில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய இன்றைய சூழலில்  அணிய சவுகரியமில்லாத உடைகளை அணியச்சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை . இது அடிப்படை உரிமை சார்ந்த விசயம் .நாகரிக சமூகத்தில் அவரவருக்கு பிடித்தமான உடைகளை அணிவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு .நாம் நாகரிக சமூகமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் எப்படி உடை அணிந்தாலும் வெறிக்க வெறிக்க பார்ப்பது தான் ஆண்களின் பொதுக்குணம். அப்படிப் பார்ப்பதன் பின்னாலும் ஒரு நெடிய வரலாறு இருக்கிறது . இப்போது அதுவல்ல பிரச்சனை . சரி , பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் ? எல்லாப் பெண்களையும் சேலை மட்டும் அணியச் சொல்லலாமா ? சேலை சவுகரியமான  உடை என்று யாராவது ஒருவர் நிருபித்து விட முடியுமா ? முடியாது .

சேலையை எப்படி அணிந்தாலும் உடல் பகுதி வெளியே தெரியவே செய்யும் . யார் முதலில் இந்த உடையை கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. " அணிந்துகொண்டிருக்கும் நேரம் முழுவதும் கவனத்தைக் கோரும் ஓர் உடை, புடைவை. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 'இடுப்பு தெரிகிறதா, உள்ளாடை வெளியே தெரிகிறதா?’ எனச் செய்யும் வேலைகளில் இருந்து கவனம் பிசகிக்கொண்டே இருக்கும். இயல்பாகக் குனியவோ, வேகமாக நடக்கவோ, விரைவாக மாடி ஏறவோ, வண்டி ஓட்டவோ, பேருந்தில் ஏறவோ எதுவும் முடியாது. செல்போன், பர்ஸ் என எதையும் வைத்துக்கொள்ள முடியாது. இறுக்கமான உள்ளாடைகள், அதற்கு மேல் இறுக்கமான பாவாடை, ஜாக்கெட், அதற்கு மேல் வெயிட்டான புடைவை... என நம் காலநிலைக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத இந்த உடையை முதலில் உடுத்தியது யார்? 45 டிகிரி வெயிலில் பேருந்திலும் சமையலறையிலும் சேலை கட்டிக் கொண்டிருப்பது... அனுபவித்தால்தான் தெரியும். " என்று சேலை அணிவதில் இருக்கும் அசவுரியங்களை பட்டியலிடுகிறார், பிரியா தம்பி .உண்மையிலேயே பெண்களுக்கு மிகவும் அவஸ்தையை தரும் ,நம் சூழலுக்கு பொருந்தாத உடை தான், சேலை.இன்னும் எத்தனை நாளைக்குத் தான் கலாச்சார உடை என்று சொல்லியே அவஸ்தையை தரும் சேலையை பெண்களை அணியவைக்கப் போகிறோமோ தெரியவில்லை . வேட்டி எல்லா இடங்களிலும் அணியச் சவுகரியமாக இல்லாததாலேயே ஆண்கள் வேறு உடைகளை அணிகிறார்கள் . ஆண்களின் இந்த உடைக் கலாச்சாரத்தை மீறும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது . எனக்கெல்லாம் அதிகாரம் இருந்தால் சேலை என்ற உடையையே முற்றிலுமாக தடை செய்து விடுவேன் . அடுத்த நூற்றாண்டில் இந்தியாவில் சேலை இருக்குமா என்பதே சந்தேகம் தான். 

சேலையை விட சுடிதார் , ஜீன்ஸ் போன்றவை சவுகரியமானதாகவும்  ,தன்னம்பிக்கை தருவதாகவும்  இருப்பதாலேயே பெண்கள் இன்று அவற்றை அதிகம் அணிய ஆரம்பித்து இருக்கிறார்கள் . லெக்கிங்ஸ் அணியும் போது மட்டும் பெண்கள் கண்டிப்பாக கவனம் செலுத்தியே ஆக வேண்டும் . மற்ற உடைகளை விட லெக்கிங்ஸ் நிறைய பெண்களுக்கு பொருந்தாத உடையாகவே இருக்கிறது . இதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் . அதே சமயம், பெண்கள் லெக்கிங்ஸ் அணியவே கூடாது என்று கட்டளையிட முடியாது .

இயல்பாகவே எப்போதும் எந்த வயதிலும் பெண்கள் ஆண்களால் ரசிக்கப்படுவதையும் , ஆண்கள் பெண்களால் ரசிக்கப்படுவதையும் பெரிதும் விரும்புகிறார்கள் . விதவிதமான ஆடைகளைத் தேடி அணிவதிலும் ,விதவிதமான அலங்காரங்களைச் செய்து கொள்வதற்குப் பின்பும் இந்த ரசிக்கப்படுதல் தான் இருக்கிறது . ஏன் ஒரு பெண் பெண்களால் ரசிக்கப்படுவதையும் , ஒரு ஆண் ஆண்களால் ரசிகப்படுவதையுமே விரும்புகிறார்கள் தானே . மற்றவர்களின் கவனத்தைக் கவர எந்த உடை அணிந்தாலும், ஏன் சேலையே அணிந்தாலும் தங்கள் உடல்பகுதி வெளியே தெரியும்படி அணியும் பெண்கள் இருக்கிறார்கள் .இவர்கள் மொத்த சதவீதத்தில் எண்ணிக்கையில் மிகவும் குறைவு . ஆண்களிலும் இப்படி நடந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள் தானே . 

ஆண்களின் மன வக்கிரம் உச்சத்தை அடையும்போது, அருகே பெண் என்ற உருவில் யார் இருந்தாலும், எந்த உடை அணிந்திருந்தாலும் தங்களின்  ஆதிக்கத்தைச் செலுத்துகிறார்கள் . இந்த மாதிரி உடை அணிந்ததால் தான் இந்த வன்முறை நிகழ்ந்தது என்று யாராலும் நிரூபிக்க முடியாது .

 கலாச்சாரத்தில் நிகழும் தங்களுக்குத் தோதான மாற்றங்கள் குறித்தும் யாரும் கேள்வி கேட்கவில்லை . தனது அதிகாரத்தைத் தக்க வைக்க கலாச்சாரத்தைக் ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள் . ஜாதி , மதம் , பெண் அடிமை போன்ற கூறுகளைத் தக்கவைக்கவே கலாச்சாரத்தை மீண்டும் மீண்டும் கையிலெடுக்கிறார்கள் . ஆண்களே , பெண்களை நோக்கி எந்தக் கேள்வி கேட்பதற்கு முன்பும் உங்களைப் பார்த்து அதே கேள்வியை கேளுங்கள் . பிறகு பெண்களைப் பார்த்துக் கேளுங்கள் . சுதந்திர காற்றை அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் பெண்கள் , அந்தச் சுதந்திரத்தை அதிகமாக அனுபவிக்கவே விரும்புவார்கள் . அதிலும் கூடுதல் வாய்ப்பு பெற்றுள்ள பெண்ணியவாதிகள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அலட்டிக் கொள்வார்கள் . இது இயல்பு தான் .

 நண்பர்களே , கலாச்சாரக் காவலர்களே ,ஆணாதிக்கவாதிகளே பெண்கள் அணியும் உடைக்கும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கும் துளியும் சம்பந்தமில்லை .  ஈரான் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட 26 வயது ரேஹானே ஜபாரி (Reyhaneh Jabbari ) என்ன ஆபாசமான உடையா அணிந்திருந்தார் . உடலை முழுதுமாக மறைத்து தானே உடை அணிந்திருந்தார் , அப்புறம் எதற்கு அவரை வன்புணர்ச்சி செய்ய ஒருத்தன் முயன்றான் . அவனை சுய பாதுக்காப்பின் பொருட்டு கொன்றதற்காக ரேஹானேவை கொலைகாரி ஆக்கி  தூக்கிலிட்டு கொன்று விட்டோம் . இனியும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு  பெண்களையும், அவர்களின் உடைகளையும் காரணமாக்க கலாச்சாரத்த இழுத்தீங்கனா " போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் " என்று தான் சொல்ல வேண்டிவருகிறது .

வரலாறை வைத்துப் பார்க்கும்போது , ஆணாதிக்க தந்தைவழிச் சமூகத்தின் ( பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல்  ) கூறுகளாகவே பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை குறிப்பிட முடிகிறது .அடுத்து வரும் பெண்ணாதிக்க தாய்வழிச் சமூகத்தில் ( ஆண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல் ) ஆண்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படலாம் . இன்றைய காலகட்டம் இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது .

மேலும் படிக்க :

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

கலாச்சார விடுதலையே சமூக விடுதலை ! 

எது கலாசாரம் - கி.ரா...!
.....................................................................................................................................................................

Tuesday, October 21, 2014

டாஸ்மாக் அரக்கன் அழியும் நாளே !

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள்  நிரந்தரமாக மூடப்படும் தினமே தமிழ்நாட்டிற்கு உண்மையான தீபாவளி . அதுவரை தீபாவளி என்பது இயந்திர வாழ்விற்கு ஒரு நாள் ஓய்வு தரும் சாதாரண விடுமுறை நாள் அவ்வளவு  தான். 40% மக்கள் குடியால் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட நிலையில் மதுபானக்கடைகள் என்னும் அரக்கன்  வதம் செய்யப்படும் நாளையே தீபாவளியாக கொண்டாடுவது தான் பொருத்தமாக இருக்கும் .

மது ,மனித இனத்தின் தொடக்க காலத்திலிருந்தே மனிதனுடன் பயணித்து வருகிறது . ஆரம்பத்தில் கொண்டாட்டத்தின் பானமாக இருந்த மது, கால ஓட்டத்தில் பலவிதமான மாற்றங்களை அடைந்ததுடன் மட்டுமல்லாமல் தற்போது சமுக அமைப்பை பெருமளவு பாதிக்கும் காரணியாக உருவெடுத்துள்ளது . தமிழகத்தைப் பொருத்தவரை மது முன்பே சீரழிவை ஏற்படுத்தி இருந்தாலும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் தெருவுக்கு தெரு திறக்கப்பட்டதன் விளைவாக மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மதுபானக் கடைகள் தனியார்வசம் இருந்தபோது 2000 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் ,தற்போது டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் 20000 கோடி . ஆட்சி செய்பவர்களே மது விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம் .


தமிழகம் இரண்டு விசயங்களில் முதலிடம் வகிக்கிறது .இதற்காக  யாரும் பெருமைப்பட வேண்டாம் ; சிறுமை தான் பட வேண்டும் . ஒன்று , சாலை விபத்துகளில் முதலிடம் .இரண்டு , தற்கொலைகளில் முதலிடம் . பெரும்பான்மையான சாலை விபத்துகளுக்கு மதுவும் , அதிவேகமும் தான் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன . கணிசமான தற்கொலைகளிலும் மது மறைமுக காரணியாக  இருக்கிறது . கள்ளச்சாரயத்தால் இறந்தவர்களைக் காட்டிலும் டாஸ்மாக் மதுவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . இன்னும் எவ்வளவு சீரழிவுகளைச் சந்திக்கப் போகிறமோ தெரியவில்லை .

அதே நேரத்தில் மதுவிலக்கு என்பது சரியானதும் ,சாத்தியமானதும் அல்ல . இன்னொரு சக மனிதனை பாதிக்காத வகையில் கொண்டாட்டமான தருணங்களில் மது அருந்துவதில் எந்தத் தவறும் இல்லை .ஆதியிலிருந்து மனிதன் இப்படித்தான் இருக்கிறான் . ஆனால் , எப்பாடு பட்டாவது தினமும் மது குடித்தே தீருவது என்பது குடிநோய் .இந்தக் குடிநோய் தான் நம் சமுகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டிருக்கிறது . குடிநோயின் காரணமாக குடிப்பவர் நேரடியாகவும் , குடிநோயாளியின் குடும்பத்தினர்  மறைமுகமாகவும் அழிவைச் சந்திக்கின்றனர் . தற்போது தமிழகத்தில்  பிரச்சனை என்னவென்றால் மது குடிப்பதை வெளிப்படையாக ஊக்கப்படுத்தும் காரணிகள் தான் . அரசு தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து குடிக்காதவனையும் குடிக்க வைக்கிறது ; குடியை மறக்க நினைப்பவனையும் மறக்க விடாமல் செய்கிறது . மது குடிப்பது போன்ற காட்சியும் , காதலும் இல்லாத தமிழ் சினிமாவே எடுக்கப்படுவதில்லை .

கள்ளச்சாராயத்தை ஒழிக்கத்தான் அரசு மதுக்கடைகளை நடத்துகிறது என்று சொன்னால் ஊருக்கு ஒரே ஒரு மதுக்கடையை ஊருக்கு வெளியே மட்டும் திறக்க வேண்டியது தானே . இதில் கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாதம் இவ்வளவு ரூபாய்க்கு  மதுவை  விற்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுவது தான். கள்ளச்சாராயத்தை தடுக்க மதுக்கடைகளை எடுத்து நடத்தியவர்கள் ,நாளை கற்பழிப்பைத் தடுக்க தெருவுக்கு தெரு சிவப்பு விளக்கு பகுதிகளை அமைத்தாலும் அமைப்பார்கள் . எதற்கெடுத்தாலும் "அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன் " என்ற பாணியில் மற்ற மாநிலங்களைக் குறை கூறிக் கொண்டே இருக்கும் மதுவிலக்குத் துறை ( எதற்காக இந்தத் துறை ? ) அமைச்சர் அவர்களே , கேரள அரசு, படிப்படியாக மதுவிலக்கைக்  கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறது . தமிழக அரசு என்ன செய்யப் போகிறது ?

கள்ளச்சாராயத்தின் மூலம் நிகழ்ந்த மரணங்களைத் தடுத்தது நல்ல விசயம் தான் .ஆனால் , அரசே விற்கும் நல்லசாராயத்தால் நிகழும் மரணங்கள் மட்டும் ஏன் கண்டுகொள்ளப்படுவதில்லை . நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றம் தானே . ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு வெளியே, ஒரே ஒரு கடை மட்டும் திறக்க வேண்டும் ; மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் . தயவு செய்து மது விற்பதில் விற்பனை இலக்கு நிர்ணயிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் . நாங்கள் கேட்பது மதுவிலக்கு அல்ல ; மது கட்டுப்பாடு . குடிநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கினால் போதும் . மதுக்கடைகளை யார் நடத்தினாலும் கவலையில்லை .

அரசுக்கு அளவு கடந்த வருமானம் வேண்டுமென்றால் தனியாரிடமிருந்து மதுக்கடைகளை கைப்பற்றி நடத்தியது போல , தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தனியார் பள்ளிகள் ,தனியார் கல்லூரிகள் , தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருந்தகங்களை கைப்பற்றி அரசே நடத்தட்டும் . பணம் , போதும் போதும் என்கிற அளவிற்கு கிடைக்கும் . அதை வைத்து இன்னும் பல விலையில்லாப் பொருட்கள் கொடுத்து விலையில்லா ஒரு வாழ்வைத் தமிழக மக்களுக்கு கொடுக்க முடியும் . மது விற்பதன் மூலம் அரசுக்கு வருமானம் ஈட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் .

நன்றி - கார்டூனிஸ்ட் பாலா .

மேலும் படிக்க :

மதுவும் மனிதனும் !

கலாச்சார விடுதலையே சமூக விடுதலை !

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?
....................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms