Saturday, June 4, 2016

பெண் எனும் உருமாறும் சக்தி !


இயற்கைக்கு அளவிடமுடியாத சக்தி இருப்பதை நாம் எல்லோரும் உணர்ந்தே இருக்கிறோம்.ஆனால் அதே அளவு சக்தி பெண்ணுக்கு இருப்பதை நாம் உணர்வதில்லை. அந்த சக்தி பெண்ணாலேயே மறைக்கப்பட்டு வருகிறது. பெண்ணை ஆணுடன் ஒப்பிடுவது முரணாகவே உள்ளது. எப்போதும் பெண் ஆணுக்குச் சமமில்லை; ஆணை விட ஒரு படி மேல். பெண்ணை இயற்கையுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இயற்கையை எப்படி முழுமையாக புரிந்து கொள்ள முடியாதோ அதே போலவே பெண்ணையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.

தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி இயற்கையிடமும் இருக்கிறது; பெண்ணிடமும் இருக்கிறது. இயற்கையை நெருக்கமாக அவதானித்து கொண்டாடுபவர்கள் , பெண்களையும் கொண்டாடுகிறார்கள். எப்படி இயற்கை இல்லாத பூமியைக் கற்பனை கூட செய்ய முடியாதோ அது போலவே பெண்கள் இல்லாத உலகையும் கற்பனை கூட செய்யமுடியாது.பூமியில் கிடந்து உருளும் ஏறக்குறைய எல்லா உயிரினங்களும் பெண்ணுயிரிகளின் துணையுடன் உருவானவை தான். உயிருள்ளதாக நாம் நம்பும் ஒவ்வொரு இயற்கை வடிவத்திலும் பெண்ணுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெண்ணின் ஒவ்வொரு செயல்பாட்டையும் இயற்கையுடன் பொருந்திப் பார்க்க முடியும் .
பூக்களை எப்படி ரசிக்கிறோமோ அது போலவே பெண்களையும் ரசிக்கிறோம். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பெண்களை கவனிக்கவும் ரசிக்கவும் செய்கிறார்கள்பூக்களுக்கு வாசம் இருப்பது போலவே பெண்ணுக்கென்றும் தனி வாசம் இருக்கிறது. இரண்டுமே மனித ஆணை கிறங்கச் செய்கிறது

பெண்களின் மாதவிடாய் காலத்தை ஒரு செடியிலிருந்து ஒரு பூ உதிர்வதுடன் ஒப்பிட முடியும் .வளர்ச்சியடைந்த செடியிலிருந்து அந்த பூ உதிராமல் இருந்திருந்தால் காயாகி,கனியாகி,விதையாகி மீண்டும் செடியாகியிருக்கும். அது போல வளர்ச்சியடைந்த கருமுட்டை உடைந்து மாதவிடாய் ஆகாமல் இருந்தால் உள்ளே ஒரு உயிர் உருவாகி ,பெண்ணாகி அல்லது ஆணாகி பிறக்கும். பூ மலர்ந்து உதிர்வது செடிக்கு எவ்வளவு வலியைத் தரும் என்று தெரியவில்லை. ஆனால் பெண்ணுக்கு கருமுட்டை வளர்ந்து உடைந்து மாதவிடாய் என்னும் பூ உதிர்வது வலி நிரம்பியது . எல்லாச் செடிகளும் வருடம் முழுவதும் பூக்கும் என்று சொல்ல முடியாது . ஆனால் மனிதப் பெண்ணில் இந்த வலி தரும் பூ மலர்ந்து உதிர்வது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நிகழ்கிறது. பாறையின் அல்லது கட்டிட இடிபாட்டுக்குள் தனது இருப்பை நிலை நிறுத்த முளைக்கும் செடியைப் போல பெண் தனக்கு கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வாள். இப்படி இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நாம் பெண்ணுடன் பொருத்திப் பார்க்க முடியும்.மனித ஆண் வேட்டை சமூகமாக இருந்தவரை பெண்களையும் மதித்தான்; இயற்கையையும் மதித்தான். நாகரிக மனிதனாக மாற மாற பெண்களையும் அடிமை படுத்தினான் ; இயற்கையையும் அழித்தான்.

மன உளவியல் நிபுணர், ஷாலினி அவர்கள் எழுதிய ‘ பெண்ணின் மறுபக்கம்’ புத்தகத்திலிருந்து சில பகுதிகள் சுருக்கமாக :
  
மனித வரலாறு முழுக்க, சமீப காலம் வரை மனிதர்கள் தாய்வழிச் சமூகத்தினராக பெண்ணைப் பின்பற்றி வாழ்ந்ததற்கான தடயங்கள் குவிந்து கிடக்கின்றன. மனித இனம் தோன்றிய நாள் முதல் பெண்தான் ஆளும் இனமாக இருந்திருக்கிறாள். காரணம், பெண்களால் மட்டும் தான் ஆண்களால் செய்ய முடியாத எத்தனையோ விசித்திர சாகசங்களைச் செய்ய முடிந்தது. அவளுடைய அதிசய சக்திகளைப் பார்த்து அசந்துபோய் அவளை ஆராதித்தான். பெண்ணை இறை உருவமாக வணங்கினான்.உலகெங்கிலும் அதிகமான பெண் தெய்வங்கள் இருப்பதற்கு இது தான் காரணம். வேட்டை, விலங்குகளுடன் போராட்டம் என்று அடிபடும் ஆபத்தை எப்போதும் சந்தித்த ஆண்களைப் பொறுத்தவரை ரத்தம் சிந்தினால் ஆள் காலி.ஆனால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கால் பெண்ணுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததை கண்டு ஆண்கள் வியந்தனர். மனித ஆணைவிட பெண்ணுக்கு புலனுணர்வு துல்லியம் அதிகம் .பெண்தான் குழந்தையைச் சுமந்து பாதுகாப்பாக வளர்க்க தகவமைக்கப்பட்டவள்.அதனால் கூடுதல் புலனுணர்வு தேவையாய் இருக்கிறது .

குழந்தையைப் பெற்றெடுப்பது மட்டும் தான் தனது ஒரே பிறவிப்பயன் என்றிருந்த ஆதிப்பெண்கள், ‘என் வாழ்க்கைக்கு என்ன தான் அர்த்தம்என்று தேடவில்லை. இப்படி எந்த அர்த்தமும் இல்லாமல் பிறக்கும் ஆண்கள்நான் ஏன் பிறந்தேன் ?’ என்ற கேள்விக்கு இன்றும் கூட பதில் தேடி அலைகிறார்கள்.இந்த தேடலை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளும் ஆண்கள் கலை, இசை, எழுத்து, அறிவியல், தொழிற்நுட்பம் என்று மனிதக் கலாச்சாரத்தின் மேன்மையான அம்சங்களை உருவாக்குகிறார்கள். இதே தேடலை அழிவுப்பூர்வமாக மேற்கொள்ளும் ஆண்களோ சபலம், வக்கிரம், போதை, வன்முறை என்கிற தீமைகளை விளைவிக்கிறார்கள். ஆண்கள் எதை எதையோ படைத்த பிறகும் வெறுமையாகவே உணர்கிறார்கள். இன்றும் கூட எவ்வளவோ புகழ் பெற்ற பிறகும் ,எவ்வளவோ செல்வங்கள் சேர்த்த பிறகும் கூட வெறுமையை உணர்ந்து மீண்டும் புகழ் பெற , மீண்டும் செல்வங்கள் சேர்க்க ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் அல்லது ஆன்மீகம் என்ற பெயரில் அமைதியைத் தேட ஓடுகிறார்கள்.

பெண்களின் மூளை வடிவமைப்பால் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முடிகிறது. ஒரே நேரத்தில் சம்பந்தமில்லாத வெவ்வேறு விசயங்களை இணைந்து யோசிக்க முடிந்தது.இந்தத் திறனால் பல பொருட்களை உருவாக்கினார்கள்ஒரு ஆணை உருவாக்கவும் உடைத்தெறியவும் வல்லதாக இருந்தன , பெண்களின் வார்த்தைகள். வெளித்தோற்றத்திற்கு ஆண்கள் பலமானவர்களாக இருந்தாலும் மிக மென்மையான மனதைக் கொண்டவர்கள். ஒரு சாதாரண வார்த்தை கூட ஆணை பலவீனப்படுத்தி முடக்கிப்போட்டுவிடும். ஆனால், பெண் அப்படியல்ல. உடலில் பெரிய வலிமை இல்லாவிட்டாலும் உள்ளம் வலிமையானது. இப்போதும் கூட குடும்பத்தில் ஆண் துணை இல்லாத போது அல்லது செயலிழக்கும் போது தங்களின் உள்ளத்தின் வலிமையால் உழைத்து குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவருகின்றனர். ஆண்களால் இது முடியாது.பெண்களின் மூளையில் ஆண்களைவிடப் பெரிய மொழிவளப் பகுதி உள்ளது. இதனால், பெண் பிறப்பிலேயே பெரிய வாயாடி. இன்றும் கூட ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் விரைவாக அதிகம் பேசுவதை கவனிக்க முடியும். வளர்ந்தப் பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சொற்போரில் பெண்களை வெல்லவே முடியாது. இந்த சொல் திறமையால் ஆதிஆண் பெண்களைக் கண்டு கொஞ்சம் அஞ்சினான்.   

அன்றைய ஆண்கள், பெண்களின் உழைப்பைக் கண்டு பிரமித்துப்போனார்கள்; இன்றும் பிரமித்துப் போகிறோம்.அன்றும் இன்றும் பெண்கள், பொழுது விடிந்து பொழுது சாயும்வரை தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆண்களுக்கு பெரிய வலிய தசைகள் இருந்ததால் விரைவாகவே களைப்படைந்து போனார்கள். ஆணின் உடலில் 40% தசை, 15% கொழுப்பு என்றிருப்பது பெண்ணின் உடலில் 23% தசை, 27% கொழுப்பு என்றிருக்கிறது. பெண்களுக்கு தசையின் அளவு குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் இருப்பதால் அவர்களால் தொடர்ந்து இயங்க முடிகிறது. மூச்சு விடுவதற்குக் கூட ஆண்கள் பெண்களைவிட அதிக எரிபொருளைப் பயன்படுத்துகிறார்கள். அன்று எல்லாவிசயங்களிலும் பெரும் உழைப்பு தேவைப்பட்டது. பெண்களின் இந்த நீடித்த உழைப்பைப் பார்ந்த ஆண்கள் , பெண்களைச் சார்ந்து வாழப்பழகிக் கொண்டார்கள். அதனால் தான் இன்றும் கூட பெண் துணையில்லாமல் ஆண்களால் வாழமுடிவதில்லை.

வேட்டை சமூகமாக இருந்தவரை ஆண்கள் , பெண்களால் அடிமைகள் போலவே நடத்தப்பட்டார்கள். உயிரைப் பணயம் வைத்து வேட்டையாடி உணவு சேகரிப்பதிலேயே அவர்களின் காலம் கடந்தது. இந்த காலகட்டதில் ஆண்கள் தங்களைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமே இருந்ததில்லை. நாகரீக வளர்ச்சியில் ஒரே இடத்தில் பெண்களுடன் தங்கும் சூழல் உருவான போது சிந்திக்கத் தொடங்கினர். அந்தக் காலப் பெண்களின் வாழ்க்கைத் தரம் ஆண்களைக் காட்டிலும் உயர்வாகவே இருந்தது.ஆண்கள் இரண்டாம் தர வேலைகளை மட்டுமே செய்து வந்தார்கள். இன்று ஆண்கள், சுதந்திரமாக எல்லா விசயங்களிலும் சுற்றித் திரிவதைப் பார்த்து பெண்கள் பொறாமைப்படுவது போல அன்று பெண்களைப் பார்த்து ஆண்கள் பொறாமைப்பட்டுள்ளனர். அன்றைய பெண்கள் தங்களுக்கு பிடித்தமான ஆண்களை தேர்ந்தெடுத்து கலவி கொண்டார்கள். அந்த ஆண் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனா இல்லையா என்றெல்லாம் பார்க்கவில்லை. கல்விக்கு இவள் தேர்ந்தெடுத்த ஆண் எங்கிருந்தோ வந்தவனாக இருக்கும் போது இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் , “நாம உயிரைக் கொடுத்து வேட்டையாடுகிறோம்,இவுங்களுக்கு காவல் காக்கிறோம் .இவுங்க உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு நம்மை அடக்குவதோடு மட்டுமல்லாமல் எங்கிருந்தோ வந்தவனோடெல்லாம் உறவு கொண்டு பிள்ளை பெத்துப் போடுவாங்களாம்.அதுகளுக்கும் சேர்த்து நாம உணவு கொண்டு வரனுமாம்என்று பொங்க ஆரம்பித்தனர். பொதுவாகவே உயிரினங்களின் பிறவிப்பயன் என்பது இனப்பெருக்கம் மூலம் மரபணுக்களைப் பரப்புவது தான் . இதுக்கே ஆபத்து வந்த போது அடிமைகள் போலிருந்த ஆண்கள் பெண்களுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தனர்.

பெண்களை அவ்வளவு எளிதில் வழிக்கு கொண்டுவர ஆண்களால் முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே பெண்களை அடிமைப்படுத்தினர். வெளிஆண்களை அண்ட விடாமல் இனப்பெருக்கம் செய்து தனது மரபணுக்களைப் பரப்ப , பெண்களைக் கவர பலவிதமான வழிமுறைகளை ஆண்கள் கையாண்டனர். கலவியின் போது அவளைப் போதிய அளவு மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அவள் வேறு ஆணைத் திரும்பிப் பார்க்க மாட்டாள் என்ற எண்ணம், பெண்ணை மகிழ்ச்சிப்படுத்தியே தீரணும் என்ற உந்துதலை ஆணிடம் ஏற்படுத்தியது. விதவிதமான முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தனக்கு அவனால் கிடைக்கும் சுகத்தை வைத்து ஆணைத் தேர்ந்தெடுத்தார்கள், பெண்கள். ஆனாலும் இதற்கு நிரந்தர தீர்வு காண ஆதிஆண் தனது மூளையைப் பயன்படுத்தத் தொடங்கினான்.

கூட்டத்தில் ஒருவன், தேர்ந்தெடுத்த பெண்ணை மற்ற ஆண்கள் நெருங்கக்கூடாது என்ற விதியை முதலில் தீர்மானித்தார்கள் .இதன் மூலம் எளிதாக தனது மரபணுவை அடுத்த தலைமுறைக்கு கடத்த இயலும் என நம்பினான். இதிலும் சிக்கல்கள் உருவாகின.அப்படியானால் ஒரே பெண்ணை பல பேர் தேர்ந்தெடுத்தால் என்னாவது ? யாருக்கு வாய்ப்பு கொடுப்பது ? தேர்ந்தெடுத்த பெண் ஒத்துழைக்க மறுத்தால் ? இப்படி பல கேள்விகள் பிறந்ததால் தீர்மானித்த விதியை திருத்த வேண்டிய தேவை உருவானது. " பல ஆண்கள் ஒரே பெண்ணைத் தேர்ந்தெடுத்தாலும் , அந்தப்பெண் அவர்களில் ஒருவனை ஆதரித்து , தம்பதிகளாகக்கூடி உறவு ஏற்படுத்திய பிறகு, மற்ற ஆண் அவளை அடைய முயல்வது தண்டனைக்குரிய பெரும் குற்றமாகும். அதே போல, தேர்ந்தெடுத்த ஆணைத் தவிர பிற ஆணுடன் அந்தப் பெண் உறவு கொள்வதும் பெரும் குற்றமாகும் " என்று திருத்தப்பட்ட விதியை உருவாக்கினார்கள். இந்த விதி ஆண்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியதால் இந்த விதியேற்பு வைபவத்தைதிருமணம்என்றொரு பெரிய விழாவாக கொண்டாடினார்கள்; இன்றும் கொண்டாடுகிறார்கள். இதனால் தான் எல்லாவித சமுதாயங்களிலும் நகரம், கிராமம், முன்னேறியவை ,பின்தங்கியவை , படிப்பறிவுள்ளவை, படிப்பறிவற்றவை என்று எந்தப்பாகுபாடும் இல்லாமல் இந்த விதி ஏற்பு விழாவை முன்னின்று பிரமாண்டமாக நடத்துவது ஆணாக மட்டும்தான் இருக்கிறது.அந்த விதியில் இணையும் பெண் மூலம் பிற ஆண்களின் மரபணுக்கள் பரவுவதை தடுத்து தனது மரபணுவை மட்டும் பரப்பி மரபணுப் போட்டியில் வெற்றி பெற முயன்றான்.

திருமணம் என்பதுஇவனும் இவளும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள் ; இனி வேறு யாருடனும் இவர்கள் கலவி கொள்ளக்கூடாதுஎன்று பிரகடனப்படுத்தும் பெரும் பணியைச் செய்கிறது. ஆனாலும் பெண் இந்த விதிக்கெல்லாம் பயப்படவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் எந்தப் பெண்ணும் ,அட மனிதப் பெண்ணை விடுங்கள்,எல்லா உயிரினங்களிலும் பெண்ணிணம் உயிர் வீரிய வளம் கொண்ட ஆண்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் . காரணம், சிறந்த மரபணுக்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கூடித் தலைசிறந்த பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் எல்லாப் பெண் இனத்திற்கும் இயற்கையாக அமைந்த ஓர் அடிப்படை குணாதிசயம்.
அந்தக்கால முறைப்படி ஆணும் பெண்ணும் தங்களுக்குப் பிடித்திருக்கும் வரை ஒன்றாக வாழ்வார்கள். பிள்ளை பெற்றுக் கொள்வார்கள். பிடிக்காவிட்டால் பிரிந்து விடுவார்கள். ஒன்றாக இருக்கும் காலத்தில் இவனுக்குப் பிறந்தது , அவளுக்குப் பிறந்தது , இருவருக்கும் பிறந்தது என்று எல்லாக் குழந்தைகளுக்கும் தீனி தேடித்தருவது ஆண்,பெண் இருவருக்கும் கடமையானது. ஆண்கள் வேட்டையின் மூலமும், பெண்கள் தங்களின் இருப்பிடத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் உணவு தேடிக் கொண்டுவருவார்கள். ஓகோ, இதைத் தான் இப்போதுலிவிங்க் டுகெதெர்வாழ்க்கை முறை என்று சொல்கிறோமோ !

ஆண்கள் வெளி வேலை ,பெண்கள் வீட்டு வேலை என்று  போய்க் கொண்டிருந்த போது குடும்பத்திற்காக உழைக்காமல் சோம்பேறியாய் சுற்றித் திரிந்த ஆண்களால் பிரச்சனை வந்தது. மற்ற ஆண்கள் குடும்பத்திற்காக நாயாய் உழைத்து தங்களது மரபணுவை பரப்ப முயல இந்த சோம்பேறி ஆண்கள் , வீட்டில் தனியே இருக்கும் பெண் எவளையாவது பிடித்து வலுக்கட்டாயமாக இனம் சேர்வதன் மூலம் தங்களின் மரபணுக்களைப் எளிதாகப் பரப்பினார்கள். பெண்களுக்கு இந்தக் கட்டயாக் கலவி கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதுவுமில்லாமல் தகுந்த ஆணைத் தேடி கூடி வலுவான மரபணுவைப் பரப்பும் பெண்ணினத்தின் வேலையும் தடைபட்டது. மரபணுக்களைப் பரப்புவதற்காக கடுமையாக உழைத்த ஆண்களும், கட்டாயக் கலவியை வெறுத்த பெண்களும் இந்த ஓசியில் வாரிசை உருவாக்கும் சோம்பேறிகளுக்கு ஒரு முடிவு கட்ட விரும்பினர். இப்படி இலவசமாக இனம் பெருக்கிக் கொள்வது எல்லா மனித சமுதாயங்களிலும் மிகக் கேவலமான செயலாகப் பார்க்கப்பட்டது. இந்தச் செயலை சட்டவிரோதக் குற்றமாக அறிவித்து இதற்குபாலியல் பலாத்காரம்என்று பெயரிட்டனர். இந்தக் குற்றத்தைச் செய்பவர்களுக்கு ஊரை விட்டு ஒதுக்குதல், மரணம், ஆண்மை அகற்றல் என்று கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இதன் நீட்சியை இன்றும் உலகெங்கும் காணமுடிகிறது. ஆனாலும் பாலியல் பலாத்காரம் தொடரத்தான் செய்தது ; செய்கிறது. இந்த ஆண்களை அடக்கவே முடியவில்லை.பெண் என்ற ஒருத்தி இருப்பதால் தானே அங்கே பலாத்காரம் நடக்கிறது. இதனால் ஒட்டு மொத்த ஆண்களும் சேர்ந்து குற்றத்திற்கான பழியை பெண்கள் மீதே போட்டனர்; இன்றும் பழி போடுகின்றனர்.

ஆண்கள் மட்டும் இந்தக் களவுறவில் ஈடுபட்டனர் என்று சொல்லமுடியாது. பெண்களும் இந்தக் களவுறவிற்கு ஒத்துழைத்த உதாரணங்கள் எவ்வளவோ உள்ளன. திருமணம் என்ற மெல்லிய உறவை மேலும் பலவீனமாக்கும் இன்னொரு சந்தர்ப்பம்கள்ளத் தொடர்பு ‘ . இந்தக் கள்ளத் தொடர்பு எப்போதும் பெண்ணின் முழு சம்மதத்துடன் நடந்தது. பெரும்பாலும் இந்த சம்மதம் வெளிப்படையாக இருக்காது .ஒரு கள்ளப்பார்வை ,ஒரு தினுசான கள்ளச் சிரிப்பு என்று மறைமுகமாகவே தங்களின் விருப்பத்தைப் பெண்கள் வெளிப்படுத்தினர். இந்தச் சின்னச்சின்ன சமிக்கைகளைக் கொண்டு ஆணின் மோகத்தைத் தூண்டி இப்படி ஆண்,பெண் சம்மதத்துடன் கள்ளத் தொடர்புகள் ஏற்பட்டன. மரபணுக்களைப் பொறுத்தவரை கள்ளத் தொடர்பு என்பது உயர் ரக மரபணுக்களைச் சேகரிக்கவும் பரப்பவும் உதவும் ஒரு மாற்று ஏற்பாடு. ஆனால், இந்தக் கள்ளத் தொடர்பை, இந்தத் துரோகத்தை ஆண்களால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்களை அடக்கும் முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை.அதனால், இது  ஆண்களின் மோகத்தைத் தூண்டி கள்ள உறவில் ஈடுபட வைத்த பெண்களின் குற்றம் என்று மீண்டும் பழி பெண்கள் மீதே சுமத்தப்பட்டது.

ஆண்களைப் பொறுத்தவரை ஒரு பெண் ஆணை ஏமாற்றுவது மன்னிக்க முடியாத குற்றம். புதிது புதிதாக பல வழிமுறைகளை பயன்படுத்திய பிறகும் கூட ஆண்களால் பெண்களின் இந்த செயல்பாட்டை நிறுத்தமுடியவில்லை. பெண்கள் படி தாண்டி பாரபட்சமாக நடந்து கொண்டதால் போட்டிகள், பொறாமைகள் , சண்டைகள் , போர்கள் என்று மனித இனம் பெருத்த சேதத்தைச் சந்தித்தது. அதனால்,பெண்ணின் பாலியல் ஒழுக்கம் தான் அமைதியான சமூக வாழ்க்கையின் முக்கியமான அஸ்திவாரம் என்றானது. பெண்களின் மூளையைத் தொடர்ந்து பதப்படுத்தி ஆணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை போதித்தார்கள். பெண்கள் எல்லோரும் தங்கள் பாலுணர்வை அடக்கி ஒருவனுக்கு மட்டும் வாழ்நாள் முழுக்க உண்மையாக இருக்கும் பாடம் கற்பிக்கப்பட்டது.அதற்குகற்புஎனும் பெயரிட்டனர்.இந்தக் கற்பித்தல் மற்ற பகுதிகளை விட இந்தியாவில் வலுவாக வேரூன்றியுள்ளது. பிறந்ததிலிருந்து இந்தியப் பெண்ணுக்குப் பாலியல் ஒழுக்கம் கற்பிக்கப்படுகிறது. அவளது பெண்மை ,பாலுணர்வு, மகப்பேறு சக்தி என எல்லாமே அவள் கணவனுக்கு மட்டும் பயன்படவேண்டும் என்று அவள் நம்ப வைக்கப்படுகிறாள்.

முந்தைய காலத்தில் ஆண்கள் எல்லாம் சதா வேட்டையிலேயே இருந்ததால் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் பெண்களே செய்தார்கள். வேட்டை சமூகம் நதிக்கரை நாகரிகங்களாக மாறிய போது ஆண்கள் பெண்களுக்கு உதவ ஆரம்பித்தனர். பெண் எல்லா வேலைகளையும் தனி ஒருத்தியாகச் செய்து முடித்திருப்பாள்.ஆனால், ஆணுக்கிருப்பதோ ஒற்றையிலக்கு மூளை என்பதால் ஒரே நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்ய முடிந்தது. பெண்கள் செய்த வேலைகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அதை ரொம்பவும் செம்மையாகவும் , இன்னும் நுணுக்கமாகவும் செய்து பெண் செய்ததைக் காட்டிலும் சிறப்பாகச் செய்து முடித்தான். ஆண்கள் இவ்வாறு தேர்ந்தெடுத்து தனது வேட்டைக்கார மூளையால் செம்மைப்படுத்திய வேலையை மீண்டும் பெண்களால் செய்ய முடியவில்லை. இப்படி முன்பு எளிதாக இருந்த வேலைகள் ஆண்களின் தலையீடுக்குப் பிறகு பெண்களால் செய்ய முடியாத கடினமான வேலைகளாக மாறிப் போயின.

பெண் தான் செய்யும் எல்லா வேலைகளையுமே சுமாராக செய்தால் போதும் என்று திருப்திப்படுவாள் . ஆண்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகலையும் செய்யும் திறமை இருந்தாலும் பெண்ணால் எந்தத் துறையிலும் உச்சத்தை அடையமுடியவில்லை. பெண் மூளை அகலமாகச் சிந்திக்கிறது ; ஆழமாக அல்ல. ஒரு குறிப்பிட்ட விசயத்தில் ஆழமாகச் சிந்திப்பது ஆணுக்கு மட்டுமே சாத்தியம். இப்படி ஒரு விசயத்தில் உச்சத்தை அடையும் ஆண் மற்ற எல்லா விசயங்களிலும் சுத்த மக்காக இருப்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. “ ஒரு ஆம்பளைக்கு இது கூட தெரியாதா ? “ என்று இன்றும் ஆண்கள், தங்களின் மனைவிமார்களிடம் வசவு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

மற்ற உயிரினங்களைப் போல மனித பெண்களும் புத்திசாலி ஆண்களை மட்டுமே தேர்வு செய்து , தலைமுறை தலைமுறையாக இனம் சேர்ந்து வந்ததால், மனிதக் குழந்தைகளின் புத்திசாலித்தனமும் பெருகிக்கொண்டே போய் , வேறு வழியில்லாமல் மூளையும் பெரிதாகியது.பெண்களைக் கவர்வதற்கு , எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும்பிற ஆண்களை விட தான் பெரியவன்என்று காட்டிக்கொண்டே ஆகவேண்டும் என்ற உத்வேகம் ஆண்களுக்குத் தேவையாய் இருந்தது. அதனால் , எந்நேரமும் தங்களின் அறிவை வளர்த்து அதைப் பெண்களுக்கு விளம்பரப்படுத்திக் காட்டவேண்டிய அவசியம் ஆண்களுக்கு ஏற்பட்டது. ஆண்கள் தங்களின் மூளையைக் குடைந்து குடைந்து முன்பு பெண்கள் செய்த எல்லா வேலைகளையும் ஊதிப் பெரிதாக்கி விரிவுபடுத்திவிட்டதால் அதன் ஆழம் பெண்களுக்குப் புரிபடாமல் போனது. ஆணின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பெண்கள் பழைய காலத்திலேயே பின்தங்கிப் போனார்கள். பெண்களின் புராதான அறிவெல்லாம் ஆணின் புது அறிவிற்கு முன்னால் பயனற்றுப்போக , அவளது ஆளுமையும் அடிபட்டுப்போனது . அவள் யாருக்கும் சளைக்காத சகலகலாவல்லியாக இருந்த காலம் மலையேறி , அறியாமை அவளை இரண்டாந்தரப் பிரஜை நிலைக்குத் தள்ளியது.

வம்சத்தை வளர்ப்பதுதான் பிரதானம் என்று பெண்கள் குழந்தை பெறுவதற்கு முதலிடம் கொடுத்து மற்றதை ஆண்களிடம் விட்டுவிட்டார்கள். ஒரு மனிதனின்  சமூக அந்தஸ்து அவன் செய்யும் வேலையையும், அதில் அவனுக்கு இருந்த திறமையையும் பொறுத்திருந்ததால் , ஓர் ஆண் தன் காலத்திற்குப் பிறகும் தன் சமூக அந்தஸ்தை நிலைநாட்டிக்கொள்ள வேண்டுமானால் தன்னைவிட பெரிய ஆளாகத் தன் மகனை ஆக்கவேண்டியிருந்தது. அதனாலேயே ஆண் குழந்தையைப் பெற்று, அவனுக்குத் தனது ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்து வாலிபப் பிராயம் வரை வளர்த்தாலே போதும் அந்த ஒருவனே எல்லா மகள்களையும்விட மிக அதிகமான வம்சத்தைப் பரப்பி,வாரிசுகளை உற்பத்தி செய்து விடுவான். ஆண் குழந்தை என்பவன் தன் தந்தையின் மரபணுக்கள் , அறிவு, சமூக அந்தஸ்து ஆகிய மூன்று முக்கிய சொத்துக்களைக் கட்டிக்காக்கக் கூடியவன். இவ்வளவு முக்கியத்துவம் இருந்ததால் ஆண் குழந்தைகளின் மவுசு கூடியது .இப்படி உருவான வலிமையான புத்திசாலி ஆண்களால் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் கிடைத்தது. அதனாலேயே ஆண்களைவிட பெண்களே ஆண் குழந்தைகளைப் பெரிதும் விரும்பினார்கள்.

ஆண்கள் மொத்தமாக சேர்ந்து பெண்களின் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்தனர் . “பெண்களுக்கு ஆண்களைவிட அறிவு கம்மி; அவர்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச அறிவை வைத்து அவள் குடும்பம் மட்டும்தான் நடத்தமுடியும்; அதை விட்டுவிட்டுப் படிப்பு ,பாடம் என்று முயற்சித்தால் அவளுக்குப் புத்தி தடுமாற்றம் ஏற்பட்டுவிடும்என்று அறிவியல் துறை ஆண்களும், மதத்துறை ஆண்களும் பெண்களை மட்டம்  தட்டினார்கள்
பெண்களின் அறிவை நீக்கி அவர்களை தங்களின் அடிமைகளாக
 மாற்றினார்கள். ஆண் கலைஞர்களும் வெகுளிப் பெண்களைப் போற்றுவதும், துணிச்சலான விவரமான பெண்களைத் தூற்றுவதுமாக இருந்தார்கள்; இருக்கிறார்கள் ( இங்கே ஆண் எழுத்தாளர்கள் அவ்வப்போது பெண் எழுத்தாளர்களைத் தூற்றுவது இந்தக் காரணத்தால் தானோ ! ).


இயற்கை என்னதான் மனிதர்களுக்கு சில அடிப்படை குணாதிசியங்களைக் கொடுத்திருந்தாலும் ,பயிற்சி மூலமும், தொடர்ந்த பழக்கம் மூலமும் இயல்புகளை மாற்றிப் புதிய வழக்கங்களைப் பயில முடியும்தானே . இப்படி ஒட்டு மொத்த சமூகமும் புதுப் பழக்கவழக்கதுக்கு மாறுவதைத் தான் நாம்  ‘சமூகமயமாக்கல்என்கிறோம்.ஆணே முக்கியமானவன் , மேலானவன், பெண் வெறும் பண்டம் , ஆணின் வாரிசுகளைச் சுமபதற்கென்றே பிறந்த ஜென்மம் என்று இருபாலினருக்கும் தொடர்ந்து போதிக்கப்பட்டது .சமூகமயமாக்கல் ஆணைப் பல திருமணங்கள் செய்து கொள்ள அனுமதித்தது . அதிகப் பெண்களை ஜெயித்தவனை ஆண்மை நிறைந்தவன் என்று பாராட்டி ஊக்குவித்தது.

பெண்ணை இப்படி பொருளாக நடத்தியதால் இன்னொரு சிக்கல் கிரேக்கத்தில் உருவானது. ஆணுக்கு அறிவு இருந்தது; பெண்ணுக்குக் கிடையாதுஇந்தப் பெரிய வித்தியாசமே மனித ஆணும் பெண்ணும் வெவ்வேறு விதமான ஜீவராசிகள் என்ற நிலைமையை உருவாக்கியது. இயற்கையில் இருவேறு ஜீவராசிகள் புணரமுடியாது, புணர்ந்தாலும் வாரிசுகள் உருவாகாது. ஆண்களுக்கு , அறிவில்லாமல் ஆக்கப்பட்ட பெண்ணோடு புணர்வது அழகான வேற்றின மிருகத்தோடு புணரும் தரக்குறைவான செயலாகத் தோன்றியது. அதனால், அறிவுள்ள ஆண்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஆசையும், பாசமும் , கவர்ச்சியும் ,காதலும் பெருகி காமமும் தோன்றி ஆணும் ஆணும் புணரும்  ‘ ஓரினச்சேர்க்கைஉருவானது . கிரேக்கத்தில் சாக்ரடீஸ் ,ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில் போன்ற தத்துவவாதிகளும், மன்னர்களும்,சாமானியர்களும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்கள். ஆண்கள் எல்லோரும் தங்களுக்குள்ளேயே கூடி வாழ ஆரம்பித்தார்கள். வாரிசு வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்காக மட்டுமே பெண்களுடன் உடலுறவு கொண்டார்கள். அதிலும் அரிஸ்டாட்டில் , ‘ காதலுக்காக ஆண், கருவுருதலுக்காகப் பெண்என்று போதித்தார்.

கிரேக்கத்தில் நிலைமை இப்படி இருக்க மற்ற பகுதிகளில் சில பெண்கள் ஆண்களின் கலைகளாக மாறியிருந்த ஆடல்,பாடல்,தர்க்கம்,ஓவியம் என்று நிறைய கலைகளை மறைமுகமாகக் கற்றார்கள் . மற்ற பெண்களை விட இவர்கள் புத்திசாலிகளாக இருக்க ஆண்கள் இவர்களை மணக்க முன்வரவில்லை. ஆனால் இவர்களுடன் பொழுதைக் கழி(ளி )க்க  ஆண்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. வீட்டில்  இருக்கும் அறிவில்லா குலப்பெண்களை பார்த்தே பழக்கப்பட்ட ஆண்கள் இந்த விவரம் தெரிந்த பெண்ணை விலை கொடுத்தாவது சற்று நேரம் துணையாக்கிக் கொள்ள ஆசைப்பட்டார்கள் . ஆசை நாயகி , விலை மாது , பரத்தை என்றெல்லாம் இந்தப் பெண்களை சமுதாயம் கொச்சைப்படுத்தினாலும் இந்தப் பெண்களுடன் பொழுதைப் போக்குவதே மிக சுவாரசியமாக தோன்ற,  ஆண்களெல்லாம் இந்த விலை மதுகளின்  வீடே கதியென்று கிடந்தார்கள்.  குலப்பெண்களுக்கு இல்லாத அறிவும் , கலை உணர்வும் , சாகசமும் விலை மகளிடமே இருந்தது. கோவலன் ஆடலரசியான மாதவியைத் தேடிப்போனது போல பல நூற்றாண்டு களாக ஆண்கள் விலை மாதுகளை தேடிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.  

என்னதான்  மனித ஆண் அவள் அறிவை அகற்ற அரும்பாடு பட்டலும் பெண்கள்  மறைமுகமாக எதிர்வினையாற்றவே செய்தார்கள்.   பெண்கள் தங்களது உடல் உறுப்புகளையே நேர்த்தியாக்கி கவரச்சியால் ஆண்களை தங்களின் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றார்கள். ஆண்களுக்கு பிடித்த மாதிரி நடந்துகொண்டு அவர்களை தாஜா செய்தார்கள்.அடுத்ததாக ஒன்றுமே தெரியாத பேதை போல அதாவது   'நாணச் சிரிப்பு, ஓரக்கண் பார்வை , வெட்கச் சிரிப்பு, தொட்டால் சிணுங்கும் பயிர்ப்பு , நேருக்குநேர் பார்த்துப் பேசக் கூச்சம் , குழந்தைத்தனம் மாறாத பால்வடியும் முகம் , மழலை மாறாத கொஞ்சும் மொழி, பணிவு ,கீழ்ப்படிதல் , பயந்த சுபாவம் , வெகுளித்தனம் , எனக்கு ஒன்றுமே தெரியாதே என்ற மிரட்சியான தோற்றம். ' என்று தன்னை பேதையாக பெண் வெளிப்படுத்த இந்த பெண்நடத்தையை கலைஞர்கள் புகழ்ந்துதள்ளிவிட்டார்கள் . ஒன்று கவர்ச்சி இல்லையேல் பேதை நடத்தையை கையிலெடுக்க இதனால் ஆண்களெல்லாம் அறிவிற்காகத் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்திற்கு  உதவாத ஓரினச் சேரக்கை , பரத்தையுடன் சேரக்கை என்பதை விட்டுவிட்டு எதிர் பாலின சேரக்கையும் , குலப்பெண் சேரக்கையும் அவர்களது அபிமான உடலுறவு முறையானது. ஆனால் பெண்களின் இந்தத் தந்திரங்களால் பக்கவிளைவுகளும் உருவாகின. தன் இன அடையாளக் குறிகளை அவள் மிகைப்படுத்தி வெளிப்படுத்தியதால் அவளை வெறும் ஒரு  'கலவியல் கருவி ' தான் என்கிற கீழ்நிலைக்குத் தள்ளியது. இது மட்டுமல்லாமல்  பேதை போல நடந்து கொண்டதால் அவளை அடிமுட்டாளாகக் காட்டியது. நாம் தான் அவளைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பு உணர்ச்சியை ஆண்களிடம் ஏற்படுத்தியது.

ஆண்களைக் கவர தனது அழகையும் , பேதை போன்ற நடத்தையும் பயன்படுத்திய பெண்கள் அதற்கு விலையாக கொடுத்தது சுய இயக்கத்தை . அவளால் தனித்து இயங்க முடியாது , நினைத்தையெல்லாம் வெளிப்படுத்த முடியாது , ஆணுக்குச் சரிநிகர் சமானமாக வாழமுடியாது . உலகில் அநேக இடங்களில் பெண்கள் இந்த விலையைக் கொடுத்து ஆண்களின் கட்டுப்பாட்டில் வாழ ஆரம்பித்தார்கள்.  ஆண்களும் தங்கள் பங்குக்கு பெண்களுக்காகப் பாடுபட்டார்கள் ; பாடுபடுகிறார்கள். உணவு , உறைவிடம், பாதுகாப்பு , பிள்ளைப்பேறு என்று பல தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள். ஆனால் பெண்களைப் பண்டங்களாகவே   நடத்தினார்கள்.

ஆணை ஆட்டுவிக்கும் விசைகள் மொத்தம் இரண்டு.ஒன்று கலவி மோகம் - கவர்ச்சியான, காம உணர்வைக் கிளறிவிடும் பெண் உருவை , பெண்ணாக இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட பெண் மாதிரியான ஓர் உருவைப் பார்த்தாலே ஆணுக்கு மோகம் உண்டாகி விடுகிறது ( ! இதனால தான் ஜவுளிகடை மொம்மையைக் கூட நம்மாளுக வச்ச கண்ணு வாங்காம பாக்குறாங்களோ !) . மற்றொன்று ' நான் தான் எல்லோரையும் விட உசத்தி ' என்ற உணர்வு. தன் உயர்ந்த நிலையைப் பிறருக்குப் பறைசாற்றிக் கொண்டே இருக்கும் இந்த உந்துதல் ஆணினத்தின் இயற்கை சுபாவம் . இதனால் தான் ஆண்கள் அதிகமாக தற்பெருமை பேசுகிறார்களோ ! ஆணை பலவீனப்படுத்தும் விசயங்கள் இரண்டு .ஒன்று இல்லற துரோகம் மற்றொன்று தாழ்வு மனப்பான்மை. ஆண்களின் பலம், பலவீனங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு  நடந்து கொண்டனர். ஆணாத்திக்க சமூகமாக இருந்தாலும் , பெண் அடிமையாக நடத்தப்பட்டாலும் மறைமுகமாக ஆட்சி நடத்துவது பெண்கள்தான். அரசாங்கம் பெண்களின் ஆதரவில்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. ஒரு பொருளை விற்பனை செய்ய  அது ஆண் பயன்படுத்தும் பொருளாக இருந்தாலும் பெண் தேவை. குடும்பத்தலைவர் தங்களின் மனைவியுடன் கலந்து பேசாமல் எந்த முடிவும் எடுப்பதில்லை. எந்தவிதமான விசயங்களும் பெண்களின் ஆதரவில்லாமல் வெற்றி பெற முடிவதில்லை.

பெரும் போராட்டத்திற்கு பிறகு பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்தாரகள். ஆண்கள் தடம் பதித்த எல்லாத்துறைகளிலும் நுழைந்தார்கள்.      ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாக இருந்த பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்த அரை நூற்றாண்டிலேயே ஆண்களை விட அந்தஸ்தில் உயர்ந்து காட்டியதிலிருந்தே பெண்களின் சக்தியை அறிய முடியும். கல்வியினால் கிடைத்த பொருளாதார சுதந்திரம் அவர்களை மேலும் வலுவாக்கியது. ஒரு காலத்தில் பெண்களிடம் அறிவு எனும் ஆயுதம் இல்லாத போது , ஆண்கள் தங்களுக்குள்ளேயே காதல் கொண்டு வாழ்ந்ததைப் போல, ஆண்களிடம் எதிர்பார்த்த அன்பு எனும் மனித குணம் அவனிடம் இல்லாத போது தற்காலத்து பெண்கள் சிலர் தமக்குள்ளேயே ‘ ஓரினச்சேர்க்கை ‘ புரிய ஆரம்பித்தார்கள். ‘ ஆண் என்றால் ஆதிக்கம் செய்தாக வேண்டும் ’ என்ற நிலைப்பாட்டிலேயே பின்தங்கிப்போன கட்டுப்பெட்டித்தனமான கணவர்களை இனியும் பொறுத்துப் போகவேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்த பெண்கள் அவர்களை விவாகரத்து செய்துவிட்டு தனியாகவே வாழ முடிவு செய்தார்கள்.இதனால், எல்லா நாடுகளிலும் விவாகரத்து விகிதங்களும் , தனி தாய்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்தன.

திருமணம் , ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கோட்பாடுகள் நமத்துப்போக ஆரம்பித்தன. திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்வது பிரபலமாக ஆரம்பித்தது. முந்தைய காலத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரோன் சுரந்த ஆண்களை  மட்டுமே தேர்ந்தெடுத்து உறவு கொண்டிருந்தாள் . அதிகபட்ச டெஸ்டோஸ்டிரோனின் பக்க விளைவாகவே மனித ஆண் , உலகையே ஆதிக்கம் செய்ய முற்பட்டான். ஆனால், இவனது ஆதிக்கச் சிந்தனைக்கு பெண்ணே நேரடி இரையானது மட்டுமின்றி , ஒட்டு மொத்த உலகமே பேரழிவுக்கு உள்ளானது. எல்லா வளத்தையும் தன்னுடையதாக்கிக் கொண்டு, தான் எவ்வளவு சக்திவாய்ந்த ஆண் என்று காட்டிக்கொள்ளும் போக்கினால், காடுகளை அழித்து , தேவைக்கு அதிகமான அநாவசிய ஆடம்பரங்களுக்காக , உலகையே மொட்டை அடித்தான் மனித ஆண். மனித ஆணின் வேட்டை, வேடிக்கை, பொழுதுபோக்கு, ஆராய்ச்சி ஆகிய வேட்கையினால், பல கோடிக்கணக்கான உயிரினங்கள் அழிந்தே போயின. அதனால் ஆண்களில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்க பெண்களையே ஆயுதமாக ப்யன்படுத்தத் தொடங்கியது, இயற்கை. 

சுயசார்பை அடைந்துவிட்ட இந்தக் காலத்தில் மனிதப் பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது பாதுகாப்போ, வீரமோ, உணவு கொணரும் திறனோ, அவன் மூலமாகக் கிடைக்கும் அந்தஸ்து உயர்வோ அல்ல. தன்னை ஒரு சக மனிஷியாக நடத்தி, அன்பு செய்யும் திறனை மட்டுமே.இதற்கு குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் ஆண்களிடம் சுரந்தாலே போதும் . கடந்த 50 ஆண்டுகளாக இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு உலகெங்கும் குறைந்து வருகிறது. இதனால், ஆண்களின் சராசரி உயரம் குறைய ஆரம்பித்துள்ளது. ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட ஒரே உயரமாக இருக்கும் உயிரியல் மாற்றங்கள் நேர ஆரம்பித்துள்ளன. ஆண்கள் கடந்த நூற்றாண்டைப் போல பெரிய தாடி, மீசை, நெஞ்சு நிறைய முடி, அதிகார தோரணை, நான் தான் பெரிய கொம்பன் என்று தன் வீரியத்தை விளம்பரப்படுத்துவதை நிறுத்தியிருக்கிறார்கள். தாடி, மீசையை ஒட்ட மழித்துவிட்டு , முடிந்தால் நெஞ்சின் ரோமங்களையும் நீக்குவதே அதிநவீன ஆணின் அடையாளமாகி வருகிறது.
    
இயற்கை பெண்களை அதிக வல்லமையுடன் படைக்கிறது. இந்த வல்லமையை மற்ற மிருகப் பெண்கள் பகிரங்கமாக வெளிப் படுத்துகின்றன. ஆனால் , மனிதப் பெண்களோ சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்ப தம் வெளிப்பாடுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களோடு அதிக பரிச்சயம் ஏற்படும்போதுதான் தெரியவே வருகிறது ; மனிதப் பெண் லேசுப்பட்டவளே இல்லை.யாரும் யூகிக்க முடியாது ரகசியமான மறுபக்கம் ஒன்று அவளுக்கு உண்டு என்பது.இயற்கையின் மற்ற சக்திகளைப் போலவே அவள் எதற்கும் பணியாமல் பயணித்துக் கொண்டே இருக்கிறாள்.
மனித வரலாறை திருப்பிப் பார்ப்பது எப்போதுமே சுவாரசியமாகவும் ,  ஆச்சரியமாகவும் ,அதிர்ச்சியாகவும் இருக்கும். அது போலவே இந்த பெண்ணின் சக்தி பற்றிய வரலாறும் இருக்கிறது. மொத்ததில் மரபணுக்கள் , ஹார்மோன்களின் உதவியால் ஆண் மற்றும் பெண்ணை கருவிகளாக பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு தான் இவை எல்லாம்.
ஆண் ,பெண் குறித்து ஆழமாகத் தெரிந்துகொள்ள ,விவாதிக்க  ‘ பெண்ணின் மறுபக்கம் ’ நூலை தயவு செய்து ஒரு முறையாவது படியுங்கள். இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.


மேலும் படிக்க :

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

கலாச்சார விடுதலையே சமூக விடுதலை! 

Sunday, May 15, 2016

ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் !


கதாநாயக துதிபாடல்,நம் சமூகத்தை தொடர்ந்து சிதைத்து வருகிறது. படிப்பறிவு சதவீதம் எவ்வளவோ உயர்ந்து விட்டதாக சொல்கிறோம். ஆனால் அந்த படிப்பறிவு அதிகரிப்பு சமூக அளவிலோ , அரசியலிலோ எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை ; தனிப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளவே பயன்பட்டிருக்கிறது. "பயன்படுத்து , தூக்கியெறி " என்ற உலகவணிகமயமாக்கல் கோட்பாட்டை மேலும் வலுப்படுத்தவே இந்தக் கல்வியறிவு உதவியிருக்கிறது. சமூகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கவோ , குறைந்தபட்சம் அநீதி குறித்து விவாதிக்கவோ செய்யமால் கண்டுகொள்ளாமல் இருந்து கொள்ளவே கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். படித்து , பணம் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்று அவ்வளவுதான் அதற்கு மேல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்ற மனநிலையையே இன்றைய கல்வி உருவாக்குகிறது. 

கதாநாயக துதிபாடல்களின் விளைவுகளை அறியாமலேயே கதாநாயக துதிபாடல் இங்கே வளர்க்கப்படுகிறது. சினிமாக்காரர்களும் , அரசியல்வாதிகளும் , மதவாதிகளும் சராசரி மனிதர்கள் தான் என்பதை மறந்து கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தெரியாமலேயே இருக்கிறோம். ஜெயலலிதாவின் செயல்பாடுகள் பிடித்திருந்து அவருக்கு ஓட்டுப்போடுவதில் தவறில்லை. ஆனால் யார் எப்படி ஆட்சி செய்தாலும்  எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சின்னமான இரட்டை இலைக்குத்தான் சாகும்வரை ஓட்டுப் போடுவேன் என்பது அறிவீனம். இன்னொரு பிரிவினர் , தி.மு.க. ஆட்சியில் தான் எங்களுக்கு வேலை கிடைத்தது. அதனால் தி.மு.க. வின் செயல்பாடு எப்படியிருந்தாலும் நாங்கள் தி.மு.க.விற்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்கிறார்கள்.

தொகுதியில், தங்களுக்குப் பிடித்த இயக்கத்தின் சார்பாக கடைந்தெடுத்த அயோக்கியனே நின்றாலும் நாங்கள் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது. இந்த நிலை மாற வேண்டும்.  கதாநாயக துதிபாடல் ஒழிய வேண்டும். முதல்வர் வேட்பாளரை முன்வைத்தோ , கட்சியை முன்வைத்தோ , சாதி, மதம் , இனம் உள்ளிட்டவையை முன்வைத்தோ வாக்களிக்கக் கூடாது. தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில்  யார் சிறந்தவரோ , தேர்தலுக்குப் பிறகும் எளிதாக அணுகக்கூடியவரோ அவர் எந்தக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்குதான் வாக்களிக்க வேண்டும். 

ஒரு நல்ல வேட்பாளரை நமது தொகுதிக்குத் தேர்ந்தெடுப்பதுதான் நமது முதல் கடமை. நமக்குப் பிடித்தவர் முதல்வராக வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் இரண்டாம்பட்சம் தான். நாம் முதல்வரை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது. நாம் நமது தொகுதிகளில்   தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் சேர்ந்து தான் முதல்வரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல்வரும் நல்லவராகவே இருப்பார். இன்றைய சூழலில் இது பெருங்கனவு என்றாலும் இப்போதாவது தொடங்க வேண்டும்.  முன்பெல்லாம் வெற்றி பெற்ற பிறகுதான் முதல்வரையை தேர்ந்தெடுப்பார்கள். இப்போது, கட்சி ஆரம்பித்த உடனேயே முதல்வர் கனவில் மிதக்கிறார்கள்.

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றமல் , தேர்தலின் போது மட்டும் மக்களைச் சந்திப்பதையே எல்லாக் கட்சிகளும் கடைபிடிக்கின்றன. இதில் பழைய கட்சிகள் , புதிய கட்சிகள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. கம்யூனிஸ்டு கட்சிகளும் தமிழக அளவில் சரிவர பணியாற்றவில்லை. இவ்வளவு பெரிய அரசியல் வெற்றிடம் இருந்தும் , இரு பெரிய கட்சிகள் மீதும் வெறுப்புகள் இருந்த போதும் இந்த வெற்றிடத்தை நிரப்ப கம்யூனிஸ்டுகள் தான் சரியான தீர்வாக இருந்தும் அதை அவர்கள் முன்னெடுக்கவில்லை. 

தங்களை மாற்றத்துக்கான கட்சி என்று அறிவித்து கொண்ட தேமுதிக கூட இதுவரை தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்தித்திருக்கிறது. அந்த கட்சி வளராமல் இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். மக்களோடு மக்களாக,  மக்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து பங்கு பெற்றால் மட்டுமே ஒரு கட்சியால் வளர முடியும். ஒரு கட்சியில் ஒருவர் மட்டும் முன்நிறுத்தப்படாமல் அடுத்த கட்டத்தலைவர்களையும் உருவாக்க வேண்டும் . இதை எந்தக்கட்சியும் முறையாக கடைபிடிப்பதில்லை. ஜனநாயக சர்வாதிகாரம் தான் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறது . 

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டதற்கு காரணம் மாற்றி மாற்றி ஆட்சி செய்த அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளும் மக்களின் நம்பிக்கையை இழந்தது தான். இந்த இரு கட்சிகளின் மீதிலும் கடுமையான வெறுப்பு இருந்தாலும் , இந்த இரு கட்சிகளைத் தவிர்த்து வேறு ஒருவருக்கு வாக்களிக்க பெருவாரியான மக்கள் தயங்குகிறார்கள்.  ஏன் என்று தான் தெரியவில்லை. புதிய கட்சிகளும் போதிய நம்பிக்கையைப் பெறவில்லை. மக்கள் நலக்கூட்டணி ஒரு மாற்றாக இருந்தாலும் , அவர்கள் ஒருங்கிணைந்து மக்களைக் கவரவில்லை. எத்தனை பேர் சேர்ந்திருந்தாலும் கூட்டணியின் பெயரை மாற்றியிருக்கக் கூடாது. " தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி - தாமாக கூட்டணி " வாசிக்கவே நன்றாக இல்லை.  எல்லாக் கட்சிகளும் மக்களின் நலனுக்காகத்தானே ஆட்சிக்கு வருவதாக சொல்கின்றன. அப்புறம் கூட்டணி பேர் வைப்பதில் ஏன் இத்தனை பேதங்கள். வைகோ வின் தான்தோன்றித்தனமான பேச்சுகளும்,  செயல்பாடுகளும் மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவையே தருகின்றன. 

இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி இளைஞர்களை கவர்ந்து வருகிறது. சீமான் முன்வைக்கும் வாதங்கள் சிறப்பானதாக இருந்தாலும் , இனம் இனம் என்று  இனத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இந்தியாவில் யாரும் எங்கேயும் வாழ்வதற்குதான் சுதந்திரமே பெற்றோம்.ஜனநாயகத்தின் தேவையும் அது தான். நாம் தமிழர் கட்சி இன்னொரு சிவசேனாவாக மாறாமல் இருக்க வேண்டும்.

முதலில் தற்போது நடைமுறையில் இருக்கும் சின்னங்களை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கும் குலுக்கல் முறையில் தனித்தனி  சின்னம் ஒதுக்க வேண்டும். ஓரே கட்சிக்கு ஒரே சின்னத்தை தொடர்ந்து ஒதுக்குவதை நிறுத்த வேண்டும். குழப்பங்கள் நிகழும் என்று சொல்லப்படலாம். 75% மேல் படிப்பறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலத்தில் குழப்பம் எதற்கு வருகிறது.  இதை மீறியும் தேர்தலை முன்வைத்து நிறைய எதிர்பார்ப்புகள் மக்களிடத்தில் உள்ளன. ஓட்டுப் போடுவதைத் தாண்டியும் மக்களுக்கு அதிகாரம் வேண்டும். விகிதாச்சார முறையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வரலாம்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பேசப்படும் விசயம் ஓட்டு வங்கி. கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீததை வைத்தே தற்போதைய தேர்தலில் அக்கட்சிகளின் வெற்றி, தோல்வி  மட்டுமல்லாமல் , மற்ற கட்சிகளுடன் பேரங்களும் பேசப்படுகின்றன. நாம் கட்சிகளை பார்த்து ஓட்டுப்போட்டதன் விளைவு இது. கட்சிகளைப் பார்த்து ஓட்டுப் போடாமல் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் நல்லவர்களைப் பார்த்து ஓட்டுப் போட்டால் இந்த ஓட்டு வங்கி சதவீதம் சினானாபின்னமாகிவிடும். இந்த தேர்தலில் எப்படி மதுவிலக்கையும் ,பெரும்பாலும் இலவசமில்லா தேர்தல் அறிக்கைகளை வெளியிட வைத்தோமோ , அதே போல நல்லவர்களை மட்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களாக நிறுத்தும் நிலையை நாம் உருவாக்க வேண்டும். எல்லாம் நாம் போடப்போகிற ஓட்டில் இருக்கிறது. 

நம் வாக்கு! நம் மாற்றம் !

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !


Tuesday, April 26, 2016

எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !


தமிழ் கூறும் நல்லுலகம் எந்தக் கலைஞரையும் அவர் வாழ்கின்ற காலத்தில் கொண்டாடியதில்லை. அதற்கு எஸ்.ஜானகியும் விதிவிலக்கில்லை. ஆனாலும் எஸ்.ஜானகியைக் கொண்டாட நமக்கு இன்னமும் வாய்ப்பிருக்கிறது. 1957 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.ஜானகி தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கனி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் 20,000 கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். தற்போது அதிக எண்ணிக்கையில் பாடவில்லையென்றாலும் 77 வயதிலும் ஒருவரால் குரல் நடுக்கமில்லாமல் பாட முடிவதென்பதே பெரிய சாதனை தான்.

1958-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘ கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா... ’ என்ற பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப்பாடலாக அமைந்தது. பி.சுசீலா , பி.லீலா பொன்றவர்களால் சரிவர பாடமுடியாமல் போன இப்பாடலைச் சிறப்பாக பாடி வெற்றிபெற்றாலும் தமிழ் திரையுலகம், எஸ்.ஜானகியை அந்த காலகட்டத்தில் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. எப்பவாவது ரிரு பாடல்களைப் பாட வைத்தது. ஆனால் அதே காலகட்டத்தில் மலையாளத்திலும், கன்னடத்திலும்,தெலுங்கிலும் பாட அதிக வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் பாட கிடைத்த சொற்ப வாய்ப்புகளையும் இன்றும் ரசித்து  கேட்கப்படும் வெற்றிப்பாடல்களாக மாற்றினார். உதாரணமாக ஜல் ஜல் எனும் சலங்கையொலி...( பாசம் ), தூக்கமும் உன் கண்களை தழுவட்டுமே..( ஆலயமணி ), பாடாத பாட்டெல்லாம்...( வீரத்திருமகன் ), அழக்கும் மலருக்கும்...( நெஞ்சம் மறப்பதில்லை ) சித்திரமே சொல்லடி....( வெண்ணிற ஆடை ), ராதைக்கேற்ற கண்ணனோ...( சுமைதாங்கி ), உலகம் உலகம்...( உலகம் சுற்றும் வாலிபன் ), காற்றுக்கென்ன வேலி...( அவர்கள் ), மலரே குறிஞ்சி மலரே...( டாக்டர் சிவா ) இன்னும் பல பாடல்களைச் சொல்ல முடியும். இருந்தாலும் இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான் எஸ்.ஜானகி தமிழ்த்திரையிசையின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறிப்போனார்.


சிஸ்லா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி எனும் முழுப்பெயர் கொண்ட எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றைய சென்னை மாகாணத்திற்குட்பட்ட குண்டூர் ( தற்போது ஆந்திரா ) மாவட்டத்திலுள்ள பல்லேபட்லா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். மூன்று வயதிலேயே இசை கற்க ஆரம்பித்து பத்து வயது வரை கற்றார். பின்பு தனது உறவினரின் பரிந்துரையால் சென்னைக்கு இடம்மாறினார். ஏவிம் ஸ்டுடியோவில் குழுப்பாடகியாக பாடும் வாய்ப்பு கிடைத்தது. 1957ல் டி.சலபதிராவ் இசையமைப்பில் ‘ விதியின் விளையாட்டு ’ என்ற திரைப்படத்திற்காக தனது முதல் பாடலை எஸ்.ஜானகி பாடினார். ஆனால் இத்திரைப்படம் வெளிவரவில்லை. 

எஸ்.ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணி பாடகியான பிறகு இசைக்கான எந்தப்பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும் எந்த மொழிப்பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கேவுரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார். இந்தத் திறமையினாலேயே ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால் அழிக்க முடியாத பல வெற்றிப்பாடல்களையும் அம்மொழிகளில் கொடுத்தார். இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு இசைரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என உரிமை கொண்டாடுகின்றனர் ;யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராகயில்லை. இதைவிட ஒரு கலைஞருக்கு பெரிய அங்கிகாரம் தேவையில்லை. தென்னிந்திய திரையிசைப் பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப்போல் எவருமில்லை.. “ ஜானகி பாடும்போது ஆழமான ஒரு உணர்ச்சிப்பெருக்கை நான் அடைந்தேன் என்று சொல்லலாம்.அது ஒரு பாடகி பாடுவது போலவே இருக்கவில்லை; அந்தப்பாடலின் நாயகி பாடுவது போலவே எப்போதும் ஒலித்தது. பலமொழி திரைப்பாடல்களிலும் பலவகை இசைகளிலும் என்னுடைய அறிதல் விரிந்த பிறகு எஸ்.ஜானகிதான் தென்னிந்திய திரைப்பாடகிகளில் முதன்மையான உணர்ச்சி வெளிப்பாட்டுத்திறன் கொண்ட பாடகி என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன் “ என்று எஸ்.ஜானகி பற்றி எழுதிய முக்கியமான கட்டுரையில் இசைவிமர்சகர் ஷாஜி குறிப்பிட்டுள்ளார்.


இளையராஜாவின் ஆரவாரமான வரவு தமிழ்திரையிசையில் ஒரு பெரும் பாய்ச்சலையே உருவாக்கியது. எல்லாத்தரப்பு மக்களையும் இளையராஜாவின் திரையிசை சென்றடைந்தது. இன்றும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையை விடவும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் இசையாகவும், கேட்டாலும் சலிக்காத இசையாகவும் இளையராஜாவின் இசையே இருக்கிறது. நாட்டார் இசையை, திரையிசையாக மாற்றிய மாபெரும் சாதனை இளையராஜாவினுடையது. இளையராஜா மேற்கத்திய இசையை வைத்து நிறைய கலப்புகளைச் செய்தார். ஒரு கிராமியப்பாடலுக்கும் மேற்கத்திய இசையைப் பயன்படுத்தினார். ஒரு நகரப்பாடலிலும் கிராமிய இசையைக் கொண்டுவந்தார். இரண்டையும் கலந்தும் நிறைய பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

இன்றுவரை தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னனாக இருக்கும் இளையராஜாவின் வெற்றிக்குப் பின்னால் நிறையபேர் இருந்தாலும் எஸ்.ஜானகியின் பெரும் பங்களிப்பை எப்போதும் தவிர்க்க முடியாது. இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு உற்ற துணையாக ஜானகியின் பாடும் திறமையே முன் நின்றது. அந்தத் திறமையைக் கண்டடைந்து அதைச் சரியாக பயன்படுத்தியவரும் இளையராஜா தான். கிராமியப் பாடலாக இருந்தாலும், கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும் ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில் பங்களிப்புச் செய்தார். சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார். ஒரு பாடல் , அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு , திரையில் யார் பாடப் போகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப் பெற்ற ஒரே பாடகி எஸ்.ஜானகி தான்.

இளையராஜாவின் முதல் திரைப்படமான ‘ அன்னக்கிளி ’  திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய ‘ மச்சானைப் பாத்தீங்களா.. ‘ , ‘ அன்னக்கிளி உன்ன தேடுதே... ’ இந்த இரண்டு பாடல்களும் இளையராஜாவைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன. அதன் பிறகு இந்த இணையைப் பிரிக்க முடியவில்லை. இளையராஜாவின் பெரும்பாலான வெற்றிப்பாடல்களில் எஸ்.ஜானகியின் பங்கும் இருக்கும். இளையராஜாவின் இசையில் அதிகளவில் ஒலித்த பெண்குரலும் எஸ்.ஜானகியினுடையதுதான். இளையராஜா தனது சொந்தக் குரலில் பாடிய ஜோடிப்பாடல்களின் முதன்மைத் தேர்வாக எஸ்.ஜானகி தான் இருந்தார். தனது தனித்திறமையாலேயே எஸ்.ஜானகி அதிகளவு பாடல்களைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். குழந்தையின் சிணுங்கல், சிறுவர் சிறுமியின் குரல், கிழவியின் குரல், ஆணின் குரல் என்று பல குரல்களில் பாடியதோடு மட்டுமில்லாமல் மிகவும் பொருத்தமாக பாடியதால் தான், “பல குரல்களில் சிறப்பாகப் பாடும் திறமையுள்ளவர் ” என்று இன்றும் பலராலும் எஸ்.ஜானகி நினைவு கூறப்படுகிறார்.

பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார். ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே நிறைய இருக்கின்றன. “ லல்லா லல்லா லல்லா லல்லா ... சின்ன சின்ன வண்ணக்குயில்... (மெளனராகம்), “ லால லால ல ... ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது...( கிராமத்து அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா ... எந்தப்பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக்காளை) ” என்று சொல்லிக்கொண்டே போகலாம். எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும் அலாதியான குரலிலேயே ஒலிக்கும். மெல்லிசைப் பாடல்கள் என்றாலும் அவர் பாடிய எல்லா மெல்லிசைப் பாடல்களையும் ஒரே வகைமைக்குள் அடக்க முடியாது. ஒவ்வொரு மெல்லிசைப் பாடலும் ஒவ்வொரு விதமான உணர்வைக் கொடுக்கும் வகையில் பாடப்பட்டிருக்கும். இதே போலவே தான் சோகம், ஜோடி, தனி மற்றும் குழுப்பாடல்களும் தனித்தன்மையுடன் இருக்கும்.எஸ்.ஜானகி பாடிய பாடல்களில் இவரின் குரல் பெரும்பாலும் பின்னணி இசையை மிஞ்சியே ஒலிக்கிறது.

1980களில் வெளிவந்த திரைப்படங்களில் ஒரு பாடலாவது காமரசம் சொட்ட சொட்ட உருவாக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடல்களில் ஒலிக்கும் பெண் குரல் பெரும்பாலும் எஸ்.ஜானகியினுடையதாகவே இருக்கும். அதிலும் அந்தப்பாடல்களில் வரும் ஹம்மிங்களிலும், கொஞ்சல்களிலும், சிணுங்கல்களிலும் நம்மை கிறங்க வைத்துவிடுவார். “ ஆ..ரீராரிரோ.. கண்ணத் தொறக்கணும் சா..மி... (முந்தானை முடிச்சு)”, “ பொன்மேனி உருகுதே.. என் ஆசை பெருகுதே... (மூன்றாம் பிறை) ”, “ நிலா காயுது ..நேரம் நல்ல நேரம்.., நேத்து ராத்திரி.. யம்மா...(சகலகலா வல்லவன்) ” என்று இன்று கேட்டாலும் சொக்கித்தான் போய்விடுகிறோம். இந்த வகைப்பாடல்களில் ஜானகி அளவிற்கு உணர்வுப்பூர்வமாக வேறு எவராலும் பாடிவிட முடியாது என்பதை உறுதியாகக் கூற முடியும்.

எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம் ,ஆசை, தாய்மை எனப் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன. “ காற்றில்..எந்தன் கீதம்...(ஜானி), அன்பே வா அருகிலே...( கிளி பேச்சு கேட்க வா ), மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ...( பூவிழி வாசலிலே ),பட்டுவண்ண ரோசாவாம்...( கன்னிப்பருவத்திலே ), பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா..( நீங்கள் கேட்டவை ), சின்னத் தாயவள் தந்த ராசாவே...( தளபதி), எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்...(குரு), இது ஒரு நிலாக்காலம்...(டிக் டிக் டிக்), ஊருசனம் தூங்கிருச்சு...(மெல்லத் திறந்தது கதவு), புத்தம் புது காலை...(அலைகள் ஓய்வதில்லை), செந்தூரப்பூவே செந்தூரப்பூவே..., மஞ்சள் குளிச்சி..(16 வயதினிலே), வான்மதியே வான்மதியே...(அரண்மைக்கிளி), ஆசை அதிகம் வச்சு...(மறுபடியும்), நெஞ்சினிலே நெஞ்சினிலே...( உயிரே ) இன்னும் பல பாடல்களைக் குறிப்பிட முடியும். இசை மேடைகளில் எஸ்.ஜானகியின் பாடல்களையே மீண்டும் மீண்டும் பாடுகிறார்கள்.

இளையராஜாவின் இசையில் பாடியவர்களில் சிறந்த ஜோடிப் பாடகர்களாக எஸ்.ஜானகியையும், மலேசியா வாசுதேவனையையுமே குறிப்பிட முடியும். “எஸ்.ஜானகிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மலேசியா வாசுதேவனால் மட்டுமே பாட முடியும்” என்று ஷாஜி குறிப்பிடுகிறார். காலத்தின் விளையாட்டால் குறைவான பாடல்களே இவ்விருவரும் இணைந்து பாடியிருந்தாலும் அவை என்றும் கேட்கக்கூடிய இனிமை உடையவை. பூங்காற்று திரும்புமா..., வெட்டிவேரு வாசம்...( முதல் மரியாதை ) ,கோவில்மணி ஓசைதன்னை..., மலர்களே...( கிழக்கே போகும் ரயில் ), வான் மேகங்களே...( புதிய வார்ப்புகள் ), ஆழக்கடலில் தேடிய முத்து...( சட்டம் என் கையில் ), இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு...( சிகப்பு ரோஜாக்கள் ), கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச...( என் ஜீவன் பாடுது ), தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி...( தூரல் நின்னு போச்சு ), ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி....( தர்மயுத்தம் ), பேர் வச்சாலும் வைக்காம போனாலும்...( மைக்கேல் மதன காமராஜன் ) இவர்களிருவரும் இணைந்து பாடிய இன்னும் பல பாடல்களைக் குறிப்பிட முடியும். இவை அனைத்துமே எப்போது கேட்டாலும் சலிக்காதவை. இவர்கள்  பாடிய  எந்தப்பாடலையும்  இன்றைய பாடகர்களால்   நகலெடுத்து  பாடிவிட முடியாது. இவர்களின் குரல்களில் தான் நாம் உண்மையான கிராமத்து வாசனையை உணர முடியும்.


நல்ல திறமையிருந்தும் எஸ்.ஜானகி பாடிய அளவில் குறைந்தபட்ச வாய்ப்பு கூட மலேசிய வாசுதேவனுக்கு கிடைக்கவில்லை.இருந்தும் தமிழ் திரையிசையில் ஒரு தவிர்க்கமுடியாத தனியிடத்தை மலேசியா வாசுதேவன் பெறுகிறார். எல்லா வகையான பாடல்களையும் சிறப்பாக பாடக்கூடிய திறமை இருந்தும் அதிகபட்ச டப்பாங்குத்து பாடல்களை மட்டுமே பாடுவதற்கு தமிழ் திரையிசையுலகம் மலேசியா வாசுதேவனுக்கு வழங்கியுள்ளது. ஆனால்,இன்று டப்பாங்குத்து பாடல்களைத் தாண்டியும் வாசுதேவன்  நினைவு கூறப்படுகிறார் அவரது மற்ற அற்புத பாடல்களுக்காக. இதற்கு அவரது இசையாளுமையே காரணம். தமிழ் சமுகம் கொண்டாடத் தவறிய கலைஞர்களில் மலேசியா வாசுதேவனும் ஒருவர்.

இசைக்கும் மொழிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இசையமைப்பாளர் எவ்வளவு தான் உழைத்து சிறப்பான மெட்டை அமைத்தாலும் நல்ல பாடல் வரிகளும், நன்றாக பாடக்கூடியவர்களும் அமையாவிட்டால் அப்பாடல் வெற்றி பெறாது. விதிவிலக்காக சில பாடல்கள் மெட்டுக்காகவும், பாடல் வரிகளுக்காகவும், , சிறப்பான பாடும் முறைக்காகவும் நினைவில் இருக்கலாம். ஆனால் இவை மூன்றுமே சிறப்பாக அமைந்த பாடல்கள் மட்டுமே செவ்வியல் தன்மை கொண்டு காலத்தால் அழியாதிருக்கும். இம்மூன்றில் மெட்டு , பாடல் வரிகளை விட பாடகரின் பாடும் திறமையே அப்பாடலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இளையராஜாவிற்கு முன்பு வரை பாடகர்கள் பாடல் வரிகளைப் பாடும்போது மொழியை பிழையில்லாமல் பாடுவதில் கறார் தன்மை இருந்தது. பழைய பாடல்களில் லகரம் (ல,ள,ழ ), னகரம்( ன,ண ), ரகரம்( ர, ற) போன்றவை பெரும்பாலும் திருத்தமாக பாடப்பட்டதாலேயே அவற்றை இன்றும் ரசித்துக் கேட்கிறோம். இளையராஜா இவ்விசயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் மொழியில் கவனம் செலுத்தி திருத்தமாக பாட கற்றுக்கொண்ட டி.எம்.எஸ்., ஜானகி ,வாசுதேவன் போன்றவர்கள் மட்டுமே சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். நாம் எங்கு சென்றாலும் , எங்கு வாழ்ந்தாலும் இம்மூவரின் குரல்கள் ஏதோ ஒரு விதத்தில் நம் காதுகளை அடைகின்றன. அந்த அளவிற்கு நம்முடன் கலந்துவிட்ட குரல்கள் இவை.எழுத்து மொழியில் ஆங்காங்கே எழுதப்படும் வாசகங்களில் இருக்கும் எழுத்துப்பிழையைச்  சுட்டிக் காட்டுகிறோம். அதே சமயம்  நமது பேச்சு மொழியிலோ , கோடிக்கணக்கானவர்களைச் சென்றடையும் திரையிசைப்பாடல்களிலோ பிழைகளை எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் திரையிசையுடன் சுருங்கிப்போனது வருத்தமே. கலை என்பது எப்போதுமே மக்களுக்கானது ; மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடியது என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் கலை வடிவத்தில் ஒன்றான இசையும் திரைப்படத்தைச் சார்ந்து இயங்காமல் தன்னிச்சையாக இயங்க வேண்டும்.
   
2013 ஆம் ஆண்டு தனக்குக் கொடுக்கப்பட்ட பத்மபூஷண் விருதை எஸ்.ஜானகி நிராகரித்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ,” இது காலம் கடந்த கொடுக்கப்பட்ட விருது. மேலும் என்னை விட சிறந்த தென்னிந்திய கலைஞர்களுக்கே இன்னும் கொடுக்கவில்லை. இப்போதைய நிலையில் பாரத ரத்னா கொடுத்தால் வாங்கிக் கொள்வேன் ”. 55 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையிசைக்கு பங்களிப்பு செய்தவரிடம் வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும். எந்த விருதாக இருந்தாலும் அதை வேண்டாம் என்று சொல்வதற்கு துணிச்சலும் தைரியமும் வேண்டும். 77 வயதிலும் தனது சுயமரியாதையை இழக்காமல் இருக்கும் எஸ்.ஜானகியைக் கொண்டாடுவோம். “ எனது ரசிகர்கள் தான் எனக்குப் பெரிய விருது “ என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

குறிப்பு :- இக்கட்டுரை 'காற்றை கவுரப்படுத்தும் குரல் ! - தி இந்து என்ற தலைப்பில் தி இந்து நாளிதழின் இணைப்பிதழான இந்து டாக்கீஸில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் . 

மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

பட்டுவண்ண ரோசாவாம் ...!
...................................................................................................................................................................



Monday, April 25, 2016

காற்றை கவுரப்படுத்தும் குரல் ! - தி இந்து



தி இந்து தமிழ் நாளிதழின் வெள்ளி இணைப்பிதழான இந்து டாக்கீஸில் கடந்த  22-04-16 அன்று எஸ்.ஜானகி பற்றி எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது .
அந்தக் கட்டுரையின் இணைய இணைப்பு - http://tamil.thehindu.com/cinema/cinema-others/ஏப்ரல்-23-எஸ்ஜானகி-78வது-பிறந்த-தினம்-காற்றை-கவுரவப்படுத்தும்-குரல்/article8508472.ece .

 நன்றி !

மேலும் படிக்க :

எது தூய்மை ? - எனில் இணைய இலக்கிய இதழ் !

குறி - சிற்றிதழ் !

http://jselvaraj.blogspot.in/search/label/விகடன்
...................................................................................................................................................................

Saturday, March 26, 2016

உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் !


1956 ஆம் ஆண்டு வெளிவந்த பாசவலை திரைப்படம் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது . இத்திரைப்படத்தில் 5 பாடல்களை பட்டுக்கோட்டையார் எழுதினார் . அதில் இந்தப் பாடலும் ( உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்...)  ஒன்று. இந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகளைப் பார்த்துவிட்டு வயதான ஒருவர் தான்  எழுதியிருப்பார் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் இப்பாடல் வெளிவந்த போது கல்யாணசுந்தரத்தின் வயது 26 தான் . இளவயதிலேயே அவர் செய்த வேலைகளும் அதிகம் ,சந்தித்த சோதனைகளும் அதிகம் . இந்த அனுபவமே அவரது பாடல் வரிகளில் தத்துவக் கருத்துகள் நிரம்பியிருக்கக் காரணம் .  

அந்தப் பாடல் :



பாடல் வரிகள் :

 குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! - (உனக்கு

மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதிமந்தமடா -(உனக்கு

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்டு மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ததிடும் சொந்தமடா (உனக்கு

பாபச் சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக் காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்க ளானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!

அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் _ முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் _ மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்அவரு
செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? _ நீ
துணிவிருந்தாக் கூறு! _ ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! _ அவர் எங்கே போனார் பாரு!     – அவரு

பொம்பளை எத்தனை? ஆம்பிளை எத்தனை?
பொறந்த தெத்தனை? எறந்த தெத்தனை?
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை?
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு _ இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! ஆனந்தம்!               (உனக்கு


 வல்லிய வரிகள் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/

மேலும் படிக்க :

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது !

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !
...................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms