Sunday, November 24, 2024

திண்டுக்கல் துளிர் நண்பர்கள் 2வது விருது வழங்கும் விழா !

திண்டுக்கல் நகரத்தில் வருடம் ஒரு முறை நடைபெறும் புத்தகத் திருவிழா தவிர்த்து இலக்கியம் சார்ந்த வேறு நிகழ்வுகள் நடைபெறுவது அரிது. துளிர் நண்பர்கள் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்ட முதல் நிகழ்வு லக்சர்ட் பள்ளியில் நடைபெற்ற ' பவா செல்லத்துரையின் பெருங்கதையாடல்'. உண்மையிலேயே நீண்ட காலம் நினைவில் இருக்கும் நல்ல நிகழ்வு. ( https://www.facebook.com/share/p/14sGXSXmHR/  ) அதன் பிறகு இப்போது தான் அந்த அமைப்பின் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. காரணம் சனிக்கிழமை. சனிக்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் சனிக்கிழமை நடைபெறும் நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொள்ள முடிகிறது.


திண்டுக்கல் GTN கல்லூரி அருகிலிருக்கும் RK மஹாலில் இந்த துளிர் நண்பர்கள் அமைப்பின் 2வது விருது வழங்கும் விழா தொடங்கியது. துளிர் நண்பர்கள் இதற்கு முன்பு ஒருகிணைத்த நிகழ்வுகள் குறித்தான தகவல்கள் சொல்லப்பட்டன.முதலாவது நிகழ்வாக ந.செந்தில்குமரன் அவர்களின் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு பற்றிய 'நீலகிரி வரையாடு' எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. அவர் பதிவு செய்த வரையாடு பற்றிய காணொளியும் ஒளிபரப்பப்பட்டது. செந்தில்குமரன் பொறியாளராக இருந்தும் வனவிலங்குகள் மீது உண்டான கவனம் பற்றியும், இந்த நூல் எப்படி சாத்தியமானது என்பது பற்றியும் பேசினார்.


ஜெ.பிரான்சிஸ் கிருபா விருது வெய்யில் அவர்களுக்கு வழங்கப்பட்டது." ஜி.நாகராஜன் பெயரிலும், ஜெ.பிரான்சிஸ் கிருபா பெயரிலும் விருது வழங்க முடிவெடுத்ததே மிகவும் நல்ல விசயம். அந்த பெயரில் நான் விருது வாங்குவது மிகவும் மகிழ்ச்சி " என்று வெய்யில் குறிப்பிட்டார். நிறைய வாசர்களுக்கும் இதுவே தோன்றும். ஜி.நாகராஜன் எழுத்தை வாசித்துவிட்டு கடந்து போகவே நிறைய பேர் விரும்புவார்கள். அவர் பெயரில் விருது என்பது ரொம்பவே பெரிய விசயம்தான். தனக்கும் பிரான்சிஸ் கிருபாவிற்கும் இடையிலான நட்பு குறித்தும் வெய்யில் குறிப்பிட்டார். 


ஜி.நாகராஜன் விருதை நரன் பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் கவிதை எழுதத் தொடங்கி அப்புறம் சிறுகதை எழுத ஆரம்பித்தது. கவிஞர் வெய்யிலுக்கும் அவருக்குமான நட்பு. மூன்று விருதுகள் வெய்யிலுடன் சேர்ந்து பெற்றிருப்பது. பதிப்பகம் தொடங்கி எழுதும் திறமையுள்ள புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என நரன் பேசினார். 


வெய்யிலும் சரி , நரனும் சரி ஒரு ஜென் மனநிலையில் தான் அமர்ந்திருந்தனர். எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. அவ்வளவு முதிர்ச்சி அவர்களிடத்தில். விருது கொடுப்பதற்கு பதிலாக யாராவது அவர்களைக் கூப்பிட்டு வைத்து திட்டினால் கூட அலட்டிக்கொள்ள மாட்டார்கள் போல. ரொம்பவே நல்ல விசயம். நாமும் கற்றுக்கொள்ள வேண்டும்.


அடுத்ததாக வாழ்நாள் சாதனையாளர் விருது திண்டுகல்லைச் சேர்ந்த தமிழ்ச்செம்மல், து.இராசகோபால் அவர்களுக்கு வழங்கப்பட்டது. துளிர் நண்பர்கள் அமைப்பின் அ.முகமது யூசுப் அன்சாரி முதல் நாள் தனது முகநூல் பக்கத்திலும், நிகழ்வின் போது தனது பேச்சிலும் குறிப்பிட்டது தான் ஐயா, இராசகோபால் அவர்கள் நமக்கு அளிக்கும் செய்தி " சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்". 


வெய்யில் அவர்களின் கவிதைகள் குறித்தும், நரன் அவர்களின் 'கேசம்' மற்றும் 'வாரணாசி' சிறுகதைகள் குறித்தும் பவா செல்லத்துரை பேசினார். மைக்கை கையில் வாங்கியவுடன் ஒட்டு மொத்த கூட்டத்தையும் வசீகரிக்கும் வல்லமை தோழர் பவா செல்லத்துரை அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அதனால் தான் அவர் எவ்வளவு நேரம் பேசினாலும் சலிப்பில்லாமல் நம்மால் கேட்க முடிகிறது. அவர் குறிப்பிட்டது போல எந்தக் கதையாக இருந்தாலும் எழுத்தாளர் எழுதியிருக்கும் கோணத்திலிருந்து சொல்லாமல் வாசிக்கும் போது எப்படி உணர்ந்தாரோ அப்படியே சொல்வது தான் அவர் கூறும் கதைகள் மீதான நெருக்கத்தை நமக்கு உருவாக்குகிறது. நிகழ்வில் அவர் சொன்ன நரனின் 'வாரணாசி' கதையும் அப்படியானதுதான். 


நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நிகழ்வை நன்றாக ஒருகிணைத்தனர். தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் தகவல்கள் சொல்லப்பட்டன். முனைவர்களே தொகுப்பாளர்களாக இருக்கும் போது இதெல்லாம் சாதாரணம் தான். சத்தமே இல்லாமல் நிறைய பேர் பங்கெடுத்து இருப்பார்கள் போல. தமிழ் இலக்கியத்தின் முக்கிய மொழி பெயர்ப்பாளர் கார்த்திகை பாண்டியன் அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்து நிகழ்வை கண்டு ரசித்தார். அப்புறம் முகமது யூசுப் அன்சாரி அவர்கள் பழனிக்குமார் ( தொழில் செய விரும்பு) அவர்களை அழைத்து மேடையில் அமர வைத்தார். நாளைய இயக்குநராக போகும் ராஜ்குமார் பற்றி நரன் குறிப்பிட்டார். இன்னும் வெளியே தெரியாதவர்கள் நிறைய இருக்கலாம்.


கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பெரும்பாலானோர் வாழ்க்கையில் கூடுதல் இறுக்கம் சேர்ந்துள்ளது. அந்த இறுக்கத்திலிருந்து இசை, புத்தகம், சினிமா, ஓவியம் என கலை சார்ந்த செயல்பாடுகளே நம்மை தளர்த்துகின்றன. இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுக்கவே அரசுகள் அனைத்தும் உலகவணிகமயமாக்கலின் பிடியில் சிக்கியுள்ளன. தற்போதைய சூழலில் பூமியில் மக்களுக்கான அரசுகள் என்று இருப்பவை மிக மிக குறைவு. இப்படியான சூழலில் கலை மட்டுமே நாம், இந்த சூழலை எதிர்கொள்ளவும், இந்த சூழலிலிருந்து வெளிவரவும் துணை நிற்கும். அந்த வகையில் நிகழ்கால வாழ்வு தரும் இறுக்கத்தைத் தளர்த்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.


இலக்கியத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து இயங்கும் துளிர் நண்பர்கள் அமைப்பிற்கு பாராட்டுகள் மற்றும் நன்றி. தொடர்ந்து திண்டுக்கல் நகரில் இலக்கிய நிகழ்வுகள் நடத்த துளிர் நண்பர்கள் அமைப்பை வாழ்த்துகிறோம். 


நாளை மற்றொரு நாளே !





Saturday, October 5, 2024

ஆலோலங் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே... !

 


"ஆற்றில் குளித்த

தென்றலே சொல்லுமே

கிளி சொல்லுமே துள்ளாதடி

துவளாதடி வம்புக்காரி

கொஞ்சாதடி குலுங்காதடி

குறும்புக்காரி..."


காலையில் இப்படியான ஒரு பாடலைக் கேட்டுக்கொண்டே பார்ப்பது அவ்வளவு அலாதியானது. நாள் முழுக்க இப்பாடலே காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. 


இளையராஜாவின் பாடல்களை ஒவ்வொன்றாக கேட்டு ரசித்து முடிக்க இந்த ஒரு ஆயுள் பத்தாது போலவே. இந்தப் பாடலிலும் எவ்வளவு இசை நுணுக்கங்கள்.தொடர்ந்து எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றே தோன்றுகிறது. Ilayaraja music is always mesmerizing us. 


"ஆலோலங் கிளி

தோப்பிலே தங்கிடும் கிளி

தங்கமே..." பாடலாசிரியர் அறிவுமதி எழுதிய இந்தப்பாடல்  1996-ஆம் ஆண்டு வெளியான 'சிறைச்சாலை' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.


இப்பாடலின் இசை ஒரு கவிதை

இப்பாடலின் வரிகள் ஒரு கவிதை 

இப்பாடலின் ஒளிப்பதிவு ஒரு கவிதை

இப்பாடலின் நடன அமைப்பு ஒரு கவிதை

இப்பாடலை பாடியவர்கள்  ஒரு கவிதை 

மொத்தத்தில் பாடலே ஒரு கவிதை ❤️


இத்திரைப்படத்தில் இடம்பெற்ற இதே மாதிரியான இன்னொரு கவிதை " செம்பூவே பூவே..." பாடல் ❤️.


இசையாலே வாழ்வோம் ❤️மே


மேலும் படிக்க :

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️

அடி ராக்கம்மா கையத்தட்டு...!


ஜமா - கலையின் கலை !


ஒரு படத்தை இரண்டு முறை பார்ப்பதெல்லாம் எப்போதும் நடக்காது. ஆனால் இந்த 'ஜமா' இரண்டு முறை பார்க்க வைத்துவிட்டது. அந்த அளவிற்கு இதில் பங்கு பெற்றவர்களின் உழைப்பு இருக்கிறது.ஒவ்வொரு பகுதியும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது. 


இரண்டாம் முறை பார்ப்பதற்கு இளையராஜா இசை தான் முக்கிய காரணம் என்றாலும் முதல் முறை பார்த்த போது தவறவிட்ட சில விசயங்கள் தென்பட்டன. முதலாவது திரைக்கதை பாணி. முதல் பகுதி, இந்த சினிமா எதைப் பற்றி பேசப் போகிறது என்பதற்கான அறிமுகம். இரண்டாம் பகுதி, கூத்துக் கலையில் பெண் வேடமிடும் கல்யாணம் பற்றியும் அவருக்கு பெண் தேடும் படலத்தையும் பேசியது. மூன்றாம் பகுதி ஜகாவிற்கும் கல்யாணத்திற்கும் இடையிலான காதல் பற்றியது. நான்காம் பகுதி கல்யாணத்தின் இலக்கு பற்றியது. ஐந்தாம் பகுதி, முன்கதைச் சுருக்கம். இந்த இடத்தில் தான் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார்கள். ஏற்கனவே கதையில் சொன்ன பகுதிகள் மீண்டும் வருவதால் சுவாரசியத்தன்மை குறைந்து விடுகிறது. முன்கதைச் சுருக்கத்தை காட்சி மொழியில் வேறுபடுத்திக் காண்பிக்க மெனக்கெட்டவர்கள், இதிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். அடுத்து ஆறாம் பகுதி , இலக்கை அடைதல். இப்படி இந்தத் திரைப்படத்தை பிரித்துப் பார்க்க முடிந்தது.


அடுத்ததாக கண்ணில் பட்டது, படம் முழுக்கவே குறிப்பிட்ட காட்சியில் திரைக்கு வெளியே இருந்து பேசுபவர்களின் குரல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது காட்சியை இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது. கூத்துக் கலை குறித்தான நிறைய தகவல்களைச் சேகரித்து, கூத்துக் கலையில் பங்கெடுத்தவர்களின் துணையுடன் இப்படைப்பு உருவாகியுள்ளதால் பார்வையாளர்களை எளிதில் உள்ளிழுத்து விடுகிறது. 


சக கலைஞர்களுக்கு இடையில் இருக்கும் ஆதரவு, சகோதரத்துவம், போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, ஏமாற்று உள்ளிட்ட உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கலையின் முன் சமநிலைக்கு வருவதும் காட்டப்படுகிறது. உண்மையில் இலக்கியம் , இசை, ஓவியங்கள், திரைப்படங்கள், நாடகக்கலை, நாட்டார் கலை உள்ளிட்ட கலை வடிவங்கள் மனிதர்களின் கீழ்மையான எண்ணங்களிலிருந்தும்,   நிஜ வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்தும் விடபட உதவுகின்றன. 


பொதுவாகவே இறுதிச்சடங்குகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சமீப காலங்களில் அரிதாகவே சடங்குகளில் பெண்கள் பங்கெடுக்கின்றனர். இதற்கு பின் பெரும் போராட்டம் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகி இறுதிச்சடங்கில் இயல்பாக பங்கேற்பது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமானது. தொடர்ந்து இப்படி காட்சிப்படுத்தும் போது ஆண் வாரிசு என்ற பிம்பம் உடையும்.


இயக்குநராக முதல் திரைப்படம் என்பதே பெரும் சவால் என்ற சூழலில் , கூடவே நடிப்பையும் தேர்ந்தெடுத்ததுடன் மிகவும் சவாலான கதாப்பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அந்தக் கதாபாத்திரத்திரத்திற்கும் திருவண்ணாமலையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தெருக்கூத்து கலைக்கும் நியாயம் செய்திருக்கிறார், பாரி இளவழகன். சேத்தன், கல்யாணத்தின் அம்மா, அம்மு அபிராமி, அம்மு அபிராமியின் அம்மா மற்றும் கூத்துக் கலைஞர்களாக வருபவர்கள் என அனைவரும் தங்களின் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். திருவண்ணாமலை வட்டார வழக்கு சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. தமிழ் மொழியை எந்த வட்டார வழக்கிலும் கேட்பது இனிமையே.  


இளையராஜாவின் இசை படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நம்மைக் கூட்டிச் செல்கிறது. படத்தின் கதையைச் சொல்வதும் இசை தான். ஒரு கதை சொல்லி போல ஏற்ற இறக்கங்களுடன் திரைக்குள் நம்மை கொண்டு செல்கிறது. இளையராஜாவின் இசைக்காக மீண்டும் பார்த்தது வீண் போகவில்லை. படத்தில் வரும் ஒரே ஒரு பாடலையும் இளையராஜாவே எழுதியிருக்கிறார். அதுவும் கேட்க நன்றாக இருக்கிறது. மீண்டும் கேட்கவும் தூண்டுகிறது. முன்கதை சுருக்கத்தைத் தவிர்த்துவிட்டு இன்னொரு முறை கூட இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். தவறில்லை. 


பெரும்பாலும் இசை தான் ஒரு திரைப்படத்தை மறுமுறை பார்க்கத் தூண்டுகிறது. சமீபத்தில் அப்படி இசைக்காக இரண்டு முறை பார்த்த மற்றொரு திரைப்படம் ' Amar Singh Chamkila ', ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக. 


மொத்தத்தில் 'ஜமா' பாரி இளவழகன் மற்றும் குழுவினரின் உழைப்பால் நல்ல படைப்பாக வந்திருக்கிறது. இப்படி ஒரு படைப்பைக் கொடுத்ததற்கு அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி ! 

மேலும் படிக்க:

AMAR SINGH CHAMKILA !

ஹர்காரா - மண்ணின் கதை !



Monday, September 2, 2024

கட்றா தாலிய -கலகலப்பான குறும்படம் ❤️


மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருகிறது. பொருத்தமான நடிகர்கள் தேர்வு, பட்டைய கிளப்பும் டைமிங்கான வசனங்கள், அழகான காட்சியமைப்புகள், கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் இசை மற்றும் ஒளிப்பதிவு என எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது. 


ஒரு பக்கம் ரகளையான அங்கமுத்து - வன்ராஜ்  கூட்டணி. இன்னொரு பக்கம் கலக்கலான சீமத்தண்ணி - கிருத்திகா கூட்டணி.  நீங்கள் ஒதுக்கப் போகும் 30 நிமிடங்கள் வீணாகாது.


இயக்குநர் சேவியர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


YouTube தளத்தில் காணலாம் !





மேலும் படிக்க :


5 ரூபா -குறும்படம் !

மக்காமிஷி ( Makkamisi) ❤️


குழந்தைகள் உலகிலிருந்து தெரிந்து கொண்ட பாடல். கடந்த ஒரு வாரமாக அவங்களுக்கு 'Morning Vibe' இந்தப் பாடல் தான். அவங்களுடன் சேர்ந்து கேட்டு ஓய்வு நேரங்களில் முனுமுனுக்கும் அளவிற்கு பிடித்துப் போய்விட்டது. 


ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜெயம் ரவி நடித்து வெளியாக இருக்கும் ' Brother ' எனும் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. பால் டப்பா எனும் பெயருடைய தமிழ் ராப் பாடகர் இப்பாடலை எழுதி பாடியிருக்கிறார். கேட்கும் போது மிகவும் எனர்ஜியாக இருக்கிறது. இந்தக் கால தத்துவபாடல் என்றும் சொல்லலாம். பால் டப்பா, ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


பால் டப்பா யார் என்று தேடும் போது தான் தெரிந்தது குழந்தைகளின் போன வார ' Morning Vibe' பாடலான 'காத்து மேல ' பாடலை எழுதி பாடியவர் என்று. இந்த இரண்டு பாடல்களிலேயே குழந்தைகளை கவர்ந்துவிட்டார் பால் டப்பா ❤️. 


" மக்காமிஷி.. 

பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி......"


மேலும் படிக்க :

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️

அடி ராக்கம்மா கையத்தட்டு...!

பாலியல் சுரண்டல்கள் ஒழியட்டும் !


கேரள திரையுலகில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத் திரையுலகிலும் ஏன் உலகத்தில் உள்ள எல்லா திரையுலகிலும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலும் , பாலியல் சுரண்டலும் இருக்கிறது. இதை உலகில் உள்ள எந்தத் திரையுலகும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்தம். 


மூடி மறைக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு முதலில் திரையுலகில் இருப்பவர்களே இதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் மனநிலை ஒழியாமல் எந்த மாற்றமும் நிகழாது.


இந்தியாவைப் பொறுத்தவரை பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் காவலர்களாக இருந்தாலும், வழக்கறிஞர்களாக இருந்தாலும் கூட பாலியல் ரீதியான அத்துமீறல்களும், வன்கொடுமைகளும் பணியிடங்களில் நிகழ்கின்றன. 

இவை எல்லாவற்றுக்கும் ஆணாதிக்க மனநிலை தான் காரணமாக இருக்கிறது. ஆணாதிக்க மனநிலை ஒழியாமல் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எங்கும் கிடைக்காது. 


இயல்பாகவே ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மாற்று பாலினத்தவராக இருந்தாலும் இன்னொரு மனிதர் மீது ஈர்ப்பு வருவது இயல்பு. இதில் எந்தத் தவறும் இல்லை.பெண்ணோ, ஆணோ 'Mutual Consent ' இல்லாமல் நடக்கும் எதுவும் தவறு தான்; குற்றம் தான். 


வாழ்க்கைச் சூழல் காரணமாக வெவ்வேறு விதமான பணிகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். 


ஆணாதிக்க மனநிலையை வளர்ப்பதில் தமிழ்த் திரைப்படங்களும், சின்னத்திரையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாயக்துதிபாடலை வளர்ப்பதுடன் , அதீத வன்முறையையும், பெண்களை கவர்ச்சி பொருளாகவும் முன்வைக்கின்றன. பள்ளி மாணவர்களின் மோதல்கள் கூட மரணம் வரை செல்வதற்கு யார் காரணம்? 


இயற்கையைப் போலத்தான் பெண்களும் எத்தனை விதமான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து இயங்குவதை யாராலும் தடுக்க முடியாது. 


ஆணாதிக்க மனநிலை ஒழியட்டும் !


எல்லோருக்கும் நல்வாழ்வு அமையட்டும் !


மேலும் படிக்க:

பெண் எனும் உருமாறும் சக்தி !


காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️


ராசய்யா(1995) திரைப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவான இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் சாதாரணமாக கடந்து போக முடிந்ததில்லை. சமீப காலங்களில் சன் லைப் தொலைக்காட்சியில் தான் இப்பாடலை அதிகம் பார்த்திருக்கிறேன். 


இளையராஜாவின் இசை, வாலியின் டச் நிறைந்த பாடல் வரிகள், பிரபுதேவாவின் நடனம், ரோஜாவின் வசீகரம் இவற்றையெல்லாம் கடந்து அதிகம் ஈர்த்தது அந்த பெண் குரல். தேடிய போது தான் தெரிந்தது, அந்தக் குரலிற்குச் சொந்தக்காரர் பிரித்தி உத்தம்சிங் என்று. இவர், இளையராஜாவின் உதவியாளராக இருந்து பின்னாளில் இசையமைப்பாளராக மாறிய உத்தம் சிங்ஙின் மகள். 


குறிப்பாக இந்த வரிகள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 


"அன்னையாம் ஒரு

தந்தையாம் அது காதல்தான்

காதல்தான் ஓ..."


"அப்பர் சுந்தரர்

அய்யன் காதலில் ஆண்டாள்

கொண்டதும் காதல்தான்..."


"ஓம் சாந்தி ஓம்

சாந்தி ஓம் சாந்தி ஓம்

சாந்தி ஓம்"


அதே ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற "அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்...(சந்திரலேகா)" பாடலும் இந்த பிரித்தி உத்தம்சிங் பாடியது தான். இரண்டு பாடல்களிலும் ஆண் குரல்களைத் தாண்டி ஒலிப்பது பிரித்தியின் குரல் தான். வேறு தமிழ் பாடல்கள் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. 


உயிரை மீட்டும் குரல் பிரித்தி உத்தம் சிங்ஙுடையது . இவரது மற்ற மொழி பாடல்களையும் கேட்க வேண்டும்.


மேலும் படிக்க  :


அடி ராக்கம்மா கையத்தட்டு...!


பட்டுவண்ண ரோசாவாம் ...!



Maharaj - வடக்கிலிருந்து ஒரு வெளிச்சம் 👍


தமிழ்நாட்டில் இப்படியான பகுத்தறிவு கருத்துகளை முன்வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் எடுக்கமாட்டார்கள். கடந்த ஓராண்டாக பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் வடக்கிலிருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இந்தச் சூழலில் இப்படியானதொரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. 


19ம் நூற்றாண்டில் பம்பாய் நகரத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த 'மகராஜ்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த கருத்துகளை யார் சொன்னாலும் நாம் வரவேற்க வேண்டும். குஜராத்தில் பிறந்த கர்சன்தாஸ் எனும் பிராமணர், பகுத்தறிவு கருத்துகளை அங்கே அந்த காலகட்டத்தில் முன் வைத்திருக்கிறார். அதனால் இன்னல்களையும் சந்தித்திருக்கிறார். எல்லோரையும் சமமாக நடத்தும் எவரும் ( பிராமணராக இருந்தாலும் ) பார்ப்பனர் அல்ல. பிறப்பால், தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என நினைக்கும் ஒவ்வொருவரும் ( பிராமணராக இல்லாவிட்டாலும் )பார்ப்பனர் தான். பிறப்பால் அனைவரும் சமமே.


பக்தியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் இன்றும் குறைந்தபாடில்லை. அப்படி பக்தியை துணையாக வைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி குளிர்காய்ந்த மகராஜ் எனும் ஒரு மடத்தைச் சேர்ந்த சாமியாரின் அயோக்கியத்தனத்தை தோலுரித்து காட்டும் திரைப்படம் தான் இது. கடவுளுக்கும் பக்தருக்கும் இடையில் சாமியாரோ ,வேறு யாருமோ தேவையில்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே வழிபட வேண்டும். கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றும் கூட்டத்துடன் எப்போதும் சேரக்கூடாது. 


தற்போதைய காலம் என்பது ஜக்கி, நித்தியானந்தா, ரவிசங்கர், பாபா ராம்தேவ், பால் தினகரன் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் காலமாக இருக்கிறது. இவர்கள் எவரையும் நம்பக்கூடாது. இவர்கள் இல்லாமல் இந்தியா முழுவதும் விதவிதமான ஆதீனங்கள், அமைப்புகள் இருக்கின்றன. இவர்களும் ஏமாற்றுக்காரர்கள் தான். எந்த மதமாக இருந்தாலும் எந்தக் கடவுளாக இருந்தாலும் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் யாரும் தேவையில்லை. கடவுளே தேவையில்லை என்பது தனியாக விவாதிக்க வேண்டியது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே நம்புங்கள்.


ஒரே நேர்கோட்டில் கதையை சொல்லி முடித்திருக்கிறார்கள். " ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது" - என்ற கிராம்சியின் கூற்றுக்கிணங்க இந்திய மக்களின் பண்பாட்டுத் தளத்திலும் இறங்கி போராடினால் மட்டுமே இந்த பாசிச, மக்கள் விரோத,மதவாத பாஜக அரசை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிய முடியும். இந்து என்பது வேறு இந்துத்துவம் என்பது வேறு என்பதை இந்திய மக்கள் உணரும் போது பாஜக அதிகாரத்தில் இருக்காது.


விதவிதமான வடிவங்களில் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் அதிகளவில் பிற்போக்குத் தனங்கள் பரப்பப்படும் பாலிவுட் சினிமாவிலிருந்து இப்படியானதொரு திரைப்படம் வந்திருப்பது ஆச்சரியம் தான். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். பிற்போக்குத் தனங்கள் ஒழிந்து போகட்டும். எல்லா மதங்களிலும் சாமியார்களின் ஆதிக்கம் அழியட்டும். சமத்துவம் பரவட்டும்.


மேலும் படிக்க  :


FANDRY - மனதிற்கு நெருக்கமான படைப்பு !


DAREDEVIL MUSTHAFA - FANTASTIC MAKING !

குரங்கு பெடல் ❤️


ஏறக்குறைய அனைத்து குழந்தைகளின் கைகளிலும் மொபைல் போன்கள் வந்துவிட்டாலும் சைக்கிள் மீதான பிரியம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. முன்பைப் போல இடவசதி இல்லாவிட்டாலும் கூட அடம் பிடித்தாவது சைக்கிள் வாங்கி விடுகிறார்கள், குழந்தைகள். இப்படியான சூழலில் எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் 'குரங்கு பெடல் '.


குழந்தைகளையும் சைக்கிளையும் பிரிக்க முடியாது. சைக்கிளுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பிணைப்பை 80 களின் காலப் பின்னணியில் அழகியலுடன் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம். குரங்கு பெடல் என்பதையும், வாடகை சைக்கிள் என்ற நடைமுறையும் இப்போதைய தலைமுறைக்குத் தெரியாது. இத்திரைப்படத்தைக் காணும் போது அவர்களும் தெரிந்து கொள்வார்கள். 


இத்திரைப்படத்தில் சைக்கிளுடன் அப்பாவிற்கு நேர்ந்த அனுபவமும், மகனிற்கு கிடைத்த அனுபவமும் வெவ்வேறானவை. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் காண வேண்டிய திரைப்படம். அப்படி குழந்தைகளுடன் சேர்ந்து காணும் போது சைக்கிளுடனான தங்களது கடந்த கால நினைவுகளை அசை போட முடியும். 


கதைக்குத் தேவையே இல்லாத , குழந்தைகளும் பார்ப்பார்கள் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வு கூட இல்லாமல் அதீத வன்முறைக் காட்சிகள் இன்றைய திரைப்படங்களில் திணிக்கப்படும் சூழலில், அமைதியான சூழலை அழகாக படம்பிடித்து அனைவரும் ரசித்து பார்க்கும்படி செய்திருக்கிறது இந்த 'குரங்கு பெடல்'.


சைக்கிள் மீதான காதல் நமக்குத் தீர்வதேயில்லை. நாம் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தாலும் இப்போதும் சைக்கள் வாங்க வேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். எங்கு இருந்தாலும், என்ன பணி செய்தாலும் தினமும் சைக்கிள் ஓட்டுவதை தவற விடாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் இயற்கைக்கும் நல்லது. 


இந்தத் திரைப்படத்தைக் காணும் போது இன்னும் நிறைய விசயங்களைச் சேர்த்திருக்கலாமோ என்று கூட தோன்றும். சிறுகதையை திரையனுபவமாக மாற்றியிருப்பதால் அதற்குள்ளாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். இலக்கிய படைப்புகள் திரைப்படங்களாவதும், இரண்டு மூன்று பேர் சேர்ந்து திரைக்கதை எழுதுவதும் மிகவும் ஆரோக்கியமான விசயம். 


இன்றைய திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாக காட்டப்படுவதில்லை அல்லது குழந்தைகளே இல்லை. இந்தச் சூழலில் குழந்தைகளுக்காக, குழந்தைகளுக்கான திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். கமலக்கண்ணன் இயக்கிய 'மதுபானக்கடை' திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் இப்போதாதவது பார்த்து விடுங்கள்.உங்களுக்கு நல்லதொரு திரையனுபவம் கிடைப்பது உறுதி. இவரது 'வட்டம்' திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அடுத்து அதையும் காண வேண்டும். 


நல்ல சிறுகதை, நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை, நல்ல இயக்கம் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


மேலும் படிக்க  :


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


சேத்துமான் ❤️

Amar Singh CHAMKILA ❤️❤️❤️


இரட்டை அர்த்தப் பாடல்களை எழுதி, இசையமைத்து,பாடி அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர், பஞ்சாப் பாடகர், அமர்சிங் சம்கிலா. அதற்காகவே தனது 27வது வயதில்(1988) அடையாளம் தெரியாத நபர்களால் மனைவியுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அற்புதமான திரைப்படம் தான், 'அமர்சிங் சம்கிலா'.  


புனிதம் என்று எதுவும் பூமியில் இல்லை. மதக்கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கும் அடிப்படைவாதிகள்தான் புனிதம், புனிதம் என்று தொடர்ந்து கூவிக் கொண்டேயிருக்கிறார்கள். மாற்றம் என்பதே நிலையானது. இதை அடிப்படைவாதிகள் ஏற்பதில்லை. அடிப்படைவாதிகளை வளர்த்து பாதுகாக்கும் வேலையை அனைத்து மதங்களும் தொடர்ந்து செய்து வருகின்றன. அதிலும் ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகள் எப்போதும் ஆபத்தானவர்களே. இதனால் தான் கார்ல் மார்க்ஸ் " மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான முதல் தேவை, மதங்களை அழிப்பது " என்று சொல்லியிருக்கிறார். மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் தேவையில்லை.


சம்கிலா, தான் பிறந்து வளர்ந்த சூழலலாலேயே இப்படியான பாடல்களை எழுதவும், பாடவும் செய்கிறார். இந்தப் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களையே பாடியே புகழ் பெறுகிறார். நன்றாக பாடும் திறமையுள்ளவர் என்பதாலேயே தனது முதல் திருமணத்தை மறைத்து 

அமர்ஜ்யோத் எனும் பாடகியை திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலத்தில் இங்கே என்.எஸ்.கிருஷ்ணனும் தனது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு டி.ஏ. மதுரத்தை திருமணம் செய்து கொண்டது நினைவிற்கு வருகிறது.


எல்லா நாட்டு கலை வடிவங்களிலும் பாலியல் சார்ந்த குறியீடுகளும், குறிப்பாக பாடல்களில் இரட்டை அர்த்தங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லோருமே இம்மாதிரியான பாடல்களை ரசிக்கிறார்கள்; கதைகளை தேடித்தேடி வாசிக்கிறார்கள். கலை மக்களுக்கானது . இதில் புனிதம் என்றோ தீட்டு என்றோ எதுவுமில்லை. 


தமிழ் திரையிசைப் பாடல்களில் இரட்டை அர்த்தங்கள் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அர்த்தம் புரிந்தோ புரியாமலோ கொண்டாடப்பட்டவை. ரசிக்கும் வகையிலான பாடல்களின் எண்ணிக்கையே அதிகம். அந்த அளவிற்கு தமிழ் மொழி இனிமையானது. வெகு சில பாடல்கள் மட்டுமே கொச்சையான மொழியில் எழுதப்பட்டு பாடப்பட்டிருக்கின்றன. கதைகளிலும் கி.ராஜநாரயாணன் தேடித்தேடி சேகரித்த நாட்டார் பாலியல் கதைகள் எல்லாம் பொக்கிஷம். வயதிற்கு வந்த எவரும் இரட்டை அர்த்தப் பாடல்களைக் கேட்கலாம், கதைகளை வாசிக்கலாம், ரசிக்கலாம், வாழலாம். 


மக்கள் தொடர்ந்து விரும்பியதாலேயே எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களை பாடுகிறார், சம்கிலா. எதிர்ப்புகள் அதிகரிக்கும் வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் கடந்தவராகவும், இனி என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற நிலையை எப்படி வந்தடைகிறார் என்பதை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு கலைஞனாக மாறிய தருணமது. அதனாலேயே இன்று வரை சம்கிலா பஞ்சாபில் கொண்டாடப்படுகிறார். தொடர்ந்து அவரைப் பற்றிய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சம்கிலா மக்களின் கலைஞன்.


சம்கிலாவாக திலிஜித் தோஸாஞ்ச் அற்புதமாக பொருந்தியிருக்கிறார். இயல்பிலேயே அவர் ஒரு பாடகர் என்பதால் இன்னும் நெருக்கமாக உணர முடிகிறது. சம்கிலாவின் இணையர்,அமர்ஜ்யோத்தாக பரினீதி சோப்ரா நடித்திருக்கிறார். இந்தக் கதாப்பாத்திரத்தில் நாம் பரினீதி சோப்ராவைக் காண முடியாது, அமர்ஜ்யோத்தை மட்டுமே காண முடியும். அந்த அளவிற்கு அந்தக் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். 


ஒரு திரைப்படத்தைப் பார்த்து முடித்தவுடனயே அத்திரைப்படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுவது அபூர்வம். இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும் போது அப்படி தோன்றியது. உடனேயே மீண்டும் ஒரு முறை பார்த்தேன். இப்படி பார்க்கும் முதல் திரைப்படமிது. மற்ற சில படங்கள் பார்க்கும் போது இப்படி தோன்றினாலும் உடனே பார்க்க வாய்ப்பு அமையவில்லை. இந்தத் திரைப்படத்திற்கு அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அப்படி பார்க்க ஒரே காரணம், இசை - ஏ.ஆர்.ரஹ்மான் என்பது தான். 


தமிழ் ரசிகர்கள் இது ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றே உணர முடியாத அளவிற்கு மாயம் செய்திருக்கிறார். கொஞ்சம் கூட மேற்கத்திய சாயல் இல்லை. தமிழில் பொன்னியின் செல்வன், மாமன்னன் எல்லாம் மேற்கத்திய பாணி இசையால் இயல்பு மாறிய திரைப்படங்கள். தமிழில் அசலான நம் மண் வாசனை வீசும் ஒரே ஒரு திரைப்படம் கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இல்லை. இயக்குநர்கள் காரணமா என்றும் தெரியவில்லை. ரஹ்மான் இசைக்காக மட்டுமே கூட நாம் இத்திரைப்படத்தைக் காணலாம்.


சம்கிலா திரைப்படத்தில் பாடகர் சம்கிலாவின் பாடல்களை மறு உருவாக்கம் செய்ததாலோ என்னவோ மொழி புரியாவிட்டாலும் பாடல்களை ரசிக்க முடிகிறது. தனியாகவும் 3 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி இருக்கிறார். அதிலும் கடைசி பாட்டெல்லாம் (மைனே விதா கரோ... ) அற்புதம். 


அமர்சிங் சம்கிலா இவ்வாறு நடத்தப்பட்டதற்கும், கொல்லப்படத்தற்கும் அவர் ஒரு தலித் என்பதும் ஒரு காரணம். இன்று வரை அவரை யார் கொன்றது என்பது தெரியவில்லை.பல முறை மிரட்டிய ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகளா ? சக பாடக போட்டியார்களா ? அவரின் மனைவி, அமர்ஜ்யோத் உயர் சாதி என்பதால் நடத்தப்பட்ட ஆணவப்படுகொலையா? எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்று வரை பஞ்சாபில் சம்கிலாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மொழி புரியாவிட்டாலும் அசலான சம்கிலாவும் , அமர்ஜ்யோத்தும் சேர்ந்து பாடிய பாடல்களை கேட்டுப் பாருங்கள். நல்ல அனுபவம். தனித்துவமான குரல்கள். 'Music is the Universal Language ' என்று சொல்வது முற்றிலும் உண்மை.


இயக்குநர் இம்தியாஸ் அலி அவர்களின் அற்புதமான உருவாக்கம். இவரது திரைப்படத்தைப் பார்ப்பது இதுவே முதல் முறை. இவரின் மற்ற திரைப்படங்களையும் காண வேண்டும். கதையின் ஊடாக அடிப்படைவாதம் குறித்தான விமர்சன பார்வையும் முன்வைக்கப்படுகிறது. தமிழ் திரைப்படங்களில் இது அரிது. திரைக்கதையும், கதை சொல்லும் முறையும் அருமை. அங்கங்கே சின்ன சின்ன கார்ட்டூன் காட்சிகள், இரண்டு திரை காட்சிகள் , அசலான சம்கிலா குறித்தான பதிவுகள் என சுவாரசியம் கூட்டி இருக்கிறார். Excellent tribute to phenomenal artist through Art ❤️ 


இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


மேலும் படிக்க :


ஹர்காரா - மண்ணின் கதை !


DAREDEVIL MUSTHAFA - FANTASTIC MAKING !


சூப்பர் சிங்கர் 10 - விஜயகாந்த் ❤️ !


விஜய் தொலைக்காட்சி ஏற்கனவே விஜயகாந்த்-ஐ முன் வைத்து ஒரு 'நீயா? நானா?' நிகழ்ச்சியை நடத்தி அவருக்கு மரியாதை செய்தது. தற்போது சூப்பர் சிங்கர் 10-லும் ஒரு சுற்றை விஜயகாந்த் சுற்றாக ( என்றென்றும் கேப்டன் விஜயகாந்த்) அறிவித்து மிகவும் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது. வணிக நோக்கம் இருந்தாலும் இதையும் மற்றவர்கள் செய்ய தயாராக இல்லை என்பது தான் உண்மை.


விஜயகாந்த் எப்படி பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டாரோ அதே போல அவர் நடித்த பாடல்களும் தொடர்ந்து புறக்கணிப்பை சந்தித்து வந்திருக்கின்றன. விஜயகாந்த் நடித்த பாடல்களில் சிறப்பான பாடல்கள் இருந்தாலும் அவை அவ்வளவாக ஒளிபரப்பப்படவில்லை. கமல் , ரஜினி பாடல்களே தொடர்ந்து முன்நிறுத்தப்பட்டன; முன்நிறுத்தப்படுகின்றன. இப்போதும் பெரிய மாற்றமெல்லாம் இல்லை. இப்படியான சூழலில் விஜயகாந்த் பாடல்களை முன் வைத்து ஒரு நிகழ்ச்சி என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 


நடிகை ராதா, இயக்குநர்கள் அரவிந்தராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்குபெற்று விஜயகாந்த் உடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவை உணர்ச்சிப்பூர்வமான தருணங்களாக அமைந்தன. தொகுப்பாளர் பிரியங்காவும் விஜயகாந்த் மீதான பிரமிப்பை வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். விஜய் தொலைக்காட்சியும் நிகழ்ச்சியின் ஊடாக அவரைப் பற்றிய காணொளி பதிவு, சூப்பர் சிங்கர் ஜுனியர்களை பாட வைத்தது, விஜயகாந்தின் உருவச் சிலையை சிறப்பு பரிசாக கொடுத்தது என தனது பங்களிப்பைச் செய்தது. 


ஏறக்குறைய பாடிய அனைவருமே சிறப்பாகவே பாடினார்கள். பலருக்கும் நல்ல குரல் வளம். விஜயகாந்த் நடித்த திரைப்படங்களிலிருந்து தனிப்பாடல்கள், ஜோடி பாடல்கள், குழு பாடல்கள் இடம்பெற்றன. நல்ல பாடல்கள் தேர்வு. அதிலும் 'என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...' பாடலெல்லாம் இன்னமும் காதில் கேட்கிறது. இந்தப் பாடலில் இவ்வளவு ரசனையான வரிகள் இருப்பதும் இப்போதுதான் தெரிந்தது. 

சூப்பர் சிங்கர் ஜுனியர்கள் பாடிய பகுதியும் சிறப்பாக இருந்தது.


இந்நிகழ்ச்சியில் முக்கியமான அம்சம் என்பது பாடல்களுக்கு பின்னணியில் இசைக்கருவிகள் வாசித்தவர்கள்தான். சமீப காலங்களில் கேட்டத்தில் சிறப்பான இசை. பாடல்கள் சிறப்பாக அமைந்ததற்கு இவர்களும் ஒரு காரணம். இவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சியின் மற்ற பகுதிகளை பார்க்கும் ஆவல் உருவாகியிருக்கிறது. 


மொத்தத்தில் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தியதற்கு விஜய் தொலைக்காட்சிக்கு அன்பும் நன்றியும் !


மாமனிதர் விஜயகாந்த் பற்றிய ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும். அவருடன் பணியாற்றியவர்கள் இருக்கும் போதே அவரைப்பற்றிய தகவல்களை சேகரித்து ஒரு முழுமையான ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும். எந்த ஒன்றையும் ஆவணப்படுத்துதல் என்பதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இனிமேலாவது ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை தமிழ் சமூகம் உணர வேண்டும்.


வாய்ப்புள்ளவர்கள் Disney+ HotStar -ல் இப்போதும் காணலாம். விஜயகாந்த் -ஐ பிடித்தவர்களுக்கு இந்நிகழ்ச்சியும் கண்டிப்பாக பிடிக்கும்.

மேலும் படிக்க :

மாமனிதர் - விஜயகாந்த் ❤️

மாமனிதர் - விஜயகாந்த் ❤️




சிகரெட் பிடித்தல், மதுக்குடித்தல் போன்ற தீய பழக்கங்கள் நமது பால்ய காலங்களிலேயே நமக்குப் பழக்கமானவையாக இருக்கின்றன. ஆனால் எனது பால்ய காலங்களில் என்னை, தீய பழக்கங்களிலிருந்து எனக்குத் தெரியாமலேயே காப்பாற்றிவர், விஜயகாந்த் தான். அதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது தான் உணர முடிகிறது. அப்போது தீவிரமான விஜயகாந்த் ரசிகன். விஜயகாந்த் தனது திரைப்படங்களில் மதுக்குடிப்பதையோ, சிகரெட் பிடிப்பதையோ நியாப்படுத்தியிருக்கமாட்டார். அதனால் தானோ என்னவோ அவரைப் பின்பற்றிய நாங்களும் அப்பழக்கங்களை கடைபிடிக்கவில்லை. விஜயகாந்திற்கு பதிலாக ரஜினி அல்லது கமல் ரசிகராக இருந்திருந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு தீயபழக்கத்தைப் பழகியிருப்போம். 


'காந்தி பிறந்த மண் ' என்ற திரைப்படத்திற்குப் பிறகு விஜயகாந்த் ரசிகராக இருக்கவில்லை. என்ன காரணம் என்றும் நினைவில்லை. அதன் பிறகு யாருடைய ரசிகராகவும் இல்லை. அதே சமயம் விஜயகாந்த் என்ற மனிதரின் மீதான மதிப்பு எப்போதும் குறைந்ததில்லை. அவரது கடைசி கால இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு திரைப்படங்களுக்கு முன்பு வரை அவர் தேர்ந்தெடுத்த நடித்த கதாப்பாத்திரங்கள் கண்ணியம் மிக்கவை. நிறைய திரைப்படங்களில் வெள்ளந்தியான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். 


விஜயகாந்த் எப்போதும் மக்களின் கலைஞன். ரஜினி, கமல் போன்றவர்கள் கவனமாக தவிர்த்த விளிம்பு நிலை மக்களின் கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்தவர். மக்களோடு ஒருவராகவே தன்னை அடையாளப்படுத்தியவர். நிஜ வாழ்விலும் அப்படித்தான் இருந்திருக்கிறார். அவர் பேசிய அரசியல் மேடைகளிலும் ஒலித்தது சாமானிய மக்களின் குரல்தான். இப்போது வேண்டுமானாலும் அவர் பேசியதை கேட்டுப் பாருங்கள் உண்மை புரியும். திரையில் செங்கொடியோடு தோன்றியவர் அவர் மட்டும்தான். மக்களில் ஒருவராக , மக்களின் தலைவனாக திரையில் தோன்றினார்.


எம்.ஜி.ஆர்.-ன் அரசியல் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டவை. ஆனால் அவரது திரைப்படங்களிலும், திரையிசைப் பாடல்களிலும் சமதர்ம , பொதுவுடைமை கருத்துகள் நிறைந்திருக்கும். அதே போல மதுக்குடிக்கும், சிகரெட் பிடிக்கும் காட்சிகளை தவிர்த்திருப்பார். தனது திரைப்படங்களிலும் இதே பாணியை விஜயகாந்த் கடைபிடித்தார். இன்று வரை நடித்த நடிகர்களில் அதிக காட்சிகளில் தமிழர்களின் ஆடையான வேட்டி சட்டையுடன் தோன்றியவர், விஜயகாந்த் மட்டுமே. தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா ! என்ற முழக்கத்தை முன்வைத்தவர்.


ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்தவர். மற்ற உச்ச நடசத்திரங்கள் என்று சொல்லப்படும் எவரும் வெறும் குரல் கூட கொடுத்ததில்லை. ஈழத் தமிழர்கள் விடுதலை பெறும் வரை தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டேன் என்ற உறுதியோடு இருந்தார். அரசியல் கட்சி தொடங்கும் வரை அதை கடைபிடித்தார். யார் சமரசம் செய்தார்கள் என்று தெரியவில்லை, அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரது பிறந்தநாள் ' வறுமை ஒழிப்புத் தினமாக ' கொண்டாடப்பட்டது. 


நாடகங்கள் ஆதிக்கம் செலுத்திய ஆரம்ப காலத்தில் பார்ப்பனர்களுக்கு தனியாகவும்,அவர்கள் சாப்பிட்ட பிறகே மற்றவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. இதை முதன் முதலில் உடைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தனது நாடகங்களில் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக உணவு பரிமாறப்பட்டது. இதை தனது வாழ்நாளின் கடைசி வரை கடைபிடித்தார். அவரது குடும்ப விழாக்களில் கூட பிரபலமாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே உணவு பரிமாறப்பட்டது. அதே போல தன்னை தேடி வந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்தார். யார் என்றே தெரியாத முகமறியாதவர்களுக்கும் அதிகளவில் உதவிகள் செய்தார். இதை எம்.ஜி.ஆரும் பிறகு விஜயகாந்தும் கடைபிடித்தனர். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் அளவிற்கு உதவிகள் செய்தனரா என்று தெரியவில்லை. தமிழக சூழலில் இன்னமும் அதிகம் கொண்டாடப்பட வேண்டியவர், என்.எஸ்.கிருஷ்ணன்.


உணவு சார்ந்த விசயத்தில் விஜயகாந்த் செய்தவை அனைத்தும் தற்போது கொண்டாப்படுகின்றன. திரைப்பட படப்பிடிப்பில் அனைவருக்கும் சமமான உணவு என்பது மிகப்பெரிய விசயம். இன்றும் எத்தனை பேர் இதைக் கடைபிடிக்கின்றனர் என்று தெரியவில்லை. விஜயகாந்த் கல்யாண மண்டபம் போனால் வேண்டிய உணவு நிச்சயம் கிடைக்கும் என்பது திரைத்துறையில், விளிம்புநிலையில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பலரின் பசி போக்கிய அப்படியான அன்ன சத்திரத்தை இடித்து தள்ளியது , அரசியல். உணவு விசயத்தில் மட்டுமல்ல திரைப்படத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் ஊதியம் முதற்கொண்டு எல்லாமும் சரியாக கிடைத்திருக்கிறதா என்பதையும் உறுதி செய்திருக்கிறார். இதனாலேயே இவருக்கு ' கேப்டன் ' என்ற பெயர் பொருத்தமாக இருக்கிறது.


தேமுதிக வின் கொள்கை என்பது ' மக்களுக்கு நல்லது செய்யனும்' என்பது மட்டும் தான். சூழ்ச்சிகளும், சுயநலமும், துரோகங்களும், பதவி வெறியும், ஆதிக்கத் திமிரும் நிறைந்திருந்த அரசியல் களத்தில் நீடித்திருக்க அது மட்டும் போதவில்லை. விஜயகாந்தைப் போலவே அவரது தொண்டர்களும் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து தேர்தலில் களம் கண்டார்கள். விஜயகாந்தைப் போலவே அவரது தொண்டர்களுக்கும் பொருளாதார அளவில் இழப்பு தான். பலர் வேறு கட்சிகளுக்கு தாவி விட்டனர். இப்போது தேமுதிக திக்கற்ற நிலையில் நிற்கிறது. ஆதாயத்திற்காக வெகுமக்களுக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. தேமுதிகவைத் தாங்கியது விஜயகாந்த் என்ற ஒற்றைப் பெயர் தான். தற்போது தேமுதிக, கேப்டன் இல்லாத கப்பல். 


அஞ்சா நெஞ்சனாக , நியாயத்திற்கு குரல் கொடுப்பவராக, மனம் முழுவதும் அன்பு நிறைந்தவராக இருந்தவரின் கடைசி காலங்கள் மிகுந்த துயர் மிகுந்ததாக மாறிப்போனது. மீளாத் துயரிலிருந்து அந்த உடல் விடுதலை பெற்றுவிட்டது. அவரது மனம் இங்கேயேதான் இருக்கும். வெறும் வார்த்தைக்காக இல்லை. விஜயகாந்த் செய்த செயல்கள் நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும். அவர் செய்த செயல்களில் வெறும் ஒரு சதவீத்தை செய்யக்கூட நாம் தயாராக இல்லை என்பது தான் கள யதார்த்தம். 


திரையில் மக்களுக்காக குரல் கொடுத்த நடிகன் !


நிஜத்தில் மக்களுக்காக குரல் கொடுத்த அரசியல்வாதி !


மக்களுக்காகவே வாழ்ந்த மக்களின் தலைவன் !


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms