Sunday, May 15, 2016

ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் !


கதாநாயக துதிபாடல்,நம் சமூகத்தை தொடர்ந்து சிதைத்து வருகிறது. படிப்பறிவு சதவீதம் எவ்வளவோ உயர்ந்து விட்டதாக சொல்கிறோம். ஆனால் அந்த படிப்பறிவு அதிகரிப்பு சமூக அளவிலோ , அரசியலிலோ எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை ; தனிப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளவே பயன்பட்டிருக்கிறது. "பயன்படுத்து , தூக்கியெறி " என்ற உலகவணிகமயமாக்கல் கோட்பாட்டை மேலும் வலுப்படுத்தவே இந்தக் கல்வியறிவு உதவியிருக்கிறது. சமூகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கவோ , குறைந்தபட்சம் அநீதி குறித்து விவாதிக்கவோ செய்யமால் கண்டுகொள்ளாமல் இருந்து கொள்ளவே கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். படித்து , பணம் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்று அவ்வளவுதான் அதற்கு மேல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்ற மனநிலையையே இன்றைய கல்வி உருவாக்குகிறது. 

கதாநாயக துதிபாடல்களின் விளைவுகளை அறியாமலேயே கதாநாயக துதிபாடல் இங்கே வளர்க்கப்படுகிறது. சினிமாக்காரர்களும் , அரசியல்வாதிகளும் , மதவாதிகளும் சராசரி மனிதர்கள் தான் என்பதை மறந்து கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தெரியாமலேயே இருக்கிறோம். ஜெயலலிதாவின் செயல்பாடுகள் பிடித்திருந்து அவருக்கு ஓட்டுப்போடுவதில் தவறில்லை. ஆனால் யார் எப்படி ஆட்சி செய்தாலும்  எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சின்னமான இரட்டை இலைக்குத்தான் சாகும்வரை ஓட்டுப் போடுவேன் என்பது அறிவீனம். இன்னொரு பிரிவினர் , தி.மு.க. ஆட்சியில் தான் எங்களுக்கு வேலை கிடைத்தது. அதனால் தி.மு.க. வின் செயல்பாடு எப்படியிருந்தாலும் நாங்கள் தி.மு.க.விற்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்கிறார்கள்.

தொகுதியில், தங்களுக்குப் பிடித்த இயக்கத்தின் சார்பாக கடைந்தெடுத்த அயோக்கியனே நின்றாலும் நாங்கள் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது. இந்த நிலை மாற வேண்டும்.  கதாநாயக துதிபாடல் ஒழிய வேண்டும். முதல்வர் வேட்பாளரை முன்வைத்தோ , கட்சியை முன்வைத்தோ , சாதி, மதம் , இனம் உள்ளிட்டவையை முன்வைத்தோ வாக்களிக்கக் கூடாது. தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில்  யார் சிறந்தவரோ , தேர்தலுக்குப் பிறகும் எளிதாக அணுகக்கூடியவரோ அவர் எந்தக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்குதான் வாக்களிக்க வேண்டும். 

ஒரு நல்ல வேட்பாளரை நமது தொகுதிக்குத் தேர்ந்தெடுப்பதுதான் நமது முதல் கடமை. நமக்குப் பிடித்தவர் முதல்வராக வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் இரண்டாம்பட்சம் தான். நாம் முதல்வரை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது. நாம் நமது தொகுதிகளில்   தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் சேர்ந்து தான் முதல்வரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல்வரும் நல்லவராகவே இருப்பார். இன்றைய சூழலில் இது பெருங்கனவு என்றாலும் இப்போதாவது தொடங்க வேண்டும்.  முன்பெல்லாம் வெற்றி பெற்ற பிறகுதான் முதல்வரையை தேர்ந்தெடுப்பார்கள். இப்போது, கட்சி ஆரம்பித்த உடனேயே முதல்வர் கனவில் மிதக்கிறார்கள்.

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றமல் , தேர்தலின் போது மட்டும் மக்களைச் சந்திப்பதையே எல்லாக் கட்சிகளும் கடைபிடிக்கின்றன. இதில் பழைய கட்சிகள் , புதிய கட்சிகள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. கம்யூனிஸ்டு கட்சிகளும் தமிழக அளவில் சரிவர பணியாற்றவில்லை. இவ்வளவு பெரிய அரசியல் வெற்றிடம் இருந்தும் , இரு பெரிய கட்சிகள் மீதும் வெறுப்புகள் இருந்த போதும் இந்த வெற்றிடத்தை நிரப்ப கம்யூனிஸ்டுகள் தான் சரியான தீர்வாக இருந்தும் அதை அவர்கள் முன்னெடுக்கவில்லை. 

தங்களை மாற்றத்துக்கான கட்சி என்று அறிவித்து கொண்ட தேமுதிக கூட இதுவரை தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்தித்திருக்கிறது. அந்த கட்சி வளராமல் இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். மக்களோடு மக்களாக,  மக்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து பங்கு பெற்றால் மட்டுமே ஒரு கட்சியால் வளர முடியும். ஒரு கட்சியில் ஒருவர் மட்டும் முன்நிறுத்தப்படாமல் அடுத்த கட்டத்தலைவர்களையும் உருவாக்க வேண்டும் . இதை எந்தக்கட்சியும் முறையாக கடைபிடிப்பதில்லை. ஜனநாயக சர்வாதிகாரம் தான் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறது . 

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டதற்கு காரணம் மாற்றி மாற்றி ஆட்சி செய்த அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளும் மக்களின் நம்பிக்கையை இழந்தது தான். இந்த இரு கட்சிகளின் மீதிலும் கடுமையான வெறுப்பு இருந்தாலும் , இந்த இரு கட்சிகளைத் தவிர்த்து வேறு ஒருவருக்கு வாக்களிக்க பெருவாரியான மக்கள் தயங்குகிறார்கள்.  ஏன் என்று தான் தெரியவில்லை. புதிய கட்சிகளும் போதிய நம்பிக்கையைப் பெறவில்லை. மக்கள் நலக்கூட்டணி ஒரு மாற்றாக இருந்தாலும் , அவர்கள் ஒருங்கிணைந்து மக்களைக் கவரவில்லை. எத்தனை பேர் சேர்ந்திருந்தாலும் கூட்டணியின் பெயரை மாற்றியிருக்கக் கூடாது. " தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி - தாமாக கூட்டணி " வாசிக்கவே நன்றாக இல்லை.  எல்லாக் கட்சிகளும் மக்களின் நலனுக்காகத்தானே ஆட்சிக்கு வருவதாக சொல்கின்றன. அப்புறம் கூட்டணி பேர் வைப்பதில் ஏன் இத்தனை பேதங்கள். வைகோ வின் தான்தோன்றித்தனமான பேச்சுகளும்,  செயல்பாடுகளும் மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவையே தருகின்றன. 

இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி இளைஞர்களை கவர்ந்து வருகிறது. சீமான் முன்வைக்கும் வாதங்கள் சிறப்பானதாக இருந்தாலும் , இனம் இனம் என்று  இனத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இந்தியாவில் யாரும் எங்கேயும் வாழ்வதற்குதான் சுதந்திரமே பெற்றோம்.ஜனநாயகத்தின் தேவையும் அது தான். நாம் தமிழர் கட்சி இன்னொரு சிவசேனாவாக மாறாமல் இருக்க வேண்டும்.

முதலில் தற்போது நடைமுறையில் இருக்கும் சின்னங்களை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கும் குலுக்கல் முறையில் தனித்தனி  சின்னம் ஒதுக்க வேண்டும். ஓரே கட்சிக்கு ஒரே சின்னத்தை தொடர்ந்து ஒதுக்குவதை நிறுத்த வேண்டும். குழப்பங்கள் நிகழும் என்று சொல்லப்படலாம். 75% மேல் படிப்பறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலத்தில் குழப்பம் எதற்கு வருகிறது.  இதை மீறியும் தேர்தலை முன்வைத்து நிறைய எதிர்பார்ப்புகள் மக்களிடத்தில் உள்ளன. ஓட்டுப் போடுவதைத் தாண்டியும் மக்களுக்கு அதிகாரம் வேண்டும். விகிதாச்சார முறையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வரலாம்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பேசப்படும் விசயம் ஓட்டு வங்கி. கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீததை வைத்தே தற்போதைய தேர்தலில் அக்கட்சிகளின் வெற்றி, தோல்வி  மட்டுமல்லாமல் , மற்ற கட்சிகளுடன் பேரங்களும் பேசப்படுகின்றன. நாம் கட்சிகளை பார்த்து ஓட்டுப்போட்டதன் விளைவு இது. கட்சிகளைப் பார்த்து ஓட்டுப் போடாமல் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் நல்லவர்களைப் பார்த்து ஓட்டுப் போட்டால் இந்த ஓட்டு வங்கி சதவீதம் சினானாபின்னமாகிவிடும். இந்த தேர்தலில் எப்படி மதுவிலக்கையும் ,பெரும்பாலும் இலவசமில்லா தேர்தல் அறிக்கைகளை வெளியிட வைத்தோமோ , அதே போல நல்லவர்களை மட்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களாக நிறுத்தும் நிலையை நாம் உருவாக்க வேண்டும். எல்லாம் நாம் போடப்போகிற ஓட்டில் இருக்கிறது. 

நம் வாக்கு! நம் மாற்றம் !

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !


Tuesday, April 26, 2016

எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !


தமிழ் கூறும் நல்லுலகம் எந்தக் கலைஞரையும் அவர் வாழ்கின்ற காலத்தில் கொண்டாடியதில்லை. அதற்கு எஸ்.ஜானகியும் விதிவிலக்கில்லை. ஆனாலும் எஸ்.ஜானகியைக் கொண்டாட நமக்கு இன்னமும் வாய்ப்பிருக்கிறது. 1957 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.ஜானகி தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கனி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் 20,000 கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். தற்போது அதிக எண்ணிக்கையில் பாடவில்லையென்றாலும் 77 வயதிலும் ஒருவரால் குரல் நடுக்கமில்லாமல் பாட முடிவதென்பதே பெரிய சாதனை தான்.

1958-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘ கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா... ’ என்ற பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப்பாடலாக அமைந்தது. பி.சுசீலா , பி.லீலா பொன்றவர்களால் சரிவர பாடமுடியாமல் போன இப்பாடலைச் சிறப்பாக பாடி வெற்றிபெற்றாலும் தமிழ் திரையுலகம், எஸ்.ஜானகியை அந்த காலகட்டத்தில் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. எப்பவாவது ரிரு பாடல்களைப் பாட வைத்தது. ஆனால் அதே காலகட்டத்தில் மலையாளத்திலும், கன்னடத்திலும்,தெலுங்கிலும் பாட அதிக வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் பாட கிடைத்த சொற்ப வாய்ப்புகளையும் இன்றும் ரசித்து  கேட்கப்படும் வெற்றிப்பாடல்களாக மாற்றினார். உதாரணமாக ஜல் ஜல் எனும் சலங்கையொலி...( பாசம் ), தூக்கமும் உன் கண்களை தழுவட்டுமே..( ஆலயமணி ), பாடாத பாட்டெல்லாம்...( வீரத்திருமகன் ), அழக்கும் மலருக்கும்...( நெஞ்சம் மறப்பதில்லை ) சித்திரமே சொல்லடி....( வெண்ணிற ஆடை ), ராதைக்கேற்ற கண்ணனோ...( சுமைதாங்கி ), உலகம் உலகம்...( உலகம் சுற்றும் வாலிபன் ), காற்றுக்கென்ன வேலி...( அவர்கள் ), மலரே குறிஞ்சி மலரே...( டாக்டர் சிவா ) இன்னும் பல பாடல்களைச் சொல்ல முடியும். இருந்தாலும் இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான் எஸ்.ஜானகி தமிழ்த்திரையிசையின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறிப்போனார்.


சிஸ்லா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி எனும் முழுப்பெயர் கொண்ட எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றைய சென்னை மாகாணத்திற்குட்பட்ட குண்டூர் ( தற்போது ஆந்திரா ) மாவட்டத்திலுள்ள பல்லேபட்லா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். மூன்று வயதிலேயே இசை கற்க ஆரம்பித்து பத்து வயது வரை கற்றார். பின்பு தனது உறவினரின் பரிந்துரையால் சென்னைக்கு இடம்மாறினார். ஏவிம் ஸ்டுடியோவில் குழுப்பாடகியாக பாடும் வாய்ப்பு கிடைத்தது. 1957ல் டி.சலபதிராவ் இசையமைப்பில் ‘ விதியின் விளையாட்டு ’ என்ற திரைப்படத்திற்காக தனது முதல் பாடலை எஸ்.ஜானகி பாடினார். ஆனால் இத்திரைப்படம் வெளிவரவில்லை. 

எஸ்.ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணி பாடகியான பிறகு இசைக்கான எந்தப்பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும் எந்த மொழிப்பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கேவுரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார். இந்தத் திறமையினாலேயே ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால் அழிக்க முடியாத பல வெற்றிப்பாடல்களையும் அம்மொழிகளில் கொடுத்தார். இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு இசைரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என உரிமை கொண்டாடுகின்றனர் ;யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராகயில்லை. இதைவிட ஒரு கலைஞருக்கு பெரிய அங்கிகாரம் தேவையில்லை. தென்னிந்திய திரையிசைப் பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப்போல் எவருமில்லை.. “ ஜானகி பாடும்போது ஆழமான ஒரு உணர்ச்சிப்பெருக்கை நான் அடைந்தேன் என்று சொல்லலாம்.அது ஒரு பாடகி பாடுவது போலவே இருக்கவில்லை; அந்தப்பாடலின் நாயகி பாடுவது போலவே எப்போதும் ஒலித்தது. பலமொழி திரைப்பாடல்களிலும் பலவகை இசைகளிலும் என்னுடைய அறிதல் விரிந்த பிறகு எஸ்.ஜானகிதான் தென்னிந்திய திரைப்பாடகிகளில் முதன்மையான உணர்ச்சி வெளிப்பாட்டுத்திறன் கொண்ட பாடகி என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன் “ என்று எஸ்.ஜானகி பற்றி எழுதிய முக்கியமான கட்டுரையில் இசைவிமர்சகர் ஷாஜி குறிப்பிட்டுள்ளார்.


இளையராஜாவின் ஆரவாரமான வரவு தமிழ்திரையிசையில் ஒரு பெரும் பாய்ச்சலையே உருவாக்கியது. எல்லாத்தரப்பு மக்களையும் இளையராஜாவின் திரையிசை சென்றடைந்தது. இன்றும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையை விடவும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் இசையாகவும், கேட்டாலும் சலிக்காத இசையாகவும் இளையராஜாவின் இசையே இருக்கிறது. நாட்டார் இசையை, திரையிசையாக மாற்றிய மாபெரும் சாதனை இளையராஜாவினுடையது. இளையராஜா மேற்கத்திய இசையை வைத்து நிறைய கலப்புகளைச் செய்தார். ஒரு கிராமியப்பாடலுக்கும் மேற்கத்திய இசையைப் பயன்படுத்தினார். ஒரு நகரப்பாடலிலும் கிராமிய இசையைக் கொண்டுவந்தார். இரண்டையும் கலந்தும் நிறைய பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

இன்றுவரை தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னனாக இருக்கும் இளையராஜாவின் வெற்றிக்குப் பின்னால் நிறையபேர் இருந்தாலும் எஸ்.ஜானகியின் பெரும் பங்களிப்பை எப்போதும் தவிர்க்க முடியாது. இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு உற்ற துணையாக ஜானகியின் பாடும் திறமையே முன் நின்றது. அந்தத் திறமையைக் கண்டடைந்து அதைச் சரியாக பயன்படுத்தியவரும் இளையராஜா தான். கிராமியப் பாடலாக இருந்தாலும், கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும் ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில் பங்களிப்புச் செய்தார். சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார். ஒரு பாடல் , அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு , திரையில் யார் பாடப் போகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப் பெற்ற ஒரே பாடகி எஸ்.ஜானகி தான்.

இளையராஜாவின் முதல் திரைப்படமான ‘ அன்னக்கிளி ’  திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய ‘ மச்சானைப் பாத்தீங்களா.. ‘ , ‘ அன்னக்கிளி உன்ன தேடுதே... ’ இந்த இரண்டு பாடல்களும் இளையராஜாவைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன. அதன் பிறகு இந்த இணையைப் பிரிக்க முடியவில்லை. இளையராஜாவின் பெரும்பாலான வெற்றிப்பாடல்களில் எஸ்.ஜானகியின் பங்கும் இருக்கும். இளையராஜாவின் இசையில் அதிகளவில் ஒலித்த பெண்குரலும் எஸ்.ஜானகியினுடையதுதான். இளையராஜா தனது சொந்தக் குரலில் பாடிய ஜோடிப்பாடல்களின் முதன்மைத் தேர்வாக எஸ்.ஜானகி தான் இருந்தார். தனது தனித்திறமையாலேயே எஸ்.ஜானகி அதிகளவு பாடல்களைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். குழந்தையின் சிணுங்கல், சிறுவர் சிறுமியின் குரல், கிழவியின் குரல், ஆணின் குரல் என்று பல குரல்களில் பாடியதோடு மட்டுமில்லாமல் மிகவும் பொருத்தமாக பாடியதால் தான், “பல குரல்களில் சிறப்பாகப் பாடும் திறமையுள்ளவர் ” என்று இன்றும் பலராலும் எஸ்.ஜானகி நினைவு கூறப்படுகிறார்.

பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார். ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே நிறைய இருக்கின்றன. “ லல்லா லல்லா லல்லா லல்லா ... சின்ன சின்ன வண்ணக்குயில்... (மெளனராகம்), “ லால லால ல ... ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது...( கிராமத்து அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா ... எந்தப்பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக்காளை) ” என்று சொல்லிக்கொண்டே போகலாம். எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும் அலாதியான குரலிலேயே ஒலிக்கும். மெல்லிசைப் பாடல்கள் என்றாலும் அவர் பாடிய எல்லா மெல்லிசைப் பாடல்களையும் ஒரே வகைமைக்குள் அடக்க முடியாது. ஒவ்வொரு மெல்லிசைப் பாடலும் ஒவ்வொரு விதமான உணர்வைக் கொடுக்கும் வகையில் பாடப்பட்டிருக்கும். இதே போலவே தான் சோகம், ஜோடி, தனி மற்றும் குழுப்பாடல்களும் தனித்தன்மையுடன் இருக்கும்.எஸ்.ஜானகி பாடிய பாடல்களில் இவரின் குரல் பெரும்பாலும் பின்னணி இசையை மிஞ்சியே ஒலிக்கிறது.

1980களில் வெளிவந்த திரைப்படங்களில் ஒரு பாடலாவது காமரசம் சொட்ட சொட்ட உருவாக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடல்களில் ஒலிக்கும் பெண் குரல் பெரும்பாலும் எஸ்.ஜானகியினுடையதாகவே இருக்கும். அதிலும் அந்தப்பாடல்களில் வரும் ஹம்மிங்களிலும், கொஞ்சல்களிலும், சிணுங்கல்களிலும் நம்மை கிறங்க வைத்துவிடுவார். “ ஆ..ரீராரிரோ.. கண்ணத் தொறக்கணும் சா..மி... (முந்தானை முடிச்சு)”, “ பொன்மேனி உருகுதே.. என் ஆசை பெருகுதே... (மூன்றாம் பிறை) ”, “ நிலா காயுது ..நேரம் நல்ல நேரம்.., நேத்து ராத்திரி.. யம்மா...(சகலகலா வல்லவன்) ” என்று இன்று கேட்டாலும் சொக்கித்தான் போய்விடுகிறோம். இந்த வகைப்பாடல்களில் ஜானகி அளவிற்கு உணர்வுப்பூர்வமாக வேறு எவராலும் பாடிவிட முடியாது என்பதை உறுதியாகக் கூற முடியும்.

எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம் ,ஆசை, தாய்மை எனப் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன. “ காற்றில்..எந்தன் கீதம்...(ஜானி), அன்பே வா அருகிலே...( கிளி பேச்சு கேட்க வா ), மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ...( பூவிழி வாசலிலே ),பட்டுவண்ண ரோசாவாம்...( கன்னிப்பருவத்திலே ), பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா..( நீங்கள் கேட்டவை ), சின்னத் தாயவள் தந்த ராசாவே...( தளபதி), எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்...(குரு), இது ஒரு நிலாக்காலம்...(டிக் டிக் டிக்), ஊருசனம் தூங்கிருச்சு...(மெல்லத் திறந்தது கதவு), புத்தம் புது காலை...(அலைகள் ஓய்வதில்லை), செந்தூரப்பூவே செந்தூரப்பூவே..., மஞ்சள் குளிச்சி..(16 வயதினிலே), வான்மதியே வான்மதியே...(அரண்மைக்கிளி), ஆசை அதிகம் வச்சு...(மறுபடியும்), நெஞ்சினிலே நெஞ்சினிலே...( உயிரே ) இன்னும் பல பாடல்களைக் குறிப்பிட முடியும். இசை மேடைகளில் எஸ்.ஜானகியின் பாடல்களையே மீண்டும் மீண்டும் பாடுகிறார்கள்.

இளையராஜாவின் இசையில் பாடியவர்களில் சிறந்த ஜோடிப் பாடகர்களாக எஸ்.ஜானகியையும், மலேசியா வாசுதேவனையையுமே குறிப்பிட முடியும். “எஸ்.ஜானகிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மலேசியா வாசுதேவனால் மட்டுமே பாட முடியும்” என்று ஷாஜி குறிப்பிடுகிறார். காலத்தின் விளையாட்டால் குறைவான பாடல்களே இவ்விருவரும் இணைந்து பாடியிருந்தாலும் அவை என்றும் கேட்கக்கூடிய இனிமை உடையவை. பூங்காற்று திரும்புமா..., வெட்டிவேரு வாசம்...( முதல் மரியாதை ) ,கோவில்மணி ஓசைதன்னை..., மலர்களே...( கிழக்கே போகும் ரயில் ), வான் மேகங்களே...( புதிய வார்ப்புகள் ), ஆழக்கடலில் தேடிய முத்து...( சட்டம் என் கையில் ), இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு...( சிகப்பு ரோஜாக்கள் ), கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச...( என் ஜீவன் பாடுது ), தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி...( தூரல் நின்னு போச்சு ), ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி....( தர்மயுத்தம் ), பேர் வச்சாலும் வைக்காம போனாலும்...( மைக்கேல் மதன காமராஜன் ) இவர்களிருவரும் இணைந்து பாடிய இன்னும் பல பாடல்களைக் குறிப்பிட முடியும். இவை அனைத்துமே எப்போது கேட்டாலும் சலிக்காதவை. இவர்கள்  பாடிய  எந்தப்பாடலையும்  இன்றைய பாடகர்களால்   நகலெடுத்து  பாடிவிட முடியாது. இவர்களின் குரல்களில் தான் நாம் உண்மையான கிராமத்து வாசனையை உணர முடியும்.


நல்ல திறமையிருந்தும் எஸ்.ஜானகி பாடிய அளவில் குறைந்தபட்ச வாய்ப்பு கூட மலேசிய வாசுதேவனுக்கு கிடைக்கவில்லை.இருந்தும் தமிழ் திரையிசையில் ஒரு தவிர்க்கமுடியாத தனியிடத்தை மலேசியா வாசுதேவன் பெறுகிறார். எல்லா வகையான பாடல்களையும் சிறப்பாக பாடக்கூடிய திறமை இருந்தும் அதிகபட்ச டப்பாங்குத்து பாடல்களை மட்டுமே பாடுவதற்கு தமிழ் திரையிசையுலகம் மலேசியா வாசுதேவனுக்கு வழங்கியுள்ளது. ஆனால்,இன்று டப்பாங்குத்து பாடல்களைத் தாண்டியும் வாசுதேவன்  நினைவு கூறப்படுகிறார் அவரது மற்ற அற்புத பாடல்களுக்காக. இதற்கு அவரது இசையாளுமையே காரணம். தமிழ் சமுகம் கொண்டாடத் தவறிய கலைஞர்களில் மலேசியா வாசுதேவனும் ஒருவர்.

இசைக்கும் மொழிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இசையமைப்பாளர் எவ்வளவு தான் உழைத்து சிறப்பான மெட்டை அமைத்தாலும் நல்ல பாடல் வரிகளும், நன்றாக பாடக்கூடியவர்களும் அமையாவிட்டால் அப்பாடல் வெற்றி பெறாது. விதிவிலக்காக சில பாடல்கள் மெட்டுக்காகவும், பாடல் வரிகளுக்காகவும், , சிறப்பான பாடும் முறைக்காகவும் நினைவில் இருக்கலாம். ஆனால் இவை மூன்றுமே சிறப்பாக அமைந்த பாடல்கள் மட்டுமே செவ்வியல் தன்மை கொண்டு காலத்தால் அழியாதிருக்கும். இம்மூன்றில் மெட்டு , பாடல் வரிகளை விட பாடகரின் பாடும் திறமையே அப்பாடலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இளையராஜாவிற்கு முன்பு வரை பாடகர்கள் பாடல் வரிகளைப் பாடும்போது மொழியை பிழையில்லாமல் பாடுவதில் கறார் தன்மை இருந்தது. பழைய பாடல்களில் லகரம் (ல,ள,ழ ), னகரம்( ன,ண ), ரகரம்( ர, ற) போன்றவை பெரும்பாலும் திருத்தமாக பாடப்பட்டதாலேயே அவற்றை இன்றும் ரசித்துக் கேட்கிறோம். இளையராஜா இவ்விசயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் மொழியில் கவனம் செலுத்தி திருத்தமாக பாட கற்றுக்கொண்ட டி.எம்.எஸ்., ஜானகி ,வாசுதேவன் போன்றவர்கள் மட்டுமே சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். நாம் எங்கு சென்றாலும் , எங்கு வாழ்ந்தாலும் இம்மூவரின் குரல்கள் ஏதோ ஒரு விதத்தில் நம் காதுகளை அடைகின்றன. அந்த அளவிற்கு நம்முடன் கலந்துவிட்ட குரல்கள் இவை.எழுத்து மொழியில் ஆங்காங்கே எழுதப்படும் வாசகங்களில் இருக்கும் எழுத்துப்பிழையைச்  சுட்டிக் காட்டுகிறோம். அதே சமயம்  நமது பேச்சு மொழியிலோ , கோடிக்கணக்கானவர்களைச் சென்றடையும் திரையிசைப்பாடல்களிலோ பிழைகளை எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் திரையிசையுடன் சுருங்கிப்போனது வருத்தமே. கலை என்பது எப்போதுமே மக்களுக்கானது ; மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடியது என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் கலை வடிவத்தில் ஒன்றான இசையும் திரைப்படத்தைச் சார்ந்து இயங்காமல் தன்னிச்சையாக இயங்க வேண்டும்.
   
2013 ஆம் ஆண்டு தனக்குக் கொடுக்கப்பட்ட பத்மபூஷண் விருதை எஸ்.ஜானகி நிராகரித்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ,” இது காலம் கடந்த கொடுக்கப்பட்ட விருது. மேலும் என்னை விட சிறந்த தென்னிந்திய கலைஞர்களுக்கே இன்னும் கொடுக்கவில்லை. இப்போதைய நிலையில் பாரத ரத்னா கொடுத்தால் வாங்கிக் கொள்வேன் ”. 55 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையிசைக்கு பங்களிப்பு செய்தவரிடம் வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும். எந்த விருதாக இருந்தாலும் அதை வேண்டாம் என்று சொல்வதற்கு துணிச்சலும் தைரியமும் வேண்டும். 77 வயதிலும் தனது சுயமரியாதையை இழக்காமல் இருக்கும் எஸ்.ஜானகியைக் கொண்டாடுவோம். “ எனது ரசிகர்கள் தான் எனக்குப் பெரிய விருது “ என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

குறிப்பு :- இக்கட்டுரை 'காற்றை கவுரப்படுத்தும் குரல் ! - தி இந்து என்ற தலைப்பில் தி இந்து நாளிதழின் இணைப்பிதழான இந்து டாக்கீஸில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் . 

மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

பட்டுவண்ண ரோசாவாம் ...!
...................................................................................................................................................................



Monday, April 25, 2016

காற்றை கவுரப்படுத்தும் குரல் ! - தி இந்து



தி இந்து தமிழ் நாளிதழின் வெள்ளி இணைப்பிதழான இந்து டாக்கீஸில் கடந்த  22-04-16 அன்று எஸ்.ஜானகி பற்றி எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது .
அந்தக் கட்டுரையின் இணைய இணைப்பு - http://tamil.thehindu.com/cinema/cinema-others/ஏப்ரல்-23-எஸ்ஜானகி-78வது-பிறந்த-தினம்-காற்றை-கவுரவப்படுத்தும்-குரல்/article8508472.ece .

 நன்றி !

மேலும் படிக்க :

எது தூய்மை ? - எனில் இணைய இலக்கிய இதழ் !

குறி - சிற்றிதழ் !

http://jselvaraj.blogspot.in/search/label/விகடன்
...................................................................................................................................................................

Saturday, March 26, 2016

உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் !


1956 ஆம் ஆண்டு வெளிவந்த பாசவலை திரைப்படம் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது . இத்திரைப்படத்தில் 5 பாடல்களை பட்டுக்கோட்டையார் எழுதினார் . அதில் இந்தப் பாடலும் ( உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்...)  ஒன்று. இந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகளைப் பார்த்துவிட்டு வயதான ஒருவர் தான்  எழுதியிருப்பார் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் இப்பாடல் வெளிவந்த போது கல்யாணசுந்தரத்தின் வயது 26 தான் . இளவயதிலேயே அவர் செய்த வேலைகளும் அதிகம் ,சந்தித்த சோதனைகளும் அதிகம் . இந்த அனுபவமே அவரது பாடல் வரிகளில் தத்துவக் கருத்துகள் நிரம்பியிருக்கக் காரணம் .  

அந்தப் பாடல் :



பாடல் வரிகள் :

 குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! - (உனக்கு

மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதிமந்தமடா -(உனக்கு

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்டு மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ததிடும் சொந்தமடா (உனக்கு

பாபச் சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக் காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்க ளானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!

அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் _ முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் _ மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்அவரு
செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? _ நீ
துணிவிருந்தாக் கூறு! _ ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! _ அவர் எங்கே போனார் பாரு!     – அவரு

பொம்பளை எத்தனை? ஆம்பிளை எத்தனை?
பொறந்த தெத்தனை? எறந்த தெத்தனை?
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை?
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு _ இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! ஆனந்தம்!               (உனக்கு


 வல்லிய வரிகள் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/

மேலும் படிக்க :

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது !

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !
...................................................................................................................................................................

Saturday, February 6, 2016

முகநூல் பதிவுகள் !


முகநூலில் பதிவிட்ட சில வாசகங்கள் .....

ருத்தலை, இல்லாதபோதும் கற்பனை செய்கிறது , மனம் !

ம் சோம்பேறித்தனத்திற்கு விலையாக இன்னும் என்னென்னவெல்லாம் கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. சோம்பேறியாதலின் மற்றொரு பெயர் தான்#‎நவீனமயமாதலோ ! ?

ம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒரு திருத்தமான ஒழுங்கமைவுடன் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் தான் அவற்றைப் புரிந்து கொள்ளத் திராணியில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.‪#‎மானிடவாழ்க்கை

யோதிகத்தில் தன் வாழ்க்கைத் துணையை இழக்கும் ஆண் , ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தை போலவே மாறிவிடுகிறார்!‪#‎அவ்வளவுதான்ஆம்பள

காரியங்கள் செய்வதை விட்டுவிட்டு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். #‎மனிதன்ஒருகாரணப்பயல்

ரு பக்கம் நூறு ரூபாயிலிருந்து கோடிகள் சம்பாதித்தவர்களை சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் தனக்காக சொத்து சேர்க்காதவர்களையும் சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள்.பணம் கரைய கரைய பணத்தால் பெற்ற புகழும் கரைந்து தான் போகிறது.ஆனால் , மற்றவர்களுக்காகவும் , குறிப்பிட்ட சில விசயங்களுக்காகவும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் நெடுங்காலத்திற்கு மக்களின் நினைவில் இருக்கிறார்கள். #‎சாதனைவாழ்க்கை

வ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டவே அதிகம் மெனக்கெடுகிறான் ! ‪#‎கிறுக்குப்பய

காதில் விழுந்தது !
( வயது 60 கடந்த கணவன் மற்றும்  மனைவி இன்னொருவருடன் பேசியதிலிருந்து )
கணவன் : அந்தக் காலத்துல நான் அவ்வளவு அழகா இருப்பேன் .
மனைவி : ஆமா , அந்த அழக பார்த்து நாலு கழுத பின்னாடியே வந்துச்சு .

மக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது நமக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது

ந்த தேசத்தில் சாதாரண மனிதர்களுக்கு நீதியே இல்லையா ?
இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களையும் , அரசியல்வாதிகளையும் ,     அரசுக்கு நெருக்கமானவர்களையும், பணக்காரர்களையும் நீதி ஒன்றும் செய்யாது . சாதாரண மனிதர்களையும் ,சந்தேக கேசில் பிடிபட்டவனையும் குற்றவாளி ஆக்கி தண்டனை கொடுத்து அழகு பார்க்கும்.என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகளும் செய்யும். இது வரையில் அதிகாரத்தில் இருந்த குற்றவாளிகளையோ அல்லது பணக்காரக் குற்றவாளிகளையோ என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகள் செய்திருப்பார்களா ? இந்த தேசத்தில் எந்த நம்பிக்கையில் நாம் வாழ்வது ?

வேடிக்கை பார்ப்பவர்களால் கூட தாங்கிக் கொள்ள முடியாத வலிகளையும் வேதனைகளையும் எளிய புன்னகையால் கடந்து செல்பவர்கள் ‪#‎வாழத்தெரிந்தவர்கள்

திர்பாராத நேரத்தில் பெய்யும் மழையைப் போல சற்றும் சம்பந்தம் இல்லாத எளிய மனிதர்கள் நம் மீது காட்டும் அன்பு திளைக்க வைக்கிறது.

ரு குருவிடம் கற்றுக்கொள்வது போல வானம் பார்த்தல் வாயிலாக நாம் கற்றுக் கொள்வது அதிகம் . தொடந்து வானத்தைப் பார்ப்பது தியானம் செய்வதற்கு சமம் . நமது வாழிடங்களில் பெருகிவரும் உயர்ந்த கட்டிடங்களால் வானத்தைப் பார்ப்பது அரிதாகிறது . சூரிய உதய ,மறைவைப் பார்ப்பதும் குறைந்து வருகிறது . எப்படி இருந்தாலும் ,எங்கு இருந்தாலும் வானம் பாருங்கள் ! வானம் பாருங்கள் !  

பெற்றோர் படித்த பள்ளிக்கூடத்திலேயே படிக்கும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை , கிடைத்தாலும் வாய்ப்பு 
மறுக்கப்படுகிறது.

மேலும் படிக்க :

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms