Wednesday, April 27, 2011

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!

1957 ஆம் ஆண்டு வெளிவந்த " மகாதேவி " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . இந்தப்படத்தில் MGR , வீரப்பா மற்றும் பலர் நடித்திருந்தனர் . " மணந்தால் மகாதேவி , இல்லையேல் மரணதேவி " இது வீரப்பா பேசிய புகழ் பெற்ற வசனமாகும் . இந்தப் படத்துக்காக மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இரண்டு பாடல்கள் எழுதினார் . அதில் ஒன்று தான் இந்தப்பாடல் . இந்தப்பாடல் எழுதப்பட்டு 53 வருடங்களுக்கு மேல் ஆனாலும் , இந்தப் பாடலின் வரிகள் நமக்கு மட்டுமல்ல , உலகத்துகே இன்றைக்கும் பொருந்தும் . 

அந்தப்பாடல் : 
                              திரைப்படத்தில்  - http://www.pattukkottaiyar.com/site/?p=199
                                                            

                               
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா , 
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா ,
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா ,
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா ,
சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா 
எவ்வளவு வலிமையான வரிகள் .  பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை தான் .
ஈடு இணையில்லாத அந்த உன்னத கவிஞரைக் கொண்டாடுவோம் . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள - http://www.pattukkottaiyar.com/site/...

முழுப் பாடல் வரிகள்:

( சூழ்ச்சியிலே சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா
புதிரான உலகமடா _ உண்மைக்கு
எதிரான உலகமடா _ இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா ) - இந்த வரிகள் படத்தில் இடம் பெறவில்லை .

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

நன்றி - மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இணையதளம் .
...........................

Monday, April 25, 2011

" புலியை எந்தக் கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செய்யும் " - வைகோ

சைதாப்பேட்டையில் வைகோ பேசிய பேச்சைக் கேட்கவும் , பார்க்கவும் முடிந்தது . நீண்ட நாட்கள் கழித்துப் பேசினாலும் பேச்சில் நெருப்பு தெறித்தது  .
"  ஐ .நா .சபை  , கொடுங்கோலன் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து கூண்டில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் " நடந்தது . பழ நெடுமாறன் , தா. பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

 சமீபத்தில் இலங்கை தமிழர்களுக்காக உயிரிழந்த  தமிழரின் வழக்கில் தவறாக நடந்து கொண்ட  காவல்  துறை அதிகாரிகளை கடுமையாக ( நீங்கள் என்ன ராஜபக்சேவின் கூலி ஆள்களா ? ) விமர்சித்தார் . இரண்டு முறை அந்த கொடுங்கோலனை இந்தியாவிற்கு அழைத்து மரியாதை செய்த இந்திய அரசை வன்மையாக கண்டித்தார் . ராஜபக்சே முதல் குற்றவாளி என்றால் இந்திய அரசும் , தமிழக அரசும் இரண்டாம் குற்றவாளிகள் , இவர்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும் என்று கடுமையாக சாடினார் .

" என் அரசியல் நிலைக்காக வருந்தவில்லை . " குயிலை எந்தக் கூட்டில் அடைத்தாலும் கூவத்தான் செய்யும் " , " புலியை எந்தக் கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செய்யும் " . எந்தக்கூட்டணியில் இருந்தாலும் இந்த வைகோ விடுதலைப்புலிகளை ஆதரிக்கத்தான் செய்வான் " என்று குறிப்பிட்டார்  .  " ராஜபக்சேவை  போர் குற்றவாளியாக அறிவிக்க ஒட்டு மொத்த இந்தியாவும் ஒன்று சேர வேண்டும் . ராஜபக்சேவிற்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் " என்றார் . " முக்கியமாக தமிழர்கள் சாதி , மதம் , கட்சி வேறுபாடுகளை  மறந்து ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் . என் கட்சிக்காக யாரையும் அழைக்கவில்லை . எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி , கட்சிகளையே பிடிக்காதவர்களாக இருந்தாலும் சரி கொடுங்கோலனுக்கு எதிராக ஒன்று சேருங்கள் . விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க எல்லோரும் பாடுபட வேண்டும்  " என்றார் .

 " முன்பு விடுதலைப்புலிகளைப்பற்றி பேசியவர்களைப் புறக்கணித்தனர் . இனிமேல்  விடுதலைப்புலிகளைப்பற்றி பேசாதவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் " என்று திரும்ப திரும்ப குறிப்பிட்டார் .

நமக்கு வேண்டியதெல்லாம் கொடுங்கோலன் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் .  இலங்கைத்  தமிழர்களுக்கும் மற்றும் உலகத் தமிழர்களுக்கும்  சமமான உரிமை கிடைக்க வேண்டும் . அதுவே  நம் லட்சியம் . அதற்காக ஒன்று படுவோம் , உழைப்போம் . நாளை நமதே !

மேலும் படிக்க :

காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரசையும் வன்மையாக கண்டிப்போம் ! 

.............................

Saturday, April 23, 2011

5 ரூபா -குறும்படம் !


இதுவரை நான் பார்த்த குறும்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த " 5 ரூபா " குறும்படம் தான் . எதார்த்தமான வசனம் , நல்ல ஒளிப்பதிவு . நீங்களும் ஒரு முறை பாருங்களேன் .




மேலும் பார்க்க :

உலக புத்தக தினம் !


' There are worse crimes than burning books. One of them is not reading them.' - Joseph Brodsky.
 
ஏப்ரல் 23 , உலக புத்தக தினம் . வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் நினைவுநாளையே உலக புத்தக தினமாக கொண்டாடுகிறோம் . புத்தகங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது . புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு பள்ளிகளில் தொடங்கினாலும் , பள்ளிகளிலேயே முடிவதில்லை , நம் ஆயுள் வரை தொடர்கிறது . எந்த காலகட்டத்திலும்  நம்மைக்  கைவிடாத ஒரே நண்பன், " புத்தகம் " மட்டுமே .புத்தகங்கள் நமக்கு அளிக்கும் அற்புதங்கள் ஏராளம் . ஒவ்வொரு புத்தகமும் நாம் அறியாத  பல கதவுகளைத் திறக்கிறது . 

மனிதனது கண்டுபிடிப்புகளில் புத்தகம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது . எத்தனையோ சாதனையாளர்கள் உருவானதற்கும் , இன்று உருவாகிக் கொண்டிருப்பதற்கும் புத்தகங்களே காரணம் . புத்தகங்கள் இல்லாத வாழ்க்கை கிணற்றுத் தவளை போலத்தான் இருக்கும் . புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் வாழ்க்கையின் பாதி சுகத்தை இழந்து விடுகிறார்கள் . ஒரு நல்ல புத்தகம் நமக்கு அளிக்கும் களிப்பும் , ஆறுதலும் மிக அதிகம் . வாழ்க்கையே முடிந்துபோனதாக நினைத்து , மனதுடைந்து இருக்கும் சூழலில் "உலகம் ரொம்ப பெரியது , உன் வாழ்க்கையும் தான் " என்று ஒரு புத்தகம் நம்மைத் தேற்றி ஆறுதல் தருகிறது . 

ஒரு புத்தகத்தை நாம் படிக்கும் போது நமது கற்பனைவளம் அதிகரிக்கிறது . நமது சிந்திக்கும் ஆற்றல் அதிகமாகிறது . ஒரு புத்தகத்தை ஒவ்வொரு முறையும்  படிக்கும் போதும் நமக்கு புதிய அனுபவம் கிடைக்கிறது . புத்தகம் அட்சயப்பாத்திரம் போலவே நமக்கு படிக்க படிக்க இன்பத்தைக் கொடுக்கிறது .   
 புத்தகங்களும் , இசையும் இல்லாமல் என்னால் வாழவே முடியாது . என் வாழ்க்கையின் மிகக் கடினமான சூழல்களை புத்தகங்களின்  துணை கொண்டும் , இசையின் துணை கொண்டும் தான் கடந்து வந்திருக்கிறேன் . நமது அத்துனை துன்பங்களையும் , துயரங்களையும் ஒரு புத்தகத்தின் நான்கு வரிகளோ அல்லது ஒரு நல்ல இசையோ மாற்றி விடுகிறது . நம்மை புதுப்பித்துக்கொள்ள புத்தகங்களும் , இசையும் கண்டிப்பாக தேவை . புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் , கண் இருந்தும் குருடர்கள் . இசை கேட்கும் பழக்கம் இல்லாதவர்கள் , காது இருந்தும் செவிடர்கள் .

வாழ்க்கையைக் கொண்டாட புத்தகங்களும் , இசையும் தேவை . புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூறும் காரணம் " படிக்கக் கூடாதுன்னு இல்ல ,படிக்க நேரம் இல்லை " . பணத்தைச் சேர்க்க ஒதுக்கும் நேரத்தைக் கொஞ்சம் புத்தகத்துக்கும் ஒதுக்குங்கள் . பணத்தால் நிலையான மகிழ்ச்சியையும் , நிலையான அமைதியையும் தரமுடியாது . ஆனால் , புத்தகம் தரும்  . இதுவரை இல்லையென்றாலும் இன்றிலிருந்தாவது புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள் . இப்பொழுதே  கிணற்றை ( வீட்டை  ) விட்டு வெளியே வாருங்கள் .அருகில் இருக்கும்  புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகமேனும்  வாங்குங்கள் . வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பியுங்கள் . 

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள் புத்தகங்களுடன் !

மேலும் படிக்க :




...............................................................................


Friday, April 22, 2011

பூமியைக் காப்போம் வாருங்கள் !

ஏப்ரல் 22 , உலக பூமி தினம் ( World Earth Day ) .  " ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு " .இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன ? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான  உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம் . எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு  " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது . 

பூமியின் முதல் எதிரி யார் ? சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் . இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம் . இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் . இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும் , பெரிய தீமையையும் கொண்டிருக்கும் . நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் , வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .

இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை . மிகவும் குறைவு . பயன்படுத்தியபின்  தூக்கி எறி ( Use and Through ) கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது , இந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் . ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடக்கூடியச்  சூழல்தான் இன்று உள்ளது . நிலம் , நீர் ,  காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது . நம் மீது  நாமே குப்பைகளை  அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம் . நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்ல , பூமியில் எங்கு குப்பை இருந்தாலும்  அது நம் குப்பைதான் , அதற்கு நாம் மட்டுமே காரணம் . 

இதற்கு என்ன செய்யலாம் ? 



Reduce - குறைக்க வேண்டும் :  பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும் .

Reuse -  மீண்டும் பயன்படுத்த வேண்டும் :  நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய  பிறகுதான் குப்பைக்கோ மறுசுழற்சிக்கோ  போட வேண்டும் .
 
Recycle - மறுசுழற்சி செய்ய வேண்டும் : மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும் . அது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் சரி .
Restore - மீண்டும் சேமிக்க வேண்டும் : இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும் . உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும் . இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை  வாழ முடியாது

முடிந்த அளவுக்கு இந்த விசயங்களை உங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள் . நான் ஒருவன் மட்டும் மாறுவதால் என்ன நடந்து விடப்போகிறது ? என்று ஒருபோதும் எண்ண வேண்டாம் . நாம் எல்லோரும் ஒன்று படுவோம் . பூமியைக் காப்பாற்றுவோம் . இல்லையென்றால் சுனாமிக்குள் சிக்கி பரலோகம் போவோமாக !


தீதும் நன்றும் பிறர்தர வாரா !


Thursday, April 21, 2011

அமேசான் - அனைவருக்கும் 5 GB மெமரி இலவசம் !

இணையத்  தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் மேகக்  கணினியகம் ( Cloud Computing ) . முன்பெல்லாம்  நாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று மட்டுமே பணத்தை எடுக்க முடியும் . ஆனால் , தற்பொழுது எல்லோரும் ATM யைப் பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்கிறோம் . அதுபோல , மேகக்  கணினியகதைப் பயன்படுத்தி நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை எங்கு இருந்து வேண்டுமானாலும் நமக்குத  தேவையானபோது   பெற்றுக்கொள்ளலாம் . நமது சொந்த CPU போலவே செயல்படும் . நமக்கு தேவையான மென்பொருள்களை இயக்கவும் , தகவல்களைச் சேமிக்கவும் முடியும் .
 
தற்பொழுது இருக்கும் முறைகளால் தகவல்களைச் சேமிக்க மட்டுமே முடியும் . நமக்கு தேவைப்படும் ஒவ்வொரு முறையும் பதிவிறக்கம் ( Download ) செய்து தான் பயன்படுத்த முடியும் . இதனால் , நேரமும் விரயமாகிறது , அதிக மெமரியும் தேவைப்படுகிறது . ஆனால் , மேகக் கணினியகதைப் பயன்படுத்தி தகவல்களைப் பொதுவான இடத்தில் சேமிக்கலாம் , மென்பொருள்களைப் பயன்படுத்தி நேரடியாக இயக்கலாம் , பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை . இன்னும் பல பயன்கள் மேகக் கணினியகம் மூலம் கிடைக்கும் . அதனால் தான் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் மேகக் கணினியகத் துறையில் இறங்கியுள்ளன .

அமேசான் டாட் காம்  பற்றி நிறையப் பேருக்குத் தெரியும் என்று நினைகிறேன் . இது , அமெரிக்காவின் மிகப்பெரிய இணைய சில்லறை வணிக அங்காடி ( America's largest online retailer shop ) ஆகும் . இந்த நிறுவனமும் மேகக் கணினியகத் துறையில் இறங்கியுள்ளது . முதல் கட்டமாக இரண்டு மேகக் கணினியகச் சேவைகளை ( Cloud Drive மற்றும்  Cloud Player )வெயிட்டுள்ளது . 

Cloud Drive மூலம் எந்த ஒரு  இணைய பயன்பாட்டாளரும் 5 GB வரை தகவல்களைச் சேமித்துக்கொள்ள முடியும் . பதிவு செய்ய இந்த உரலியைச் சொடுக்குங்கள் . https://www.amazon.com/clouddrive/learnmore   இது முற்றிலும் இலவசம் . 5 GB க்கு மேல் தேவைப்பட்டால் பணம் கட்டிப் பெற்றுக் கொள்ளலாம் . இதில் Documents , Music,Video ,Photos என்று எதை வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம் . ஆனால் , தற்பொழுது மியூசிக் பைல்களை மட்டுமே நேரடியாக பயன்படுத்த முடியும் . அதற்காகத்தான் Cloud Player என்ற சேவையை வழங்குகிறது (  . இந்தச் சேவையைப் பயன்படுத்தி நாம் எங்கிருந்து வேண்டுமானாலும்  பாடல்களைக் கேட்டு மகிழலாம் . இதற்கு இணையவசதியுடன்  கூடிய கணினி அல்லது அலைபேசி ( cell phone ) இருந்தால் போதும் . 

இதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் தற்பொழுது இந்த வசதியை அமெரிக்காவில் இருப்பவர் மட்டுமே பயன்படுத்த முடியும் . நம்மால் தற்பொழுது Cloud Drive யைப் பயன்படுத்தி  5 GB வரை தகவல்களைச் சேமிக்க மட்டுமே முடியும் .Cloud Pl ayer யைப் பயன்படுத்திப் பாடல்கள் கேட்க முடியாது . கூடிய விரைவில் மற்றவருக்கும்  Cloud Player யைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம் . 

Documents ,Video ,Photos போன்றவற்றை நேரடியாக இயக்க வகை செய்யும் சேவைகளை அடுத்து வழங்க இருக்கிறது அமேசான் .

மேலும் பார்க்க :

நன்றி - ஆனந்த விகடன் .
..................................................

Wednesday, April 20, 2011

தமிழகத்தின் முதல் 10 முக்கியப் பிரச்னைகள்

1 . துறை சார்ந்த அனுபவமும் , தகுதியும் உடையவருக்கு  மட்டுமே அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்.       அரசியல் அனுபவதிற்காகவோ , குறிப்பிட்ட பகுதியின் பெரும்புள்ளி என்பதற்காகவோ பதவி கொடுக்க கூடாது .

2  . விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் .

3 . அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் , முக்கியமாக கிராமம் முதல் நகரங்கள் வரை கழிப்பிடங்கள் கட்டப்பட வேண்டும் .

4 . எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் .  தமிழ் ,ஆங்கிலம் மற்றும் ஹிந்தியும பள்ளிப்படிப்பு வரை கட்டாயமாக்கப்பட வேண்டும் . கல்விக் கொள்ளை கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் . பட்டப்படிப்பு வரை கல்வி இலவசமாக கொடுக்க வேண்டும் .

5 . மருத்துவ காப்பீடு திட்டம் மாற்றப்பட்டு அனைவருக்கும் அறுவைசிகிச்சை வரை இலவச மருத்துவ வசதி செய்து தர வேண்டும் . கல்வி மற்றும்  மருத்துவம் மட்டுமே இலவசமாக இருக்க வேண்டும் . மற்ற இலவசங்கள் ஒழிக்கப்பட வேண்டும் . இந்த இரண்டு இலவசங்கள் மட்டும் முறையாக கிடைத்து விட்டால் எல்லா குடும்பங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் .  

6 . நகரங்களில் பாலங்கள் கட்டுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட  போக்குவரத்து நெரிசலை குறைக்கத்தான் கொடுக்க வேண்டும் . ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து அதிகப்படுத்தப்பட்டு பைக் மற்றும் கார்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் . தகுந்த காரணம் இல்லாமல் புதிய வாகனங்களுக்கு உரிமம் கொடுக்கக் கூடாது . இதைத் தவிர்த்து எத்தனை  பாலங்கள் கட்டினாலும் நெரிசலைக் குறைக்க முடியாது .

7 . ஆதரவற்றோர் , கைவிடப்பட்டோர் , உண்மையான பிச்சைக்காரர்கள் இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் . நகரங்களில் பிளாட்பாரங்களில் வசிப்பவர்களுக்கு முறையான இருப்பிட  வசதி செய்து தர வேண்டும் .

8 . கிராமப்புற முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . வேலைக்காக நகரங்களுக்கு இடம் பெயர்வது தடுக்கப்பட வேண்டும் .

9 . விவசாயத்திற்கு இரண்டு மணி நேரம்  மட்டும் இலவச மின்சாரம் வழங்குவதைவிட 24 மணி நேரம் கட்டண மின்சாரம் வழங்கலாம் . சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவது ஊக்குவிக்கப்பட வேண்டும் . மழைநீரைச் சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் . வெற்று நிலங்களில்   மரம் வளர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் .

10 . லஞ்சத்தைக் கொஞ்சமாவது குறைக்க  அரசு அலுவலகங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் . பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்களில் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் .
இன்றைய சூழ்நிலையில் இவையெல்லாம் சாத்தியமா ? தெரியவில்லை  . இதை எழுதுவதால் நமக்கு ஒரு ஆறுதல் அவ்வளவுதான் . 
 ...............................

Monday, April 11, 2011

ஏப்ரல் 13 ன் கதாநாயகர்களுக்கு !

ஒரு நாள் கதாநாயகர்கள் அனைவருக்கும் வணக்கம் . நீங்கள் ஏற்கப் போகும் அந்த ஒரு நாள் கதாபாத்திரம் தான் அடுத்த 5 ஆண்டுகள்( நிபந்தனைக்கு உட்பட்டது ) நம் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது . நாம் , ஜனநாயக நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம்மை நம்ப வைப்பது தேர்தல் மட்டுமே . மிச்சம் இருக்கும் அந்த ஒரே ஒரு உரிமையை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொருத்துத் தான் நம் வெற்றியும் தோல்வியும் இருக்கப் போகிறது . நாம் பெறப்போகும் வெற்றி நமது வெற்றி மட்டுமல்ல ஜனநாயகத்தின் வெற்றி . நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை இந்த முறை தேர்தல் ஆணையம் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளது . இனி, நம் ஓட்டில் தான் உள்ளது நம் ஜனநாயகம் . 

ஒரு சில பேர் ஓட்டே போடாமல் வில்லன்களாக மாறலாம் என்று நினைக்கிறார்கள் . அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , "எல்லோரும் ஊழல்வாதிகள் அவர்களுக்கு ஏன் ஒட்டு போட வேண்டும் " , " நான் ஒட்டு போடாமல் இருப்பதால் பெரிதாக ஒன்றும் நடந்து விடாது" , "என் தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருந்தால் போதும் " என்ற சுயநல மனநிலை தான் நம் வில்லன்களுக்கு இருக்கிறது . இந்த மனநிலை , படித்தவர்களுக்குத் தான் அதிகமாக உள்ளது . அதற்கு காரணம் நல்ல படிப்பு , நல்ல வேலை , நல்ல சம்பளம் . சம்பாதிக்கும் பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் , யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வாழலாம் என்ற மனநிலை தான் . இவர்களுக்கு ஓட்டுப் போடுவதெல்லாம் பெரிய விசயமில்லை . பெரு நகரங்களில் வேலை பார்க்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளின் நிலை வேறு மாதிரி இருக்கிறது . அரசியல் சூழ்நிலைகள் தெரியும் , ஓட்டுப் போடவும் ஆசை இருக்கும் . ஊருக்கு போய்வரும் செலவுக்காகவும் , ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்க்காகவும் ஓட்டுப் போடுவதையே தவிர்க்க நினைக்கின்றனர் . 

நம் வில்லன்கள் ( ஓட்டுப்போட விருப்பம் இல்லாதவர்கள் ) ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . மனிதன் எப்போதுமே ஒரு சமுதாய விலங்கு தான் . மற்றவர்களைச் சாராமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது . நாம் எதிர் பார்க்கும் மாற்றத்தை நம்முடைய பங்களிப்பு இல்லாமல் எக்காலத்திலும் கொண்டு வர முடியாது . ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்தால் அவர்களுக்கு எதிராக ஓட்டைப் பதிவு செய்யுங்கள் . குடும்ப அரசியல்  பிடிக்க வில்லையா ? அந்த குடும்பத்தில் இருந்து எத்தனை பேர் தேர்தலில் நின்றாலும் ஒருவருக்கு மட்டும் ஓட்டுப் போடுங்கள் . மற்ற யாருக்கும் ஒரு ஓட்டு கூட பதிவாக கூடாது . மிகச் சிறந்த முறையில் மக்கள் பணி செய்யாத யாரும்  இரண்டு முறைக்கு மேல் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட அனுமதிக்காதீர்கள்  . 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் நிற்பது பிடிக்கவில்லையா ? அவர்கள் யாருக்கும் ஓட்டுப் போடாதீர்கள் . இதையெல்லாம் தவிர்த்து யார் மிஞ்சுகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் . நீங்கள் எதிர் பார்க்கும் மாற்றம் நிகழும் . ஆனால் , ஓட்டே போடா  விட்டால் நாம் எதிர் பார்க்கும் எந்த மாற்றமும் எக்காலத்திலும்  நிகழாது .

கதாநாயகர்கள் கவனிக்க , எந்த கட்சியைச் சார்ந்தும் , எந்தக் கட்சி தலைவருக்காகவும் , சாதிக்காகவும் , மதத்துக்காகவும் , கவர்ச்சியான பேச்சுக்காகவும் , பணத்துக்காகவும்  ஓட்டுப் போடாதீர்கள் . அப்படிப் போடுவதால் உங்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை . உங்கள் தொகுதியில் நிற்பவர்களை   மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள் . அவர்களில் எந்த வேட்பாளர்  , எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  உங்களது நிலைகளை புரிந்து உங்களுக்கு நல்லது செய்வாரோ அவருக்கு ஓட்டுப்போடுங்கள் . நாட்டை ஆள்வது யாராக இருந்தாலும் நம் தொகுதி நலன்களுக்காக போராடுபவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் . இலவசத்தை  மறந்து விடுங்கள் ,ஏனெனில்  இலவசங்கள் அனைத்துமே நம் வரிப்பணம் . 

யாருமே நல்லது செய்யாவிட்டாலும் கூட தொடர்ந்து இரண்டு முறை எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வரக்கூடாது . ஆட்சி மாற்றம் ஒன்று மட்டுமே ஊழல்வாதிகள் மனதில் சிறிதளவாவது பயத்தை உண்டாக்கும் . மத்திய அரசை எடுத்துக் கொள்ளுங்கள் , கடுமையாக  விலைவாசி உயர்ந்த நிலையிலும் தொடர்ந்து மீண்டும்  காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது . அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் இன்று , நாம் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம் . கோடிகளில் இருந்த ஊழல்  இலட்சம் கோடிகள் என்று ஆனது தான் மிச்சம் . ஒரே கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல்களும் , ஊழல் தொகைகளும்  மட்டுமே உயரும் . நம்  வாழ்க்கைத்தரம்  உயராது , குறைய மட்டுமே செய்யும் . காங்கிரஸ் இருக்கும் வரை இந்தியாவில் ஒட்டு மொத்த வளர்ச்சி எங்குமே இருக்காது . பணம் படைத்தவர்களின் வளர்ச்சி மட்டுமே இருக்கும் .

 காமராஜர் செத்த போதே காங்கிரசும் செத்து விட்டது . உண்மையான இந்தியனாக இருந்தால் இனி எக்காலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போடாதீர்கள் .அதனால் , மக்களே , மக்களுக்கு மக்களே  அடுத்த 5 ஆண்டுகள் நம் வாழ்க்கை கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் தற்போது இருக்கும் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது . அதன் பிறகு உங்க விருப்பம் . ஆனால் , எதற்காகவும் ஓட்டுப் போடாமல் இருக்காதீர்கள் .
           
 60 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு ( கட்சித் தலைவராகவே இருந்தாலும் ) ஓட்டுப் போடாதீர்கள்....

கட்சி சார்ந்த அரசியலைத் தூக்கி எறிவோம் , மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்குவோம் ...

மேலும் படிக்க : 


Friday, April 8, 2011

சூரியன் - உலக சக்திகளின் மையம்

சூரியன் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யவே முடியாது . உலக சக்திகளின் பிறப்பிடம் சூரியன் தான் . சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள்  20 வினாடிகள் ஆகின்றன . இந்த ஒளியிலிருந்து தான் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கின்றன . ஒளிச்சேர்க்கை மட்டும் நின்று விட்டால் நம் பூமியில் உயிரினங்கள் வாழவே முடியாது . எல்லா உயிரினங்களுக்கும் தேவையான ஆற்றலின் மூல வடிவம் ஒளிச்சேர்க்கை தான் . உயிரினங்களுக்கு தேவையான உணவும் , ஆற்றலும் தாவரங்களையே சார்ந்தே உள்ளன . ஏன் நாம் சுவாசிக்க தேவைப்படும் ஆக்சிஜன் தாவரங்களில் இருந்தே கிடைக்கிறது . சூரிய ஆற்றல் , பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும்.. மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் சூரியனை சார்ந்தே உள்ளன. 


சூரியனை பற்றி சிந்திக்கும் மனநிலை நமக்கு இல்லை . இயந்திர வாழ்க்கை நம்மை இயற்கையிடமிருந்து பிரித்துக் கொண்டே இருக்கிறது . பொருள் அழிவதைப் பற்றியும் , பொருள் சேர்ப்பதைப் பற்றியும் கவலைப் படவே நமக்கு நேரம் போதவில்லை . நம கண் முன்னாலே இயற்கை அழிவதை நாம் கவனத்தில் கொள்வதில்லை . இயற்கை இல்லாமல் ஒரு நிமிட வாழ்க்கை கூட சாத்தியமில்லை . சூரியனிடமிருந்து  நாம் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன . 

பூமியின்  எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும்  நம அன்றாட வாழ்க்கை, சூரிய உதயத்திலிருந்து தான் தொடங்குகிறது . சூரிய மறைவின் போது ஏறக்குறைய நம்முடைய அன்றாட வாழ்க்கை முடிவுக்கு வருகிறது . ஆனால் , நாம் பணத்திற்காக சூரியன் மறைந்த பிறகும் உழைக்கிறோம் . ஒரு நிமிடம் நம முன்னோர்களை நினைத்து பாருங்கள் . மின் விளக்கோ மற்ற எந்தவிதமான மின்சார சாதனங்களோ கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் . சூரிய ஒளியில் தங்கள் இயக்கத்தை தொடங்கி சூரியன் மறைவின் போது தங்கள் இயக்கத்தை நிறுத்தி , ஓய்வெடுத்து  அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் . அதனால் தான் ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களால் வாழ முடிந்தது .

சிந்தித்து பார்க்கும் போது நம வாழ்க்கையை மின் சாதனங்கள் பிடுங்கி கொண்டு விட்டது போல் தோன்றுகிறது  . இன்று ,மின் சாதனங்கள் இல்லாத  நம் அன்றாட வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . எல்லோரும் மின்சாரத்தின்  அடிமைகளாக மாறி விட்டோம் . மின்சாதனங்கள் தான் நம் வாழ்கையை இயக்குவது போல நினைத்துக் கொண்டு அவைகளுடனே வாழ்கிறோம் தினமும் . மின் சாதனங்களின் மூலம் எல்லா நேரங்களிலும் நிலையான மகிழ்ச்சியையோ , அமைதியையோ  நம்மால் எப்போதுமே பெற முடியாது . காரணம் , அவை இயங்க எப்போதும் மின்சாரம் தேவை . 

சரி சூரியனுக்கு வருவோம் . சூரியஒளி பட்டுக் கொண்டே இருக்கும் தண்ணீர் தான் நம் உடலுக்கு நல்லது . நம் உடலுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் அது தான் நல்லது . விலங்குகள் சூரியஒளி படும் தண்ணீரை  மட்டுமே அருந்துகின்றன . அதனால் தான் நம் முன்னோர்கள் , கேணி ,குளம் , ஏரி போன்றவற்றை சூரியஒளி படும் வகையிலேயே அமைத்திருந்தனர் . அவர்களுக்கு வயிறு  சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனையும் ஏற்ப்படவில்லை . அவர்களால் நீண்ட நாள் ஆரோக்கியமுடன் வாழ முடிந்தது . இன்று , பல்வேறு  விதமான சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம் . ஆனாலும் , நம் ஆரோக்கியம் என்பது மருத்துவமனையை நம்பியே உள்ளது . 



சூரியன் மிகவும் விசித்திரமானவர் . பூமியின் வெப்ப மண்டல பகுதியைச் சேர்ந்தவர்கள் , அதிக வெப்பத்தால் பாதிக்கப் படுகின்றனர் . குளிர் மண்டலப் பகுதிகளை சேர்ந்தவர்கள் , வெப்பம் இல்லாததால்  பாதிக்கப் படுகின்றனர் . மழை பெய்யவும் சூரியன் தான் காரணம் , சூரிய வெப்பத்தால் தான் நீர் ஆவியாகி  மேகத்துடன் இணைந்து மழையாக பெய்கிறது .நிலவுக்கு ஒளி சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது . எவ்வளவு சுவாரசியம் பாருங்கள் . சூரியன் ஒரே இடத்தில்  இருக்கிறது . பூமி , சூரியனைச் சுற்றுகிறது . பூமியை நிலவு சுற்றுகிறது . சூரிய ஒளிக்கு எதிராக நிலவின் ஒளி குளுமையாக இருக்கிறது . இப்படி எல்லாத்துக்கும்  சூரியன் காரணமாக இருப்பதால் தான் கிரேக்கர்கள் சூரியனை கடவுளாக வழிபட்டார்களோ என்னவோ ! 

ஆங்கில கவிஞர் ஷெல்லி, " சூரியஒளி படும்  அனைத்து பொருள்களும் அழகாக இருக்கின்றன " என்று குறிப்பிட்டார் . நம்மில் எத்தனை பேருக்கு சூரிய உதயத்தையும் , சூரிய மறைவையும் பார்க்கும் பழக்கம் இருக்கிறது . ஏறக்குறைய எல்லோரும் மறந்து விட்டோம் . அதை கன்னியாகுமரியில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டோம் . கிராமங்களில் இருப்பவர்களுக்கு சூரியனைப் பார்ப்பது இப்பொழுதும் சாத்தியம் . ஆனால் , நகரங்களில் அன்னாந்து பார்த்தால் விதவிதமான கட்டிடங்கள்  மட்டுமே தெரிகின்றன . நகரத்தில் வாழ்ந்த போதிலும் சூரிய உதயத்தையும் , மறைவையும் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் , கொடுத்து வைத்தவர்கள் . 

வானத்தை பார்த்துக்கொண்டே இருப்பதே ஒரு வகை தியானம் போன்றது தான் . சூரியன் ,சூரிய வெளிச்சம் , விதவிதமான வண்ணங்கள் , ஓடும் மேகங்கள் , மேகங்கள் நமக்கு உணர்த்தும் பல்வேறு வடிவங்கள் , நிலவு , நட்சத்திரங்கள் என்று வானம் நமக்கு அளிக்கும் விசயங்கள் ஏராளம் . இன்றைய  குழந்தைகள் நட்சத்திரங்களை பார்க்கும் வாய்ப்பை வெகுவாக இழந்து விட்டனர் . எப்பொழுதெல்லாம் மனம் அமைதி இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது வானத்தைப் பாருங்கள் அமைதி கிடைக்கும் . இயற்கையின் ஒரு வடிவமான வானம் மட்டுமே நமக்கு இவ்வளவு தரும் போது இயற்கையோடு இணைந்து நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக  இருக்கும் !  

எங்கு இருந்தாலும் வானத்தையும் ,  சூரியனையும் ( காலை 8 மணிக்கு முன் , மாலை 5 .45 கு பின் )   பார்க்க மறக்காதீர்கள் !       

சூரியன், உலக சக்திகள் மற்றும் உலக இயக்கத்தின் மையம் !

கடவுள் இல்லை என்று யாரும் சொல்ல வேண்டாம் . நம் கண்ணால் பார்க்கக் கூடிய ஒரு கடவுள்  "சூரியன் "..! 


மேலும் படிக்க :
 


........................................... 

Monday, April 4, 2011

மனிதனாய் இருக்க மறந்து விடாதே ...!



குழந்தையாய் இரு 

          சிரிக்கும் வரை ...!

சிறுவனாய் இரு
          விளையாடும் வரை...!
  
மாணவனாய் இரு
         படிக்கும் வரை ...!

இளைஞனாய்  இரு
        ஜெயிக்கும் வரை ...1

மனிதனாக இருக்க
         மறந்து விடாதே சாகும் வரை ...!


....................................    

Sunday, April 3, 2011

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி களிக்க வேண்டிய தருணமிது . 1983 கு பிறகு இப்ப வாங்கும் அப்ப வாங்கும்னு எல்லா உலககோப்பை போட்டிகளையும் பசியை மறந்து , தூக்கத்தை தொலைத்து பார்த்துக்கொண்டே இருந்தோம் . 28 வருட ஏக்கம் முடிவுக்கு வந்துவிட்டது . இப்பொழுது  உலககோப்பையை வென்றே விட்டோம் . ஆனால் , இந்த உலககோப்பை சாதாரணமாக கிடைக்க வில்லை . ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் நம் கைகளை அடைந்துள்ளது . 

இந்த ஒரு உலககோப்பையை வெல்ல நாம் மூன்று இறுதிப் போட்டிகளில் வெல்ல வேண்டி இருந்தது . முதலாவது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவையும் ( காலிறுதி ), இரண்டாவது இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் (அரையிறுதி ) , மூன்றாவது இறுதிப் போட்டியில் இலங்கையையும் (இறுதி ) வீழ்த்தித் தான் உலக கோப்பையை வென்றோம் . மூன்றுமே கடினமான போட்டிகள் தான் ,ஆனால் ,ஆஸ்திரேலியாவுடனான போட்டி தான் மிகக் கடினமாக இருந்தது . இந்த உலககோப்பை வெல்வதற்கு எந்த தனிப்பட்ட வீரரும் காரணமாக இல்லை . எல்லா வீரர்களுக்குமே வெற்றியில் பங்கு உண்டு . உலககோப்பை வெல்ல ஒரே காரணம் " அணியின் ஒற்றுமை " தான் .

மிகச் சிறப்பான பந்து வீச்சுடன் ஆட்டத்தை துவக்கிய இந்தியா , மிக மோசமான பந்து வீச்சுடன் முதல் 50 ஓவர்களை நிறைவு செய்தது . 274 ரன்களை எடுத்து விட்டு ஆனந்த கூத்தாடியது , இலங்கை .எப்படியும் இந்தியாவை வீழ்த்தி விடலாம் என்று தான் நினைத்திருப்பார்கள் .ஆனால் , அவகளின் ஆனந்தம் ,சேவாகையும் , சச்சினையும் ஆட்டமிழக்கச் செய்யும் வரையே நீடித்தது . அதன்  பிறகு ஆட்டம் இந்தியாவின் கைகளில் வந்தது . காம்பிர் மிகச் சிறப்பாக , துணிச்சலுடன் விளையாடினார் . சதத்துக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக விளையாடினார் . அவருக்கு கோலி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் . பிறகு ஆட்டத்தை நம் அணித்தலைவர் , தோனி கையில் எடுத்துக்கொண்டார் . இந்த உலககோப்பையில் தனது சிறந்த ஆட்டத்தை மிக முக்கியமான போட்டியில் வெளிப்படுத்தி உள்ளார் . இறுதிப் போட்டியில் நாம் வெல்வதற்கு தோனியும் முக்கிய காரணம் . 

1983 ல் இருந்த நிலை வேறு . அன்று மிகச் சாதாரண அணியாக பங்கு பெற்று கோப்பை வென்றது இந்தியா . அது மிகச் சிறப்பான வெற்றி . அந்த போட்டியையும் இந்தப் போட்டியையும் ஒப்பிட வேண்டாம் . இந்தியாவின் மிகச் சிறந்த அணித்தலைவர் தோனி தான் . இவரது தலைமையில் இந்தியா பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது . 2007 ல் முதலாவது 20-20  உலககோப்பையை வென்று காட்டினார் . இவரது சிறந்த தலைமையால்  டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது . இப்பொழுது 28 வருடங்களுக்கு அப்புறம் ஒரு நாள் உலக கோப்பையை வென்று , ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் இந்தியாவை முதல் இடத்தில் உட்கார வைத்துள்ளார் . இதை விட என்ன வேண்டும் .

எல்லோரையும் விட ஒருவர் மகிழ்ச்சி துள்ளலில் ஆனந்த கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார் . பேட்டிங் சாதனைகளின் ஒட்டு மொத்த குத்தகைதாரர் . அவர் , சச்சின் தெண்டுல்கர் . ஆறு உலக கோப்பை போட்டிகளில் விளையாடி , இந்த முறை மட்டுமே கோப்பையை வெல்ல முடித்திருக்கிறது . இப்போது மட்டும் வெல்லாமல் போயிருந்தால் அவரது சாதனைகளுக்கு ஒரு அர்த்தமே இருந்திருக்காது . இது அவருக்கு மிகச் சிறந்த தருணம் . 

 இதைப் பற்றி சச்சின் கூறியது  "இதை விட மேலான ஒன்றை என்னால் கேட்கவே முடியாது. உலகக் கோப்பையை வென்றது தான், எனது வாழ்வின் பெருமைமிகு தருணம். சக அணி வீரர்களுக்கு நன்றி. அவர்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை. எனது ஆனந்தக் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. உலகக் கோப்பையை வென்றுள்ள இந்த இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது மிகப் பெரிய கெளரவம். கேரி, பாடி உப்டன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி." 

எப்படியோ உலககோப்பையை வென்று விட்டோம் . இதை வென்று கொடுத்த தோனி மற்றும் நம் அணி வீரர்கள் அனைவரையும் பாராட்டுவோம் . 

எல்லோரும் கொண்டாடுவோம் !


........................... 

Friday, April 1, 2011

மூன்றாவது இறுதிப்போட்டி !?

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுக்குமே  இது மூன்றாவது இறுதிப்போட்டி . இதற்கு முன் இரு அணிகளும் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ,ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளன . இரண்டு அணிகளும்  இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடனே தோல்வியை தழுவியுள்ளன . இம்முறை ஆஸ்திரேலியா இல்லை . ஆனால் , இரண்டில் ஒரு அணி தான் வெற்றி பெற முடியும் . அது எது என்பதில் தான் சுவாரசியம் இருக்கிறது . 

 இந்த உலகக்கோப்பையில் ஏறக்குறைய இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் சவால் நிறைந்ததாகவே இருந்தது . அதிலும் ஆஸ்திரேலியாவுடன்  வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருந்தது . பாகிஸ்தான் உடனான போட்டியில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இந்தியா அணியின் பந்து வீச்சும் , களப்பணியும் மிகச் சிறப்பாக இருந்தன . உலககோப்பை தொடங்கிய போது இருந்ததை விட இப்பொழுது இந்தியா பலம் வாய்ந்ததாக இருக்கிறது . இதற்க்கெல்லாம் காரணம் " இந்திய அணியின் ஒற்றுமை " . அனைத்து வீரர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள் ,நம் தோனியைத் தவிர . ஆனால் , அணித்தலைவர் பொறுப்பில் மிகச் சிறப்பாக செயல் படுவதால் அவரது ஆட்டத்தை நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை . 

இந்தியா , இந்த தொடரில் அதிக முறை முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது . அதே சமயம் இலங்கை அதிக முறை இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது . அதனால் , இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தாலும் அது நமக்குச்  சாதகம் என்று சொல்லிவிட முடியாது . முதலில் பேட்டிங்கோ , பந்துவீச்சோ  இறுதி வரை போராடினால் மட்டுமே இறுதிப் போட்டியில் வெல்ல முடியும் .

முரளிதரனுக்காக இலங்கை ஆடுகிறது , தெண்டுல்கருக்காக இந்தியா ஆடுகிறது .  இருவருமே அடுத்த உலகக்கோப்பை போட்டியில் ஆடப்போவதில்லை . இலங்கை  1996 ல்  உலகக்கோப்பை வென்ற போது முரளிதரன் அந்த அணியில் இடம் பெற்று இருந்தார் . ஆனால் , இவ்வளவு சாதனைகள் செய்த பிறகும்  தெண்டுல்கருக்கு  இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை . இம்முறை , சொந்த மண்ணில் , சொந்த ஊரில்  நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது .  

இரண்டு அணிகளின் பயிற்சியாளர்களும் இந்த உலகக்கோப்பையுடன் அணியை விட்டு விலகப் போகிறார்கள் . கிறிஸ்டன் பதவி ஏற்ற பிறகு இந்தியா அதிக வெற்றிகளை பெற்றுள்ளது . ஜான்ரைட்- கங்குலி ஜோடியால் இந்தியா  2003 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றது . கிறிஸ்டன் -தோனி ஜோடி 2011 ல் கோப்பையை வெல்லப் போகிறது !? 

1983 ல் கபில் தேவ் !

2011 ல் தோனி !? 

மேலும் படிக்க :



முகப்பு பக்கம் 

.......................................
 
 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms