Saturday, February 9, 2013

ஒன்று எங்கள் ஜாதியே ...!


படிக்காதவர்களை விட படித்தவர்கள் அதிகமான ஜாதி  வெறியுடன் இருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் . ஜாதியும் அரசியலும் பிரிக்க முடியாத நிலையில் இருக்கின்றன . ஜாதிகளை களைய வேண்டிய கல்விக்கூடங்கள்,தங்கள் பெயர்களில்  ஜாதிகளின் பெயரைத் தாங்கி இருக்கின்றன . மனிதன், எப்போதுமே தனக்கு கீழ் அடிமை நிலையில் யாரவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் . அதிகாரத்தின் அடிமையாகவும் ,விளம்பரங்களின் அடிமையாகவும் இருப்பதைப் பற்றியெல்லாம் அவனுக்கு கவலைகள் இல்லை . கல்வியின் மூலமே ஜாதியம் குறையும் . எப்போது ? பாடத்திற்கு வெளியேயும் எப்போது படிக்கிறார்களோ ?ஜாதியத்திற்கு எதிராக எப்போது கேள்விகள் கேட்கிறார்களோ ? அப்போது .


1964 ஆம் ஆண்டு வெளிவந்த "பணக்கார குடும்பம் " என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .பாடியவர்கள் ,T .M .சவுந்தர்ராஜன் ,L .R .ஈஸ்வரி .இசை ,விஸ்வநாதன் ராமமூர்த்தி .இப்பாடலை எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும் . உழைப்பை முன் வைத்து முன்னேற்றம் கண்டு " இல்லை என்பதே இல்லை " என்ற நிலையை உருவாக்காமல் ஜாதியம் பேசுவதால் என்ன பயன் ?

உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே ...!

மேலும் படிக்க :

கலாசார விடுதலையே சமூக விடுதலை !
...................................................................................................................................................................

Thursday, January 10, 2013

கலாச்சார விடுதலையே சமூக விடுதலை !

தற்போது நடக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு கலாச்சாரக் கூறுகள் தான் காரணமாக இருக்கின்றன . கலாச்சாரக் கூறுகளிலிருந்து வெளியே வராத வரை மனித சமூகம் முன்னோக்கிச் செல்ல முடியாது . உணவு ,உடை,இருப்பிடம் ,மனித உறவுகள் ,பழக்கவழக்கம் ,குழந்தைகள் ,ஆண் மற்றும் பெண் குறித்த நிலைப்பாடுகள் ,பாலியல் ,வாழும் முறை என்று  ஒவ்வொரு விசயத்திற்கும் ஒவ்வொரு விதமான வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் கலாச்சாரத்தில் இருக்கின்றன . சமூக அமைப்பில் இருக்கும் ஒரு சிலர்  தங்களுக்கு ஆதாயம் தரும் அனைத்து கலாச்சாரக் கூறுகளையும் மிகக் கவனமாக பாதுகாத்து வருகின்றனர் ; ஆதாயம் தராதவற்றை காற்றில் விடவும் அவர்கள் தயங்குவதில்லை . சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர எத்தனையோ தலைவர்கள் தீவிரமாக போராடினார்கள் . அவர்களது செயல்பாடுகள்  சமூகத்தில் நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வராவிட்டாலும் நிலைமை மோசமாகாமல் பார்த்துக்கொண்டது .

குழந்தைகளை குழந்தைகள் போலவும் ,பெண்களைப் பெண்கள் போலவும் நடத்தாத எந்தக் கலாச்சாரமும் குற்றமுடையது தான் . நம் இந்தியக் கலாச்சாரம் ,தமிழக கலாச்சாரம்  குற்றமுடையது தான் . பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உலகெங்கிலும் இருந்தாலும் இந்தியாவில் அதிகமாகவே இருக்கின்றன . உலக அளவில் பெண்கள் பாதுகாப்பில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்குப் பின்னால் தான் இந்தியா உள்ளது . ஆணாதிக்க கலாசாரம் தான் இந்தியாவில் உள்ளது .பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நன்றாக படிக்கவும் ,நன்றாக சம்பாதிக்கவும் மட்டுமே தூண்டப்படுகிறார்கள் .  மற்ற எந்த விசயங்களிலும் கவனம் செலுத்த பெற்றோரும் ,கல்விக் கூடங்களும் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை . இங்கு ஆண் குழந்தையை ஒரு விதமாகவும் பெண் குழந்தையை வேறு  விதமாகவும் தான் வளர்க்கிறார்கள் . ஆண் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் சுதந்திரம் பெண் பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லை . தங்களை தாங்களே தாழ்வு மனப்பான்மையுடன் நினைக்கும் நிலை பெண் பிள்ளைகளுக்கு உருவாகிறது . சமூகத்தின் அனைத்து கூறுகளும்  பெண்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன .

இன்றும் பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும்  திருமணத்திற்குப் பின் கணவன் சொல்லும்படி நடந்து கொள்ள பணிக்கப்படுகிறார்கள் . எவ்வளவு அவமானப் படுத்தினாலும் குடும்ப மானம் கெட்டுவிடும் என்பதற்காகப் பொறுத்துப் போகிறார்கள் . விதவைகள் மறுமணம் செய்ய நம் கலாசாரம் இன்னுமும் முழுமையான சுதந்திரம் தரவில்லை . ஒரு பெண் தன் கணவனை இழந்த பிறகு , குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் ஆண்கள்  அந்தப் பெண்ணைப்  அடைய முயற்சி செய்கின்றனர் .இதே நிலை ஆணுக்கு வரும்போது அவனின் அடுத்த திருமணம் பற்றி மட்டுமே நம் கலாசாரம் பேசுகிறது .

அன்று பெண்கள் உடன்கட்டை ஏறியதற்குக் காரணம் வீட்டிற்குள் நடந்த பாலியல் தொந்தரவுகள் தான் காரணமாக இருந்திருக்கின்றன . பெண்களுக்கு வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பாலியல் தொந்தரவுகள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன . குடும்ப மானம் போய்விடும் என்பதற்காக வீட்டிற்குள்ளும் வெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகள் மூடி மறைக்கப் படுகின்றன .இந்தப் மனப்பான்மை தவறு செய்தவர்களை மீண்டும் தவறு செய்யத் தூண்டுகிறது . அதனால் தான் கி.ராஜநாராயணன்,  "ஒழுக்கம் ,ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ ,அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும் . ஒவ்வொருத்தனும் மனுசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான் .வெளியே பேசுறது பதிவிரதத்தனம் .சென்னையிலேயே,ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா ? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு , குழாயை  உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா ? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு ? அட , பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது ? என்னடா , இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது .இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது , இல்லையா ?மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன் " என்று சொன்னாரோ என்னவோ . குடும்பம் என்கிற அமைப்பு மீது நம் கலாசாரம் கட்டமைத்து வைத்திருக்கும் கூறுகள் மீது நாம் கேள்வி எழுப்ப வேண்டிய நேரமிது .

உலகெங்கிலும் அதிகமாக துன்புறுத்தப்படுவது பெண்ணின் உடல் தான் . நாடுகளுக்கு இடையிலான போர்களின் போதும் , இனத்தின் பெயரால் நடத்தப்படும் போர்களின் போதும் , மதக் கலவரங்களின் போதும் ,ஜாதிக் கலவரங்களின் போதும் முதலில் பாதிக்கப்படுவது  பெண்களின் உடல் தான் . எல்லா இடங்களிலும் பெண்களை கட்டுப்படுத்தி விட்டு பெண்களைத்  தெய்வம் என்று சொல்லி  போலியான உருவகம் நம் நாட்டில் கொடுக்கப்படுகிறது . தினமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் போகிறது . டெல்லி சம்பவத்திற்குப் பிறகு எல்லா மட்டங்களிலும் தொடர்ந்து உணர்வு சார்ந்த நிலையிலேயே விவாதித்துக் கொண்டே இருக்கிறார்கள் . அடிப்படைக் காரணத்தை அறியவும் அதைக் களையவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

இந்தியாவில் நடக்கும் அனைத்து பாலியல் வன்கொடுமைகளும்  எந்தச் சூழலில் நடக்கின்றன . அதை வகைப்படுத்தி மூல காரணத்தை அறிந்தால் மட்டுமே நம்மால் இம்மாதிரியான குற்றம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும் . புதிதாக சட்டம் இயற்றியவுடன் எல்லாம் நின்று விடும் என்று நினைப்பது முட்டாள்தனம் . இந்தியாவில் ஏற்கனவே நிறைய சட்டங்கள் இருக்கின்றன ,அதைச் செயல்படுத்துபவர்கள் தான் தொடர்ந்து தவறு செய்கிறார்கள் .

காவல்துறை இந்த விசயத்தில் மிக மோசமாக செயல்படுகிறது . ஏன் காவல்துறை அதிகாரிகளே தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதாரணப் பெண்களையும் , இன்னும் சொல்லப்போனால் பெண் காவலர்களையே தங்கள் பாலியல் இச்சைக்கு இணங்கும் படி துன்புறுத்துகிறார்கள் . அரசியல்வாதிகளின் மகன்கள்  செய்யும் அட்டூழியங்கள் அனைத்தும் காவல்துறையால் மறைக்கப்படுகிறது .இந்த நிலையில் பாலியல் குற்றங்களை எவ்வாறு காவல்துறையால் தடுக்க முடியும் என்று தெரியவில்லை .

நம் நாட்டில் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகுவதற்கு மதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது . மதுவுக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது என்றாலும் கொண்டாட்டங்களின் போது மட்டுமே அன்று மது பயன்படுத்தப்பட்டது . இன்று போல் எப்பாடு பட்டாவது தினமும் மது அருந்துதல் என்பது அன்று இருக்கவில்லை . இன்று ," காதல் செய்யாதவன் இளைஞன் இல்லை , மது குடிக்காதவன் மனிதன் இல்லை " என்ற நிலை உருவாகிவிட்டது . குற்றங்களுக்கு மூல காரணமான மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் சட்டம் இயற்றுவதால் எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை ஊடகங்களில் பெண்களை போகப் பொருளாக இன்னும் இழிவாக சித்தரிக்கிறார்கள் . இதையெல்லாம் தடுக்க  வேண்டும் .எழுத்தாளர் பாமரன் பக்கம் :- சட்டங்கள் காக்குமா சரிகாக்களை….?

பாலியல் கல்வி தரப்பட வேண்டிய அவசியம் குறித்து கி.ராஜநாராயணன் கூறியது :

"பாலியல் கல்வி கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும் . எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும் . பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் . மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விசயமாக்கிட்டோம் . பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு , அந்த ஞாபகமாகவே அலையுது . நான் கேட்குறேன் ... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா , அது சிக்கலா, இல்லையா ? அது அவனோட சிக்கல் மட்டும்தானா .. சமுதாயத்தோட சிக்கலுமா ? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே ,அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன ? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி , கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க . ரெண்டு பசியுமே மோசமானது . ஆனா, இங்கே எல்லோருமே மேல் வயித்துப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம் . கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம்  "

பாலியல் கல்வி கொடுக்கப் பட வேண்டிய அவசியத்தை நம் கல்வியாளர்கள் உணர வேண்டும் . ஆணுக்குப் பெண்ணைப் பற்றிய புரிதல்களையும் ,பெண்ணுக்கு ஆணைப் பற்றிய புரிதல்களையும் முதலில் கற்பிக்க வேண்டும் . ஆண்களுக்கு தனியாகவும் ,பெண்களுக்குத் தனியாகவும் நடத்தப்படும் கல்விகூடங்களைத் தடை செய்து இருபாலரும் பயிலும் கல்விக் கூடங்களை மட்டுமே இயங்க அனுமதிக்க வேண்டும் . இருபாலர்களும் படிக்கும் நிறைய கல்விக்கூடங்களில் ஆண்கள்  பெண்களுடனும் , பெண்கள் ஆண்களுடனும்  பேச தடை விதித்துள்ளனர் . இது மனிதத்தமையற்ற செயல் . ஆண்களை பெண்களும் ,பெண்களை ஆண்களும் சிறு வயது முதலே புரிந்து கொண்டாலே போதும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து விடும் .
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஆண்களிடமிருந்து பாலியல் ரீதியாக தங்களைக் காத்துக்கொள்ள பெண்களுக்குப்  பயிற்சி அளிக்க வேண்டும் .

இயற்கையிலேயே  ஆணுக்கு பெண் மீதும் , பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும் . பெண் ,ஆண்களால் ரசிக்கப்படுவதையும் , ஆண் , பெண்களால் ரசிக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் . ஆனால் ,இந்த இயல்பான விசயத்தை தங்கள் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர் நவீன முதலாளிகள் . அதனால் தான் அழகு சாதனப் பொருட்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது . ஆண் மீது பெண்ணுக்கு உள்ள ஈர்ப்பை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதில்லை . எந்த வணிக விளம்பரங்களும் ஆணின் உடலை கவர்ச்சிப் பொருளாக காட்டவில்லை .ஆணின் தொப்புள் குழியை விதவிதமாக காட்டவில்லை ; பம்பரம் விடவில்லை . ஆண்கள் சட்டை அணியாமல் தெருவில் நடந்தால் கூட அதைக் கவர்ச்சியைத் தூண்டும் விதத்தில் யாரும் கவனிப்பதில்லை . காரணம் ,நம் கலாசாரம் ஆணாதிக்க கலாசாரம் .ஆண் எது செய்தாலும் சரி ,என்பது நம் சமூகத்தின் பொதுப்புத்தியாகவே உள்ளது .   ஆனால் , பெண் மீது ஆணுக்கு இருக்கும் ஈர்ப்பை முழுவதும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி பெண்ணை ஒரு போகப் பொருளாக பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டன , இன்றைய ஊடகங்களும்  ( தொ(ல்)லைக்காட்சி , பத்திரிகைகள் ,சினிமா  இன்னும் பல ) , வணிக நிறுவனங்களும் .


ஒரு அழகான ஆண் தெருவில் நடந்து போனால் ,சில  பெண்கள் அந்த ஆணைப் பார்க்கக் கூடும் . அதே நேரத்தில் ஒரு அழகான் பெண் தெருவில் நடந்து போனால் வயது வித்தியாசமின்றி இளம்வயது ஆண் முதல் முதிய ஆண் வரை அந்தப் பெண்ணை விரசமான பார்வையோடு பார்க்கிறார்கள் . பெண்ணின் உடலில் எந்த பாகம் உடையால் மூடப் படாமல் இருக்கிறதோ அங்கேயே ஏறக்குறைய எல்லா ஆண்களின் பார்வையும் போகிறது .  குடும்பங்களில் சொத்துக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் பெண்களுக்கு நேரடியான பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுகின்றன .பேருந்துகளில் பெண்களை உரச ஆண்களின் உடல்கள் துடிக்கின்றன .மோசமான  குடும்ப சூழ்நிலை காரணமாகவும் , குடும்பப் பொருளாதாரத்திற்காகவும் , தங்கள் வேலையக் காப்பாற்றிக் கொள்ளவும் , சுய கெளரவதிற்காகவும்  தாங்கள் படும் இன்னல்களை மறைக்கிறார்கள்  . ஒரு சிலர் காதல் என்ற பெயரைச் சொல்லி பெண்களை வல்லாங்கு செய்கிறார்கள் . பெண்களுக்கு எதிரான பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் , ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி மிரட்டி அவர்களை தங்கள் ஆசைக்கு தொடர்ந்து பணிய வைக்கின்றனர் வக்கிர புத்தி ஆண்கள் .

ஆண்கள் பெண்கள் சேர்ந்து வளர்வதை ஒரு குறிப்பட்ட வயதிற்குப் பிறகு நம் கலாசாரம் தடை செய்கிறது . அதே கலாசாரம் திருமணம் என்று வரும்போது ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரே அறைக்குள் தள்ளிவிட்டு நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழுங்கள்  என்று சொல்கிறது . பருவ வயதில் ஆணுக்கும் ,பெண்ணுக்கும் தங்கள் உடலில்  நடைபெறும் ஹார்மோன் சார்ந்த மாற்றங்கள் பற்றிய புரிதல் வேண்டும் . எதிர்பாலினத்தின் உடலில் நடைபெறும் மாற்றங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் . மொத்தத்தில் பாலியல் அறிவு குறைபாடு தான் பாலியல் சார்ந்த குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது .


 ஒரு ஆண், ஒரு பெண்ணை அடித்தால் அது மிகச் சாதாரணமாகப் பார்க்கப்படுகிறது . அதே நேரத்தில் ஒரு பெண் ,ஒரு ஆணை அடித்தால் அது அவமானமாகப் பார்க்கப்படுகிறது .படித்த ஆண்கள் முதல் படிக்காத ஆண்கள் வரை பெண்களை அடிகிறார்கள் .அதை நம் கலாசாரம் பெரிது படுத்துவதில்லை ."அடிக்கிற கை தான் அணைக்கும் "," கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்"  என்று சொல்லி ஆணின் மிருகத்தனத்திற்கு வக்காலத்து வாங்குகிறது ,நம் கலாசாரம் .சமத்துவத்தை பேண வேண்டிய இடமான கல்விக்கூடங்களும் ஆண்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் பிரிவினையையே உண்டாக்குகிறது . தன்னை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடத்தில் ஆண் ,தன் மிருகத்தனத்தைக் காட்டுகிறான் .ஆணாதிக்க சமூகம் இருக்கும் வரை உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறவே செய்யும் .பெண்ணைப் பற்றிய நம் எண்ணங்கள் மாற வேண்டும் . பெண்ணிற்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து சக மனுசியாக நடத்த வேண்டும் . ஆண் பெண் சமத்துவத்தைப் பேணும் கலாசாரமே சிறந்த கலாசாரம் .

பாலியல் சுதந்திரம் பற்றி பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது . இருவருக்கும் விருப்பம் இருந்தால் யார் யாரை வேண்டுமாலும் காதலிக்கலாம் .யார் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் . விருப்பம் இல்லையென்றால் யாரும் யாரையும் துன்புறுத்தக் கூடாது . இந்த நிலை உருவானாலே பாதிப் பிரச்னை தீர்ந்து விடும் .ஆண்கள் ,காதலிக்கவும் , காதலை பெண்ணிடம் சொல்லவும் , பெண்ணைப் பார்த்து படுக்கையைப் பகிர்ந்து கொள்ளலாமா என்று கேட்பதற்கும் சுதந்திரம் இங்கே இருக்கிறது . அதே சுதந்திரம் இங்கே பெண்ணுக்கு இல்லை . பெண் விடுதலை தான் சமூக விடுதலையின் தொடக்கமாக இருக்க முடியும் .

தமிழகத்தில் இயங்கும் பெரும்பான்மையான கல்விக்கூடங்களின் பெயர்கள் அனைத்தும் சாதியின் பெயரைத் தாங்கி இருக்கின்றன . இந்த நிலையில் இந்தக் கல்விக் கூடங்கள் சாதியை ஒழிக்கும் என்று நாம் எப்படி நம்புவது ? முதலில் சாதியின் பெயர்  எந்தக் கல்விக் கூடத்தின் பெயரிலும் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் . கலாசாரத்தின் பிடியிலும் ,மதத்தின் பிடியிலும் சமூகம் இருக்கும் வரை சாதியை ஒழிக்க முடியாது . சாதியின் பெயரால் தமிழனும் ,மொழியின் பெயரால் இந்தியனும் பிளவுபட்டு இருக்கிறான் . ஆதலால் நாம் , மனிதர்களை ஒன்றிணைப்போம் . மனிதம் வெல்லட்டும் !

பெண் விடுதலை , மதுவிலக்கு ,சாதி ,தீண்டாமை என்று பெரியார் முன்னெடுத்த அனைத்து பிரச்சனைகளும் இன்றும் அப்படியே உள்ளன .

பெண் விடுதலை ,பாலியல் விடுதலை மற்றும் கலாசார விடுதலையே சமூக விடுதலை !

மேலும் படிக்க :

எது கலாசாரம் - கி.ரா...!

சமத்துவத்தைப் பேணுமா கல்வி ?
...................................................................................................................................................

Wednesday, December 19, 2012

சிறகசைவில்...!


அத்தனையும்
அற்றுப்போன நிலையிலும்
துளிர்க்கிறேன்
உன் சிறகசைவில்
ஒவ்வொரு முறையும்...!


நன்றி :-   http://praying-mantis101.blogspot.in/

மேலும் படிக்க :

பிரியாத பிரியங்கள் ...!

 ஒற்றையடிப் பாதை ! 

கேணி வீடு !

..........................................................................................................................

Friday, December 14, 2012

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினாலும் ,அங்கேயே தங்கிவிட இயற்கை அனுமதிக்கவில்லை . மனித இனம் , தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பூமியின் பல்வேறு இடங்களுக்கும் இடம்  பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .பல்வேறு மாறுதல்கள் அடைந்த பிறகு நாடு என்ற அமைப்பு உருவானது . இன்றும் பல்வேறு விலங்குகள் தங்களுக்கென்று எல்லைகள் வகுத்துக் கொண்டு வாழ்கின்றன . தனது எல்லைக்குள் தன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு விலங்கை அனுபதிப்பதில்லை . அது போலவே மனிதனும் தனக்கென்று எல்லைகள் வகுத்துக்கொண்டு வாழ்கிறான் . வீடு ,வயல் ,பாதை ,ஊர் ,வட்டம் ,மாவட்டம் ,மாநிலம் ,நாடு என்று வெளிப்புறத்திலும் மொழி , ஜாதி ,மதம் ,இனம் ,மாநிலம் ,நாடு என்று உள்ளுக்குள்ளும் எல்லைகள் வகுத்துக்கொண்டு நிதமும் தன் சக இனத்திடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் .மனிதன் இன்னமும் விலங்கு தான் ; இனிமேலும் விலங்கு தான் .மனிதன் என்று ,எல்லாவற்றையும் கடந்து சக மனிதனை ,சக மனிதனாக நினைக்கிறானோ , தானும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்று உணர்கிறானோ, அன்று சொல்லிக் கொள்ளலாம் "தான் ஆறறிவு படைத்த விலங்கு" என்று .

ஒரு நாட்டின் வளம் ,செல்வம் என்பதெல்லாம் நீண்ட காலம் நீடிப்பதில்லை . அன்று செல்வ வளமுடன் இருந்த நாடு , இன்று ஏழை நாடு .அன்று மனிதர்களே இல்லாமல் இருந்த நிலப்பரப்பு இன்று வளர்ச்சியடைந்த நாடு . அன்று அனைத்து விலங்குகளாலும் அடித்து துரத்தப்பட்ட மனித இனம் , இன்று  மற்ற அனைத்து விலங்குகளையும் அடித்து துரத்துகிறது ; இயற்கையைக் கட்டுப்பாடில்லாமல் அழிக்கிறது . எல்லாம் ஒரு சுழற்சி தான் போல . வரலாற்றைப் புரட்டும்போது இந்தியா ,ஒரு காலத்தில் மிகவும் அதிகமான செல்வ வளங்கள் நிறைந்த நாடாக இருந்திருக்கிறது . இந்தியாவை அடைய பல நாடுகளில் இருந்து கடல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இந்தியாவை கண்டுபிக்கும் சாக்கில் கண்டறியப்பட்ட நிலப்பகுதிகள் அதிகம் . அப்படி வந்த மெக்காலே இங்கிலாந்தில் ஆற்றிய உரை சுவாரசியமானது .

1835 ம்  ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதியன்று பிரிட்டிஷ் பார்லிமென்டில் லார்டு மெக்காலே ஆற்றிய உரை இது :

"நான் இந்திய நாட்டை குறுக்கிலும் நெடுக்கிலுமாகச் சுற்றுப் பயணம் செய்து பார்த்துவிட்டேன் . எங்கும் ஒரு பிச்சைக்காரனையோ , திருடனையோ நான் காணவில்லை ! இந்திய நாடு ஏராளமான செல்வம் கொழிக்கும் ஒரு நாடு ! உயர்ந்த பண்பு நலன்கள் கொண்ட நாடு ! சிறந்த மனநலமும் குணநலமும் கொண்ட மக்கள் . இப்படி ஒரு நாட்டை நாம் வெற்றி கொள்ள முடியும் என்று நான் எண்ணவில்லை . அவ்வாறு நாம் இந்திய நாட்டை வெற்றி கொள்ள வேண்டுமானால் நாம் முதலில் அந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள ,காலம் காலமாக வளர்ந்து வந்த ஆன்மீகத்தையும் , பண்பாட்டையும் உடைத்து எறிய வேண்டும் . எனவேதான் இந்தியாவின் பழமை மிக்க கல்வி முறையையும் இயல்பான பண்பாட்டையும் நாம் மாற்றி விட வேண்டும் என்று யோசனை கூறுகிறேன் .

இந்தியர்கள் தங்களது நாட்டையும் , தங்கள் மொழியையும் விட இங்கிலாந்து நாடும் , ஆங்கில மொழியும் சிறந்தது என நினைக்கும்படி நாம் செய்துவிட்டால் அவர்கள் தங்கள் கெளரவத்தையும்  சொந்த கலாசாரம் , பண்பாடு முதலியவற்றையும் இழந்து விடுவார்கள் . பிறகு நாம் எப்படி நினைத்தோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள் . அடிமைகளாகி  விடுவார்கள் . இந்தியா ஓர் உண்மையான அடிமை நாடாகிவிடும் ."

விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் நாம் ஆங்கில மொழிக்குத் தான் அதிக மரியாதை கொடுக்கிறோம் . மக்களே கவனியுங்கள் , பிச்சைக்காரனோ ,திருடனோ கண்ணில் படவில்லையாம் . அப்படி வளம் மிகுந்த நாட்டை பல்வேறு படையெடுப்புகள் மூலம் கொள்ளையடித்துச் சென்றனர் . பிரிட்டிஷ்காரர்கள்  நிலையாக வியாபாரத் தளத்தை அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி இனி கொள்ளையடிப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தார்கள் . இந்தியாவின் வளம் குன்றாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக சுதந்திரம் கிடைத்திருக்காது . ஒரு நெடிய சுதந்திரப் போராட்டமும்  பல ஆயிரம் உயிர்களும் தேவைப்பட்டன அந்த சுதந்திரத்தைப் பெற . அப்படி வாங்கப்பட்ட சுதந்திரம் , சாதாரண இந்திய மக்களுக்கு பெரிய அளவில் எந்தப் பயனையும் தரவில்லை . சுரண்டலும் ,கொள்ளையடித்தலும் நிகழ்கிறது ,அன்று வெள்ளையர்களால் ,இன்று இந்தியர்களால் ,நாளை வெள்ளைக்காரர்களால் ?

இன்று இந்தியா தான் உலகின் மிகப்பெரிய சந்தை . எதைக் கண்ணில் காட்டினாலும் மறு பேச்சு இல்லாமல் வாங்கும் கூட்டம் அதிகமுள்ள நாடு இந்தியா . சாப்பாட்டை விட மற்ற விசயங்களுக்கு  அதிகம் செலவு செய்யும் மக்கள் நிரம்பிய நாடு . அதனால் , வணிக நிறுவனங்களின்  ஒரே நோக்கம் எப்படியாவது இந்தியாவில் கடை விரித்து லாபம் பார்ப்பது . அதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய பெரு முதலாளிகள் தயாராக உள்ளனர் . சின்ன உதாரணம் , வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைய மட்டும் 125 கோடி செலவு செய்துள்ளது . உள்ளே நுழையவே 125 கோடி என்றால் இந்தியாவின் சந்தை மதிப்பை கற்பனை செய்து கொள்ளுங்கள் . இந்தியாவை மறுபடியும் வெள்ளைக்காரர்கள்  உரிமையுடன் ஆளப் போகிறார்கள் .

இந்த விசயமெல்லாம் தெரியாத ஒரு மனுஷன், சமாதியில இருந்து எந்திருச்சு உட்கார்ந்து  கத்துறார் ,கத்துறார் .கேட்க நாதியே இல்லை .எல்லாப் பேரும்  கோடிகளில்  புரள்கிறார்கள் .அரசியவாதிகள் பணக் கோடிகளில் ,மக்கள் தெருக் கோடிகளில் . அதனால் அவர் கத்துவது யாருக்கும் கேட்கவில்லை . அவர் ஒன்றைத் தான் சதா புலம்பிக் கொண்டே இருக்கிறார்  .அது  "இப்படி ஒரு நிலை வரவா சுதந்திரம் பெற்றோம் . சுதந்திரம் பெறாமலே இருந்து இருக்கலாமே ! " என்பது தான் . அந்த வெவரம் கெட்ட மனுஷன் வேற யாரும் இல்ல நம்ம "காந்தி" தான் .

ரூபாய்க்கு மதிப்பு இருந்த வரை காந்திக்கும் மதிப்பு இருந்தது .ரூபாயின் மதிப்பு குறைந்து  கோடிகள் எல்லாம் சாதாரணம் என்றாகிவிட்ட நிலையில் இன்று காந்திக்கும் மதிப்பு இல்லை . காந்தியின் கொள்கைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன . காந்தி வளர்த்து  விட்ட " காங்கிரஸ் கட்சி " மட்டும் இன்று தேவைப்படுகிறது , ஊழல் மட்டும் செய்யவும் , கொள்ளையடிக்கவும் ,நாட்டை சகாய விலையில் விலை பேசவும் . இன்றைய  காங்கிரஸ் கட்சிக்கும் காந்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை . மக்கள் என்றால்  யார் ? அவர்கள் எப்படி இருப்பார்கள் ?என்று அறிவுப்பூர்வமான  கேள்விகள் கேட்கும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே இன்று காங்கிரஸ் கட்சியில்  இருக்கிறார்கள் . மக்களாட்சி என்பதற்கும் காங்கிரஸ் ஆட்சி என்பதற்கும் துளியும் தொடர்பில்லை . கிராமப்  பொருளாதரத்தை மேம்படுத்தாமல் வளர்ச்சியை கொண்டு வர முடியாது . வளர்ச்சி கீழிருந்து மேல் நோக்கியதாக இருக்க வேண்டும் .இந்தியாவில் வளர்ச்சி என்பது அந்தரத்தில் இருக்கிறது .

தேசிய ஒருமைப்பாடு என்பது மிகவும் மோசமடைந்து வருகிறது . தண்ணீர் ,மின்சாரம் ,இனம் ,பகுதி என்று பலவித பிரிவினைகள் . இந்தியன் எல்லா இடத்திலும் இந்தியனாக இல்லை . மின்சாரத்தைப் போல தண்ணீரையும் தேசியமயமாக்கினால் தான் என்ன ? எப்படியாவது பதவிக்கு வர வேண்டும் என்று நினைக்காமல் ,பல்வேறு பட்ட மக்கள் ,பல்வேறு கலாசாரங்களுடன் வாழும் இந்தியாவைப் பற்றி கொஞ்சமாவது அரசியல் கட்சிகள் நினைக்க வேண்டும் .இல்லையென்றால் இவர்கள்  பதவிக்கு வர எதுவும் இருக்காது .

ஆசையின் விளைவாக உலகில் நிகழும் மாற்றங்களை மெளனமாக பார்த்து ரசித்துச் சிரிக்கிறார் ,புத்தர் .

புத்தர் சிரிக்கிறார் !

பின் குறிப்பு :

உலகம் அழியுமா ? இப்போதைக்கு அழியாது . ஒரு காலத்தில் டைனோசர்கள் உலகை ஆண்டன .இன்று ,மனிதர்கள் ஆள்கிறார்கள் .நாளை ,வேறு ஏதாவது ஒரு விலங்கு உலகை ஆளலாம் . பூமி அழியவே அழியாதா .அழியும் ,சூரியன் என்று அழிகிறதோ அன்று பூமியும் அழிந்துவிடும் . மனிதர்கள் அழிந்தாலும் சூரியன் இருக்கும் வரை, பூமி உயிருடன் இருக்கும் என்று தான் தோன்றுகிறது .

நன்றி :- தினமணி ,  Wall Street journal.

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

" இந்தியா " - சர்வாதிகாரிகளின் தேசம் !

காங்கிரஸை அழிப்போம் !

.................................................................................................................................................



Wednesday, December 5, 2012

எது கலாசாரம் - கி.ரா...!

 கி.ராஜநாரயணன் ,வட்டார மொழி இலக்கியத்தின் முன்னோடி , தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் . ஊரூராக தேடியலைந்து நாட்டார் கதைககளை ஆவணப்படுத்தியவர் . நாட்டார் வழக்கில் இயல்பாகவே  இழையோடியிருந்த பாலியலையும் ,பாலியல் கதைகளையும் பதிவு செய்தவர் . தலைசிறந்த கதைசொல்லியான அவரது நேர்காணல் 14-11-12 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது . ஒரு சில வார்த்தைகளின் மூலம் மட்டுமே பெரிய கோட்டையையே தகர்க்கும் சக்தி உண்மையான படைப்பாளிகளுக்கு மட்டுமே வாய்க்கிறது . எந்தவித விழுமியங்களிலும் சிக்காமல் வாழ்க்கையை எளிமையாக அணுகுகிறார் ,கி .ரா . அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . கலாசாரம் குறித்து அவர் சொன்னதை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .


சமஸ் :-

" கட்டுக்கோப்பான கலாசாரத்திற்குப் பேர் போன இடைசெவல் மாதிரி ஒரு இந்தியக் கிராமம் ; உலகிலேயே முற்போக்கானதாகச் சொல்லப்படும் பிரெஞ்சு  கலாசாரச்  சூழல் நிலவும் பாண்டிச்சேரி மாதிரி ஒரு நகரம் .. இரண்டிலும் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் . எந்தக் கலாசாரம் உண்மையில் உன்னதமானதாக உங்களுக்குத் தெரிகிறது ?"

 கி.ரா :-

" பிரெஞ்சு கலாசாரம் தான் உன்னதமாத் தெரியுது . இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோசமா வாழனும் . அதுதான் நோக்கம் .சந்தோசமா எப்படி வாழறது ? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும் . எந்தக் கட்டுப்பாடும் இல்லாம , அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா,சந்தோசமா வாழனும் . அதுக்கு எந்தக் கலாசாரம் எடம் கொடுக்குது ? இந்தியக் கலாசாரம் எடம் கொடுக்கல .அட , விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே ? ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாசாரம் இருந்துச்சு . விருப்பம்போல வாழலாம் ; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம் .இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம் . புள்ளைங்களுக்கும்  தெரியும் . அம்மாதான் நம்மளோட அம்மா ,நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது . ஊருக்கும் தெரியும் . யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை .சந்தோஷமா இருந்தாங்க .ஆனா ,அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது . நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான் .கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடுச்சு அலையுறோம் ."

சமஸ் :-

"அப்படி என்றால் , ஒரு கலாசாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம் தான் அளவுகோலா ? "


கி.ரா :-

" ஆமா ,கலாசாரம்னு பேசுனா , மொதல்ல அங்கே இருந்து தானே தொடங்கணும் ? ஒழுக்கம் ,ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ ,அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும் . ஒவ்வொருத்தனும் மனுசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான் .வெளியே பேசுறது பதிவிரதத்தனம் .சென்னையிலேயே,ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா ? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு , குழாயை  உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா ? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு ? அட , பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது ? என்னடா , இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது .இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது , இல்லையா ?மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன் ."

சமஸ் :-

" இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா? "

கி.ரா.:-

" கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும் . எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும் . பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் . மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விசயமாக்கிட்டோம் . பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு , அந்த ஞாபகமாகவே அலையுது . நான் கேட்குறேன் ... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா , அது சிக்கலா, இல்லையா ? அது அவனோட சிக்கல் மட்டும்தானா .. சமுதாயத்தோட சிக்கலுமா ? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே ,அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன ? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி , கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க . ரெண்டு பசியுமே மோசமானது . ஆனா, இங்கே எல்லோருமே மேல் வயித்துப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம் . கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம் .  "


சமஸ் :-

" இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா ? "

கி.ரா :-

"     முதல் காதல் ... ஹா ... ஹா ... பசிக்குது . அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு .உடனே கிடைச்சுட்டா ,அதை ஒரு விசயமா நெனைப்போமா ? அப்படித்தான் இந்தக் காதலும் . கிடைச்சுட்டா , அந்த நேரச் சாப்பாடு . கிடைக்காட்டி , அதுக்குப் பேர் காதல் . கிடைக்கவே கிடைக்காட்டி , அது  அமரக் காதல் , காவியக் காதல் . ஒரு விஷயம் சொல்லலாம் . காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை .வந்துக்கிட்டே இருக்குறது . "


இந்த 90 வயதுக்காரரிடம் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது ...!

நன்றி - ஆனந்த விகடன் .


மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை !

உண்மையான கொண்டாட்டம் !

வாழ்க்கை ஒரு போராட்டம் !
.................................................................................................................................................

Tuesday, November 13, 2012

உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ...!

 நாம் முன்தீர்மானம் செய்யும் அனைத்தையும் தவிடுபொடியாக்கி அசுர வேகத்தில் சுழல்கிறது,காலம் . எதைப்பற்றியும் கவனம் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம் . மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்திலிருந்தே விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன . பண்டிகைகள் சமூக வாழ்வின் ஓர் அங்கம் . வேலை நிமித்தமாக பிரிந்து இருக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்க பண்டிகைகள் உதவுகின்றன . முன் எப்போதையும் விட தற்போது ,செய்யும்  வேலை காரணமாக மனிதர்கள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கிறார்கள் . அவர்களை ஒன்று சேர்க்க , ஒரு நாலாவது தங்களது இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட பண்டிகைகள் உதவுகின்றன .

 தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து தற்போது பலவிதமான கருத்துகள் உருவாகியுள்ளன . சுற்றுச்சூழல் சார்ந்து சிந்திக்க ஆரம்பித்திருப்பது மிகநல்ல விசயம் . ஆனால் ஒரே நாளில் நம் பட்டாசு கொளுத்துவதை நிறுத்திவிட முடியாது . பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள் .யாரும் விருப்பப்பட்டு வெடிமருந்துடன் கழியும் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்லவில்லை . உயிர் பிழைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்கின்றனர் . அவர்களுக்கு மாற்று வழி தேட வழி செய்துவிட்டு பட்டாசு கொளுத்துவதை நிறுத்த முயல வேண்டும் . உரிய பாதுகாப்பு இல்லாத பட்டாசு ஆலைகளை செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது .

பிளாஸ்டிக் போலத்தான் பட்டாசும் பல வருடங்கள் அதோ இதோ என்கிறார்கள் எதுவும் நடந்தபாடில்லை . முன்பைவிட பிளாஸ்டிக்கும் ,பட்டாசும் அதிகமாகத் தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள் . தற்போது கிராமங்களில் நடக்கும் குடும்ப விழாக்களில் கூட  பட்டாசுகள் பயன்படுத்தப்படுகின்றன . ஊடகங்கள் மூலம் மோசமான பழக்கங்களையே மக்களுக்குப் போதிக்கிறோம் . ஊடகங்கள் மூலம் நாம் நினைக்கும் அனைத்து மாற்றங்களையும் சமூகத்தில் கொண்டு வர முடியும் . அனைத்தும் வணிகமாகி விட்ட இன்றைய சூழலில் ஊடகங்கள் வருமானம் வராத எதையும் செய்யப்போவதில்லை . பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்துப் பேசும் நம்மில் எத்தனைபேர் கடைக்குப் பொருட்கள் வாங்க பை எடுத்துக்கொண்டு போகிறோம் . பட்டாசின் தீமைகள் குறித்துப்பேசும் எத்தனைபேர் பட்டாசு வெடிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை . யாராக இருந்தாலும் முடிந்தவரை பிளாஸ்டிக்கையும் ,பட்டாசையும் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் .முடியாதபோது குறைவாக பயன்படுத்தலாம் .

எப்படிப் பார்த்தாலும் பண்டிகைகள் நம் சமூக வாழ்வின் வரம் . பண்டிகைகள் காரணமாக விதவிதமான பொருட்கள் விற்பதன் மூலம் பயனடையும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் . பண்டிகைகளை தவிர்க்க வேண்டியதில்லை . காலத்துக்கேற்ற மாற்றத்தைச் சந்திக்காத எதுவும் நிலைப்பதில்லை . காலத்திற்கு ஏற்ற மாற்றத்துடன் பண்டிகைகளைக் கூடிக் கொண்டாடுவோம் .

தீபாவளி குறித்து எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன . A.M.ராஜாவின் இசையமைப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கல்யாண பரிசு " திரைப்படத்தில் இடம்பெற்ற "உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட.." பாடல் தீபாவளிப் பாடல்களில் ஒன்று . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலிது . இப்படாலை P .சுசீலா பாடியுள்ளார் .

அந்தப்பாடல் :


பாடல்வரிகள் :

உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா _ ஆ… உறவாடும் நேரமடா

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீவாடா -கன்ன
எண்ணத்தில் உனக்காக இடம்நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?
வல்லமை சேர நல்லவ னாக
வளர்ந்தாலே போதுமடா… வளர்ந்தாலே போதுமடா

சித்திரைப் பூப்போல சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு!
முத்திரைப் பசும்பொன்னே ஏனிந்தச் சிரிப்பு?
முகமோ? மலரோ? இது என்ன ரசிப்பு!
மின்னொளி வீசும் உன்எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா? _  வேறென்ன வேணுமடா? (உன்னை…

 எனக்குப்பிடித்த இன்னொரு தீபாவளிப் பாடல் " வா வா வசந்தமே ... " . 1982 ஆம் ஆண்டு வெளிவந்த புதுக்கவிதை திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது . மலேசியா வாசுதேவன் இப்பாடலை அற்புதமாகப் பாடியிருப்பார் .


மேலும் படிக்க :

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

பட்டுவண்ண ரோசாவாம் ...!
 
...........................................................................................................................

Sunday, October 21, 2012

பட்டுவண்ண ரோசாவாம் ...!

தமிழ் திரையிசையின் மாபெரும் ஆளுமைகளான எஸ்.ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்களில் தனித்தனியாக ஒலித்த சிறந்த பாடலிது . 1978 ஆம் ஆண்டு சங்கர் கணேஷின் சிறப்பான இசையமைப்பில் வெளிவந்த " கன்னிப்பருவத்திலே " படத்தில் இப்பாடல் இடம் பெற்றது . வேறு ஏதாவது படத்தில் இப்படி ஒரே பாடலை இவர்கள் இருவரும் தனித்தனியே பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை . எஸ்.ஜானகியும் ,மலேசியா வாசுதேவனும் எவ்வளவு அற்புதமான உயிரோட்டமான பாடகர்கள் என்பதை அறிய இந்த ஒரு பாடலே போதும் . இந்தக்குரல்கள் நம்முள் ஏற்படுத்தும் உணர்வுகள் அலாதியானது ;நம்மை மெய்மறக்கச் செய்வது . புலமைப்பித்தனின் பாடல் வரிகள் பாடலை மேலும் அழகாக்குகின்றன . மனைவி கணவன் மீதும் ,கணவன் மனைவி மீதும் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த எழிலான பாடல் . இந்தப்பாடலில் நடிகை வடிவுக்கரசி வெளிப்படுத்தும்  முகபாவங்கள் அவ்வளவு அருமை . தமிழ் சினிமா இவரது நடிப்பை அதிகம் பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது .

அழிவற்ற குரல்கள் ....

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

ஆக்காட்டி ஆக்காட்டி !

ஜோடிப் பாடலும் பிரிவுப் பாடலும் !

....................................................................................................................................................

Saturday, October 20, 2012

இந்தியா - மேட் இன் சீனா !

என்னா சார் , என்னா மேடம் எப்படி இருக்கீங்க ? வாழ்க்கை எப்படி போவுது ? எப்படி போனா என்ன வாழனும் அதானே முக்கியம் . வாழ்க்கை ஒரு முறை தான் ;அதை நம் விருப்பப்படி வாழ வேண்டும் ,அவ்வளவு தான் .ஒரு முறை உங்களைச் சுற்றிப் பாருங்கள் . விதவிதமான பொருட்கள் நம் அறையை நிறைத்திருக்கும் .ஒரு சில பொருட்களை தினமும் பயன்படுத்துவோம் .ஒரு சிலவற்றை எப்பவாவது பயன்படுத்துவோம் . ஒரு சிலவற்றை சுவருக்கு வர்ணம் பூசும் மட்டும் எடுப்போம் .பிறகு மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுவோம் .நாளுக்கு நாள் நாம் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் போகிறது .  
 
பொருள் சார்ந்த வாழ்வை வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் . நாம் சம்பாதிக்கும் பணத்தில் அதிகளவு பணத்தை விதவிதமான பொருட்கள் வாங்கவே பயன்படுத்துகிறோம் . இவ்வளவு பொருட்கள் நம் வீட்டை அடைத்த பிறகும் நமக்கு திருப்தி என்பதே இல்லை . இது நம் குறையல்ல ,நம்மைச் சுற்றி கவனமாக சிக்கலாக வெளியே வரமுடியாதவாறு வலை பின்னப்படுகிறது . உலகத்தின் மாபெரும் ஏமாளிகள்  நாம் தான் . உலகத்தில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளும் இந்தியச் சந்தையை மையமாக வைத்தே தாரிக்கப்படுகிறது .  தொலைக்காட்சி வந்த பிறகு தான் நாம் பயன்படுத்தி வந்த பொருட்களின் எண்ணிக்கை  பல மடங்கு உயர்ந்து விட்டது . அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மட்டுமே மனிதர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டார்கள் .

பொருட்கள் அதிகமாக அதிகமாக நம் நிம்மதி குறைகிறது .  " கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் ,கண்ணில் தூக்கம் சொக்குமே அது அந்தக் காலமே ,மெத்தை விரித்தேன் ,சுத்தப் பன்னீர் தெளித்தும் ,கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலமே "அண்ணாமலை திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய வரிகள் இவை . பொருட்கள் கூட கூட நாம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது . உணவிற்காக உழைப்பதை விட மண் ,பொன் போன்ற பொருட்களுக்காகத்தான் அதிகம் உழைக்கிறோம் . எவ்வளவு கிடைத்தாலும் நம் மனம்  அமைதி அடைவதேயில்லை .

இருபதாம் நூற்றாண்டில் அதிகளவில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன . அதற்கு முன்பு வரை நாம் இவ்வளவு பொருட்களைப் பயன்படுத்தவில்லை . கண்டுபிடிப்புகளை முன்வைத்து நிறைய தொழிற்சாலைகள் உருவாகின . கோடிக்கணக்கான பொருட்கள் சந்தைகளில் குவிக்கப்பட்டன . உள்நாட்டு தேவை போக மீதம் வெளிநாட்டு சந்தைகளில் விற்கப்பட்டன . இன்று, மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா ,சீனா போன்ற நாடுகள் தான் உலகின் மிகப்பெரிய சந்தையாக உள்ளன . சீனாவில் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன . தரமில்லாத  மலிவான பொருட்கள் தான் அங்கு  அதிகம்  தயாராகின்றன . சீனத் தயாரிப்புகளோடு வேறு எந்த நாடும் போட்டிபோட முடியாது .

" Made in China " இந்த வார்த்தை சமீப காலமாக மிக அதிகளவில் கண்ணில் படுகிறது . மிகச் சாதாரண 5 ரூபாய் ,10 ரூபாய்  விற்கக்கூடிய பொருட்கள் முதல் விலை உயர்ந்த iphone னின் உதிரி பாகங்கள் வரை அங்கு தயாரிக்கப்படுகின்றன . விளையாட்டு பொம்மைகள் மிக அதிகளவில் தயாராகின்றன . தரம் குறைவான நெகிழியைப் (பிளாஸ்டிக்கைப் ) பயன்படுத்தியே அதிகளவில் பொருட்கள் செய்யப்படுகின்றன . நாம்  என்று அதிகமான பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்தோமோ  அன்று முதல்  நம் தெருக்களில் குப்பைகள் அதிகம் சேரத் தொடங்கின . சீனத் தயாரிப்புகள் மிகக்குறைந்த காலகட்டத்தில் குப்பையாகி விடுகின்றன . இப்போதெல்லாம்  Made in China என்ற வார்த்தையைப்  பார்த்தாலே குப்பை தான் நினைவிற்கு வருகிறது .

விதவிதமான சிறுவர் விளையாட்டுப்  பொம்மைகள் மற்றும் பொருட்கள் , மின்னணுப் பொருட்கள் , தொழிற்சாலை உபகரணங்கள் ,பரிசுப்  பொருட்கள் ,விளையாட்டு உபகரணங்கள்,கடிகாரங்கள் ,நகவெட்டிகள் , சார்ச் லைட்கள் ,LED  பல்ப்கள் , செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் ,கணினி சாதனங்கள் ,ஜெல்லி மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் ,மிகச் சின்னது முதல் மிகப்பெரியது வரை  நெகிழியால் செய்யப்பட விதவிதமான வீட்டு உபயோகப் பொருட்கள் என்று இன்று நம் நாட்டின் சிறு அங்காடிகள் முதல் பெரிய அளவிலான பல்பொருள்  அங்காடிகள் வரை சீனத் தயாரிப்புகள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன . சீனத் தயாரிப்புகள் அதிகம் வெற்றிபெற இரண்டு காரணங்கள் .ஒன்று ,நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன .இரண்டு , விற்பவருக்கு மற்ற பொருட்களைக் காட்டிலும் அதிக லாபம் கிடைக்கிறது . MRP அச்சிடாத சீனத் தயாரிப்புகளை தங்கள் விருப்பம் போல் விற்பனை செய்கிறார்கள் ,விற்பனையாளர்கள் .

ISI ,AGMARK  என்பதெல்லாம் பள்ளியில் படிக்க மட்டுமே பயன்படுகின்றன . நடைமுறையில் நாம் பொருட்கள் வாங்கும் பொது இவற்றையெல்லாம் கவனிப்பதில்லை . மிக அதிக விலையுள்ள பொருட்கள் வாங்கும் போது மட்டுமே நாம் தரம் குறித்து கவனிக்கிறோம் .மற்ற நேரங்களில் எதையும் கவனிக்காமல் பொருட்கள் வாங்கி விடுகிறோம் . சீனத் தயாரிப்புகளுக்கு கடிவாளம் போடா விட்டால் இந்தியாவில் இந்தியப் பொருட்களை விற்க முடியாத சூழ்நிலை உண்டாகும் .இல்லையென்றால் " இந்தியா "என்னும் பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்ற நிலை உருவாகிவிடும் . தரமில்லாத சீனப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் . சிறுவர் விளையாட்டுப் பொருட்களில் இந்தியத் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் . ஒரு சிறிய நகவெட்டியைக் கூடவா இவ்வளவு பொறியாளர்கள் உள்ள தேசத்தில் இன்னும் தயாரிக்க முடியவில்லை .

இயற்கை பொருட்களைத் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களும் சுற்றுச்சூழலை மிகக் கடுமையாக பாதிக்கின்றன . பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள் , பொருட்கள் உரிய இடத்திற்கு செல்ல தேவைப்படும் போக்குவரத்து எரிபொருள் கழிவு ,நாம் பயன்படுத்திய பிறகு தூக்கி எரிவதால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு என்று பொருட்கள் அதிகமாக ,அதிகமாக இயற்கை அழிகிறது .சீனத் தயாரிப்புகளில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது .அவை  சூழலுக்கு கடும் பாதிப்பை உண்டாக்குகின்றன . இன்றைய சூழலில் இயற்கையை பாதிக்காமல் எந்தப் பொருளும் சந்தைக்கு வருவதில்லை . ஒரு சிறு இரும்புத் துண்டு தயாரிக்க எவ்வளவு மண் தோண்டப்படும் ? நாம் உணர்வதே இல்லை . எப்படிப் பார்த்தாலும் விதவிதமான பொருட்களின் அதிகரிப்பு நம் சூழலுக்கு எதிரி தான் .

பொதுவாக நாம் ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் . நாம் இருக்கும் இடங்களில்  என்னென்ன பொருட்கள் கிடைக்கிறதோ அதை வைத்து வாழப் பழகிவிட்டால் இயற்கையை ஓரளவு காப்பாற்றலாம் . அதற்கு நாம் செய்ய வேண்டியது  .அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே புதிய பொருட்களை வாங்க வேண்டும் . முடித்தவரை உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கலாம் . நாம்  இருக்கும்  பகுதில் விளைந்த உணவுப்பொருட்களை வாங்கி உண்பதன் மூலம் நம் உடல் நலத்தையும் பேணலாம் .

விதவிதமான பொருட்களோ , விலை உயர்ந்த பொருட்களோ , நம் சூழலுக்குப் பொருந்தாத  வெளிநாட்டு உணவுகளோ நமக்கு நிலையான அமைதியையோ ,மகிழ்ச்சியையோ தராது . ஒரு நாள் வேண்டுமானால் நீங்கள் மகிழலாம் . மற்ற எதுவும்  அவற்றால் நமக்குக் கிடைக்காது . இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ முயல வேண்டும் . நம்முடன் மற்றவர்களை  ஒப்பிடுவதை நிறுத்தினாலே நாம் பல பொருட்கள் வாங்க மாட்டோம் . ஆடம்பரத்தினால் கிடைக்கும் மற்றவர்களின் அங்கீகாரம் நமக்குத் தேவையில்லை .

முன்பு ஒரு முறை புகழ் பெற்ற வெளிநாட்டு ஞானி ஒருவர் வாரம் ஒருமுறை அங்காடிகளுக்குச்  சென்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான பொருட்களை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வருவாராம் . அங்காடி ஊழியர் அவரிடம் ," நீங்கள் தான் எந்தப் பொருளையும் வாங்குவதில்லையே ,அப்புறம் ஏன் அவ்வபோது அங்காடிக்கு  வந்து போகிறீர்கள் " என்று கேட்டார் .அதற்கு அந்த ஞானி " எனக்குத் தேவையில்லாத பொருட்கள் எவ்வளவு இந்த உலகத்தில் இருக்கின்றன "என்று பார்வையிடவே வந்ததாக கூறினார் . நமக்குத் தேவையில்லாத பொருட்கள் தான் உலகில் அதிகம் இருக்கின்றன . அதிகமாக தேவைப்படும் அன்பு குறைவாகவே இருக்கிறது . ஆனால் ,அந்த அன்பிற்கு இருக்கும் சக்தி மிகப்பெரியது .

பொருட்களை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என்ன செய்வார்கள் ? என்று கவலைப் பட வேண்டாம் . அவர்களுக்காக இந்தியாவின் மிச்சமிருக்கும் விவசாயநிலங்கள் காத்திருக்கின்றன ...



மேலும் படிக்க :

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

" இந்தியா " - சர்வாதிகாரிகளின் தேசம் !
..................................................................................................................................................

Monday, September 24, 2012

" இந்தியா " - சர்வாதிகாரிகளின் தேசம் !

எத்தனையோ விதமான சர்வாதிகாரிகள் வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது . உலகில் இருந்து இன்னும் சர்வாதிகாரிகள் முற்றிலும் அழிந்துவிடவில்லை . காலத்துக்கேற்ற மாற்றம் பெற்று முன்னை விட வலுவாகவே வாழ்ந்து வருகிறார்கள் . உலகமயமாக்கம் சர்வாதிகாரத்திற்கு துணை போகிறது .இன்று சர்வாதிகாரிகளுக்குத்தான் மரியாதை . அரசாங்கத்தை விலைக்கு வாங்கி தான் நினைத்ததையெல்லாம் நடத்திக் காட்டுகிறார்கள் ,நவீன சர்வாதிகாரிகள் .

நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தடுத்த உறுப்பினர் முதல் அரசாங்க அதிகாரிகள் ,ஆட்சியாளர்கள் வரை எல்லோரும் சர்வாதிகாரிகளாகத்தான் செயல்படுகிறார்கள் . யாரைப் பற்றியும் எந்தவிதக் கவலையும் இல்லாமல் ,தன் சுயநலத்திற்காக தான் நினைத்ததை செய்து காட்டும் குணமுடைய அனைவரும் சர்வாதிகாரிகள் தான் .நம் குடும்ப உறுப்பினராக இருக்கலாம் ,முதல்வராக இருக்கலாம் ,பதவியில் இருக்கும் பொம்மைகளாகக்கூட இருக்கலாம் , அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்து சர்வாதிகாரத்தின் பாதிப்பு இருக்கும் . முதல்வரோ ,பிரதமரோ ,பிரதமர் போல செயல்படும் பொம்மையோ சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டால் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் .

சமீபத்தில் இந்தியாவில் நடந்து வரும் நிகழ்வுகள் ,விதவிதமான ஊழல்கள் பற்றி நம்மவர்கள் கொடுக்கும் பேட்டியின் மூலம் அவர்களது சர்வாதிகாரம் வெளிப்படுவதை வெளிப்படையாகக் காணலாம் .மக்களாட்சித் தத்துவம் மறைந்தே விட்டது . புதிய தத்துவம் தான் இன்று ஆட்சியாளர்களால் கடைபிடிக்கப்படுகிறது .அது ," பணக்காரர்களுக்காக பணக்காரார்களால் நடத்தப்படும் பணக்காரர்களின் அரசு " என்பதாகும் . ஒரு ஊழலை மறைக்க இன்னொரு ஊழல் ,அதை மறைக்க மக்கள் மீது பொருளாதார அடி .காந்தி தேசம் என்று சொல்லிக்கொள்ளும் நாட்டில் காந்திய வழிப் போராட்டத்திற்கு எந்தவித மதிப்பும் ,கவனமும் ஆளும் அரசுகளால் கொடுக்கப் படுவதில்லை .

மக்களின் போராட்டம் அனைத்து இடங்களிலும் முடக்கப்படுகிறது ,ஊடகங்களால்  மறைக்கப்படுகிறது .பணக்காரர்களுக்கு வேண்டிய அனைத்தும் தாராளமாகச் செய்யப்படுகிறது .அவர்களுக்கு இயற்கை வளங்கள் தாரைவார்க்கப்படுகிறது .அவர்களுக்காக பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது .காரணம் ,நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களும் அவர்களின் பகாசுர நிறுவனங்களும் தேவையாம் . கிராமத்தில் 28 ரூபாயும் ,நகரத்தில் 32 ரூபாயும் சம்பாதிப்பவர்கள் தேவையில்லை . அவர்களுக்கு கடனும் கிடைக்காது .மக்களின் நிலை பற்றி துளியும் கவலைகொள்ளாத ஆட்சியாளர்களை நம் காலத்தின் அவலம் . " மக்கள் தொடர்ந்து ஊழல்களை சகிப்பார்கள் " என்று அரசியல்வாதிகள் நம்பினால் இழப்பு அவர்களுக்குத்தான் . இந்நிலை தொடர்ந்தால் லிபியா ,எகிப்து ,துனிசியா ,ஏமன் போல இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் சூழல் உருவாகும் . அப்படி ஒரு நிலை வராமல் தடுக்க வேண்டியது இன்றைய ஆட்சியாளர்களின் கடமை .

பணக்காரர்களிடம் பணத்தை வாங்கி தேர்தலின் போது மட்டும் மக்களுக்கு கொடுத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எல்லா ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள் . மக்களை ரொம்ப நாட்களுக்கு ஏமாற்ற முடியாது . ஆட்சியாளர்களின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் . சிறு நெருப்பு அவர்களை உசுப்பேத்திவிடும் . மக்களின் அறவழிப் போராட்டம் தொடர்ந்து ஒடுக்கப்படுமானால் நிச்சயம் ஒரு நாள் புரட்சி வெடிக்கும் .

எல்லோருக்கும் ஒரு உயிர் ,ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது .பூமி எல்லோருக்கும் சொந்தம் !  



மேலும் படிக்க :

 சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 

...................................................................................................................................................
    

Saturday, September 8, 2012

பனை மரத்தில் முளைத்த ஆலமரம் !


Saturday, September 1, 2012

ஜோடிப் பாடலும் பிரிவுப் பாடலும் !

தினமும் எவ்வளவோ பாடல்களைப் பார்க்கிறோம் அல்லது கேட்கிறோம் . எந்தப் பாடலும்  பார்க்காமலோ அல்லது கேட்காமலோக் கூட இருக்கலாம் . ஆனால் ,பிடித்த பாடல் என்பது எல்லோருக்கும் இருக்கும் . இதுவரை எத்தனையோ பாடல்கள் கேட்டாலும் ,பிடித்த ஜோடிப் பாடல் என்றவுடன் என் காதுக்குள் கேட்கும் பாடலாக இருப்பது "வசந்த மாளிகை" திரைப்படத்தில் இடம்பெற்ற "மயக்கமென்ன இந்த மெளனம் என்ன ..." என்ற பாடல் .1973 ஆண்டு வெளிவந்த இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் K .V .மகாதேவன் . இந்தப் பாடலில் இடம்பெற்ற கவிரசம் ததும்பும் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் . இந்தப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதினார் .

அந்தப் பாடல் :


தேர்  போலே  ஒரு  பொன்  ஊஞ்சல்
அதில்  தேவதை  போலே  நீ  ஆட

பூவாடை  வரும்  மேனியிலே
உன்  புன்னகை  இதழ்கள்  விளையாட

கார்காலம்  என  விரிந்த  கூந்தல்
கன்னத்தின்  மீதே  கோலமிட

கை  வளையும்  மை  விழியும்
கட்டியணைத்து  கவி  பாட

அன்னத்தைத்  தொட்ட  கைகளினால்
மதுக்  கிண்ணத்தை  இனி  நான்  தொட  மாட்டேன்

கன்னத்தில்  இருக்கும்  கிண்ணத்தை  எடுத்து
மதுவருந்தாமல்  விட  மாட்டேன்

உன்னையல்லால்  ஒரு  பெண்ணை  இனி  நான்
உள்ளத்தினாலும்  தொட  மாட்டேன்  -

உன்  உள்ளம்  இருப்பது  என்னிடமே
அதை   உயிர்  போனாலும்  தர  மாட்டேன்

என்னே அற்புதமான வரிகள் ! கண்ணதாசன் கண்ணதாசன் தான் !

காதலில் ஒரு நிமிடப் பிரிவைக்கூட தாங்கி கொள்ளமுடியாதுனு சொல்றாங்க  . அந்தப் பிரிவின் வழியை அழுத்தமாக பதிவு செய்த பாடலாக இருப்பது "படகோட்டி " படத்தில் இடம்பெற்ற " பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ ..." என்ற பாடல் . கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட சிறந்த பாடலிது . 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படத்திற்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் . 

அந்தப் பாடல் :


பாட்டுக்குப்  பாட்டெடுத்து  - நான் 
பாடுவதைக்  கேட்டாயோ 
துள்ளி  வரும்  வெள்ளலையே  - நீ  போய்த் 
தூது  சொல்ல  மாட்டாயோ 

கொத்தும்  கிளி  இங்கிருக்க  கோவைப்பழம்  அங்கிருக்க 
தத்தி  வரும்  வெள்ளலையே  நீபோய்  தூது  சொல்ல  மாட்டாயோ

ஆசைக்கு  ஆசை  வச்சேன்  நான்  அப்புறந்தான்  காதலிச்சேன் 
ஓசையிடும்  பூங்காற்றே  நீதான்  ஓடிப்போய்  சொல்லிவிடு 

நெஞ்சு  மட்டும்  அங்கிருக்க  நான்  மட்டும்  இங்கிருக்க 
நான்  மட்டும்  இங்கிருக்க ...நான்  மட்டும்  இங்கிருக்க 

தாமரை  அவளிருக்க   இங்கே  சூரியன்  நானிருக்க 
சாட்சி  சொன்ன சந்திரனே  நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ 


வாலியின் சிறந்த வரிகள் . இந்தப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் வாலியே எழுதினார் . வாலிக்கு நல்ல பேரைப் பெற்றுத்தந்த படமிது . அதிலும் தரைமேல் பிறக்கவைத்தான் பாடல் , மீனவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்தது .

ஜோடிப்பாடல்,பிரிவுப் பாடல் இரண்டையும் பாடியவர்கள் T.M.செளந்தர்ராஜன் மற்றும் P .சுசீலா .T.M.செளந்தர்ராஜன் அவர்களின் மாறுபட்ட பாடும் திறமைக்கு இந்தப் பாடல்களும் சிறு உதாரணங்கள் .இந்தப் பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது . ஆனால் , எனக்குப் பிடிக்கும் .

மேலும் பார்க்க :

உலகத்தின் தூக்கம் கலையாதோ ?  

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே !  

...................................................................................................................................................

Tuesday, August 21, 2012

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

நாடோடிகளாக அலைந்து திரிந்த மனித இனம் ஒரே இடத்தில் தங்கி நாகரிக வாழ்க்கை வாழ வழிவகுத்த முதன்மைத் தொழில் தான் "விவசாயம் " . விவசாயத்தின் இன்றைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது .விவசாயம் இவ்வளவு மோசமான நிலையை அடைந்த பிறகும் எந்தவிதமான ஆதரவும் இல்லாமல் நிர்கதியாய் நிற்கிறான் விவசாயி . தொழில்துறைக்கும் ,சேவைத்துறைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் விவசாயத்திற்கு கொடுக்கப்படவில்லை .விளைவு ,விவசாய நிலம் சுருங்கி விட்டது ; விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது ;விலைவாசி உயர்ந்துவிட்டது .
அரசு , தொழில்துறை வளர்ச்சிக்கும் , சேவைத்துறை வளர்ச்சிக்கும் கொடுக்கும் சலுகைகளால் நேரடியாக வருமானத்தைப் பெறுகிறது . ஆனால் ,விவசாயத்திற்கு  கொடுக்கும் சலுகைகளால் அரசிற்கு நேரடியாக வருமானம் கிடைப்பதில்லை . அதனால் விவசாயம் ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது .வளர்ச்சியின் பெயரால் விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன .விவசாயம் செய்யத் தெரிந்த மனிதர்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது . விவசாயம் செய்ய ஏறக்குறைய 60 கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் (உழுதல் ,விதைத்தல் ,நீர் பாய்ச்சுதல் ,களை பறித்தல் ,அறுவடை செய்தல்......) தெரிந்திருக்க வேண்டும் . பரம்பரை பரம்பரையாக சொல்லிக்கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் இன்று பாதி தான் மிச்சம் இருக்கிறது . அதையும் கற்றுக்கொள்ள இன்று ஆட்கள் இல்லை .

விதை இழப்பு அடுத்த காரணம் . தலைமுறை தலைமுறையாக தங்கள் உயிரை விட மேலானதாக பாதுகாத்து வைக்கப்பட்ட பல்வேறு விதமான விதை வகைகளை இழந்துவிட்டோம் . நெல்லில் மட்டும் நூற்றுக்கணக்கான நெல் ரகங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது . இன்று அவற்றில் பத்து ரகங்கள் இருந்தாலே ஆச்சரியம் தான் . நெல்லில் மட்டும் இவ்வளவு இழப்பு மற்ற தானியங்கள் புழக்கத்தில் இல்லாத அளவிற்கு மறைந்து விட்டன . இன்று விவசாயம் செய்ய வேண்டுமானால் விதையை அங்காடியில் தான் வாங்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது . பசுமைப் புரட்சியின் விளைவு இது .

பாரம்பரிய தானிய வகைகள் அழிந்து போக பசுமைப்புரட்சி தான் முக்கிய காரணம் . மரபு விதைகளை அழித்தது, மகசூல் அதிகரிக்கச் செய்தல் என்ற பெயரில் மீண்டும் முளைக்காத கலப்பின விதைகளை அறிமுகப்படுத்தி மண்ணின் வளத்தைக் கெடுத்தது , விதவிதமான பூச்சி மருந்துகள் மூலம் மண்ணை நஞ்சாக்கியது ,பயிர்களுக்கும் ,மனிதர்களுக்கும் விதவிதமான நோய்களை உருவாக்கியது ,சுயசார்பு  வேளாண்மையை அழித்தது , விவசாயத்தை வணிகம் சார்ந்ததாக மாற்றியது  இவைதான் பசுமைப் புரட்சியின் சாதனை என்பது .  அன்றைய சூழலைச் சமாளிக்க உதவிய பசுமைப்புரட்சி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது .

தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்தவர்களின் இன்றைய தலைமுறை விவசாயம் செய்யவில்லை ;வேறு வேலைகளைத் தேடிக்கொண்டு நகர்புறங்களுக்குச் சென்று விட்டனர் . விவசாயம் செய்வது என்பது சமூகத்தில் மிகவும் மதிப்புக் குறைந்த தொழிலாக மாறிவிட்டது .தங்கள் குழந்தை  எதிர்காலத்தில் ஒரு விவசாயியாக வர வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை . ஏன் ஒரு விவசாயியே தன் குழந்தை விவசாயம் செய்வதை விரும்பவில்லை .காரணம் , விவசாயத்தைப் பாதித்துள்ள பல்வேறு விதமான காரணிகள் .

விவசாயம் தொடர்ந்து செய்வதால் ஏற்படும் வருவாய் இழப்பு .தொடர்ந்து விவசாயம் செய்ய தடையாக இருக்கிறது . கடந்த வாரம் ஒரு விவசாயி சொன்னார், " கடந்த வருடம் மட்டும் 3 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது . விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை .ஆட்கள் கிடைத்தாலும் 150 ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் வேலையாவதில்லை ,அதனால் இந்த வருடம் எதுவும் பெருசா பண்ணல .இருக்கும் இடங்களில் தென்னை மற்றும் நெல்லி மரங்களை நட்டுவிட்டேன் .விவசாயத்தை விட மனசில்லை ஆனாலும் என்ன செய்ய ,மகன்கள் வெளியூரில் தங்கிவிட்டனர்,பாடுபட ஆள் இல்லை  " .இன்றைய நிலை இது தான் .

காலநிலை மாற்றங்களால் சரியான நேரத்தில் மழை பெய்வதில்லை . உதாரணமாக  ஆடி மாதத்தில் மழை பெய்யும் ,எதாவது விதைக்கலாம் என்று காத்து இருந்த வானம் பார்த்த பூமிக்காரர்கள் ,மழை பெய்யாததால் ஏமாந்து போயினர் . மிதமிஞ்சிய வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது .பயிர் அறுவடை நேரத்தில் பெய்யும் மழை விவசாயியை கடனாளியாக்குகிறது . கிணற்றில் நீர் அதிகம் உள்ள நிலங்களில் விவசாயம் பார்க்க ஆட்கள் இல்லை . மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் விளைவாக விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை .

விவசாயத்தில் மட்டுமல்லாமல் ,எந்த வேலையிலும் உடலுழைப்பு சார்ந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை . எல்லோரும் வியர்வை சிந்தாமல் சொகுசாக வாழ விரும்புகிறோம் . அதானால் தான் இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வட இந்தியர்கள் ,உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் மிகவும் குறைவான சம்பளத்திற்கு அமர்த்தப்படுகின்றனர் .நாம் அதிக உடலுழைப்பு இல்லாமல் அதிகமாக உண்டு மருத்துவமனைகளின் தயவில் உயிர் வாழ்கிறோம் .

நகரமயமாக்கலின் விளைவாக விளைநிலங்கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றன . அதிக பணத்தின் மூலம் விவசாய நிலங்கள் விலைபேசப்பட்டு வாங்கப்படுகின்றன . அவை பிளாட் போட்டு கூவி கூவி விற்கப்படுகின்றன .விவசாய நிலமாக இருந்ததில் தான்  இன்று புதிதாக கல்வி நிலையங்கள் , தொழிற்சாலைகள் ,வீடுகள் கட்டப்படுகின்றன . எந்தவிதமான புதிய கட்டுமானமும் சுற்றுச்சூழலை பெருமளவில் பாதிக்கிறது . மணல் ஆற்றை நாசப்படுத்தி எடுக்கப்படுகிறது . கற்கள்,ஜல்லிகள் பாறையை அல்லது மலையை உடைத்து எடுக்கப்படுகின்றன .செங்கல் உருவாக்க செம்மண் விவசாய நிலத்திலிருந்து எடுக்கப்படுகிறது ;செங்கலைச் சூடு பண்ண நிறைய மரங்கள் வெட்டி எரிக்கப்படுகின்றன .

கட்டுமானத்திற்கு தேவையான தண்ணீர் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவத்தின் மூலமாக பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது .
தமிழகத்தின் எந்தப்பகுதியிலும் எப்போது வேண்டுமானாலும் இனி நிலநடுக்கம் வரலாம் ;தயாராக இருங்கள்.எந்தப்புதிய கட்டுமானமும் சுற்றுச்சூழலை நேரடியாகவும் ,விவசாயத்தை மறைமுகமாகவும் பாதிக்கிறது .அதனால் ,புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட நினைக்காத அனைவரும் பூவுலகின் நண்பர்கள் தான் . நம்ம சம்பாதிக்கிற பணத்தை வச்சு நிலத்தை பார்க்கத்தான் முடியும் ,வாங்க முடியாதுனு நினைக்கிறீங்களா ,சரி விடுங்க அதுவும் நல்லதுக்குத்தான் . நாமெல்லாம் பூவுலகின் நண்பர்கள் .

விவசாயம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் ,விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை . விவசாயப் பொருட்களுக்கு நிலையான விலை கிடைத்திருந்தால் விவசாயம் இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்து இருக்காது . விவசாயிக்கு பொருளை விற்பதற்கு பெரிய சந்தை கிடைப்பதில்லை . கூடவோ குறைச்சலோ உள்ளூர் சந்தையில் மட்டுமே பொருளை விற்க முடிகிறது .எப்படிப் பார்த்தாலும் விவசாயிக்கு குறைந்த அளவே லாபம் கிடைக்கிறது ,தரகர்களும் ,பெரிய வியாபாரிகளுமே அதிக லாபம் அடைகின்றனர் .

" உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது " என்ற பழமொழி இன்றைக்கும் மிகச் சரியாக பொருந்தும் . விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போனால் விவசாயி கடனாளி ஆகிறான் . மீள முடியாத கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது .1997 பிறகு மட்டும் 2,20,000 கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் .நாமெல்லாம் மறைமுக குற்றவாளிகள் .தூக்குத் தண்டனையை தடை செய்ய எத்தனையோ பேர் போராடுகிறார்கள் . விவசாயிகளுக்காக போராடக் கூடிய  ஆட்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் .  விவசாய கடன் தள்ளுபடி என்பதெல்லாம் கண்துடைப்பு . விவசாய மானியங்கள் விவசாயிக்குக் கிடைப்பதற்குப் பதிலாக ரசாயன உர நிறுவனங்களுக்கும் , பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும் கிடைக்கிறது . எந்த விதமான மானியங்களும் கிடைக்காத காரணத்தால் தான் இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன .

விலையேற்றம் ,சமீப காலமாக எல்லோரும் உணரும் விசயம் . விவசாயம் அதிகளவில் பாதிக்கப்பட்டதால் தான் விவசாயப் பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துவிட்டது . விவசாய நிலங்கள் அழிந்து வருவதை தினமும் பார்த்து வருகிறோம் .கடந்த ஆண்டு நெல் உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருந்தும் தற்போது அரிசி விலை எதனால் பெரிய அளவில் உயர்ந்தது . கிரானைட் குவாரிகளில் சோதனை நடத்தியது போல தனியாருக்குச் சொந்தமான அரிசி சேமிப்புக் கிடங்குகளில் சோதனை நடத்தினால் என்ன ? அரசிற்கு வருவாயும் ,ஊடகங்களின் பசிக்குத் தீனியும் கிடைக்கும் .பதுக்கல் திடீர் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது . அரசால் பதுக்கல் கண்காணிக்கப்பட வேண்டும் . அனைத்து விவசாயப் பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடிய சூழ்நிலை வந்தால் விலையேற்றம் இன்னும் அதிகமாகும் .நிலைமை நீடித்தால் உணவிற்கான உள்நாட்டுப்போர் உண்டானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை .

விவசாயத்திற்கு எதாவது செய்ய நினைத்தால் ,முதலில் விளைபொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் . எந்தப் பகுதியில் எந்தப்பொருள் அதிகம் விளைகிறதோ அங்கு அந்தப் பொருளைச் சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்குகள் கட்ட வேண்டும் .தன்னிறைவு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .விவசாயி ,தன்னால் விளைவிக்கக்கூடிய விவசாயப் பொருட்களை தானே உற்பத்தி செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் . அப்படி ஒரு சூழல் உருவானால் சந்தையில் பொருட்களின் தேவை கணிசமான அளவு குறையும் ;விலைவாசியும் கட்டுக்குள் இருக்கும் .

 மண்ணின் வளத்தை அதிகப்படுத்த தொடர்ந்து ஒரே பயிரை விளைவிக்காமல் பயிர் சுழற்சி முறையை ஊக்கப்படுத்த வேண்டும் . அரிசி ,கோதுமை மற்றும் கரும்பை மட்டும் கொள்முதல் செய்யாமல் அனைத்து தானிய வகைகளையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் .ரேசன் கடைகளில் நெல் ,கோதுமை ,சர்க்கரை மட்டும் விநியோகிக்காமல் மற்ற தானிய வகைகளையும் விநியோகம் செய்யலாம் . 

இயற்கை விவசாயத்திற்கு மானியம் வழங்க வேண்டும் . இயற்கை விவசாயத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . உணவே மருந்தாக இருந்த நிலை ,மருந்தே உணவாக மாறியதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளும் , ரசாயன உரங்கலுமே முக்கிய காரணம் .மிகக்கொடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று தெரிந்த பிறகும் " என்டோசல்பான் " பூச்சிக்கொல்லி மருந்தை தடை செய்ய மத்திய அரசு யோசிக்கிறது .நம் உடலுக்கு உகந்த நம் பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும் . துரித உணவுகள் உண்டாக்கும் தீமைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் மேற்கத்திய நாடுகளில் இருந்தே வெளிவருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

சமூகத்தில் விவசாயத்திற்கு மரியாதை கிடைக்க வேண்டும் . " என் மகன்  ஒரு விவசாயி ஆக வர விரும்புகிறேன் " என்று பெற்றோர் நினைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் .விவசாயம் செய்ய நிலம் ? வீட்டு மொட்டை மாடிகளிலும் ,வீட்டிற்கு அடியிலும் விவசாயம் நடைபெறலாம் .உணவு ,தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருளாகக் கூட மாறலாம் .மாத்திரைகளை விழுங்குவதன் மூலம் உடலிற்கு தேவைப்படும் சக்தியைப் பெறக்கூடிய நிலை உண்டாகலாம் .இந்நிலை வராமல் தடுக்க இருக்கும் விவசாய நிலங்களையாவது காப்பாற்ற வேண்டும் .

 நிலையான லாபம் தரும் தொழிலாக விவசாயத்தை மாற்ற வேண்டும் .இந்தியா ஒரே மாதிரியான நிலப்பரப்பும் ,காலநிலையும் கொண்ட தேசமல்ல .ஒரே மாதிரியான நிலைப்பாடுகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பொருந்தாது . ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் அவசியம் . நில மற்றும் நீர் பரப்புகள் வணிக நோக்கத்துடன் படிப்படியாக அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் .சுற்றியுள்ள சூழ்நிலைகள் உகந்ததாக இருந்தால் மட்டுமே நம்மால் விவசாயம் செய்ய முடியும் .

ஊடகங்கள் விவசாயத்தை தொடர்ந்து புறக்கணிக்கின்றன . 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயத்தை நம்பியுள்ள சூழலில் இதுவரை எத்தனை திரைப்படங்கள் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன . தொலைக்காட்சி நிறுவனங்களும் விவசாயத்தைக் கண்டுகொள்வதில்லை .ஏன் ஒரு விவசாயியின் உண்மை நிலையை ஒரு நெடுந்தொடராக எடுத்திருக்கலாமே  .ஏன் எடுக்கவில்லை ?

சமூகத்தின் பிரதிபளிப்பு தான் திரைப்படம் என்றால் 100 க்கு 70 திரைப்படங்கள் விவசாயம் சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியும் . விவசாயம் இவ்வளவு பாதிப்புக்குள்ளான பிறகும் விவசாயியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு திரைப்படம் கூட எடுக்கப்படவில்லையே .அப்புறம் நீங்கள் என்ன பெரிய படைப்பாளிகள் ? எந்தவொரு சமூக நிகழ்வையும் சுவாரசியமாக அதே நேரம் உண்மையாகவும் ,அழுத்தமாகவும் பதிவு செய்பவர்கள் மட்டுமே உண்மையான படைப்பாளிகளாக இருக்க முடியும் .அவ்வப்போது சில சிறுகதைகளும் ,நாவல்களும் மட்டுமே விவசாயியின் உணர்வுகளை பதிவு செய்கின்றன . 

இன்று எல்லாம் வணிகம் தான் .விவசாயமும் வணிகம் சார்ந்ததாக மாறி எவ்வளவோ நாட்களாகி விட்டது . விவசாயிகளும் பணப்பயிர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை உருவாக்கி விட்டோம் . விவசாயத்தை வணிகத்தின் பிடியிலிருந்து மீட்டு உணவுப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை  உருவாக்க வேண்டும் .

விவசாயத்தை நோக்கி ஒரு நாள் எல்லோரும் உறுதியாக திரும்பி வருவார்கள் .இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது . எல்லாம் ஒரு வட்டம் தான் . 

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு ...!

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

ஐந்திணை சுற்றுச்சூழல் விழா 2012 !

..................................................................................................................................................


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms